5 May 2014

வல்லமையின் கடித இலக்கியப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற என் கடிதம்




அன்புமகன் மணிமொழிக்கு,

அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாக உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற புதிய கவலையும் சேர்ந்துகொண்டது.

நடந்த விஷயத்தை எண்ணி இன்னும் நீ மருகிக்கொண்டிருக்கிறாயெனில் அதைப் போக்கித் தெளிவேற்படுத்தவேண்டியது பெற்றோரான எங்கள் கடமை. அதன்பொருட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ அமைதியான மனநிலையில் இருக்கும்போது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். நீ படித்தவன்; புத்திசாலி. நான் சொல்வதை நிதானமாக யோசித்துப் புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

நம் உறவினர்களும் நண்பர்களும் உன் அப்பாவைப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்எப்படி ஒருவரால் என்றுமே கடன் வாங்காமல் இப்படியொரு நல்ல வாழ்க்கையை வாழமுடிகிறது என்பதுதான். உச்சபட்சமாய் கலங்கிய நெஞ்சத்துக்கு கடன்பட்டார் நெஞ்சம்போலஎன்றொரு உவமையைக் காட்டுவார் கம்பர். அப்படியொரு கலக்கத்தை இதுவரை உன் அப்பாவும் அனுபவித்ததில்லை. நம்மையும் அனுபவிக்க வைத்ததில்லை.

எனக்கும் உன் அப்பாவுக்கும் திருமணமானபோது வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்போது உன் அப்பா மேலாளராய் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் ஒரு கடைநிலைத் தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் தன் உழைப்பாலும் திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலும் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் என்னுடைய ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்று முடிந்தவரை உன் அப்பாவுக்கு உதவினேன். எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம். அநாவசிய செலவுகளைத் தவிர்த்தோம். மருத்துவம், கல்வி, போன்ற அவசியத் தேவைகளுக்கு சேமித்துவைத்தோம். அதற்காக கஞ்சத்தனமாகவும் இல்லை. விருந்தோம்பல், உறவினர் திருமணம், சுற்றுலா போன்ற மகிழ்வான தருணங்களையும் தவறவிடவில்லை.

யாவும் நீ அறிந்ததுதான். அந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் தங்கை மலர்விழியையும் நல்லபடியாகவே வளர்த்தோம். எங்களுக்கு சிரமந்தராமல் நீங்களும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்தீர்கள்; நீ மணிமொழிச்செல்வன் என்ற உன் பெயருக்கேற்ப மணிமணியாய் பேசுவாய்; அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டாய்; அரசுப்பள்ளியில் படித்தாலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவனாய்த் தேறினான். சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய். வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள உனக்கு இதைவிடவும் நல்ல வாய்ப்பு அமையாது என்று எங்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு உன்னை விடுதிக்கு வழியனுப்பிவைத்தோம். கல்லூரியிலும் கருமமே கண்ணாக படித்து, நல்மாணாக்கனாய்த் தேறி மும்பையிலிருக்கும் பெரிய நிறுவனமொன்றில் நல்லதொரு உத்தியோகமும் பெற்றுக்கொண்டாய். அதன் பின்னணியிலான உன் கடுமையான உழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

நீ வேலையில் சேர்ந்து இந்த மாதத்துடன் ஒருவருடம் ஓடிவிட்டது. நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது. நேற்றுதான் உன்னை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நினைவு! நீயும் படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகமும் கிடைத்து ஒருவருடம் முடிந்துவிட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. இதோஇந்த வருடம் உன் தங்கையும் கல்லூரியில் காலடி எடுத்துவைத்துவிட்டாள்

வேலை கிடைத்தவுடன் அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் அண்ணா?” என்று மலர்விழி கேட்டாள். நீ உன் சம்பளப்பணத்தை முழுவதுமாய் அப்பாவிடம் தந்துவிடப்போவதாக சொன்னாய். அப்பா அதை மறுத்துவிட்டு அந்தப் பணத்தை உன் செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மீதத்தை உன் பெயரில் வங்கியில் சேமித்துவைக்கும்படியும் சொன்னதோடு அவரே அதற்கான முயற்சிகளையும் செய்து உன் பெயரில் வங்கிக்கணக்கைத் துவக்கியும் கொடுத்தார். மாதமொருமுறை ஊருக்கு வந்துபோகும் நீ ஒவ்வொருமுறையும் மனங்கொள்ளாத அன்புடனும் கைகொள்ளாத அன்பளிப்புகளுடனும் வருவதையே வழக்கமாக்கிக் கொண்டாய்.

