15 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (8)



'அம்மாவா இப்படிப் பேசுகிறார்? அன்று பிரபுவையும், சுந்தரியையும் அப்படி உபசரித்து அனுப்பினாரே! அதெல்லாம் வேடமா? என்னைப் பற்றி தன் மனதுக்குள் என்னதான் நினைத்திருக்கிறார்? நான் அவரை விட்டுப்போய்விடுவேன் என்றா? அந்தப் பயமே நாளுக்கு நாள் பல்கிப்பெருகி இன்று பூதாகாரமாய் உருவெடுத்து நிற்கிறதா?

என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் அம்மா இந்தக் தவறான எண்ணத்தை மட்டும் என்னிடமிருந்து எப்படி மறைத்தார்?'

நாகலட்சுமி கேள்விக்கணையைத் தொடுத்துவிட்டு அவன் பதிலுக்காய்க் காத்திருப்பது தெரிந்தது. விரக்தியடைந்த விக்னேஷ் இறுகிய குரலில்,

"கவலைப்படாதீங்க அம்மா! உங்க விருப்பத்துக்கு மாறாய் எந்தப் பெண்ணையும் நான் திருமணம் செய்துக்கமாட்டேன்!" என்றான்.

நாகலட்சுமிக்கு மகன் மேலிருந்த நம்பிக்கை தொய்ந்துவிட்டதால் அவன் வாய்மொழியாய்ச் சொல்வதை மனம் ஏற்கவில்லை.

விக்னேஷ் நிறைந்த கடவுள் நம்பிக்கை உடையவன். தாயிடம் அன்பைவிடவும் பக்தி கொண்டவன். அவனைத் தன் விருப்பத்துக்கு வளைக்க, இதுவே தகுந்த சந்தர்ப்பம் என்பதை நாகலட்சுமி உணர்ந்தார்.

"விக்னேஷ்! நீ இப்ப சொல்லுவே! அப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டு.... எவளையாவது....."

"அடட.....டா.....! என்னம்மா இது? திரும்பத் திரும்ப அதையே பேசுறீங்க? என்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"அதில்லைப்பா...வந்து...."

"சரிம்மா! எப்படிதான் உங்க சந்தேகத்தை நான் போக்குறது? சொல்லுங்க!"

"என் கையிலடிச்சு சத்தியம் செய்! நம்பறேன்!"

"அம்மா!"

விக்னேஷின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. பொங்கிய துக்கத்தை மறைத்து எதுவும் பேசாமல் நீட்டிய அவர் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து அழுந்தப் பற்றினான்.  உடைந்த குரலில் சொன்னான்.

"அம்மா! உங்க விருப்பப்படிதான் என் கல்யாணம் நடக்கும். என்னை நம்புங்க!"

அதன் பின் நாகலட்சுமி எதுவும் பேசவில்லை. ஆனால் உள்ளூர மகிழ்வும் உள்ளத்தெளிவும் உண்டானது.

கலங்கிய மனதுடன் அம்மாவின் கைகளில் தண்ணீர் தம்ளரையும், மாத்திரையையும் கொடுத்தவன், அமைதியாய் அந்த அறையை விட்டு வெளியேறி தன்னறைக்குள் தஞ்சமடைந்தான். நடந்த எதையும் மனம் நம்ப மறுத்தது.

பொங்கிவந்த வேதனையின் உச்சகட்டமாய், சத்தம் வெளியில் வராவண்ணம் தலையணையில் முகம் புதைத்துக் குமுறிக் குமுறி அழுதான்.

‘சே! என்மேல் அவநம்பிக்கையா? அம்மா என்ற இந்த ஒரு உறவுக்காக, அந்த ஜீவனின் மகிழ்வுக்காக என் சுகத்தை, கனவுகளை, ஆசைகளை எல்லாம்  துறந்து ஒரு துறவி போல் வாழும் என்னைச் சந்தேகிக்க எப்படியம்மா உங்களுக்கு மனம் வந்தது?

