9 October 2015

வானவில் மனிதனின் பார்வையில் 'என்றாவது ஒருநாள்'





கவிதையே காதலாய்… கனவே வாழ்க்கையாய்… வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான் என்று தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் நண்பர் மோகன்ஜி அவர்களுடைய கவிதைகள், கதைகள் மற்றும் இதர படைப்புகளின் பரமவாசகி நான் என்பதில் எனக்கோர் பெருமை. நானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்துகொண்டு…  சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர… கனவுகள் உதிர்ப்பவன் என்று தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நண்பர் மோகன்ஜி அவர்களின் நட்பு வளையமும் வானவில்லைப் போலவே வசீகரமானது. 

அந்த நட்புவளையத்துக்குள் கண்ணியமான எழுத்தோடு, பல்வேறுபட்டக் கருத்துகளும், விவேகமிக்க தர்க்கங்களும், மனந்திறந்த விமர்சனங்களும், ரசனையான கேலிகளும், நட்பின் கலாய்ப்புகளும் இல்லாமல் இருக்காது. மகிழ்வு, நெகிழ்வு, நகைச்சுவை, நையாண்டி, காதல், ரசனை, ஆதங்கம், உருக்கம் என எண்ணிலா உணர்வுகளை செறிவான எழுத்தால் வாசகமனங்களுள் செதுக்கும் கலை அறிந்த படைப்பாளி. அவருடைய வாசிப்பால்… தேர்ந்த எழுத்தால் மேன்மைப்பட்டிருக்கிறது என்னுடைய ‘என்றாவது ஒருநாள்’ மொழிபெயர்ப்பு நூல் என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

நண்பர் மோகன்ஜி புத்தக விமர்சனத்தை எழுதிப் பதிவிட்டு ஒருமாதகாலமாகப் போகிறது. விமர்சனத்தை இங்கு வாசிக்கலாம். இதுவரை கீதமஞ்சரியில் அதைக் குறிப்பிட்டுப் பதிவெழுதாமைக்குப் பல்வேறு காரணங்களை அடுக்கமுடியும் என்றாலும் என்னுடைய சோம்பேறித்தனத்தையும் திட்டமிடற்குறைபாட்டையுமே முன்னிறுத்தி நண்பரிடம் மன்னிப்புக் கோருகிறேன்.



அவரது விமர்சனம் குறித்த என் கருத்து:

அன்புள்ள மோகன்ஜிதங்களுடைய இந்த விமர்சனத்தை வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்தாலும் இன்று இப்போது வெளிவந்திருப்பது எனக்கொரு இன்ப அதிர்ச்சி. நல்லதொரு எழுத்தாளரும் வாசகருமாகிய தங்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரிகளும் என் எழுத்தை மேம்படுத்த உதவக்கூடியவை..

மொழிபெயர்ப்பு என்பதா மொழியாக்கம் என்பதா என்பதில் எனக்குமே இன்னும் தெளிவில்லை. ஆனால் மூலக்கதாசிரியரின் எழுத்தை அப்படியே தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கவேண்டும் என்று விரும்பினேன். அதில் தவறியும் என்னுடைய பாணியோ எழுத்துநடையோ வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறேன் என்பது அநேகருடைய விமர்சனங்கள் மூலம் அறியமுடிகிறது.

இது ஒரு நேரடி மொழிபெயர்ப்பாக இருப்பதால் மூலக்கதாசிரியர் தொட்டுவிட்டுச் செல்லும் இடங்களில் விளக்கங்கள் தரப்படாமை ஒரு நெருடலாகவோ குறையாகவோ கருதப்படும் வாய்ப்புண்டு என்றாலும் இங்கு அதைத் தாங்கள் நிறையாகக் குறிப்பிடுவது மனத்துக்கு இதமளிக்கிறது. ஊக்கமும் உற்சாகமும் தரும் வகையில் மிகவும் நிறைவானதொரு விமர்சனப்பதிவு. தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி மோகன்ஜி.

நண்பர் மோகன்ஜியின் பதில்..

சில நாட்களுக்குமுன்பே ஒன்றை எழுதிவைத்து, அதனையும் போக்கடித்துவிட்ட ஆயாசத்தில் தாமதம். மீண்டும் நினைவில் தொகுத்துக் கொண்டு எழுதியதால் எனக்குள் சின்ன தடுமாற்றம்..

மொழிபெயர்ப்பு அப்படியே வரிக்குவரி தமிழ்'படுத்து'வது... ஒரு .டி ப்ரோக்ரமை அப்படி செய்யலாம். ஒரு இலக்கியபடைப்பு முற்றிலும் மாறுபட்ட வேறொரு வாசகப் பரப்பை அடைய,பதிவில் குறிப்பிட்டிருந்தபடி நுண்ணிய மொழியாக்கமே மார்க்கம். இத்தகு கதைகளை நான் முயன்றிருந்தால் முற்றிலுமே மாறுபட்ட ஆக்கமாய் ஆகியிருக்கலாம். எல்லாமுமே சாத்தியம். உங்களுடைய முயற்சியை அங்கீகரிப்பதில் என் பொறாமை கூட இருக்கிறது கீதா.. சில கவிதைகளை மொழிமாற்றிப் பார்த்தால் வேறுபாடு விளங்கும். மீண்டும் வாழ்த்துக்கள்!



