5 August 2019

பூனைமூஞ்சி தக்காளி


தோட்டத்துப் பிரதாபம் - 5




இதையெல்லாம் தக்காளின்னு சொன்னால் அந்த தக்காளியே நம்பாது என்று பிள்ளைகள் கேலி செய்கிறார்கள். ஆனால் நீங்க நம்பிதான் ஆகணும். இது ஒரு வகையான நாட்டுத்தக்காளி இனம். பெயர் Costoluto Fiorentino. என்னடா இது எதுவும் ஒரு வடிவத்தில் இல்லாமல் இஷ்டத்துக்கு இருக்கேன்னு நினைக்கிறீங்களா? ஆரம்பத்தில் நானும் இவற்றின் வடிவத்தைப் பார்த்து ஏதோ நோய் தாக்கியதால்தான் இப்படி காய்க்கிறதென எண்ணி பயந்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது இது ஒரு குறைபாடு என்பது. இந்த மாதிரியான குறைபாடுள்ள தக்காளிகளுக்கு பூனைமூஞ்சி தக்காளி (cat-faced tomatoes) என்று பெயர். வேடிக்கையாக இருக்கிறதல்லவா




எனக்கென்னவோ இதற்கு நாய்மூஞ்சி தக்காளி என்று பெயர் வைக்கலாம் போலத் தோன்றுகிறது. உற்றுப்பார்த்தால் puggy மாதிரியே இல்லை? 😂

இந்தக் குறைபாடு நாட்டுத்தக்காளி இனத்தில்தான் காணப்படுமாம். அதுவும் பெரும்பாலும் முதல் விளைச்சலின்போது நேர்வதுண்டாம். சரிதான். அப்போதுதானே போதுமான அனுபவ அறிவில்லாமல் ஏகப்பட்ட ஆர்வக்கோளாறுடன் எக்கச்சக்கமாக என்னென்னவோ செய்துவைப்போம்.


வடிவான தக்காளிகள்

பூனைமூஞ்சி தக்காளிகள்

என் தோட்டத்துத் தக்காளிகளில் சரிபாதி பூனைமூஞ்சி தக்காளிகள்தான். தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்பது போல இந்த பூனைமூஞ்சி தக்காளிகளின் உருவத்தில் குறைபாடு இருந்தாலும் சுவையில் ஒரு குறையும் இல்லை. இம்மாதிரியான தக்காளிகள் சந்தைக்குப் போகும் வாய்ப்புக்கே வழியில்லை. போனாலும் நிச்சயம் செல்லுபடியாகாது. எப்போதும் உருவத்துக்குதானே மதிப்பு அதிகம்.




இந்த பூனைமூஞ்சிகள் ஏன் உருவாகின்றன என்று பார்த்தால்அடுக்கடுக்கானக் காரணங்களை அடுக்குகிறார்கள் வல்லுநர்கள். குழந்தையின் குறைபாடு கருவிலிருந்தே உருவாவது போல பழத்தின் குறைபாடு பூவிலிருந்தே துவங்குகிறதாம்.




பூக்கள் உருவாகும்போது ஏற்படும் திடீர் காலநிலை மாற்றம், அதீத வெப்பம், அதீத குளிர், அடர்மழை, அளவுக்கதிகமான உரம், மண்ணின் அமிலத்தன்மை, மகரந்தச்சேர்க்கை, கிருமித்தொற்று என பல காரணிகள் தக்காளியின் வடிவத்தோடு விளையாடக்கூடியவையாம். இவற்றுள் ஏதாவது ஒன்று என்றாலும் தக்காளிகள் இப்படி விநோத வடிவத்தில் காய்க்குமாம். 



  
சாதாரணமாக தக்காளிப்பூக்களுக்கு அல்லிவட்டமும் (sepals) புல்லிவட்டமும் (petals)  ஐந்து அல்லது ஆறு என்ற கணக்கில்தான் பார்த்திருக்கிறேன். இந்தச் செடிகளிலோ பத்துப் பன்னிரண்டு உள்ளன. இந்த வகை நாட்டுத்தக்காளியினத்தின் பூக்கள் இப்படிதான் இருக்குமாம். புதிதாய் அறிந்துகொண்டேன்.




