Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

14 January 2026

கம்பராமாயணக் காட்சிகள் (Glimpses of Kamba Ramayanam)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு 

மற்றும் 

பொங்கல் வாழ்த்துகள்! 

2026-ஆம் ஆண்டின் முதல் பதிவே கன்னல் சுவையினும் இனிய கவிச்சுவையாம் கம்ப ராமாயணம் என்னும் இன்தமிழ்க் காப்பியம் சார்ந்து இருப்பது மகிழ்வளிக்கிறது. சிட்னியில் வசிக்கும் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள் எழுதியுள்ள 'Glimpses of Kamba Ramayanam' நூலுக்கான மதிப்புரையுடன் இவ்வாண்டின் பதிவுகளை இனிதே தொடங்குகிறேன்.



யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை – பாரதி

கம்பராமாயணத்தை இயற்றப் புகுமுன், என்னதான் தன்னை, பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனையாய்த் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும், கம்பனின் கவி மேதைமையையும் தண்ணிகரில்லாத் தமிழ்ப்புலமையையும் ஐயமின்றி ஆராதிப்பவர்கள் நாம். கம்பராமாயணத்தின் காவியத்திறத்தை காலந்தோறும் போற்றிப் புகழ்பவர்கள் நாம்.

பன்மொழி அறிஞரும் தமிழ்த்திறனாய்வாளருமான வ.வே.சு.ஐயர் இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை’ என்னும் நூலில்,

“நமது முன்னோர் கம்பனுக்கு ‘கவிச்சக்கரவர்த்தி’ என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சி அல்ல: அது உண்மை உரைத்தலே ஆகும். கவிதா லோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான்! மேல் நாட்டாருக்குள் கவிச் சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில், தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன், மொலியேர், கதே ஆகிய இவர்கள், கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதான் இருக்கிறார்களே ஒழிய, அவனை மீறவில்லை. நமது நாட்டிலும் கச்சியப்பர், இளங்கோவடிகள், சாத்தனார், நன்னைய பட்டன், சந்த பட்டன், துளசிதாஸர், காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும், தராசு முனை கம்பன் பக்கம்தான் சாயுமேயொழிய, அவர்கள் பக்கம் சாயாது.” என்கிறார்.


அது மட்டுமா? வியாசனையும் வால்மீகியையும் கூட ஒப்பீட்டுக்கு அழைக்கிறார். “வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதை (வேத மந்திரங்களின் தொகுப்பு) என்பதால் அதையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல, கவிதாரீதியாக மாத்திரம் ஒப்பிட்டுப் பார்த்தால் கம்ப ராமாயணம் வியாஸ பாரதத்துக்குச் சமமாகவாவது இருக்குமே தவிர எள்ளளவு கூடத் தாழாது” என்றும் “கவிகளில் ஆதியானவரும், ராமாயணத்துக்கே முதல் நூலாசிரியரும், கம்பனாலாயே தன்னால் ஏணி வைத்துப் பார்த்தாலும் எட்டமுடியாதவர் என்று கூறப்பட்டவருமான வால்மீகி முனிவரின் கவிதா சாமர்த்தியத்தை கம்பனுடைய சாமர்த்தியத்தினும் மேலானது என்று சொல்ல வேண்டாமா என்ற கேள்வி பிறக்கும். ஆனால் இரண்டு காவியங்களையும் பாரபட்சமில்லாமல் சிரத்தையொடும் பொறுமையோடும் படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது என்று சொல்லவேண்டியதாய் இருக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.  

இங்ஙனம் உலக மகாக் கவிஞர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தமிழன்னையின் தவப்புதல்வனாம் கவிச்சக்கரவர்த்தி கம்பனை தமிழென்னும் மொழி வரையறைக்குள் வைத்து நமக்கு நாமே சிலாகித்துக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

தமிழ் அறியாதோரிடத்தும் கம்பனின் காவியத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்திடும் முகமாகவும், அயல்மொழி அறிந்தோரும் கம்பராமாயணம் என்னும் அருந்தமிழ்க் காப்பியத்தின் சுவையைக் குறைவிலாது ரசித்து இன்புறும் வண்ணமும், ஆங்கிலவழிக் கல்வி பயின்ற தமிழ் மக்களின் அடுத்தச் சந்ததியினர் கம்பனின் ஆழ்ந்த தமிழ்ப்புலமை கண்டு அதிசயித்துக் கொண்டாடும் பொருட்டும் ஆவன செய்திருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள். பிரத்தியேகச் சிரத்தை எடுத்து ஆங்கிலம் வழியே தமிழ்ப் பாக்களை எளிதாய்ப் புரிந்துகொள்ள வழி செய்துள்ள நூலாசிரியர் இந்நூலை எழுதியதன் மூலம் அந்த சீரிய பணியைச் சிறப்புறச் செய்து முடித்திருக்கிறார். கம்ப ராமாயணப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதுமாறு அவரை ஊக்குவித்த அவருடைய பிள்ளைகட்கு நமது நன்றி என்றென்றும் உரித்தாகுக!

