Showing posts with label மரங்கள். Show all posts
Showing posts with label மரங்கள். Show all posts

26 October 2024

மரத்துக்குக் கிளை பாரமா?

மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா? என்ற பாடலைக் கேட்டிருப்போம். ஆஹா... என்ன அற்புதமான வரிகள் என்று ரசித்திருப்போம். ஆனால் கிளைகளை பாரமாக நினைக்கும் மரங்களும் உண்டு என்பது தெரியுமா உங்களுக்கு? 

1 யூகலிப்டஸ் மரங்கள்

யூகலிப்டஸ் மரங்கள் கிளைகளை பாரமாக நினைப்பது மட்டுமல்ல, இலைகளை உதிர்ப்பது போல தாய் மரம் நினைத்த மாத்திரத்தில் சடாரென்று கிளைகளை முறித்து கீழே விழவைக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதா? இதற்கு ‘Sudden Branch Drop Syndrome’ என்று பெயர். யூகலிப்டஸ் மட்டுமல்ல, பீச், ஓக், எல்ம், மார்ட்டன் பே ஆல் போன்ற சில மர வகையிடமும் இவ்விநோதப் பழக்கம் உள்ளது. வறட்சிக்காலத்தில் மரங்கள் தங்கள் உயிரைத் தக்கவைக்க மேற்கொள்ளும் உத்திகளுள் இதுவும் ஒன்று.

'புரையோடிய கால்களை வெட்டி நீக்கினால்தான் நீ உயிர்பிழைப்பாய்' என்று மருத்துவர் சொன்னால் கால்களை வெட்ட மறுப்போமாஅதுபோலத்தான். ஆனால் இங்கே புரையோடிய கிளைகள் அல்லநல்ல ஆரோக்கியமான கிளைகளும் முறிந்துவிழும்.

யூகலிப்டஸ் மரங்கள் பொதுவாக வறட்சியைத் தாங்கும் வல்லமை கொண்டவை. அவற்றின் வேர்கள் மிக சாதுர்யமானவை. தண்ணீரைத் தேடிச்சென்று உறிஞ்சும் தன்மை கொண்டவை. எனினும் தண்ணீர் கிடைக்காத வறண்ட கோடையில் தாய் மரம் உயிர் பிழைத்திருப்பதுதான் முக்கியம். இருக்கும் கொஞ்சநஞ்ச தண்ணீரை எல்லாக் கிளைகளுக்கும் பகிர்ந்தளிக்க இயலாது அல்லவா? அதனால்தான் இந்த முடிவு. கிளைகள் போனால் மீண்டும் வளர்ந்துவிடும். மரமே போய்விட்டால் ஆனால் இந்த முடிவை கிளைகள் தன்னிச்சையாக எடுக்கின்றனவா அல்லது மரம் எடுக்கிறதா என்பது புரியாத புதிர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சென்ற பதிவில் யூகலிப்டஸ் மரங்களைச் சார்ந்து வாழும் புல்லுருவிகள் பற்றியும் புல்லுருவிகளைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவும் யூகலிப்டஸ் பற்றியதுதான். 

இன்று உலகம் முழுவதும் யூகலிப்டஸ் மரங்கள் பரவியிருந்தாலும் அவற்றின் தாயகம் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என அண்டார்டிகா தவிர்த்த அனைத்துக் கண்டங்களிலும் இம்மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு யூகலிப்டஸ் மர வளர்ப்பு உலக அளவில் இன்று வியாபார ரீதியாகப் பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது.

2 யூகலிப்டஸ் மரக்காடு

ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பே என்னுடைய பால்யத்திலேயே யூகலிப்டஸ் மரம் எனக்கு அறிமுகமாகிவிட்டது. ரயில்வே பணிமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு தாத்தா, தான் கட்டிய வீட்டில் எல்லா வகையான மரம் செடி கொடிகளையும் எங்கிருந்தோ யார் மூலமாகவோ எப்படியோ வரவழைத்து அழகிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார். தோட்டத்தின் மூலையில் நெடுநெடுவென்று வளர்ந்து நின்றது ஒரு யூகலிப்டஸ் மரக்கன்று. அதிலிருந்து உதிர்ந்து விழும் மொடமொடவென்ற வெளிர்சாம்பல் பச்சை இலையைப் பொறுக்கிக் கசக்கி, அந்த இலையிலிருந்து வெளிப்படும் தைல வாசத்தை மோந்து பார்த்து மகிழ்வது எங்களுடைய பால்யகால விளையாட்டுகளுள் ஒன்று.

ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிறகு காணும் இடத்தில் எல்லாம் யூகலிப்டஸ் விதவிதமான யூகலிப்டஸ் மரங்கள்! சாம்பல் பச்சை வண்ணத்தில் கத்தி போன்ற இலைகளோடு நெடுநெடுவென்று வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்களையே பார்த்திருந்த எனக்கு, விதவிதமான வடிவத்திலும் நிறத்திலும் இருந்த யூகலிப்டஸ் மரங்களும் இலைகளும் வியப்பில் ஆழ்த்தின. அரச இலை வடிவிலான யூகலிப்டஸ் இலைகளை ஒன்றுக்கு பல தடவை கசக்கி மோந்து யூகலிப்டஸ்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.  

3 துளிர்விட்டிருக்கும் யூகலிப்டஸ் மரம்

யூகலிப்டஸ் இனத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டவை உள்ளன. அவற்றுள் ஒன்பது தவிர மற்ற அனைத்துக்கும் தாயகம் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியாவில் இவற்றின் செல்லப்பெயர் ‘Gum tree. அதற்கு ‘கோந்து மரம்’ அல்லது ‘பிசின் மரம்’ என்று அர்த்தம். தவிர, அந்தந்தப் பகுதிகளில் வழங்கப்படும் பூர்வகுடிப் பெயர்கள் ஏராளம்.

4 சிவப்பு யூகலிப்டஸ் பூக்கள்

5 வெள்ளை யூகலிப்டஸ் பூக்கள்

6 பிங்க் நிற யூகலிப்டஸ் பூக்கள்

யூகலிப்டஸ் மரங்கள் பூக்கும் காலத்தில் வெள்ளை, பழுப்பு வெள்ளை, மஞ்சள், பிங்க், சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் மரம் முழுக்கப் பூக்களுடன் அழகாகக் காட்சியளிக்கும். பூக்கள் பூக்கும் முன்பு மொட்டுகள் குட்டி குட்டியாக குங்குமச்சிமிழ் போன்ற தோற்றத்தில் மூடியுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும். 

7 மூடி போட்ட மொட்டுகள்

மலரும் சமயத்தில் மூடி திறந்து கீழே விழுந்துவிடும். பிறகு பூ விரியும். கிரேக்க மொழியில் eu என்றால் ‘நன்றாக’ என்றும் kalypto என்றால் ‘மூடிய’ என்றும் பொருள். அழகாக மூடி போட்டது போன்ற மொட்டுகளைக் கொண்டிருப்பதால் இதற்கு eucalyptus என்று பெயரிடப்பட்டுள்ளது. 

யூகலிப்டஸ் மரம் தமிழில் ‘தைல மரம்’ என்றும் ‘ஆரெஸ்பதி மரம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நூறுவருடங்களுக்கு மேலாக ஆர்.எஸ்.பதி என்ற பிராண்டின் பெயரால் தமிழ்நாட்டில் இத்தைலம் அறியப்பட்டதால் யூகலிப்டஸ் மரத்தையும் ஆரெஸ்பதி மரம் என்றே அந்நாளில் குறிப்பிட்டனர்.

