Showing posts with label ஊனுண்ணி தாவரம். Show all posts
Showing posts with label ஊனுண்ணி தாவரம். Show all posts

14 July 2024

மகரந்தச் சேர்க்கை (ஊனுண்ணித் தாவரங்கள் 5)

ஜாடிச்செடிப் பூ (1)

மற்ற எல்லாப் பூக்கும் தாவரங்களையும் போல ஊனுண்ணித் தாவரங்களும் பூக்கும்; காய்க்கும்; விதைகளை உருவாக்கும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் மகரந்தச் சேர்க்கை எப்படி நடக்கும்? இவைதான் பூச்சித்தின்னிகளாச்சே! மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை எல்லாம் தாவரமே பிடித்துத் தின்றுவிட்டால் பிறகு மகரந்தச் சேர்க்கை எப்படி நடக்கும் என்ற சந்தேகம் எழும். இவைதான் புத்திசாலியான தாவரங்களாயிற்றே! அதற்கும் தந்திரமாக ஏதேனும் உத்திகளைக் கையாளாமலா இருக்கும்

மகரந்தச் சேர்க்கையைப் பொறுத்தவரை, ஊனுண்ணித் தாவரங்கள் மூன்று வகையான உத்திகளைச் செயல்படுத்துகின்றன.

உத்தி 1:

சில தாவரங்களில் பூச்சிகளைப் பிடிக்கும் இலைகள் தாழ்வாக இருக்கும். ஆனால் அவற்றின் பூக்களோ தங்களுக்கும் செடிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நீளமான காம்புகளுடன் செங்குத்தாக வளர்ந்து உயரத்தில் பூக்கும். தேன் உண்ணப் பறந்து வரும் தேனீக்களும் வண்டுகளும் உயரத்தில் பூத்திருக்கும் பூக்களில் தேன் அருந்திவிட்டு அப்படியே பறந்துபோய்விடும். கீழே இருக்கும் இலைகளிடம் சிக்கிக்கொள்ளாது. இலைகளுக்கு இரையாக இருக்கவே இருக்கின்றன, தரையில் ஊர்ந்துவரும் எறும்புகளும் புழு பூச்சிகளும்.

உத்தி 2:

சில வகை ஊனுண்ணித் தாவரங்களின் உத்தி வேடிக்கையானது. பூக்களில் இனிய நறுமணத்தை உற்பத்தி செய்யும் அவை தமது இலைகளில் அழுகிய மாமிச வாடையை உற்பத்தி செய்யும். நறுமணத்தை விரும்பும் பூச்சிகள் மாமிச வாடையை விரும்பாது. எனவே இலைகளின் பக்கம் போகாது. மாமிச வாடையை விரும்பும் பூச்சிகள் நறுமணத்தை விரும்பாது. எனவே பூக்களின் பக்கம் போகாது. சைவத்துக்கும் அசைவத்துக்கும் தனித்தனியாக விருந்தழைப்பு கொடுக்கும் அவ்வகை தாவரங்கள்சைவப் பிரியர்களுக்கு விருந்தளிக்கும். அசைவப் பிரியர்களை அதுவே விருந்தாக்கிக் கொள்ளும்.

உத்தி 3:

‘காரியம் ஆகும் வரை காலைப்பிடிகாரியம் முடிந்ததும் கழுத்தைப் பிடி’ என்பது போல சில வகை ஊனுண்ணித் தாவரங்களின் உத்தி சற்று கயமையானது. பாரபட்சம் அற்றது. இலைகள் உருவாவதற்கு முன்பே பூக்களை மலரச் செய்யும் அவைமகரந்தச் சேர்க்கைக் காலம் முடிந்த பிறகுஇலைகளை உருவாக்கும். அப்போது பிற பூச்சியினங்களோடு, முன்பு மகரந்தச் சேர்க்கைக்கு உதவிய பூச்சியினங்களையும் துளியும் ஈவு இரக்கம் இல்லாமல் தமக்கு இரையாக்கிக் கொள்ளும்.

ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து... 
 

பூக்கள் என்பதே தாவரங்களின் இனப்பெருக்கத்திற்காக உருவான பிரத்தியேக அம்சங்கள்தாம். மணம், நிறம், வடிவம், தேன், மகரந்தம் போன்ற ஈர்க்கும் உத்திகளால் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், வௌவால்கள் போன்ற உயிரினங்கள் மூலமாகவோ, காற்று, நீர், மழை போன்ற இயற்கைக்  காரணிகள் வாயிலாகவோ மகரந்தச்சேர்க்கையை வெற்றிகரமாக நடத்தி விதைகளை உருவாக்கி தங்கள் சந்ததியை அழியவிடாமல் பாதுகாக்கின்றன. மலர்களுள் முழுமையான மலர், முழுமையற்ற மலர் என இருவகை உண்டு. 

முழுமையான மலர் எனப்படுவது ஒரே பூவில் மகரந்தத்தாள் வட்டம் (ஆண் உறுப்பு) மற்றும் சூலக வட்டம் (பெண் உறுப்பு) இரண்டும்  அமைந்திருக்கும். கத்தரி, வெண்டை, தென்னை இவற்றை உதாரணமாகச் சொல்லலாம். 


கத்தரிப்பூவில் தேனீ

சில பூக்கள் மகரந்தத்தாள் வட்டம் அல்லது சூலக வட்டம் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன்  முழுமையற்றவையாக இருக்கும். உதாரணம் பறங்கி, பாகல், தர்ப்பூசணி போன்றவை. இவற்றில் ஒரே கொடியில் ஆண் பூக்கள் தனியாகவும் பெண் பூக்கள் தனியாகவும் பூக்கும். 


