Showing posts with label SBS Tamil Radio. Show all posts
Showing posts with label SBS Tamil Radio. Show all posts

16 March 2024

உலகின் தொன்மையான மழைக்காடு

 மழைக்காடு என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது உலகிலேயே மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துகிடக்கும் அமேசான் மழைக்காடுதான். ஆனால் உலகின் மிகப் பழமையான மழைக்காடு இருப்பது ஆஸ்திரேலியாவில்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? சுமார் 180 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் டெயின்ட்ரீ மழைக்காட்டுடன் ஒப்பிடும்போது 55 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் அமேசான் எல்லாம் சிறுகுழந்தை எனலாம். அதிக அளவு மழை பொழிந்து வளம் சேர்த்திருக்கும் காட்டைத்தான் மழைக்காடு என்கிறோம். பொழிந்துகொண்டே இருப்பதால்தான் மழைக்காட்டுக்கு தமிழில் 'பொழில்' என்ற அழகிய பெயரிட்டுள்ளோம். 

மழைக்காடு

கிரானைட் மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட டெய்ன்ட்ரீ நதியும், அருவிகளும், நதியை ஒட்டிய அடர் மழைக்காடும் மழைக்காட்டை ஒட்டிய வெண்மணல் கடற்கரையும் கடற்கரையை ஒட்டிய தெள்ளிய கடற்பரப்பும், கடலுக்குள் வசீகரிக்கும் வண்ணத்தில் கரடுமுரடான பவளப்பாறைகளும் என உலகின் வேறு எங்கும் காணவியலாதபடி இயற்கையின் அழகும் அதிசயமும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு நம்மை அசரவைக்கும் இடம்தான் டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதி. 2015-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இப்பகுதி சாகசப் பிரியர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் அற்புதமான விருந்தளிக்கும் இடமாகும்.

குவீன்ஸ்லாந்தின் வடகிழக்குக் கடற்கரையோரம் சுமார் 1200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது டெயின்ட்ரீ மழைக்காடு. உலகின் ஆதித் தாவரங்கள், விலங்குகள் பலவும் இன்றும் அவற்றின் ஆதிகால இயல்பு மாறாமல் அங்கு காணப்படுகின்றன. உலகின் மிகத்தொன்மையான பூக்கும் தாவரங்கள் பத்தொன்பதில் பன்னிரண்டு இந்த டெயின்ட்ரீ மழைக்காட்டில் காணப்படுவதிலிருந்தே இதன் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

தொன்மையான மழைக்காட்டுக்கு 'டெயின்ட்ரீ' என்ற பெயர் எப்படி வந்தது? 

1873-வாக்கில் ஆற்றுவழியே மழைக்காட்டைக் கண்டடைந்த ஆய்வாளர் ஜார்ஜ் எல்ஃபின்ஸ்டோன் தன் நண்பரும் புவியியல் ஆய்வாளருமான டெய்ன்ட்ரீயின் பெயரை அம்மழைக்காட்டுக்குச் சூட்டினார். பின்னாளில் அந்நிலப்பகுதி முழுமைக்குமே அப்பெயர் அமைந்துபோனது. 

டெய்ன்டிரீ மழைக்காட்டின் 'இடியட் ஃப்ரூட்' பற்றித் தெரியுமா உங்களுக்கு? அதென்ன 'முட்டாள் பழம்' என்று கேட்கிறீர்களா? உண்மையில் இடியோஸ்பெர்மம் (Idiospermum) என்ற அறிவியல் பெயரின் சுருக்கம்தான் அது. 120 மில்லியன் வரலாற்றைக் கொண்டிருக்கும் அதுவே இன்றைய பூக்கும் தாவரங்கள் பலவற்றின் ஆதித்தாய் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'ரிப்பன்வார்ட்' மற்றும் 'பச்சை டைனோசார்' என்ற பெயர்களும் உண்டு. டைனோசார் வாழ்ந்த காலத்திலிருந்தே இவை வாழ்ந்துவருவதால் பச்சை டைனோசார் என்ற பெயராம். ஒரு வித்திலை, இரு வித்திலைத் தாவரங்கள் பற்றி அறிவோம். இது மூன்றிலிருந்து ஏழு வித்திலைகளைக் கொண்டு வளரும் தாவரம் என்பது பெரும் வியப்புக்குரியது. Idiospermum குடும்பத்தைச் சேர்ந்த ஒரே தாவரம் இதுதான். கடுமையான விஷத்தன்மை கொண்ட இதைத் தின்னும் கால்நடைகள் உயிரிழந்துவிடும். ஆனால் இப்பகுதியில் வாழ்ந்துவரும் musky rat-kangaroo போன்றவை அவற்றைத் தின்கின்றன என்பதும் அதனால் அவற்றுக்கு கெடுதல் எதுவும் நேர்வதில்லை என்பதும் ஆச்சர்யமே.

