Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

1 January 2018

அறுசுவை விருந்து படைத்த 2017




ஆஹா ஓஹோவென்று இல்லையெனினும்
அப்படியொன்றும் அசமந்தமாக இல்லை..
வாழ்விலுண்டாகும் சறுக்கல்களுக்கு
வருடத்தை நிந்திப்பதில் நியாயமுமில்லை.
வழக்கம்போலவே கழிந்து பிறக்கிறது புத்தாண்டு.
வருங்காலம் இனிதாகும் வளமாகுமென்னும்
ஆதி நம்பிக்கையை அடிப்பிறழாமல் தந்து! 🙂🙂




மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், கொண்டாட்டம், சோகம், கலவரம், அங்கீகாரம், அரவணைப்பு என பலவிதமான உணர்வுகளையும் கலவையாய் அள்ளித்தந்து அமைதியாய் நிறைவுபெறுகிறது 2017.

என்னுடைய எழுத்தின் வளர்ச்சிக்கு பின்புலமாய் இருந்த… இப்போதும் இருக்கும் அன்புத்தோழி மணிமேகலாவுக்கு இப்பிறவியில் நன்றி சொல்லிமாளாது. அவரால்தான் அற்புதமான பல அங்கீகாரங்கள் எனக்குக் கிட்டின..

1.   ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 26-ஆம் நாள் சிட்னி உயர்திணை இலக்கிய அமைப்பின் சார்பாக, தோழியின் அயராத முயற்சியால் என்னுடைய 'என்றாவது ஒரு நாள்' நூல் வெளியீடு இனிதே நிறைவேறியது ஆகப் பெரும் மகிழ்வான நிகழ்வின் மூலம் சிட்னி இலக்கிய வட்டத்தில் நானும் ஒருத்தியாய் சங்கமிக்கும் வாய்ப்பு கிட்டியது. பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகமும் அன்பும் ஆதரவும் கிட்டின.

2.   கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 - புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வில் கீதமஞ்சரி மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதற்கும் அன்புத்தோழியே காரணம். அவரே கீதமஞ்சரி வலைத்தளத்தை முன்மொழிந்துள்ளார் என்பது பிறகுதான் தெரியவந்தது.

3.   காக்கைச்சிறகினிலே– இலக்கிய இதழில் கீதமஞ்சரிக்காக முழுதாய் எட்டுப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டது இன்னுமொரு சிறப்பான அங்கீகாரம்.

4.   பிரபலஎழுத்தாளர் முருகபூபதி அவர்கள் என்றாவது ஒருநாள் நூல் குறித்த தன் வாசிப்பனுபவத்தை மெல்பனில்  06-05-17  அன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17-வது எழுத்தாளர் விழாவில் சமர்ப்பித்தமை எனது பெரும்பேறு. அவரை எனக்கும் என் எழுத்துகளை அவருக்கும் அறிமுகப்படுத்தியதோடு, அண்ணா என்று உரிமையுடன் அழைக்கும் நெருக்கத்தை எனக்கு உருவாக்கித் தந்தவர் என் அன்புத்தோழியே.

5. ATBC எனப்படும் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தாயகம் வானொலி, SBS Tamil Radio மூன்று வானொலியிலும் என்றாவது ஒருநாள் வெளியீடு தொடர்பாக என்னுடைய நேர்காணல் ஒலிபரப்பானது. SBS Tamil Radio-வில் அபாரமான பின்னணியோடு ஒலிப்பதிவு செய்யப்பட்ட திகில் கதையான சீனத்தவன் ஆவி ஒலிபரப்பானது இன்னொரு மகிழ்ச்சி.    
6.   எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ‘காலமும் கணங்களும்’ என்னும் தன்னுடைய அடுத்த நூலுக்கான அட்டைப்படத்தை என்னிடமிருந்து பெற்றது என் புகைப்பட ஆர்வத்தின் மீதான மிகப்பெரும் அங்கீகாரம்.