ஆண் & பெண் பறங்கிப்பூக்கள் 

பப்பாளி, பனை, சவுக்கு போன்றவற்றிலோ ஆண் மரம், பெண் மரம் என்று இரண்டு மரங்களும் தனித்தனியாக வளரும். ஆண் மரத்தில் ஆண் பூக்கள் பூக்கும். காய்க்காது. பெண் மரத்தில் பெண் பூக்கள் பூக்கும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு காய்கள் உருவாகும். 


பெண் சவுக்கு மரம் பெண் பூக்களுடன்


ஆண் சவுக்கு மரம் ஆண் பூக்களுடன்
 

இப்போது ஊனுண்ணித் தாவரங்களின் பூக்களைப் பார்ப்போம்.  

கீழே படத்தில் இருப்பவை ஊதுகுழல் ஜாடிச்செடி (Pitcher plants) எனப்படும் Sarracenia வகை ஊனுண்ணித் தாவரத்தின் பூக்கள். இவை வேர்க்கிழங்கிலிருந்து நேரடியாக வெளிவரும் சுமார் இரண்டு அடி உயர இலையில்லாத் தண்டின் உச்சியில்  மலர்கின்றன.

ஜாடிச்செடிப் பூ (2)

ஜாடிச்செடிப் பூ (3)

இவற்றில் தேனீக்கள் மற்றும் Bumblebees எனப்படும் வண்டுத்தேனீக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 'ஜாடிச்செடி ஈ' எனப்படும் குறிப்பிட்ட ஈக்களின் மூலமும் சிலவற்றில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 

ஜாடிச்செடிப் பூ (4)

ஜாடிச்செடிப் பூ (5)

பூக்களுக்குள் நுழைந்து வெளியேறும் பூச்சிகளின் உடலில் மகரந்தம் ஒட்டிக்கொள்வதற்கு ஏதுவாக இப்பூக்கள் நேராக நிமிர்ந்து நிற்காமல் தரை பார்த்தபடி தலைகவிழ்ந்த நிலையில் பூக்கின்றன. 

ஜாடிச்செடிப் பூ (6)

ஜாடிச்செடிப் பூ (7)

மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு காய்கள் உருவாகும். காய்கள் முற்றி வெடிப்பதன் மூலம் விதைபரவல் நடைபெறுகிறது. 

கெண்டிச்செடி (நெபந்தஸ் வகை)

Nepenthes வகை கெண்டி அல்லது குடுவைச்செடியில் ஆண் நெபந்தஸ் செடி, பெண் நெபந்தஸ் செடி என இரண்டும் தனித்தனி செடிகளாக உள்ளன. எனவே ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனிச் செடிகளில் பூக்கின்றன.  கீழே முதல் இரண்டு படங்களில் இருப்பவை ஆண் பூக்கள். அடுத்த இரண்டு படங்களில் இருப்பவை பெண் பூக்கள். மகரந்தச் சேர்க்கைக்கு இவை பூச்சிகளையே நம்பியுள்ளன. ஈ, கொசு, குளவி, அந்துப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி போன்றவை மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

  
நெபந்தஸ் ஆண் பூக்கள்

நெபந்தஸ் ஆண் பூக்கள் close-up

நெபந்தஸ் பெண் பூக்கள்

நெபந்தஸ் பெண் பூக்கள் close-up

காற்றுப்பை போன்ற அமைப்பின் மூலம் இரையை உறிஞ்சிப் பிடிக்கும் உத்தி கொண்ட  Bladderwort வகை (Utricularia subulata) நீர்வாழ் ஊனுண்ணித் தாவரத்தின் பூக்களைக் கீழே காணலாம். இத்தாவரங்களிடம் ஒரு சிறப்புத்தன்மை உண்டு. 

யூட்ரிகுலாரியா பூ (1)


யூட்ரிகுலாரியா பூ (2)

யூட்ரிகுலாரியா தாவரங்கள் சில மூடிய பூக்களைப் பூக்கும்.  பூக்கள் திறந்திருந்தால்தானே பூச்சிகள் வரும். பூக்கள் மூடியிருந்தால் எப்படி மகரந்தச் சேர்க்கை நடைபெறும்?

இவைதான் புத்திசாலியான தாவரங்களாயிற்றே! தன்மகரந்தச் சேர்க்கைக்கு வேறெந்த பூச்சிகளின் துணையும் தேவையில்லை அல்லவா? காற்றும் கூட தேவையில்லையாம். மூடிய பூக்களின் உள்ளேயே மகரந்தத் தாளும் சூலக வட்டமும் அருகருகே இருப்பதால் எளிதில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று விதைகள் உருவாகின்றன.  

விரியாத பூக்களைப் பூக்கச் செய்து விதைகளை உருவாக்கினாலும் சில சமயங்களில், தேவைப்பட்டால் விரிந்த பூக்களையும் மலரச் செய்து தேனீக்கள் மற்றும் பூச்சிகள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறவும் செய்கின்றன.  சில சமயம் ஒரே சமயத்தில் மூடிய பூக்களையும் விரிந்த பூக்களையும் மலரச் செய்து இரண்டு விதத்திலும் மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்கின்றனவாம். 

பனித்துளி பசைச்செடி

பனித்துளி பசைச்செடி (sundews) எனப்படும் Drosera  வகையைச் சேர்ந்த தாவரங்களின் பூக்கள் வரிசையாக சரம் போலப் பூக்கும். இவற்றால் தன் மகரந்தச் சேர்க்கை மூலமாக விதைகளை உருவாக்க முடியும் என்றாலும் பூச்சிகளை ஈர்ப்பதன் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கைக்கும் வழிவகுக்கின்றன. தவறிப்போய் பூச்சிகள் இலைப்பசையில் சிக்கிக்கொண்டால் அதற்காக வருந்துவதில்லை. இரை கிடைத்ததே என்று மகிழ்ந்து, தேவையான சத்துக்களை உறிஞ்சிக் கொள்கின்றன. 