டெயின்ட்ரீ மழைக்காட்டில் மட்டுமே காணப்படக்கூடிய அரிய இடியோஸ்பெர்மம் மரத்தை சிட்னியின் தாவரவியல் பூங்காவில் காண நேர்ந்தபோது, அதுவும் பூக்கும் காலத்தில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதோ அங்கே நான் எடுத்த சில படங்கள். 





டெயின்ட்ரீ மழைக்காட்டில்
காணப்படும் பூச்சியினம் மட்டுமே சுமார் பன்னிரண்டாயிரம் வகை இருக்கலாம். அவை தவிர ஆஸ்திரேலியாவின் மொத்தப் பறவையினத்தில் 40 சதவீதமும், பட்டாம்பூச்சி இனத்தில் சுமார் 60 சதவீதமும், விலங்கினத்தில் 35 சதவீதமும், ஊர்வனவற்றில் 20 சதவீதமும் தவளையினத்தில் சுமார் 30 சதவீதமும் இங்கே காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் மொத்த நிலப்பரப்பில் ஒரே ஒரு சதவிகித நிலப்பரப்பே கொண்ட டெய்ன்ட்ரீ மழைக்காட்டில் இவ்வளவும் காணப்படுகின்றன என்றால் மழைக்காட்டின் வளம் நமக்குப் புரிகிறதல்லவா?

அருகிவரும் இனமான காஸோவரி பறவைகளை இங்கே அவற்றின் வாழ்விடத்தில் இயல்நிலையில் காணமுடிவது ஒரு பெரும் பாக்கியம். பறக்கவியலாத பறவையினத்தில் தற்போது உலகிலுள்ள மூன்றாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவில் உள்ள ஆஸ்ட்ரிச் (Ostrich) எனப்படும் தீக்கோழி, இரண்டாவது, ஆஸ்திரேலியப் பறவையான ஈமு (Emu). ஆனால் ஈமுவை விடவும் உடல் எடை அதிகமுள்ள பறவையினம் காஸோவரி. இதன் தலையில் கொம்பு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். பறவைக்குக் கொம்பா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். அதற்குக் காரணம் இருக்கிறது.

 


காஸோவரியின் பிரதான உணவு பழங்கள்தாம். இவை கிட்டத்தட்ட 26 வகையான பழங்களையும் 238 வகைத் தாவர உணவுகளையும் உண்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்பறவை பெரும்பாலான நேரத்தை பழமரங்களின் கீழேயே கழிக்கும். அதுவும் பழங்கள் பழுத்து உதிரும் காலமென்றால் சொல்லவே வேண்டாம். முழுநேரமும் மரத்தின் அடியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட முப்பது மீட்டர் உயர மரங்களிலிருந்து கீழே விழும் பெரிய பழங்கள் இதன் தலையில் விழுந்தால் என்னாவது? தலைக்கு சேதமுறா வண்ணம் இயற்கை அளித்தப் பாதுகாப்புத் தலைக்கவசம்தான் அதன் கொம்பு என்பது விநோதம். ஆம். கொம்பின் உள்ளே எலும்புக்கு பதில் காற்றறைகள் இருப்பதால் கொம்பு ஒரு அதிர்வுத்தாங்கியாகவும் (shock-absorber) செயல்படுகிறது. இந்த காஸோவரி பறவைகளின் எச்சத்தின் மூலமே மழைக்காட்டின் பெருமரங்களின் விதைபரவல் எளிதாக நடைபெறுகிறது.

 


டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதியின் பூர்வகுடிகள் குக்கு யலாஞ்சி மக்கள். அவர்கள் இந்நிலத்தை தங்களது புனித மற்றும் கலாச்சார அடையாளமாக மதிக்கின்றனர். இந்நிலம் சார்ந்து வழிவழியாக பல பாடல்களையும் கதைகளையும் புனைந்து இன்றும் தொடர்ந்து தங்கள் தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கின்றனர். பலர் இப்பகுதியில் பயண வழிகாட்டிகளாகவும் பணிபுரிகின்றனர். பல சுற்றுலா ஏற்பாட்டு மையங்களும் இங்கே செயல்படுகின்றன. நடைப்பயணம், மலையேற்றம், படகு வலித்தல், காட்டுவழிப் பயணம், மழைக்காட்டில் இராத்தங்கல், இரவு நேரத்து காடனுபவம், கானுயிர் நோக்கல் எனப் பல்வேறு அனுபவங்களை அள்ளித்தருகின்றன சுற்றுலா ஏற்பாட்டு மையங்கள். 

