28 July 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (10)


வித்யாவை சந்திக்கும் வாய்ப்புகள் அதன்பின் தானாகவே அமைந்தன. அந்தச் சந்திப்புகள் இருவரிடையே ஒரு இணக்கத்தை உண்டாக்கியிருந்தன. வித்யாவின் சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும், எல்லோரிடமும் சகஜமாய்ப் பழகும் தன்மையும் விக்னேஷை வசீகரித்திருந்தன. அதற்கு நேரெதிராக இவனது கூச்ச சுபாவமும், பெண்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்லும் பாங்கும் வித்யாவை ஈர்த்தன.

வித்யா, விக்னேஷின் கரங்களைப் பற்றிக்கொண்டு நட்பின் எல்லையைத் தாண்டி காதல் தேசத்துக்குள் நுழைய பெருமுயற்சி மேற்கொண்டிருந்தாள். விக்னேஷுக்கும் அதில் பெருமளவு விருப்பமிருந்தாலும், அம்மாவை எண்ணி பயந்து, வித்யாவிடமிருந்து தன் கைகளை விடுவிக்கப் போராடிக்கொன்டிருந்தான்.

"விக்கி, உங்கம்மாகிட்ட என்னை அழைச்சிட்டுப்போங்க, அவங்க என்னை ஏத்துக்கிட்டா, உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைதானே?"

"அதில்லை..வித்யா...எங்கம்மாவுக்கு பொஸஸிவ்னஸ் அதிகம். அவங்க உன்னை எதாவது தவறாப் பேசிட்டா என்ன பண்றதுன்னுதான் பயப்படறேன்! அதுவுமில்லாம என்மேல் அவங்க வச்சிருக்கிற நம்பிக்கையும் பாழாயிடும்!

"விக்கி! உங்க அம்மா மேல் நீங்க வச்சிருக்கிற அன்பும் மதிப்பும்தான் என்னை உங்க பக்கம் திரும்பவச்சுது! எங்க அப்பாகிட்ட உங்களைப் பத்தி சொன்னேன்தன்னைப் பெத்தவளோட உணர்வுகளை மதிச்சு, அவகிட்ட அன்பா இருக்கிறவன், தன் பெண்டாட்டிகிட்டயும் அதே அளவு  அன்போடயும் புரிதலோடயும் இருப்பான்னு எங்க அப்பா சொன்னார். அவருக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுபோச்சு! உங்க அம்மாவைப் பார்த்து பேசவும் தயாரா இருக்கார். நீங்கதான் பிடிகொடுக்க மாட்டேங்கறீங்க!"

"என்னை மன்னிச்சிடு, வித்யா! என் அம்மாகிட்ட உன்னைப் பத்திப் பேசற துணிச்சல் எனக்கில்லை. இந்த விஷயத்தில் நான் ஒரு கோழைதான். எனக்கு என் அம்மாவின் சந்தோஷம்தான் முக்கியம்! அதற்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன், எதை வேணும்னாலும் இழப்பேன்!"

"விக்னேஷ்! முயற்சியே செய்யாமல், முடியாதுன்னு முடிவெடுத்தால் எப்படி?"

"ப்ளீஸ், வித்யா! என்னை வற்புறுத்தாதே! நீ உங்க வீட்டில் சொல்லி வேற நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ!"

"இல்லை, விக்னேஷ்! உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொன்னால் ஒத்துக்கறேன், இல்லே...உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலைன்னாலும் ஒத்துக்கறேன். எதுவுமில்லாமல் இப்படி சொல்றது சரியாப்படலை! நல்லா யோசிச்சுப் பாருங்க!”

 "சாரி, வித்யா!"

"சரி! இனிமேல்  நான் இந்தப் பேச்சையே எடுக்கமாட்டேன்!"

வித்யா அதன்பின் விக்னேஷைப் பார்த்தாலும் பேச்சு பொதுவாகத்தான் இருக்கும். இவனும் தன் இயல்பான உணர்வுகளுக்கு ஒரு இரும்பு முகமூடியை வலியப் பொறுத்திக்கொண்டு அவளிடம் பேசுவான்.

