Showing posts with label ஆஸ்திரேலியாவின் அதிசயம். Show all posts
Showing posts with label ஆஸ்திரேலியாவின் அதிசயம். Show all posts

2 May 2020

குயில் தேனீ

தோட்டத்துப் பிரதாபம் - 13

நியான் குக்கூ தேனீ

இந்தத் தேனீயின் பெயர் Neon cuckoo bee (Thyreus nitidilus). நியான் போல ஒளிரும் நீலம் மற்றும் கருப்பு வண்ணம் கொண்டது என்பதால் நியான் சரி. அதென்ன குக்கூ? நீங்கள் நினைப்பது சரிதான். காக்கையின் கூட்டில் திருட்டுத்தனமாய் முட்டையிடும் குயிலைப் போலவே இதுவும் பிற தேனீக்களின் கூடுகளில் திருட்டுத்தனமாய் முட்டையிடுவதால் குக்கூ என்னும் பெயர். தேனீக்களில் கூட குயில் தேனீக்கள் உண்டென்பதை அறிந்து வியப்பு மேலிடுகிறது.

பெண் தேனீக்கள் முட்டையிட இடம் தேடி அலைய வேண்டாம், கூடு கட்ட வேண்டாம், முட்டையிலிருந்து வரும் புழுவுக்காக உணவு சேகரித்துக் கொண்டுவர வேண்டாம். செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வேறொரு தேனீ கட்டும் கூட்டுக்குள் திருட்டுத்தனமாய் புகுந்து தன் முட்டையை இட்டுவிட்டு வந்துவிடவேண்டும். அவ்வளவுதான். மேற்கொண்டு ஆகவேண்டியவற்றை இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வா பார்த்துக்கொள்ளும்.  

நியான் குக்கூ தேனீ

ஆஸ்திரேலியாவின் தேனீயினம் பலவும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. பெண் தேனீக்கள் இண்டு இடுக்குகளிலும், மண்ணைத் துளைத்தும், சுவரின் துவாரங்களிலும் தங்கள் கூடுகளை அமைத்து முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்காக கூடவே தேனும் மகரந்தமும் வைத்து கூட்டின் வாயிலை மூடுகின்றன. Blue banded bee எனப்படும் நீலவரித் தேனீயும் அவற்றுள் ஒன்று. நியான் குக்கூ தேனீயின் நிறம் கிட்டத்தட்ட நீலவரித் தேனீயை ஒத்திருப்பதால் அவற்றை ஏமாற்றி தங்கள் வாரிசுகளை வளர்ப்பது அவற்றுக்கு சுலபமாக உள்ளது 

ஏமாற்றப்படும் நீலவரித் தேனீ

பெண் நியான் குக்கூ தேனீ, பெண் நீலவரித் தேனீக்கள் முட்டையிடும் இடங்களைப் பார்த்துவைத்துக் கொள்ளும். பெண் நீலவரித் தேனீக்கள் முட்டையிட்டுவிட்டு, தேனும் மகரந்தமும் எடுத்துவர சென்றிருக்கும் சமயத்தில், பெண் நியான் குக்கூ தேனீ உள்ளே நுழைந்து தன் முட்டையை இட்டுவிட்டு வந்துவிடும். இது எதுவும் அறியாத நீலவரித் தேனீ உள்ளே உணவை வைத்து துவாரத்தை மூடிவிடும். குயிலினத்தைப் போலவே இங்கும் முதலில் பொரிவது திருட்டுத்தனமாய் இடப்பட்ட முட்டைதான். முதலில் வெளிவரும் நியான் குக்கூ தேனீயின் லார்வா, உள்ளே இருக்கும் உணவைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுவாக உருமாறிக்கொள்ளும். சில நாள் கழித்து பொரிந்து வெளிவரும் நீலவரித் தேனீயின் லார்வா உணவின்றி இறந்துபோய்விடும். உரிய காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு நியான் குக்கூ தேனீயின் வாரிசு வெளிவந்து தன் வாழ்க்கையைத் தொடங்கும்.