நறுமணமும் மருத்துவக்குணமும் கொண்ட யூகலிப்டஸ் தைலத்துக்கு உலகச் சந்தையில் பெரும் கிராக்கி. கிருமிநாசினியாகவும், சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, தலைவலி, மூட்டுவலி, உடல்வலி, பூச்சிக்கடி, காயம், காய்ச்சல் போன்ற அனைத்து உடல் உபாதைகளுக்கும் சர்வரோக நிவாரணியாகவும் நாம் பயன்படுத்தும் ஆர்.எஸ்.பதி எண்ணெயும் நீலகிரித் தைலமும் தயாரிக்கப்படுவது யூகலிப்டஸ் மர இலைகளிலிருந்துதான். நீலகிரியின் யூகலிப்டஸ் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் நீலகிரித் தைலம் என்றாகிவிட்டது. வட இந்தியாவிலும் யூகலிப்டஸ் தைலத்துக்கு, ‘Nilgiri Thel’ (நீலகிரி எண்ணெய்) என்றே பெயர்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் விக்ஸ், அம்ருதாஞ்சன், டைகர் பாம், கோடாலித்தைலம் என்றழைக்கப்படும் ஆக்ஸ் ஆயில் என பல ரோக நிவாரணிகளிலும் யூகலிப்டஸ் எண்ணெய் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துள்ளது. 

8 யூகலிப்டஸ் காயும் இலையும்

யூகலிப்டஸ் மரத்தின் இலைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? மற்ற மரங்களின் இலைகளைப் போல கிடைமட்டமாக இல்லாமல் அவை தொய்ந்து துவண்டதுபோல் செங்குத்தாகத் தொங்கிக்கொண்டிருப்பதற்குக் காரணம் உள்ளது. கடுமையான வெப்ப காலத்தில் சூரிய ஒளி நேரடியாக இலைகளின் மீது பட்டால், இலைகளின் நீர்ச்சத்து முழுக்க ஆவியாகிப் போய்விடுமே. அதைத் தடுப்பதற்காகத்தான் அப்படியொரு பிரத்தியேக அமைப்பு. இலைகள் மென்மையாக இல்லாமல் அழுத்தமாக இருப்பதற்கும் அதுதான் காரணம்.

அனைத்து வகை யூகலிப்டஸ் மர இலைகளிலும் எண்ணெய் இருந்தாலும் சுமார் 20 வகை இலைகளில் மட்டுமே அதிக அளவில் உள்ளது. அதனால் அந்த மரங்களே எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகின்றன. யூகலிப்டஸ் இலைகளைப் பெருமளவில் அறுவடை செய்து அவற்றைக் கொதிக்கவைத்துக் கிடைக்கும் நீராவியை வடிகட்டி யூகலிப்டஸ் எண்ணெய் பெறப்படுகிறது. சுமார் 80 கிலோ இலையைக் கொதிக்கவைத்தால் ஒரு லிட்டர் எண்ணெய்தான் கிடைக்கும். இந்த எண்ணெய் கிருமிநாசினியாகவும், பூச்சிக்கடி, தோல்நோய் போன்றவற்றுக்கும், சளி, மூக்கடைப்பு போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

இந்தியாவிற்கு யூகலிப்டஸ் மரங்களை 1790-வாக்கில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் என்றும் சுமார் பதினாறு வகை யூகலிப்டஸ் மரங்களின் விதைகளை ஆஸ்திரேலியாவிலிருந்து தருவித்து, நந்திமலையில் இருந்த அரண்மனைத் தோட்டத்தில் நட்டு வளர்த்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுகப்படுத்தப்பட்ட மரமாக இருந்தாலும் தற்போது இந்தியாவில் யூகலிப்டஸ் சாகுபடி, ஏற்றுமதி மூலம் பெரும் லாபமீட்டும் தொழிலாக உள்ளது. 

9  நெடுநெடுவென்ற யூகலிப்டஸ் மரங்கள்

யூகலிப்டஸ் மரத்தின் வயது, எடை, சுற்றளவு இவற்றைப் பொறுத்து சந்தையில் அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் இரண்டு மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு யூகலிப்டஸ் மரம் எண்பதாயிரம் ரூபாய்க்கு விலைபோகும். பொதுவாக முதிர்ந்த யூகலிப்டஸ் மரக்கட்டைகளின் சந்தை மதிப்பு குவின்டாலுக்கு (1 குவின்டால் = 100 கிலோ) ரூ. 900/- என்ற அளவில் தற்போது உள்ளது. ஆறு வருடத்துக்கு உட்பட்ட, ஒரு மீட்டர் சுற்றளவுக்கும் குறைந்த இள மரக்கட்டைகள் ஒரு குவின்டால் சுமார் ரூ.1140/- என்ற கணக்கில் ஒரு டன் ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை விற்பனையாகின்றனவாம்.

10 உறுதியான யூகலிப்டஸ் மரத்தண்டுகள்

யூகலிப்டஸ் மரக் கட்டைகள் சாரங்களாகவும்
, தண்டவாளக் கட்டைகளாகவும், கனமானக் கட்டுமானப் பொருட்களாகவும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. காகிதம், காகிதக்கூழ், மரத்துகள், அட்டைப்பெட்டிகள் போன்றவை தயாரிக்கவும், பதப்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் கதவுகள், சன்னல்கள், நிலைகள், அலமாரிகள், கைப்பிடிகள் போன்றவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.  ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் மின்கம்பங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

11 யூகலிப்டஸ் மரத்தில் உறங்கும் கோவாலா

ஆஸ்திரேலியாவின் சூழல் பாதுகாப்புக்கும் பல்லுயிர் வளத்துக்கும் யூகலிப்டஸ் மரக்காடுகள் மிக இன்றியமையாதவை. அழிவாய்ப்பு இனமாக அறிவிக்கப்பட்டுள்ள கோவாலா இனத்தை அழிவிலிருந்து மீட்க வேண்டுமானால் யூகலிப்டஸ் மரங்களை அழியாமல் காப்பது அவசியம். காடழிப்புகளைத் தவிர்ப்பதோடு புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்த்து கோவாலாக்களுக்கான வாழ்விடப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதற்காக அரசும்  தனியார் நிறுவனங்களும் பற்பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சூழலியலாளர்கள், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும்  அதற்கான தங்கள் பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.  


12 யூகலிப்டஸ் இலை தின்னும் கோவாலா

ஆனால் தமிழ்நாட்டில் யூகலிப்டஸ் மரங்களை வணிகரீதியாக நடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது தெரியுமல்லவா? தமிழ்நாட்டில் அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கின்போது, தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அடுத்தப் பத்தாண்டுகளுக்குள் முழுமையாக அகற்றிவிடுவதாக தமிழக அரசின் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் குழு, ‘அந்நிய மரங்களை அகற்ற முற்படும் அரசே ஏன் அந்நிய மரமான யூகலிப்டஸ் மரங்களை நடவேண்டும்? எனவே இனி தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தடை விதிக்கிறோம்’ என்று உத்தரவிட்டது.

