Showing posts with label கம்பன் விழா. Show all posts
Showing posts with label கம்பன் விழா. Show all posts

8 March 2023

கம்பனைச் சந்திக்காக் கவியேது?



அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழாவில் இரண்டாம் முறையாகக் கவிதை வாசிப்பு கூடி வந்தது.  கடந்த 2018-ஆம் ஆண்டு 'வாய் தந்தன கூறுதியோ' என்ற தலைப்பில் முதன் முறையாக கம்பன் விழா கவியரங்கில் கவிதை வாசித்தேன்.  2019-ஆம் ஆண்டு 'குகனொடும்  ஐவரானோம்' என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. கவிதையெல்லாம் எழுதி வாசிக்கத் தயாராக இருந்த நிலையில் உடல்நலமில்லாது போனதால் கவியரங்கத்தில் பங்கேற்க இயலாது போயிற்று. அதன் பிறகு கோவிட் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக இணைய ஒன்றுகூடல் வாயிலாய் விழா நடைபெற்றதால் பெரிதளவு கவன ஈர்ப்பைப் பெறவில்லை. இந்த வருடக் கம்பன் விழா கோலாகலமாக இலக்கிய ஆர்வலர்களோடு இனிதே கொண்டாடப்பட்டது.  


இம்முறையும் கவியரங்கில் கவிதை வாசிக்கக் கேட்டபோது தயங்காமல் ஒத்துக்கொண்டேன்.  சில காலமாகவே கவிதை எதுவும் எழுதவில்லை. கவிதை கைவருகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பரிசோதனை முயற்சி முதலாவது காரணம். இரண்டாவது, இந்த சாக்கை முன்னிட்டாவது இலக்கியத்தின் பக்கம் கொஞ்ச நேரம் ஒதுங்கலாம். கம்பராமாயணத்தை மீண்டும் வாசித்து ரசிக்கலாம். கூடவே ஔவையைப் பற்றிய ஆராய்ச்சியும். காரணம் கொடுக்கப்பட்ட தலைப்பு அப்படி. 

கம்பனைச் சந்திக்கும் புலவர்கள் என்ற வரிசையில் வள்ளுவன், இளங்கோ, பாரதி மற்றும் ஔவை இருந்தனர். எனக்கு ஔவை வந்தார். எந்த ஔவை என்று கேட்டபோது நீதிநூல் படைத்த ஔவை என பதில் அளிக்கப்பட்டது. எனவே கம்பராமாயணத்தையும் ஔவையின் நீதி போதனைகளையும் ஒப்பிட்டு கவிதைக்கான கருத்துகளை அடுக்கவே இரண்டு வாரங்கள் ஆயிற்று. கடைசி மூன்று நாட்களில் கவிதையை முழு மூச்சாக எழுதி முடித்தேன். கவிதை வடிவமும் கருத்தும் ஓரளவுக்கு நிறைவளித்தன.



கம்பன் விழாவின் ஐந்தாம் நாளான 5-3-23 அன்று மாலை  பேராசிரியர் பிரசாந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் 10 நிமிடக் கவிதையை வாசித்தேன்.  மேடையை விட்டு இறங்கியதும் அறிஞர் பெருமக்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்னை மகிழ்வின் உச்சத்துக்குக் கொண்டு சென்றன. ஆகப்பெரும் ஆளுமைகளிடமிருந்து அப்படியான பாராட்டுகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறினேன். முக்கியமாக கம்பவாரிதி ஜெயராஜ் ஐயாவிடமிருந்து கிடைத்த மனந்திறந்த பாராட்டுகளை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.   என் மகோன்னதமான தருணங்களை தன் மொபைலில் படம் பிடித்து ஆவணமாக்கி எனக்கு அளித்து என்னை பெருமகிழ்வில் ஆழ்த்திய தோழி யசோதாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன். 




கம்பனைச் சந்திக்கும் ஔவை


அறையும் ஆடரங்கும்  மடப் பிள்ளைகள்

தரையில் கீறிடின்  தச்சரும் காய்வரோ?

இறையும் ஞானம் இலாத  என் புன் கவி

முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ என்று

பாவன்மை ஓங்கிய பாவலனும்

நாவன்மை ஓங்காது நயந்திருக்க

ஆன்றோர் நிறைந்த இவ்வரங்கில்

நானுமோர் கவியென   

நாணத்துடன் நாச்சுழற்ற

தயக்கத்துடன் தமிழ்ப்பா மிழற்ற 

முயலும் இச்சிறியவளை

தாயன்ன பரிவுடையீர்!