ஏற்கனவே எழுதியதைத் தவறவிட்ட ஆயாசம் தோய்ந்த நிலையிலும் மறுபடியும் சிறப்பாக எழுதிப் பதிவிட்டு ஊக்கமளித்திருக்கும் நண்பர் மோகன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அடிக்கடி எழுத்துலக அஞ்ஞாதவாசம் சென்றுவிடும் அவர், வலையில் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என்போன்ற வாசகர்களின் ஆசை. பூர்த்தி செய்வார் என்று நம்புவோம். 
*****

23 comments:

  1. //உங்களுடைய முயற்சியை அங்கீகரிப்பதில் என் பொறாமை கூட இருக்கிறது//

    இந்தப் பொறாமை போல இன்னொரு ஆமை இருக்க முடியுமா என்ன?

    துவக்கத்திலே முயற்சி என்னும் முயலுக்கு ப்பின் தங்கும் இந்த ஆமை
    முயற்சி தூங்கும்போது முந்தி விடுகிறது.

    ஆகவே தானோ என்னவோ அழுக்காறு என்று சொன்னார் அவர்.
    அது ஒரு வகையில் அழுக்கு. எனினும் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதை தடுத்திட இயலாத அவா.

    அவாவினால் ஏற்படும் வெகுளி.
    வெகுளி தோற்றுவிக்கும் இன்னாச் சொல்.

    யாவையுமே அடக்க, இந்த ஆமையை அடக்க வேண்டும்.

    அது ஒரு ஆரண்யத்திலே

    "அஞ்ஞாதவாசம் " செய்தால் தான் சாத்தியமோ??

    அந்த வாசத்தில், மனம் உடலை, புத்தியை அறிவதில்லை.

    மேலும் சொல்லுவோம்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சுப்பு தாத்தா. பொறாமை குறித்து என்னவொரு அழகான பின்னூட்டம்... முயலாமை, அழுக்காறு.. விளக்கம் அருமை..

      அஞ்ஞாதவாசத்திலிருந்து அவரை மீட்க நீங்கள் எடுக்கும் பிரயத்தனம் புரிகிறது... நன்றி சுப்பு தாத்தா.

      Delete
  2. அருமையான விமர்சனம்! உங்கள் எழுத்துக்களே தனிப்பாணி கீதா!
    அதற்கு நல்ல விமர்சனம் சகோதரர் மோகன்ஜி தந்துள்ளார்.
    மிகச் சிறப்பு!

    எனக்கு வாசனைப் பயிற்சி நிறைய வேண்டும். மனம் ஒரு இடத்தில் நிற்பதில்லை. தொடந்து படித்திடாமல் விட்டுவிடுவேன்.
    மீள வந்து படிக்கும் போது முதற்படித்த ஒரு பக்கமாவது மீட்டல் செய்தால்தான் விட்ட இடத்து விடயம் தொடரும்.
    மூன்றடி ஏற இரண்டடி சறுக்கும் என்பார்களே.. அப்படி..:)

    உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன் கீதா!
    சகோதரர் மோகன்ஜிக்கும் உங்களுக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாசிப்பில் நீங்க மட்டுமல்ல... நானும் உங்க கட்சிதான். எடுத்தால் எந்நேரமானாலும் கையோடு முடித்துவிடவேண்டும்.. அப்புறம் என்று கிடப்பில் போட்டால் இப்படிதான் நேரும்... பலமுறை எனக்கும் அப்படி நேர்ந்திருக்கிறது.

      உங்கள் பெருமைக்கும் அன்புக்கும் உரியவளாக இருப்பதில் எனக்கும் பெருமையும் மகிழ்வும் இளமதி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தோழி.

      Delete
  3. புத்தகம் பதிவர் சந்திப்பில் கிடைக்கும்
    என நினைக்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  4. விமர்சனம் நன்று சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3
    எமது புதுக்கோட்டை அழைப்பு காண வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி. உங்கள் அழைப்பையும் காண வருவேன்.

      Delete
  5. வணக்கம்

    விமர்சனம் மிக அருமையாக உள்ளது. புத்தகத்தை வேண்டி படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது... வாழ்த்துக்கள்.த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  6. அருமையான விமர்சனம். அவருடைய தளத்திலும் படித்தேன்...

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  7. வாழ்த்துக்கள் கீதா!

    மின் இலக்கியப் போட்டி முடிவுகள்!
    வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

    திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
    05. →கான் ஊடுருவும் கயமை←

    போட்டியில் வெற்றி பெற்றமைக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சற்றுமுன்தான் முடிவுகளைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி இளமதி. உங்கள் வாழ்த்துகளுக்கு அன்பான நன்றி தோழி.

      Delete
  8. முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

    புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

    முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியான கருத்து. இனிவரும் பதிவர் சந்திப்புகளுக்கு மிகச்சிறந்ததொரு அளவுகோலாக இப்புதுகை பதிவர் சந்திப்பு இருப்பதில் பதிவர்களாகிய நாம் பெருமை கொள்ளவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. விமர்சனத்தை பகிர்ந்தவிதம் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. போட்டியில் வென்றமைக்குப் பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா. விழாவில் கலந்துகொண்டு இனியதொரு பதிவுலக அனுபவத்தைப் பெற நல்வாழ்த்துகள்.

      Delete
  11. விமர்சனம் அருமை. பாராட்டுக்கள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விமர்சனம் குறித்த கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்கா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.