23 March 2026

டிங்கோ கொலைகள் (2)

டிங்கோக்கள் தங்களை விட உருவில் பெரிய விலங்குகளை வேட்டையாடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனிதர்களைக் கொல்லுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பூர்வகுடி மக்களை டிங்கோக்கள் தாக்கியதாக இதுவரை எங்குமே பதிவாகவில்லை. காரணம் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையும் டிங்கோக்களின் வாழ்க்கையும் இணைகோடுகளாகவே பயணித்தனவே தவிர எந்தப் புள்ளியிலும் ஒன்றோடொன்று குறுக்கிடவில்லை.  

1. (G)கர்ரி தீவின் டிங்கோக்கள்

ஐரோப்பியக் குடியேற்றத்திற்குப் பிறகுதான் டிங்கோக்கள் மனிதர்களைத் தாக்கிய சம்பவங்கள் அங்கும் இங்குமாக அரங்கேறத் தொடங்கின. ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைமுறையும் டிங்கோக்களை அவர்கள் அணுகிய விதமும்தான் முக்கியக் காரணங்கள் எனலாம். 

டிங்கோக்களின் வாழ் எல்லைக்குள் அவர்களை அறியாமலேயே மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை விரிவுபடுத்தினார்கள் அல்லது உணவு எளிதாகக் கிடைப்பதால் டிங்கோக்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவத் தொடங்கின அல்லது இரண்டுமே எனலாம். 

ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் ஒன்றறக் கலந்தவை trekking, hiking, sailing போன்ற வெளிப்புற நடவடிக்கைகள். தனியாகவோ, இணையாகவோ, குழுவாகவோ, குடும்பமாகவோ  காடு, மலை, கடற்கரை, சமவெளி என ஏதாவதொரு இயற்கையான சூழலில் கூடாரம் அமைத்து முகாமிட்டு (Camping)  சில நாட்கள் தங்கியிருந்து தங்களைப் புதுப்பித்துத் திரும்புவது அவர்களது வழக்கம். முன்னேற்பாடாக அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களைக் கையோடு கொண்டுசெல்வதும், அந்தப் பகுதியில், இயற்கைச்சூழலில்  வசிக்கும் டிங்கோக்களை நட்பாக்கிக் கொள்ள அவற்றுக்கு உணவளிப்பதும் டிங்கோக்களின் குணத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கின.

2001-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறைக்காலத்தின்போது (G)கர்ரி தீவைத் தெரிவு செய்து மகிழ்வோடு சுற்றுலா சென்றிருந்தது குவீன்ஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம். ஒன்பது வயது சிறுவன் க்ளின்டன் கேஜூம் அவனுடைய ஏழு வயது தம்பியும் தாங்கள் முகாமிட்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடற்கரையோர மணல் மேடுகளில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு டிங்கோக்கள் சிறுவர்களைத் தாக்கத் தொடங்கின. 

2. டிங்கோவால் உயிரிழந்த சிறுவன் க்ளின்டன் கேஜ்

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டுப் பெற்றோர் ஓடிவந்து காப்பாற்றுவதற்குள் க்ளின்டன் கேஜ் இரத்தவெள்ளத்தில் கிடந்தான். அவனைக் காப்பாற்றுவது சாத்தியமற்றுப் போனது. கை கால்களில் பலத்த கடிவாங்கியிருந்த அவனது தம்பி ஹெலிகாப்டர் மூலம் குவீன்ஸ்லாந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டான். அந்த இரண்டு டிங்கோக்களும் அரசு உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டன.

(G)கர்ரி தீவில் டிங்கோக்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடைபெற்றாலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவனின் மரணம்தான் டிங்கோக்களால் ஏற்பட்ட கடைசி மரணமாக இருந்தது, பைப்பர் ஜேம்ஸின் மரணம் வரையிலும். 

3. டிங்கோ, செந்நாய் & ஓநாய் ஒப்பீடு

டிங்கோக்களும் ஓநாய்களையும் செந்நாய்களையும் போன்ற காட்டு விலங்குகளே. செந்நாய்களையும் ஓநாய்களையும் பார்த்தால் எப்படி மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்போமோஅப்படிதான் டிங்கோக்களிடமும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும். நாய்தானே என்ற அலட்சியத்தினாலேதான் பல ஆபத்துகள் நிகழ்கின்றன. 