இக்கால இளைஞர்களின் ஆசையில் ஒரு கால்பங்காவது எனக்கிருக்காதா? எல்லாவற்றையும் மூடி மறைத்து, உங்கள் விருப்பமொன்றே என் விருப்பம் என்பதுபோல் ஏற்றுக்கொண்டு, அதில் நான் சுகமாய் வாழ்வதாய் பாசாங்கும் செய்துகொண்டு நாளெல்லாம் உங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறேனே, என்னை நம்பவில்லையா? என் இத்தனை வருட வாழ்வு தராத நம்பிக்கையையா, இந்த ஒரு நொடி சத்தியம் தந்துவிடப்போகிறது? 

என் தியாகத்துக்கும், தன்னலமற்ற அன்புக்கும் இதுதான் பிரதிபலனா? உங்கள் முகத்தில் தவழும் மலர்ச்சி ஒன்றே என் வாழ்வின் குறிக்கோள் என்று நினைத்திருந்தேனே, அது நிறைவேறாத கனவாகிப் போய்விட்டதா?

நான் பட்ட பாடெல்லாம் வீண்தானா? இப்படி ஒருநாள் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நானும் ஒரு சராசரி ஆடவனாய் வாழ்ந்திருப்பேனே! என் வாலிபக்கனவுகளை ஏன் பொசுக்கிக்கொண்டிருக்கவேண்டும்?

பள்ளி வயதில் பட்ட அவமானங்கள் வரிசையாய் வந்து நினைவிலாடின.

"டேய், விக்கி! உனக்கு மட்டும் எங்கேர்ந்துடா இப்படி பூப்போட்ட சட்டையெல்லாம் கிடைக்குது? எங்க அப்பாகிட்ட வாங்கித் தரச் சொன்னா நீயென்ன பொம்பளப்புள்ளயாடான்னு கேக்கறாரு!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"ஏன் டா, கிளாஸ் முழுக்க டூர் போறோம்! நீ மட்டும் வரமாட்டேங்கறே! கேட்டா அம்மா வேணாங்கறாங்க அப்படின்னு சொல்றே! ஒவ்வொரு வருஷமும் இதேதான்டா சொல்றே! நாங்க எல்லாரும் வளர்ந்துட்டோம், நீ மட்டும்தான் இன்னமும் அம்மா பொடவையைப் புடிச்சுகிட்டு விரல் சூப்பிகிட்டுத் திரியுறே!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”


பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றில் அடியெடுத்து வைத்த சமயம்,

"டேய், நேத்து நான் விக்கி வீட்டுப் பக்கமா போனேன்டா! அப்ப விக்கி டிரவுசர் போட்டுகிட்டு நின்னுட்டிருந்தான்டா!"


“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"ஏன் டா, உனக்கு கைலி கட்டத் தெரியாதா?"

"டேய்! அவங்க அம்மாதான் டிரவுசர் போட்டுக்க சொன்னங்களாம்!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"சொன்னாங்களா, அவங்களே போட்டுவிட்ட்டாங்களா?"


“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"டேய்! பாத்துடா! என்னைக்காச்சும் உனக்கு ஹக்கீஸ் போட்டு விட்டுடப் போறாங்க!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

அத்தனைப் பேரும் கொல்லென்று சிரிக்க, உண்மையில் இவனைக் கொல்வது போல்தானிருக்கும் அந்த வெடிச்சிரிப்புகள். ஒருவருக்கும் இவன் நிலை புரியவில்லை.

'அம்மா கோண்டு' 'பயந்தாங்கொள்ளி' 'அம்மாகிட்ட இன்னும் பால் குடிக்கிற பாப்பா' என்று என்னென்னவோ பெயர்வைத்தழைத்து நோகடித்தனரே தவிர ஆறுதலாய் எவரும் இல்லை.