பனித்துளி பசைச்செடி பூ (1)
பனித்துளி பசைச்செடி பூ (2)

கீழே படத்திலிருப்பவை வெண்ணெய்ச்செடி (butterwort) எனப்படும் pinguicula வகை தாவரத்தின் பூக்கள். பூஞ்சண வாடையடிக்கும் இலைகளை விட்டுத் தள்ளி சற்று உயரத்தில் பூக்கள் பூத்திருப்பதன் மூலம் தங்கள் நறுமணத்தை வேறுபடுத்திக் காட்டி பூச்சிகளை ஈர்க்கின்றன. தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், அந்துப்பூச்சிகள், ஈக்கள் என இப்பூக்களைத் தேடிவரும் பூச்சிகள் பற்பல. வெண்ணெய்ச்செடியின் இலைகளுக்கு அகப்படாமல் பாதுகாப்பான உயரத்தில் பூக்களில் தேனுறிஞ்சிச் செல்வதன் மூலம் வெற்றிகரமாக மகரந்தச் சேர்க்கை நடைபெற யாவும் உதவுகின்றன. 

வெண்ணெய்ச்செடியின் பூக்களும் இலைகளும்

வெண்ணெய்ச்செடியின் பூ

ஊனுண்ணித் தாவரங்கள் எவ்வளவு சமயோசிதமாக தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன! இயற்கையின் அதிசயத்தை என்னவென்று சொல்வது?  விலங்குகள், பறவைகளைப் போன்று நடந்தோ பறந்தோ இரைதேட இயலாத தாவரங்கள், தங்களுக்குத் தேவையான உணவையும் ஊட்டச்சத்துக்களையும் அவை வேரூன்றியிருக்கும் மண்ணில் கிடைக்காத நிலையில், தாங்களே தங்கள் முயற்சியால் அவற்றைப் பெறும் பொருட்டு எந்த அளவுக்கு வியக்கத்தக்க வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன! 

இப்படியே இவை தங்கள் தகவமைப்பு உத்திகளைப் பெருக்கிக்கொண்டே போனால், இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அம்புலி மாமா கதைகளில் வந்ததைப் போன்று மனிதர்களைப் பிடித்துத் தின்னக்கூடிய அளவில் பெரிய பெரிய ஊனுண்ணி மரங்கள் உருவானாலும் ஆச்சர்யமில்லை.

ஜாடிச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 1)

பனித்துளி பசைச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 2)

வெண்ணெய்ச்செடி (ஊனுண்ணித் தாவரங்கள் 3)

வீனஸ் வில்பொறி (ஊனுண்ணித் தாவரங்கள் 4)


17 May 2024

வீனஸ் வில் பொறி (ஊனுண்ணித் தாவரங்கள் 4)

 

 


வில் பொறி - எவ்வளவு அழகான பெயர்! வில்லைப் போன்ற அசுரவேகத்தில் பூச்சிகளைப் பொறிவைத்துப் பிடிக்கும் தாவரத்துக்கு இதைவிடவும் பொருத்தமான பெயர் இருக்கமுடியுமா? இதன் அறிவியல் பெயரும் ஆங்கிலப் பெயரும் கூட சுவாரசியமானவை. 

Dionaea muscipula என்பது வீனஸ் வில் பொறியின் அறிவியல் பெயர். Dionaea என்றால் ‘Daughter of Dione’ என்று பொருள். டயோன் என்னும் கிரேக்கப் பெண் கடவுளின் மகள்தான் காதல் தேவதையான வீனஸ். லத்தீன் மொழியில் musca என்றால் ஈ என்று அர்த்தம். ஆண்களை வசீகரித்து தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தும் அழகியான வீனஸைப் போன்று இந்தச் செடியும் தன்னுடைய நிறத்தாலும் மணத்தாலும் பூச்சிகளை தன் வசம் ஈர்த்து வீழ்த்துவதால்தான் இதற்கு ஆங்கிலத்தில் ‘Venus flytrap’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வட அமெரிக்க மாநிலங்களான வடக்கு கரோலினாதெற்கு கரோலினாஃப்ளோரிடாநியூ ஜெர்ஸி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.   



வீனஸ் வில் பொறி இலைகளின் வடிவமும் நிறமும் அவ்வளவு வசீகரமானவை. கொழுக்கட்டை அச்சு போன்று இரண்டாகப் பிளந்திருக்கும் அவற்றின் விளிம்பில் நீளமான முள் போன்ற பற்கள் காணப்படும். அது பூச்சிகளைப் பிடிக்கும் நுண்வேகம் நம்மை வியப்பிலாழ்த்தும்.  

எனக்கு இந்த வில் பொறி வேலை செய்வதைப் பார்க்கும்போது நாம் குழந்தைகளோடு விளையாடும் ‘அம்மா குத்து அப்பா குத்து’ விளையாட்டுதான் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கும் அந்த விளையாட்டு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைக்கு நேர் எதிரில் நாம் அமர்ந்துகொண்டு நம்முடைய இரண்டு கைகளையும் கிண்ணம் போல குவித்துவைக்க வேண்டும். குழந்தையிடம் அதற்குள் கையால் குத்தச் சொல்வோம். அம்மா குத்து, அப்பா குத்து என்று ஆரம்பித்து ஒவ்வொரு குத்துக்கும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர் பெயரைச் சொல்வோம். கடைசியாக ‘புள்ளையார் குத்து’ வரும். அதைச் சொன்னதும் குழந்தை உஷாராகிவிடும். ஏனென்றால் அடுத்தது ‘புடிச்சிக்கோ குத்து’தான். அதைச் சொல்லும்போது படக்கென்று குழந்தையின் கையை நம்மிரு கைகளால் மூடிப் பிடித்துக்கொள்ள வேண்டும். கையைப் பிடிக்க விடாமல் வேகமாகக் குத்திவிட்டு வெளியே எடுப்பதுதான் ஹைலைட்.