யூகலிப்டஸ் மரங்களைத் தடை செய்வதால் அதனால் கிடைக்கும் அந்நிய செலாவணி பாதிக்கப்படும் என்றும் அவற்றை நம்பியிருக்கும் மரத் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், தைல உற்பத்தி அனைத்தும் பாதிக்கப்படும். தைலமரக் கன்றுகளைப் பயிரிட்டிருக்கும் விவசாய சாகுபடியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஒரு தரப்பிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது, மண்ணில் அமிலத்தன்மை சேர்கிறது, மற்றத் தாவரங்களை வளரவிடாமல் செய்கிறது என்று இன்னொரு தரப்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. கூடவே தமிழகத்தில் சோலைக்காடுகள் பெருமளவு அழிந்துபோனதற்கு தைலமரச் சாகுபடிதான் காரணம் என்ற வலுவான காரணமும் முன்வைக்கப்படுகிறது.   

15 October 2024

புல்லுருவியும் நல்லவையே!

 


1 யூகலிப்டஸ் மரத்தில் பூத்திருக்கும் புல்லுருவி

எங்கள் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன என்று சொன்னேன் அல்லவா? அம்மரங்களைக் கூர்ந்து கவனித்தபோது பெரும்பாலான கிளைகள் மேல்நோக்கி வளர்ந்திருக்க, சில கிளைகள் மட்டும் உடைந்துதொங்குவது போல நிலம் நோக்கியிருப்பதைப் பார்த்தேன். அந்தக் கிளைகள் மரத்தின் இயல்போடு ஒட்டாமல், சடைசடையாகத் தொங்கிக்கொண்டும், காற்று பலமாக வீசும்போது மற்றக் கிளைகளின் அசைவோடு பொருந்தாமல் கொழுகொம்பற்றக் கொடிகளைப் போல தனித்துக் காற்றிலாடிக் கொண்டும் இருக்கும். வசந்த காலத்தில் யூகலிப்டஸ் பூப்பதற்கு முன்பாக செக்கச் செவேலென்றோ மஞ்சள் சிவப்பு வண்ணத்திலோ கொத்துக்கொத்தாய்ப் பூக்களோடு காட்சியளிக்கும். எனக்கு அக்காட்சி விநோதமாக இருந்தது. ஏறுகொடி போன்ற அது என்ன தாவரம் என்று அறியும் ஆவல் மேலிட்டது. ஆனால் கண்டறிய இயலவில்லை. 

என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகள் உள்ளுக்குள் நச்சரித்துக்கொண்டே இருந்தன. இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோவின் Green planet என்ற தொலைக்காட்சி நிகழ்வாக்கத் தொடரில் விடை கிடைத்ததோடு மேலதிகத் தகவல்கள் என்னை வியப்பின் எல்லைக்கே இட்டுச்சென்றன. யூகலிப்டஸ் கிளைகளில் காணப்பட்ட அந்த வித்தியாசமான தாவரம் வேறொன்றுமில்லை, புல்லுருவிதான் அது. சிறுவயதில் எங்கள் வீட்டு மாமரங்களில் புல்லுருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை வேறுமாதிரி இருக்கும்.


2. புல்லுருவிகள் காற்றிலாடும் யூகலிப்டஸ் மரம்

3. வட்டத்துக்குள் இருப்பவைதான் புல்லுருவிச் செடிகள்

புல்லுருவி என்றால் என்ன? செழிப்பாய் வளர்ந்திருக்கும் பெரு மரங்களின் கிளைகளில் வளர்ந்து படர்ந்து மரத்தின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளரக்கூடிய ஒருவகை ஒட்டுண்ணித் தாவரமே புல்லுருவி ஆகும். அது கொடியாகவும் இருக்கலாம், செடியாகவும் இருக்கலாம், அல்லது மரமாகவும் இருக்கலாம். நல்ல நிலையில் இருக்கும் ஒன்றில் ஒரு கெட்ட விஷயம் வெளியில் தெரியாமலேயே மெல்ல மெல்ல உள்ளே ஊடுருவி கேடுவிளைவிக்கும் செயலுக்கு ‘நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல’ என்றொரு உவமைத்தொடர் சொல்லப்படும்.

4. மொட்டு வைத்திருக்கும் புல்லுருவிச் செடி

புல்லுருவிகளை குறைத்து மதிப்பிடுவது சரியன்று என்றும் இயற்கையின் அங்கமான அவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் நன்மை விளைவிப்பவை என்றும் உறுதிபடச் சொல்கிறார், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த, பல வருடங்களாக புல்லுருவிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புல்லுருவி வல்லுநர் எனப் புகழப்படுகின்ற, டாக்டர் டேவிட் வாட்சன்.

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவிகள் இருப்பதாகவும் அவற்றுள் 97 வகை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை என்றும் குறிப்பிடும் அவர், புல்லுருவிகள் தாய்மரத்தை அழித்துவிடும் என்ற வாதம், நாயுண்ணிகள் நாயைக் கொன்றுவிடும் என்பதற்கு நிகரானது என்கிறார். புல்லுருவிகள் வளர்வதற்குத் தேவையான சத்துக்களைத் தாய்மரத்திலிருந்து பெற்றாலும் ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும் என்கிறார். மேலும் புல்லுருவிகளின் இலைகளும், பூக்களும், கனிகளும் பல உயிரினங்களுக்கு உணவாவதையும், அடர்த்தியான புல்லுருவித் தாவரம் மரக்கிளையில் அமைந்திருக்கும் புதர் போல பல பறவைகளுக்கு பாதுகாப்பான உறைவிடமாகவும் கூடு கட்ட வசதியாகவும் இருப்பதையும் சுட்டுகிறார்.

எங்கள் சுற்றுப்புற யூகலிப்டஸ் மரங்களில் எனக்குத் தெரிந்து வளர்ந்திருக்கும் புல்லுருவி இனங்கள் Fleshy mistletoe (Amyema miraculosa) மற்றும் Brush mistletoe (Amylotheca dictyophleba). 

5. புதர் போல் அடர்த்தியாய் வளர்ந்திருக்கும் புல்லுருவி

ஆஸ்திரேலியாவில் புல்லுருவிகளுக்கு அடைக்கலம் தந்திருக்கும் மரங்கள் அநேகம். யூகலிப்டஸ், வாட்டில், சவுக்கு, ஆல், பைன், மகடாமியா, மேலலூக்கா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சுதேசி மரங்களோடு ஜகரண்டா, அரளி, மலைவேம்பு, சைகாமோர், மேக்னோலியா போன்ற அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிய மரங்கள் பலவும் அவற்றுள் அடக்கம். சில வகை புல்லுருவிகள் ஏற்கனவே மரத்தில் ஒட்டுண்ணியாக இருக்கும் மற்றப் புல்லுருவிகளின் மீது ஒட்டுண்ணியாக வளர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சிக்கொள்ளுமாம். ‘பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதைப் பிடுங்கினாராம் அனுமாரு’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா? 

6. புல்லுருவி வேர்ப்பகுதியில் மேக்பை கூடு

7. புல்லுருவியில் கூடு கட்ட இடம்பார்க்கும் நாய்சி மைனர் 

புல்லுருவிகள் வளர்ந்திருக்கும் உறுதியான யூகலிப்டஸ் கிளைக் கவைகளில் வருடந்தோறும் மேக்பை பறவைகளும் நாய்சி மைனர் பறவைகளும் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். புல்லுருவிகள் பூத்திருக்கும் சமயத்தில் அவற்றில் தேனருந்த லாரிகீட் பறவைகள் கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கும். அப்போது காச்மூச், காச்மூச் என்ற அவற்றின் ஆரவாரச் சத்தம் காதைத் துளைக்கும்.