டெயின்ட்ரீ மழைக்காட்டுப் பகுதிக்கு சுற்றுலா செல்வோரிடம் முன்வைக்கப்படும் வேண்டுகோள்கள் இவைதான்.

தயவுசெய்து மழைக்காட்டின் இயல்பை மாற்றிவிடாதீர்கள். குப்பைகளை வீசிவிட்டுப் போகாதீர்கள், ஆற்றுநீரை அசுத்தம் செய்யாதீர்கள், பறவை, விலங்குகளுக்கு உணவு வழங்கி உங்கள் தயாள குணத்தைக் காட்டாதீர்கள். உங்கள் வருகைக்கு முன்னர் காடு எப்படி இருந்ததோ அப்படியே நீங்கள் செல்லும்போது விட்டுச்செல்லுங்கள்.

முன்னொரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மத்திய நிலப்பரப்பு வரையிலும் பரவியிருந்த மழைக்காடு கொஞ்சம் கொஞ்சமாக பரப்பளவில் குறைந்து தற்போது குறிப்பிடத்தக்க அளவில்தான் எஞ்சியுள்ளது. ஆதிகால விலங்குகளின், தாவரங்களின் உறைவிடமாய் எஞ்சியிருப்பதும் இப்பகுதிதான். நொடியில் காடழிப்பதில் கைதேர்ந்த மானுட குலத்துக்கு காடு வளர ஆகும் காலம் பற்றிய துளி அறிதலாவது இருக்கிறதா என்பது ஐயம்தான்!

(இக்கட்டுரை SBS தமிழ் வானொலியில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'நம்ம ஆஸ்திரேலியா' தொடராக ஒலிபரப்பானது. இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்டவையே. டெயின்ட்ரீ மழைக்காட்டைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டாததால் உள்ளூர் மழைக்காட்டின் படத்தை இணைத்திருக்கிறேன்.) 

 

27 December 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள்

ஒரு இனத்தின் சிறப்பையும், தொன்மையையும், வரலாற்றையும் வாழ்வியலையும் அறிந்துகொள்ள அவ்வினத்தின் மொழியும் அதன்வழி வெளியான இலக்கியங்களுமே நமக்கு உதவுகின்றன. ஆனால் காலங்காலமாக வாய்மொழியாகப் பேசப்பட்டு வந்தாலும் ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் தங்கள் மொழிக்கென்று எழுத்துவடிவமோ இலக்கியமோ படைத்திராத சூழலில் அவர்களுடைய தொன்மையையும் சிறப்பையும் எப்படி தங்கள் தலைமுறையினருக்குக் கடத்துகிறார்கள்? எப்படி தங்கள் இனத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறார்கள் என்ற கேள்விகள் நமக்கு எழக்கூடும்.


இயற்கையை இறையாய் வழிபடும் அவர்கள்,  நிலவமைப்புகளைப் புனிதமாய்க் கருதுகிறார்கள். முன்னோர்களின் ஆன்மாக்கள் உலவுவதாக நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் கதைகள் மூலம் செவிவழியாகவும், கலைகள் மூலம் காட்சிவழியாகவும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கடத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். தங்களுடைய மொழியை ஓவியங்களாய் வெளிப்படுத்தினர். நடனம், சடங்குகள், வழிபாட்டுமுறை, ஓவியம், வைத்தியம், இசை, கைவேலைப்பாடு, வேட்டை நுணுக்கம் என எத்தனையோ சம்பிரதாயங்களை அவற்றின் பாரம்பரியம் கெடாது தங்கள் வருங்கால சந்ததியினருக்குக் கடத்திவருகின்றனர்.




ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள் என்றாலே பாறை ஓவியம், செதுக்கு ஓவியம், புள்ளி ஓவியம், மரப்பட்டை ஓவியம், மணல் ஓவியம், சுவடு ஓவியம், உடல் ஓவியம் என அதில் அத்தனை வகையைக் காணமுடியும்.