தமிழ்த் தாயன்ன பரிவுடையீர்!

தயவுடனே பொறுத்தருள்வீர்!

 

தெள்ளுதமிழ்ப் பாட்டனாம்

திகட்டாக் கவிப் பூட்டனாம்

கம்பனை சந்திக்காக் கவியேது?

சந்திக்காவிடில்

பைந்தமிழ்ப் புலமைக்குக் கவினேது?

பாரதி இளங்கோ வள்ளுவன் என்றே

நீளும் பட்டியலுக்கு நிறைவேது?

அமிழ்தாய் தமிழ்த்தாய் அவ்வையிலாது

அச்செவ்விய வரிசைக்குதான் சிறப்பேது?

 

கருத்தால்

கவி வளத்தால்

அறத்தால்

பா வடிக்கும் திறத்தால்

புனைவால்

பொலிகின்ற அணிகளால்

உவமையால்

உன்னதப் புலமையால்  

ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளாது

ஒருக்காலும் ஒண்டமிழ் ஒளிராது

 

அரங்கு எதிர்நோக்கும் ஔவையார்

ஒருவரா இருவரா?

அல்லது  ஆய்வு காட்டும் அறுவரா?

அரங்கு எதிர்நோக்கும் ஔவை யார்?

 

ஆதியிலே வந்தவளா?

ஆத்திசூடி தந்தவளா?

அசதிகோவை பாடியவளா?

தன் அன்புக் கோவைப் பாடியவளா?

மையிழைத்த மடவரலா?

மெய்யுரைத்த முதியவளா?

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என

சங்கத்தமிழில் முழங்கியவளா?

துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம்

சங்கத்தமிழ் மூன்றும் தாவென வேண்டியவளா?

விறலியா? வித்தகியா?

அறநெறி படைத்த அன்னையா?

அகவல் இசைத்த அம்மையா?

மண்டையைத் துளைத்தன

வண்டு போல் வினாக்கள்!

 

பேதைமை நீங்கிட பெருமை ஓங்கிட

நீதிமுறை உரைத்த அவ்வையே

இவ்வரங்கு எதிர்நோக்கும் கவிமையம்

என்றறிந்து அகன்றது என் ஐயம்!

 

கம்பனும் அவ்வையும்  காலத்தால் நிகரென்றார்

பொன்னுக்கும் கூழுக்கும் கவி பாடி

புவி தொட்டிருந்த நாளிலே

பூனையும் எலியும் என்றார்

பூவுலகு கட்டும் கதைகள்  மெய்யோ?  புளுகோ?

புரட்டோ?  புனைசுருட்டோ?/  

புரியாது தவித்தேன்

கவி புனையாது தவிர்த்தேன்.


எங்ஙனம் நான் கவிபாட?

எண்ணியெண்ணி பன்னாள் ஓட

மீதம் இருந்ததோ அரை நாள்!

ஏதும் செய்ய ஏலுமோ என்னால்?

 

நண்பகல் நேரத்து மயக்கம்

கண்ணயர்ந்து சிறு உறக்கம்

கனவினில் வந்தாள் அவ்வை

கன்னித்தமிழின் தவ்வை

சொன்னேன் கவியரங்கத் தலைப்பை

விடுத்தாள் கம்பனுக்கு அழைப்பை

 

பா ரதமேறி வந்தான் கம்பன்

பாமரரையும் கவர்ந்த அன்பன்

சீதையைக் கண்ட அனுமனைப் போலே

பேதை நான் மகிழ்ந்தேன் பேருவகையாலே

 

அவ்வையே வாழ்க

அதிசயமாய் நீவிர் என்னை நினைக்க

யாது காரணம் கதைக்க

என  பரிகசித்துக் கம்பன் நகைக்க

 

திரட்டுப் பாலென தீந்தமிழால்

திகட்டத் திகட்டக் கவிபுனையும்

கம்பனோடு எனக்கென்ன வம்பு?

கொம்பனைக் கட்டுமோ சிறுதும்பு?

ஐயனே!

ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தினின்று 

தூது வரவிலையோ

செந்தமிழ்க் கவிஞரெலாம்  உமைத் தேடும் 

சேதி பெறவிலையோ என்றாள்.

