19 October 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (22)

சுந்தரி, நைட் நல்லா தூங்கினியாம்மா? பாப்பா தூங்கினாளா?" விக்னேஷின் அன்பும் அக்கறையும் அவனது இதமான வார்த்தைகளில் வழிந்தது.
"நல்லா தூங்கினோம், அண்ணே, காவல் தெய்வம் மாதிரி நீங்களும், அம்மாவும் இருக்கும்போது எனக்கு என்னண்ணே பயம்?"
"பயத்துக்காக கேக்கலைம்மா, புது இடம் பாரு, அதனால் கேட்டேன். சரி, நீ முதல்ல இவளைக் கவனி! எப்ப அழலாம்னு பாக்கிறா!"
"சரிண்ணே!"
இருவரின் உரையாடலையும் கூர்ந்து கவனித்துக்கொன்டிருந்த நாகலட்சுமிக்கு விக்னேஷின் மேல் கோபம் வந்தது.
 'என்னவோ ரெண்டுபேரும் ஒட்டிப் பிறந்த ரெட்டையர் மாதிரியில்ல இழையுறாங்க? அவள் என்னடான்னா வாய்க்கு வாய் அண்ணே...அண்ணேனு உருகுறா...இவன் என்னடான்னா சுந்தரிம்மா, வாம்மா, போம்மான்னு பாசத்தப் புழியுறான்எனக்கே பாசமலர் படம் காட்டுறாங்களே ரெண்டுபேரும்?' நாகலட்சுமி உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருந்தார்.
சுந்தரி வந்தநாள் முதலாய் நாகலட்சுமி அவளிடம் சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவளை எந்த வேலையும் செய்யவிடவில்லை. சுந்தரியை வீட்டுக்கு அழைத்துவரச் சொல்லிவிட்டாலும், அவள் வரவை முழுமனதுடன் அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அதனால் சுந்தரியை உதாசீனப்படுத்துவதன்மூலம் அவள் மனதை நோகடிப்பதில் வெற்றி கண்டார்.
எந்நேரமும் வேலை செய்தே பழக்கப்பட்டவளுக்கு, இன்னொருவர் வீட்டில் எந்தவேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடுவது பெரும் இழிவைத் தரும் என்று உணர்ந்தபடியால் அக்குற்ற உணர்வின்மூலமே அவளைப் பழிவாங்க முடிவெடுத்தவர் போல் நடந்துகொண்டார். அதையும் நேரடியாய்ச் செய்யாமல் அவளுக்கு ஏதோ உபகாரம் செய்வதுபோலவே செய்தார். இதன் மூலம் ஒரே நேரத்தில் சுந்தரியின் வேதனையையும், விக்னேஷின் நன்மதிப்பையும் பெற்றுவிடலாம் என்று நினைத்தார்.
ஆனால் விக்னேஷ் அம்மாவின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனாகையால் அம்மாவின் இந்த செயலை சுந்தரி முன்னிலையிலேயே கண்டித்தான்.
"அம்மா! சுந்தரிகிட்ட சொன்னா செய்யமாட்டாளா? நீங்க எதுக்கு இப்படி கஷ்டப்படுறீங்க?"
"அவ நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிப்பா! அவகிட்ட நான் எப்படி வேலை வாங்கிறது?"
"அம்மா, நீங்க அப்படியெல்லாம் நினைக்காதீங்க, நீங்க முடியாம வேலை செய்யறதைப் பாத்து அவ தவிக்கிறது எனக்கு நல்லாப் புரியுது. அவளையும் உங்களோட கூடமாட வேலை செய்யவிடுங்க!"
அதற்குப் பிறகு நாகலட்சுமி ஒன்றும் மறுக்கவில்லை. சுந்தரி சற்று துணிவுடன் நாகலட்சுமியிடம் அடுத்து என்னென்ன செய்யவேண்டுமென்று கேட்டுக் கேட்டு செய்தாள். இதில் நாகலட்சுமிக்கு ஒரு வசதியும் இருந்தது. சுந்தரியிடம் தானாய் வீட்டுவேலைகளை ஒப்படைப்பதைவிடவும், மகனின் விருப்பத்தின் பேரில் ஒப்படைத்தால், தனக்கு பழிச்சொல் உண்டாகாது என்று நினைத்தார். 
சுந்தரிக்கு நாகலட்சுமியின் மனவோட்டம் எதுவும் புரியாமல் இல்லை. அதனாலேயே விக்னேஷுக்கும் அவருக்குமான உறவின் நடுவில் தான் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாலும், சுபாவின் குறுக்கீட்டைத் தடுக்க முடியவில்லை. சுபா எவ்வளவு தூக்கத்திலிருந்தாலும், விக்னேஷின் குரல் கேட்டதும் விழித்துக்கொண்டு அவனைத் தேடுவதையும், அவனைப் பார்த்தநொடியே ஆவலாய் கைகளை விரித்துக்கொண்டு அவனிடம் பாய்வதையும் எத்தனை முயன்றும் சுந்தரியால் தடுக்க முடியவில்லை.