உலக மக்களின் பார்வையில் ஆஸ்திரேலியாவை தனித்து அடையாளப்படுத்தும் கலாச்சார வகைமைகளுள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் புள்ளி ஓவியமும் ஒன்று. ஆஸ்திரேலியப் புள்ளி ஓவியங்கள் இன்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாய் புள்ளிகள் வட்டங்கள் கோடுகள் என்று தோன்றினாலும் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அர்த்தமுடையவை. பூர்வகுடி ஓவியங்கள் பல அடுக்கு புரிதல்களைக் கொண்டவை. குழந்தைகளுக்கு எளிமையாகவும் மேலோட்டமாகவும், பொதுமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சற்று விரிவாகவும் அதைச் சார்ந்தோர்க்கு, அதன் புனிதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த ஆழமான மற்றும் தீர்க்கமான புரிதலையும் தரக்கூடியவை. ஒரு பூர்வகுடிக் கலைஞர், இந்த மூன்று நிலையிலும் ஓவியத்தை விளக்கும் முறையை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 




கதைகளுக்குள் ஓவியங்களும் ஓவியங்களுக்குள் கதைகளும் பொதித்துவைக்கப்பட்டு, ஆன்மீக உணர்வுடனும், இனத் தனித்துவத்துடனும்  பாதுகாக்கப்பட்ட ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்கு வலம்வரத் தொடங்குவதை அறிந்த அவர்கள் தங்கள் பாரம்பரியத்துக்கும் புனித நம்பிக்கைகளுக்கும் இழுக்கு ஏற்படாதிருக்கவும், இதர பூர்வகுடி இனங்களுக்கு தங்கள் ரகசியங்கள் பகிரப்படாதிருக்கவும் கண்டுபிடித்த உத்திதான் புள்ளி ஓவிய உத்தி. ஓவியங்களை புள்ளிகளாய் வரைவதன் மூலம் அதன் புனிதத்தன்மை நீக்கப்பட்டு விடுவதாகவும் ரகசியங்கள் வெளியுலகுக்குக் கடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டு விடுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.




கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்கள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவிய வகைமையுள் முக்கியமான ஒன்று. தங்களுடைய வாழ்விட எல்லைகளைப் பறைசாற்றும் வண்ணம் மலைப்பாறைகளிலும் குகைகளிலும் அவ்விடங்களில் வசிக்கும் பூர்வகுடிக் குழுவினர் தங்கள்  கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்களைப் படியெடுத்து முத்திரை பதிப்பது வழக்கம். படியெடுக்கப்பட்டிருக்கும் கைச்சுவட்டுப் பிரதிகளுள் மேலே உச்சியில் இருப்பது குழுவின் உயர்ந்த பதவியிலிருப்பவர் அதாவது தலைவரின் கைச்சுவட்டுப் பிரதியாகும். அவருக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களின் கைச்சுவட்டுப் பிரதிகள் அந்தந்த வரிசைக்கேற்ப அமைந்திருக்கும்.



இந்த கைச்சுவட்டுப் பிரதிகளை உருவாக்குவதே ஒரு கலை. தண்ணீர், செங்காவி அல்லது சுண்ணாம்புத்தூள், கங்காரு, எக்கிட்னா, ஈம்யு போன்ற விலங்கு அல்லது பறவைகளின் கொழுப்பு இவற்றைக் கலந்து வாய் நிறைய நிரப்பிக்கொண்டு பாறையில் ஊன்றப்பட்டிருக்கும் கையின் மீது மிகுந்த விசையோடு ஊதுவார்கள். தாளில் மை ஊறுவது போல இக்கலவை பாறையில் ஊறி சுவட்டோவியத்தை உருவாக்கும். குழுவின் மூத்த உறுப்பினர்கள் அவர்களுடைய வயதுக்கும் தலைமைப் பண்புக்கும் ஏற்ப மணிக்கட்டு வரை மட்டுமல்லாது முழங்கை வரை தங்கள் கைச்சுவட்டைப் பதிக்கும் பெருமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். கைச்சுவட்டுப் பிரதிகள் பெரும்பாலும் இடக்கைகளாகவே உள்ளன. அதற்குக் காரணம், பெரும்பாலானோர் வலக்கை பயன்பாட்டாளர்கள் என்பதால் வலக்கையை வாயருகில் புனல்போல் குவித்து வண்ணக்கலவையை சிதறாமல் ஊதுவதற்குப் பயன்படுத்தினர்.


இந்த கைச்சுவட்டுப் பிரதியெடுக்கும் ஓவிய வகைமை ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களிடத்தில் மட்டுமல்லாது அர்ஜென்டினா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படும் தொன்மையான ஓவிய வகைமையாக அறியப்படுகிறது.



ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்களும் செதுக்கு சிற்பங்களும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதாயிரம் ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ஆஸ்திரேலியப் பூர்வகுடியினரின் சில சுண்ணாம்புப் பாறை செதுக்கு சிற்பங்களின் வயது சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களுக்கு செங்காவி வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண், பெண்ணைக் குறிக்கும் குறியீடுகளும், நீர்நிலைகள், பழங்கள், கங்காரு, ஈமு போன்ற உணவிருப்பிடம் குறித்த குறியீடுகளும், சந்திக்கும் இடங்கள் பற்றிய அடையாளக் குறியீடுகளுமாய் ஒவ்வொரு இனமும் தமக்கென்று தனித்த குறியீட்டு ஓவியமுறையைக் கைக்கொண்டுள்ளனர்.