நீ உன் முதல்மாத சம்பளத்தில் எனக்கு ஒரு பட்டுப்புடவையும் அப்பாவுக்கு ஒரு கைக்கடிகாரமும் மலர்விழிக்கு ஒரு மடிக்கணினியும் வாங்கித்தந்தாய். அவை ஒவ்வொன்றின் விலையும் மிகவும் அதிகம் என்றபோதும் உன் திருப்திக்காக நாங்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். அதன்பின் தொடர்ந்து உன் சம்பளப்பணத்திலிருந்து எங்களுக்கு, தங்கைக்கு, வீட்டுக்கு அது இது என்று எதையாவது வாங்கித் தந்துகொண்டேதான் இருக்கிறாய். ஒன்றிரண்டு முறை நானும் அப்பாவும் சூசகமாக உன்னிடம் சேமிப்புப் பற்றித் தெரிவித்தோம். நீ அதைப் புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை. புரிந்திருந்தால் நீ தேவையற்றப் பொருட்களில் பணத்தைப் போடுவதை நிச்சயம் தவிர்த்திருப்பாய்.

சென்றவாரம் வந்தபோது அதிநவீன கைபேசிகளை ஆளுக்கொன்றாய் வாங்கிவந்திருந்தாய். அதன் விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சாதாரண கைபேசியைவிடவும் அதிகமாக இருக்குமென்று தெரியும். அது எங்களுக்குத் தேவைதானா? யோசித்துப் பார்கைபேசியின் முக்கியப் பயன் தொலைவில் உள்ளவர்களோடு தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்வதுதான். அதற்கு இப்போதிருக்கும் சாதாரண கைபேசியே போதுமானது அல்லவா?

நீ உன் அப்பாவிடம் அந்த கைபேசியைக் கொடுத்தபோது, “எதற்கு இந்த அநாவசியச் செலவு? இனி இதுபோல் தேவையின்றி செலவழிக்காதேஎன்றார். நீ முகம் சுருங்கிப் போனாய். எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாய். அதன்பின் நீ எங்களுடன் சரியாகப் பேசவே இல்லை. அண்ணன் எப்போது வருவான் என்று ஆசையாய்க் காத்திருந்த உன் தங்கை மலர்விழியிடம்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நானும் உன் மனநிலை சற்று மாறியதும் உன்னுடன் பேசி தெளிவுபடுத்தலாம் என்று காத்திருந்தேன். நான்குநாட்கள் தங்குவதாகச் சொல்லி வந்திருந்த நீ வேலை இருக்கிறது என்றுசொல்லி மறுநாளே மும்பை கிளம்பிச்சென்றுவிட்டாய்.

மனவருத்தத்துடன்தான் நீ ஊருக்குச் செல்கிறாய் என்று தெரிந்தாலும் நான் தடுக்கவில்லை. நிதானமாக யோசித்தால் நீயே புரிந்துகொள்வாய் என்று விட்டுவிட்டேன். ஆனால் உன் எண்ணத்தில் சிறிதும் மாற்றமில்லை என்று தெரியவரும்போது வருத்தமாய் உள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது திருத்துவது பெற்றவர் கடமை அல்லவா? மன்னனுக்கே இது பொருந்தும்போதுமகனுக்குப் பொருந்தாதா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் - குறளின் விளக்கம் நீ அறியாததா? 

உழைப்பு, சிக்கனம், சேமிப்பு இவற்றின் மூலமே சீரான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருப்பவர் உன் அப்பா. ஆரம்பநாட்கள் முதலே அதற்குத் உறுதுணையாயிருந்தவர்கள் நானும் எங்கள் பிள்ளைகளாகிய நீங்களும். ஆம். சிறுகுழந்தையிலிருந்தே பார்க்கும் எதற்கும் ஆசைப்படாதவர்கள் நீங்கள். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நச்சரிக்காதவர்கள். ஒரு பொருளைக் கேட்டு அது கிடைக்காவிடில் அதற்காக பிடிவாதம் பிடிக்காதவர்கள். மொத்தத்தில் குடும்பத்தின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டவர்கள். முக்கியமாய் நீ!

