30 June 2019

பறங்கிக்காய் பிரதாபம்

தோட்டத்துப் பிரதாபம் - 3



பறங்கிக்காயைப் பறித்து
பட்டையெல்லாம் சீவி
பொடிப்பொடியாய் நறுக்கி
உப்புக்காரம் போட்டு
எண்ணெய்விட்டுத் தாளித்து
இன்பமாகத் தின்போம்
இன்னும் கொஞ்சம் கேட்போம்
தந்தால் தின்போம்
தராவிட்டால் அழுவோம்.

இந்தப் பாடல் எங்கள் ஒன்றாம் வகுப்பு டீச்சர் ஆக்ஷனுடன் சொல்லிக்கொடுத்து நாங்கள் பாடிய பாடல். வேடிக்கை என்னவென்றால் பறங்கிக்காயைப் பறித்து என்ற முதலடியைச் சொல்லும்போது எக்கிக்குதித்து இரு கைகளாலும் பறிப்பது போல் பாவனை செய்து பாடினோம். டீச்சர் அப்படிதான் சொல்லிக்கொடுத்தாங்க. மரத்திலிருந்து மாங்காய் பறிப்பது போல பறங்கிக்காயை எக்கிக்குதித்துப் பறித்த செய்கையை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.



\\வெள்ளைப் பங்கியைத் துரையென்ற காலமும் போச்சே\\

பரங்கியா பறங்கியா என்பது என் முதல் சந்தேகம். ங்கி என்கிறார் பாரதி. பறங்கி என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. அப்படியென்றால் இரண்டுமே சரிதானோ? 😏

பறங்கியா பூசணியா என்பது இரண்டாவது சந்தேகம். சிலர் பறங்கிக்காயையும் பூசணி என்றே சொல்கிறார்கள். ஆனால் மஞ்சள் பூசணி என்கிறார்கள். சர்க்கரைப் பூசணி, அரசாணிக்காய் என்பனவும் பறங்கிக்காயைக் குறிப்பனவே. வெண்பூசணி, கல்யாணப் பூசணி, சாம்பல் பூசணி, நீற்றுப் பூசணி, நீர்ப்பூசணி என்பன பூசணிக்காயின் வேறு பெயர்கள். ஆங்கிலத்தில் பறங்கிக்காய்க்கு pumpkin என்ற ஒரே பெயர்தான். பூசணிக்காய்க்கோ ash gourd, wax gourd, winter gourd, white gourd, tallow gourd, ash pumpkin என ஏராளமான பெயர்கள்.  

பறங்கிப்பிஞ்சு

பறங்கிக்காயை அதன் பிஞ்சு, காய், பழம் என எல்லா பருவத்திலும் சமைத்து உண்ணமுடியும். பறங்கிக்காய் மட்டுமல்ல, பறங்கி இலைகளைக் கூட சமைக்கலாம் என்று கேள்விப்பட்டேன். இன்னும் சோதனை முயற்சியில் இறங்கவில்லை. பறங்கிப்பிஞ்சு வறுவல் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. பறங்கிப்பிஞ்சை வறுக்கலாம் என்பதே புகுந்த வீட்டுக்கு வந்துதான் அறிந்துகொண்டேன். கடைகளில் பிஞ்சு கிடைப்பது வெகு அரிது என்பதால் கிடைக்கும்போது விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிவிடுவது வழக்கம். வீட்டுத் தோட்டத்திலேயே கைக்கெட்டும் தூரத்தில் பறங்கிப்பிஞ்சுகள் என்றால் விடுவேனா? ஆசை தீருமட்டும் சமைத்து சாப்பிட்டாயிற்று. பறங்கிப்பிஞ்சுக்கு பறங்கிக்கொட்டை என்ற பெயரும் உண்டு என்பதை சமீபத்தில்தான் எங்கள் ப்ளாக் மூலம் அறிந்துகொண்டேன்.

பறங்கிப்பிஞ்சு வறுவல்

கண் திருட்டிக்கும் இந்த பூசணி வகைகளுக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. எப்படியோ பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. புதுமனை, புதுவாகனம் போன்றவற்றுக்கு திருஷ்டி கழித்து தெருவில் உடைக்கவும், கோர உருவத்துடன் வீட்டு முகப்பில் பிறர் கண்படும் இடத்தில் அமர்ந்தும் தொங்கியும் கண்ணேறு விரட்டவுமாக சாம்பல் பூசணிக்கு சந்தையில் ஏக மவுசு. மேலை நாடுகளிலோ ஹாலோவின் சமயங்களில் பறங்கிக்காய்தான் ஹீரோ. இதற்கென்றே பிரத்தியேகமாக பறங்கிக்காய்கள் விளைவிக்கப்பட்டு முற்றிய பழங்கள் சந்தைக்கு வருகின்றன. பழத்தைக் குடைந்து உள்ளிருக்கும் சதைப்பற்றை நீக்கிவிட்டு கடினமான புறத்தோலில் கண் மூக்கு வாய் வடிவங்களை செத்தியெடுத்து துளைகளாக்கி உள்ளே விளக்கெரியச் செய்வது மரபு. தீய ஆவிகளை முக்கியமாக ஜேக்கின் ஆவியை விரட்டுவதற்காக ஏற்றப்படும் இந்தப் பறங்கி விளக்கின் பெயர் Jack O’ lantern. இம்மரபின் பின்னால் பெரிய கதையே இருக்கிறது.