 

பெற்றேன் பெற்றேன்

பெரும்பேறு உற்றேன் உற்றேன்

அல்வழி நடந்தோர் திரும்ப

நல்வழி நல்கிய நல்லாளே

தீதுரை கேட்டோர் திருந்த

மூதுரை ஓதிய மூத்தவளே

உம்மிடம் உரையாடவே 

உம் இடம் தேடி வந்தேன்

ஆத்திசூடி அமர்ந்த தேவனையும் 

கொன்றைவேந்தன் செல்வனையும்

ஏத்தி யேத்தித் தொழுது

கொவ்வைக் கவிபாடிய அவ்வையே! அம்மையே!

செவ்விய வாழ்வுக்காய் 

நீர் செப்பிய அனைத்தும் உண்மையே

கவ்விய கவ்வை போக்க

கனிவாய் உரைத்தனை நன்மையே

கம்பன் சொல்லிலே தேன் வார்த்தான் 

சொல்லி முடித்து எனைப் பார்த்தான்.

 

ஈதொரு கவிப்பித்து என்றாள் அவ்வை 

எனைக் காண்பித்து

ஆஸியில் கவிபாடப்போகும் இவளுக்கு

ஆசிகள் தந்து அனுப்ப வேண்டுமாம்

ஆசில்லா நற்கவி பாட

ஐயனே நாம் துணை நிற்க வேண்டுமாம் என்றாள்

 

அங்ஙனமே ஆகட்டும் 

நல்வண்ணமே நடக்கட்டும்

அகரத்திலே தொடங்கட்டும்

அதுவும் அறத்துடனே தொடங்கட்டும்

அறத்தோடு தொடங்குதல்தானே அறம்

அனுமதி கிட்டியது அருங்கவியிடமிருந்து.

 

அறம் வெல்லும்  

அறமே வெல்லும்

அறியாது உலகு எள்ளும்

அறிந்தபின் ஒருநாள் அதுவே சொல்லும்

அதுவரை ஏற்ற அவச்சொல் தள்ளும்

ஆகவேதான் அறம் செய விரும்பு என்றேன் 

நீவிரோ 

அறத்தால் ஆவதே வாழ்வென்று

அறம் தரு வள்ளலை உருவத்தில் காட்டினீர்

 

உடைந்தவர்க்கு உதவான் ஆயின்   

உள்ளது ஒன்று ஈயான் ஆயின்

அடைந்தவர்க்கு அருளான் ஆயின்   

அறம் என் ஆம்?  ஆண்மை என் ஆம்? என்ற

அண்ணல் வாய்மொழி அறப்பெருமை நாட்டினீர்

அறம் பிழைத்தவர்க்கு 

வாழ்மைதான் வாய்க்குமோ என

ராக்கத அண்ணனைக் காயும் 

ரட்சக இளவலைக் காட்டினீர்

 

பிறன் இல் விழைவோர்   கிளையொடும் கெடுப 

என்னும்   பாவிகத்தைப் பறைசாற்ற

ராமகாதையெனும்   காவியத்தைப் படைத்த

கவிச்சக்கரவர்த்தியும் நீவிர் அன்றோ? 


கவினுறு புகழாரம் அணிவித்தாள் அவ்வை

வியனுறு கம்பன் வினயமாய்ச் சொன்னான்

 

பிறன்மனை புகாமை   அறன் எனத் தகும் என்பது  

நும் அறநெறி காட்டும்   செவ்விய மாண்பன்றோ?

மை விழியார் மனை அகல் என்பதும்

நும் பொன்மொழி புகட்டும் நனி நோன்பன்றோ?

 

இடைமறித்தாள் அவ்வை

கம்பரே கவி வேந்தே

மங்கையர் பொருட்டால் எய்தும்  

மாந்தர்க்கு மரணம் என்றல்

சங்கை இன்று உணர்தி என்று  

சத்திய வாக்குப் பறைந்தனை

பெண்கள் பால் வைத்த நேயம்  

பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? என  

பாழும் நெஞ்சம் பதைத்தனை

 

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின்   கடுங்கேடு எனும்

நாமம் இல்லை  நரகமும் இல்லையே

என நேமத்தின் விதிகளை நினைவூட்டினை!

 

இத்தனை வரிகளும் சொல்லாததையா

என் ஒற்றை வரி சொன்னது ஐயா?