நார்வாலா கபன்மேங் குகைகள், கிம்பர்லி, லாரா, உபிர், காக்கடூ தேசியப் பூங்கா, உலுரு என ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களிலும் கற்பாறை ஓவியங்களும் முருஜுகா, ப்ளூ மவுண்டன்ஸ், குரிங்கை சேஸ் தேசியப்பூங்கா போன்ற இடங்களில் சுண்ணாம்புப்பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆதி மனிதன் முதல் இன்று அழிந்துபோய்விட்ட தைலாசின் போன்ற பல உயிரினம் வரை வரையப்பட்டுள்ளன என்பதிலிருந்தே அவற்றின் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள இயலும்.


ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் மரப்பட்டை ஓவியங்களும் மற்றொரு பிரசித்தி பெற்ற ஓவிய முறையாகும். முண்டுமுடிச்சுகள் இல்லாத யூகலிப்டஸ் மரவகையான Stringybark எனப்படும் மரத்தின் பட்டைகளே ஓவியம் தீட்டப் பயன்படுத்தப்படுகின்றன. நுட்பமும் தேர்ச்சியும் பெற்றவர்களால் உரிக்கப்பட்ட மரப்பட்டைகள் தீயில் லேசாக வாட்டப்பட்டு மேலே கற்கள் மரக்கட்டைகள் போன்றவற்றால் அழுத்தம் கொடுக்கப்பட்டு சமதளமாக்கப்படுகின்றன. பிறகு காவி, மஞ்சள் போன்ற மண் நிறமிகள், சுண்ணாம்பு மற்றும் கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. நிறமிகளின் ஒட்டுந்தன்மைக்கு முற்காலத்தில் மரப்பிசின் பயன்படுத்தப்பட்டது. தற்போது இரசாயனப் பசைகள் பயன்படுத்தப்படுகின்றன.   



பூர்வகுடி மக்களின் கலாச்சார நம்பிக்கையின் மையமான கனவுக்காலக் கதைகளை அடிப்படையாய்க் கொண்டே பல ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த உலகம் எப்போது, எப்படி தோன்றியது, இவ்வுலகின் உயிரினங்கள், காடுகள், மலைகள், சூரியன், நிலவு, காற்று, மழை, நெருப்பு, கடல் என ஒவ்வொன்றின் தோற்றம் குறித்தும் ஒவ்வொரு பூர்வகுடிக் குழுவினரிடமும் கதைகள் உள்ளன. படைப்பின் ரகசியங்களை வேற்றுக் குழுவினரோடு பகிர்ந்துகொள்வதைக் குற்றம், இழுக்கு என்று நம்பிய அவர்கள், எப்போதும் தங்கள் கதைகள் மற்றும் கலைகளை புனித நம்பிக்கை காரணமாக தங்களுக்குள் மறைவாகவே பகிர்ந்துவந்தனர். இன்றும் கூட ஒரு பூர்வகுடி ஓவியத்தை நாம் புரிந்துகொள்ளும் விதம் வேறு. அவர்கள் புரிந்துகொள்ளும் விதம் வேறு.


பெரும்பாலான பூர்வகுடி ஓவியங்கள் பறவைப் பார்வை கொண்டு வரையப்படுகின்றன. நிலத்துக்கு மேலே பறந்துகொண்டு நிலத்தைப் பார்ப்பதான பாவனையில் இவ்வோவியங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் நீர்நிலைகள், புதர்க்காடுகள், பழமரங்கள் மட்டுமல்லாது வேட்டைகான விலங்குகள் பறவைகள் இவற்றின் இருப்பிடங்களும் ஒரு வரைபடம் போல மிகத்தெளிவாக சுட்டப்படுகின்றன.