இந்த விளையாட்டுக்குள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான எவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. முதலில் குழந்தைக்கு குடும்ப உறுப்பினர்களை அவர்களுடைய உறவுமுறையோடு அறிமுகப்படுத்துகிறோம். இரண்டாவது கவனக் குவிப்பு. எப்போது ‘புள்ளையார் குத்து’ வரும் என்று குழந்தை கவனமாகப் பார்த்திருக்கும். மூன்றாவது, கைக்கும் மூளைக்குமான பிணைப்பை விரைந்து செயல்படுத்தும் செயல்திறன். எல்லாவற்றை விடவும் முக்கியமானது குழந்தையோடு நேருக்கு நேர் அமர்ந்து பேசிச் சிரித்து நாம் விளையாடும் தருணம்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன். அந்த விளையாட்டில் கடைசியாக வரும் ‘புடிச்சிக்கோ குத்து’தான் வீனஸ் பொறியின் உத்தி. விளையாட்டில் ‘புள்ளையார் குத்து’ என்று சிறு முன்னெச்சரிக்கை கிடைப்பது போல் வீனஸ் வில்பொறிக்கும் கிடைக்கும்.



எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? வீனஸ் வில்பொறியின் இரு பக்க இலைப்பரப்பினுள்ளும் தலா மூன்று உணர் முடிகள் இருக்கும்.  திறந்திருக்கும் இலைக்குள் ஊர்ந்துசெல்லும் பூச்சியின் உடல் முதல் உணர்முடியின் மேல் பட்டவுடன்  வில் பொறி உஷாராகிவிடும். (இது புள்ளையார் குத்து!) அடுத்த 20 நொடிக்குள் இரண்டாவது உணர்முடியின்மீது பூச்சியின் உடல் பட்டவுடன் விருட்டென்று இலை மூடிக்கொள்ளும். (இது புடிச்சிக்கோ குத்து!) விளிம்பில் உள்ள முள் பற்கள் கைவிரல்களைக் கோர்ப்பது போல ஒன்றை ஒன்று கவ்வி பூச்சியை உள்ளேயே சிறைவைத்துவிடுவதோடு இறுக்கவும் செய்யும். இலைச் சிறைக்குள் அடைபட்ட பூச்சிகள் வெளியே வர முடியாமல் இறந்துவிடும். இலைகளில் சுரக்கும் செரிமான நீரால் பூச்சிகள் செரிமானமாகி அதன் சத்துகள் இலையால் உறிஞ்சப்படும். ஒரு தடவை பூச்சியைப் பிடித்தால் அது செரித்து மறுபடி இலை திறப்பதற்கு பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். இலை திறந்தவுடன் இறக்கை, மேலோடு போன்ற பூச்சியின் செரிக்காத பாகங்கள் கீழே விழுந்துவிடும். 

முதல் உணர்முடியின் மீது பட்ட தொடுகை இரண்டாவது உணர்முடியின் மீது இருபது விநாடிக்குள் படவில்லையென்றால் இலை மூடாது. திறந்தே இருக்கும். உயிருள்ள இரை என்பதைக் கண்டறிந்துகொள்ளவே இந்த இருபது விநாடிக்குள் இரண்டு முறை தொடுகை உத்தி. எனவே வில் பொறி இலைகள் 24 மணி நேரமும் விழிப்போடு இருக்கவேண்டும். இல்லையென்றால் பூச்சிகள் பெப்பே காட்டிவிட்டுப் பறந்துவிடும். 


ஒரு வில்பொறி இலை தன் வாழ்நாளில் அதிகபட்சமாக நான்கு முறை பூச்சிகளைப் பிடிக்கும். நான்காவது பூச்சியைப் பிடிக்கும்போது இலை மூடியது மூடியதுதான். பிறகு திறக்காது. அப்படியே மெல்ல மடிந்துவிடும். பழைய இலைகள் மடிய மடிய செடியில் புதிய இலைகள் உருவாகிக் கொண்டிருக்கும். ஒரு வீனஸ் வில்பொறி செடியின் ஆயுட்காலம் சுமார் இருபது ஆண்டுகள்.

 வீனஸ் வில்பொறி பூச்சிகளைப் பிடிக்கும், இறுக்கிப் பிடிக்கும். தப்பிக்கவே முடியாது. அதில் நாம் விரலை வைத்தால் என்னாகும்? நம்முடைய விரலையும் பற்சக்கரம் போல இறுக்கிப் பிடித்துக் காயப்படுத்துமா என்று சந்தேகம் எழலாம்.  விரலுக்கெல்லாம் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.  இலைதான் பாதிக்கப்படும். ஏனெனில் வில்பொறி அளவில் சிறியது. இலையின் விட்டம் சுமார் 10 – 13 செ.மீ. அளவுதான் இருக்கும். அது பூச்சிகளைப் போன்ற சின்னஞ்சிறு உயிர்களை மாத்திரமே பிடிக்க வல்லது.



