என் ஊர் பற்றியத் தொடர்பதிவுக்கு எனக்கும் அழைப்பு விடுத்த
வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்
ஊர் என்று சொல்லும்போதே அதில் தொணிக்கும் பெருமிதத்தை எவராலும் உணரமுடியும். அறியா
வயதில் அதுதானே நம் உலகம்.மனம் லயித்து எழுதவேண்டும் என்பதற்காகவே ஒத்திப்போட்டுவந்த
என்னை மற்றுமொரு தொடர்பதிவுக்கு அழைத்துவிட்டார் காணாமற்போன கனவுகள் ராஜி. ஆரம்பப்
பள்ளி வாழ்க்கையின் அழகிய நினைவுகளுக்குள் நுழையுமுன் ஊருக்குள் நுழையவேண்டாமா? நுழைந்துவிட்டதோடு, உங்களனைவரையும்
வரவேற்கிறேன்.
வாருங்கள். திருச்சி மாநகரம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.
திருச்சி மாநகரத்தில் பிறந்த பல பதிவர்களின் பார்வையில் திருச்சியின்
பெருமைகளையும் சிறப்புகளையும் முன்பே அறிந்திருப்பீர்கள். அதிலும் வை.கோபாலகிருஷ்ணன்
சாரின் ஊரைச்சொல்லவா என்னும் இந்தப் பதிவு ஒன்றே போதும், திருச்சியின்
அத்தனைப் பெருமைகளையும் பறைசாற்ற. மிகவும் நன்றி வை.கோ. சார். அம்மாநகரத்தின்
ஒரு பகுதியாய் அமைந்த என் ஊரான பொன்மலை பற்றிச் சொல்ல விழைகிறேன்.
பொன்மலை என்றதுமே நினைவுக்கு வருவது பொன்மலை ரயில்வே பணிமனையும்
அதனைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் நேர்த்தியான பணியாளர் குடியிருப்புகளும்தான். இந்தியாவில் மிகப்பெரிய இரயில் கட்டுமாணப் பணிமனையான இது, எழுபத்தைந்து வருடப் பழமை வாய்ந்தது.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பொன்மலை ரயில்வே பணிமனை, கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களின் வாழ்க்கையை தன்னுள் அடக்கியது. டீசல் என்ஜின்களைப் பழுதுபார்ப்பதும், நீலகிரி மலைரயில்களை நிர்வகிப்பதும் முக்கியமான வேலை என்றாலும் தென்னக ரயில்வே மற்றுமல்லாது பிற பகுதி ரயில்வேக்களின் பழுது பார்ப்பகமாகவும் இது திகழ்கிறது. என் அப்பா, சித்தப்பா, அப்பாவழித் தாத்தா, அம்மாவழித்தாத்தா, தாய்மாமாக்கள், இவர்கள் அல்லாது பெரும்பாலான உறவினர்கள் இந்தப் பணிமனையில் பணிபுரிந்ததால் என்னவோ இரயில்வே நிர்வாகமே சொந்தம்போல் ஒரு உணர்வு.
புகைவண்டிப் பயணம் இலவசம் என்பதால் அப்போதெல்லாம் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில்தான். பேருந்து என்றப் பேச்சுக்கே இடம் கிடையாது. எத்தனை மணிநேரத் தாமதமானாலும் ரயில்நிலையத்திலேயே காத்திருந்து ரயிலில் அழைத்துச் செல்வதுதான் அப்பாவின் பழக்கம்.