1930 களில்தான் பூர்வகுடி ஓவியர்கள் கான்வாஸ் மற்றும் காகிதங்களில் வரையத் தொடங்கினர். செங்காவி வண்ணத்துக்குப் பதிலாக நீர்வண்ண ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன. 1937-ல் முதன்முதலாக பூர்வகுடி ஓவியக் கலைஞரான ஆல்பர்ட் நமட்ஜிராவின் நிலவமைப்புத் தோற்ற ஓவியங்கள் அடிலெய்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆனாலும் பல தனித்துவமிக்க பூர்வகுடி ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவரப்படாமலேயே இருந்தன. காரணம் அவற்றை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. முதலாவது தங்களுடைய கனவுகாலக் கதைகளையும் குழு சார்ந்த ரகசியங்களையும் வேற்று மனிதர்களுடன் பகிர்ந்துவிடக்கூடாது என்னும் அவர்களுடைய புனித நம்பிக்கை. இரண்டாவது தங்களுக்கு உரிமை இல்லாத, பிற இனம் சார்ந்த ஓவியங்களை வரைவது தவறு என்னும் தார்மீக எண்ணம். ஓவியக்கதைகளில் மட்டுமல்ல, ஓவிய முறைகளிலும் கூட அவர்கள் தார்மீக ஒழுங்கினைப் பின்பற்றுகின்றனர். உதாரணத்துக்கு குலின் இனத்தைச் சேர்ந்தவர்கள் புள்ளி ஓவியங்களை வரைய மாட்டார்கள். மாறாக தங்களுக்கு உரிமையான குறுக்குக் கோட்டோவியங்களை மட்டுமே வரைவார்கள்.  


தங்கள் குழுவைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துக்கு வழிவழியாய் வந்த கதைகளை மட்டுமே அவர்கள் ஓவியங்களாய்த் தீட்டினர். அதன் மூலம் தங்கள் பாரம்பரியப் பெருமையையும், கலாச்சார அடையாளத்தையும் உலகுக்கு உணர்த்தினர். 2007-ஆம் ஆண்டு மே மாதம் Emily Kame Kngwarreye -இன் Earth’s creation என்னும் ஓவியம் ஒன்றரை மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு மேல் விற்பனையானது. மில்லியன் டாலர்களுக்கு மேல் விற்பனையான முதல் பூர்வகுடி ஓவியம் என்ற பெருமையைப் பெற்ற அதே வருடம் ஜூலை மாதம் Clifford possum Tjapaltjarri - இன்  Warlugulong ஓவியம் 2.4 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. 



இன்று ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்களுக்கு சர்வதேச அளவில் பெரும் மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைவளர்ச்சிக்காகவே செயல்படும் சுவிட்சர்லாந்தில் உள்ள La grange, நெதர்லாந்திலுள்ள The Museum of Contemporary Art, விர்ஜினியா பல்கலைக் கழகத்தின் Kluge-Ruhe Aboriginal Art Collection போன்ற அருங்காட்சியகங்கள், ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைகளின் சிறப்பு உலக மக்களை ஈர்த்திருப்பதற்கான பெரும் சாட்சி எனலாம்.



(SBS தமிழ் வானொலியில் 01-11-20 அன்று 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. நிகழ்ச்சியைக் கேட்க இங்கு சொடுக்கவும்.)

(படங்கள் அனைத்தும் இணையங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

9 August 2020

ஆஸ்திரேலியாவின் ரசனையான உணவுவகைகள்




எந்த நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாட்டின் பிரசித்தமான உணவுவகையை ருசிபார்ப்பது பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் ஆஸ்திரேலியாவின் பிரசித்தமான உணவுவகைகளை சுவைக்க நிச்சயம் விரும்புவார்கள். லாமிங்டன், வெஜிமைட், மீட் பை, பாவ்லோவா, டிம்டாம், ஆன்ஸாக் பிஸ்கட்ஸ், கங்காருவால் சூப் என ஆஸ்திரேலியாவின் உணவுரசனையை மெய்ப்பிக்கும் வகையில் நம்மிடமும் ஏராளம் உண்டு. அவற்றின் பின்னால் ஏராளமான கதைகளும் உண்டு.

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் ஒன்றான வெஜிமைட் உருவான கதையைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்களின் உணவுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன முக்கியமான அடையாளம் வெஜிமைட். இதன் பிரத்தியேக உப்பும் கசப்பும் கலந்த சுவைக்கு அடிமையாகிப் போன ஆஸ்திரேலியர்கள் பலர். ஜாம், பட்டர் போல பிரெட்டில் தடவி சுவைக்கக்கூடிய வெஜிமைட் மது உற்பத்திக்கூடங்களில் பயன்படுத்தப்படும் brewer’s yeast எனப்படும் தேறல் நொதியையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கொண்டு தயாரிக்கப்படுவது. இதில் கொழுப்பு கிடையாது, சர்க்கரை கிடையாது. முழுக்க முழுக்க சைவ பதார்த்தம்.



