25 June 2011

அது....



உள்ளங்காலை உரசியபடியே
கூச்சம் உண்டாக்கிய அதை
அக்கணமே உதறிவிடாதது
என் தவறென்றுதான் சொல்லவேண்டும்!

சிந்தனை மழுங்கலால்
அப்பரிசத்தை
சிறுபிள்ளையின் கைத்துழாவல் என
சிலபோது சிலிர்த்துநின்றேன்!

சுற்றிச்சுற்றி வந்து
தன் மென்ரோமங்களால் பாதம் உராயும்
செல்லப்பூனையின்
பாசவெளிப்பாடெனவும்
தவறாய் நினைத்துவிட்டேன்!

மெல்லத் தவழ்ந்து
அது மேலேறியபோதாவது
சற்றே விழிப்புற்று
தந்திரமாயேனும்
தரையிறக்கிவிட்டிருக்கவேண்டும்!

சரியாக கணித்திராதது
என் மடத்தனமே!

காட்டுக்கொடியென கணப்பொழுதில்
கால்களில் பற்றிப்படர்ந்து
இடையை ஆக்கிரமித்த
அதன் இரும்புப்பிடியைக்கூட
இடுப்புக்குழந்தையின் இறுக்கிய
கால்பின்னலென்றே
கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்!

கொஞ்சம் கொஞ்சமாய்
என் நெஞ்சக்கூட்டின் மீதமர்ந்து
நிதானமாய் என் கழுத்தைக் கவ்வியபோதுதான்
கவனிக்க நேர்ந்தது, அதன்
கடுமையான ஆக்ரோஷத்தை!

அவதானிக்கும் முன்பாகவே
அழுத்தி என் குரல்வளை நெரித்து
என் மூச்சடக்கி
அதுவும் போதாதென்று
ஆரவாரமாய் என் உச்சந்தலைமயிரைப்
பிடித்துலுக்கியும், கோரப்பல் காட்டியும்
கும்மாளம் போடுகிறது அது!

நினைவு மங்கிச்சாயும்
என் இறுதித் தருணங்களிலும்
ஒரு கவிதை தோன்றக் காரணமானதால்
அப்போதும் அதனைச் சபிக்காமல்
வாளாவிருக்கிறேன்!

20 June 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (5)



மோகக்கூட்டுக்குள்  கட்டுண்டு கிடந்த சுந்தரிக்கும், பிரபுவுக்கும் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. பிரபுவின் அன்புச்சிறைக்குள் ஆனந்தமாய் அடைபட்டிருந்தாள் சுந்தரி. பிரபுவோ, சுந்தரி பின்னிய பாசவலையில் தாறுமாறாய் சிக்கியிருந்தான். இருவரும் அவற்றைவிட்டு வெளியில் வர விரும்பவே இல்லை.

ஆனாலும், பிரபுவுக்கு, சூல் கொண்டிருந்த சுந்தரியைக் காணும்போதெல்லாம் அவள் எதற்கோ ஏங்குவதுபோல் ஒரு எண்ணம் உண்டாகும். அவ்வப்போது சோர்ந்து நிற்கும் முகமே சாட்சி சொல்லியது, அவளது மனக்குறையை!

"அம்மு! உனக்கு என்னடா குறை? ஏதாவது இருந்தா சொல்லேன்!"

சுந்தரியிடம் கேட்க, அவள் சிரித்தாள்.

"குறையா? அப்படி எதுவுமே இல்லைங்கறதுதான் குறை!"

"ம்ஹும்! ஏதோ இருக்கு! நீ சும்மா சொல்லாதே! உனக்கு உங்க அப்பா, அம்மாவைப் பாக்கணும்னு தோணுதா?"

"அப்படித் தோணினா நானே உங்ககிட்ட சொல்றேன். ஆனா ஆச்சர்யம் பாருங்க, இன்னைக்கு வரைக்கும் அவங்க ஞாபகமே வரலை. உங்களால் நம்பமுடியுதா?"

