19 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (9)



வித்யா!

வித்யாவை காலம் தன் கண்களில் காட்டிய பொழுதை நினைத்துப் பார்க்கையிலேயே அவன் இதயம் சிறகடித்துப் படபடத்தது.

பிரபுவின் திருமணத்துக்காக கோவிலுக்குச் சென்றானே, அப்போதுதான் அவளைக் கண்டான். பிரபுவின் மற்ற நண்பர்களுடன் வந்திருந்தாள். பிரபுவின் தயவால் அறிமுகப்படலம் இனிதே முடிந்தது.

சந்தன நிறத்தில் அரக்கு பார்டர் அமைந்த, மிக மெல்லிய சரிகையோடிய பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள்.ஒற்றைப் பின்னலிட்டு அதன் நீளத்துக்கு மல்லிகைச் சரத்தைத் தொங்கவிட்டிருந்தாள். அவளுடைய சந்தன நிறத்துக்கு முன் அப்புடவை எடுபடவே இல்லை. கண்களில் அளவோடு மை தீட்டியிருந்தாள். நெற்றியில் ஒரு சிறிய கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு ஒய்யாரமாய் வீற்றிருந்தது.

உதட்டுச்சாயம் போன்ற இதர ஒப்பனைகள் ஏதுமற்று இயல்பான அழகுடன் இருந்தாள். எனினும் அங்கிருந்த பார்வைகள் யாவும் அவள்மீதே படிந்திருந்தன. அர்ச்சகர் கூட, அவள்தான் மணப்பெண் என்று நினைத்து மாலையை அவள் கையில் கொடுக்கப்போய், பின் தவறுக்காக வருந்தினார்.

கோவில் சந்திப்புக்குப் பிறகு பதிவுத் திருமணத்தின்போது மறு சந்திப்பு நிகழ்ந்தது.விக்னேஷைப் பார்த்ததும் அவளே வந்து பேசினாள். விக்னேஷுக்கு இருந்த இயல்பான கூச்சத்தால் அவன் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க முயன்றபோதும், அவள் வலிய வந்து பேசியது அவனுள் கிளர்ச்சியை உண்டாக்கவே செய்தது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், சுந்தரிக்கு குழந்தை உண்டான செய்தி அறிந்து பிரபுவைப் பார்க்க, இனிப்பு வாங்கிக்கொண்டு அவன் அலுவலகத்துக்கு சென்றபோது நிகழ்ந்தது, அவர்களுக்கிடையேயான மூன்றாவது சந்திப்பு!

அலுவலகம் முடியும் நேரம் போனால் பிரபுவையும்பார்த்துவிட்டு, முடிந்தால் அவனுடன் அவன் வீட்டுக்குச் சென்று சுந்தரியைப் பார்த்து வாழ்த்திவரலாம் என்பது விக்னேஷின் திட்டம். அதன்படி பிரபுவின் அலுவலகம் சென்றபோது, இவன் உள்ளே நுழையவும், வித்யா வெளியில் வரவும் சரியாக இருந்தது.

இருவரும் "ஹாய்!" சொல்லிக்கொண்டனர்.

"என்ன திடீர்னு இந்தப்பக்கம்?" வித்யா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

விக்னேஷ் விபரம் சொன்னதும் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.

விக்னேஷ் நேரே பிரபுவின் இருப்பிடம் சென்றபோது அவன் மும்முரமாய் வேலையில் மூழ்கியிருந்தான்.

"என்னடா, வீட்டுக்குப் போற உத்தேசமில்லையா?"

பின்புறமாய்ச் சென்று முதுகில் தட்டினான்.

"ஏய்...விக்கி! என்னடா திடீர்னு?"

அவனும் ஆச்சர்யம் காட்டினான். ஸ்வீட் பாக்ஸை அவனிடம் கொடுத்துவிட்டு, சுந்தரியைப் பற்றி விசாரித்தான்.

"சுந்தரி எப்படி இருக்காங்க?"

"ம்! ரொம்ப நல்லா இருக்கிறாடா. அக்கம் பக்கம் எல்லார் கூடவும் நல்ல பழக்கம் வச்சுகிட்டா. நானே இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை. வீட்டுக்காரம்மாவும் தங்கம் தான். அதனால் இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! இந்த உலகத்திலேயே இந்த நேரம் சந்தோஷமான மனிதன் யார்னா நான்தான்னு சொல்வேன்!"

"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா!"

"எல்லாத்துக்கும் நீங்கதான் டா காரணம். நண்பர்கள் உதவி இல்லைனா இத்தனையும் சாத்தியமான்னு எனக்குத் தெரியலை! ரொம்ப தேங்க்ஸ்டா!"

"டேய்...நமக்குள்ள என்னடா...."