கம்பராமாயணத்தின் செய்யுட் பாடல்களைப் புரிந்து ரசிக்க எல்லாராலும் இயல்வதில்லை. ஆர்வம் மேலிட, பயில முனைந்தாலும் காலம் கைகூடுவதில்லை. ஓய்ந்து உட்காரவும் நேரமின்றி துரிதகதியில் ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் முழு காவியத்தையும் வாசித்து ஆய்ந்து விளங்கிக்கொள்வதற்கான நேரமோ பொறுமையோ பலருக்கும் அமைவதில்லை. தமிழின்பால் தாளாத மையலுடனும் கம்பராமாயணத்தை வாசித்து இன்புற இயலவில்லையே என்னும் ஆதங்கத்துடனும் எட்ட நின்று ஏங்கியவர்களைக் கைப்பிடித்து அழைத்துவந்து அற்புதமான காப்பிய விருந்து படைத்திருக்கிறார் முனைவர் அவர்கள்.

கரும்பு தின்னக் கூலியா? என்பார்கள். இவரோ கரும்பை மென்று துப்பும் வேலையைக்கூட வாசகர்க்குத் தரவில்லை. கரும்பினைப் பிழிந்து சாறெடுத்து, வடிகட்டி, அவ்வினிய சாற்றைக் குவளையில் ஊற்றி, கையில் கொடுத்துள்ளார். ரசித்து ருசித்து பருகுவதொன்றே வாசகர் பணி.

Glimpses of Kamba Ramayanam நூலை மொழிபெயர்ப்பு நூல் எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட இயலாது. இது மொழிபெயர்ப்புக்கும் அப்பாற்பட்டது. மொழிப்புலமை பெற்றவர்களால் சிறுகதைகளையும் புதினங்களையும் எளிதாக மொழிபெயர்த்துவிட இயலும். கவிதைகளையும் கட்டுரைகளையும் கூட மொழிபெயர்த்துவிட முடியும். ஆனால் காப்பியங்களை? அதுவும் அவற்றின் கவிதையழகு கெட்டுவிடாமல்?

Poetry is what gets lost in translation - Robert Frost

மூல மொழியில் இருப்பவற்றைத் துல்லியமாக மொழிமாற்றம் செய்வதால் மாத்திரம் ஒரு மொழிபெயர்ப்புப் படைப்பின் நோக்கம் நிறைவு பெறாது. படைப்பும் முழுமை அடையாது. மொழியோடு அம்மொழி பேசும் மண் சார்ந்த மக்களின் இயல்பும் வாழ்வியலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும். அவர்களுடைய கலாச்சாரம், பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிவழியாய்த் தொடரும் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் யாவும் உரிய விளக்கத்தோடு மொழிபெயர்க்கப்படல் வேண்டும். காவியத்தின் அழகும் கவித்திறமும் சந்த நயமும் கோடிட்டேனும் காண்பிக்கப்படல் வேண்டும். ஒரு நிலத்தின் மொழியை அதன் பண்பாடும் கலாச்சாரமும் சிதையாமல், அதே சமயம் அவற்றைப் பற்றி சற்றும் அறிந்திராத வேறொரு நிலத்தின் மொழிக்குக் கடத்துதல் பெரும் சவாலான விஷயம். அந்தச் சவாலை மிக அநாயாசமாகக் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்கள்.

கம்பராமாயணத்தின் 118 படலங்கள் உள்ளடக்கிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களிலிருந்து மிகுந்த சிரத்தையோடு 108 பாடல்களை மட்டும் தெரிவு செய்து கம்பராமாயணத்தின் ரசம் துளியும் கெடாது சுருக்கி சிறப்பு செய்துள்ளார். 

‘பானைச்சோற்றுக்கு பருக்கைச்சோறு பதமாக’ என்னும் சொற்பதம் இங்கு பயன்படாது. ஏனெனில் படலங்கள் உள்ளடக்கிய பாடல்கள் ஒவ்வொன்றிலும் கவியின் திறமும் காட்சி நயமும் எதுகை மோனைகளும் எழிற் சந்தங்களும், அழகு வர்ணனைகளும், அணி இலக்கணங்களும், பொருண்மையும், பொருத்தமான உவமைகளும், கற்பனை வளமும், காவிய மாந்தரின் உணர்வெழுச்சியும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கும்போது ஒன்றை மாத்திரம் தெரிவு செய்தல் எவ்வளவு கடினம்?

50 பாடல்கள் கொண்ட பரசுராமப் படலத்தை இரண்டே பாடல்களால் மிக அழகாக விளக்கிவிட்டார். பரசுராமரை ஏன் கொல்லவேண்டும் என்றும் ஏன் கொல்லக்கூடாது என்றும் இராமன் குறிப்பிட்டு, நாணேற்றப்பட்ட இராம பாணத்துக்கு இலக்காக எதைக் கொள்ள எனக் கேட்கும் பாடலையும் அதற்கு பரசுராமர் விடை பகரும் பாடலையும் தெரிவு செய்துள்ளதன் மூலம் பரசுராமப் படலம் வாசகர்க்கு எளிதில் விளங்கவைக்கப்படுகிறது.

காவியத்தின் முழுமையான புரிதல் வேண்டி, இந்நூலில் ஒவ்வொரு காண்டத்தைத் துவங்கும் முன்பும் ரத்தினச் சுருக்கமாக அக்காண்டம் பற்றிய விளக்கம் ஆங்கிலத்தில் மிக இலகுவான வடிவில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படலத்திலிருந்தும் தெரிவு செய்த பாடலோடு கூடவே அதன் ஆங்கிலக் கவிதை வடிவமும் தரப்பட்டுள்ளது. அடுத்து அப்பாடலுக்கான பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது. தமிழை எழுதவும் படிக்கவும் சிரமப்படுவோர் எளிதில் வாசிக்க, அப்பாடலை ஆங்கிலம் வழியாக தமிழில் உச்சரித்து (transliteration) மகிழவும் கூடுதல் வகை செய்யப்பட்டுள்ளது.