"சரி,நம்பறேன். ஆனா உன் கண்ணில் தேங்கியிருக்கிற கண்ணீர் பொய் சொல்லுமா? சொல்லு! வேறென்ன வேணும்? என்கிட்ட சொல்றதுக்கென்ன? தாராளமா சொல்லு!"

"எதுவுமில்லீங்க! என் சின்ன வயசில இருந்து சாப்பாட்டுக்கே கஷ்டம்! நல்ல துணிமணி உடுத்தி நானறியேன். மண்குடிசையில வாசம்! எங்க ஜனத்துக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கிடையாது.

இவ்வளவு கீழான நிலையில் இருக்கிற குடும்பத்திலிருந்து, படிக்காத, நாகரிகமில்லாத ஒரு பொண்ணை ,சாதி, அந்தஸ்து எதுவுமே பாக்காம, ஊரிலே செல்வாக்கான தாய் தகப்பனை எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்க ஒரு பெரிய மனசு வேணுங்க. அது உங்க கிட்ட அளவுக்கு அதிகமாவே இருக்கு!

எங்க அப்பா அம்மா பாத்து வச்சவரக் கல்யாணம் கட்டியிருந்தா, இந்நேரம் நானும் ஒரு கூலித் தொழிலாளியா பகலெல்லாம் செங்கல் சுமந்திட்டு, ராவெல்லாம் அந்த குடிகாரன் கையால் அடி வாங்கிட்டு தலையெழுத்தேன்னு காலந்தள்ளியிருந்திருப்பேன்.

இப்படி ஒரு கெளரவமான வாழ்க்கை கொடுத்த நீங்கதான் என் தெய்வம்! நான் சாகுறவரைக்கும் உங்க நிழலிலேயே வாழணும். அதுதாங்க என் ஆசை! வேறெந்த ஆசையும் இப்ப எனக்கில்லை!"

மூச்சுவிடாமல் பேசும் சுந்தரியையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், பிரபு!

"அடி, எப்புடிடி  இப்படியெல்லாம் பேசக் கத்துகிட்டே?"

"என் மனசில் இருக்கறதைச் சொன்னேன்! " முடிக்கும்போது அவள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர்த்துளிகள் சிந்தின.

"அடப்பைத்தியம்! எதுக்கு இப்ப அழறே? நான் எந்தக் காலமும் உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன். நீதான் என் உலகமே! கண்ணைத் துடைச்சுக்கோ!"

"இருந்தாலும்...எனக்கொரு சந்தேகங்க!"

"கேட்டுடு, கேட்டுடு! சந்தேகத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருந்தா அது பல குட்டிகளைப் போட்டு இதயத்தை வெடிக்கவச்சிடும். .கேளு....கேளு!"

பிரபு அவசரப்படுத்தினான்.

"நான் கேக்கிற கேள்விக்கு நீங்க உண்மையை மட்டும்தான் பதிலாச் சொல்லணும், சரியா?"

"உண்மை!"

"ப்ச்! விளையாடாதீங்க! சொல்லுங்க!"

"ம்! பீடிகையெல்லாம் பலமா இருக்கு! சரி, சொல்றேன். உன்கிட்ட எனக்கு எந்த ஒளிவு மறைவும் கிடையாது, சுந்தரிம்மா! கேளு!"

"என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"இதென்னடி கேள்வி? நான் உன்னை காதலிச்சேன், கட்டிகிட்டேன்!"

"ஏன் என்னைக் காதலிச்சீங்க?"

"அம்மு! உனக்கு என்னமோ ஆயிடுச்சு! ஏன் இப்படியெல்லாம் கேக்கறே?"

"காரணம் இருக்கு! ஏன் என்னைக் காதலிக்கணும்னு உங்களுக்குத் தோணிச்சு?"

"ஏன்னா....என்ன சொல்றது? நீ உலகமகாப்பேரழகியா இருந்தே! ஊரே உன் பின்னால் சுத்துச்சு! அதனால் நானும் உன்னைச் சுத்தி சுத்தி வந்து காதலிச்சேன்!"

