முக்கால்
நூற்றாண்டுக்குப் பின் நூலகம் வந்த புத்தகத்தைப் பற்றி முன்பு பார்த்தோம். நூலகத்தின்
பத்திரிகைகளுக்கிடையில் சிக்கியிருந்த கடிதமொன்று அரை நூற்றாண்டுக்குப் பின்
உரியவரைத் தேடிவந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? அதுவும் சாதாரணக்
கடிதம் அல்ல, காதல் கடிதம்.
கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு
முன் காதலி வான்னி தன் காதலன் க்ளார்க்குக்கு (அதுதான் அவர் பெயர்) எழுதிய கடிதம் அது. கல்லூரி திரும்புமுன் ஏன்
தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசலைன்னு வருத்தப்பட்டு கேட்டு எழுதியிருக்காங்க.
ஆனால் அந்தக் கடிதம் க்ளார்க்கை என்ன காரணத்தாலோ வந்தடையவே இல்லை.
அவரும் படிப்பை
முடிச்சிட்டு, ஊருக்கு வந்து தனக்காகக் காத்திருந்த வான்னியைக் கல்யாணமும் செய்து, சேர்ந்து வாழ்ந்து, நான்கு
குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, பின் விவாகரத்தும் பெற்று விட்டாராம். அதோடு
இல்லை, அவர் மதம் மாறி
முகம்மது சித்திக்காகவும் மாறிவிட்டாராம். சென்றவருடம் அவரைத் தேடி வந்தடைந்திருக்கிறது
அக்கடிதம்.
நான்கு ஒரு
சென்ட் அஞ்சல்தலைகளைத் தாங்கி 1958 ஆம் வருட
முத்திரையை ஏற்று நிற்கும் அக்கடிதம் பென்சில்வேனியாவிலிருக்கும் கலிஃபோர்னியப்
பல்கலைக்கழகத்தின் அஞ்சல் பெட்டிக்கு சிலவாரங்கள் முன்புதான்
வந்து சேர்ந்திருக்கிறது. வியப்புக்குரிய கடிதம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்த
அவருடைய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் தற்போது இண்டியானாபோலிஸில் வசிக்கும் 74
வயதான சித்திக்கிடம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைக் கேட்ட
சித்திக் சொல்லமுடியாத உணர்வுக்கலவையில் மிதக்கிறதா சொன்னாராம். ‘இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தின் மேல் அத்தனையொன்றும்
ஆர்வமில்லை, இருந்தாலும் ஒரு குறுகுறுப்போடக்
காத்திருக்கிறேன்’ என்று சொன்னாராம்.
எல்லாம் சரி, கடிதத்தை உரியவர்
பிரித்துப் பார்க்குமுன்பே அது ஒரு காதல் கடிதம் என்று எப்படித் தெரியும்னு
யோசிக்கிறீங்களா? அதிலிருக்கும் அஞ்சல் தலைகளை வைத்துதான். காதலர்களுக்கென்று பிரத்யேக அஞ்சல்தலைகளான்னு
ஆச்சர்யப்படாதீங்க. எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான அஞ்சல்தலைகள்தாம் அவை. ஆனால்
அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால்
புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ?)
தலைகீழ்
மட்டுமில்லை, அஞ்சல் தலையின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பொருள் உண்டாம். சொல்லவா?
நேராக இருந்தால்
- வியாபார விஷயம்.
தலைகீழாய்
இருந்தால் - காதல், தனிமை, தாபம்
தலைப்பகுதி வலப்பக்கம்
பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - அன்பு முத்தங்கள்
தலைப்பகுதி
இடப்புறம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - நான் உன்னை விட்டு நீங்கவே மாட்டேன்
மூலைவிட்டத்தை
முன்னிறுத்தி அஞ்சல் தலையின் மேற்பகுதி வலப்பக்கம் பார்த்திருந்தால் - என்னைத்
திருமணம் செய்துகொள்வாயா?
அதற்கு
எதிர்திசையில் அதாவது தலை இடப்பக்கம் பார்த்தபடி இருந்தால் - உன்னை மணப்பது உறுதி.
பாருங்க, அந்தநாளிலேயே
அமெரிக்கக் காதலர்கள் அஞ்சல்தலைகளை ஒட்டுவதிலேயே சங்கேத மொழியை உருவாக்கிக்
காதலித்திருக்காங்க.
எங்க
கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு
விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த
சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட
ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....)
இன்னும் ஒரு
விஷயம், இந்திய அஞ்சல்துறை இம்மாதிரிக் கோணல்மாணலா அஞ்சல்தலைகள்
ஒட்டப்பட்டக் கடிதங்களை நிராகரிச்சிட்டா, அப்புறம் என்னைத்
திட்டக்கூடாது. சரியா?
காதலுக்காக
அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித்
தெரியுமா? அஞ்சல் தலை
சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு
நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து
வருடங்களாக சேகரிக்கிறேன்.
மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான
பொழுதுபோக்கு அது.