சிரித்தபடி வினவினாள் அவ்வை

சிரத்தையொடு விடையிறுத்தான் கம்பன்

 

ஒற்றை வரியா?  

நல்வழியின் மற்றை நான்கு வரிகளை 

மறந்தீரே, சரியா?

நற்றமிழ்க் கவி அம்மையே?

நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறும் காலத்தில்

கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல்- ஒண்டொடீ

போதம் தனம் கல்வி பொன்றவருங்காலம்

அயல் மாதர்மேல் வைப்பார் மனம்

என அழகுற ஆபத்தை உரைத்தீரே?

 

நன்மக்கள் குறித்து நீவிர்

நவின்ற வரிகளை நினைவுகூர்கென  

நற்கவி மக்களின் நடுவில்

நானும் புகுந்து நயமிலாது கேட்க  

ஏவா மக்கள் மூவா மருந்தென  பாவால் பகன்றாள் அவ்வை

சொல் மறா மகப் பெற்றவர்  அருந்துயர் துறந்தார் என்று

தானுமதை ஆமோதித்தான்  தசரத மொழியால் கம்பன்

 

இன்னல் இலாது வாழ இன்னாது ஒழிகவென

எந்நாளும் இயம்பினோம் யாம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென

சொற்பதம் தந்து அவ்வை எச்சரிக்க

தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்

என்  வாயது கேள் என  திரிசடை வாயிலாய்

வாய்மை புகட்டினேன் என்றான்

தேய்விலா தேன்கவி

 

சூது பற்றியும் ஏதோ சுட்டியதாய் நினைவு என்றேன்

சூடானான் கம்பன்

விளையாட்டல்ல சூதாட்டம்

வனத்தீயின் சூடாட்டம்

வெந்தணலாடும் புழுவாட்டம்

வாழ்வுநிலை பெரும் போராட்டம்!

 

சூது விரும்பேல் 

இது  அவ்வையின் ஆதி அறிவுரை!

போதாது போதாதென்று

சூதும் வாதும் வேதனை செய்யும் என்று

அழுத்தி இயம்பினார் அடுத்தும் ஒரு முறை!

 

சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்

நீதி மைந்த! நினக்கு இலை  ஆயினும்,

ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு

ஓதும் மூலம் அவை என ஓர்தியே

இது  வசிட்டனின் வாயுரை! 

அதுவே அடியேனின் தாயுரை!

 

தப்பும் சரியும் தப்பாமல் செப்பிடும்

ஒப்புமைப் பாக்களை இருவரும் ஓர்மித்து நோக்க

காலத்தை மறந்து நானும் கதைபோலதைக் கேட்க

நெஞ்சுக்குள் மணி அடித்தது

அஞ்சு மணி ஆனதென்று லறியது

 

போதும் போதும் பொழுது சாய்ந்துவிட்டது

காதோரம் ஓதினர் கம்பனும் அவ்வையும்

ஓடு ஓடு கவியரங்கு ஓடு

பாடு பாடு நீ கண்டதைப் பாடு என்றனர்

கண்டதைப் பாடினால் கல்லெறிய மாட்டாரோ?

கலங்கினேன்

கண்டதையும் பாடினால் கல்தான் விழும்

நீ கனவில் கண்டதைப் பாடினால் கள் அல்லவோ எழும்?

ஆம்! 

ரசிப்புகள் 

தலையசைப்புகள் 

அன்புகள் 

ஆமோதிப்புகள்

உவப்புகள்

உணர்வின் சிலாகிப்புகள்

சிறப்புகள்

சிறு அங்கீகரிப்புகள்!

அடடா அடடா!

தெளிந்து நானும் தேறினேன்

கனவின் காட்சியை நனவின் நீட்சியாக்கி

துணிந்து மேடை ஏறினேன்

கவிஞர் பெருமக்களை அதன் சாட்சியாக்கி!

