29 May 2011

கண்ணாடியின் காதல்



கொஞ்சநாளாகவே……..
அவள் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு
அவள்மீது காதல்!
அவளுக்குள்ளும் காதல் இருந்தது என்பதை
அவளது நடை உடை பாவனைகள்
சொல்லாமல் உணர்த்தின.

முன்னிலும் அழகாய்
வெளிப்பட்ட அவள் அழகை….
அதனிலும் அதிகமாய்க் காட்டி
அவளை மகிழ்வித்தது கண்ணாடி.

கண்ணாடி சொல்லத்தயங்கிய காதலை
அவளே கண்டுணர்ந்தவளாய்,
தினப்படி ஒப்பனைகளின் முடிவில்
தன் செவ்விதழ்களைக் குவித்து
அதன் மார்பில்
முத்தங்களைப் பதிக்கத் தொடங்கினாள்.
இங்குமங்குமாய் அவற்றை ஏற்று
ஏகக்களிப்பில் மிதந்தது கண்ணாடி.

பரபரவென விடியும் பொழுதுகளிலும்
பார்வையால் அதைத் தழுவிச் சென்றாள்.
கடக்கும் நொடிகளிலெல்லாம்
கண்சிமிட்டிக் கிளர்ச்சியூட்டினாள்.

கண்ணாடி தன்வசமிழந்தது.
அதீதக் காதலில் திளைத்த அது
அவளைப் பிரதிபலித்த பிம்பங்களை
தன்னுள் ரகசியமாய்ப் பதுக்கத்தொடங்கியது.

அவளும் தன் பிம்பங்களை
பரிசெனத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தாள்
வித வித உடைகளிலும்,
வெவ்வேறு ஒப்பனைகளிலும்!

காதல் போதையில் கிறங்கிக்கிடந்தவேளை
கையோடு ஒருவனை அழைத்துவந்தாள்.
கண்ணாடிமுன் அவனைக் கட்டியணைத்துநின்று
பொருத்தம் எப்படி என்று
பெருமிதம் பொங்கிவழியக்கேட்டாள்.

முத்தங்கள் யாவும் ஒத்திகையென்று
உண்மை உணர்ந்த கண்ணாடி
உள்ளுக்குள் உடைந்து போனது.

அடுத்த நொடி குரூரம் பெற்றுக்
குதறியது அவள் பிம்பங்களை!

அன்று முதல் அவளை …..
அகோரமாய்க் காட்டத்தொடங்கியது,
கண்ணாடி!

11 comments:

  1. கண்ணாடியின் காதலை கோதையவள் அறியவில்லை.
    அருமை..

    http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.html

    ReplyDelete
  2. பொய்யே சொல்லாதாம் என் வீட்டுக் கண்ணாடி...அதை ஞாபகப்படுத்துகிறது கவிதை !

    ReplyDelete
  3. @ அன்புடன் மலிக்கா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா.

    @ ஹேமா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  4. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_3765.html

    ReplyDelete
  5. வித்தியாசமான, சுவையான கரு.

    picture of dorian gray படித்திருக்கிறீர்களா? கவிதைக்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. மன விகாரங்களை எடுத்துக்காட்டும் மாயக்கண்ணாடி (மனக்கண்ணாடி?) பற்றிய கதை உங்கள் கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  6. @ உழவன்

    //romba nallaa irukkunga..//

    வருகைக்கு நன்றி உழவன்.

    ReplyDelete
  7. @ தம்பி கூர்மதியன்,

    வலைச்சரத்தில் என் அறிமுகத்துக்கு மிகவும் நன்றி தம்பி கூர்மதியன்.

    ReplyDelete
  8. @ அப்பாதுரை,

    கவிதை குறித்த உங்கள் கருத்துக்கு நன்றிங்க அப்பாதுரை. நீங்க குறிப்பிட்டிருக்கிற புத்தகத்தை நான் படிச்சதில்லை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  9. குரூரம் பெற்றுக் குதறிய கண்ணாடி
    கனமான உணர்வுடன் கருத்தைக் கவர்ந்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. கருத்துரைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.