அயல்மொழிகட்குப் பரிச்சயமற்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான விளக்கங்களும் எளிதில் விளங்கக்கூடிய வண்ணம் தரப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சில.

வேள்வி – Fire sacrifice ritual, sacrificial fire; ஊழி deluge; புஷ்பக விமானம் – gemstone-decorated aircraft; அமுதம் – remedial nectar; கவரி – yak-hair fan; வெண்கொற்றக் குடை – white umbrella of royalty; சூடாமணி – The hair ornament

கவரி என்பதை ‘flywhisk’ என்று பொதுவாகக் குறிப்பிடாமல் ‘Yak-hair fan’ என்று துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் நூலாசிரியர் எடுத்துக்கொண்ட சிரத்தை தெளிவாகத் தெரிகிறது.

தாரை வார்த்தல் என்பதை Pouring the holy water என்கிறார். எவ்வளவு எளிமையான விளக்கம்! இது ஒரு திருமணச் சடங்கு என்பதைக் குறிப்பிடும் வண்ணம் அடுத்த வரியில் he followed the sacred rituals என்று கூடுதல் விளக்கமளிக்கிறார்.

காற்று வந்து அசைத்தலும் – இந்த வரிகளை அப்படியே மொழிமாற்றம் செய்யாது, ‘சஞ்சீவி மலையின் காற்று அசைந்து வந்து படவும்’ என்று தமிழிலும் ‘The medicinal air from the Herbal Mountain touched’ என்று ஆங்கிலத்திலும் குறிப்பிடுவதன் மூலம் பாடலின் உட்கருத்தை வாசிப்போர் ஐயமின்றி விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறார்.

ஆங்கிலவழிக் கவிதை விளக்கங்கள் பல பாடல்களில் ‘அட’ என்று எண்ண வைக்கின்றன. உதாரணத்துக்கு இரண்டு பாடல்கள்.

(1)    இராமன் காட்டுக்குச் சென்ற செய்தி அறிந்த பரதன், கோசலையில் பாதங்களில் வீழ்ந்து கதறுகிறான்.

தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்

பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்

நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்

தீ எரி நரகத்துக் கடிது செல்க யான் (பள்ளிபடைப் படலம்)

 

Bharata who had fallen at Kosalai’s feet, started to list that,

‘The sinner, who takes care of his hunger while his mother starves to death,

Who witnesses the death of his King in the war front but saves his own life,

Would all go to the burning hell, but let I should reach hell before them’

 

(2)    அசோகவனத்தில் கவலையே உருவான சீதை, நிலவைப் பார்த்துக் கூறுகிறாள்

கல்லா மதியே கதிர்வாள் நிலவே

செல்லா இரவே சிறுகா இருளே

எல்லாம் எனையே முனிவீர் நினையா

வில்லாளனை யாதும் விளித்திலீரோ (உருக்காட்டுப் படலம்)

 

Never learnt and just shine reflecting the Sunlight, Oh Moon!

Unending and intensifying darkness, Oh Night!

All of you infuriate towards lonely me,

But not Raman with bow, who never think of me!

எவ்வளவு அழகான தெளிவான விளக்கப் பாடல்கள்!

இந்நூலில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம் கம்ப ராமாயணத்தின் கதை மாந்தர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது Rama, Bharatha, Sita, Lakshmana, Hanuman, Ravana, Vibhishana, Kumbhkarna என்று இல்லாமல் Raman (ராமன்), Bharathan (பரதன்), Seethai (சீதை), Lakshmanan (லக்ஷ்மணன்), Anuman (அனுமன்), Ravanan (ராவணன்), Vibeeshanan (விபீஷணன்), Kumbhakarnan (கும்பகர்ணன்) என தமிழில் உச்சரிப்பது போன்றே குறிப்பிட்டிருப்பது.

Glimpses of Kamba Ramayanam என்னும் இந்நூல், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் அவர்களின் தீவிரத் தமிழ்ப்பற்றுக்கும், நாடு, மொழி, மதம், இனம் மற்றும் தலைமுறைகள் கடந்து தமிழின் காப்பியச் சிறப்பைக் கொண்டுச்செல்ல விழையும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கும் பெரும் சான்று.


எண்ணற்ற விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கும், ஏராளமான பொறுப்புகளை நிர்வகிக்கும் அன்னாரது உழைப்பினாலும் சீரிய முயற்சியினாலும் உருவாக்கப்பட்ட இந்நூல் எப்பேதமும் அற்று உலக மக்கள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும், தமிழின் சிறப்பு பாரெங்கும் ஓங்க வேண்டும், கம்பனின் காவியத்திறம் மொழி கடந்தும் விதந்தோதப்பட வேண்டும் என்னும் பேரவா எழுகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்

பாரதியின் இவ்வாக்கினை மெய்ப்பிக்கும் முகமாக இந்நூல் உலகம் முழுவதும் சென்றடைந்து, இப்படைப்பின் நோக்கத்தை முழுமையுறச் செய்ய வேண்டுமாய் வாழ்த்தி மகிழ்கிறேன்.

*****

ஆங்கில மதிப்புரைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் 'தமிழணங்கு' மற்றும் இலங்கையிலிருந்து வெளியாகும் 'The Morning' இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.  நன்றி: முனைவர் சந்திரிகா சுப்ரமணியம் அவர்கள்.