 

8. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட் பறவைகள்

9. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட்

ஐரோப்பாவைச் சேர்ந்த Viscum album என்ற புல்லுருவி மிகுந்த மருத்துவக்குணம் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. விஸ்கம் ஆல்பம் புல்லுருவியிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்து புற்றுநோய்க்கு  சட்டப்பூர்வமான மருந்தாகப் பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் மட்டுமல்லாமல் கட்டி, வீக்கம், முடக்குவாதம், மலச்சிக்கல், உள்காயம், இரத்தக்கசிவு, வயிற்றுப்புண் என பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பியப் பாரம்பரிய மருத்துவத்திலும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

புல்லுருவி பற்றி தமிழில் வேறு ஏதாவது பழமொழிகளோ, சொலவடைகளோ, வட்டார வழக்குச் சொற்றொடர்களோ உள்ளனவா என்று தேடும்போது கிடைத்த பல தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. 

10. காய்ந்துபோன புல்லுருவியின் உறுதியான வேர் முடிச்சு

மூங்கில், மா, அரசு, புளி, வேம்பு, எருக்கு, எலுமிச்சை, நாவல், வில்வம், வன்னி, இலுப்பை, நெல்லி, மருதாணி, கருங்காலி, புங்கை, வேங்கை, பூவரசு, மருது, வாகை, எட்டி, கடம்பு, சந்தனம், ஆல், அத்தி, இலவம் என ஒரு மரம் விடாமல் நாட்டிலிருக்கும் அனைத்து மரத்துப் புல்லுருவிக்கும் (எப்படியோ தப்பிவிட்டது தைலமரம்) ஒவ்வொரு விதமான பலாபலன் உண்டு என்றும் ஆணையும் பெண்ணையும் வசியம் செய்ய ஒன்று, எதிரியை நாசம் செய்ய ஒன்று, செல்வம் குவிக்க ஒன்று, வியாபாரம் கொழிக்க ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு ஜெயிக்க ஒன்று, சூதாட்டத்தில் வெற்றி பெற ஒன்று என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வேர், பொடி, தாயத்து, மை, காப்பு, பூஜை என பல வடிவங்களில் புல்லுருவி வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. மந்திரம், மாந்திரீகம், வசியம், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் என ஒரு கூட்டம், பலவீனமான மக்களைக் குறிவைத்து தனி ட்ராக்கில் பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

11. வீட்டருகில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள்

புல்லுருவிகள் எப்படி அவ்வளவு உயரமான மரக்கிளைகளில் விதைகளை ஊன்றி வளர்கின்றன? 

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவி இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அவை சார்ந்து வாழும் மரம், அந்த இடத்தின் தட்ப வெப்பச் சூழல், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் போன்றவற்றைப் பொறுத்து விதவிதமான முறையில் விதைபரவல்களை மேற்கொள்கின்றன. சில புல்லுருவிகள் குறிப்பிட்ட பறவைகள் மூலமே விதைகளைப் பரப்புகின்றன. பறவைகள் பிசுபிசுப்பான புல்லுருவிப் பழங்களைத் தின்றுவிட்டு எச்சமிடும்போதோ அல்லது அலகை மரத்தில் துடைக்கும்போதோ விதைகள் மரப்பட்டையின் இடுக்குகளில் சிக்கி வேர் பிடித்து வளர்கின்றன. சில புல்லுருவிகளின் விதைகள் முற்றிய நிலையில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வெடித்துச் சிதறி புதிய மரங்களைச் சென்றடைகின்றன.   

 

12. புல்லுருவிச் சிட்டு ஆண்

யூகலிப்டஸ் மரப் புல்லுருவிகளின் விதைபரவல் பத்து செ.மீ. நீளமும் பத்தே கிராம் எடையும் கொண்ட mistletoebirds எனப்படும் புல்லுருவிச் சிட்டுகள் மூலமே நடைபெறுகிறது என்று அறிந்து வியந்தேன். Dicaeidae எனப்படும் பூக்கொத்திக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளுள் ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரே பறவை Mistletoebirds தான் என்பது அவற்றின் தனிச்சிறப்பு. 


13 புல்லுருவிப் பூக்கள் (1)
 
14 புல்லுருவிப் பூக்கள் (2)

‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ என்றொரு பழைய பாடலைக் கேட்கும்தோறும் ‘சின்னப் பூங்குருவி நாளைக்கும் சேர்த்துத் தேடுதே’ என்ற வரிகள் உள்ளுக்குள் சிறு நெருடல் தரும். ‘வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை’ என்று பள்ளிக்காலத்தில் வாசித்த பைபிள் வாசகமும் உடனே நினைவுக்கு வந்துபோகும். ஆனால் ஆஸ்திரேலியப் புல்லுருவிச் சிட்டுகளைப் பற்றி அறிந்துகொண்டபோது நெருடல் தீர்ந்தது.  

புல்லுருவிச் சிட்டுகளின் உணவு புல்லுருவிப் பழங்கள்தாம். அவை புல்லுருவிப் பழங்களைத் தின்பதைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும். பழத்தைப் பறிக்காமல் தோல் காம்பிலேயே தொங்க, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பகுதியை மட்டும் அலகால் பிதுக்கி கொட்டையுடன் லபக்கென்று இவை விழுங்கும் நேர்த்தி வியக்கவைக்கும். அரை மணி நேரத்தில் பழத்தின் சத்தை உறிஞ்சிக்கொண்டு எச்சத்தின் மூலம் கொட்டையை வெளியேற்றும். ஆனால் பறக்கும்போதே போகிற போக்கில் எச்சம் விடாது. இன்னொரு மரத்தில் விதை விழுந்து முளைத்தால்தான் தனக்குத் தேவையான உணவு தொடர்ந்து கிடைக்கும் என்பது அந்த சின்னஞ்சிறு சிட்டுக்குத் தெரியும். எனவே மற்றொரு உயரமான யூகலிப்டஸ் மரக்கிளையில் அமர்ந்து எச்சமிடும். இக்கொட்டையைச் சுற்றி சளி போன்ற பிசுபிசுப்பான திரவம் ஒட்டியிருக்கும். அப்போதுதானே விதை மரக்கிளையில் ஒட்டிக்கொண்டு வளர ஏதுவாக இருக்கும்.

15. மாலைக் கதிரொளியில் யூகலிப்டஸ் மரம் புல்லுருவிகளோடு

புல்லுருவிச் சிட்டு எச்சமிடும் அழகும் தனித்துவமானது. பிசினுடன் கூடிய விதையை எச்சமாக வெளியேற்றிய பிறகும் அப்பிசினிலிருந்து விடுபடுவதற்காக கிளையில் அப்படியும் இப்படியுமாக நடன அசைவுகளைப் போன்ற அதன் அசைவுகள் Pre-poop dancing என்று சொல்லப்படும் அளவுக்குப் பிரசித்தம்.