"மறுபடியும் விளையாடறீங்க. உண்மையில் ஒரு ஏழைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னுதானே மனசுக்குள்ள நினைச்சிருந்தீங்க, அதைச் சொல்லுங்க!"

"அதான் தெரியுதில்லே? அப்புறம் என்ன கேள்வி?"

மருதாணி இட்டுச் சிவந்திருந்த அவள் விரல்களைத் தன் விரல்களுடன் பின்னிக்கொண்டான். அவள் மனதில் என்ன மாதிரியான சந்தேகம் எழுந்திருக்கக்கூடும் என்பது ஒரளவு புரிந்தது. அவள் வாயாலேயே அதை சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

அவளோ, ஆரம்பித்துவிட்டாளே தவிர, அதை மேற்கொண்டு தொடர்வதா, கைவிடுவதா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

"சுந்தரி! உனக்குத் தெரியாததில்லை! முன்னாடியே உனக்கு இதைப் பத்திச் சொல்லியிருக்கேன். இப்ப உனக்கு என்ன சந்தேகம்? அதைச் சொல்லு!"

"வந்து....அது..என்னன்னா...." அவள் மென்று முழுங்கினாள்.

"சொல்லும்மா! நான் எதுவும் நினைக்கமாட்டேன்!"

"வந்து......இந்தப்பொண்ணு நமக்கு வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு என்மேல் ஆசைப்பட்டு கட்டிகிட்டீங்களா, இல்லே.....நமக்குத் தேவை  ஒரு ஏழைப்பொண்ணு! அது யாராயிருந்தா என்னான்னு நினைச்சு என்னைத் தேர்ந்தெடுத்தீங்களா? அதுதான் என் மனசில் ரொம்பநாளா உறுத்திகிட்டிருக்கிற  சந்தேகம். பதில் எதுவா இருந்தாலும் பரவாயில்ல. நான் தாங்கிக்குவேன். ஆனா தயவுசெஞ்சு உண்மையை மட்டும் சொல்லுங்க!"

பிரபு, சுந்தரியின் கைகளை இழுத்து, அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி உச்சியில் முத்தமிட்டான். படபடக்கும் அவள் விழிகளைப் பார்த்தபடியே,

"சொல்றேன்!" என்றான்.

தொடரும்...

*********************************************************************


தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

மு. உரை:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.
--------------------------------------
தொடர்ந்து வாசிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (6)

முந்தைய பதிவு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (4)

15 June 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (4)



“விக்னேஷ் யாரையாவது காதலிக்கிறானா? அப்படி ஏதாவது இருந்தா, முன்னாடியே சொல்லிடுப்பா!  திடீர்னு அவனும் உன்னைப்போல் செய்துட்டான்னு வச்சுக்கோ, என்னால் உயிரோடவே இருக்க முடியாது, அதனால்தான் கேக்கறேன்!"

பிரபு அதிர்ந்துபோனான். தன் மகனைப் பற்றி அவன் நண்பனிடம் உளவு பார்க்கும் தாயை என்னவென்று சொல்வது? ஒருவகையில் அவரைப் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்தது.

இளவயதில் கணவனை இழந்தவர், அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பித்துப்பிடித்தவர்போல் பலவருடங்கள் சுயம் அறியாமல் இருந்தவர். அவரது நிலையைப் புரிந்துகொள்ளாத உறவுகள் அவர் வேண்டுமென்றே  உதாசீனப்படுத்துவதாக எண்ணி, அவருடனான உறவைத் துண்டித்துக்கொண்டனர். பிறகு புத்தி தெளிந்து வாழ்ந்தாலும், உறவுகளை அண்டவிரும்பாது, தன் மகன் ஒருவனே போதுமென்று வாழ்பவர்.

இந்த விஷயங்களை எல்லாம் அவரே அவனிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அதனால் அவர் கேட்பதில் உள்ள நியாயம் புரிந்தது.