'The Morning' சஞ்சிகையில்




'தமிழணங்கு' இதழில்






22 May 2024

பெருங்களிற்றுச் செவியோ? சுளகோ?

தோட்டத்துப் பிரதாபம் - 29 


மொறுமொறுவென்று சிப்ஸ் போல வறுத்த சேப்பங்கிழங்கு என்றால் என் பிள்ளைகளுக்கு உயிர். சேப்பங்கிழங்கை தண்ணீர் விடாமல் குக்கரில் வேகவைத்துத் தோலுரித்து மெல்லிசாய் வட்டவட்டமாக வெட்டி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்புத்தூள், கொஞ்சமாய் க.மாவு அல்லது அரிசி மாவு தூவிப் பிசறி எண்ணெயில் shallow fry-ஆக பொரித்தெடுக்க வேண்டும். இது என் புகுந்த வீட்டுச் செய்முறை. 


என் அம்மாவுடைய செய்முறை வேறு.
சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துத் துண்டுகளாக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு இவற்றோடு தேங்காயும் சோம்பும் சேர்த்தரைத்த விழுதும் சேர்த்து  நிறைய எண்ணெய் விட்டு சுருள வதக்கி சாந்தோடு சற்று சொதசொதப்பாக இருக்கும் அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது.

சேப்பங்கிழங்கை என் அம்மா செய்வது போல ஒரு தடவை வறுத்து வைத்தபோது கணவர், பிள்ளைகள் யாருக்குமே இறங்கவில்லை. அதனாலென்ன? நானே எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்டிவிட்டேன். :)

சென்னையில் இருந்தவரை, பிள்ளைகளுக்குப் பிடிக்கும் என்று அடிக்கடி சேப்பங்கிழங்கு வறுவல் செய்வேன். ஆஸ்திரேலியா வந்த பிறகு சேப்பங்கிழங்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் யானை விலை குதிரை விலை இருந்தது. (குதிரைக் கொம்பு, குதிரை விலை... ஹாஹாஹா...) எனவே சின்ன வெங்காய லிஸ்டில் சேப்பங்கிழங்கும் சேர்ந்துவிட்டது. (சின்ன வெங்காயம் கிலோ $16 & சேப்பங்கிழங்கு கிலோ $18). 

சொந்த வீடு என்றானபின், நமக்குதான் கையகலத் தோட்டம் இருக்கிறதே காய்கறி விளைவிப்போம் என்ற முடிவுக்கு வந்த பிறகு சேப்பங்கிழங்கை நாமே விளைவித்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. கடையில் கால்கிலோ அளவுக்கு சேப்பங்கிழங்கு வாங்கிவந்தேன். கட்டைவிரல் சைஸில் குட்டிக் குட்டியாகப் பதினைந்து கிழங்குகள். தோட்டத்தில் ஒரு இடம் பார்த்து ஒரு சாண் இடைவெளியில் கிழங்குகளை நட்டுவைத்தேன். விளைந்தால் லாபம், போனால் ஐந்து டாலரோடு போகட்டும் என்று விட்டுவிட்டேன். கொஞ்ச நாளிலேயே கிழங்குகள் முளைவிடத் தொடங்கின. ஏழெட்டு முளைத்தன. விதைத்ததில் பாதி! வளர வளர எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கிழங்குகள் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால் காற்றிலாடும் சேம்பின் இலைகளைக் காண்பதே பெருமகிழ்ச்சியாக இருந்தது. காற்றில் அசையும் சேம்பின் இலைகள் யானையின் காதுகளைப் போன்றிருப்பதான சங்க இலக்கிய உவமை நினைவுக்கு வந்து முறுவல் உண்டாக்கியது.



 

சிலம்பிற் சேம்பினலங்கல் வள்ளிலை

பெருங்களிற்றுச் செவியின் மான

குறுந்தொகைப் பாடலொன்றில் மலைச்சேம்பின் பெரிய இலைகளை, பெரிய யானையின் காதுகளைப் போன்று தோன்றும்படி அசைக்கச்செய்யும் குளிர்ந்த வாடைக்காற்று வீசும் முன்பனிக்காலத்தில் என்னை பிரிவுத்துன்பத்தில் நடுங்கவைத்துவிட்டு என் தலைவன் என்னைப் பிரிந்து தன்னுடைய நாட்டுக்குப் போகப் போகிறானே என்று தலைவி தோழியிடம் புலம்புவதாக உரைக்கிறார் கிள்ளிமங்கலக் கிழார் என்னும் புலவர். 

சேம்பின் இலை ஒரு புலவருக்கு யானையின் காதுகளைப் போலத் தோன்றினால் இன்னொரு புலவருக்கு அவை சுளகுகளைப் போன்று தோன்றுகின்றன. சுளகா? அது என்ன என்பவர்களுக்கு முறத்தின் இன்னொரு வடிவம்தான் சுளகு. அடிப்புறம் அகன்றும் வாய்ப்புறம் குறுகியும் இருக்கும். பேச்சுவழக்கில் ‘சொலவு, சொளகு, சொலகு’ என்றெல்லாம் குறிப்பிடப்படும்.  