*****

 2018 ஆம் ஆண்டு கம்பன் விழா கவியரங்கில் வாசித்த கவிதை

வாய் தந்தன கூறுதியோ

2019-ஆம் ஆண்டு கம்பன் விழா கவியரங்குக்காக எழுதிய கவிதை

குகனொடும் ஐவரானோம்




 

15 October 2019

குகனொடும் ஐவரானோம்


கடந்த வருடம் கம்பன் விழாவில் வாய் தந்தன கூறுதியோ என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை கேட்டு நடுவர் திரு. பிரசாந்தன் அவர்கள் அம்மேடையிலேயே “வருவாயா உன்தமிழை வருடந்தோறும் வந்தெமக்குத் தருவாயா” என வேண்டுகோள் விடுத்தார். நானும் மகிழ்வோடு ஆமோதித்தேன். இந்த வருடம் அழைப்பும் வந்தது. தலைப்பும் கொடுக்கப்பட்டது.

கவிதையுள் கிடக்கும் கவிதைகள் என்ற பெருந்தலைப்பில் ஒருவனைத் தந்திடுதி, ஏய வரங்கள் இரண்டு, மும்மைசால் உலகு, நாலு வேதமும், குகனொடு ஐவரானோம் எனத் தரப்பட்ட உப தலைப்புகள் ஐந்தினுள் குகனொடு ஐவரானோம் என் தெரிவு. 

கம்பராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் மத்தியில் அவ்வப்போது தொட்டு நா தடவி சப்புக்கொட்டும் எனக்கு இக்கவியரங்கம் மிகப்பெரிய சவால். மிகுந்த பிரயாசையோடு, வாசிக்கவேண்டிய கவிதையைத் தயார் செய்தேன். வாசிக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில் எதிர்பாராத உடல்நலக்குறைவு. நெஞ்சு சளியும் கடுமையான இருமலும் காய்ச்சலும் வாட்ட வேறுவழியில்லாமல் பங்கேற்கவியலாமற்போயிற்று. பெருத்த வருத்தத்தோடு கவிதையை மட்டும் (ஒருவேளை வேறு எவரைக் கொண்டேனும் அரங்கில் வாசிக்க வைக்கக்கூடும் என்றெண்ணி) அமைப்பாளர்களுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் வாசிக்கப்படவில்லை. எழுதிய அதை ஏன் வீணாக்க வேண்டும், ஒரு பதிவாக்கிவிடலாம் என்ற எண்ணத்துடனும் ஆவணப்படுத்தவும் வேண்டி இங்கே பகிர்கிறேன்.


குகனொடும் ஐவரானோம்




ஆழிமூழ்கி மூச்சடக்கி முக்குளித்து
தாழிநிறைக் கொணர்ந்து தரைகுவித்த
பாழிமுத்துக்களாம் பைந்தமிழ்ப்பாக்களால்
கேழில் பெருங்காப்பியந்தனைப்
கேடின்றிப் படைத்த… 
ஏழில் முதல்வனை எழிலுடை ஐயனை
மையோ மரகதமோ மறிகடலோ
மழை முகிலோவென்று
மயக்கும் அழியா அழகுடையானை
ஏத்தித் துதித்த
பாழில் கவி கம்பநாடனை
பார் புகழும் கவிப்பெம்மானை
வாழியென்று வாழ்த்தி வணங்கி
சூழ்சான்றோர் தாள்பணிந்திவள்
அரங்கேற்றும் சிறு கவி இது.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று
ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று
இக்காசில் கொற்றத்து இராமன் கதைஅரோ என
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் பணிவாய்
ராமகாவியப் பாற்கடலை தன் நாவால்
நக்கப்புகுந்த பூனையென தன் பாவால்
தருக்கின்றி செருக்கின்றி செப்பிடும்போழ்
ஒற்றைத் துளியும் உயர்பாற்கடலாகும்
சிற்றெறும்பினும் சிறியாள் அகம்
கற்றவர் முன் கவி புனையப் புகும்
பெரும்பேராசையை என் சொலத் தகும்?
எண்ணிப்பார்க்கின் என்மனம் தன்னுள் நகும்.

எனினும் விட விரும்பா உள்ளம்
எந்நாளும் விடம் விரும்பாதுள்ளம்
அமிழ்ந்திடினும் பருகிடலாம்
அமிழ்தில் ஒரு துளியேனும் என்று
அவை முன் எழுந்தேன்
அடியேன் துணிவோடு இன்று.

கம்பன் எமக்களித்த காப்பியக் கருவூலத்தில்
கண்கள் பறிக்கின்றன கோடிக்கவி முத்துக்கள்
இதையோ அதையோ உதையோவென்று
அலையும் நெஞ்சை ஆசுவாசங்கொள்ளென்று
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்தென்று
எண்களால் சுட்டியது தானே கவிமன்று.
எட்டியெடுக்க எம் கையிலே கிட்டியது
ஆங்கு கொட்டிவைத்த ஐந்திலே ஒன்று. 