இந்த தக்காளியைப் பாருங்களேன். ஒட்டிப் பிறந்த இரட்டையர் மாதிரி இருக்கிறதல்லவா? மெதுவாக சர்ஜரி செய்து இரண்டையும் பிரித்தேன். ஒரே கருவில் இரண்டு குழந்தைகள் போல ஒரே பூவில் இரண்டு தக்காளிகள்.






பொதுவாக தக்காளிப்பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கை மூலமே காயாகக்கூடியவை. காற்றின் துணை போதும் அவை கருவுற. ஆனால் எங்கள் தோட்டத்தில் தேனீக்களுக்கா பஞ்சம்




தேனெடுக்க வரும் தேனீக்கள் பதிலுபகாரமாக இங்கும் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்திப்போக தக்காளிச்செடிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஏராளமாய் காய்பிடித்து என்னை மகிழ்வெள்ளத்தில் ஆழ்த்தின.




அதெல்லாம் இருக்கட்டும், தக்காளி பழுப்பதற்குள் என்ன அவசரம்? ஏன் எல்லாவற்றையும் பச்சையாகவே பறித்துவைத்திருக்கிறாய் என்று கேட்கலாம். மூன்று காரணங்கள். முதலாவது சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் செடிகள் எல்லாம் சாய்ந்தும் ஒடிந்தும் தரையில் விழுந்துவிட்டன. இவ்வளவுக்கும் நிறைய முட்டுக்கொடுத்திருந்தேன். பாரம் அதிகம் என்பதால்  தாங்கவில்லை

இரண்டாவது slugs தொல்லை. ஒரு காயையும் பழுக்கும்வரை விட்டுவைப்பதில்லை. அதனால் வேறு வழியில்லாமல் பறிக்கவேண்டியதாயிற்று. காய்கள் எல்லாம் மெல்ல மெல்ல பழுத்துவருகின்றன. பழுக்கப் பழுக்க சட்னியாகிக் கொண்டிருக்கின்றன.




மூன்றாவது காரணம் ரொம்ப முக்கியமானது. எனக்கு தக்காளிக்காய்கள் என்றால் அவ்வளவு இஷ்டம். கூட்டு, சாம்பார், குழம்பு என்று எந்த வடிவத்தில் இருந்தாலும் (வடிவமெல்லாம் குழைந்துபோய் இருந்தாலும்) பிடிக்கும்

தக்காளிக்காய் கூட்டு

என் அம்மா எனக்காகவே மீன் குழம்பில் தக்காளிக்காய்களை சேர்ப்பாங்க. குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போதே ஓடிப்போய் செடியிலிருந்து இரண்டு மூன்று தக்காளிக்காய் பறித்துவந்து நறுக்கி குழம்பில் போடுவாங்க. நானோ தக்காளிக்காய்க்காவே மீன் வாங்கிவந்து மீன்குழம்பு வைக்கிறேன். 😂😂



இதுவரை காய்த்த தக்காளிகளின் எடை சுமார் பன்னிரண்டு கிலோ இருக்கலாம். மூன்று செடிகளுக்கு இது ரொம்பவே அதிகம். தக்காளிச்செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அடுத்த முறை செயல்படுத்திப் பார்ப்போம். அடுத்த முறையாவது பூனை மூஞ்சிகள் உருவாகாமல் எல்லா தக்காளிகளுமே நல்ல தக்காளிகளாகக் காய்க்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.


கொசுறு - கீழே இருப்பது என் தோட்ட அனுபவத்தைக் கேலி செய்து மகள் வாட்சப்பில் அனுப்பியது. 100% உண்மை என்பதால் சத்தமில்லாமல் சிரித்துக் கொள்கிறேன். 😄😄










(பிரதாபங்கள் தொடரும்)

முந்தைய பிரதாபங்கள்