தற்போது அலங்காரத்துக்காக வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளோடு வீனஸ் வில்பொறி செடிகளும் சேர்ந்துவிட்டன. அழகுக்காகவும் ஆசைக்காகவும் மட்டுமல்ல, உள்ளலங்காரச் செடிகளைப் பாதிக்கும் பூச்சிகளைப் பிடித்துத் தின்னவும்தான். :)

(தொடரும்)

ஜாடிச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 1)

பனித்துளி பசைச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 2)

வெண்ணெய்ச்செடி (ஊனுண்ணித் தாவரங்கள் 3)

23 April 2024

வெண்ணெய்ச்செடி (ஊனுண்ணித் தாவரங்கள் 3)

பயிர்கள் நன்கு செழித்து வளர்வதற்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று இன்றியமையாத சத்துக்கள் தேவை என்று பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். தழைச்சத்து என்பது நைட்ரஜனையும், மணிச்சத்து என்பது பாஸ்பரஸையும் சாம்பல் சத்து என்பது பொட்டாசியத்தையும் குறிக்கும். இவை பயிர் வளர மட்டுமல்ல, பொதுவான தாவர வளர்ச்சிக்கே மிகவும் அடிப்படையான சத்துகள். மண்ணில் இருக்கும் கனிம வளம் காரணமாக பல தாவரங்கள் இயற்கையாக மண்ணிலிருந்தே அவற்றைப் பெற்று வளர்கின்றன. அல்லது இயற்கை மற்றும் செயற்கை உரங்களின் மூலம் அவற்றைப் பெற்று பயனடைகின்றன. ஆனால் எந்த வகையிலும் இச்சத்துக்களைப் பெற வழியில்லாத, எரிமலைக் குழம்பினால் உண்டான மண் போன்ற, துளியும் சத்துக்கள் இல்லாத மண்ணில் வளரும் செடிகள்தான் தேவையின் பொருட்டு ஊனுண்ணித் தாவரங்களாக பரிணாம மாற்றம் அடைந்துள்ளன.

வெண்ணெய்ச்செடி

ஊனுண்ணித் தாவர வரிசையில் முதலில் ஜாடிச்செடிகள் பற்றியும் இரண்டாவதாக பனித்துளி பசைச்செடிகள் பற்றியும் பார்த்தோம். பசையைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கும் இன்னொரு ஊனுண்ணித் தாவரம் பிங்விகுலா (Pinguicula) பேரினத்தைச் சேர்ந்த Butterwort செடிகள். இவற்றின் இலைகள் மினுமினுப்புடனும் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய்ப் பசையுடனும் காணப்படுவதால் ‘வெண்ணெய்ச்செடி’ என்று பொருள்படும் ‘பட்டர்வர்ட்’ என்ற பெயர் இடப்பட்டுள்ளது. Pinguis என்றால் லத்தீனில் ‘கொழுப்பு’ என்று பொருள்.  

பிங்விகுலா பேரினத்தில் 80-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. பெரும்பாலானவை தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.

பனித்துளி பசைச்செடி

பசையைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிப்பவை என்றாலும், பட்டர்வர்ட் செடிகளுக்கும் சென்ற பதிவில் பார்த்த sundew எனப்படும் ட்ரோசெரா இனத் தாவரங்களுக்கும் உருவ அமைப்பிலும் பூச்சிகளைப் பிடிக்கும் உத்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.

பனித்துளி பசைச்செடிகளின் உணர் இழைகளோடு ஒப்பிடும்போது வெண்ணெய்ச்செடி இலைகளின் உணர் இழைகள் உயரத்தில் மிகவும் சிறியவை. பனித்துளி பசைச்செடியில் உணர் இழைகள் அசையக்கூடியவையாகவும் நாணல் போல் நாலாபக்கமும் வளையக்கூடியவையாகவும் இருக்கும். ஆனால் வெண்ணெய்ச்செடியின் உணர் இழைகள் அந்த அளவுக்கு அசையும் தன்மை அற்றவை.

பட்டர்வர்ட் இனத்திலேயே பல வித்தியாசமான வகைகள் உள்ளன.

  • சில பட்டர்வர்ட் இனங்கள் கோடைக்காலத்தில் பூச்சித்தின்னி இலைகள், குளிர்காலத்தில் பூச்சித்தின்னா இலைகள் என பருவகாலத்துக்கு ஏற்ப மாறுபட்ட இலைகளை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் வசந்தகாலத்திலும் குளிர்காலத்திலும் வடிவத்திலும் அளவிலும் மாறுபட்ட இலைகளை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் மொக்கு போல சிறுத்து தரைக்குள் அமிழ்ந்து குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். அப்போது உணவுக்கான தேவை கிடையாது என்பதால் புதிய தளிரோ இலையோ எதுவும் உருவாகாது. கடுங்குளிர் முடிந்து பருவநிலை சாதகமான பிறகு தரையிலிருந்து மொக்கு கிளம்பி விரிந்து புதிய துளிர்களை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் எல்லாக் காலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியான இலைகளையே வளரச்செய்யும்.

 

வெண்ணெய்ச்செடியின் இலைகள்

பட்டர்வர்ட் செடியின் இலைகள் இரண்டு செ.மீ. முதல் முப்பது செ.மீ. வரை நீளம் இருக்கும். நெருக்கமான உணர் இழைகளின் நுனியில் சுரக்கும் பசைத்திரவத்தால் இலைகள் ஈரத்தின் மினுமினுப்போடு காணப்படும். தண்ணீர் என்று நினைத்து அதைக் குடிப்பதற்காக பூச்சிகள் இலையின் மீது அமரும். அப்போது உணர் இழைகளின் பசையில் ஒட்டிக்கொள்ளும். நைட்ரஜனின் இருப்பு அறியப்பட்ட உடனே செடிக்கு சமிக்ஞை கொடுக்கப்படும். இலையின் மேற்புறம், உணர் இழைகளின் கீழே இருக்கும் என்சைம் சுரப்பிகள் தூண்டப்படும். பூச்சியின் முழுச் சத்துகளும் உறியப்பட்ட பிறகு பூச்சியின் வெளியோடு மட்டுமே எஞ்சியிருக்கும்.  