"ஆ….மா……ம்! நீ… நிஜமாவே என்னைப் பார்க்கதான் வந்தியா…....இல்லே……..வேற யாரையாவது…...."

"ஏய்...என்ன புதுசா கதை விடறே…...உன்னைத் தவிர வேற யாரைப் பார்க்க வருவேன்?"

"இல்லே...வித்யா கொஞ்சநாளா உன்னைப் பத்தி விசாரிச்சுகிட்டே இருந்தாள். அவள்தான் ஒருவேள…….உன்ன வரச்சொன்னாளோன்னு……...."

"ச்சீ! ஏதாவது உளறாதேடா! நீ பாட்டுக்கு எதையாவது சொல்லப்போய்..எங்கம்மா காதுக்குப் போனால்....அவ்வளவுதான்!

"சும்மா சொன்னேன். அதுக்கே இப்படி வேர்க்குது?"

"கலாட்டா  பண்ணாமல் வீட்டுக்கு கிளம்புற வழியைப் பாருப்பா!"

"சாரிடா, நண்பா! இன்னைக்குன்னு பாத்து கொஞ்சம் அர்ஜண்ட் வேலை வந்திடுச்சு! நான் முடிச்சுட்டு வர லேட்டாகும்னு சுந்தரிக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். நீ வேணும்னா வீட்டுக்குப் போய் அவளைப் பாத்துட்டுப் போயேன்!"

"பரவாயில்லைடா! இன்னொரு நாள் வரேன்! என் வாழ்த்துகளை அவங்ககிட்ட சொல்லிடு!"

விடைபெற்று வெளியில் வந்தான். வாசலில் வித்யாவைப் பார்த்து திடுக்கிட்டான்.

"என்னங்க, இங்கே நின்னுட்டிருக்கீங்க? அப்பவே புறப்பட்டீங்க, இன்னும் போகலையா?"

"உங்களுக்காகதான் காத்திட்டிருக்கிஏன்!"

"எனக்கா? எதுக்கு?" விக்னேஷுக்கு ஜிவ்வென்றிருந்தது.

"என் ஸ்கூட்டிக்கு மூடு சரியில்லை....கிளம்ப மாட்டேன்னு ஒரே அடம்! சரி, நீ இங்கேயே இரு, நான் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆட்டோ பிடிக்கலாமா, பஸ் படிக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கும்போது பைக் பிடிக்கலாம்னு தோணவே நின்னுட்டேன்."

அவள் அபிநயத்துடன் சொல்லி முடிக்க, விக்னேஷ் சிரித்துவிட்டான்.

"என்னது, பைக் பிடிக்கப்போறீங்களா?"

"ஏன் பிடிக்கக்கூடாதா? என்னை எங்க வீட்டில் இறக்கிவிட்டுடு, ப்ளீஸ்னு கெஞ்சிக் கேட்டால் உங்க பைக் என்னை இறக்கிவிடாதா?"

"பெண் என்றால் பேயே இரங்குமாம். இவ்வளவு அழகான பெண் கேட்டால் என் பைக் இறங்காதா…….சாரி……..இறக்கிவிடாதா?"

"அப்பாடா! ரொம்ப தேங்க்ஸ்!"

"உட்காருங்க, உங்க வீடு எங்க இருக்கு?"

அவள் லாவகமாய் ஏறி அமர்ந்தாள். முதன் முதலாய் ஒரு பெண்ணை ஏற்றிப் புண்ணியம் தேடிக்கொண்ட பைக்கை பெருமையுடன் பார்த்தான். அம்மாகூட இதுவரை இதில் அமர்ந்ததில்லை. ஒருமுறை முயன்றாள். முடியவில்லை.

"என்னடா, இது? ஏறி உட்காரவே ரெண்டு ஆள் தேவைப்படுது! எனக்கு எப்பவும் போல ஆட்டோதான் லாயக்கு!" என்று அலுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

இத்தனை நெருக்கத்தில் ஒரு பெண்ணின் மணமும் ஸ்பரிசமும் அவனைக் கிறங்கடித்தது. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு ஓட்டிச் சென்று அவளது வீடிருக்கும் தெருவின் முனையில் நிறுத்தினான்.

"என்ன, நிறுத்திட்டிங்க?"

"இன்னும் நாலுவீடுதானே? நடந்து போயிடுங்க!"

"அதுசரி! நான் என்ன திருட்டுத்தனமாவா உங்களோட பைக்கில வரேன்? ஏறும்போது எங்க ஆபிஸ் வாட்ச்மேனை சாட்சியாவச்சு ஏறினேன். இறங்கும்போது எங்க அப்பாவை சாட்சியா வச்சு இறங்கப்போறேன். ஓட்டுங்க!" என்று கட்டளையிட்டாள்.