நியான் குக்கூ தேனீ

இரண்டு வகை தேனீக்களுமே எங்கள் தோட்டத்துக்கு வருகை தருகின்றன என்றாலும் நீலவரித் தேனீயைப் படமெடுக்கக் கிடைக்கும் வாய்ப்பு நியான் குக்கூ தேனீயைப் படமெடுக்க கிடைப்பதில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் விருட்டென்று வந்துவிட்டு மறையும் இவற்றை ஒன்றிரண்டு படம் எடுப்பதற்குள்ளாகவே படாத பாடு பட்டுவிட்டேன். பல மாதங்களாக கேமராவுக்குள் சிக்காமல் டிமிக்கி கொடுத்துவரும் அதனை க்ளோசப்பில் படம்பிடிக்கும் வாய்ப்பொன்று அதிசயமாய்க் கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு பூங்கா ஒன்றில் கீழே உள்ள படங்களில் இருக்கும் தேனீயைக் கண்டேன். இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் எப்படி உட்கார்ந்திருக்கிறது? அங்கே பூ கூட இல்லையே? என்ற சந்தேகம் அருகில் சென்றதும் விலகியது. அது இறந்துபோயிருந்தது.  எப்படி அதன் உடல் காற்றினால் விழாமல் காய்ந்த குச்சியின் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது இன்னமும் எனக்கு ஆச்சர்யம்தான். ஆய்வகங்களில் இறந்துபோன பூச்சிகளின் உடலை பதப்படுத்தி குண்டூசியால் குத்தி வைத்திருப்பார்களே, அது போல்தான் இருந்தது அந்தக் காட்சி. தோட்டத்துக்கு வரும் நியான் குக்கூ தேனீயை அருகில் படமெடுக்க முடியாமல் நான் படும் பாட்டைப் பார்த்து, இயற்கை எனக்காகவே செய்துவைத்திருக்கும் ஏற்பாடு போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் படமெடுத்த பிறகுதான் ஒன்று கவனித்தேன். இது நியான் குக்கூ தேனீ போலவே இருந்தாலும் வரிகளுக்குப் பதிலாக இதன் உடலில் புள்ளிகள் இருந்தன. நியான் குக்கூ தேனி போலவே இதுவும் நீலவரித் தேனீயின் கூட்டைக் குறிவைப்பவைதாம். குயில் தேனீக்களுள் இன்னொரு வகையான chequered cuckoo bee (Thyreus caeruleopunctatus) தான் இது. 


இறந்துபோன நியான் குக்கூ தேனீ

இறந்துபோன நியான் குக்கூ தேனீ 

குக்கூ தேனீக்கள் உலகின் பல நாடுகளிலும் காணப்பட்டாலும் நியான் குக்கூ தேனீக்கள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளிலும் காடுகளிலும், புதர்வெளிகளிலும் வசிக்கின்றன. இதன் உயிரியல் பெயர் Thyreus nitidulus என்பதில் உள்ள nitidus என்பதற்கு லத்தீனில் 'பளபளப்பான' என்று பொருள். உண்மையில் பளபளப்பான நீலநிறத்தில் காணப்படும் இவற்றை, பறக்கும் நிலையிலும் சட்டென்று நம்மால் அடையாளம் காணமுடியும் என்பது இவற்றின் சிறப்பு.

&&&&&

(பிரதாபங்கள் தொடரும்) 

26 February 2020

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து...


இந்தியாவில் குறிப்பிட்ட நிலப்பகுதியில் டன் கணக்கில் தங்கத்தின் இருப்பு உள்ளதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கம் தங்கம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் தங்கம் மற்றும் இதர கனிம வளங்கள் குறித்து எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. 2018-இல் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியின் எழுத்தாக்கத்தை இங்கே பகிர்கிறேன்.

&&&&& 

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து 
காதல் என்னும் சாறுபிழிந்து
தட்டித்தட்டி சிற்பிகள் செய்த உருவமடா

காதலன் காதலியை வர்ணிக்கும் இந்தக் கணக்குப்படி ஒரு பெண்ணை உருவாக்கவேண்டுமெனில் எத்தனை கிலோ கட்டித்தங்கம் தேவைப்படும்.. அப்படியெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை, ஏதோ கவித்துவத்துக்காக கவிஞர் சொல்லியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் கிலோ கணக்கில் கட்டிக்கட்டியாக தங்கம் கிடைக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் அது சாத்தியமே.

ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிப்பவை தங்கச்சுரங்கங்கள். தங்கச்சுரங்கங்களில் தங்கம் மண்ணோடு மண்ணாக கலந்து பொடியாகவோ துகள்களாகவோ, கிடைப்பது இயல்பு. மிஞ்சிப்போனால் 2 கிலோ, 3 கிலோ என்ற அளவில் கிடைக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் தூக்கமுடியாத எடையுடன் கட்டிக்கட்டியாகக் கிடைத்தது. ஆம். ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் தனித்துவமானவை golden nuggets எனப்படும் தங்கக்கட்டிகள்.



தங்கம் மட்டுமாவைரம், வெள்ளி, யுரேனியம், அலுமினியம், இரும்பு, ஈயம், துத்தநாகம், செம்பு, நிக்கல், குரோமியம், லித்தியம், கோபால்ட், படிகப்பாறைகள் முதல் நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு வரை ஆஸ்திரேலிய மண்ணை அகழ அகழக் கிடைக்கும் கனிமங்கள் ஏராளம்.

1851-ல் தொடங்கியது Gold rush எனப்பட்ட தங்க ஓட்டம். அதை ஓட்டம் என்பதை விடவும் பாய்ச்சல் எனலாம். உலகெங்கிலுமிருந்து ஏராளமான மக்கள் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் குவிந்தனர். தங்கம் முதலில் கண்டறியப்பட்டது பல்லாரட் பகுதியில்தான். தோண்டுமிடமெல்லாம் தங்கம் அகப்பட்டது. மவுன்ட் அலெக்ஸாண்டர் பகுதியோ முன்னதை விடவும் அதிகமான தங்கத்தை வாரிவழங்கியது. இந்தப்பகுதியிலிருந்து மட்டும் ஏழு மாதங்களில் 1200 கிலோ எடையுள்ள தங்கம் சந்தைக்கு அனுப்பப்பட்டது. 1856-ல் மட்டும் ஆஸ்திரேலியாவில் வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு சுமார் 97 டன்.


இன்றைய நிலவரப்படி உலகில் பாக்ஸைட், நிக்கல், ஓபல் கற்கள் உற்பத்திகளில் முதலிடத்திலும், தங்கம், இரும்பு உற்பத்திகளில் இரண்டாமிடத்திலும், வைரம், யுரேனியம், இயற்கைவாயு உற்பத்திகளில் மூன்றாமிடத்திலும் ஆஸ்திரேலியா இருப்பதைக் கொண்டே இம்மண்ணின் கனிம வளத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறதல்லவா? ஆஸ்திரேலியாவின் சுரங்கங்களில் வேலைவாய்ப்பு மூலம் சுமார் 1,30,000 குடும்பங்கள் நேரடிப்பயன் பெறுகின்றன.




தங்கம் உற்பத்தியில் சீனாவுக்கு (400 டன்) அடுத்த இடத்தில் வருடத்துக்கு சுமார் 312 டன் அளவென்னும் சிறப்போடு ஆஸ்திரேலியா இரண்டாமிடத்தில் உள்ளது. விக்டோரிய மாநிலத்தின் பல்லாரட்டும் பென்டிகோவும் ஆஸ்திரேலியாவின் தங்க நகரங்கள் என்ற பெருமைக்குரியவை

Replica of Welcome nugget

உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி முதலில் பல்லாரட்டில்தான் கிடைத்தது. 1858-ல் கண்டெடுக்கப்பட்ட அதன் எடை 69 கிலோ. இந்தக் கட்டித் தங்கத்தை எந்த சிற்பியும் தட்டித்தட்டி பெண்ணுருவாக்கவில்லை. முதலில் கிடைத்த தங்கக்கட்டி என்பதால் அதை வரவேற்கும் முகமாக அதற்கு Welcome nugget என பெயரிடப்பட்டது. அதுவரை இவ்வளவு பெரிய தங்கக்கட்டியை எவருமே பார்த்ததில்லை என்பதால் அதைப் பார்த்த முதல் இரண்டு தொழிலாளிகளும் நம்பமுடியாத அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டனராம். இயற்கையாகக் கிடைத்த முதல் பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பைப் பெற்ற அது, லண்டன் சந்தையில் உருக்கப்பட்டு நாணயங்களாக மாற்றப்பட்டதாம். ஆனால் அதற்குமுன் அச்சுஅசலாக அதன் நகலுரு தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டது.