ஒருவாரம் ஓடியிருக்கும். சனி, ஞாயிறு முழுவதும் குழந்தையுடன் கொஞ்சிக்கழித்துவிட்டு திங்களன்று அலுவலகம் செல்ல விக்னேஷ் தயாரானபோது சுபா விழித்துக்கொண்டாள். விக்னேஷ் அம்மாவிடமும், சுந்தரியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் தருவாயில் அவனைப் பார்த்துவிட்டு கைகால்களை உதைத்துக்கொண்டு அவனிடம் தாவ முற்பட்டாள்.
"ஏய், சும்மா இரு, மாமாவுக்கு நேரமாச்சு....இப்ப உன்னய தூக்கமாட்டாங்க!" சுந்தரி குழந்தையை செல்லமாய் அதட்டினாள்.
சுபா அழத்துவங்க, அவளைத் தவிர்த்துவிட்டுப் போக மனமில்லாமல்,"குடும்மா! அவளைக் கொஞ்சநேரம் வச்சிட்டுப்போறேன், இல்லைன்னா எனக்கும் அங்க வேலை ஓடாது!" என்று கூறிக்கொண்டே இருகைகளாலும் அவளை வாங்கி தன் முகத்துக்கு எதிரே பிடித்துக் கொஞ்சினான்.
சுபா, அழுகையை நிறுத்திவிட்டு துள்ளலுடன் அவன் வயிற்றில் தன் கால்களை உதைத்து மேலெழும்பிச் சிரித்தாள்.
"வாலுக்குட்டி...இரு...இரு...உன்னய சாயங்காலம் வந்து கவனிச்சுக்கறேன்!" முத்தமிட்டு அவளை சுந்தரியிடம் ஒப்படைக்க முயன்றான்.
சுபாவோ, வீலென்று கத்திக்கொண்டு விக்னேஷின் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டு விட மறுக்க, அவள் கையிலிருந்து சட்டையை விடுவிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது, இருவருக்கும்.
"ஐயோ...உங்க சட்டையெல்லாம் கசங்கிடுச்சேண்ணே...."
சுந்தரி பதறினாள்.
"பரவாயில்ல....விடு...முதல்ல குழந்தையப் பாரு! எப்படி அழறா பாரு! அவளை அழவிடக்கூடாதுன்னு நினைச்சேன். நல்லா அழவிட்டுட்டுப் போறேன்!" விக்னேஷ் வருத்தத்துடன் விடைபெற்றுச் சென்றான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாகலட்சுமிக்கு சொல்லொணாக் கோபம் வந்தது. கட்டிய பெண்டாட்டி போல் இவள் வாசல்வரை போய் வழியனுப்புகிறாள், அவன் பெற்ற பிள்ளைபோல் குழந்தையை அழவிட மனசில்லாமல் போகிறான். என்ன கூத்து இது?
அக்கம்பக்கத்தில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் துளியாவது இருக்கிறதா இருவருக்கும்? கணவனை இழந்து மூன்றுமாதம்தான் ஆகிறது. அந்தக் கவலை கொஞ்சமாவது தெரிகிறதா இவள் பேச்சிலும், நடவடிக்கையிலும்? இப்படிதான் பிரபுவையும் மயக்கியிருந்திருப்பாளோ, இந்தக் கைகாரி?
ஏதேது? இருவரும் அண்ணன் தங்கை போல்தான் பழகுகிறார்கள் என்று நினைத்து சற்றே நிம்மதி அடைந்தால் அதையே சாதகமாய்க்கொண்டு இருவரும் வேறு உறவைத் துவக்கிவிடுவார்கள் போலிருக்கிறதே! ம்ஹும்! இதை இப்படியே விட்டுவிடக்கூடாது.
சுந்தரியை ஆரம்பத்திலேயே  கண்டித்து வைக்கவேண்டும். இல்லையென்றால்.....நிலைமை விபரீதமாகிவிடும். விக்னேஷ் இல்லாதபோது இவளிடம் பேசுவதுதான் சரி. 
விக்னேஷை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவளின் எதிரில் அனல் பறக்கும் விழிகளுடன் நின்றிருந்த நாகலட்சுமியைப் பார்த்ததும் சுந்தரியின் அடிவயிறு கலங்கியது.
*****************************************************************************
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