பூச்சியைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டால் பனித்துளி பசைச்செடி போல அக்கம்பக்க உணர் இழைகள் வளைந்து பூச்சியை இறுகப் பற்ற உதவாது என்றாலும் பட்டர்வர்ட் செடிகளில் இலையே சில வேளைகளில் வளைந்து கொடுத்து பூச்சி தப்பிக்காமல் பலமாக ஒட்டிக்கொள்ள உதவும்.

பட்டர்வர்ட் செடிகள் குறித்த மற்றொரு சுவாரசிய விஷயம் என்ன தெரியுமா? இவை ஊனுண்ணி மட்டுமல்ல, தாவரவுண்ணியும் கூட. புரியவில்லையா? பூச்சிகளிலிருந்து சத்துக்களைப் பெறுவதைப் போன்றே பிற தாவரங்களிலிருந்தும் சத்துக்களைப் பெறுகின்றன. தேடிப்போய் பெறுவதில்லை என்றாலும் பட்டர்வர்ட் இலைகளின் மீது தற்செயலாக விழும் பிற தாவர இலைகள், பூக்கள், மகரந்தம் போன்றவற்றைக் கிரகித்து அவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான புரதச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்கின்றன.

வெண்ணெய்ச்செடி பூக்களுடன்

பட்டர்வர்ட் செடிகள் வணிகநோக்கிலும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஆர்க்கிட் மலர்த்தோட்டங்களில் செடிகளையும் பூக்களையும் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பட்டர்வர்ட் செடிகளும் கூடவே வளர்க்கப்படுகின்றன.

பூச்சிகளைச் செரித்து முடிப்பதற்குள் அவை அழுகிவிடாமல் இருப்பதற்காக பட்டர்வர்ட் இலைகள் வீரியமான நுண்ணுயிர்க்கொல்லியை உற்பத்தி செய்கின்றன. கால்நடைகளின் காயங்களை விரைவில் குணப்படுத்த, பட்டர்வர்ட் இலைகளை அரைத்து மருந்தாகக் கட்டும் வழக்கம் ஐரோப்பியர்களிடையே நெடுங்காலமாக உண்டு என்று குறிப்பிட்டவர் ஸ்வீடனைச் சேர்ந்த மருத்துவரும், தாவரவியலாளரும் விலங்கியலாளரும் ‘நவீன வகைப்பாட்டியலின் தந்தை’ என்று போற்றப்படுபவருமான கார்ல் லின்னேயஸ் (1707-1778).

கார்ல் லின்னேயஸ் (படம் உதவி - விக்கிபீடியா)

ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் பட்டர்வர்ட் இலைகளைப் பயன்படுத்தி பாலைத் திரித்தும் புளிக்கவைத்தும் தயிர், மோர், பாலாடைக்கட்டி போன்ற பால்பொருட்களை உருவாக்கினர் என்றும் தெரிகிறது.

வெண்ணெய்ச்செடி


வெண்ணெய்ச்செடியின் பூக்கள் மிக அழகானவை. அவை பார்ப்பதற்கு ஐந்து இதழ்களைப் போல தோற்றமளித்தாலும் உண்மையில் அவற்றுக்கு இரண்டே இதழ்கள்தான் உண்டு. மேல் இதழ் மூன்று பிரிவாகவும் கீழ் இதழ் இரண்டு பிரிவாகவும் பிரிந்திருக்கும். பூக்கள் காய்ந்து விதைகள் உருவாகும். விதைக்கூடு முற்றி வெடித்து காற்றின் மூலம் விதைபரவல் நடைபெறும்.

வெண்ணெய்ச்செடியின் ஈரிதழ்ப் பூ


ஊனுண்ணிச் செடிகளின் பூக்கள் காயாக வேண்டும் எனில் மகரந்தச் சேர்க்கை நடைபெறவேண்டும். மகரந்தச் சேர்க்கை நடைபெற பூச்சிகள் வேண்டும். பூச்சிகளை செடியே பிடித்துத் தின்றுவிட்டால் பிறகு மகரந்தச் சேர்க்கை எப்படி நடைபெறும்? இந்த சந்தேகம் எனக்கும் வந்தது. ஆனால் அதற்கும் பலவிதமான உத்திகளை ஊனுண்ணித் தாவரங்கள் கையாளுகின்றன என்று அறிந்து வியந்தேன். அவை என்னென்ன என்று அடுத்தப் பதிவில் பார்ப்போமா?

தொடரும்.

15 April 2024

பனித்துளி பசைச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 2)

 

பசைச்செடிகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊனுண்ணித் தாவர இனங்கள் காணப்படும் நாடுகளுள் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்றும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள 750-க்கும் மேற்பட்ட ஊனுண்ணித் தாவரவினங்களுள் 250-க்கும் மேற்பட்டவை ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன என்றும் அவற்றுள் சில வேறெங்கும் காணப்படாத தனித்தன்மை வாய்ந்தவை என்றும் Australian Geographic சஞ்சிகை குறிப்பிடுகிறது.  

“தாவரங்களின் ஊனுண்ணும் செயல், பரிணாமத்தின் கடைசிக் கட்ட முயற்சிதான்” என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊனுண்ணித் தாவர வல்லுநர் Greg Bourke. 

“ஏனெனில் ஒரு தாவரம் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான இலைகளை உருவாக்குவதை விடவும் பூச்சிகளைப் பிடிக்கும் இலைகளை உருவாக்க அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த இலைகளை ஏன் உருவாக்கவேண்டும்? ஏன் பூச்சிகளைப் பிடிக்க வேண்டும்? ஏதாவதொரு வழியில் தங்களுக்குத் தேவையான நைட்ரஜனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அத்தாவரங்கள் மடிந்துவிடும்” என்கிறார்.