அதன்பின் பதினொரு வருடங்கள் கழித்து 1869-ல் விக்டோரியா மாநிலத்தின் டுனாலி பகுதியில் மீண்டும் அதுபோல ஆனால் அதை விடவும் மூன்று கிலோ அதிகமாக 72 கிலோ எடையில் பூமிக்குக் கீழே கையெட்டும் தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற பெயரை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அதற்கு welcome stranger nugget என்று பெயரிடப்பட்டது. ஆனால் அதன் அருமை உணரப்படுமுன்னரே உருக்கப்பட்டு தங்கப்பாளமாக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பது ஏமாற்றம் தரும் செய்தி. உருக்கினால் பெறப்படும் தங்கத்தின் மதிப்பு மூலத்தங்கத்துக்கு இருக்காது எனினும் இப்படி பெருங்கட்டியாக மண்ணிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் அரிய பொருள் என்பதால் அது நிச்சயம் விலைமதிக்கவியலாத ஒன்றுதான்.


Hand of faith

மூன்றாவது இடத்தைப் பெறுவது 1980-ல் விக்டோரியா மாநிலத்தின் Wedderburn பகுதியில் கண்டெடுக்கப்பட்ட hand of faith என்று பெயரிடப்பட்டுள்ள 27 கிலோ எடையுள்ள தங்கக்கட்டியாகும். இது கிடைத்த கதை மிக சுவாரசியம். நம்ப முடியாததும் கூட. மாங்கு மாங்கென்று இரவு பகலாக சுரங்கம் வெட்டித் தங்கம் தேடும் தொழில்முறைப் பணியாளர்களைத் தவிர்த்து, சுரங்கத்தொழிலில் அனுபவமும் பயிற்சியும் இல்லாத சிலரும் பொழுதுபோக்காகத் தங்கத்தேடலில் ஈடுபடுவதுண்டு. கைவிடப்பட்ட சுரங்கங்களிலும் மலையெனக் குவிக்கப்பட்ட மண்ணிலும் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடியலைவர். அப்படி ஒருவர் metal detector எனப்படும் உலோகத்தைக் கண்டறியும் கருவியைக் கொண்டு மண்ணை ஆராய்ந்துகொண்டு வந்தபோது ஓரிடத்தில் தங்கம் இருப்பதாக கருவி காட்ட, தோண்ட ஆரம்பித்தார். ஒரு அடிக்கும் குறைவான ஆழத்திலேயே 27 கிலோ எடையுள்ள இந்தப் பெரிய தங்கக்கட்டியைக் கண்டறிந்தார். இதுதான் அதிர்ஷ்டம் என்பது போலும். இன்னும் மூல வடிவம் சிதைவுறாமல் பாதுகாக்கப்பட்டுவரும் அது, பத்தாண்டுகளுக்கு முன்புதான் லாஸ் வேகாஸில் உள்ள கோல்டன் நக்கட் கஸீனோவுக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டதாம். இப்போது உருவளவில் மாறாதிருக்கும், இயற்கையாய்ப் பெறப்பட்ட தங்கக்கட்டிகளில் இதுவே மிகப்பெரியது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

 Holtermann with Holtermann's nugget 

இதற்கிடையில் 1872 இல் நியூ சௌத் வேல்ஸின் ஹாக்கின்ஸ் மலைப்பகுதியில் 286 கிலோ அளவிலான தங்கக்கட்டி கிடைத்தது. Holtermann’s nugget என்று பெயரிடப்பட்ட அது, அவ்வளவு பெரியதாக இருந்தும் உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பை இழந்தமைக்குக் காரணம், அதன் மொத்த எடையில் 32% அதாவது 93 கிலோ மட்டுமே சுத்தமான தங்கம், மற்றவையெல்லாம் குவார்ட்ஸ் கற்கள் என்பதால்.   