விக்னேஷ் மூலம் இன்னொரு அதிர்ச்சி வந்தால் மீண்டும் மனநிலை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதை பிரபு உணர்ந்தான். இப்போதைக்கு அவரிடம் நம்பிக்கையை வளர்ப்பது ஒன்றே அவர் கவலைக்கு மருந்து என்று அறிந்தவன்,

அவருடைய கரங்களை அழுந்தப் பற்றி,

"அம்மா! என் நிலை வேற, விக்னேஷுடைய நிலை வேற! எனக்கு சின்ன வயசிலிருந்து பணம் மட்டும்தான் தேவைக்கு அதிகமாக் கிடைச்சது. பாசம் ....?  அது நான் எதிர்பார்த்த அளவுக்கு என் அப்பா அம்மாகிட்டேயிருந்து கிடைக்கவே இல்லை.

என் அப்பாவுக்கு அம்மா மட்டும்தான் ஊரறிஞ்ச மனைவி. ஊரறியாத மனைவிகள் எவ்வளவுன்னு அவருக்கே கணக்குத் தெரியாது. என் அம்மாவுக்கோ, என் அப்பாவை உளவு பார்க்கிறதே வேலை. எப்பவும் வீட்டில் சண்டை, சச்சரவுதான். என் வீட்டு வேலைக்காரங்களுக்கே எல்லா விஷயமும் தெரியும்.

அப்படியொரு கேவலமான வாழ்க்கை அது! ஆனால், பணம் சேர்க்கிறதிலயும், பதவிசா வாழுறதிலயும் ரெண்டுபேருக்கும் அவ்வளவு ஒற்றுமை! அதனால்தான் நான் சின்ன வயசிலிருந்தே  என் பாட்டி வீட்டில் வளர்ந்தேன்.

பாசம்னா என்னன்னு என் பாட்டிதான் காட்டினாங்க. அவங்க தவறியதுக்கு அப்புறம் நான் என் வீட்டுக்குப் போனேன். அங்கே நிம்மதி இல்லை. வயது வந்த பிள்ளையின் முன் எதையெல்லாம் பேசக்கூடாதோ, அதையெல்லாம் பேசுவாங்க. எப்படி அவங்க மேல் மதிப்பு வரும்? அவங்களை விட்டு விலகணும்னு நினைச்சேன்.

எனக்கு சென்னையில் வேலை கிடைச்சது ரொம்ப நல்லதாப் போயிடுச்சி. அவங்களை விட்டு விலகினாலும், இடையிடையே ஊருக்குப் போனதே இந்த சுந்தரிக்காகத்தான்.  என் வாழ்க்கையில் ஒரு ஏழைப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்கிறதில் உறுதியா இருந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவளா சுந்தரி இருந்தாள்.

அப்பா அம்மா எதிர்க்கக் காரணம் கெளரவம்! அது ஒண்ணுதான்! மத்தபடி நான் ஒரு பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டு என் வாழ்க்கை சீரழிஞ்சாலும் அதுக்கு அவங்க கவலைப்படமாட்டாங்க.

இப்ப சொல்லுங்க, நான் செய்தது எந்த விதத்தில் சரியில்லை?

ஆனா, நீங்க விக்னேஷை வளர்த்தவிதம் வேற. உங்க அன்பைக் கொட்டி வளர்த்திருக்கீங்க, அவனுக்கு நிச்சயம் என் நிலை வராது.

அப்படியே அவன் ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடிச்சிருந்தாலும், நேரா உங்ககிட்ட வந்து, 'அம்மா! எனக்கு அந்தப் பெண்னைப் பிடிச்சிருக்கு, நான் காதலிக்கவா?'ன்னு உங்களைத்தான் கேட்பான். அதனால் கவலையை விடுங்க!"

தன் பெற்றோரின் அந்தரங்க வாழ்க்கையின் அசிங்கம் தன் ஊரோடு போகட்டும், நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம் என்று இத்தனை நாள் அந்தச் சோகத்தையெல்லாம் தனக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்தவனுக்கு, இன்று நண்பனின் தாயாரிடம்  சொன்னதன் மூலம் இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன.