4. கர்ரி தீவின் எச்சரிக்கை அறிவிப்பு
இயல் வாழிடத்தில் காட்டு விலங்குகளுக்கே உரிய மூர்க்கத்தோடும் வேட்டையாடும் இயல்போடும் வாழும் டிங்கோக்களிடமிருந்து எச்சரிக்கையாக விலகியே இருக்குமாறும் டிங்கோக்களை ஈர்க்கும் எந்தச் செயலிலும் ஈடுபடாதிருக்குமாறும் (G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் எப்போதும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

  • தனியாகப் போகாதீர்கள்.  குழுவாகச் செல்லுங்கள்.  தற்காப்புக்காக எப்போதும் கையில் ஒரு குச்சியை வைத்திருங்கள். 

  • குழந்தைகளை எப்போதும் கையெட்டும் தொலைவிலேயே வைத்திருங்கள். ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தைகளை எல்லா நேரமும் கண்காணித்துக்கொண்டே இருங்கள்.

  • டிங்கோக்களுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ  உணவளிக்காதீர்கள். 

  • ஓடாதீர்கள் (உடற்பயிற்சிக்காக என்றாலுமே). ஓடுவது டிங்கோக்களின் கவனத்தை ஈர்த்து அவை துரத்த ஆரம்பிக்கலாம். ஓடினால் துரத்துவது என்பது பொதுவாகவே நாய்களின் இயல்பு. கூட்டமாய் வேட்டையாடும் காட்டுநாய்களுக்குச் சொல்ல வேண்டுமா?
  •    
  • கம்பிவேலியிடப்பட்ட பகுதிக்குள்ளேயே முகாம் இடுங்கள்.  உணவு உண்ணுங்கள். மிச்சமீதி உணவுகளை அப்படியே விட்டுச் செல்லாதீர்கள். 

  • கம்பிவேலிக்கு வெளியில் கூடாரம் அமைத்து முகாமிட்டிருப்பவர்கள் தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களைக் கண்ட இடத்தில் போட்டுவைக்காமல், அவற்றின் வாசம் பரவாமல் தகுந்த பாத்திரங்களில் அல்லது பாதுகாப்பான உணவுப் பெட்டியில் பத்திரப்படுத்துங்கள். 

  • உண்ட பிறகான உணவுமீதங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள்.  


தூண்டிலிட்டு மீன்பிடிப்பவர்கள் கூட ஒருவராகச் செல்லாமல் இருவராகச் செல்வதே அத்தீவின் வழக்கம். காரணம், ஒருவர் தூண்டிலில் கவனத்தைக் குவித்திருக்கும்போது, ஏற்கனவே பிடித்துவைத்திருக்கும் மீன்களை டிங்கோக்கள் திருட்டுத்தனமாகவோ, முரட்டுத்தனமாகவோ கவ்விக்கொண்டு செல்வது அங்கு வழக்கமான நடக்கும் விஷயம் என்கிறார்கள்.

5. டிங்கோ 

டிங்கோக்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் அவற்றால் உண்ணக்கூடிய எல்லாமே உணவுதான். முக்கியமாக காட்டுவிலங்குகள். அவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் பழக்கப்படாதவை. எந்த ஆணைகளுக்கும் உடன்படாதவை. 

உணவுக்காக டிங்கோக்கள் மனிதர்களின் முகாம்களைச் சுற்றிவரத் தொடங்கின.  உணவு கிடைக்காதபோது மனிதர்களைத் தாக்கவும் துணிந்தன.  கூடாரங்களைத் தங்களுடைய கூரிய பற்களால் கிழித்து உள்ளே புகுந்து கிடைப்பதைக் கவ்விச் செல்லவும் அவை தயங்குவதில்லை, அது பச்சிளம்சிசுவாக இருந்தாலும். ஆம். அப்படியொரு சம்பவம் 1980-ஆம் ஆண்டு நடைபெற்றது. டிங்கோக்களை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்திய அதிபயங்கர சம்பவம் அது.  

நினைத்தாலே நெஞ்சு பதறும் அச்சம்பவம் பற்றி விரிவாக அடுத்தப் பதிவில்.

தொடரும்...

(படங்கள் உதவி Pixabay)


14 March 2026

டிங்கோ கொலைகள் (1)

டிங்கோ கொலைகள் என்று மொட்டையாய்ச் சொன்னால் என்ன புரியும்? டிங்கோக்கள் கொல்கின்றனவா அல்லது கொல்லப்படுகின்றனவா? பதிவின் சாரம் இரண்டுக்கும் பொருந்துவதால் இத்தலைப்பு.