எவ்வளவு அவமானங்களைத் தாண்டிவிட்டேன்! எல்லாம் யாருக்காக? அம்மாவுக்காக! இந்தக் கேலியும் கிண்டலும் அவர் காதுகளை எட்டிவிடக்கூடாது என்பதில் எத்தனை கவனமாக இருந்தேன்? ஒருநாளாவது என் துக்கத்தை, வேதனையை அவரிடம் வாய்விட்டு முறையிட்டிருப்பேனா? ஏன்? அவர் நிம்மதி குலையக்கூடாது எண்ணத்தால் தானே?

என் போன்ற பிள்ளையின் அன்பை அங்கீகரிக்கும் அழகு இதுதானா? நண்பர்கள் கேலி பேசும்போது வராத துன்பமும், துயரமும் இப்போது வந்து வாட்ட,  ஆற்றாமை அலைக்கழித்தது..

யாரிடமாவது தன் மன உளைச்சலைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. பிரபு ஒருவன் தான் தன் குடும்பசூழல் அறிந்தவன். அவனிடம்தான் சொல்லமுடியும். ஆனால்....

அவன் இப்போதுதான்  பல பிரச்சனைகளைக் கடந்துவந்து தனது காதல் வாழ்க்கையை கனவுகளுடன் துவக்கியிருக்கிறான். அவனிடம் சொல்வதன்மூலம் தன் பாரம் குறையலாம்; ஆனால் அவனுக்கு பாரம் மிகுந்துவிடும். தன் திடீர்த் திருமணம்தான் இந்தப் பிரச்சனைக்கு மூல காரணம் என்று அறிந்தால் மிகவும் கவலைப்படுவான். அதனால் இப்போதைக்கு அவனுக்கு எதுவும் தெரியாமலிருப்பதே நல்லது.

பிரபுவைத் தவிர வேறு நண்பர்களும் இல்லை. இந்தப் பரந்த உலகத்து மனிதர்களை எல்லாம் அம்மாவுக்காக ஒதுக்கி வாழ்ந்ததற்கு தக்க தண்டனை இது என்று புரிந்தது. சே! நண்பர்கள் அற்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை?

அம்மாவுக்குப் பயந்து பயந்து நண்பர் வட்டத்தை நாளடைவில் குறைத்து அது இறுதியில் பிரபு ஒருவனுடன் நின்றுவிட்டது. இவனுடைய தொடர்பையும் அம்மாவின் நடவடிக்கை, கூடிய விரைவில் துண்டித்துவிடலாம்.

ஆறுதல் தேடி அங்குமிங்கும் அலைபாய்ந்த மனது, இறுதியில் வித்யாவின் மடியில் தஞ்சம் புகுந்தது. அவள் அதை ஒரு குழந்தை போல ஏந்திக்கொண்டாள். அதன் கண்ணீர் துடைத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். அதன் முகம் பார்த்துப் புன்னகைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள். அவளது பூங்கரங்கள் பட்டுப் பரவசமடைந்த மனம், அவள் கைகளிலிருந்து விடுபட்டு,துள்ளிக்குதித்துக் கொண்டு அவனிடம் ஓடிவந்தது.

அம்மாவுக்குப் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால், விக்னேஷின் ஆழ்மனதில் அதுவரை அடைபட்டுக்கிடந்த வித்யா, ஒரு தேவதை போல் எழும்பி  மிதந்து மேலே வரத் துவங்கினாள்.

 தொடரும்...

**********************************************************
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

மு. உரை:
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

3 comments:

  1. மனிதர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் திசை மாறிப் போகிறார்கள். அந்த புள்ளியை வைத்தது நாமாக இருக்கக்கூடாது என்று எப்போதும் சொல்வேன். பாவம் விக்னேஷ்.

    ReplyDelete
  2. போன பதிவில் சொன்னமாதிரியே சில அம்மாக்களின் பாசம் பைத்தியமா மாறி இப்படித்தான் சில குடும்பங்களில் !

    ReplyDelete
  3. நன்றி சாகம்பரி.

    நன்றி ஹேமா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.