எல்லாம் எதற்காக? அம்மாவின் நம்பிக்கையைக் கெடுத்துவிடக்கூடாது என்ற பயம்தானே? ஆனால்....ஆனால்.....இன்று அம்மா அவன் மேல் நம்பிக்கையில்லாமல் கையிலடித்து சத்தியம் செய் என்கிறார்.

சே! முதல் முறையாய் அம்மாவின் மேல் வெறுப்பு வந்தது. தாய்மை பிரதிபலன் பாராதது என்று சொல்வார்களே! ஆனால் அம்மா என் எதிர்காலத்தையே அல்லவா என்னிடமிருந்து பறித்துக்கொண்டார்? என்றாவது ஒருநாள் அம்மாவிடம் என் காதலைச் சொல்லி அனுமதி பெறலாம் என்று எண்ணியிருந்த எண்ணத்தில் இடி விழுந்துவிட்டதே!

தன் அன்பை புரிந்துகொள்ளாத அவருக்காக தான் ஏன் தன் சுகத்தை விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று தோன்றியது.
 இனியும் அவர் பேச்சை மதிக்கவேண்டிய அவசியம் என்ன? இத்தனைநாள் மதித்து நடந்ததற்கு கிடைத்த பலன் என்ன? நம்பிக்கையின்மை!

நீயும் ஒருநாள் உன் நண்பனைப்போல்தான் செய்வாய் என்கிற அவச்சொல்! நானும் அவனும் ஒன்றா உங்களுக்கு? நான் உங்கள்மீது என் உயிரையே வைத்திருக்கிறேனே!

நினைக்க நினைக்க நெஞ்சம் பொருமியது. தாயின் இறக்கைக்குள் அடைபட்ட கோழிக்குஞ்சாய் வாழ்ந்தது போதும்; பரந்து விரிந்த வானில் ஒரு பருந்தைப் போல் எவருக்கும் அஞ்சாமல் சிறகுகளை அகலவிரித்துப் பறக்கவேண்டும்! வட்டமிட்டுப் பறந்து வானில் வலம் வரவேண்டும்.

என் வாழ்க்கையை நான் வாழவேண்டும். என்மேல் காதல் கொண்டுள்ள வித்யா என்னும் அழகு தேவதையை, அன்பின் திருவுருவத்தை என் வாழ்க்கைத் துணையாய் ஏற்கவேண்டும். ஆனால்...ஆனால்......

அம்மாவிடம் செய்த சத்தியம் நினைவுக்கு வந்தது. என்மேலிருந்த நம்பிக்கை குலையுமளவுக்கு நான் நடந்திருந்தாலன்றி, அவர் மனதில் போராட்டம் உருவாக வாய்ப்பு இல்லை. அப்படியென்றால்....தவறு என்னுடையதுதானோ? அவரது உள்ளத்தில் இத்தனைநாள் என்ன இருக்கிறது என்று அறியமுடியாத பிள்ளையாய் இருந்திருக்கிறேனா?

அம்மாவே உலகம் என்று நான் வாழ்ந்ததுபோல்தானே அவரும் மகனே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். எனக்காவது அலுவலகம், வேலை என்று வெளியில் நாலுபேரைப் பார்த்துப் பேசமுடிகிறது. அவரோ, எந்நேரமும் வீட்டுக்குள் முடங்கி, தன் மகனுக்குப் பிடித்த உணவுவகைகளைச் செய்வதிலும், கை கால் வலிகளுக்கு மருத்துவம் செய்வதிலுமே காலத்தைக் கழித்துவிடுகிறார்.

பத்திரிகைகளும், புத்தகங்களும்  படிக்கும் வழக்கம் இருக்கிறதாலேயே ஒரளவு பொழுது கழிந்துவிடுகிறது. அதற்காகவே வாடகை புத்தகநிலையத்தில் ஆயுட்கால உறுப்பினராகிவிட்டார்.அதுவும் இல்லையென்றால் ....?