சுளகும் முறமும்


பாடுகம் வா வாழி தோழி வயக்களிற்றுக்

கோடுலக்கையாக நற்சேம்பினிலை சுளகா

வாடுகழை நெல்லை யறையுரலுட் பெய்திருவாம்

பாடுகம் வாவாழி தோழி நற்றோழி பாடுற்று

'தோழீ! வாழி! நாம் பாடுவோம் வா! அசைந்து உதிரும் மூங்கில் நெல்லை சேம்பின் இலையாகிய சுளகில் அள்ளி, பாறையாகிய உரலிலே இட்டு, வலிமை மிகுந்த யானைத்தந்தமாகிய உலக்கையால் குத்தி வள்ளைப்பாட்டுப் பாடுவோம் வா!' என்று தலைவி தோழியிடம் பாடுவதாக குறிஞ்சிக்கலியில் கபிலர் பாடியுள்ளார். 

வள்ளைப்பாட்டு என்பது இரண்டு பெண்கள் மாறி மாறி உரலில் உலக்கையால் தானியங்களைக் குத்தும்போது வளையல்கள் குலுங்கக் குலுங்க ஒத்திசைவோடு பாடும் பாட்டு. உலக்கையால் இடிக்கும்போது பாடும் பாட்டு என்றவுடன் பள்ளிக்காலத்தில் பயின்ற, பாரதியின் குயில்பாட்டு மனன வரிகள் மளமளவென்று நினைவுக்கு வருகின்றன. 

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்

கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

          சுண்ண மிடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்

          பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்

கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்

          வேயின் குழலொடு வீணைமுதலா மனிதர்

          வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி

நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்தான் வள்ளைப்பாட்டு. சுண்ணம் என்றால் நறுமணப்பொடி.

சேம்பு, சுளகு என்று ஆரம்பித்து வள்ளைப்பாட்டு, சுண்ணம் என்று போய்விட்டேன் பாருங்க.

பார்வையற்றவர்கள் யானையைத் தடவிப் பார்த்து யானையின் உருவம் எத்தகையது என்று சொல்வதாக ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் யானையின் காதுகளைத் தடவிப் பார்த்த ஒருவன் யானை முறத்தைப் போன்று இருக்கும் என்பான். யானையின் காதுகளுக்கு முறம் நல்ல உவமை. சுளகு இன்னும் எவ்வளவு அழகான பொருத்தமான உவமை. 

அடுத்து சேம்பின் அழகை வர்ணிக்கும் ஒரு அகநானூற்றுப் பாடலின் வரிகள்.

வயிரத்து அன்ன வையேந்து மருப்பின்

வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி

பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி

நீலத்து அன்ன அகலிலைச் சேம்பின்

பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி

வைரம் போன்ற கூரிய மேல்நோக்கிய பற்களையும் மூங்கில் வேரினை ஒத்த பருத்த மயிரினையும் உடைய பன்றி, நீலமணியை ஒத்த நீல நிறமுள்ள அகன்ற இலைகளையுடைய சேம்பின் உருண்டு திரண்ட கிழங்குகளை ஏராளமாய்த் தின்கிறது என்று பாடுகிறார் பரணர்.  


 

குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலை

என்கிறது மற்றொரு அகநானூற்றுப் பாடல். 

துளையுள்ள குழல் போன்ற தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் மடல் போன்ற அகன்ற இலையை உடைய சேம்பு’ என்று வர்ணிக்கிறார் பாவைக் கொட்டிலார் என்ற புலவர். 


இந்தப் புலவர்கள்தாம் எவ்வளவு கூர்நோக்காளர்கள்! இயற்கையின் நுட்பங்களை அழகாக ஊன்றிக் கவனித்து, ஒத்த இயல்நிகழ்வுகளோடு ஒப்புமைப்படுத்தி, இலக்கியநயத்தோடு கவிபாடி காலத்தால் அழியாதப் பொக்கிஷங்களாகத் தந்துள்ளார்களே. 

சேம்பின் கிழங்கையும் இலையையும் சங்கப்புலவர்கள் பாடியிருப்பதை வைத்தே அது தமிழகத்தில் பல காலமாக இருப்பது தெரிகிறது. ஆம், இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சேம்பு இந்தியத் துணைக்கண்டத்தையும் தென்கிழக்காசிய நாடுகளையும் பூர்வீகமாகக் கொண்டது. Colocasia esculenta என்ற தாவரப் பெயர் உடைய சேம்பு ஆங்கிலத்தில் Taro, Arvi என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. மிகப்பெரிய காட்டுச்சேம்பு வகைக்கு ‘Elephant’s ear’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. 

சேப்பங்கிழங்குக்கும் அதன் இலைக்கும் பற்பல மருத்துவக்குணங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றிலும் உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக உணவுப்பயன்பாட்டில் சேம்பு இருந்துவருகிறது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியா வருடத்துக்கு 18 மில்லியன் டன் கிழங்குகளை விளைவித்து, இன்று உலகளவில் சேம்பு உற்பத்தியில் (46%) முதலிடம் வகிக்கிறது.



ஃபிஜியில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி அன்று ‘சேம்பு தினம்’ கொண்டாடப்படுகிறது. ஹவாய் தீவு மக்களிடையே சேம்புக்கு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் சேம்பு கட்டுப்படுத்தவேண்டிய களைப்பயிர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

சேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுத்தும் குழம்பில் சேர்த்தும் சாப்பிடுவோம். மற்ற நாடுகளில் வேகவைத்து மசித்தும், இறைச்சி அல்லது மீன் போன்ற அசைவ உணவுகளுடன் சமைக்கப்பட்டும், சூப், கூட்டு, கேக், கட்லெட் போன்றவையாகவும் உண்ணப்படுகிறது. சேம்பில் Calcium oxalate என்னும் வேதிப்பொருள் உள்ளது. இலையையோ கிழங்கையோ சமைக்காமல் தின்றால் அரிப்பும் நமைச்சலும் உண்டாக அதுவே காரணம். 