புல்லுருவிப் பழத்தின் விதை கிளையோடு ஒட்டிக்கொண்டதும் முளை விட்டு அக்கிளையினைப் பற்றிக்கொண்டு அதன் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளர ஆரம்பிக்கும். பிறகு பூத்து காய்த்துப் பழங்களைக் கொடுக்கும். புல்லுருவிப் பறவைகள் அப்பழங்களைத் தின்று விதைகளை எச்சத்தின் மூலம் மற்ற மரங்களுக்குப் பரப்பும். இப்படியாக புல்லுருவித் தாவரங்கள் புல்லுருவிச் சிட்டுகளின் தயவால் தங்கள் வாழ்நாள் முழுவதும் மண்ணைப் பார்க்காமலேயே மரங்களிலேயே முளைத்து வளர்ந்து மடிகின்றன. புல்லுருவிச் சிட்டுகளும் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே விதைத்து உண்டு மகிழ்கின்றன.

பழத்தை சும்மா தின்றுவிட்டுப் போவோம் என்று இல்லாமல் நாளைக்கும் சேர்த்து விதைக்கிறதே. இந்தக் குருவியைத்தான் கவிஞர் பாடியிருப்பாரோ?


16. புல்லுருவிச் சிட்டு பெண்


17. புல்லுருவிச் சிட்டு ஆண்

தேன்சிட்டு அளவே உள்ள புல்லுருவிச் சிட்டுகளை நேரில் பார்க்க முடியுமோ முடியாதோ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் எங்கள் வீட்டின் பின்னால் இருக்கும் மரத்தில் வந்தமர்ந்து குரல் கொடுத்தன. விடுவேனா? சட்டென்று படம் பிடித்துவிட்டேன். 

18. அழகிய புல்லுருவிப் பூக்கள்


19. வழியில் கிடந்த புல்லுருவிப் பூ

புல்லுருவிப் பூவும் கூட ஒருநாள் எதிர்பாராமல் என் கைக்கு வந்தது. வாழையின் உதிரிப்பூ வடிவத்தில் பளீரென்ற மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் கீழே கிடந்த அதைக் கையிலேந்தி படம் பிடித்தபோது, காலம் காலமாய் தனக்கென்று ஒரு வாழ்வைத் தகவமைத்துத் தக்கவைத்திருக்கும் புல்லுருவி மீது மதிப்பு பெருகியது. 

*****

பிற்சேர்க்கை (25-9-2025)

மாமரத்தின் புல்லுருவிப் பழம்

இதுவரை புல்லுருவிப் பழத்தை நேரில் பார்த்திராத எனக்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தியா சென்றிருந்தபோது அம்மா வீட்டின் மாமரத்தில் வளர்ந்திருந்த புல்லுருவிச்செடியின் பழம் ஒன்று கைக்குக் கிட்டியது.  சும்மா விடுவேனா? உண்மையிலேயே பிசுபிசுப்பு உள்ளதா என்று அறிந்துகொள்ள விரலால் பிதுக்கிப் பார்த்தேன். விரலோடு ஒட்டிக்கொண்டது. மூக்குச்சளிப் பழம் என்பார்களே, அதுதான் நினைவுக்கு வந்தது.  

கையில் பிசுபிசுப்பு தெரிகிறதா?

புல்லுருவிப் பழத்தின் ஒட்டும் தன்மையை நேரில் அறிந்துகொள்ளும் 

வாய்ப்பினை வழங்கிய இயற்கைக்கு நன்றி!


20 April 2019

பூக்கள் அறிவோம் (71 - 80)

71. பெருங்கொன்றை
(Peltophorum pterocarpum)




பெருங்கொன்றை, இயல்வாகை என்று தமிழில் குறிப்பிடப்படும் இது பூக்கள் காரணமாக ஆங்கிலத்தில் yellow-flameboyant, yellow flame tree, yellow Poinciana என்றும் செம்புவண்ணக் காய்கள் காரணமாக copperpod tree என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தியில் மஞ்சள் குல்மொஹர் எனப்படுகிறது. இதுவும் குல்மொஹரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையே. இதன் அறிவியல் பெயர் Peltophorum pterocarpum என்பதாம். Peltophorum என்னும் கிரேக்க வார்த்தைக்குகேடயம் போன்றஎன்று பொருள். பூக்களின் சூல்முடிகளின் வடிவம் கேடய வடிவத்தை ஒத்திருப்பதால் இப்பெயர். Pterocarpum என்னும் லத்தீன் வார்த்தைக்குசிறகுடைய காய்என்று பொருள்.

நீண்ட கொத்தில் மலரத் துவங்கும் பூக்கள், இளவேனிற்காலத் துவக்கத்தில் பொன்மஞ்சள் போர்வை போர்த்தினாற்போன்று மரம் முழுக்க மலர்ந்து அழகியத் தோற்றமளிக்கும். மலர்ந்து உதிரும் பூக்களோ மண்ணில் மஞ்சள் கம்பளம் விரித்தாற்போன்று காட்சியளிக்கும். கண்ணைப்பறிக்கும் பளீர்மஞ்சள்வண்ணப் பூக்களின் அழகுக்காகவும், குடைபோல் விரிந்து பரப்பும் அடர்நிழலுக்காகவும் சாலையோரங்களிலும் பெருவளாகங்களிலும் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன

கட்டிட கட்டுமானப் பணிகளுக்கும் மரச்சாமான்கள் தயாரிக்கவும் மரம் பயன்படுகிறது. இம்மரத்திலிருந்து கிடைக்கும் பழுப்புநிறச்சாயம், பத்திக் எனப்படும் முறையில் துணிகளுக்கு சாயமேற்றப் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் பட்டை பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றுக்கு உள்மருந்தாகவும், சுளுக்கு, வீக்கம், காயம், தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கு வெளிமருந்தாகவும் பயனாகிறது. தவிர தொண்டைப்புண்ணுக்கு கொப்பளிக்கும் மருந்தாகவும், பற்பொடியாகவும் கூட பயன்படுகிறது. இலைகள் கால்நடைத்தீவனமாக உபயோகமாகின்றன. பூக்கள் தேனீ வளர்ப்புக்குப் பெரிதும் உதவுகின்றன.

இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய தீவுகளையும் ஆஸ்திரேலியாவையும் அதன் வடபகுதித் தீவுகளையும் தாயகமாகக் கொண்ட இம்மரம், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைகொண்டுள்ளது.

இதன் விதைகள் எளிதில் முளை விடுவதில்லை. சாதாரணமாய் ஒரு விதை முளைப்பதற்கு பல மாதங்கள் தேவைப்படும். விதைகளை, கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்த பிறகு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விதைநேர்த்தி செய்யப்படுகிறது. பெருங்கொன்றை மரங்கள் பொதுவாக சுமார் ஒரு மீட்டர் சுற்றளவுடன் 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன.  

72. மலைச்சவுக்கு
(Grevillea robusta)





Silver oak, silky oak, Australian silver oak என்றெல்லாம் குறிப்பிடப்படும் இம்மரம் தமிழில் மலைச்சவுக்கு எனப்படுகிறது. க்ரிவிலியா இனத்திலேயே மிகப்பெரியது என்பதால் Grevillia robusta எனப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. 