ஆங்கில வழி மற்றும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் இரு ரயில்வே பள்ளிக்கூடங்கள், ரயில்வே ஊழியர்களுக்கான கல்யாண மண்டபம் மற்றும் சகலவசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை என ஊழியர்களின் அனைத்துத் தேவைகளையும் தனக்குள் கொண்ட பொன்மலை, பொன்மலைவாசிகளைப் பொறுத்தவரை ஒரு சிற்றுலகம்தான்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள், ஊழியர்களின் தகுதிக்கும் வருமானத்துக்கும் ஏற்றபடி A, B, C, D, E, F, G, H என்று வகைப்படுத்தப்பட்டு, படிப்படியாக வசதிப் பெருக்கம் பெறக்கூடிய அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. குடிநீர், கழிப்பறை, குளியலறை, சாக்கடைவசதி, தார்ச்சாலை என சகல வசதிகளுடனும் ஒரு மாதிரிக் குடியிருப்பென கட்டப்பட்டிருந்தவை அவை. நாற்சதுர வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் மத்தியில் உள்ள மைதானங்களில் மாலை வேளைகளில் குழந்தைகளும் பெரியவர்களும் குழுமிப் பேசி, பரஸ்பரம் நட்புறவுடன் கெழுமிய நாட்களை நினைவுகூர்கிறேன். இன்று அப்படிப் பேசுவாரும் இல்லை, தெருவிலும் மைதானத்திலும் ஓடியாடும் குழந்தைகளைக் காணமுடிவதும் இல்லை.
மக்களின் எண்ணங்களை, சிந்தனைகளை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி போன்றவை ஆக்கிரமிக்காத காலம் அது. பண்டிகைகள் யாவருக்கும் பொது. பரவசங்கள் பொது. துக்கமும் பொது. துயரங்களும் பொது.
இந்து, முஸ்லிம், கிறித்துவர் என்று அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், ஆங்கிலோ இந்தியர் என்று பலதரப்பட்ட மொழி பேசுவோரும், பல்வேறு சாதியினரும் ஒற்றுமையாய் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒருவருக்கொருவர் அன்புடனும் நட்புறவுடனும் பழகிய சூழலில் என் குழந்தைப்பருவமும் இளமைக்காலமும் கழிந்தது என்பதை நினைக்கையிலேயே பெருமிதம் நிறைகிறது.
பொன்மலைவாசிகளுக்குப் பிடித்த விளையாட்டு என்றால் பேட்மிண்டன் என்று சொல்லலாம். சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, காணும் இடங்களில் எல்லாம் பூப்பந்து விளையாடுவதை இன்றும் பார்க்கலாம். அதிலும் மரத்தால் செய்யப்பட்ட கட்டைபேட் என்று சொல்லப்படும் மட்டையால் அடித்துவிளையாடுவது பலருக்கும் விருப்பம். டேபிள் டென்னிஸ் மட்டையைப் போல் சற்றுப் பெரியதாக இருக்கும் அதை அநேகமாய்த் தாங்களாகவே தயாரிப்பர் என்பதும் ஒரு வியப்பு.
பணிமனையின் அருகிலேயே ஒரு சந்தை. ஞாயிற்றுக்கிழமை சந்தை. சட்டி பானை முதல் காய்கறி, பழம், கோழி, வாத்து (உயிருடன்தான்) இவற்றுடன் மக்கள் கூட்டத்துடன் காட்சியளிக்கும் அது திருவிழாக்கடைகளை நினைவுபடுத்தும். அங்குக் கிடைக்காதப் பொருட்களே இல்லை
என்னும் அளவுக்கு எல்லாமும் கிடைக்கும். அதிலும் சம்பள சந்தை
பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கு எல்லோருக்கும் ஒரே நாள் சம்பளம் மாதா மாதம் 3 ந்தேதி
என்பதால் அன்று மாலைச் சந்தை லாந்தர்களாலும், திரிவிளக்குகளாலும் களைகட்டியிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (மின்சாரம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்று கேள்விப்படுகிறேனே...) முன்பே
சொன்னதுபோல் அப்பா, சித்தப்பா, மாமா என்று அத்தனைப்பேரிடமிருந்தும்
தின்பண்டங்கள் கிடைக்கும் நாள் அது. இன்று நினைத்தாலும்
மகிழ்ச்சியில் புரளவைக்கும் நாட்கள் அவை.