ஊனுண்ணித் தாவரங்கள் பூச்சிகளை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் விதவிதமான உத்திகளுள் நறுமணம் பரப்புதலும் ஒன்று என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மாறாக சில ஊனுண்ணித் தாவரங்கள் அழுகிய மாமிச வாடை போன்ற துர்நாற்றத்தைப் பரப்பியும் பூச்சிகளை ஈர்க்கின்றன. மாமிச வாடைக்கு மொய்க்காத ஈக்கள் உண்டா? ஊனுண்ணும் ஆசையோடு வரும் ஈக்களை லபக்கென்று பிடித்து தங்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றன அந்த ஊனுண்ணித் தாவரங்கள்.

நம்மால் நடக்க முடியும், உடலை அசைக்க முடியும். கழுத்தைத் திருப்ப முடியும். கைகளை இயக்க முடியும். இருந்தாலும் நம்மைச் சுற்றி சுற்றிப் பறந்து தொல்லை செய்யும் ஒரு ஈயையோ கொசுவையோ சட்டென்று அடித்துவிட நம்மால் முடிகிறதா? பெரும்பாலும் எப்படியோ நம்மிடமிருந்து தப்பித்துவிடுகிறது. ஆனால் இந்த ஊனுண்ணித் தாவரங்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு பூச்சிகளை மிக சாமர்த்தியமாகவும் லாவகமாகவும் பிடிக்கும் திறமையை வியக்காமல் இருக்கமுடியவில்லை.


சார்லஸ் டார்வின் (படம் உதவி- விக்கிபீடியா)

இந்தப் பூமியில் தாவரங்களும் ஊனுண்ணும் என்ற உண்மையை ஆய்வுபூர்வமாக நிரூபித்ததோடு அவற்றின் ஊனுண்ணும் உத்திகளையும் உலகறியச் செய்தவர் ‘பரிணாம உயிரியலின் தந்தை’ என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின். அதுவரை அத்தாவரங்கள் மீதான கூர் கவனிப்பை வேறு யாரும் பெரிய அளவில் மேற்கொண்டிருக்கவில்லை. டார்வினின் கண்டுபிடிப்பும் கூட ஒரு தற்செயல் கண்டுபிடிப்புதான்.

1860 வாக்கில் ஒரு கோடைகாலம். டார்வின் தன் மனைவியோடு இங்கிலாந்தில் ஒரு கிராமத்துக்கு ஓய்வுக்காகச் சென்றிருந்தார். இயற்கை ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான அவர் தினமும் உலவச் செல்லும் புதர்ப்பாதையில் Drosera எனப்படும் செடிகளில் பூச்சிகள் ஏராளமாக ஒட்டிக்கிடப்பதைக் கண்டார். அவருடைய ஆய்வுமனம் விழித்துக்கொண்டது. உடனடியாக சில செடிகளை சேகரித்து ஆய்வினைத் தொடங்கினார். தன்னுடைய ஆய்வக நண்பர்களுக்குத் தகவல் அனுப்பினார். இரவும் பகலும் அவற்றைக் குறித்த ஆராய்ச்சியிலேயே கழித்தார்.

டோர்செரா இனம்

டார்வினின் இடைவிடாத ஆராய்ச்சியைக் கண்ட அவர் மனைவி எம்மா தன்னுடைய தோழிக்கு எழுதிய கடிதத்தில், ‘சார்லஸ் தற்போது ட்ரோசெரா தாவரம் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். எந்நேரமும் பதற்றமும் பரிதவிப்புமாகத் தென்படுகிறார். அதை ஒரு உயிருள்ள ஜீவன் போலவே கருதுகிறார். போகிற போக்கைப் பார்த்தால் அந்தத் தாவரம் ஒரு விலங்கு என்று நிரூபிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.        

ஊனுண்ணி தாவரங்கள் பற்றிய முதல் புத்தகம்

சுமார் பதினைந்து வருடங்களாக Drosera மற்றும் Dionaea என்ற ஊனுண்ணித் தாவரங்களின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து டார்வின் மேற்கொண்ட தீவிர அவதானிப்புக்கும், பல்வேறு விதமான மாறுபட்ட ஆராய்ச்சிகளுக்கும் பிறகு 1875-ஆம் ஆண்டு 'பூச்சியுண்ணும் தாவரங்கள்' (Insectivorous Plants) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள விளக்கப் படங்களை டார்வினும் அவருடைய மகன்கள் ஜார்ஜும் ஃப்ரான்சிஸும் வரைந்துள்ளனர். 

சார்லஸ் டார்வின் புத்தகத்திலிருந்து (1) (படம் உதவி - விக்கிபீடியா)

சார்லஸ் டார்வின் புத்தகத்திலிருந்து (2) (படம் உதவி - விக்கிபீடியா)


டார்வின் தன்னுடைய நூலில் ஆய்வுமுடிவுகளாகக் குறிப்பிட்டிருக்கும் சில அம்சங்கள்:

  • பூச்சியுண்ணும் தாவரங்கள் பூச்சியைப் பிடிப்பதற்கு வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
  • பூச்சியுண்ணும் தாவரங்கள் நைட்ரஜன் உள்ள பொருட்களை மட்டுமே பிடிக்கின்றன. நைட்ரஜன் அல்லாத பொருட்களைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
  • பூச்சியுண்ணும் தாவரங்கள் மழைநீர், பெருங்காற்று, மற்ற இலைகளின் உரசல் போன்ற தேவையில்லாத அசைவுகளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை. அதனால் அவற்றின் சக்தி விரயமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
  • பூச்சியுண்ணும் தாவரங்கள் அமிலநீரைச் சுரந்து பூச்சிகளைச் செரிமானம் பண்ணும் செயல் கிட்டத்தட்ட விலங்குகள் தங்கள் இரையைச் செரிமானம் பண்ணும் செயலுக்கு நிகராக உள்ளது. 