இன்னும் இரண்டு வருடங்களில் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடவிருக்கும் வெஜிமைட் ஏன் உருவானது தெரியுமா? முதலாம் உலகப் போர்க்காலத்தில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த Marmite சுவைத்துப் பழகிய ஆஸ்திரேலிய நாவுகளுக்கு அது இல்லாமை வெறுமையை உண்டாக்கியது. இந்த சமயத்தில் Fred Walker & Co. நிறுவனம் அதற்கு மாற்று தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. வேதியியலாளரும் உணவு தொழில்நுட்ப வல்லுநராகவும் இருந்த Cyril Percy Callister இடம் அதற்கானப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒரு சுவைக்கு பழகிய நாவுகளை மற்றொரு சுவைக்குப் பழக்கவேண்டுமே. முதலில் மக்களிடம் புதிய பொருளைக் கொண்டுசேர்க்கும் முயற்சியாக இந்த புதிய கண்டுபிடிப்புக்குப் பரிசுத்தொகையுடன் கூடிய பெயர் சூட்டும் போட்டியொன்று பொதுவில் நடத்தப்பட்டது. பெயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு Fred Walker-ன் மகள் Sheilah விடம் விடப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்தப் பெயர்தான் Vegemite.


பலதரப்பட்ட விளம்பரங்களுக்குப் பிறகும் விற்பனை சூடுபிடிக்காத காரணத்தால் ஒருவேளை பெயர்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் Parwill என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போதும் விற்பனை சரிவே. விற்பனையை அதிகப்படுத்த பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டன. Kraft walker cheese உற்பத்திப் பொருட்களுடன் இலவச இணைப்பாக வெஜிமைட் கொடுக்கப்பட்டது. இது குறித்த கவிதைப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு அமெரிக்க Pontiac கார்கள் பரிசளிக்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் போது ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் ரேஷன் உணவில் வெஜிமைட் சேர்க்கப்பட்டது. இப்படியாக படிப்படியாக 1940 களின் பின்பகுதியில் பத்துக்கு ஒன்பது ஆஸ்திரேலிய வீடுகளில் வெஜிமைட் புழக்கத்துக்கு வந்தது.



இன்று பில்லியன் ஜார்கள் விற்பனையைக் கடந்து இன்னமும் அதிரடியாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது வெஜிமைட். காலத்தோடு இணைந்த விளம்பரம்தான் அதற்கு முக்கியக் காரணம் எனலாம். பன்னாட்டு கலாச்சாரம் பரவத்தொடங்கிய காலத்தில் 1983 வாக்கில் வெஜிமைட் என்ற பெயருக்குப் பதிலாக Multicultural என்ற பெயரைத் தாங்கி கீழே spread it around என்ற வாசகத்துடன் பன்னாட்டு மக்களையும் கவர்ந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது. 


சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் விளையாட்டுத் தொடரின்போது ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை Ash Barty –க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவரை சிறப்பிக்கும் வகையிலும் Bartymite என்ற பெயர் தாங்கி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜார்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன. விற்றும் தீர்ந்தன.  

ஆஸ்திரேலியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடும் அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு பிரமாதமில்லை என்கிறார்கள் grease போன்ற இதன் நிறமும், வாடையும் பிரத்தியேக கடுஞ்சுவையும் பிடிக்காமல் போன அயல் நாட்டவர்கள். உங்களுக்கெல்லாம் அது ஒரு உணவுப்பொருள் மட்டுமே, எங்களுக்கோ அது உணர்வின் பொருள் என்கிறார்கள் இவர்கள். உண்மைதானே.



அடுத்தது Fairy bread. பெயரைச் சொன்னவுடனேயே ஆஸ்திரேலியக் குழந்தைகள் சப்புக்கொட்டும். இதுவும் ஆஸ்திரேலியக் கண்டுபிடிப்புதான். வழக்கமான white bread-ன் இருபுறமும் வெண்ணெய் அல்லது மார்கரின் தடவி அதன் மேல் hundreds and thousands எனப்படும் சர்க்கரைப்பாகில் செய்யப்பட்ட கடுகளவிலான குட்டிக்குட்டி வண்ண மணிகளைத் தூவினால் அதுதான் fairy bread.

அடுத்தது பாவ்லோவா. ரஷ்யாவின் பிரபல பாலே நடனக்கலைஞர் அன்னா பாவ்லோவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். 1881 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த அன்னா பாவ்லோவா Imperial Russian Ballet நிறுவனத்தின் முதன்மைக் கலைஞராக இருந்தவர். அவர் தனித்து ஆடும் The Dying Swan என்னும் நடனத்தை சுமார் 4000 தடவைக்கு மேல் மேடையேற்றியிருக்கிறார் என்பதும் தென்னமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்று உலகம் முழுதும் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த முதல் பாலே நடனக் கலைஞர் என்பதும் அவரது பெருமைகளுக்குச் சான்று. பிரசித்தமான பாலே நடனக்கலைஞரான அன்னா பாவ்லோவாவுக்கும் ஆஸ்திரேலியாவின் பிரசித்த கேக்கான பாவ்லோவாவுக்கும் என்ன தொடர்பு? அப்படிப்பட்ட அற்புதமான கலைஞரை சிறப்பிக்கும் பொருட்டு இந்த கேக்குக்கு பாவ்லோவா என்று பெயரிடப்பட்டதாம். 