 


இப்போது தோட்டத்துக்கு வருகிறேன். ஒவ்வொரு இலையும் உண்மையிலேயே யானைக் காதை விஞ்சும் அளவுக்குப் பெரிது பெரிதாய் வளர்ந்து காற்றிலாடிக் களிப்பூட்டின. மழை நாட்களின்போது தாமரை இலை போல சேம்பின் இலைகளின் மீதும் நீர்த்திவலைகள் ஒட்டாமல் நின்றுகொண்டிருக்கும். காற்றில் இலைகள் அசையும்போது அவற்றின் கூடியிருக்கும் நீர்த்திவலைகள் பாதரசத்தைப் போல அங்குமிங்கும் உருள்வதும் குட்டிக் குட்டி முத்துக்களாகப் பிரிவதும் மீண்டும் ஒன்றுசேர்வதுமாக பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். 



 


கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அறுவடைக்காலம் என்று அறிந்துகொண்டபோது அவ்வளவு காலம் காத்திருக்கவேண்டுமே என்று ஆரம்பத்தில் கவலையாக இருந்தாலும் சேம்பிலைகளின் அழகையும் ஆட்டத்தையும் ரசித்துக்கொண்டிருந்ததில் காலம் ஓடியதே தெரியவில்லை.

இதற்கிடையில் சேம்பிலைகளை சமைக்கவும் செய்யலாம் என்று அறிந்துகொண்டு அதையும் முயற்சி செய்வோமே என்று நினைத்தேன். இதுவரை சேம்பின் இலையைச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சாப்பிடலாமா என்று சந்தேகமாகவும் இருந்தது. சில கிழங்குகள் சாப்பிட்ட பிறகு அரிக்கும். சில கிழங்குகளைக் கையால் தொட்டாலே அரிக்கும். அதுபோல சேப்பங்கிழங்கு இலைகளைச் சாப்பிட்டுவிட்டு நாக்கு அரிப்பெடுத்தால் என்ன செய்வது என்ற பயந்தேன். இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று துணிந்து பரிசோதனை முயற்சியில் இறங்கிவிட்டேன். சேம்பிலை உசிலி. எல்லாம் யூட்யூப் உபயம்தான். சும்மா சொல்லக்கூடாது. மிகவும் அருமையாக இருந்தது. சேப்பங்கிழங்கு இலையை வைத்து சைவ மீன் வறுவல் என்றுகூட ஒரு ரெசிப்பி இருந்தது. இன்னும் முயற்சி செய்யவில்லை. ஆனால் உசிலி பிரமாதம்!

 


சேம்பிலை உசிலி

சேம்பின் இலைகள் பழுக்கத் தொடங்குவதுதான் அறுவடைக்காலத்தின் அறிகுறி. அப்போது தோண்டிப் பார்த்தால் ஏராளமான கிழங்குகள். முதல் ஈட்டிலேயே நல்ல விளைச்சல்! தாய்க் கிழங்குகள் நன்கு பருத்துப் பெரிதாகவும் அவற்றைச் சுற்றிலும் சற்றுச் சிறிய அளவில் ஆனால் நட்டுவைத்த அளவை விடவும் பெரிதாக ஏராளமான கிழங்குகள். சுமார் ஒன்றரை கிலோ இருக்கலாம். ஆசை தீர, கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துக் கொடுத்தேன்.

 


தாய்க்கிழங்குகளை எடுத்துவைத்திருந்தேன். அளவில் மிகவும் பெரியனவாக இருந்ததாலும் அடிக்கிழங்கு என்பதாலும் அரிக்குமோ என்று பயம். சரி, மீண்டும் அவை முளைக்கிறதா என்று பார்ப்போம் என மறுபடியும் ஊன்றி வைத்தேன். 



என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மளமளவென்று முளைத்து மறு ஆறு மாதத்தில் அடுத்த அறுவடை. இம்முறை நான்கு கிலோ. இதுவரை நான்கு முறை அறுவடை செய்திருக்கிறேன். போன தடவை ஐந்தாறு கிலோ இருக்கலாம். ஒவ்வொரு முறையும் விளைச்சலின் அளவு கூடிக்கொண்டே போகிறதே தவிர குறையவே இல்லை. இடப்பற்றாக்குறை காரணமாக, இந்த முறை இரண்டே இரண்டு கிழங்குகள்தான் விதைத்துள்ளேன். பார்ப்போம் எவ்வளவு கிடைக்கிறதென்று.

(பிரதாபங்கள் தொடரும்)



23 January 2022

கொக்கரக்கோ மற்றும் மழை நிலாக் கதைகள்

 

அனைவருக்கும் வணக்கம். இந்த வருடத்தின் முதல் பதிவை என்னுடைய இரு புதிய நூல்களின் அறிமுகத்தோடு வெளியிடுவதில் மகிழ்கிறேன். கொக்கரக்கோ மற்றும் மழை நிலாக் கதைகள். முதலாவது சிறார் இலக்கியம், இரண்டாவது ஜப்பானிய செவ்விலக்கியம். இரண்டும் இரு வேறு வகைமை என்பதோடு எனக்குப் புதிய உள்நுழைவுகளும் கூட.




