27 December 2015

சந்திரமதி (4)




நறுமணமிக்க மலர்களையும் வாசனைமிக்க சாந்துப் பூச்சுகளையும், அழகையும், ஒளிமிக்க மணிகளாலான ஆபரணங்களையும் சுமக்க முடியாமல் சுமந்து பூத்துக்குலுங்கும் மலர்க்கொடிபோல் அசைந்தும் துவண்டும் நிலத்தில் பாதங்களை ஊன்றுவதற்கே பயந்து பயந்து அவள் நடப்பதைப் பார்க்கும்போது, ஆண்யானையின் பின்னே நாணத்தோடு நடந்துசெல்லும் பெண்யானையைப் போலவும் மென்னடைபோடும் அன்னப்பேட்டைப் போலவும் இருக்கும்.. பாதங்களைத் தரையில் ஊன்றுவதற்கே அஞ்சி அடியெடுத்துவைப்பாளெனில் அவள் பாதங்களின் மென்மையும் தன்மையும் புரிகிறதல்லவா?

கடிகமழ் மலரும் கலவையும் அழகும்
கதிர்மணிப் பணிகளும் சுமந்து
கொடியென இசைந்து நிறைவுறப் பூத்த
கொம்பென அசைந்து அசைந்து ஒல்கி
அடியிணை படியிற் படப்பொறாது அஞ்சி
அன்புறு கடகரிப் பின்போம்
பிடியெனக் கன்னி நடைபயில் அன்னப்
பெடையென மடநடை பெயர்வாள்.




(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பூவும் பொட்டும்

பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)

இதுவரை நாங்கள் வர்ணித்த இனிய தன்மையளுக்கு, அமிர்தத்தில் பிறந்தாற்போன்ற அருஞ்சிறப்பு கொண்ட பெண்ணவளுக்கு, இன்னுமொரு சிறப்பு இருக்கிறது. அது என்ன தெரியுமா? சந்திரமதி சிவபெருமானின் அருளால் பிறந்தவள் அல்லவா? அவளுடைய மணவாளன் இன்னார் என்பது இறைவனின் அருளால் மாத்திரமே தெரியவருமாம். எனவேதான் அவளை மணம் பேச வந்த மன்னர்களுக்கெல்லாம் அவளைக் கொடுக்காமல் உரிய மணாளனுக்காகக் காத்திருப்பதாகவும் தாங்கள் கேள்விப்பட்டதாக அம்முனிவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமா? இத்தனை அழகும் அம்சமும் பொருந்திய சந்திரமதி உன்னைச் சேர்வதற்கே உரியவள் என்றும் சொல்லி அரிச்சந்திரனுக்கு சந்திரமதியின் மீதான மோகத்தைத் தலைக்கேற்றுகின்றனர்.

அன்ன தன்மையளைஅமிர்தினில் பிறந்த
அணங்கு அபிடேகத்தைஅனந்த
மன்னர் தம் தமக்கு மணம்செயக் கருதி
மணம் மொழிந் தவர்க்கெலாம் கொடாது
முன்னம் எம் பெருமான் மொழிந்தவர்க் கன்றி
முடிக்கிலேன் கடிமணம் என்னச்
சொன்னதோர் மொழியும் கேட்டனம் அவள் நின்
தோள்களுக்கு இசைந்தவள் என்றார்.


(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பாவமன்னிப்பு
பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)


காதல் பித்தம் தலைக்கேறிய அரிச்சந்திரன் தன்னிடம் சந்திரமதியை வர்ணித்த முனிவர்களையே தனக்காக தூது அனுப்பியதும், சுயம்வரத்தில் கலந்துகொண்டதும், சந்திரமதியின் கழுத்தில் முன்பே ஒரு மாங்கல்யம் இருக்க, மறுதிருமணத்துக்கு ஏன் இந்த ஏற்பாடு என்று கேட்டதும், அவள் சிவபெருமான் அருளால் பிறந்தவள் என்றும் பிறக்கும்போதே மங்கல அணியுடன்பிறந்தவள் என்றும் அது யார் கண்களுக்குத் தெரிகிறதோ அவரே அவளை மணக்கும் தகுதியுடைய மணாளன் என்றும் அவளுடைய தந்தை சொல்லக்கேட்டு மகிழ்ந்து அவளை மணமுடித்ததும் அடுத்தடுத்துத் தொடரும் கதைகள். உண்மைக்கு உதாரண புருஷனாய் வாழ்ந்து அவன் பட்ட அவதிகள் ஒருபக்கம் எனில் உத்தம புருஷனான அவனை மணமுடித்தக் காரணமாய் சந்திரமதியும் அவள் மகனும் பட்ட துயரங்கள் அளவிலாதவைஅறிவோமல்லவா?