வசந்த காலத்தில் மரம் முழுக்க பூக்களால் நிறைந்து, ஆரஞ்சு வண்ண கோபுரம் போலக் காட்சியளிப்பது வெகு அழகு. இந்தியாவில் காஃபி, தேயிலைத் தோட்டங்களில் செடிகளுக்கு நிழல் தருவதற்காக இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 

வருடத்தில் பெரும்பான்மையான மாதங்கள் இலைகளை உதிர்த்தபடியே இருப்பதால் தோட்டங்களுக்கு நல்ல இயற்கை உரம் கிடைக்கிறதாம். ஆனால் வீடுகளில் வளர்ப்பவர்கள் உதிரிலைகளை சுத்தம் செய்தே நொந்துபோகிறார்களாம். 

நன்கு முதிர்ந்த மரத்தின் அடித்தண்டு சுமார் மூன்று மீட்டர் சுற்றளவைக் கொண்டிருக்கும். உறுதியும் திடத்தன்மையும் கொண்ட இம்மரம் மரச்சாமான்கள் தயாரிக்கவும் கிடார் போன்ற இசைக்கருவிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அழகு மற்றும் பயன்பாடு காரணமாக உலகநாடுகள் பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டுவருகிறது. 

73. மோதகவல்லி
(Sterculia foetida)



விதைகள் வாதுமை போல உண்ணத்தகுந்தவை என்பதால் ஜாவா ஆலிவ், wild almond, Indian almond  என்ற பெயர்கள். முற்றிய காய்களின் வடிவத்தைக் கொண்டு, மோதகவல்லி, கொழுக்கட்டை மரம், குதிரைப்பிடுக்கன் மரம் என்ற பெயர்கள். பூக்கும் பருவத்தில் மரத்தை நெருங்கினாலே விரும்பத்தகாத வாடை வீசுதால் கசங்கம், பீநாறி மரம், skunk tree என்ற பெயர்கள். தோற்றத்தில் இலவமரத்தை ஒத்திருப்பதால் பேரிலவம் என்ற பெயர். இவை தவிர Bastard poon tree என்றொரு விநோதப் பெயரும் இதற்குண்டு. ஒரு மரம் மனிதர்க்குள் எவ்வளவு கற்பனைகளைத் தோற்றுவிக்கிறது. இதன் அறிவியல் பெயர் Sterculia foetida என்பதும் விசித்திரம். எரு போன்ற வாடையடிப்பதால் ரோமானிய எருக்கடவுள் sterquilinus பெயரால் இதற்கு sterculia என்று பெயரிடப்பட்டுள்ளது. Foetida என்றாலும் துர்நாற்றம் என்று பொருள்

நெடுநெடுவென்று சுமார் 25 மீட்டர் உயரத்துக்கு வளர்ந்து கம்பீரம் காட்டுவதாலும் இலைகள் மற்றும் பூக்கள், காய்களின் அழகுக்காகவும் தோட்டங்களிலும் வளாகங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இதன் காய்கள் மஞ்சளிலிருந்து, செம்மண் நிறம், அரக்குச்சிவப்பு, பழுப்பு என்று வண்ணங்கள் மாறிக்கொண்டே வந்து, முற்றி வெடிக்கையில் கரும்பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. உள்ளே விதைகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

மோதகவல்லியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவக்குணம் உடையது. சமையலுக்கும் உதவுகிறது. இந்த எண்ணெய் சோப்பு தயாரிக்கவும், பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. விதைகளை அப்படியே வறுத்துத் தின்பதும் உண்டு. இசைக்கருவிகள் செய்யவும், மரச்சாமான்கள் செய்யவும் இம்மரம் பயன்படுகிறது. இதன் மரப்பட்டைகளிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. 

74. சவுக்கு
(Casuarina)

சவுக்கு - பெண் பூக்கள்

சவுக்கு - ஆண் பூக்கள்

ஊசி போல் இலை இருக்கும், உத்திராட்சம் போல் காய் காய்க்கும் அது என்ன என்ற விடுகதைக்கு சட்டென்று விடை சொல்பவர்களுக்கு சவுக்கு மரம் நிச்சயம் பரிச்சயமாயிருக்கும். சவுக்கின் இலையை வைத்து விளையாடும் பள்ளிப்பருவ விளையாட்டு நினைவிருக்கிறதா? ஊசிபோன்ற இலையை ஒரு கணுவில் ஒடித்து மீண்டும் ஒட்டவைத்து கீழே போடவேண்டும். இரண்டு துண்டுகளும் ஒட்டியபடியே விழுந்தால் பரிட்சையில் தேர்ச்சி என்றும் விண்டு விழுந்தால் தோல்வி என்றும் நம்பிக்கை. பரிட்சையில் தேறுகிறோமோ இல்லையோ, பெரும்பாலும் இரண்டு துண்டுகளும் ஒட்டியபடியே விழுந்து அப்போதைக்கு ஆசுவாசம் தந்துவிடும். 
 
ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்டவை Casuarina எனப்படும் சவுக்கு வகை மரங்கள். ஓக் மரங்களைப் போல நெடிதோங்கி வளர்ந்திருப்பதால் ஆஸ்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேறிகளால் she-oak என்று குறிப்பிடப்பட்டது. ஷீ-ஓக் என்பது மருவி தமிழில் சவுக்கு என்றாகியிருக்கலாம் அல்லது சவுக்கு போன்று விசிறியடிக்கும் இலைகளைக் கொண்டிருப்பதால் சவுக்கு எனப்பட்டிருக்கலாம்.  

கேஸோவரி (cassowary) பறவையின் இறகுகளைப் போன்ற தோற்றத்துடன் இருப்பதால் இம்மரத்துக்கு casuarina என்று பெயரிடப்பட்டதாம். இரண்டுக்கும் மூலம் kasuari என்ற மலாய் வார்த்தைதான். 

சவுக்கு மரத்தில் ஆண்மரம், பெண்மரம் என தனித்தனி உண்டு. பெண்மரம் பூக்கும், காய்க்கும். ஆண்மரம் பூக்கும், காய்க்காது. அதனால் வேடிக்கையாக சிலர் இதனை he-oak என்று குறிப்பிடுவதுண்டு. காற்றின் மூலம் இவற்றில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

சவுக்கு மரங்கள் சுமார் 40 மீ. உயரம் வரை வளரக்கூடும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகள். சவுக்கு மரங்கள் கழிகள், கம்பங்கள் மற்றும் விறகுக்காகவும், காகிதக்கூழ் தயாரிக்கவும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடலோர மணற்பாங்கான பகுதிகளில் காற்றுத்தடுப்பானாகவும், மண்சரிவைத் தடுத்து நிறுத்தவும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. 