******

டார்வினை ஈர்த்து ஆய்வுக்குள்ளாக்கிய ட்ரோசெரா தாவரத்தின் தன்மை என்னவென்று பார்ப்போமா? இவற்றின் உத்தி கிட்டத்தட்ட நம்முடைய எண்ணெய்த் தாள் உத்தி போன்றதுதான்.

அதென்ன எண்ணெய்த் தாள் உத்தி? எங்களுடைய சிறு வயதில் வீட்டுக்கு வீடு காணக்கூடிய காட்சி அது. குண்டு விளக்கோ குழல் விளக்கோ இரவு நேரத்தில் விளக்கைப் போட்டதுமே விட்டில் பூச்சிகள் எனப்படும் அந்துப்பூச்சிகள் விளக்கை வட்டமிடத் தொடங்கும். கொஞ்ச நேரத்தில் சூடு தாங்காமல் பொத் பொத்தென்று ஆங்காங்கே விழும். விரித்து வைத்து படித்துக்கொண்டிருக்கும் பாடப்புத்தகம், தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சாப்பாடு, கொட்டாவி விடத் திறந்த வாய் என எங்கு வேண்டுமானாலும் விழுந்து தொல்லை தரும். அதைத் தவிர்க்க யாரோ கண்டுபிடித்த உத்திதான் எண்ணெய்த் தாள். ஒரு காகிதத்தின் இரு பக்கமும் எண்ணெயைத் தடவி ஏதாவதொரு முனையில் ஓட்டை போட்டு அதில் நூலைக் கோர்த்து விளக்கின் கீழே கட்டித் தொங்க விட்டுவிடுவோம். அந்துப் பூச்சிகள் அந்த எண்ணெய்ப்பசையில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும். கூடுதல் போனசாக கொசுக்களும் ஒட்டிக்கொள்ள, நம்மால் நிம்மதியாக நம் வேலையைப் பார்க்க முடியும்.

அதே உத்தியைப் பயன்படுத்திதான் Sundews எனப்படும் பசைத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கின்றன. நிச்சயமாக நம்மைப் பார்த்து அவை கற்றுக்கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. நாம்தான் அவற்றைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாம் அவற்றுக்கு Flypaper trap plant என்று பெயர் வைத்துவிட்டோம்.

Drosera tracyi

ட்ரோசெரா இனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்படுகின்றன. இலைகள் மண்ணுக்குள் இருக்கும் கிழங்கிலிருந்து நேரடியாக வளர்கின்றன. சிலவற்றின் இலைகள் புல் போன்று நீளமாக இருக்கும். சிலவற்றின் இலைகள் திலக வடிவிலும் சிலவற்றின் இலைகள் கரண்டி வடிவிலும் காணப்படும். சில இனத்தில் தாமரையின் இதழ்களைப் போல வட்டமாக அடுக்காக அமைந்திருக்கும்.

பசைச்செடி இனம் 1

பசைச்செடி இனம் 2

பசைச்செடி இனம் 3

பசைச்செடி இனம் 4

வடிவங்கள் வேறாக இருந்தாலும் அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை பசையோடு கூடிய உணர் இழைகள். இலைகளின் மீது நெருக்கமாக அமைந்திருக்கும் மெல்லிய மயிரிழை போன்ற உணர் இழைகளின் நுனியில் கோந்து போன்ற நுண்ணிய பசைத்துளிகள் சுரந்து காணப்படும். காலை நேரத்தில் புல்வெளியில் மின்னும் பனித்துளிகளைப் போல இந்தச் செடியின் பசைத்துளிகளும் மின்னிக்கொண்டிருக்கும். அதனால்தான் இவற்றுக்கு பனித்துளிகள் என்று பொருள்படும் Sundews என்று பெயரிடப்பட்டுள்ளது. 



உணர்கொம்புகளின் முனையில் பசைத் துளிகள்

இந்தப் பசைத்துளிகள் இனிப்புச்சுவை கொண்டவை என்பதால் பூச்சிகள் அவற்றைத் தேடிவரும். அப்போது பசைத்துளிகளில் ஒட்டிக்கொள்ளும். பூச்சிகள் தப்பிக்க முயற்சி செய்யும்போது அக்கம்பக்கத்திலிருக்கும் மற்ற உணர் இழைகளும் உதவிக்கு வரும். அதாவது இலையே வளைந்தும் குனிந்தும் பூச்சியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும். எல்லாப் பக்கத்திலிருந்தும் தாக்குதல் நடந்தால் பூச்சியால் என்ன பண்ண முடியும்? தப்பிக்க இயலாமல் நன்றாக சிக்கிக் கொள்ளும். அடுத்து பசைத்துளி இருக்கும் உணர் இழைகள் பூச்சியைச் செரிக்கத் தேவையான என்சைம்களைச் சுரக்கும். பூச்சியை முழுவதுமாக செரித்துமுடித்து சத்துக்களை உறிஞ்சி எடுத்த பிறகுதான் உணர் இழைகள் மறுபடியும் நிமிர்ந்து பழைய நிலைக்கு வரும். 

 பிடிபட்டுள்ள பூச்சிகளோடு

பசை உத்தியைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கும் இன்னொரு ஊனுண்ணித் தாவரமான butterwort பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.  

தொடரும்...