அடிவாரத்தில் பொன்னேஸ்வரி அம்மனும் உச்சியில் முருகனும் குடிவைத்திருக்கும் மலைக்கோவில் பொன்மலையின் மற்றுமொரு சிறப்பு. திரும்பிய இடங்களில் எல்லாம் தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், கோவில்களும்
என்று எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டுத் தளங்கள் இருந்தாலும் எல்லோரும் எல்லா இடங்களுக்கும்
சென்றுவரும் வகையில் ஒற்றுமையின் இருப்பிடமாய்த் திகழ்வது குடியிருப்புவாசிகளின் மனம்.
மாதாகோவிலில் உப்பும் மிளகும் நேர்ந்துகொட்டுவதிலாகட்டும், பயந்த குழந்தைகளுக்கு
ஓதி பயந்தெளிவிக்க பள்ளிவாசல்களுக்குப் படையெடுப்பதிலாகட்டும், கோவில்
திருவிழாக்களுக்குக் நன்கொடைகள் வழங்குவதிலாகட்டும் மதங்கள் பற்றிய குறுக்கீடு இல்லாமல்
மனங்கள் மட்டுமே ஒன்றி வாழ்ந்த அதிசயம் அது.
பொழுதுபோகவும், பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது, தேவைப்படுபவற்றைத் தேவைப்படும் எந்நேரத்திலும் வாங்கவும் திருச்சி டவுன் சென்று, தெப்பக்குளத்தின் சுற்றுப்புறச் சுவர்களையொட்டி நடைபோட்ட நாட்கள், கால்வலிக்க வலிக்க, ஓடி ஓடி மலைக்கோட்டையின் மேலேறிக் கால்வலி மறந்த பால்ய நாட்கள், பேருந்தேறிவந்து, மலைக்கோட்டையை நித்தமும் தரிசித்தபடியே பட்டயப்படிப்பை முடித்த பருவநாட்கள்... திருமணமாகி சென்னை வந்தபின் தாய்வீடு பயணிக்கும் ஒவ்வொரு முறையும் திருச்சி மலைக்கோட்டையைக் கண்டவுடன் சிறு குழந்தையெனக் குதூகலித்து கணவரையும் குழந்தைகளையும் வியப்புக்குள்ளாக்கிய நாட்கள்... வாழ்வில் என்றுமே மறக்கவியலா நாட்கள்.
தோட்டம் பராமரித்தும் மரங்கள் வளர்த்தும் தம் சுற்றுப்புறங்களைப் பேணுவதில் பெரும் அக்கறை காட்டுவதில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளைத் தம் சொந்த வீடு போலத்தான் நினைத்து வாழ்வர். வீடுகளைக் காலி செய்யுமுன் தாம் வளர்த்தவற்றை வெட்டி மரங்களை மொட்டை அடித்து, அடுத்து வருபவரை அனுபவிக்க விடாமல் செய்யும் சில அற்ப மனிதர்களும் உண்டு.
காலப்போக்கில் சொந்தவீட்டுக் கனவு ஒவ்வொரு
பணியாளருக்குள்ளும் குடியேற, குடியிருப்புகள் மீதான மோகமும் குடியிருப்புகளும்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கைவிடப்பட்டுவிட்டன.
இன்று… அம்மா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் களையிழந்தும் கவனிப்பாரற்றும்
இன்னும் சில பகுதிகளில் இடிந்தும் கிடக்கும் குடியிருப்புகளைக் காணும்போது ஏதோ மனத்துக்குள்
இனம் புரியாத வலி. வசதிகள்
புகுந்துவிட்டன. மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஆனாலும்
அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….
இத்தொடர்பதிவுக்கு நான் அழைக்கவிரும்புபவர்கள்
1. தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம் ஸ்ரவாணி
2. தென்றல் சசிகலா
3. சேகர் தமிழ் தனசேகரன்
4. கிராமத்துக் கருவாச்சி கலை
5. காரஞ்சன்(சேஷ்)
தொடரும் அனைவருக்கும் என் உளம் நிறைந்த நன்றி.