ஹாலோவீன் பறங்கிக்காய்க்குப் போட்டியாக நம்ம பறங்கிக்காய்

தற்காலத்தில் ஹாலோவின் கொண்டாட்டம் அமெரிக்காவில் படுபிரசித்தம் என்றாலும் கதை ஆரம்பிப்பதென்னவோ அயர்லாந்தில். பல வருடங்களுக்கு முன்பு Stingy Jack என்றொருவன் அயர்லாந்தில் வாழ்ந்துவந்தான். பெயரே சொல்லிவிடுமே, அவன் எப்படிப்பட்டவன் என்று. ஆம். அவனொரு மகா கஞ்சன், அது மட்டுமல்ல, அடுத்தவர்களை தந்திரமாய் ஏமாற்றியும் துன்புறுத்தியும் அதில் இன்பம் காண்பவன். பெற்றோர், உற்றார், நண்பர்கள் என அனைவரும் அவனுடைய ஏமாற்றுவித்தைகளுக்குப் பலியானார்கள். சாத்தானும் தப்பவில்லை. ஒருமுறை சாத்தானிடம் நைச்சியமாய்ப் பேசி ஆப்பிள் மரமொன்றில் ஏறவைத்தான். ஏறியதும் மரத்தைச் சுற்றி சிலுவைகளை வைத்து சாத்தான் இறங்கமுடியாதபடி செய்துவிட்டான். சாத்தான் கெஞ்சியது. ஜேக் ஒரு நிபந்தனை விதித்தான். தான் இறந்த பிறகு தன் ஆன்மாவை நரகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற வாக்குறுதி தந்தால்தான் சிலுவைகளை அகற்றுவேன் என்றான். சாத்தானும் வாக்குறுதியளித்தது. வேறுவழி?

சாத்தான் என்றாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியது. ஜேக் இறந்ததும் அவன் ஆன்மாவைத் தீண்டவில்லை. ஜேக்கின் ஆன்மா மிகவும் மகிழ்ச்சியோடு சொர்க்கத்தின் கதவைத் தட்டியது. குரூரம், கஞ்சத்தனம், அகம்பாவம், அற்பகுணம், அடுத்தவரைக் கெடுத்தல் என தீயகுணங்கள் நிறைந்த அவனுடைய ஆன்மா சொர்க்கத்தில் புகத் தகுதியற்றது என்று அறிந்த திருத்தூதர்கள் சொர்க்கத்தில் அனுமதிக்கவில்லை. நரகத்துக்குப் போகலாம் என்றாலோ வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு சாத்தான் சம்மதிக்கவில்லை. திரிசங்குவின் நிலை போல ஆயிற்று ஜேக்கின் ஆன்மாவின் நிலையும். திரிசங்குக்காவது அவன் செய்த ஒரே ஒரு நன்மையின் பொருட்டு, தனியாக ஒரு சொர்க்கத்தை நிர்மாணிக்க விசுவாமித்திரர் இருந்தார். ஜேக்குக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை.

ஜேக்கின் குறுக்குபுத்தி இப்போதும் வேலை செய்தது. இந்த இருளில் என்னால் எப்படி திரும்பிப்போகமுடியும்? அதனால் என்னை உள்ளே அனுமதி என்று சாத்தானிடம் கேட்டான். சாத்தான் புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்தது. நரகத்தில் எரிந்துகொண்டிருக்கும் தீயிலிருந்து ஒரு கங்கை எடுத்து அவனிடம் கொடுத்து இதன் வெளிச்சத்தில் திரும்பிப்போ என்றது. நெருப்புக்கங்கை எங்கே வைப்பது? ஜேக்குக்கு மிகவும் பிடித்த காய் டர்னிப் என்பதால் எப்போதும் தன்வசம் வைத்திருப்பான். இறந்தபிறகும் அவன் ஆன்மா அதைத் தன்னுடனேயே கொண்டுவந்திருந்தது. அதைக் குடைந்து உள்ளே அந்த நெருப்புக்கங்கை வைத்து லாந்தர் விளக்கு போல கையில் தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்தான். அதுதான் இன்றைக்கு ஹாலோவின் தினத்தில் பறங்கிக்காய்க்கு கண் மூக்கு வாய் ஆகியவற்றை செதுக்கி உள்ளே விளக்கேற்றும் மரபுக்கு வழி வகுத்தது என்றொரு செவிவழிக்கதை உலவுகிறது.

அது சரி, ஜேக் விளக்கேற்றியது டர்னிப்பில்தானே? எப்போது பறங்கிக்காய்க்கு அது மாறியது? அயர்லாந்தில் அப்போது பறங்கிக்காய் என்ற ஒன்று அறிமுகமாகாத சமயம். மக்கள் டர்னிப், உருளைக்கிழங்கு, பீட்ரூட் என்று பல காய்களிலும் குடைந்து விளக்கேற்றியிருக்கிறார்கள். பின்னாளில்  பறங்கிக்காய் அறிமுகமானபோது, குடைவதற்கு ஏற்றதாகவும், பெரியதாகவும் இருந்ததால் டர்னிப்பின் இடத்தை பறங்கிக்காய் நிரந்தரமாகப் பறித்துக்கொண்டது.