2017 - மகளுக்கு இரண்டாவது பட்டமளிப்பு விழா, மகனின் பள்ளியிறுதி ஆண்டுவிழா, எங்களுடைய திருமண வெள்ளிவிழா என பல மறக்கமுடியாத கொண்டாட்டங்களுக்கிடையில் உளைச்சலும் மனச்சோர்வும் தரும்வண்ணம் எதிர்பாராத சில நிகழ்வுகளும் நடந்தேறின. அவை தனிப்பட்டவை என்றாலும் என் எழுத்திலும் சற்று பாதிப்பை ஏற்படுத்தின. 

கொஞ்சகாலம் எதிலும் ஈடுபாடற்று பதிவுலகிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டு இருந்தேன். முந்தைய வருடங்கள் போல புகைப்படங்கள் அதிகம் பகிரவில்லை.. எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் கூடிவரவில்லை. வாசிப்பிலும் பெரிய ஈடுபாடு கிட்டவில்லை. எழுத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று எனக்கு நானே விதித்துக்கொண்ட பிடிவாதத்தால் எதையாவது கிறுக்கியபடி இருந்தேன்.

மொழிபெயர்ப்பில் தீவிரமாக இல்லாவிட்டாலும் இந்த வருடத்தில் ஹென்றி லாசனின் கதைகள் மேலும் சிலவற்றை மொழியாக்கம் செய்துள்ளேன்.

பூக்கள் பற்றிய தொடரை விளையாட்டாய் ஆரம்பித்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் பற்றி எழுதியிருப்பது எனக்கே வியப்பளிக்கிறது.

புஸ்தகா நிறுவனத்தின் மூலம் ஆறு மின்னூல்களும் பிரதிலிபி மூலம் எட்டு மின்னூல்களும் இந்த வருடத்தில் வெளியாகியிருப்பது உற்சாகம் அளிக்கும் உந்துசக்திகள். 

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளுடன் படைக்கப்படும் அசத்தலான விருந்து போல 2017 பல்சுவைகளால் எம் வாழ்வை நிறைத்துச் சென்றிருக்கிறது. அனுபவங்களே வாழ்வென்னும் பாடத்தை அழகாய்ச் சொல்லிக் கடந்திருக்கிறது இன்னுமோர் ஆண்டு. அதே பாடத்தைக் கற்றுத்தர இதோ.. தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது அடுத்ததோர் ஆண்டு.

அனைவருக்கும் 
இனிய ஆங்கிலப் புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்
2018.


   

11 October 2015

பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நேரலை ஒளிபரப்பு...

அன்பார்ந்த வலையுலக மற்றும் வாசக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நான்காம் ஆண்டு புதுகை வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நேரலை ஒளிபரப்பு...







நிகழ்வைக் கண்டுகளிப்போம்... உறவுகளின் அன்பில் திளைப்போம்..
உடலால் விலகியிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்போம்... 
வாருங்கள் நட்புகளே..

(நேரலை ஒளிபரப்பின் சுட்டிகளை வழங்கிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு அன்பான நன்றி)

29 August 2012

அரைநூற்றாண்டு கழித்து வந்துசேர்ந்த காதல்கடிதம்



 
 

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் வந்த புத்தகத்தைப் பற்றி முன்பு பார்த்தோம். நூலகத்தின் பத்திரிகைகளுக்கிடையில் சிக்கியிருந்த கடிதமொன்று அரை நூற்றாண்டுக்குப் பின் உரியவரைத் தேடிவந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? அதுவும் சாதாரணக் கடிதம் அல்ல, காதல் கடிதம்.
 

கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு முன் காதலி வான்னி தன் காதலன் க்ளார்க்குக்கு (அதுதான் அவர் பெயர்) எழுதிய கடிதம் அது. கல்லூரி திரும்புமுன் ஏன் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசலைன்னு வருத்தப்பட்டு கேட்டு எழுதியிருக்காங்க. ஆனால் அந்தக் கடிதம் க்ளார்க்கை என்ன காரணத்தாலோ வந்தடையவே இல்லை.
 

அவரும் படிப்பை முடிச்சிட்டு, ஊருக்கு வந்து தனக்காகக் காத்திருந்த வான்னியைக் கல்யாணமும் செய்து,  சேர்ந்து வாழ்ந்து,  நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, பின் விவாகரத்தும் பெற்று விட்டாராம். அதோடு இல்லை, அவர் மதம் மாறி முகம்மது சித்திக்காகவும் மாறிவிட்டாராம். சென்றவருடம்  அவரைத் தேடி வந்தடைந்திருக்கிறது அக்கடிதம்.
 