பரிதாப மரணமடைந்த பைப்பர் ஜேம்ஸ் (படம்- இணையம்)

இரண்டு மாதங்களுக்கு முன்பு 19-01-2026 அன்று , ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த (G)கர்ரி தீவில் (முந்தைய பெயர் ஃப்ரேஸர் தீவு) டிங்கோ கூட்டத்தால் சூழப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்னும் 19 வயதே ஆன இளம்பெண்ணின் துர்மரணம் ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நண்பர்களிடம் கடலில் நீந்தப் போவதாகச் சொல்லிச் சென்ற பெண்ணை ஆறரை மணி வாக்கில், கடற்கரையில் பிரேதமாக, பத்துப் பன்னிரண்டு டிங்கோக்களுக்கு மத்தியில் குதறப்பட்டக் காயங்களுடன் காண நேர்வது எவ்வளவு கொடுமை!

ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்கும் பெருத்த ஆர்வத்தோடும் வாழ்நாள் கனவோடும் ‘Working Holiday Visa’ எனப்படும் ஒரு வருட கால,  பணி மற்றும் சுற்றுலாவுக்கான நுழைவாணை பெற்று கனடாவிலிருந்து (G)கர்ரி தீவுக்கு வந்த இளம்பெண்தான் பைப்பர் ஜேம்ஸ். ஆஸ்திரேலியாவின் அழகிய தீவான (G)கர்ரிக்கு வந்து ஆறு வாரங்களே பணியாற்றிய நிலையில் இப்படியொரு துர்மரணம் சம்பவித்தது அனைவரையுமே இன்றுவரை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பைப்பர் ஜேம்ஸின் மரணத்துக்கு டிங்கோக்கள் காரணமா? வேறு யாரும் காரணமா? இயற்கை மரணமா? என பல கோணங்களிலிருந்தும் துப்பு துலக்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது மரணத்துக்கு மனிதர் யாரும் காரணமில்லை என்பது மட்டுமல்ல, டிங்கோக்களே காரணம் என்பதும் பிரேதப் பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. 

டிங்கோ

ஆறு வார கால விசாரணையின் இறுதியில் சென்ற வாரம் மரண விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறிக்கையில் டிங்கோக்கள் தாக்கியதாலோ அல்லது டிங்கோக்களிடமிருந்து தப்பிக்கமுயன்றோ காயமுற்ற பைப்பர் ஜேம்ஸ் நீந்த இயலாமல் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ரி தீவு டிங்கோக்களின் வேட்டை உத்திகளுள் ஒன்று, இரையைச் சுற்றி வளைத்து, தப்பிவிடாமல் இருக்க, கடலை நோக்கித் தள்ளிய பிறகு, கூட்டமாய் சூழ்ந்து வேட்டையாடுவது. அதுவே பைப்பர் ஜேம்ஸ் விஷயத்திலும் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பைப்பர் ஜேம்ஸ் மரணத்துக்கு டிங்கோக்களே காரணம் என்ற முதல் கட்ட விசாரணையின் முடிவில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பைப்பர் ஜேம்ஸைத் தாக்கிய டிங்கோ கூட்டத்தை ஒட்டுமொத்தமாக (கருணைக்)கொலை செய்ய அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டு மறு வாரமே பத்து டிங்கோக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டுவிட்டன.  

உண்மையிலேயே டிங்கோக்கள்தான் பைப்பர் ஜேம்ஸ் மரணத்துக்குக் காரணமா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், பத்து டிங்கோக்களைக் கொல்ல அரசு உத்தரவிட்டதும் உடனடியாக எட்டு டிங்கோக்கள் கொல்லப்பட்டிருப்பதும் பலருக்கும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. பைப்பர் ஜேம்ஸ் மரணம் நேர்வதற்கு மூன்று நாட்கள் முன்பும் (16-1-26) ஒரு டிங்கோ சுற்றுலா பயணிகளை மூர்க்கமாகத் தாக்குவதாகச் சொல்லி கொல்லப்பட்டது.

(G)கர்ரி தீவின் ஒட்டுமொத்த டிங்கோக்களின் எண்ணிக்கை சுமார் 200 மட்டுமே என்றும் சுமார் 20-30 குழுக்களாக அவை வசிக்கின்றன என்றும் அறியப்படுகிறது. (G)கர்ரி தீவின் மிக முக்கிய உயிரினமாக அறியப்படும் டிங்கோக்களைக் கொன்ற அரசின் செயலுக்கு, அத்தீவின் பாரம்பரிய உரிமையாளர்களான ‘பட்சல்லா’ பூர்வகுடியினர் பெரும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தங்களைச் சற்றும் கலந்தாலோசிக்காமல் குவீன்ஸ்லாந்து அரசு எடுத்த இந்த அவசர நடவடிக்கை, கடைசி நிமிடத்தில்தான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதில் தங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்றும் பட்சல்லா பூர்வகுடி தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