‘கொக்கரக்கோ’ சிறுவர் பாடல் தொகுப்பு சிறார் இலக்கியத்தில் என் முதல் முயற்சி. 2021-ஆம் ஆண்டு மே மாதம் ஞா.கலையரசி (https://unjal.blogspot.com/) அக்காவால் தொடங்கப்பட்ட சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலகம்’ (https://chuttiulagam.com/) இதற்கானக் களத்தை உருவாக்கிக்கொடுத்தது. சுட்டி உலகத்தை முன்னிட்டு நான் எழுதிய சிறார் பாடல்கள் சுட்டி உலகம் வாயிலாகவே தொகுப்பாக வெளியிடப்படுவது, அதுவும் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வெளியிடப்படுவது எனக்குப் பெருமை.  

சிறுவர் பாடல்கள் எழுதுவதற்கானக் களத்தை அமைத்துக் கொடுத்தது மட்டுமின்றி இந்நூல் உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக விளங்கும் கலையரசி அக்காவுக்கு இந்நேரத்தில் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன். அவருடைய அணிந்துரையிலிருந்து சில வரிகள்...

\\இக்காலத் தலைமுறையை ஈர்க்கும் விதமாகப் புதிய பாடுபொருள்களுடன், தமிழில் பாடல் நூல்கள் பல படைக்க வேண்டியது, மிகவும் அவசியம். இந்நூலின் முதல் பாடலே “தமிழில் பாட்டுப் பாடுவோம்” என்று அமைந்திருப்பது மிகவும் சிறப்பு!  

“அன்னைத் தமிழில் பாடுவோம்

அனுதினமும் பாடுவோம்

தீந்தமிழில் பாடுவோம்

தித்திக்கத்  தித்திக்கப்  பாடுவோம்”

“குழந்தைப்பாடல் படைப்போர்க்குக் குழந்தை உள்ளம் இருப்பது மிக அவசியம்; மனதளவில் குழந்தைகளாகவே மாறி, அவர்களைப் போலவே சிந்தித்து எழுத வேண்டும்” என்பதற்கேற்ப, இந்நூலின் ஆசிரியரும் குழந்தை உள்ளத்துடனும், அவர்கள் பாடுவதற்கேற்றபடி எளிமையான சொற்களுடனும், இனிமையான சந்தத்துடனும் பல பாடல்களை எழுதியுள்ளார்.

“சன்னச் சிறகை விரிக்குது

விரித்து விரித்து மூடுது

வண்ணம் காட்டி மயக்குது

வா வா என்று அழைக்குது!” 

என்ற வண்ணத்துப்பூச்சி பாடல் வரிகள்,  இதற்கோர் எடுத்துக்காட்டு.\\

‘கொக்கரக்கோ’ சிறுவர் பாடல்கள் தொகுப்பை நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைத்து தரமாகவும் மிகச்சிறப்பாகவும் அச்சாக்கியுள்ள கன்னிக்கோவில் இராஜா (http://kannikoilraja.blogspot.com/) அவர்களுக்கும் லாலிபாப் சிறுவர் உலகத்துக்கும் என் மனமார்ந்த நன்றி. 

மழை நிலாக் கதைகள்


இரண்டவது கனலி கலை இலக்கிய இணையதளத்தின் (https://kanali.in/) கனலி பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ள ‘மழை நிலாக் கதைகள்’. பதினெட்டாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஜப்பானிய இலக்கியப் படைப்பாளியான யுடா அகினாரி (Ueda Akinari (1734-1809)) எழுதிய Tales of Rain and the Moon (or Tales of moonlight and rain) என்ற நூலில் இடம்பெற்றுள்ள கதைகளின் தமிழாக்கம்தான் ‘மழை நிலாக் கதைகள்’.

இந்நூல் உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருந்த நண்பர் விக்னேஷ்வரனுக்கு என் முதல் நன்றி. கனலியின் ஜப்பானிய கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழுக்காக யுடா அகினாரியின் Tales of Rain and the Moon நூலிலிருந்து ‘The Carp of my dreams’ என்ற கதையை மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார். அதை ‘என் கனவுகளின் கெண்டைமீன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இச்சிறப்பிதழில் தனக்குப் பிடித்தக் கதைகள் எனக் குறிப்பிட்ட மூன்றில் 'என் கனவுகளின் கெண்டை மீன்' முதலாவதாக இருந்தது. அந்த அங்கீகாரமே பெரும் மகிழ்வளித்தது. 



அந்நூலிலுள்ள மீதி 8 கதைகளையும் மொழிபெயர்க்கும் வாய்ப்பும் கனலியால் வழங்கப்பட்டது. அதுவரை ஜப்பானின் தொன்மை, வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், ஆன்மீகம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் குறித்த பரிச்சயம் மிகக் குறைவான அளவே எனக்கு இருந்தது. பண்டைய ஜப்பானின் வரலாற்றையும் வாழ்வியலையும் அடிநாதமாகக் கொண்டு படைக்கப்பட்ட கதைகளின் நுணுக்கமும் நுட்பமும் என் பரிச்சயத்துக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தன. எனவே அவை குறித்து மிக ஆழமான தேடலும் அடிப்படை அறிவும் பரந்துபட்ட புரிதலும் தெளிவாக விளக்கங்களும் தேவைப்பட்டன. பண்டைய ஜப்பானிய வரலாற்றிலக்கியம் மட்டுமல்லாது அதில் தனது தாக்கத்தைச் செலுத்தியிருந்த சீனாவின் வரலாற்றிலக்கியத்தின் பரிச்சயமும் அவசியமாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு மேல் அவற்றைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். ஒருவழியாக, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை திருப்தியுற முடித்தபிறகு, என் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றதாகவே எண்ணி மகிழ்கிறேன். 