மு. உரை:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
--------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


14 comments:

  1. பெண்களின் கடினமான தோற்றங்கள், அவர்கள் விருப்பத்திற்கு மாறான சில சந்தர்ப்பங்களில் கடுமையாக வெளிப்படும். நாகலட்சுமியம்மாவின் குணாதிசயத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  2. இப்போதுதானே நேரடியாக தன் மகன் மீது
    அன்பு செலுத்துகிற ஒரு புதிய ஜீவனைப் பார்க்கிறார்
    ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருக்கும்
    அருமையாக கதை நகர்கிறது
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  3. சுயநலம் தலைதூக்கும்போது இப்படி தம்மை மறக்கும் மனிதர்களும் இருக்கிறார்களே...

    கருத்துக்கு நன்றி சாகம்பரி.

    கருத்துப்பதிவுக்கு நன்றி ரமணி சார்

    நேற்று பாதிதான் பதிவாகியிருந்தது. இப்போதுதான் கவனித்து மீதியையும் பதிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  4. விக்னேஷ் அம்மாவின் குணத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது.தொடருங்கள் தொடருகிறேன்.

    ReplyDelete
  5. வீட்டுவேலை வச்சிருக்கீங்க.விடுபட்ட தொடரை வாசிக்கவேணும் கீதா !

    ReplyDelete
  6. கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்!
    என்றார் இளங்கோவடிகள்
    அது சுந்தரி வாழ்வில் உண்மையாகிறது

    தொடரட்டும் தொடர்வேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. இதன் பொருள் என்ன ஐயா?

      Delete
  7. சகோதரி சிறு கதைகள் மட்டுமா எழுதுகிறீர்கள் ? .இன்று தான் வந்தேன். வாசிக்கவில்லை.. பார்த்தேன். நல்வாழ்த்துகள். தொடருங்கள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wpordpress.com

    ReplyDelete
  8. thirumathi bs sridhar said...

    //விக்னேஷ் அம்மாவின் குணத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது.தொடருங்கள் தொடருகிறேன்.//

    நன்றி ஆச்சி, தொடர்ந்து வாங்க.

    ReplyDelete
  9. ஹேமா said...

    //வீட்டுவேலை வச்சிருக்கீங்க.விடுபட்ட தொடரை வாசிக்கவேணும் கீதா !//

    அவசரமில்லை, நேரம் கிடைக்கும்போது படிங்க ஹேமா.வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. புலவர் சா இராமாநுசம் said...

    //கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்!
    என்றார் இளங்கோவடிகள்
    அது சுந்தரி வாழ்வில் உண்மையாகிறது

    தொடரட்டும் தொடர்வேன்//

    தொடர்ந்து வந்து ஊக்குவிப்பதற்கு மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  11. kovaikkavi said...

    //சகோதரி சிறு கதைகள் மட்டுமா எழுதுகிறீர்கள் ? .இன்று தான் வந்தேன். வாசிக்கவில்லை.. பார்த்தேன். நல்வாழ்த்துகள். தொடருங்கள்.
    வேதா. இலங்காதிலகம்.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  12. அம்பாளடியாள் said...

    //என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........//

    வருகைக்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி அம்பாளடியாள். தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இளம் விதவையின் வாழ்வில் ஏற்படுகிற சிரமங்களை இயல்பாய்ச் சொல்லியிருக்கீங்க கீதா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.