(G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் மூலம் குவீன்ஸ்லாந்து மாநில அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் மில்லியன் கணக்கான வருவாயை, டிங்கோக்கள் காரணமாக அவ்வளவு எளிதில் இழக்க விரும்புமா என்ன? 2024-ஆம் ஆண்டில் (G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் மூலம் ஈட்டிய வருமானம் சுமார் 876 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஐயாயிரத்து அறுநூறு கோடி) என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

டிங்கோ - கேள்விப்படாத பெயராக இருக்கிறதே. அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள். டிங்கோ என்பவை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெகு மூர்க்கமான காட்டு நாயினம். பார்ப்பதற்கு சாதாரண வளர்ப்பு நாய்கள் போலத் தெரிந்தாலும் அவற்றின் குணம் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண நாய்களைப் போல இவற்றைப் பழக்க இயலாது. ஓநாய்களைப் போலவும், செந்நாய்களைப் போலவும் கூட்டம் கூட்டமாக இரையைத் துரத்தி, சாதுர்யமாக வளைத்து வேட்டையாடும் இயல்புடையவை.

டிங்கோக்களின் வசிப்பிடங்கள் (படம் - இணையம்)

ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்த்து பெரும்பாலான பகுதியிலும், முக்கியமாக பிரிஸ்பேனுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தூரத்தில் உள்ள (G)கர்ரி தீவிலும் காணப்படுகின்றன. வசிக்கும் இடத்தின் பூர்வகுடி மொழியைப் பொறுத்து Boolomo, Dwer-da, Joogoong, Kal, Kurpany, Maliki, Mirigung, Noggum, Papa-inura, Wantibirri என பல்வேறு பூர்வகுடிப் பெயர்கள் உள்ளன. (G)கர்ரி தீவில் அதன் பெயர் வோங்காரி (Wongari).  ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியின் பூர்வகுடி மொழியான தாருக் மொழியில் குறிப்பிடப்படும் ‘டிங்கோ’ (Dingo) என்ற சொல்லே ஐரோப்பியக் குடியேறிகளால் பொதுச்சொல்லாகப் புழங்கப்பட்டு, ஆங்கிலத்திலும் ஏற்கப்பட்டுள்ளது. Canis lupus dingo என்பது இதன் அறிவியல் பெயர்.

வாம்பேட், கொவாலா, கங்காரூ & க்வோக்கா

கங்காரூ, வாம்பேட், கோவாலா போன்ற பூர்வீக விலங்குகளைப் போல டிங்கோக்களுக்கு ஆஸ்திரேலியாவில் பன்னெடுங்கால வரலாறு கிடையாது. டிங்கோக்கள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்புக்கு அறிமுகமாகி சுமார் ஐயாயிரம் வருடங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் குறைந்தது மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாவது இருக்கலாம் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. அது என்ன கணக்கு? மூவாயிரத்து ஐநூறு? ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான டிங்கோ எலும்புப் படிமத்தின் வயது மூவாயிரத்து ஐநூறு. எனவே மூவாயிரத்து ஐநூறு என்பது உறுதியான கணக்கு. அதற்கு முந்தைய டிங்கோ காலம் பற்றித் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை.


டிங்கோக்கள்

ஆஸ்திரேலியாவின் கானுயிர் சமன்பாட்டுக்கு உதவக்கூடிய கொன்றுண்ணிகளுள் தற்போது பெரிய அளவில் பங்கு வகிப்பவை என்றால் அவை டிங்கோதான். ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில், மக்கள் வசிக்காத பொட்டல்களிலும், புதர்க்காடுகளிலும்வளர்ப்பாரற்றுத் திரியும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, மான், முயல் போன்ற அந்நிய விலங்குகளின் எண்ணிக்கை, டிங்கோக்களால்தான் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம், ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்திருந்த மிகப்பெரிய கொன்றுண்ணி இனங்களான தைலாஸினும், டாஸ்மேனிய டெவிலும் (ஐரோப்பியர் குடியேறியபோது இவ்விலங்கினம் டாஸ்மேனியா தீவில் மட்டுமே காணப்பட்டதால் ‘டாஸ்மேனிய டெவில்’ என்ற பெயர் இடப்பட்டது.) ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் முற்றிலுமாக அழிந்துபோனதற்கு முக்கியக் காரணம் டிங்கோக்கள் என்ற மறுக்கமுடியாத உண்மையும் உள்ளது.

டாஸ்மேனிய டெவில்
தொடரும்...