17 May 2011

அதிசய முகமூடிகள்



நம் ஒவ்வொரு சந்திப்பும் பெரும்பாலும்
அறிமுகப்படலத்தோடே நிறைவடைந்துவிடுகின்றன,
உன் அதிசயமுகங்கள் காரணமாய்!

உன்னை அறியாமுகமாய் எண்ணி விலகும்
என்னைப் பிடித்து நிறுத்தி
அறிமுகமில்லையா என்று அதிசயிக்கிறாய்!

எத்தனை முகங்களைத்தான்
உன்வசம் வைத்திருக்கிறாய்?
முகங்களை மாற்றியென்னைக்
கலவரப்படுத்துவதே
உனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு போலும்!


பொருத்தப்பட்ட போலி முகங்களுக்குப்
பின்னால் புதைந்திருக்கும்
உன் மெய்முகம் மீட்கப் போராடி தோற்கிறேன்!



சில அகோர, விகார முகங்கள் தவிர்த்து
அழகுமுகம் காணநேரும் சமயங்களிலும்

அதனூடே இழையோடும்
அந்தப் புன்னகை பறைசாற்றும்
துகொண்ட கபடம்!
திடீர் திடீரென முகங்களை மாற்றி
திணறச்செய்யும் உன்னிடம்
எனக்குப் பிடித்தமான
பழையமுகம் ஒன்று இருந்ததைப்
பற்றிப்பேசி
பரிச்சயப்படுத்த முனைகிறேன்!

நீயோ...
அலட்சியமுகம் அணிந்துகொள்கிறாய்!
தொடர்ந்த என் நச்சரிப்பைத் தாளாமல்
அதைக்கழற்றியெறிந்து ஆவேசமுகமணிந்து
ஆக்ரோஷத்துடன் அவ்விடம் விட்டகல்கிறாய்!

அவசரத்தில் நீ விட்டுச்சென்ற
அத்தனை முகங்களையும்


பத்திரப்படுத்துகிறேன்,
நம் அடுத்த சந்திப்பின்போது
உனக்கு நிகராய்
நானும் அணிந்துகொள்ள ஏதுவாய்!

11 comments:

  1. முகமூடி..

    நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அருமை&முக மூடி படங்களும் நல்லாயிருக்கு

    ReplyDelete
  3. //அவசரத்தில் நீ விட்டுச்சென்ற
    அத்தனை முகங்களையும்
    பத்திரப்படுத்துகிறேன்,//

    நயமான சிந்தனை. நன்று மேடம்!

    ReplyDelete
  4. எப்போதாவது சிறு கீற்றாக உண்மை முகம் தெரியும்போது அதை நம்ப மறுத்து பொய்முகம் சூடிக்கொண்டுவிடுவோம். இதைதான் swarm intelligence என்பார்கள். ஒரு செயலில் நாமும் ஐக்கியமாகிவிடுவது.

    ReplyDelete
  5. நன்றி லோகு

    நன்றி ஆச்சி

    நன்றி மோகன்ஜி

    கருத்தூட்டத்துக்கு நன்றி சாகம்பரி.

    ReplyDelete
  6. கவிதை அழகு கீதா.நாம் எல்லோருமே சுய முகத்தோடு உலவுவதாகத் தெரியவில்லை.இதில் உங்கள் காதலர் மட்டும் விதிவிலக்கா என்ன !

    ReplyDelete
  7. @ ஹேமா

    உண்மைதான் ஹேமா. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றிப் பேசுகிறோம். நம் முகமூடியைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

    ReplyDelete
  8. வாங்க ...
    அருமையான சிந்தனை மற்றும் அதற்கேற்ற கவிதை..

    ReplyDelete
  9. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...
    வந்துப்பாருங்கள்..

    புதுசு புதுசா சொல்றாங்கயா..

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_20.html

    ReplyDelete
  10. @ # கவிதை வீதி # செளந்தர்

    வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்கள். மிக மிக நன்றி செளந்தர். தொடர்ந்து நல்ல பதிவுகள் தரவேண்டும் என்னும் பொறுப்புணர்வு அதிகமாகிவிட்டது.

    @ அப்பாவி தங்கமணி

    உங்கள் எழுத்துகளின் ரசிகையாகிவிட்டேன். அத்தனை அற்புதமாக எழுதுகிறீர்கள். உங்களிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததில் மெத்த மகிழ்ச்சி தங்கமணி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.