சமைப்பதற்கு முன் கொஞ்சம் விளையாட்டு 

பூசணி, பறங்கி என்றாலே திருஷ்டி கழிக்கவும், தீய ஆவியை ஓட்டவும் மட்டும்தானா? இல்லையில்லை. தேவதைக் கதைகளுள் ஒன்றான சிண்ட்ரெல்லாவில் தேவதை அழகுரதமாக மாற்றுவது பறங்கிக்காயைத்தானே? அது மட்டுமல்ல, Thanksgiving day எனப்படும் நன்றி தெரிவிக்கும் தினத்தன்று, அறுவடைக்காலத்தின் அடையாளமாய் விருந்தில் கட்டாயம் இடம்பெறும் சிறப்பும் பறங்கிக்காய்க்கு உண்டே. நம்முடைய அறுவடைத்திருநாளான பொங்கல் தினத்தன்றும் பறங்கிக்காய் இல்லாத பொங்கல்கறி உண்டா என்ன?   

சரி, இப்போது நாம் தோட்டத்துக்கு வருவோம். பறங்கிக்கொடியொன்று தானாய் முளைத்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? உள்ளங்கை அளவுக்கு வட்டமாய் வெள்ளைக்கோடுகளுடன் இரண்டு இலைகள் விட்டு வளர்ந்ததை முதலில்  களைச்செடி என்று நினைத்துப் பிடுங்கிப்போட இருந்தேன். அப்புறம் ஏதோ பொறி தட்டவே, சரி, இன்னும் கொஞ்சம் வளரட்டும், பிறகு முடிவு செய்யலாம் என்று விட்டுவிட்டேன். இன்னும் கொஞ்சம் இலைகள் விட்டு கொடியாக படர ஆரம்பித்த பிறகு பறங்கிதான் என்று தெரிந்துவிட்டது. முதல் பூ (ஆண்) அதை உறுதிப்படுத்தியும் விட்டது. மேற்கொண்டு தேடியதில் பறங்கிக்கொடி வளர்ப்பும் காய்ப்பும் பற்றிய சுவாரசியத் தகவல்கள் கிடைத்தன.

பறங்கிக்கொடியில் ஆண்பூ, பெண்பூ தனித்தனியாகப் பூக்கிறது. மார்கழிக் கோலங்களுக்கு நடுவில் சாணிப்பிள்ளையாரில் சொருகி வைக்கப்படுபவை பறங்கி மற்றும் பூசணியின் ஆண்பூக்களே. ஒரே நிறத்தில் ஒரே அளவில் ஒரே வடிவத்தில் பூக்கும் ஆண் பூ, பெண் பூக்களை எப்படி கண்டுபிடிப்பது? ரொம்ப சுலபம். மொட்டு வெளிவரும்போதே அது ஆணா பெண்ணா என்பது தெரிந்துவிடும். 

பறங்கியின் ஆண் பூ, பெண் பூ மொட்டுகள்

ஆண் பூக்கள் காம்பில் நேரடியாகப் பூக்கும். பெண் பூக்களுடைய காம்பில் சின்னதாய் கோலி குண்டு அளவில் காய் இருக்கும். ஆண் பூவில் தேனும் மகரந்தத்தாதும் இருக்கும். பெண் பூவில் தேன் மட்டுமே இருக்கும்.


தேனும் மகரந்தமும் கொண்ட ஆண் பூ


மகரந்தம் அற்ற பெண் பூ

தேனீக்கள் ஆண் பூவில் தேனெடுக்கும்போது மகரந்தத்தூள்கள் அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ளும். பிறகு அவை பெண்பூவில் தேனெடுக்க வரும்போது சூலகமுடிகளில் மகரந்தத்தூள் ஒட்டிக்கொள்ளும். மகரந்தச்சேர்க்கை நிகழும். இதுதான் இயற்கை.


 ஆண் பறங்கிப்பூவிலிருந்து மகரந்தம் பூசி வெளிவந்திருக்கும் தேனீ

அனுபவசாலிகளின் பார்வையும் பாடமும் வேறாக உள்ளது. வீட்டுத்தோட்டங்களில் பூக்கும் மெலான் வகைப் பூக்களில் இயற்கை முறையில் அதாவது தேனீக்களின் மூலம் மகரந்தச்சேர்க்கை பெரும்பாலும் நடைபெறுவதில்லையாம். அப்படியே நடைபெற்றாலும் தோல்வியில்தான் முடிகிறதாம். அதாவது விளைச்சல் வெகு சொற்பமாம். hand pollination முறையால் 100% பலனைப் பெறமுடியும் என்று புத்தகங்களிலும் இணையப்பக்கங்களிலும் வலியுறுத்துகிறார்கள். எப்படி என்பதையும் செயல்முறை விளக்கமாக படம் போட்டும் காணொளிகள் மூலமும் விளக்குகிறார்கள்.