அஞ்சிலே ஒன்றைத் தோண்டவில்லை
புவி அகழ்ந்து புதையுண்டதைப் பெறவில்லை    
அஞ்சிலே ஒன்றைத் தாண்டவில்லை
கடல் கடந்து உடல் வருத்திப் பெறவில்லை
அஞ்சிலே ஒன்றைத் தீண்டவில்லை
அனல் புகுந்து தணல் வெந்து அடையவில்லை
அஞ்சிலே ஒன்றை வேண்டவில்லை
ஆகாயம் பாய்ந்து அரும்பாடுபட்டுப் பெறவில்லை
அஞ்சிலே ஒன்றை சீண்டவில்லை
காற்றைத் துரத்திக் கடிந்து கையிற் பெறவில்லை

எனினும்
அஞ்சிலே ஒன்றைப் பெற்றேன்
அஞ்சலிலே அதனைப் பெற்றேன் அதனால்
குகனோடும் ஐவரானோம் என்னும் குளிர்முத்து
என் குவிந்த கரங்களுக்குள் வசமாயிற்று இன்று.

அண்ணல் வாய்மொழி கூறும் கன்னல் கவிமொழியிது
அன்பை வழிமொழியும் அழகுக் கவிதை இது.
பத்தெழுத்தில் வடித்த பைந்தமிழ்ப் பாவரி இது.
உத்தம நற்குணங்காட்டும் உயரிய குறும்பா இது.

குகனொடும் ஐவரானோம் முன்பு
பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்
எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை என்று
புகழ்கிறான் அன்பின் உரு அண்ணல்.

சகலரும் தம் சகோதரம் என்று
பகிர்கிறான் பாசத்தின் பெரும் விள்ளல்.
இகமதில் இவனை சரணடைந்தோர்க்கு
இதந்தருகிறான் பரிவில் உயர் வள்ளல்.

உடன்பிறந்தவன் உயர் அறம்பிறழ்ந்து
பிறன்மனை கவர்ந்து பிழைத்தமை கண்டு
போதித்தும் வாதித்தும் உபதேசித்தும்
சாதிக்க ஏலாது சங்கடம் மிகக்கொண்டு 
அடங்கொண்டானை விட்டகன்று
அறங்கொண்டானை அண்டிநின்றபோழ்
உரங்கொண்ட உருவாய் நின்றவன்
திறங்கொண்ட திருவாய் மலர்ந்து
உனையும் ஏற்றேன் உடன்பிறந்தானென்ற கணமே
உந்தையென உரிமையும் தந்து உயர்கிறான் மனமே

அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று
ஓர் உதரம் தோன்றியோர்க்குள்ளும் உருவாகும்
உயிரிற் பிணக்கம் உறவிற் சுணக்கம்
குறையும் இணக்கம் உறையும் நுணக்கம்

ஒத்திசையும் நல் உள்ளங்களும்
ஒத்திசையா பல் இல்லுள்ளும்
அழுதாலும் தொழுதாலும்
அணையேனென்று ஆணையிடும்
விழுந்து மடிந்தாலும் நின்முகத்தில்
விழியேனென்று சூளுரைக்கும்

ஆத்ம நண்பனென நயக்கும் நெஞ்சும்
அண்ணன் தம்பியென ஏற்க அஞ்சும்
ஒத்த உணர்வால் ஒருமிக்கும் உள்ளம்
உறவென்கையில் ஓரடி பின்செல்லும்

சொத்திற் பங்கு குறையுமோவென்று
சொந்தங்கொள்ளத் தயங்கும் வையம்
மடியிலிடங்கொடுத்தால் பையத்
தலையேறிவிடுமோ என்னும் ஐயம்.

உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்
அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?
எனும் ராமனின் வாய்மொழி வழியே
அன்பும் கருணையும் கைப்பொருள் ஈதலும்
பண்பும் அறமும் ஆண்மையுமென்றே
கம்பன் காட்டிய வாழ்வியல் வழியே
சத்திய தர்மத்துக்கு சான்றானவன்
சகோதரத்துவத்துக்கும் சாட்சியானான்.