நான்கு ஒரு சென்ட் அஞ்சல்தலைகளைத் தாங்கி 1958 ஆம் வருட முத்திரையை ஏற்று நிற்கும் அக்கடிதம் பென்சில்வேனியாவிலிருக்கும் கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் பெட்டிக்கு சிலவாரங்கள் முன்புதான் வந்து சேர்ந்திருக்கிறது. வியப்புக்குரிய கடிதம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்த அவருடைய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் தற்போது இண்டியானாபோலிஸில் வசிக்கும் 74 வயதான சித்திக்கிடம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைக் கேட்ட சித்திக் சொல்லமுடியாத உணர்வுக்கலவையில் மிதக்கிறதா சொன்னாராம். இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தின் மேல் அத்தனையொன்றும் ஆர்வமில்லை, இருந்தாலும் ஒரு குறுகுறுப்போடக் காத்திருக்கிறேன்என்று சொன்னாராம்.
 

எல்லாம் சரி, கடிதத்தை உரியவர் பிரித்துப் பார்க்குமுன்பே அது ஒரு காதல் கடிதம் என்று எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? அதிலிருக்கும் அஞ்சல் தலைகளை வைத்துதான். காதலர்களுக்கென்று பிரத்யேக அஞ்சல்தலைகளான்னு ஆச்சர்யப்படாதீங்க. எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான அஞ்சல்தலைகள்தாம் அவை. ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால் புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ?)
 

தலைகீழ் மட்டுமில்லை, அஞ்சல் தலையின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பொருள் உண்டாம். சொல்லவா?
 

நேராக இருந்தால் - வியாபார விஷயம். 

தலைகீழாய் இருந்தால் - காதல், தனிமை, தாபம் 

தலைப்பகுதி வலப்பக்கம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - அன்பு முத்தங்கள்

தலைப்பகுதி இடப்புறம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - நான் உன்னை விட்டு நீங்கவே மாட்டேன் 

மூலைவிட்டத்தை முன்னிறுத்தி அஞ்சல் தலையின் மேற்பகுதி வலப்பக்கம் பார்த்திருந்தால் - என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? 

அதற்கு எதிர்திசையில் அதாவது தலை இடப்பக்கம் பார்த்தபடி இருந்தால் - உன்னை மணப்பது உறுதி.
 

பாருங்க, அந்தநாளிலேயே அமெரிக்கக் காதலர்கள் அஞ்சல்தலைகளை ஒட்டுவதிலேயே சங்கேத மொழியை உருவாக்கிக் காதலித்திருக்காங்க.
 

எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) 
 

இன்னும் ஒரு விஷயம், இந்திய அஞ்சல்துறை இம்மாதிரிக் கோணல்மாணலா  அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்டக் கடிதங்களை நிராகரிச்சிட்டா, அப்புறம் என்னைத் திட்டக்கூடாது. சரியா?
 

காதலுக்காக அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித் தெரியுமா? அஞ்சல் தலை சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களா சேகரிக்கிறேன். மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான பொழுதுபோக்கு அது.
 
**************************************************************
நன்றி: யாஹூ செய்திகள் (ஜூலை 16, 2011)

25 August 2012

பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளிக்க...




சென்னையில் நடைபெற உள்ள
 
உலகத் தமிழ்ப் பதிவர்கள் திருவிழா 
 
சிறப்புற நடைபெற என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

விழாவைக் கண்ணுற நான் தயார்.

என்னோடு கண்டுகளிக்க நீங்களும் தயாரா?
 
 
 

 
 
 
 
விழாப் பொறுப்புகளைத் தங்கள் தோள்மேல் சுமந்து
ஒற்றுமையுடனும் ஒன்றிப்புடனும் பணியாற்றும்
வலையுலக நண்பர்களுக்கும் தங்கள் இதயங்களில் சுமந்து
 பங்கேற்க விழையும் அன்பு உறவுகளுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். 
சாதி, மத, இன பேதங்களை மறந்து தமிழால் ஒன்றுபடுவோம்.
பதிவர் உலகின் ஒற்றுமை காப்போம்.  