(சந்திரமதி குறித்த வர்ணனைப் பாடல்கள் நிறைவுற்றன. ரசித்த அனைவருக்கும் அன்பான நன்றி.)


14 December 2015

தாங்குமா இத்தாயாடு?



ஆசையாய் உனை வளர்த்த நல்லதம்பி
முட்டி அழுதுகொண்டிருக்கிறான்
மூன்றுநாளாய்த் தேம்பித்தேம்பி!
அண்ணன் எங்கே எங்கே என்று
அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்கிறான்
முட்டிப்பாலருந்துமுன் உன் குட்டித்தம்பி.

மண்சட்டியில் துண்டுகளாகி..
வெந்த குழம்பின் வாசத்திலும்
உப்புத்தூவிய கண்டங்களாகி..
வெய்யிலில் காயும் மீதத்திலும்
வீசும் உன் பிணவாடையை
தாங்குமா இத்தாயாடு?

கறியுணவாய்ப்போன கண்மணியின்
கரியுருவை முகர்ந்து முகர்ந்து
கவலை மறக்கிறதே தாயவள் உயிர்க்கூடு




வல்லமை மின்னிதழின் இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதை சிறந்த கவிதையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதறிந்து  மகிழ்ச்சி. அனைத்துக் கவிதைகளையும் அலசி ஆய்ந்து விமர்சனங்களோடு சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கிய மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் வாய்ப்பளித்த வல்லமை குழுவுக்கும் மிகவும் நன்றி. சிந்திக்கத்தூண்டும் படத்தை வழங்கிய புகைப்படக்கலைஞர் வெங்கட் சிவா அவர்களுக்கும் படத்தைத் தேர்ந்தெடுத்த தோழி சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

10 December 2015

அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.



எத்தனை முகங்களின் சாயங்களை
வெளுக்கச்செய்திருக்கிறது இப்பெருமழை..
எத்தனைத் தூய உள்ளங்களைத்
அடையாளங்காட்டியிருக்கிறது இந்த அடைமழை!

கர்ப்பக்கிரகத்திலும் கட்-அவுட்டிலும்
அரசியல்வாதிகளின் காலடிமண்ணிலும்
கடவுளர்களைத் தேடியவர் கண்களுக்கு
மனிதர்களைக் காட்டியிருக்கிறது இம்மாமழை..

பணமே பிரதானமென்று முன்தினம்வரை 
பரபரத்து ஓடிய மனங்களுக்குப்
பணத்தால் ஆவதொன்றுமில்லையென 
பாடம்புகட்டியிருக்கிறது இந்தத் தொடர்மழை..




நில்லென்று மழைநிறுத்தி சுள்ளென்று ஆதவன் ஒளிரட்டும்..
சொல்லொணா துயரிலிருந்து மெல்ல நம் வாழ்வு மலரட்டும்..
அழைக்கும் திக்கெல்லாம் ஓடிக்களைத்த கால்களும்
உதவிக்களைத்த கரங்களும் சற்றே ஓய்வு கொள்ளட்டும்…

நசிந்துகிடக்கும் நிகழ்வாழ்விலிருந்து எதிர்காலம் மீட்கச்செய்யும்
நம்பிக்கையும் ஆன்மபலமும் நம்மைவிட்டு நீங்காதிருக்கட்டும்…
இடர்ப்பாடு களைந்து இயல்புக்குத் திரும்பியபின்னும் நம்
அகத்திலெரியும் அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.. 

இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
நீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
இனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்.




ஆழி முகந்துவந்த அளவிலா நீரெல்லாம்
ஊழிப்பெருவெள்ளமென ஊரெல்லாம் சூழ
அல்லாடிக்கிடக்கும் நெஞ்சங்களை
அன்பால் தேற்றிடும் அனைவருக்கும் நன்றி

திக்கற்றுத் திகைத்துநிற்கும் மக்களை
பக்குவமாய் மீட்டெடுக்கும் தாயுள்ளங்களுக்கு நன்றி
சாணக்கிய அரசியல்வாதிகளை எதிர்பாராது
சனம் ஒன்றுகூடி நீட்டும் உதவிக்கரங்களுக்கு நன்றி..