ஒன்று,  தன் மனதின் பாரமெல்லாம் இறங்கியது போல் ஒரு நிம்மதி. இரண்டாவது, நாகலட்சுமிக்கு  அவர் மகனிடம் தளரவிருந்த நம்பிக்கையை  இறுக்கி, அவரை ஆசுவாசப்படுத்தியது.

“என்னாங்க, எவ்வளவு நேரமாக் கூப்புடுறேன், என்னா யோசனை?"

"ம்!"

திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தான், பிரபு. எதிரில் இரண்டு தம்ளர்களில் காப்பியை ஏந்தியபடி, சுந்தரி நின்றிருந்தாள்.

பிரபு ஆச்சர்யத்துடன், "நீ எப்ப எழுந்து போனே?" என்றான்.

"அது சரி! நீங்க எந்த லோகத்திலே இருக்கீங்க? நான் போய் பத்து நிமிஷம் ஆவுது. அதுகூடத் தெரியாம என்னா சிந்தனையோ, ஐயாவுக்கு?"

"ம்? நம்ம விக்னேஷோட அம்மாவைப் பத்திதான் யோசிச்சிட்டிருந்தேன்."

"என்னானு?"

"விக்னேஷ் காதல் கல்யாணம் செய்துகிட்டால், அந்தம்மா ஒத்துக்குவாங்களான்னு யோசிச்சிட்டிருந்தேன்!"

"நிச்சயமா ஒத்துக்குவாங்க! என்கிட்ட எத்தனை அனுசரணையாப் பேசினாங்க, எப்படி நடந்துகிட்டாங்க, நான் சாமான் கழுவுறேன்னு போனப்போ, நீ இதெல்லாம் செய்யவேண்டாம்மான்னு அப்படித் தடுத்தாங்களே! நிச்சயமா அவுங்களுக்கு மருமகளா வரப்போறவ, குடுத்துவச்சவதான். அவுங்க ஒருக்காலும் தம் பையனோட ஆசைக்கு குறுக்க நிக்கமாட்டாங்க."

"நீ எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே, என்னமோ அவங்களோட வருஷக்கணக்கா பழகினமாதிரி?"

"ஒருத்தர் குணமறிய வருஷக்கணக்காதான் பழகணுமா, ஒரு மணிநேரம் போதுமே! நீங்க சொல்லுற மாதிரி ஒரு சராசரித் தாயா அவுங்களை என்னால் கற்பனையே செஞ்சுபாக்க முடியலை. அவுங்க அதுக்கும் மேலதான்!"

"அம்மா, தாயே! வேணுமின்னா ஒரு கோயில் கட்டி அவங்களைக் கும்பிடு! நான் இனிமே அவங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலை."

பிரபு கையெடுத்துக் கும்பிட்டான்.

"என்னாங்க, நீங்க? என்னப்போய் கும்பிட்டுகிட்டு....."

சுந்தரியின் செல்லச்சிணுங்கலை ரசித்தவாறே மனதுக்குள் அவளைப் பற்றிக் கவலைப்பட்டான், பிரபு.

'இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறாளே! இவள் என்னமாய் இந்தச் சிங்காரச் சென்னையில் வாழக் கற்றுக்கொள்ளப்போகிறாள்?'

பிரபுவின் கவலை அறியாத சுந்தரி, அவன் சொன்னதைப்போல் மானசீகமாக ஒரு கோயில் கட்டி அதில் நாகலட்சுமியின் திருவுருவம் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டாள். அவள் அறிந்திருக்கவில்லை....பின்னாளில் அந்தக்கோயில் அதில் குடிகொண்ட தெய்வத்தாலேயே தரைமட்டமாக்கப்படப்போகிறது என்பதை!

தொடரும்...

*********************************************************************

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

மு. உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
#########

தொடர்ந்து வாசிக்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (5)

முந்தைய பதிவு
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? (3)