பறங்கியின் ஆண்  பெண் பூக்கள்

மகரந்தச்சேர்க்கை நிகழ்த்த அதிகாலையில் தேனீக்களை முந்திக்கொண்டு நாம் செயல்படவேண்டும். ஆண் பூ பெண் பூ இரண்டும் அன்று மலர்ந்தவையாக இருக்கவேண்டும். ஆண்பூவைப் பறித்தெடுத்து ஒரு மெல்லிய தூரிகை கொண்டு மகரந்தத்தூள்களைத் தொட்டு பெண்பூவின் மையப்பகுதியில் உள்ள சூலகமுடிகளில் நன்கு படுமாறு தடவவேண்டும். தூரிகை உதவியின்றி நேரடியாகவும் மகரந்தத்தை சூலகமுடிகளில் ஒட்டச்செய்யலாம். மகரந்தத்தூள்கள் ஒட்டிக்கொண்டவுடன் பெண்பூவின் ஐந்து இதழ்களையும் குவித்து பொட்டலம்போல நூலால் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் தேனீக்கள் வந்து தேன் எடுக்கும்போது ஏற்கனவே பூவில் நாம் ஒட்டவைத்துள்ள மகரந்தத்தூள்கள் அவற்றின் உடலில் ஒட்டிக்கொண்டு போய்விடுமாம். எவ்வளவு முன்னெச்சரிக்கை!

நமக்குதான் பறங்கி வளர்ப்பு முதல் அனுபவமாச்சே. அனுபவசாலிகள் சொன்னதை செய்வோம் என்று பார்த்தால் அது இருந்தால் இது இல்லே, இது இருந்தால் அது இல்லே என்பது போல, ஆண் பூ பூக்கிற நாளில் பெண் பூ பூப்பதில்லை, பெண் பூ பூக்கிற நாளில் ஆண் பூ பூப்பதில்லை. ஒரு நாள் காலையில் பார்த்தால் அதிசயம் போல இரண்டு ஆண் பூக்களும் இரண்டு பெண் பூக்களும் பூத்திருந்தன. ஆஹா.. என்னே அதிர்ஷ்டம் என்று சொல்லி இரு சோடிகளுக்கும் முறைப்படி திருமணம் செய்வித்து தாலியும் (அதான் நூலும்) கட்டிவைத்துவிட்டு வந்துவிட்டேன். 

செயற்கை முறை மகரந்தச்சேர்க்கை

ஒரு வாரத்தில் காய்பிடித்து பெருக்க ஆரம்பித்துவிட்டது. வெற்றி வெற்றி என்று உள்ளுக்குள் குதியாட்டம் போட்டது மனம். இரண்டு காய்களிலேயே திருப்தியுற்றதால் அதற்குப் பிறகு பூத்த ஏராளமான பெண் பூக்கள் பற்றி கவலைப்படவே இல்லை. நம் வீட்டுக்கு இரண்டே அதிகபட்சம். அதனால் மீதப் பூக்கள் காயானால் என்ன காயாகாமல் போனால் என்ன என்று அலட்சியமாக இருந்துவிட்டேன்.

என்ன ஆச்சர்யம். அதன் பிறகு பூக்கும் ஒவ்வொரு பெண் பூவும் காயானது. கவனித்தபோதுதான் தெரிந்தது எல்லாம் தேனீக்களின் கைங்கர்யம் என்பது. அடப்பாவிகளா.. இயற்கையாகவே தேனீக்களின் தயவால் பூ காயாகிறதே.. இதற்கெதற்கு செயற்கையாய் இத்தனை சிரமப்படவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இயற்கைக்கு யார் உதவியும் தேவையில்லை. அது தன்னைத்தானே வாழ்வித்துக்கொள்ளும். இது என் அனுபவத்தில் கற்ற அடிப்படைப்பாடம்.  

காய்த்துத்தள்ளும் பறங்கிக்காய்கள்

பறங்கிக்காய்கள் ஒவ்வொன்றும் மூன்று முதல் ஐந்து கிலோ வரை எடை. இதுவரையிலும் நூறு கிலோ அளவுக்குக் காய்த்திருக்கும். இத்தனைக் காய்களை என்ன செய்வது? அக்கம்பக்கத்து வீடுகள், தோழியின் வீடு போக கணவரின் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் இந்திய நண்பர்கள் என பலருக்கும் கொடுத்தேன். முதல் ரவுண்டு முடிந்து அடுத்த ரவுண்டும் கொடுத்துவிட்டேன். புளிக்குழம்பு, சாம்பார், வறுவல், கூட்டு, சூப், அல்வா என அடுக்களையில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். 

பிஞ்சும் காயும் பழமுமாக..

மூன்று மாதங்களாக கொடி போகும் இடமெல்லாம் முட்டையிட்டுக்கொண்டே போவது போல குண்டு குண்டாய்க் காய்த்துக் கொண்டே போகும் பறங்கியை இப்போதும் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் காரணமான தேனீக்களை நன்றியோடு பாராட்டுகிறேன்.

வெட்ட வெட்ட தழைத்துக் கிளைத்துப் படர்ந்து தோட்டத்தையே சுற்றி வளைத்து சொந்தம் கொண்டாடும் என் வீட்டுப் பறங்கிக்கொடியைப் பார்க்கும்போதெல்லாம் நாட்டை சுற்றி வளைத்து சொந்தம் கொண்டாடிய வெள்ளையரை பறங்கியர் என்றது எவ்வளவு பொருத்தம் என்று தோன்றுகிறது


25 June 2019

நிழலோடு நித்தம் சமர்





(1)
சுவர்தொட்டுத் திரும்பும்
குழந்தையைத் துரத்துகிறது நிழல்
ஓடிப்பிடித்து விளையாட்டு.

(2)   
எந்தப்பக்கம் விழுவது
திகைப்பில் நிழல்
எல்லாப்பக்கத்திலிருந்தும் ஒளி.

(3)
பிடித்தபிடி விடவில்லை
நிழலின் கரத்தை நிஜம்
இருள்பயம்.