மாற்றாந்தாய்களும் மெச்சும் தனயனானவன்
அவர்தம் மக்களுக்கு உயிரொக்கும் தமையனானவன்
இளவல் மூவரையும் இளவலெனாது
புதல்வரெனவே போற்றிப் பொலிந்தனன்
அருள்தரு கமலக் கண்ணன் வானின்
திரள்மேகமென கனிவைப் பொழிந்தனன்

போதும் போதுமெனும் மனமிலாது
காணும் உயிர்க்கெலாம் கருணை வார்த்தனன்
பாதம் பற்றிய கரங்களை பேதமிலாது
ஆரத்தழுவி அன்பைப் போர்த்தினன்.

கங்கைத்துறை விடும் தொன்மையான்
கற்காணும் திண்மையான்
குகனென்னும் நல்லானின்
குணம் மெச்சி மனம் கொண்டான்
நாவாய் வேட்டுவன் நாயடியேன் என்றோனை
யாதினும் இனிய நண்பென பிரேமை கொண்டான்.
நான் உளதனையும் நீ இனிதிரு என்றோனை
என் உயிரனையாய் நீயென்று தயை கொண்டான்
நொடியும் உம்மைப் பிரிகிலேன் ஐயனென
அடிபணிந்தானோடு ஐவரென உருக்கொண்டான்.

வாலியின் பின்னால் வந்துதித்தவன்
சுக்ரீவன் எனும் வானரத்தலைவன்
சரண் என புகுந்தான் திருவடி தஞ்சம்
அரண் எனக் காக்க
ஐயனவன் கொண்டான் நெஞ்சம்
அரண்ட வானரத்தின் விசனம் போக்கி
செற்றாரும் உற்றாரும் பொதுவென்றாக்கி
இன்னுயிர்த் துணைவன் நீ எனும் உறவாக்கி
ஆறாம் பிறப்பாய் ஆற்றினான் அன்பைத்தேக்கி.

ஆறோடு ஆறாத அன்புமனம் அது
ஆரோடும் அன்புறவாட ஏங்கும் குணம் அது.
பாசறையிலும் பாசங்காட்டும் நற்பண்பு அது
எதிரியானாலும் இரங்கியருளும் உயர்மாண்பு அது.

அறவினை இறையும் இல்லா
அறிவிலா அரக்கர் குல வீடணனோடு
எழில்நம்பியும் உடன்பிறந்தார்
எழுவரென்று ஏம்பலுற்றான்.

தாம் ஏற்றோம் தம்மவராய் ஏற்றோம்
தம்பிகள் ஏற்பரோ தந்தைக்கு ஏற்போவென்று
ஐயங்கொள்ளவில்லை ஐயன்
மாறாய் புதல்வரால் பொலிந்தான் நுந்தை
என கவிமொழியால் கவர்கிறான் நம் சிந்தை

பரமன் என்றாலும் பாதம் பற்றிய கரங்களைத்
தானும் பற்றிக் கொள்கிறான் பாசமாய்.
அரசன் என்றாலும் அடி பணிந்த தலைகளை
கரமேந்திக் கொள்கிறான் பிரியமாய்.

மனமொப்பி அணைத்துக்கொள்ளும் அவ்வாதுரம்
மனுதர்மம் மீறிய மானுடத்தின் பேரறம்.
சினந்தப்பியோரைச் சேர்த்தணைக்கும் சீர்குணம்
இனங்காக்கும் சீர்மை செப்பும் சிறப்பறம்

ஆள் ஐயா..
உனக்கு அமைந்தன
மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை..
இன்று போய் போர்க்கு நாளை வா என
அன்று அவன் நல்கிய நன்மொழியை
நன்றென உணர்ந்து இலங்கைவேந்தன்
ஒருவேளை
ஒருவேளை

தாள்பணிந்து தண்டனிட்டு சரணடைந்திருந்தால்
விழிதிறந்து வேற்றுமனையாளை விட்டிருந்தால்
பழியுணர்ந்து பாவத்தினின்று மீண்டிருந்தால்
பிழையுணர்ந்து பரிகாரம் கோரியிருந்தால்

நின்னோடு நாம் எண்மரானோமென்று
இன்னகையோடு இயம்பியிருப்பான்
தன்னிகரில்லா தமையனென்று
பொன்வரிகளைப் பொறித்திருப்பானோ
கவிப்பெருமானும் பெருங்கருணை கொண்டு.

&&&&&&