உனக்கு நினைவிருக்கிறதா? உனக்கு பத்துவயதாயிருக்கும்போது ஒருமுறை திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். உன் தங்கை ஊதல் வேண்டுமென்று கேட்டாள். அப்பா வாங்கித்தர முன்வந்தபோது நீ சொன்னாய், “ஏன் அப்பா ஊதலுக்கு செலவு செய்கிறீர்கள்? நம் வீட்டு பூவரசு இலையில் நான் அவளுக்கு பீப்பீசெய்து தருகிறேன்என்று சொன்னதோடு, வீட்டுக்கு வந்தவுடனேயே விதவிதமான ஒலியெழுப்பும் ஏராளமான பீப்பீக்களைச் செய்துகொடுத்து அவளை மகிழ்வித்தாய். நானும் உன் அப்பாவும் உன் செயலை எண்ணி வியப்பும் பெருமையும் அடைந்தோம்.

இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவரச்சொன்னால் இரண்டுதெரு தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவாய். கேட்டால் இந்தக் கடையைவிடவும் அந்தக்கடையில் விலை மலிவு. பொருளும் தரமாக இருக்கும் என்பாய். பன்னிரண்டு வயதில் உனக்கிருந்த பொறுப்பை எண்ணி வியந்தேன்.

சிறுவயதில் அவ்வளவு பொறுப்புடன் இருந்த நீ இப்போது முறையற்ற செலவுகளை செய்வதைப் பார்த்து இப்போதும் வியக்கிறேன். நீ இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறாய். இனி திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் எவ்வளவோ ஏற்படலாம். எதிர்காலத்தை எப்போதும் மனத்தில் வைத்து நிகழ்காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - அல்லவா?

எங்களை வசதியாக வாழவைக்கவேண்டுமென்பதுதான் உன் ஆசையென்று அடிக்கடி சொல்வாய். வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றவர்களைத் திரும்பியும் பார்க்காத பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியொரு அற்புதமான பிள்ளையைப் பெற்றதற்காக ஈன்ற பொழுதினும் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம். இந்த அன்பு ஒன்றே போதும். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிட்டாய். இனி ஏதேனும் வாங்குவாயானால் அது ஆடம்பரம்தான். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. இனியாவது உன் சேமிப்பில் கவனம் செலுத்து. எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியம் தேவைதானா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாங்கு.

சிக்கனமும் சேமிப்பும் பணத்தில் மட்டுமன்றுதண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று நமக்கு அத்தியாவசியத் தேவையான எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பின்னாளில் கையைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

வருமுன் காப்பவன்தானே அறிவாளி?
வந்தபின் தவிப்பவன் ஏமாளியல்லவா?

நீ அறிவாளியாக இருக்கவிரும்புகிறாயா? ஏமாளியாகப் போகிறாயா? அப்பாவின் சொற்ப வருவாயில் நாம் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார். இப்போது நீ கைநிறைய சம்பாதிக்கிறாய்ஆனால் உன் எதிர்காலத்தைக் குறித்து எங்களை கவலையுறச் செய்திருக்கிறாய்மகனே மணிமொழி! இதுவா நீ எங்களை மகிழ்வாய் வைத்திருக்கச் செய்யும் முயற்சி? நிதானமாக யோசித்துப்பாரப்பா! அடுத்தமுறை நீ நம் வீட்டிற்கு வரும்போது பை நிறைய பரிசுப்பொருள் வேண்டாம். மனம் நிறைக்கும் அன்பை மட்டுமே அள்ளிக்கொண்டுவா! நம் குடும்பத்துடன் குதூகலமாய் உன் விடுமுறை நாட்கள் கழியட்டும்! எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி அதுதான் என்பதை உணர்ந்துகொள்!

உன் உடல்நிலையைக் கவனித்துக்கொள். உடல்நிலை சரியில்லையெனில் அலட்சியமாய் இருக்காதே. உடனே மருத்துவரிடம் காட்டு. ஏதேனும் தேவையெனில் எனக்குத் தெரிவி. உன் அறைத்தோழர்களைக் கேட்டதாகச் சொல். நாங்கள் அனைவரும் உன் அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

என்றும் அன்புடன்,

உன் அம்மா.

*********************************



வல்லமை இணைய இதழில் 
'அன்புள்ள மணிமொழிக்கு' 
என்ற தலைப்பில் நடைபெற்ற கடித இலக்கியப் போட்டியில் 
என்னுடைய இக்கடிதத்துக்கு ஆறுதல் பரிசு என்பதில் 
அளவிலாத மகிழ்ச்சி. 
போட்டியைத் திறம்பட நடத்திய 
வல்லமை இணைய இதழ் குழுவினருக்கும், 
போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும்,
நடுவர் இசைக்கவி திரு.ரமணன் அவர்களுக்கும் 
மனமார்ந்த நன்றிகள்.