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில்மக்கள் பெருக்கத்தில்.. வாழ்க்கை முறையில்.. அரசியலில்.. என யாவற்றிலும் பெருந்தாக்கத்தை உண்டாக்கிய தங்க ஓட்டம் பற்றி சொல்லும்போது தங்கச்சுரங்கத் தொழிலாளிகள் நடத்திய யுரேகா போராட்டம் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது

தங்க ஓட்டம் ஆரம்பித்த பிறகு சுரங்கத்தொழிலாளிகளுக்கு சுரங்க வரி விதிக்கப்பட்டது. மாதம் 30 ஷில்லிங் என்பது தங்கம் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாமல் தெளிவற்ற எதிர்காலத்தை நோக்கி அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு எட்டாப்பணம். நான்கு மாதங்களில் அது 60 ஷில்லிங் என்றானது. மண்ணைத் தோண்டித் தோண்டி சுரங்க ஏற்றங்கால்களை இறக்கி இறக்கி தங்கம் கிடைக்காமல் வெற்றுக்கைகளோடு வேறிடம் தேடிக் களைத்து, வரிகட்டவும் வக்கற்றுத் தொய்ந்திருந்த ஏழைத் தொழிலாளிகளின் நெஞ்சம், வெடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தது. சுரங்க அனுமதிக்கான வரி ரசீதுகளோடு தொழிலாளிகளும் அரசால் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1854 அக்டோபர் ஆறாம் நாள் அரசுக்கெதிரான போராட்டத்துக்கான வித்து விதைக்கப்பட்டது. பல்லாரட்டின் யுரேகா விடுதியில் தங்கியிருந்த ஜேம்ஸ் ஸ்கோபீ என்ற சுரங்கத் தொழிலாளி மூன்று காவலர்களாலும், விடுதி முதலாளியாலும் அடித்துக் கொல்லப்பட்டார். நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செல்வாக்காலும் பண பலத்தாலும் விடுதி முதலாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

யுரேகா போராட்டம்

ஆத்திரமடைந்த சுரங்கத் தொழிலாளிகள் யுரேகா விடுதிக்கு தீவைத்துக் கொளுத்தினர். சுமார் பன்னிரண்டாயிரம் சுரங்கத் தொழிலாளிகள் ஒன்றிணைந்தனர். தங்களுக்கென ஒரு அமைப்பையும் கொடியையும் உருவாக்கினர். தங்கள் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இறுதிவரை உண்மையாகப் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுரங்க அனுமதித்தாள்கள் கொளுத்தப்பட்டன. இவர்களுக்கு எதிராக பெரும் காவல்படை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பெரிதாய் வெடித்தது. தொழிலாளர்கள் உருவாக்கி வைத்திருந்த தடுப்பரண்கள் தகர்க்கப்பட்டன. தடியடிகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. காயமுற்றவர்கள் மேலும் மேலும் காயமுறுவதைக் காணப்பொறுக்காதப் பெண்களும் போராட்டக்களத்தில் இறங்கினர். காயமுற்றவர்களைக் காப்பாற்றி அடிகளைத் தங்கள் உடல்களில் தாங்கிக்கொண்டனர். தொழிலாளிகள் மற்றும் அவர் குடும்பத்தார் மீதான இக்கடுமையான தாக்குதலை, கொஞ்சமும் மனித்தன்மையற்ற செயலென்று பிற்பாடு விசாரணைக் கமிஷன் கருத்துரைத்தது.

கிளர்ச்சியா புரட்சியா என்று இன்றும் வாதத்துக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும் இப்போராட்டத்தின் இறுதியில் கைதாகி தண்டனை அனுபவித்தவர்கள் அநேகம். போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் 27 பேர் என்று ஆவணப்பதிவில் இருந்தாலும் உண்மையான எண்ணிக்கையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. குறைந்தது 60 பேராவது இருக்கக்கூடும் என்கிறார் க்ளேர் ரைட் என்னும் வரலாற்று ஆசிரியர்.

மண்வளம் ஒரு பக்கம்.. மனிதவளம் மறு பக்கம்.. இரண்டுக்கும் இடையிலான பிணைப்பும் போராட்டமும் எல்லாக் காலத்தும் உண்டென்பதன் சாட்சியாய் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட கடந்தகால நிகழ்வது.   
&&&&   