75. துளுக்க வேம்பு
(Melia azedarach)





Pride of India, bead tree, syringa berry tree, china berry tree, Persian lilac, Indian lilac, cape lilac, Texas umbrella tree, Umbrella cedar, white cedar, Ceylon cedar, Ceylon mahogany என்று அநேகப் பெயர்களால் குறிப்பிடப்படும் இது, இஸ்லாமிய நாடுகளிலிருந்து அறிமுகமாகியிருக்கும் என்று நம்பப்படுவதால் தமிழில் துளுக்க வேம்பு என்று குறிப்பிடப்படுகிறது. மலைவேம்புடன் இதைக் குழப்பிக்கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இது மருத்துவக்குணம் கொண்ட மலைவேம்புக்கு (melia dubia) எதிர்க்குணங்கள் கொண்டது. இரண்டுமே Meliaceae குடும்பத்தைச் சேர்ந்தவை.

melia azedarach மரத்தின் பூக்களும் இலைகளும் வேம்பைப் போல இருந்தாலும் இலைகள் உண்ணத்தகுந்தவை அல்ல. ஆனால் உணவு சேமிப்புக்கிடங்கில் பூச்சிகொல்லியாகப் பயன்படுத்தப்படுகின்றன. பறவைகளுக்கு சற்றே போதை தரும் பழங்கள் மனிதர்களுக்கு விஷமென்று அறியப்படுகிறது

பூக்கும் பருவத்தில் வெள்ளையும் கத்தரியும் கலந்து மரத்தைப் போர்த்தினாற்போல காட்சியளிக்கும் அழகுக்காகவே பல இடங்களில் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதன் தாயகம் இந்தோ-மலேயப் பகுதிகளும் ஆஸ்திரேலிய-ஆசிய நாடுகளும் ஆகும். உறுதியான இம்மரத்தின் கட்டைகள் மரவேலைப்பாடுகளுக்குத் தோதானது என்பதால்தான் செடார், மகோகனி போன்றவற்றுக்கு இணையாக சொல்லப்படுகிறது.

ஐந்து அல்லது ஆறு குழிவுகள் கொண்ட அழகான விதைகள் ஆரம்பகாலத்தில் ஜெபமாலைகள் செய்யப் பயன்படுத்தப்பட்டனவாம். வெப்பமண்டலப் பகுதிகளில் விரைவில் வளர்ந்து தழைத்து ஆக்கிரமிப்பு இனமாக மாறி மற்றத் தாவர இனங்களை அழிப்பதாலும் நடைபாதையோர மரங்களிலிருந்து உதிரும் பழங்களால் நடைபாதைகள் வழுக்குத்தரைகளாக மாறி உயிராபத்து விளைவிப்பதாலும் சில நாடுகளில் இதை வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

76. காகிதப்பூக்கள்
(Bougainvillea)




காகிதம் போன்ற மெல்லிய மொடமொடப்பாலும் என்றும் வாடாத தன்மையாலும் காகிதப்பூக்கள் என்றும் கடுதாசிப்பூக்கள் என்றும் குறிப்பிடப்படும் போகன்வில்லா பூக்கள் வீடுகளிலும் பெரும் வளாகங்களிலும் அழகுக்காக விரும்பி வளர்க்கப்படுகின்றன. பிரேசில், அர்ஜென்டைனா நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், மரக்கொடி வகையாகும். முட்தாவரமான இது நச்சுத்தாவரமும் ஆகும். செடியின் சாறு பட்டால் தோலில் அரிப்பும் எரிச்சலும் உண்டாகும் என்பதால் கையாளுகையில் எச்சரிக்கை தேவை.

போகன்வில்லாவில் 300-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பிங்க், வாடாமல்லி என பல வண்ணங்களில் ஒற்றையாகவோ அடுக்காகவோ காணப்படுபவை உண்மையான பூக்கள் அல்ல.. அவை பூவடி இலைகள் மட்டுமே. அவற்றுக்கு நடுவில் வெண்மஞ்சள் நிறத்தில் குட்டிக்குட்டியாய் இருப்பவைதாம் பூக்கள். முதன்முதலில் இத்தாவரம் பற்றி அறியத்தந்த பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த கடல்வழி ஆய்வர் Louis Antoine de Bougainville பெயரால் இதற்கு bougainvillea என்று பெயரிடப்பட்டுள்ளது. போகன்வில்லாவும் அந்திமந்தாரையும் Nyctaginaceae என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

காகிதப்பூ செடிகளை வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது. அலங்கார வளைமரமாகவோ, புதராகவோ, பற்றுக்கொடியாகவோ, போன்சாய் எனப்படும் குறுமரமாகவோ எப்படி வேண்டுமானாலும் நம் விருப்பத்துக்கு வளைத்து வளர்க்கமுடியும். கிளைகளை வெட்டி நடுவதன் மூலமும், பதியன்கள் மற்றும் விதைகள் மூலமும் புதிய செடிகளை வளர்க்கலாம்.

கலிஃபோர்னியா, சீனா, மலேசியா, தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள சில நகரங்கள் தங்கள் நகர மலராக போகன்வில்லாவை அங்கீகரித்துள்ளன. கிரெனடா தீவின் தேசிய மலரும் இதுவே. 

77. ஜகரண்டா
(Jacaranda mimosifolia) 



வசந்தகாலத்தில் லாவண்டர் வண்ணத்தில் மரம் முழுக்க பூவாடை போர்த்துநிற்கும் அழகுக்காகவே ஜகரண்டா மரங்கள் வீடுகளிலும் வீதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. சாதாரணமாய் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் மரம் இலையுதிர் காலத்தில் இலைகள் பழுத்து மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிப்பது ஒரு அழகு. வசந்தகாலத்தில் பந்துபந்தாய் பூக்கள் மலர்ந்து காட்சியளிப்பது பேரழகு. பூத்த மலர்கள் உதிர்ந்து ஊதா வண்ணத் தரைவிரிப்பென மண்ணை அலங்கரித்திருப்பது தனியழகு.

ஜகரண்டா பூவின் வடிவத்தை உற்றுக் கவனித்தால் ஒவ்வொன்றும் ஆடும் புறா போல அழகு காட்டும். பூக்கள் தலையில் உதிர்ந்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் சில இடங்களில் உண்டு. ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் இவை பூத்துக்குலுங்கும் பருவத்தில் ஜகரண்டா திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஜகரண்டாவில் சுமார் 50 வகை இருந்தாலும் ஜகரண்டா என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவது இந்த Jacaranda mimosifolia வகைதான். பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மரங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, சில நாடுகளில் ஆக்கிரமிப்புத் தாவரமாக அறியப்படுகின்றன. ஜகரண்டா என்றால் தென்னமெரிக்கப் பூர்வகுடி மொழியில் நறுமணம் என்று பொருளாம்.

சீனாவில் இதன் இலைகளிலிருந்து ஊதாநிற சாயம் தயாரிக்கப்படுகிறது. சில வகை ஜகரண்டா மரங்கள் மரவேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஜகரண்டா வகையுள் வெள்ளை மலர்களும் உள்ளன என்றாலும் ஊதா அளவுக்கு அவற்றுக்கு வரவேற்பில்லை.


78. பாதிரி 
(Stereospermum tetragonum)




ஜகரண்டா குடும்பத்தைச் சேர்ந்ததுதான் பாதிரியும்பாடலம்பாதிரி என்றெல்லாம் பழந்தமிழ்ப் பாடல்களில் குறிப்பிடப்படும் மலர் இதுவே. இதற்கு அம்புஅம்புவாகினிபுன்காலி என்ற பெயர்களும் உண்டு. கபிலர் பாடிய 99 மலர்களுள் இதுவும் ஒன்று. இந்தியாஇலங்கைசீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட மரம். மஞ்சள் வண்ணத்தில் லேசாக வளைந்தாற்போன்ற சிறிய புனல் வடிவப் பூவின் ஐந்து இதழ்களில் இரண்டு மேல்நோக்கியும் மூன்று கீழே தாழ்ந்தும் இருக்கும்.

