8 September 2015

கோபு சாரின் பார்வையில் என்றாவது ஒரு நாள்...



ஒரு நூலை வாசிக்கிறோம். அது நம்மைக் கவர்ந்தால் அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.. அந்நூலில் தென்படும் குறை நிறை பற்றிய விமர்சனத்தை முன்வைக்கலாம்.. அல்லது அதற்கான மதிப்புரை அல்லது கருத்துரையை எழுதலாம். ஆனால் என்னுடைய மொழிபெயர்ப்பு நூலான 'என்றாவது ஒருநாள்' நூலுக்கு புகழுரை என்று தலைப்பிட்டு எழுதி என்னை மிகவும் சங்கோஜத்தில் ஆழ்த்திவிட்டார் வை.கோபாலகிருஷ்ணன் எனப்படும் கோபு சார். இது என்மேலுள்ள அன்பினாலும் மதிப்பினாலும் என்பதை என்னால் உணரமுடிகிறது.

சென்றவருடம் அவர் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டிகளில் பெரும்பாலானவற்றில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றதும் ஒரு முக்கியக்காரணம். விமர்சனம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் போட்டியில் கலந்துகொண்டேன். போட்டியில் பங்கேற்ற மற்றவர்களுடைய விமர்சனங்களும், விமர்சனம் குறித்து அவ்வப்போது கோபு சார் தன்னுடைய பதிவில் வெளியிடும் குறிப்புகளும், நடுவர் ஜீவி ஐயா அவர்களின் கருத்துகளும் விமர்சனத்தை ஓரளவு நன்றாகவும் வித்தியாசமாகவும் எழுத உதவின. தொடர்ச்சியான வெற்றிகள் என்னுடைய எழுத்தின் வளர்ச்சிக்கு ஏராளமாய் உதவின. என்னால் முடியுமா என்று மலைத்திருந்த காலம் போய் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளத்துள் உருவானது. என்னைப் போலவே பலருக்கும் எழுத்தின்மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தின கோபு சாருடைய சிறுகதை விமர்சனப் போட்டிகள் என்றால் மிகையில்லை. ஏன்.. வலையுலகில் அதுவரை அறியப்பட்டிராத பலரும் அப்போட்டிகளின் மூலமே அறிமுகமாயினர்.

இப்போதும் அவரது வலைத்தளத்தில் சத்தமில்லாமல் ஒரு போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம். 


கடுமையான வலைப்பணிகளுக்குப் பிறகு சற்று ஓய்வெடுத்துத் திரும்பிவருவதாக அறிவித்துச் சென்றவர், ‘என்றாவது ஒரு நாள்’ நூல் விமர்சனத்தோடு மீண்டும் வந்திருப்பது நான் எதிர்பாராத ஆச்சர்யம். நூலை எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் வாசித்திருக்கிறார் என்பது அவரது பதிவுகள் ஒவ்வொன்றின் மூலமும் அறியமுடிகிறது. மூல ஆசிரியரைப் பற்றிய பல தகவல்களையும், அவர் தொடர்பான, அவருடைய வாழ்க்கை தொடர்பான பல படங்களையும் மெனக்கெட்டு சேகரித்து, அவற்றைப் பதிவில் இணைத்திருப்பதொன்றே சான்று.

இத்தகு புகழுரைக்கு நான் அருகதையானவளா என்று தெரியவில்லை. 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்னும் பாரதியின் வரிகளுக்கேற்ப, தற்சமயம் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் நாடான ஆஸ்திரேலியா பற்றி நான் அறிந்த, வியந்த, ரசித்த பல செய்திகளையும் உங்களனைவரோடும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அப்படியான ஒரு பகிர்தல் முயற்சிதான் ஆஸ்திரேலிய சிறுகதை மன்னன் என்று புகழப்படும் ஹென்றி லாசன் அவர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்ததும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய, ஆரம்பகால ஐரோப்பியரின் வாழ்க்கையை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்டக் கதைகள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் என்னை பாதித்தன. கீதமஞ்சரியில் முன்பே வெளியான நான்கைந்து கதைகளோடு மொத்தமாக 22 கதைகள் நூலாக்கம் பெற்றன.