மகத்தான உதவிகளை காலத்தே செய்யும்
மனிதம் இன்னும் துறக்கா மனங்களுக்கு நன்றி
சாதிமத இனவேறுபாடுகளை மறந்தும் துறந்தும்
சங்கமித்துதவும் சகோதர உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இயல்புவாழ்வு மீள நம்மிரு கரங்களையும் தந்துதவுவோம்
இயன்றவழியிலெல்லாம் இடர்ப்பாடு களைய முன்வருவோம்
அன்புவெள்ளத்தின்முன் ஆழிவெள்ளம் காணாமற்போகட்டும்
சின்னாபின்னமான வாழ்வனைத்தும் சீர்பெற்று மீண்டுவரட்டும்.


(படங்கள்: நன்றி இணையம்)

2 December 2015

தி.தமிழ் இளங்கோ ஐயாவின் எண்ணத்தில் என்றாவது ஒருநாள்...





என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவர்களுள் ஒருவரும் என் பிறந்தகமான திருச்சியைச் சார்ந்தவருமான தமிழ் இளங்கோ ஐயா அவர்களைப் பற்றி அறியாதவர்கள் பதிவுலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், அரசு வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவர்தம் பதிவுகளில் இலக்கியமும் அனுபவ அறிவும், சமூகநலன் சார்ந்த பதிவுகளும் பிரதானமாய் இடம்பெறும். அவர் எனது எண்ணங்கள்’ என்னும் தன்னுடைய வலைப்பூவில், என்னுடைய மொழிபெயர்ப்பு நூலான ‘என்றாவது ஒருநாள்’ குறித்த விமர்சனத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின்போது என்னுடைய நூலை தமிழ் இளங்கோ ஐயா விலை கொடுத்து வாங்கிய செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். வாசித்து முடித்த கையோடு அதற்கான விமர்சனமும் எழுதிப் பதிவிட்டுள்ளமை என்னை இரட்டிப்பு மகிழ்வடையச் செய்துள்ளது. 



மொழிபெயர்ப்பின் வகைகள் குறித்தும் இந்நூலில் நான் மேற்கொண்ட மொழிபெயர்ப்பு குறித்தும் கருத்துரைத்துள்ள அவர், நூலிலுள்ள கதைகள் தொடர்பான தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துள்ளமை சிறப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததைப் போன்று தமிழிலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திடல் வேண்டுமென்ற வேண்டுகோளை தற்போதைக்கு மறுக்கும் நிலையில் இருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன். அவருடைய கருத்துரைக்கான என் பதில் இது...

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மூத்த பதிவரான தங்களிடமிருந்துஎன்றாவது ஒருநாள்நூலுக்கான விமர்சனம் கிடைத்திருப்பதை என்னுடைய பேறாகவே கருதுகிறேன். மிகுந்த மகிழ்வும் நன்றியும் ஐயா. இந்த நூலில் நான் மேற்கொண்டிருப்பது தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல நேரடி மொழிபெயர்ப்புதான். அப்போதுதான் நுணுக்கமான விஷயங்களிலும் நான் வியந்து ரசித்த மூல ஆசிரியருடைய எழுத்து பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறியத்தரமுடியும் என்று நம்பினேன்.

கதைகள் குறித்த சிறு அறிமுகமும் வாசகரை வாசிக்கத் தூண்டும்வண்ணம் தாங்கள் இங்கு அவற்றைக் குறிப்பிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. ஒற்றை சக்கரவண்டி கதையின் தலைப்போடு கவியரசரின் வரிகளையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. கதைகளையும் கதைகளின் பின்னணியையும் மிக அழகாக உள்வாங்கி எழுதப்பட்ட விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றி.

ஆங்கிலத்தில் எனக்குப் போதுமான புலமை இல்லாதபோதும், நான் ரசித்தவற்றைத் தமிழில் தரவேண்டும் என்னும் முனைப்பே மொழிபெயர்ப்பில் ஈடுபடத் தூண்டியது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும் அளவுக்கு ஆங்கிலப்புலமை இல்லையென்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். பின்னாளில் என்றேனும் நான் அந்த முயற்சியில் ஈடுபட முடியுமானால் அந்தப் பெருமை தங்களுக்கே உரித்தாகும். நன்றி ஐயா.




இறுதியில் நான் குறிப்பிட்டுள்ள வரிகள் 
என்றாவது ஒருநாள் மெய்ப்படலாம்.. 
அதற்கான விதை இங்குதான் விதைக்கப்பட்டது என்பதை 
அப்போதும் மகிழ்வுடன் நினைவுகூர்வேன்.
மிக்க நன்றி ஐயா.