(4)
நடந்து நடந்து
ஆயாசமானது நிழல்
அசையாதிருந்தது பாறை.

(5)   
இருள்கவியத் தொடங்கியதும்
சட்டெனத் தழுவிக்கொள்கின்றன
நிழல்கள் ஒன்றையொன்று.

(6)
நிஜத்தின் பின்னே
ஒளியும் நிழற்குழந்தை
ஒளிக்கூச்சமாம்.

(7)
வெயில் சுமந்து சுமந்து
வெளுத்துப்போனது குடை.
வெளுக்கவில்லை நிழல்.

(8)
இருளில் மடிந்து
ஒளியில் உயிர்க்கும்
நிழலோடு நித்தம் சமர்.

(9)
விரட்டினாலும் விலகாது
கால்பற்றி இறைஞ்சுகிறது
போக்கிடமற்ற நிழல்.

(10)
ஒளியில் ஒளியும் நிழல்
நிழலில் ஒளியும் நிழல்
ஒளியில் ஒளியும் ஒளி

******

21 June 2019

பூக்கள் அறிவோம் (86 - 90)


86. பாங்ஸியா 
Banksia 




ஆஸ்திரேலியாவின் தனித்துவமிக்க தாவரவினமான பாங்ஸியாவுக்கு ஆஸ்திரேலியத் தோட்டங்களில் தனியிடம் உண்டு. இந்த பாங்ஸியாவுக்கு ஆஸ்திரேலியாவில் சுமார் 60 மில்லியன் ஆண்டுகால வரலாறு உள்ளது என்றால் சும்மாவாபாட்டில் பிரஷ் பூக்களைப் போலவே பாங்ஸியாவிலும் பூந்தண்டைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான.. ஆயிரக்கணக்கான குட்டிக்குட்டிப் பூக்கள் மலர்கின்றன. சிலவற்றில் ஆறாயிரம் பூக்கள் வரை மலரக்கூடும். 1770-ல் முதன் முதலாக இத்தாவரத்தின் மாதிரிகளைச் சேகரித்த ஐரோப்பிய இயற்கை ஆர்வலரும் தாவரவியல் வல்லுநருமான Sir Joseph Banks பெயரால் இதற்கு Banksia என்று பெயரிடப்பட்டுள்ளது.





பாங்ஸியாவில் சுமார் 170 வகை உள்ளன. ஆரஞ்சு, மஞ்சள், சிவப்புபிங்க்கத்தரிப்பூ வண்ணங்களில் வசீகரிக்கும் பூக்கள் அலங்காரப் பூங்கொத்துகளிலும் உலர்மலர் அலங்காரங்களிலும் இடம்பெறுகின்றன. 


பாங்ஸியா பூவும் விதைக்கூம்பும்

இவற்றின் பூக்களில் மகரந்தச்சேர்க்கை பறவைகள்வௌவால்போசம்எலி போன்ற சற்றுப் பெரிய தேனுண்ணிகளால் நடைபெறுகிறது. அவை பூவில் அமர்ந்து தேனுண்ண ஏதுவாக இதன் பூந்தண்டு உறுதியாகவும் அழுத்தமாகவும் இருக்கும். காக்கட்டூ பறவைகளுக்கு பாங்ஸியா விதைகள் பெருவிருப்பம். விதைகள் மட்டுமல்லாது விதைக்கூம்பில் விதைகளுக்கிடையில் ஒளிந்திருக்கும் புழு பூச்சிகளும் கொசுறாக கிடைக்கிறதே.




பூக்கும் பாங்ஸியா பூக்கள் எல்லாமே விதையாவதில்லை. விதைகள் எல்லாமே வெடித்து முளைப்பதில்லை. கடினமான விதையோடுகளைத் தூண்டி வெடிக்கச் செய்வதற்கு சில சமயங்களில் காட்டுத்தீயின் உதவியும் தேவைப்படுகிறது. செயற்கையாக வெடிக்கச் செய்ய 120°C வெப்பத்தில் சூட்டடுப்பில் (oven)  சுமார் ஒரு மணிநேரம் வைத்து வெப்பமுண்டாக்கினால் மட்டுமே சாத்தியம்.




பூர்வகுடி மக்கள் இதன் பூந்தேனை நேரடியாகவும்பூக்களைத் தண்ணீரில் ஊறவைத்து சுவைநீராக்கியும் அருந்தியுள்ளனர். சில வகை பாங்ஸியா பூக்களை தண்ணீர் வடிகட்டியாகவும்விதைக்கூம்புகளை உளி போல் செதுக்கி கூடைமுடையும் உபகரணமாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஒரு வகை பாங்ஸியா மரம் படகு மற்றும் படகின் உதிரிப் பாகங்களைத்  தயாரிக்கப் பயன்படுகிறது. விதைக்கூம்பு குறுக்குவாக்கில் மெல்லிய வட்டுகளாக வெட்டப்பட்டு coasters –ஆகவும்பல அலங்கார வேலைப்பாடுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 



ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான சிறார் நூலான Snugglepot and Cuddlepie தொடரின் முக்கிய வில்லன்கள் யார் தெரியுமா? பாங்ஸியாதான். Snugglepot, cuddlepie  இருவரும் Gum babies எனப்படும் குழந்தைகள். குழந்தைகள் என்றால் சாதா குழந்தைகள் அல்ல.. குட்டியிலும் குட்டிக் குழந்தைகள். எவ்வளவு குட்டி என்றால் விரல் நுனிக்குக்கூட பொருந்தாத குட்டிக் குமிழ் வடிவ யூகலிப்டஸ் விதைகள்தான் அக்குழந்தைகள். இவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டுபார்வைக்குக் கரடுமுரடான பாங்ஸியா விதைக்கூம்புகளை Big bad banksia men என வில்லனாக சித்தரித்து காட்டில் அவர்கள் படும் பாட்டையும் சாகசங்களையும் விவரிக்கும் கதைத்தொடர்களாக எழுதிக்குவித்துள்ளார் ஆஸ்திரேலிய எழுத்தாளர் திருமதி செசிலியா மே கிப்ஸ் (1877 – 1969).