வேனிற் பாதிரி கூன் மலரன்ன என்கிறது குறுந்தொகைப் பாடல்.. கூன் விழுந்த மலராம்… என்ன அழகான கற்பனைஅது மட்டுமா.. இதன் காய் பிஞ்சு முருங்கை போல நீண்டு முறுக்கிக் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு பாம்பு போல இருப்பதால் இதற்கு மஞ்சள் பாம்பு மரம் (yellow snake tree) என்ற பெயரும் உண்டு.

மரத்தின் உறுதித்தன்மையால் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. பூக்கள் கோவில்களில் பூஜையில் பயன்படுத்தப்படுகின்றன. திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலின் தல விருட்சம் பாதிரி மரம்.

79. ஆப்பிரிக்க துலிப் பூக்கள்
(African Tulip spathodea campanulata)






துலிப் போன்று கிண்ணவடிவில் இருப்பதாலும் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருப்பதாலும் இப்பூக்களுக்கு ஆப்பிரிக்க துலிப் பூக்கள் என்று பெயர். செக்கச்செவேலென்று கொத்துக்கொத்தாய் மலரும் பூக்களின் அழகுக்காக உலகெங்கும் பல நாடுகளில் விரும்பி வளர்க்கப்படுகிறது. உலகின் மிக முக்கிய ஆக்கிரமிப்புத் தாவர இனங்கள் பட்டியலில் முதல் நூறு இடத்தில் இதுவும் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இம்மரங்களைக் காணமுடியும்.

பூக்களில் தேனை நாடிவரும் சிற்றுயிர்கள் பலவும் கிண்ண வடிவ பூக்களில் தேங்கியிருக்கும் மழைநீரிலும் பனித்துளியிலும் சிக்கி அங்கேயே மடிந்துவிடுவது பெரும் ஆச்சர்யம். பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிர்களைக் கொல்லக்கூடுமா? கூடுமெனில் காரணம்?

இப்பூக்கள் தங்களுக்கான மகரந்தச்சேர்க்கையை யார் செய்வது என்று தாங்களே முடிவெடுக்கின்றன. பறவைகளுக்கும் வௌவால்களுக்கும்தான் அந்த முன்னுரிமை. வண்டு, தேனீ போன்ற பூச்சிகளால் மகரந்தச்சேர்க்கை அண்மையிலேயே நடைபெறும் என்பதால் அதைத் தவிர்க்க மேற்கொள்ளும் உத்திதான் இம்மாதிரி நீரில் அமிழ்த்தி மரணிக்கச் செய்வது. மொட்டுகளிலும் கூட நீர்த்தேக்கம் உண்டு. குழந்தைகள் அந்த மொட்டுகளைப் பறித்து உள்ளிருக்கும் நீரைப் பீய்ச்சி விளையாடி மகிழ்வர். அதனாலேயே இதற்கு fountain tree, pichkari என்ற பெயர்களும் தீப்பற்றி எரிவது போல பூத்துக் காணப்படுவதால் Nandi flame, Nile flame என்ற பெயர்களும் உண்டு. (pichkari என்றால் இந்தியில் பீச்சாங்குழல் என்று அர்த்தம்)


80. நாகலிங்கப்பூ
Couroupita guianensis





படமெடுத்தாடும் பாம்பு சிவலிங்கத்துக்கு குடைபிடிப்பது போன்று தோற்றம் காட்டுவதால் இதற்கு நாகலிங்கப்பூ (சில இடங்களில் சிவலிங்கப்பூ) என்று பெயர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி, ஒடியா போன்ற பல இந்திய மொழிகளிலும் இம்மரம் நாகலிங்கம் என்ற பெயராலேயே குறிப்பிடப்படுகிறது. பூக்களின் சிறப்புத்தோற்றம் காரணமாக, சிவனுக்கு உகந்த மலர்களாக பூஜிக்கப்படுகின்றன. அதனால் பெரும்பாலான கோவில்களில் முக்கியமாக சிவதலங்களில் இம்மரம் காணப்படுகிறது. 

பாண்டிச்சேரி மாநிலத்தின் மாநில மலர் என்ற சிறப்பும் நாகலிங்கப்பூவுக்கு உண்டு. ஆன்மீகம் சார்ந்திருந்தாலும், அதிசயமாய் நாகலிங்கப்பூ ஒரு திரைப்பாடலிலும் இடம்பெற்றுள்ளது. 

நாகலிங்கப்பூவெடுத்து நாலுபக்கம்
கோட்டை கட்டி வா வா வா...
என்ற போதையூட்டும் சுசீலாம்மாவின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றனவா?

மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம்மலர்களின் அழகு மற்றும் நறுமணத்தாலும்பல்வேறு மருத்துவக் குணங்களாலும் காய்களின் பிரத்தியேகத் தன்மையாலும் கவரப்பட்டுதற்போது உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாஇலங்கைதென்கிழக்கு ஆசிய நாடுகளில் கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. 

மரப்பட்டைபூகாய் என நாகலிங்க மரத்தின் அநேக பாகங்கள்பூஞ்சைக்கொல்லியாகவும்நுண்ணுயிர்க்கொல்லியாகவும்சளிவயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகளுக்கும்சருமப் பிரச்சனைகளுக்கும் நிவாரணியாகவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் couroupita guianensis  என்பதாகும். couroupita என்பது அமெரிக்காவின் தொன்மையான மரவகையொன்றைக் குறிக்கிறது. guianensis என்பது இம்மரத்தின் பூர்வீகமான கயானாவைக் குறிக்கிறது. 

நாகலிங்க மரம் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நாகலிங்க மரத்தின் காய்கள் கனிவதற்கு ஒன்று முதல் ஒன்றரை வருடம் ஆகும். காய்கள் சுமார் 25 செ.மீ. குறுக்களவுடன் பீரங்கிக்குண்டு போன்ற தோற்றங்காட்டுவதாலும், பழுத்துக் கீழே விழும்போது டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறுவதாலும் ஆங்கிலத்தில் cannonball tree என்று குறிப்பிடப்படுகிறது. கோவில் வளாகங்களில் இம்மரங்களை வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். காய்கள் வெடித்துச் சிதறும் சத்தம் வெடிவெடிப்பது போலிருப்பதால் திருடர்கள் கோவிலுக்குள் புகுந்து திருடுவதற்கு அஞ்சுவார்களாம். 

நாகலிங்க மலர்கள் வழக்கமான பிற மரங்களைப் போல கிளைகளில் பூக்காமல் உறுதியான அடிமரத்தினின்று நீண்டு வளர்ந்த காம்புகளில் கொத்துக்கொத்தாகப் பூத்துக் குலுங்குகின்றன. நாகலிங்கப்பூக்களில் தேனீ, குளவி போன்ற சிறு பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. 

நாகலிங்கப்பூவில் தேன் கிடையாது என்பது ஆச்சர்யம். அதனிலும் ஆச்சர்யம் தேன் இல்லாத பூவில் எப்படி மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது என்பது. இப்பூக்களில் இருவகையான மகரந்தம் உள்ளது. ஒன்று கருவுறும் தன்மை கொண்டது, மற்றது கருவுறா தன்மை கொண்டது. கருவுறா தன்மை கொண்ட நறுமண மகரந்தம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்க, கருவுறும் தன்மை கொண்ட மகரந்தம் அவற்றின் உடலில் ஒட்டிக்கொண்டு மகரந்தச்சேர்க்கைக்கு வழிவகுக்கின்றனவாம்.  

(தொடரும்)