8 July 2012

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் திரும்பிய புத்தகம்



1934 இல் மெக்கி என்னும் சிறுவனுக்கு வயது 13. அந்த வயதில் கதைப்புத்தகங்களை விரும்பாத குழந்தைகள் யார்? அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள மெளண்ட் கிளமெண்ட் பொது நூலகத்திலிருந்து அவன் எடுத்துச் சென்ற ஒரு கதைப்புத்தகம் அவனை வெகுவாக ஈர்த்தக் காரணத்தால் அதைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லாமல் போய்விட்டது. நாளை நாளை என்று ஒத்திப்போடப்பட்டு ஒரு தருவாயில் அது அவனது சொத்தாகவே மாறிவிட்டது.

இப்போது மெக்கியின் வயது 89. தன் பொக்கிஷங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அவருக்கு இப்புத்தகத்தை இப்போதாவது நூலகத்திடம் ஒப்படைத்துவிடச் சொல்லி மனசாட்சி படுத்தியதாம். உடனே செயல்படுத்திவிட்டார். எப்படி?

இந்தப் புத்தகத்தை இத்தனை நாள் தான் வைத்திருந்ததற்காக ஒரு மன்னிப்புக் கடிதமொன்றை எழுதி இந்தப்புத்தகத்துடன் வைத்து நூலகத்துக்கு தபாலில் அனுப்பிவிட்டார். ஏன் நேரில் போகவில்லைங்கறீங்களா? அவருக்குத் தெரியுமே, இந்தப் புத்தகத்துக்கான அபராதம் கட்டவேண்டியிருந்தால் அவருடைய சொத்தையே அழித்தாலும் முடியாது என்பது!

ஆனால் நூலகம் என்ன சொன்னது தெரியுமா? "அவர் அபராதம் கட்டத் தேவையில்லை, அவருடைய இந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய புத்தகத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்போறோம்" அப்படின்னு சொல்லி அந்தப் புத்தகத்தின் புதிய பிரதி ஒன்றையும் இலவசமா அவருக்கு அனுப்பியிருக்காங்களாம். எத்தனை வியப்பான செய்தி!

சரி, அப்படி திருப்பித் தரமுடியாதபடி அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? இருக்கிறது. ஒரு பாவப்பட்ட சிறுவனின் கதை அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல பெண் எழுத்தாளர் மேரி லூயிஸ் எழுதிய ‘A Dog Of Flanders’  என்ற புத்தகம்தான் அது.

குழந்தையிலேயே அநாதையாக்கப்பட்ட ஒரு சிறுவன் அவனது வறிய தாத்தாவால் வளர்க்கப்படுகிறான். அவனுக்குத் துணை ஒரு நாய். அதுவும் அவனைப்போலவே ஒரு பாவப்பட்ட ஜீவன். இருவருக்குள்ளும் உண்டான நட்பும் அதனோடு இழையோடும் அவன் வாழ்வும் அவர்களின் துயரமுடிவுமே கதை! இந்தக் கதை 1975 வாக்கில் தொலைக்காட்சித் தொடராகவும் 1999 இல் திரைப்படமாகவும் வந்துள்ளது. வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் காணுங்கள். ஒரு கட்டத்திலாவது நம்மையறியாமல் கண்ணீர் வெளிப்பட்டுவிடும்.


  youtube இணைப்பு கொடுத்திருக்கிறேன். முழுத்திரைப்படமும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. 

மேரி லூயிஸ் எழுதிய பல புத்தகங்கள் குழந்தைகளுக்கானவை. அவர் இயல்பிலேயே வாயில்லாஜீவன்களின்பால் பிரியமுள்ளவராகவும் அவற்றின் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் இப்படிக் காப்பாற்றப்பட்ட 30 நாய்கள் அவரால் வளர்க்கப்பட்டு வந்தனவாம். இப்படியொரு இளகிய மனம் படைத்தவர் மெக்கியின் இளகிய மனத்தை அவரது இளவயதில் ஈர்த்ததில் அதிசயம்தான் என்ன?
 ----------------------------------------------------------------------------------------------------