87. தங்க வாட்டில் 

Golden wattle (Acacia pycnantha)

Golden wattle

ஆஸ்திரேலியாவின் மாண்புடன்… மண்ணின் மரபுடன் தொடர்புடையவை வாட்டில் மலர்கள். ஆஸ்திரேலிய அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள விலங்கு கங்காரு என்பதும் பறவை ஈமு என்பதும் பலருக்கும் தெரியும். அதிலிருக்கும் மரம் வாட்டில் மரம் என்பது பலரும் அறியாத ஒன்று. அகாசியா (Acacia) வகை மரங்கள்தான் ஆஸ்திரேலியாவில் வாட்டில் (wattle) எனப்படுகின்றன. வாட்டில் மரங்களில் அநேக வகை இருந்தாலும்… மாநிலத்துக்கு மாநிலம் மாநில மலர்கள் வேறுபட்டாலும்.. Golden wattle எனப்படுகிற Acacia pycnantha  மலர்தான் ஆஸ்திரேலியாவின் தேசிய மலரென்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
 
Acacia pycnantha

1954-இல் ஆஸ்திரேலியாவுக்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசிக்கு ஆஸ்திரேலிய அரசு மற்றும் மக்கள் சார்பில் பரிசளிக்கப்பட்ட வைரப்பதக்கம் வாட்டில் மலர்க்கொத்து வடிவிலானது. பூத்துக்குலுங்கும் காலத்தில் கொத்துக்கொத்தாய்… குட்டிக்குட்டி தங்கப் பந்துகளைத் தொங்கவிட்டாற்போல வாட்டில் மரங்கள் அழகுற விளங்கும். இதன் இலைகள் கருக்கரிவாள் வடிவில் தொய்ந்த நிலையில் காணப்படும். Pycnantha என்பதற்கு கிரேக்க மொழியில் அடர்த்தியான பூக்கள் என்று பொருளாம். ஆஸ்திரேலிய விளையாட்டு வீர்ர்களின் சீருடையான பச்சை மஞ்சள் வண்ணம் மலர்ந்துகுலுங்கும் தங்க வாட்டில் மரத்தின் வண்ணமே.. ஆஸ்திரேலியாவில் வசந்தகாலத்தின் முதல்நாளை இனிதே வரவேற்கும் முகமாக வருடந்தோறும் செப்டம்பர் முதல்நாள் வாட்டில் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Acacia baileyana 

தோரா வில்காக்ஸ் எழுதிய ‘The wattle tree’ என்னும் ஆங்கிலக்கவிதை பூத்துக்குலுங்கும் வாட்டில் மரத்தழகை வர்ணிக்கிறது. அதன் தமிழாக்கத்தை இங்கே காணலாம்.  


Acacia melanoxylon

மஞ்சள் வாட்டில் மலர்கள் அளவுக்கு வெள்ளை வாட்டில் மலர்களுக்கு வரவேற்பில்லை என்றாலும் வசந்தகாலத்தில் மரம் முழுக்க பஞ்சுப் பொதியால் போர்த்தியது போல காண்போரைக் கவர்வதில் குறை வைப்பதில்லை. 

88. மகடாமியா  

macadamia 




மெசபடோமியா மாதிரி இதென்ன மகடாமியா என்கிறீர்களா? பாதாம்முந்திரிபிஸ்தாவால்நட் போல இதுவும் ஒரு பருப்புதான். ஆனால் எல்லாவற்றையும் விட விலை அதிகம். பேலியோ உணவுமுறையில் உள்ளவர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். அதிக அளவு புரோட்டீனும்நல்ல கொழுப்பும் உள்ள மகடாமியாவை உலக அளவில் அதிகம் பயன்படுத்துபவர்கள் அமெரிக்கர்களே. அதனாலேயே அமெரிக்காவில் வருடந்தோறும் செப்டம்பர் 4-ஆம் நாள் தேசிய மகடாமியா நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில் இதன் அழகிய மலர்களுக்காகவே அலங்கார மரமாக பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு மகடமியா மரம் காய்ப்பதற்கு ஐந்தாண்டுகள் ஆகும். ஆனால் காய்க்க ஆரம்பித்துவிட்டால் நூறு வருடங்கள் தாண்டியும் காய்த்துக்கொண்டிருக்கும்.



ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இம்மரத்தின் பலனை ஆஸ்திரேலியர் உணருமுன்னரே அமெரிக்கர் உணர்ந்துகொண்டனர். 1900-களின் ஆரம்பத்தில் அமெரிக்க தாவரவியலாளர்கள் சிலர் மகடமியா மரங்களின் விதைகளை எடுத்துச்சென்று ஹவாய் தீவில் வளர்க்கத் தொடங்கினர். காரணம் இரண்டு. ஒன்று ஹவாய் தீவின் கரும்புத்தோட்டங்களை பலத்தக் காற்றுவீச்சிலிருந்து காப்பாற்ற மகடமியா மரங்கள் தடுப்பணைகளாக உதவின. இரண்டாவது அம்மரங்களிலிருந்து ஒட்டுரகம் மற்றும் வீரிய ரகங்களை உருவாக்கி வியாபார ரீதியில் லாபம் ஈட்டமுடிந்தது. ஹவாய் தீவின் இன்றைய மகடமியா பருப்புகளின் உற்பத்தி சுமார் 22,000 டன்களுக்கு மேல்.



இன்றுவரை உலகளவில் அதிகமான மகடாமியா பருப்புகளை விளைவிக்கும் நாடாக தென்னாப்பிரிக்கா விளங்குகிறது. 2018-ல் 54,000 டன் மகடாமியா பருப்புகளை உற்பத்தி செய்து ஆஸ்திரேலியாவின் 40,000 டன் அளவை விஞ்சிநிற்கிறது. மற்றெல்லா பருப்புகளை விடவும் கடினமான ஓடுடைய மகடாமியா கொட்டையை சுத்தியல் வைத்து உடைத்துதான் உள்ளிருக்கும் பருப்பை எடுக்க முடியும். மகடாமியா கொட்டைகளை அறுவடை செய்தல் மிக எளிது. நன்கு முதிர்ந்த மகடாமியா காய்கள் மரத்திலிருந்து தாமாகவே உதிர்ந்துவிடும். மரத்தடியில் கொட்டிக்கிடக்கும் காய்களை முன்பெல்லாம் கையால் பொறுக்கி சேகரித்தார்கள். இப்போது இதற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. சேகரிக்கப்பட்ட கொட்டைகள் இயந்திரங்களின் மூலம் உடைக்கப்பட்டு பருப்புகளாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன.


மொத்தமுள்ள ஏழு மகடாமியா வகையுள் இரண்டு மட்டுமே உண்ணத்தகுந்த கொட்டைகளை உற்பத்தி செய்கின்றன. மற்றவை சயனைட் நச்சுள்ளவை. நாம் உண்ணக்கூடிய மகடாமியா பருப்புகள் கூட நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு நச்சாகும். எனவே வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து இவற்றை விலக்கிவைத்தல் அவசியம். மகடாமியா பருப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவு உபயோகத்துக்கு மட்டுமல்லாது அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.



ஆஸ்திரேலியாவின் பிரசித்த விஞ்ஞானி Dr. John Macadam அவர்களை சிறப்பிக்கும் வகையில் இம்மரத்துக்கு Macadamia என்று பெயரிடப்பட்டுள்ளது. பூர்வகுடி மக்கள் இதற்கிட்ட பெயர்கள் கிண்டல் கிண்டல் (கிண்டல் இல்லை, உண்மைப் பெயரே இதுதான்), பூம்பெரா, ஜின்டிலி, கிண்டுல், பாபல்.


89. நார்ஃபோக் தீவு செம்பருத்தி 
Norfolk island hibiscus (Lagunaria patersonii)




ஆஸ்திரேலியாவைச் சார்ந்த நார்ஃபோக் தீவைப் (Norfolk island) பூர்வீகமாகக் கொண்டிருப்பதாலும் பூக்கள் செம்பருத்தியைப் போல இருப்பதாலும் இதற்கு நார்ஃபோக் தீவு செம்பருத்தி (Norfolk island hibiscus) என்று பெயர். நிஜ செம்பருத்திப்பூக்கள் இதனிலும் வேறுபட்டாலும் இரண்டுமே malvaceae என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. பிரமிட் வடிவில் வளர்வதால் பிரமிட் மரம் என்றும் மரத்தின் உறுதித்தன்மையால் குவீன்ஸ்லாந்து வெள்ளை ஓக் (Quennsland white oak) என்றும் குறிப்பிடப்பட்டாலும், அதிகம் அறியப்படுவது அரிப்புக் காய் மரம் (itchy bomb tree, cow itch tree) என்ற அவப்பெயரால்தான். 



முற்றிய காயின் உள்ளே விதைகளைப் பொத்திவைத்திருக்கும் முசுமுசுவென்ற பஞ்சு தோலில் பட்டதும் அரிப்பும் எரிச்சலும் தருவதால் இந்தக் காரணப்பெயர். காய்களைத் தொட்டாலே அரிப்பெடுக்கும் எனில் தின்றால்அதோகதிதான். மேலும் முற்றிய விதைகள் வெடித்து சுணப்பு காற்றில் பரவுவதால் மரம் உள்ள பகுதியில் நடந்தாலே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சுவாசப் பிரச்சனைகளும், அலர்ஜிகளும் உருவாகின்றனவாம். 

ஆஸ்பெஸ்டாஸினால் ஏற்படும் பாதிப்புக்கு சற்றும் குறைந்ததில்லை இந்தக் காய்களினால் உண்டாகும் பாதிப்பு என்கிறது ஒரு தகவல். மேலும் நுண்கண்ணாடியிழை போன்ற சுணப்பு உடலில் பதிந்துவிட்டால் எரிச்சலும் வலியும் ஏற்படுவதோடு அவற்றை சாமணம் (tweezers) கொண்டுதான் நீக்கமுடியுமாம். கண்ணில் விழுந்தாலோ பார்வை பறிபோகவும் வாய்ப்புண்டு.