அம்மா வேறெதிலும் ஆர்வம் காட்டிப் பார்த்ததில்லை.ஒரு கோயிலுக்கும் செல்வதில்லை. அக்கம்பக்கம் யார் வீட்டு, விசேஷங்களுக்கும் போவதில்லை. எவரையும் வீட்டுக்கும் அழைப்பதில்லை. கிட்டத்தட்ட சிறை வாழ்க்கைதான். அவரின் நிலையை நினைத்து பரிதாபம் எழுந்தது.

அவர் என்னை நம்பினாலும், நம்பாவிட்டாலும் என் தாய்! அவர் தம் பாதையிலிருந்து விலகலாம். நான் விலகுவது எப்படி சரியாகும்? நான் நானாக இருப்பதே அவர் நம்பிக்கையை மீண்டும் பெற ஒரே வழி!

கடவுளே....எனக்கு மனோதிடத்தைக் கொடு! பொறுமையைக் கொடு!

என் அம்மாவின் மனம் மாறும்வரை என்னை பொறுமை காக்கவிடு!

மனம் லேசானதுபோல் தோன்ற நிம்மதியாய் உறங்கினான்.


தொடரும்...

********************************************************************

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மு. உரை:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
-------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


10 comments:

  1. விக்னேசிற்கு கடவுள் அருள் புரிய வேண்டும்.
    தங்களை பதிவுலக நட்புத் தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது பங்கெடுத்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.

    ReplyDelete
  2. நான் நானாக இருப்பதே அவர் நம்பிக்கையை மீண்டும் பெற ஒரே வழி!

    கடவுளே....எனக்கு மனோதிடத்தைக் கொடு! பொறுமையைக் கொடு!//

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. தாயை மதிக்கும் பிள்ளைகள் வாழ்வு செழிக்கும் என்பார்கள் !

    ReplyDelete
  4. \\தாயின் இறக்கைக்குள் அடைபட்ட கோழிக்குஞ்சாய் வாழ்ந்தது போதும்; பரந்து விரிந்த வானில் ஒரு பருந்தைப் போல் எவருக்கும் அஞ்சாமல் சிறகுகளை அகலவிரித்துப் பறக்கவேண்டும்! வட்டமிட்டுப் பறந்து வானில் வலம் வரவேண்டும்.///

    ஆனால் என்ன முயன்றாலும் , மீண்டும் தாயின் இறக்கைக்குள் அடைபட்ட சுகம் கிடைக்காது.

    ReplyDelete
  5. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  6. சாகம்பரி said...

    //விக்னேசிற்கு கடவுள் அருள் புரிய வேண்டும்.//

    கருத்துக்கு நன்றி சாகம்பரி.

    //தங்களை பதிவுலக நட்புத் தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது பங்கெடுத்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி.//

    தொடர்பதிவுக்கான அழைப்புக்கு நன்றி சாகம்பரி. அடுத்தப் பதிவு அதுவே.

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரி said...

    //நல்ல பகிர்வு.//


    தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  8. ஹேமா said...

    //தாயை மதிக்கும் பிள்ளைகள் வாழ்வு செழிக்கும் என்பார்கள் !//

    தொடர்ந்துதரும் ஊக்கத்துக்கு நன்றி ஹேமா.

    ReplyDelete
  9. சிவகுமாரன் said...
    \\தாயின் இறக்கைக்குள் அடைபட்ட கோழிக்குஞ்சாய் வாழ்ந்தது போதும்; பரந்து விரிந்த வானில் ஒரு பருந்தைப் போல் எவருக்கும் அஞ்சாமல் சிறகுகளை அகலவிரித்துப் பறக்கவேண்டும்! வட்டமிட்டுப் பறந்து வானில் வலம் வரவேண்டும்.///

    //ஆனால் என்ன முயன்றாலும் , மீண்டும் தாயின் இறக்கைக்குள் அடைபட்ட சுகம் கிடைக்காது.//

    உண்மைதான். அன்பின் ஆளுமையை வெல்லும் ஆயுதம் எது, அன்பைத்தவிர? கருத்துப்பதிவுக்கு நன்றி சிவகுமாரன்.

    ReplyDelete
  10. மாய உலகம் said...

    //நல்ல பகிர்வு//

    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மாய உலகம்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.