ஒரு படைப்பாளிக்கு மகிழ்வும் நெகிழ்வும் தரக்கூடியவை படைப்புகளுக்கான அங்கீகாரங்கள் என்பதில் எந்தப் படைப்பாளிக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அப்படியான என் சமீபத்திய சந்தோஷங்கள் சிலவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும்பொருட்டும் எனக்கான ஆவணச்சேகரிப்பாகவும் இங்கு அவற்றைப் பகிர்கிறேன்.
ஆஸ்திரேலிய
காடுறை மாந்தர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஆஸ்திரேலிய சிறுகதை மன்னர் ஹென்றி லாசன் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கதைகள் சிலவற்றை நான் தமிழில் பெயர்த்ததும், அவை ‘என்றாவது ஒருநாள்’ என்ற நூலாக அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருப்பதையும் பலரும் அறிவீர்கள். இந்நாள்வரை அந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு எதையும் முறையாக செய்யவில்லை என்றாலும் நட்புகள் பலரையும் சென்றடைந்து அவர்களுடைய அறிமுக உரைகளையும் விமர்சனங்களையும் புகழுரைகளையும் என்னிடத்தில் கொணர்ந்து குவித்தது.
மகிழ்ச்சி 1
சென்ற ஞாயிறு (01-05-16) அன்று சிட்னியில் உள்ள ஹோம்புஷ் பள்ளி வளாகத்தில் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தமிழ்ப் படைப்பாளர் விழாவில் நூலறிமுகம் நிகழ்ச்சியில் என்னுடைய நூலும் இடம்பெற்றது ஒரு நல்லங்கீகாரம்.
![]() |
| நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுடன்... |
![]() |
| (புகைப்படங்களுக்காய் தோழி மணிமேகலாவுக்கு என் அன்பான நன்றி) |
‘என்றாவது
ஒரு நாள்’ நூலை அவ்விலக்கியக்கூட்டத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினை உருவாக்கித் தந்ததோடு, அந்நூலுக்கான அறிமுக உரையையும் தானே வழங்க முன்வந்த நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுக்கு என் அன்பான நன்றி.
ஆஸ்திரேலிய
தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வானொலியில் பல வருடங்களாக 'பண்பாட்டுக் கோலங்கள்' என்னும் நிகழ்ச்சியை வழங்கிவரும் இவர், 'என்றாவது ஒரு நாள்' நூலை வாசித்தபிறகு,
அவ்வானொலிக்காக என்னை
நேர்காணல்
கண்டதை நன்றியுடன் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். நேர்காணல் நேரலையில் சென்றவருடம் ஒலிபரப்பானது.
மகிழ்ச்சி 2
இத்தகு
அங்கீகாரங்களால்
அகமகிழ்ந்திருக்கும்
வேளையில்
தற்செயலாய்
அறிய நேர்ந்த மற்றொரு தகவல் மகிழ்வை மேலும் கூட்டுவதாக உள்ளது.
சிங்கப்பூரில் தலைமை
நூலகம் உள்ளிட்ட 21 நூலகங்களிலும், கனடாவில் ஒரு நூலகத்திலும் என்னுடைய ‘என்றாவது ஒருநாள்’ நூல் இடம்பெற்றுள்ளது என்பதை ஒரு மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட முகமறியா தமிழார்வல நெஞ்சங்களுக்கு என் அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.
மகிழ்ச்சி 3
பாரீஸில்
வசிக்கும் ஃபேஸ்புக் தோழி ஒருவர், சென்றவாரம் அனுப்பிய செய்தியில், தற்சமயம் உங்களுடைய ‘என்றாவது ஒருநாள்’ நூலைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு உங்களுடைய படைப்புகள் மேலும் இருந்தால் வாசிக்கத்தாருங்கள் என்று கேட்டபோது, உவகையின் உச்சம் சென்றேன். வாசக அங்கீகாரம் ஒரு பெரும் அங்கீகாரமன்றோ?
ப்ரதிலிபியில் என்னுடைய
முதல் மின்னூல் வெளியானது மகிழ்வின் ஏடுகளில் மற்றொன்று. ‘அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?’ என்னும் 32 அத்தியாயங்கள் கொண்ட அத்தொடர்கதையின் முகப்பு ஓவியத்தை வழங்கிய ஓவிய நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு என் அன்பான நன்றி. இவர் இனியவை கூறல் என்ற வலைப்பூ வழியே பதிவுலக நட்புகளுக்கு பரிச்சயமானவர்.
இவைபோக, பரபரப்பான பதிவுலகில் சகபதிவர்களின் மனத்தில் நமக்குமொரு இடம் ஒதுக்கப்பட்டு நம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்றால் கூடுதல் மகிழ்விற்கு சொல்லவும் வேண்டுமா?
மகிழ்ச்சி 5
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பகிர்ந்திருந்த குடி குறித்த என் கவிதையை தன்னுடைய 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் பகிர்ந்து சிறப்பித்தமைக்காகவும், கோடைவகுப்புகள் குழந்தைகளுக்கு நன்மையா தீமையா என்ற தலைப்பில் மற்றப் பதிவுலகப் பிரபலங்களின் கருத்துகளோடு என்னுடைய கருத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியமைக்காகவும் நண்பர் மதுரைத்தமிழன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.