இந்த விவரம் எதுவும் தெரியாமல் ஒருகாலத்தில் சிட்னியின் பல பகுதிகளில் தெருவுக்குத் தெரு இம்மரங்களை அழகுக்காக வளர்த்துவிட்டு, இப்போது தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரவும், வேறு வழியில்லாமல் அவற்றை அகற்றிவிட்டு வேறு புதிய மரவகைகளை நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில கவுன்சில்கள் மரங்களை அகற்ற மறுப்பு தெரிவிப்பதால் அப்பகுதிவாழ் மக்கள் தொடர்மனுக்கள், எதிர்ப்பு முழக்கங்கள், ஊர்வலங்கள் என போராடிவருகின்றனர்.

இதன் அறிவியல் பெயர் Lagunaria patersonii என்பதாகும். 15-ஆம் நூற்றாண்டின் ஸ்பானிய இயற்பியலாளரும் தாவரவியலாளரும், போப் இரண்டாம் ஜூலியஸ் மற்றும் ஸ்பெயினின் பேரரசர்கள் ஐந்தாம் சார்லஸ், இரண்டாம் பிலிப்ஸ் போன்றோர்க்கு மருத்துவருமாயிருந்த Andrés Laguna –ஐ சிறப்பிக்கும் வண்ணம் lagunaria என்ற பேரினப்பெயரும் 18-ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய இயற்கை ஆய்வாளர் William Patterson –ஐ சிறப்பிக்கும் வண்ணம் patersonia என்ற சிற்றினப்பெயரும் இடப்பட்டுள்ளது.


90. குடைமரம்
umbrella tree (schefflera actinophylla)

 

விசிறி போன்றமைந்த சுமார் 40 செ.மீ. நீளமுள்ள கூட்டிலைகளின் அழகுக்காகவும் குடைக்காம்புகள் போல் எட்டுத்திக்கும் விரிந்த மலர்க்காம்புகளின் அழகுக்காகவும் வீடுகளில் விரும்பி வளர்க்கப்படும் பசுமை மாறா தாவரம்தான் Umbrella tree எனப்படும் குடைமரம். இதன் தாயகம் ஆஸ்திரேலியா. சுமார் 15-20 மீட்டர் உயரம் வளரக்கூடிய இம்மரத்திற்கு Australia umbrella tree, Queensland umbrella tree, octopus tree என்னும் காரணப்பெயர்களும் உண்டு. வெயிலோ நிழலோ எங்கும் வளரும் இயல்பு, வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மை ஆகியவை இதன் சிறப்பியல்புகள்.

இதன் பூக்கள் மரத்தின் உச்சிக்கிளைகளில் சற்று நீளமான காம்பில் மலர்ந்து காட்சியளிக்கும். மலர்க்காம்புகள் ஒவ்வொன்றும் சுமார் 60 – 80 செ.மீ. நீளமிருக்கும். ஒவ்வொரு காம்பிலும் சுமார் ஆயிரம் பூக்கள்  நெருக்கமாய் மலர்ந்திருக்கும். பழங்கள் பார்ப்பதற்கு மணிச்சட்டத்தில் கோத்திருக்கும் மணிகளைப் போல அழகுறக் காட்சியளிக்கும்.




மலர்கள் ஏராளமான தேனைக் கொண்டிருக்கும் காரணத்தால் தேனீக்களும், பூந்தேன் உண்ணும் பறவைகளும், எலிக்கங்காரு, பேடிமெலான் போன்ற விலங்கினங்களும், பழந்தின்னி வௌவால்களும் இம்மரத்தை நாடி வந்த வண்ணமிருக்கும். பென்னட் மரக்கங்காருவுக்கு இம்மரத்தின் இலைகள் மிக விருப்பமான உணவாகும். ஆனால் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கோ விஷமாகும்.



குடைமரத்தின் அறிவியல் பெயர் schefflera actinophylla என்பதாகும். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து நாட்டைச் சேர்ந்த தாவரவியல் வல்லுநர் Johann Peter Ernst von Scheffler அவர்களை சிறப்பிக்கும் விதமாக இப்பேரினத்துக்கு schefflera என்று பெயரிடப்பட்டுள்ளது. Actinophylla என்றால் லத்தீனில் கதிர் போல் விரிந்த இலைகள்என்று பொருளாம்.

schefflera actinophylla fruits

குடைமரம் ஆரம்பகாலத்தில் அதன் அழகுக்காக உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டாலும்,  அந்நிய நாடுகளில் மட்டுமல்லாது, சொந்த நாட்டிலேயே தற்போது இதன் மீதான பயமும் எச்சரிக்கையுணர்வும் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. இருக்காதா பின்னே? நடைபாதைகளில் விரிசலுண்டாக்குவது, தரைக்குள் புதைக்கப்பட்டுள்ள தண்ணீர்க்குழாய்களை சேதப்படுத்துவது, கட்டடங்களின் அஸ்திவாரங்களை ஆட்டங்காணவைப்பது என இதன் வேர்கள் முதலுக்கே மோசம் விளைவிப்பதால், இந்த அழகிய குடைமரம் ஆக்கிரமிப்புத் தாவர வரிசையில் இடம்பெற்றுவிட்டது.

(தொடரும்)