முட்டையின் வெள்ளைக்கரு, கார்ன்ஃப்ளார், கேஸ்டர் ஷூகர், வினிகர் வனிலா எஸன்ஸ் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கேக் போன்ற இனிப்பு வகையான இதற்கு மேலே க்ரீமும் பழங்களும் வைத்து அலங்கரிக்கப்படுகிறது. 1935 -ல் The Advocate பத்திரிகையிலும் தொடர்ந்து 1937-ல் The Australian Women’s Weekly இலும் பாவ்லோவா கேக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டது. நியூசிலாந்தோ பாவ்லோவா கேக் தங்களுடைய கண்டுபிடிப்பு என்றும் அது தாங்கள் வைத்த பெயர் என்றும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறது.

நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் தங்களுடையவை என்று உரிமை கோரும் பட்டியலில் அடுத்து வருவது லாமிங்டன். ஸ்பான்ஞ் கேக் அல்லது பட்டர் கேக் துண்டுகளை உருக்கிய சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து உலர்தேங்காய்த்தூளில் புரட்டியெடுத்தால் அதுதான் லாமிங்க்டன். இதற்கு பின்னாலிருக்கும் கதை வெகு சுவாரசியம்.


1896 முதல் 1901 வரை குவீன்ஸ்லாந்தின் கவர்னராக இருந்தவர் லார்ட் லாமிங்க்டன். அவருடைய முதன்மை சமையல் பணியாளராக இருந்தவர் Armand Galland என்பவர். ஒருமுறை லார்ட் லாமிங்க்டனை சந்திக்க வந்திருந்த எதிர்பாரா விருந்தினர்களுக்குப் பரிமாற வேண்டிய சூழலில் முதல்நாள் செய்த வனிலா ஸ்பான்ஞ் கேக்கைத் துண்டுகளாக்கி சாக்லேட் திரவத்தில் முக்கியெடுத்து மேலே உலர்தேங்காய்த்தூள் தூவி அலங்கரித்துப் பரிமாறினார் என்றும் விருந்தினர்களுக்கு அது மிகவும் பிடித்துப்போய் செய்முறை வாங்கிச் சென்றார்கள் என்றும் அதனாலேயே லார்ட் லாமிங்க்டன் பெயரால் இது லாமிங்க்டன் என்று குறிப்பிடப்படுவதாகவும் ஒரு கதை உள்ளது. அதெல்லாம் இல்லை, வெலிங்க்டன் என்று எங்கள் தலைநகரின் பெயரால் நாங்கள் உருவாக்கிய இனிப்பை ஆஸ்திரேலியர்கள் லாமிங்க்டன் என்று பெயர் மாற்றி தங்களுடையது என மார்தட்டுகிறார்கள் என்று மறுக்கிறார்கள் நியுசிலாந்துக்காரர்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் லாமிங்க்டனைக் கொண்டாடுவோம் என்று சொல்லி ஜூலை 21 ஆம் நாளை தேசிய லாமிங்க்டன் தினமாக அறிவித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டோம் நாம். கூடவே lammo என்ற செல்லப்பெயரையும் சூட்டிவிட்டோம். 


 
இவை தவிர ஆன்ஸாக் பிஸ்கட்டுகள் குறித்த வரலாற்றை முந்தைய பதிவிலேயே பார்த்தோம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை, வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் ANZAC பிஸ்கட்கள், உணவுப்பொருள் என்பதையும் மீறி அதற்குள் பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றும் தேசிய ஒருமைப்பாடும் போர்வீரர்களுக்கான நினைவஞ்சலியும் என்றென்றும் தனித்துப் பிரித்தெடுக்க இயலாதவை.

ஒவ்வொரு நாடும் தமக்கென தனித்த உணவுக்கலாச்சாரத்தைப் பேணும்போது பன்னாட்டு கலாச்சாரத்தை மையமாய்க் கொண்ட ஆஸ்திரேலியா, பன்னாட்டு கலாச்சார உணவுவகைகளோடு காலங்காலமாய் தம் உணர்வுகளோடு பின்னிவரும் தனித்த உணவுக்கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாப்பது போற்றத்தக்க ஒன்றல்லவா?  




8-6-20 அன்று SBS Tamil  வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. ஒலிவடிவத்தைக் கேட்க இங்கு சொடுக்கவும். 

(படங்கள் உதவி இணையம்)