இன்று அப்புத்தகத்தின் கதைகளை சுருக்கமாய் விவரித்து, தன்னுடைய கருத்தையும் கோத்து, அழகான ஒரு விமர்சனத் தொடராக கோபு சார் தன்னுடைய வலையில் வெளியிட்டு வருவது மிகுந்த மகிழ்வளிக்கிறது. வெறும் புகழுரைகளாக இல்லாமல் எழுத்தில் தென்படும் குறைகளைக் குறிப்பிட்டால் என் எழுத்தைத் திருத்திக்கொள்ளும் நல்வாய்ப்பாக அமையும். நூலாக்கம் குறித்து ஏதேனும் குறையிருப்பின் அதையும் குறிப்பிட்டால் எனக்கு மட்டுமல்லாது, நூல் உருவாக்க முயலும் மற்றப் பதிவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

‘கீதமஞ்சரியின் என்றாவது ஒரு நாள்’ என்ற தலைப்பில் கோபு சாரின் வலையில்  பதிவிடப்பட்ட ஐந்து பதிவுகளின் சுட்டிகளும் கீழே...

20 comments:

  1. வணக்கம்,
    நான் அருகதையானவளா?
    அனுபவமுள்ள பெரிய மனிதரின் விமர்சனம் எனும்போது அது ஒரு போதும் தவறானது இல்லை.
    அவரின் விமர்சனத்தில் தான் நான் அந்நூலை அறிந்தேன்.
    நன்றாக படித்து படித்ததை உள்வாங்கி ,,,,,,,
    அருமைம்மா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி. விமர்சனம் என்றில்லாமல் புகழுரை என்றதால் எழும்பிய கேள்வி அது. :))

      Delete
  2. வாழ்த்துகள் சகோ மென்மேலும் இதுபோன்ற நூல்கள் படைக்க மீண்டும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி.

      Delete
  3. எதையும் வித்தியாசமாய்ச் செய்பவர் கோபு சார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  4. நீங்கள் இதற்கு பெரும் தகுதியுடையவரே கீதமஞ்சரி. உங்கள் நூலை வாசித்துக் கொண்டிருக்கும் நானும் எழுத வேண்டும் என்று நினைத்துருக்கிறேன். உங்களின் மொழியாக்கம் மிகவும் அருமை. நூல் மட்டுமல்ல, ஒவ்வொரு பதிவிலும் முகனூல் தகவலிலும் கூட உங்கள் எழுத்தாக்கம் கண்டு வியந்து ரசிக்கும் ரசிகை நான்
    மனம் நிறைந்த வாழ்த்துகள் கீதமஞ்சரி

    ReplyDelete
    Replies
    1. பொறுமையாக எழுதுங்கள். கோபு சாரிடமும் அதைத்தான் சொன்னேன். நேரமும் சூழலும் ஒத்துழைக்கவேண்டும் அல்லவா? உங்களுடைய ஊக்கமிகு வரிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி கிரேஸ்.

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  6. தங்களுடைய புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை... வாசித்து எழுதுகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன். காத்திருக்கிறேன். :))

      Delete
  7. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றிங்க புத்தன்.

      Delete
  8. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    ஐயா அவர்களின் வலையினைத் தொடர்ந்து வருகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. கோபு சாரின் தளத்துக்குத் தங்களின் தொடர்வருகை குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஐயா.தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி.

      Delete
  9. // ஆனால் என்னுடைய மொழிபெயர்ப்பு நூலான 'என்றாவது ஒருநாள்' நூலுக்கு புகழுரை என்று தலைப்பிட்டு எழுதி என்னை மிகவும் சங்கோஜத்தில் ஆழ்த்திவிட்டார் வை.கோபாலகிருஷ்ணன் எனப்படும் கோபு சார். இது என்மேலுள்ள அன்பினாலும் மதிப்பினாலும் என்பதை என்னால் உணரமுடிகிறது.//

    அன்பினாலும் மதிப்பினாலும் அல்ல. தங்களுடைய அபார எழுத்துத் திறமையினால் தான் திரு வை.கோ அவர்கள் தங்களை புகழ்ந்திருக்கிறார். எனவே இதில் சங்கோஜப்பட தேவையில்லை. தாங்கள் அந்த புகழுக்குரியவரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய கனிவான கருத்துக்கும் ஊக்கந்தரும் வரிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. திறமை என்பது முன் நிற்கும்போது பாராட்டு வருவது இயற்கையே. வாழ்த்துக்கள், பாராட்டு தந்தவருக்கும், பாராட்டு பெற்றவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.