*****************************
(படங்கள்: நன்றி இணையம்)

2 May 2014

எங்கள் தோட்டத்துப் பறவைகள்...




எங்கள் குடியிருப்பைச் சுற்றிலும் வளர்ந்திருக்கும் உயர உயரமான யூகலிப்டஸ் மரங்களில் அதிகாலை முதல் அந்தி வரை காக்கை, குருவி, மைனா, கிளி, லாரிகீட்ஸ், மேக்பை, புறா, குயில் இன்னும் சில பெயர் தெரியாத பறவைகளின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் காகத்தின் கரையலும் ஒருவித ரிதமிக்காக பாட்டுப் பாடுவது போல் இருக்கும். புல்லாங்குழல் பறவை என்றழைக்கப்படும் மேக்பையின் பாடலோ சொக்கவைக்கும். லாரிகீட்களின் கீச்சொலி கேட்டாலே அவற்றின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். யாரோ காய்ச்சலால் அனத்துவது போன்ற சன்னலோரப் புறாவின் குனுகல் ஆரம்பத்தில் ஒருவித எரிச்சலைத் தந்தாலும் போகப் போக ரசிக்கப் பழகவிட்டது. 

இப்படி இனிமையான பறவையொலிகளைக் கேட்டு ரசித்திருந்த எனக்கு, ஒருநாள் க்ர்ர்ர்ரே…..க்ர்ர்ரே….’ என்று தொண்டையைக் கிழித்துக்கொண்டு காட்டுக்கத்தலாய் ஏதோ பறவைக்குரல் கேட்கவும், தூக்கிவாரிப்போட்டது. ஆகாயத்திலிருந்து அண்டரண்டப் பட்சிதான் வந்துவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு அசாதாரணக் கூச்சல்! இதற்கு முன்னர் எப்போதும் கேட்டிராத பறவையொலிஆக்ரோஷமாய்க் கத்துகிறதா அல்லது அதன் குரலே இப்படித்தானா.. என்று புரியவில்லை. என்ன பறவையென்று பார்க்கலாம் என்றாலோஅடர்ந்த மரக்கிளைகள் எதையும் பார்க்கவிடவில்லை. ஆனால்சத்தம் மட்டும் காதைத் துளைத்தவண்ணம் எப்போதடா ஓயும் என்றிருந்தது.

சட்டென்று அமைதி! தூரத்தில் அதே க்ர்ர்ர்ரேக்ர்ர்ர்ர்ரே….’ சத்தம்பறந்துபோய்விட்டது போலும்.. இவ்வளவு பெரிய சத்தம் தருகிறதென்றால் அது எவ்வளவு பெரிய பறவையாக இருக்கும்அதைப் பார்த்தே ஆகவேண்டுமேஎன்று உள்ளுக்குள் ஒரே தவிப்புமறுபடி எப்போது வருமோ… வருமோ, வராதா?  கொஞ்சம் வருத்தம்தான்.

மறுநாள் நூலகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். வீட்டிலிருந்து அரைமணி நேர நடைபோகும் வழி நெடுக மரங்கள்பரந்த பச்சைப்புல்வெளிகள்இரண்டு மூன்று விளையாட்டு மைதானங்கள்… அப்போது எதிர்பாராத காட்சியொன்று காணக் கிடைத்தது. பச்சைப் புல்வெளியெங்கும் அள்ளி இறைத்தாற்போல் வெண்பஞ்சுப் பறவைக்கூட்டம்என்ன செய்கின்றன என்று உற்றுக் கவனித்தால் ஒவ்வொன்றும் மூக்கால் மண்ணை உழுதுகொண்டிருக்கின்றன. 



ஒருவித எச்சரிக்கை உணர்வோடு சற்றே பார்வையை நகர்த்திப் பார்த்தால் தலைக்கு மேலே மரங்களில் கிளைகளில் காணுமிடம் எங்கெங்கும் பறவைகள்பறவைகள்… பறவைகள்!



வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கையில் பந்தயம் வைத்தாற்போல் விருட்டென்று அத்தனையும் சிறகடித்துக் கிளம்பி சாலையைக் கடந்து அடுத்த மைதானத்துக்குச் செல்கின்றன. தரையிலிருந்து படுவேகத்துடன் ஒரு விமானம் போலத் தாழ்வாகக் கிளம்பித் தலையுரசிப் போகையில் யாருக்குதான் கிலி ஏற்படாது? நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைக்க, நடைபாதையில் பாதசாரிகள் பையோ கையோ கொண்டு தலையையும் முகத்தையும் மறைத்து ஒடுங்கிநிற்கநான் செய்வதறியாது திகைத்து நடக்கிறேன்தலைக்கு மேலே க்ர்ர்ர்ரே….’என்று கத்திக்கொண்டு பறந்துபோன போதுதான் விபரம் புரிந்ததுஅட இதுதானா அது! விபரீதமும் கூடவே புரிய, நானும் சிரம் தாழ்த்திக் குறுகி நின்று, பறவைக்கூட்டம் முழுவதும் பறந்துசெல்லும்வரைக் காத்திருந்து நடையைத் தொடர்ந்தேன்.




சிறுவயதுக் காலங்களில் சர்க்கஸில் இந்தப் பறவைகள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன். வெண்ணிற உடலில் மஞ்சள் நிறக்கொண்டையுடன் காணப்படும் இவை ஆஸ்திரேலியக் கிளிகள் என்ற வரையில்தான் அறிமுகம் எனக்கு. ஆர்வம் உந்த அப்பறவைகளைப் பற்றி அறிய முற்பட்டேன். காக்கட்டூ என்ற பெயர் கொண்ட இப்பறவைகளைப் பற்றி பல சுவாரசியத் தகவல்கள் கிடைத்தன. இதுபோல் உணவுக்காக அடிக்கடி இடம்பெயர்ந்து கூட்டம் கூட்டமாய் வருவது அவற்றின் இயல்பென்பதையும் அறிந்தேன்.

ஆஸ்திரேலியக் கொச்சைமொழியில் காக்கட்டூ என்பது சட்டவிரோத சூதாட்ட விடுதிகளில் போலீஸார் வருகையை முன்கூட்டி அறிவித்து எச்சரிப்பவரைக் குறிக்கும் அடைமொழியாகும். அவருக்கும் காக்கட்டூவுக்கும் என்ன தொடர்பென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, காக்கட்டூ போல் உரத்தக் குரலில் கத்தி எச்சரிப்பாரோ?

ஆஸ்திரேலியாவின் அதிசயப் பறவைகளான காக்கட்டூ பறவைகள் பற்றி மற்றுமொரு பதிவில் அறிந்துகொள்வோம். அதற்குமுன் எங்கள் தோட்டத்து மரங்களில் வந்தடையும் பறவைகளின் சங்கீதத்தைக் கேட்டு ரசிப்போமா? என்னிடமுள்ள ஒலிப்பதிவுக்கருவியின் உதவியால் பதிவு செய்தேன். சிலவற்றில் தெளிவு இருக்காது… என்றாலும் ஓரளவு கேட்டு ரசிக்கலாம். 

காது துளைக்கும் காக்கட்டூ



அண்டங்காக்கை



கச்சேரி வைக்கும் காக்கைகள்


காக்கைகளின் டூயட்


சும்மாவே லாரிகீட்கள் கும்மாளமிடும்




வசந்தகாலமென்றால் சொல்லவும் வேண்டுமோ?



புல்லாங்குழல் பறவை மேக்பை



இன்னும் கொஞ்சம் பாட்டு



மேக்பையும் புறாவும் போட்டிகானம்


குயிலின் கீதம்


இன்னும் நிறைய பறவைகளின் ஒலி கேட்டவண்ணம்தான் இருக்கின்றது. ஆனால் நேரமும் சூழலும் ஒத்துழைக்காததாலும், உயரத்தில் ஒலிப்பது சரிவர பதிவாகாததாலும் பல இனிய குரல்களைத் தவறவிட்டிருக்கிறேன். ஆனாலும் இதுவரை ஒலிப்பதிவு செய்தவற்றையாவது இணைப்போம் என்றால் வலைப்பதிவில் எப்படி இணைப்பது என்று தெரியாமல் தவித்திருந்தேன். 


என்னைப் போன்ற பலருடைய வேண்டுகோளையும் ஏற்று 
அழகாக, தெளிவாக செய்முறைகளுடன் விளக்கி வழிகாட்டிய 
சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு 
இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். 



************************************************
(படங்கள்: நன்றி இணையம்)