யுடா அகினாரி பற்றி அறியாதவர்களுக்காக

அவரைப் பற்றிய சிறு அறிமுகம்:



யுடா அகினாரி சிறந்த இலக்கியவாதியும் கவிஞருமாவார். இவரது பெரும்பாலான புனைகதைகள் அமானுஷ்யம் சார்ந்தவை. யுடா அகினாரியின் இயற்பெயர் யுடா சென்ஜிரோ. 1770-களின் துவக்கத்தில்தான் அகினாரி என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டார். இவர் நான்கு வயதுக் குழந்தையாயிருக்கும்போது செல்வரான ஒரு வணிகரால் தத்தெடுக்கப்பட்டார். கன்ஃபூஷிய சித்தாந்தங்களைப் போதிக்கும் தலைசிறந்த பள்ளிகளுள் ஒன்றில் சிறப்பான முறையில் கல்வியறிவு பெற்றார். குழந்தையாயிருக்கையில் பெரியம்மையால் கடுமையான பாதிப்புக்குள்ளானார். அதன் காரணமாக அவருடைய விரல்கள் பலவும் வளைந்து கோணலாகிப்போய்விட்டன. அவரது பெற்றோர் காஷிமா இனாரி ஆலயத்தின் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தனர். அந்தக் கடவுளின் கிருபையாலேயே தான் உயிர்பிழைத்ததாக யுடா அகினாரி நம்பினார். அன்றிலிருந்து அவர் அமானுஷ்யத்தின்பால் பெருத்த நம்பிக்கை உடையவரானார். அதனாலேயே பின்னாளில் அவரது படைப்புகள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்டக் கூறுகளை உடையவையாகவும் அமானுஷ்யம் சார்ந்தும் அமைந்தன. அவர் புனைகதைகளோடு தத்துவம் மற்றும் ஜப்பானிய செவ்விலக்கியம் சார்ந்து Kokugaku எனப்படும் ஆய்விலும் ஈடுபட்டார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கிய மேதைகளுள் இன்றியமையாதவரான யுடா அகினாரி, தன் வாழ்நாளில் சமகாலத்து அறிஞர்களோடு கருத்தியல் ரீதியான பல மோதல்களை எதிர்கொண்டார். அகினாரி ஜப்பானின் பண்டைய இலக்கியங்களோடு சீனாவின் பண்டைய இலக்கியங்களிலும் ஈர்க்கப்பட்டிருந்தார். Tales of Moonlight and Rain தொகுப்பில் அதைக் கண்கூடாகக் காணமுடியும். இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஜப்பானிய செவ்விலக்கியங்களிலிருந்து மட்டுமல்லாது, சீன இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்களும் நிகழ்வுகளும் காட்டப்பட்டுள்ளன. Waka, Renga, Haikai கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த அவர், தன் வாழ்நாள் முழுமையும் அவற்றைத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தார். எண்ணற்றக் கவிதைளையும் புனைவுகளையும் எழுதிக் குவித்திருந்தாலும் முக்கியப் படைப்புகளான Tales of Rain and the Moon, Tales of Spring rain இரண்டும் ஜப்பானின் செவ்விலக்கியப் படைப்புகளாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.

சுழலும் சக்கரங்கள், காஃப்காவின் நுண்மொழிகள், பத்து இரவுகளின் கனவுகள் உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளரான முனைவர் கே.கணேஷ்ராம் அவர்கள் மழைநிலாக் கதைகள் நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்...

\\கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழைநிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள் இவை.\\

மழை நிலாக் கதைகள் தவிர கனலியின் பிற வெளியீடுகளான ஜப்பானிய (மொழிபெயர்ப்புச்) சிறுகதைகள் மற்றும் அமெரிக்கச் சிறுகதைகள் நூல்களிலும் என் மொழிபெயர்ப்புக் கதைகள் இடம்பெற்றுள்ளன. 

புத்தகக் கண்காட்சி தள்ளிப்போகும் சூழலில் இந்நூல்களை தொடர்புடைய பதிப்பகங்கள் வாயிலாகப் பெறலாம்.



கொக்கரக்கோ..

(சிறுவர் பாடல்கள்)

லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு

விலை – ரூ.75/-

இந்நூலைப் பெற தொடர்பெண் - 98412 36965

மின்னஞ்சல் – lollipopchildrensworld@gmail.com

 


மழை நிலாக் கதைகள் 

(ஜப்பானியப் படைப்பாளி யுடா அகினாரி சிறுகதைகள்)

கனலி வெளியீடு

விலை ரூ.200/-


ஜப்பானிய (மொழிபெயர்ப்புச்) சிறுகதைகள்

கனலி வெளியீடு

விலை ரூ.400/-



அமெரிக்கச் சிறுகதைகள்

கனலி வெளியீடு

விலை ரூ.500/-

கனலி பதிப்பக நூல்களைப் பெற தொடர்பெண்கள்:

90800 43026

99401 48832

 

ஆர்வமுள்ளவர்கள் நூல்களை வாங்கி வாசித்து தங்கள் கருத்துகளை அறியத் தருமாறு அன்போடு வேண்டுகிறேன். 

நன்றி.