இந்தப் பெண்ணுக்கு எத்தனைத் துணிச்சல்! ஒரு புதியவனுடன், அவன் பைக்கில் அமர்ந்துபோய் வீட்டு வாசலில் இறங்கினால் வீட்டார் என்ன சொல்வார்கள் என்ற பயம் துளியும் இல்லாமல் பேசுகிறாளே! அதிசயித்தான்.

வீட்டு வாசலில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

"என்னமா, உன் ஸ்கூட்டிக்கு என்னாச்சு?"

"என்னவோ கோளாறுப்பா! நாளைக்குதான் ஆபிஸ் வாட்ச்மேன்கிட்ட சொல்லி மெக்கானிக் ஷாப் அனுப்பணும்!"

"வாங்க, தம்பி, ஏன் வெளியிலயே நிக்கறீங்க?"

அவர் இவனை வரவேற்றார்.

"வாங்க, விக்னேஷ்!" வித்யாவும் அழைக்க, ஒருவித கலக்கத்துடனேயே உள்ளே போனான்.

"அப்பா! இவர் விக்னேஷ்! பிரபுவோட நண்பர். அவரைப் பார்க்க எப்பவாச்சும் எங்க ஆபிஸுக்கு வருவார். இன்னைக்கு வந்தப்போ எங்கிட்ட மாட்டிகிட்டார்!"

அவள் சிரித்தாள். விக்னேஷ் இன்னமும் பயம் தெளியாமல் அமர்ந்திருந்தான்.

எப்போது அவள் அப்பா, "டேய், உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா என் பொண்ணை பைக்கில ஏத்திகிட்டு சுத்தினதுமில்லாம, என் கண்முன்னாடியே அவளைக் கொண்டுவந்து இறக்கிவிடுவே! ஒரு பொண்ணு அழகா இருந்தாப்போதுமே! பின்னாலேயே அலைவீங்களே! இன்னொரு தடவ அவ கூப்பிட்டான்னு வந்தியோ.....தெரியும் சேதி!"
என்று மிரட்டப்போகிறாரோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

இவனை வரவேற்பறையில் உட்காரச் சொல்லிவிட்டு வித்யா உள்ளே போய்விட்டாள்.

அவர் இவனிடம், "வீடு வரைக்கும் கொண்டுவந்து விட்டதுக்கு ரொம்ப நன்றிங்க தம்பி!" என்றதுடன், " தம்பி, காபி குடிப்பீங்களா, டீ குடிப்பீங்களா?" என்று உபச்சாரம் செய்தார்.

அவன் பதில் சொல்லுமுன், வித்யா காபிக் கோப்பைகளுடன் அங்கு வந்தாள்.

"இந்தாங்க, எடுத்துக்கங்க, நீங்க காபிப் பிரியர்னு பிரபு சொல்லியிருக்கார்!"

அவள் தந்த காபியின் ருசி அவன் நாவுக்குப் பழக்கமான ருசியைக் கொண்டிருந்தது இன்னும் வியப்பைத் தந்தது.

பிரபு சொன்னது உண்மைதானோ? இவள் தன் விஷயத்தில் ஆர்வம் காட்டக் காரணம்? பிரமிப்பு மாறாதவனாய் காபியைக் குடித்து முடித்தான்.

விடைபெற்றவனிடம், வித்யாவின் அப்பா,

"தம்பி, அடிக்கடி வாங்க! பிரபுவுக்கு நண்பர்னா எங்களுக்கும் நண்பர்தான்! போயிட்டு வாங்க!" என்று வழியனுப்பினார்.

தொடரும்...

*********************************************************

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

மு. உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

4 comments:

  1. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.//

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. குறளும் கதையும் பளிச்சென்று உள்ளது. ஆமாம் இந்த குறள் எல்லாம் மனப்பாடப் பகுதியில் வராதா? வந்தால் மறக்காமல் எழுதிவிடுவார்களே.

    ReplyDelete
  3. இறுதிக் குறள் அருமை .

    ReplyDelete
  4. வேலைப்பளுவால் கொஞ்சநாள் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    @ இராஜராஜேஸ்வரி,

    உங்கள் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.

    @சாகம்பரி,

    சரியாச் சொன்னீங்க. மூன்றாம் பாலில் எத்தனை அருமையான குறள்கள் உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாய் ஒதுக்கித்தானே பள்ளிகளில் கற்றுத்தரப்படுகிறது. மாணவர்கள் மட்டுமல்ல, இலக்கியம் படிக்காத இன்ன பிறரும் அவற்றின் அருமையை அறியமுடியாமலேயே போய்விடநேருகிறதே. கருத்துக்கு நன்றி சாகம்பரி.

    @ சிவகுமாரன்

    பாராட்டுக்கு நன்றி சிவகுமாரன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.