22 October 2018

கஸ்தூரி எலிக்கங்காரு







பார்ப்பதற்கு எலி போலவே இருப்பதாலும் இவற்றின் உடலிலிருந்து கஸ்தூரியின் மணம் வீசுவதாலும் இவை கஸ்தூரி எலிக்கங்காரு (Musky rat-kangaroo) எனப்படுகின்றன. இதன் உயிரியல் பெயர் Hypsiprymnodon moschatus என்பதாகும். Moschatus என்றால் லத்தீன் மொழியில் கஸ்தூரி என்று பொருள். கங்காரு இனத்திலேயே மிகச்சிறிய கங்காருகள் இவைதான். வால் உள்ளிட்ட உடலின் நீளம் 40 - 50 செ.மீ. தான் இருக்கும். எடை அதிகபட்சம் 680 கிராம். Hypsiprymnodontidae குடும்பத்தின் ஒரே உறுப்பினர் என்பதோடு சுமார் 20 மில்லியன் ஆண்டுகாலமாய் ஆஸ்திரேலிய மண்ணில் வாழ்ந்துவரும் தொன்மப் பெருமையும் இவற்றுக்கு உண்டு.

மற்ற கங்காருகளிடமிருந்து வேறுபடுத்தும் மேலும் பல சிறப்பியல்புகள் இவற்றுக்கு உண்டு. முக்கியமாய் இவை பகல்விலங்குகள். பகலில் இரைதேடி உண்டு இரவில் உறங்கி ஓய்வெடுக்கும். இவற்றால் எளிதில் மரமேற முடியும். இவற்றின் பாதங்களின் பின்புறம் அமைந்திருக்கும் பெருவிரல்கள் அதற்கு உதவுகின்றன. கோரைப்பற்களும் தாடை அமைப்பும் மட்டுமல்ல, பிற கங்காருகளைப் போல பின்னங்கால்களை மட்டும் ஊன்றித் தாவிப் போகாமல் முயல் போல நான்கு கால்களாலும் தத்திப்போகும் இயல்பிலும் மற்ற கங்காருகளிடமிருந்து வேறுபடுகின்றன.

இவை ஒரு ஈட்டுக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனக்கூடியவை. பிற கங்காருகள் ஒரு குட்டிதான் ஈனும் என்பது குறிப்பிடத்தக்கது. 19 நாள் கர்ப்பத்துக்குப் பிறகு பிறக்கும் குட்டிகள் தாமே ஊர்ந்து சென்று தாயின் வயிற்றுப்பையை அடைகின்றன. அங்கே ஆறு மாதங்கள் பாலைக் குடித்து வளர்ந்து முழு வளர்ச்சி அடைகின்றன. பிற கங்காரு இனத்தைப் போல அடுத்தக் கருவை கருப்பையில் உறைநிலையில் பத்திரப்படுத்திவைக்கும் தன்மை இவற்றுக்குக் கிடையாது. அதனால் குட்டிகள் பையை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிறகே அடுத்த ஈட்டுக்கான இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. குட்டிகள் ஒரு வருடத்தில் பருவ முதிர்ச்சி அடைகின்றன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் நான்கு வருடங்கள். 

இவை மழைக்காட்டுப் பகுதிகளில் அடர்த்தியான புதரில் காய்ந்த இலைகளைக் கொண்டு கூடு கட்டி அதில் வசிக்கின்றன. கூடுகட்டத் தேவையான பொருட்களை போஸம்களைப் போலவே இவையும் வாலால் சுருட்டி எடுத்து வருகின்றன. கீழே விழுந்து கிடக்கும் பழங்கள், கொட்டைகள், பூஞ்சைகள் மற்றும் புழு பூச்சி போன்ற சிற்றுயிர்கள்தான் இதன் உணவு

அதிகமாய்ப் பழங்கள் பழுத்துதிரும் காலங்களில் தேவைக்குப்போக எஞ்சிய பழங்களையும் கொட்டைகளையும் எடுத்துக் கொண்டுபோய் ஆங்காங்கே மண்ணில் குழிதோண்டிப் புதைத்து வைப்பதோடு வேறு யாரும் கவர்ந்து செல்லாதிருக்க, மேலே, இலைதழைகளைப் போட்டு மூடிவிடுகின்றன. கண்டுகொள்ளப்படாத பல, காலப்போக்கில் முளைவிட்டு வளர்ந்து பெருமரங்களாகி வனத்தை வளப்படுத்துகின்றன. மழைக்காடுகளின் தோட்டக்காரர்கள் என்று காஸோவரி பறவையையும் கஸ்தூரி எலிக்கங்காருவையும் தாராளமாகச் சொல்லலாம்.


படம் உதவி - விக்கிபீடியா