10 April 2013

பெரிய மனுஷியாகிவிட்டாளாம்...


 
பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டதாம்!
பெரிதாய்த்தான் அலட்டிக்கொள்கிறாள்!
 
நேற்றைய நமைச்சல்கள் காற்றோடு போயினவாம்!
இன்றுமுதல் அவள் வகுத்த சட்டங்களே
ஏகமனதாய் அமலாக்கம் பெறுகின்றனவாம்.
 
சட்டப்படி பெரியமனுஷியாகிவிட்டாளாம்,
இட்டப்படி எதையும் செய்யலாமாம்,
கட்டப்பட்டு கட்டுக்குள் கிடக்கவேண்டாமாம்,
திட்டமிட்ட வாழ்க்கை தினப்படி அவளுடையதாம்!
 
அறைக்குள் வர அன்னைக்கும் அனுமதியில்லையாம்,
குறைகள் சொல்ல ஒருவருக்கும் உரிமையில்லையாம்.
நியதி மீறினால் நீதிமன்றம் செல்லுவாளாம்,
தனிமனித உரிமை பறிக்கப்படுவதாய் முறையிடுவாளாம்!
 
எதிர்பார்த்திருக்கவில்லை அவளிடம்!
அதிர்ந்து நின்றேன் நான்!
 
என்னவென்று சொல்வது இதை?
என் வளர்ப்பில் எங்கோ குறை…
கர்மவினை
கலாச்சாரச் சீர்கேடு
காலத்தின் கோலம்
ஊழியின் கூத்து
தலையெழுத்து
பூர்வஜென்ம பலாபலன்
 
அரற்றும் மனத்தை அமைதிப்படுத்த
இத்தனைப் பெயர்களில் ஏதொன்றும் அமையாதா என்ன?
ஆதங்கத்துடன் அலசிய வேளை,
அசரீரீ போல் அழைக்கிறாள்,
 
கலங்கிவிட்டாயா அன்னையே?
கல்லாக்கிக் கொள் மனத்தை,
அத்தனை எளிதில் விட்டுவிடமாட்டேன் உன்னை,
வாழ்நாள் முழுக்க வழிநடத்தவேண்டும் என்னை!
 
முரண் புரியாமல் முழித்தவளிடம்
இன்று ஏப்ரல் ஒன்று என்று
வெடித்துச் சிரிக்கிறாள் நிலா!
 
அதிர்ச்சி மீளாது அமர்ந்திருக்கிறேன் நான்! 

29 March 2013

ஒற்றை வார்த்தையில் ஊசலாடுகிறதோர் கவிதை

 
 

 
எத்தனை முறை யோசித்தாலும்
எண்ணத்துக்கு அகப்படாமல்
ஏய்த்து விளையாடுகிறது ஏதோவொன்று! 

கணகாலத்துக்குப் பின் கருவான
அந்தக் கவிதையின் ஓட்டத்துக்கு
அநேகமாய் ஈடுகொடுத்துவிட்டன
அத்தனை வார்த்தைகளும்,
அந்த ஒன்றைத் தவிர! 

மூளைக்குள் முரண்டுபிடிக்கும் அவ்வார்த்தையைக்
கட்டிக்கொணர எத்தனைமுறை ஏவினாலும்
வெறுமனே திரும்பிவருகிறது நினைவுபூமராங்! 
அவ்வார்த்தைக்கு நிகராய் வேறொன்றை
இட்டு நிரப்பவும் மனமொப்பவில்லை.
 
முற்றியும் முற்றாமல்
மூளியெனக் கிடக்கும் அக்கவிதை,
ஒரு முதிர்கன்னியின் மனவழுத்தத்தோடு
ஏளனமும் ஏக்கமுமாய்
என்னைப் பார்க்கும் பார்வையில்
குறுகுறுத்துக் கவிழ்கிறது என் கவியுள்ளம்! 

அஜீரணக்காரனின் நெஞ்செரிச்சல் போல்
அடிக்கடி நினைவுக்கு வந்தும் வராமலும்
உள்ளெரிக்கும் அந்த வார்த்தை என்னவென்று
உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள். 

குறைந்தபட்சம் உங்கள் கவிதையொன்றிலாவது
அதைப் பயன்படுத்துவதன்மூலம்
என் கவனத்துக்குக் கொண்டுவருவீராயின்
மழலையைப் பிரிந்த தாயைப் போல
மன்றாடி நிற்கும் கவிதையிடம் சேர்ப்பித்து
நன்றியோடு நான் ஆசுவாசமடைவேன்!

 

6 February 2013

அன்பின் பரிசுகளுக்கு நன்றி


பதிவுலகில் என்னை வழிநடத்திச் செல்லும், வாழ்த்தி மகிழும்,  அன்பினைப் பகிர்ந்துகொள்ளும் அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் பணிவான நன்றி.






 
 
 
 
 
 
 
 
 
 
 
 




 
 
 





 

6 October 2012

கழங்காடுகல்லெனவே…


  
சிறுநதியொன்றின் சன்னப் பிரவாகத்தில்
என் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது காலம். 
கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.
 
நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
 
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து
பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.


*************
படம் உதவி; இணையம்

30 September 2012

பனைமரத்திடலும், பேய்களும்

 
 
 
பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
பயத்தால் பின்னிக்கொள்ளும்
பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்!
 
உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும் பேய்களுக்கு
உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
பலியானவரில் ஒருவர்
தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
விழிவிரிய பாக்கியலட்சுமி சொன்னதெல்லாம்
வழித்துணையாய் வந்து பாடாய்ப்படுத்தும்.
 
சடசடவென்று சத்தமிட்டபடி,
படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
வா வாவென்று பேய்கள் யாவும்
வரவேற்பதுபோல் தோன்ற....
 
தோளில் தொத்திக்கொண்டு
உடல் அழுத்தும் பயத்தை
எந்தக் கடவுள் பெயரால் விரட்டுவது
என்று புரியாமல் நொடிப்பொழுது குழம்பி,
 
அம்மா அறிமுகப்படுத்திய அம்மனைக் கொஞ்சமும்,
பள்ளியில் பரிட்சயமான
பரலோகத்திலிருக்கும் பரமபிதாவைக் கொஞ்சமும்
எதற்கும் இருக்கட்டுமென்று அல்லாவையும் கொஞ்சம்
அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
கண் இறுக்கி, காது பொத்தி,
கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!
 
புழுதிகிளப்பியபடி, குப்பைகளால் கும்மியடிக்க,
வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த ஓலைகளால்
பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,
 
விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
கருவேலமோ, நெருஞ்சியோ
பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
வீடு வந்து சேர்ந்து,
விட்டிருந்த மூச்சைத் திரும்பப் பெற்றதொரு காலம்.
 
வாழ்க்கைப்பட்டு வேற்றூர் புகுந்து,
வாழ்க்கைப்பள்ளியில் வருடம் சில கழிந்து,
அச்சங்களின் ஆணிவேர்
அசைக்கப்பட்டுவிட்டிருந்தத் தருணமொன்றில்...
பரவசம் எதிர்நோக்க,
பனைமரத்திடல் கடந்தபோது பகீரென்றது!
 
மரங்களற்ற திடல் மயான அமைதி கொண்டிருக்க,
தகரப் பலகையொன்று தனித்து நின்றிருந்தது,
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
அவசர வருகை சுட்டி!
 
மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?

16 September 2012

அம்மா என்றொரு மனுஷி

 
 
புதிய திரைப்படமொன்றின்
திருட்டுப்பிரதியினைப் பார்வையிட
கூடத்தில் அனைவரும் கூடியிருக்கும் வேளையிலும்
உணவு தயாரிக்கும் உரிமை மட்டும்
எக்காரணம் கொண்டும் எவராலும் பறிக்கப்படாமல்
அவளிடமே அதீதமாய் விட்டுவைக்கப்படுகிறது.
 
முன்தினம்முதலாய் குளிர்சுரம் கண்டு
கம்பளிக்குள் முடங்கி நடுங்கி,
பினத்திக்கொண்டிருந்தவள்,
மாத்திரை முழுங்கிய மறுகணமே
பரவாயில்லை இப்போதென்று சொல்லி
பட்டென எழுந்துகொள்வாளென்று
எல்லோராலும் அனுமானிக்கப்படுகிறது.
 
குற்றாலத்துக்கு குடும்பத்துடன்போக
மகிழுந்து பேசி மற்றவரெல்லாம் ஏறியபின்
அவளொருத்திக்கு மட்டும் இடமில்லையென்பது
இறுதிகணத்தில் தெரியவர....
'நானிருக்கேனே வீட்டில்!'
வழக்கம்போலவே அந்த வாசகம் 
அவள் வாயிலிருந்தே வரவேண்டுமென்று
உளமாற வேண்டப்படுகிறது.
 
அவளது ஒப்புதலின்றி
எதுவும் செய்வதில்லையென்ற
அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்
ஊமையாகிப் போகின்றன,
பலவந்தமாய்ப் புறக்கணிக்கப்பட்ட
அவளது எதிர்ப்புகளும், மறுப்புகளும்.
 
இத்தனைக்குப் பின்னும்
இயந்திரமனுஷியாய் இல்லாமல்
புன்னகையுடனும் புத்துணர்வுடனும்
அன்றாடம் வலம்வரவேண்டுமென்று அனைவராலும்
அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது.

12 September 2012

அடைகோழி கருப்பி

 
 
 
குறுகுறுக்கும் பார்வையை அங்குமிங்கும் ஏவி,
குறைக்கேவலொன்றை வெகு அமர்த்தலாய்க் கேவி
கூட்டுமூலையோரம் மீண்டும் மீண்டும்
வந்து அமர்ந்துகொள்கிறது அடைகோழி கருப்பி.
 
விரட்ட விரட்ட போக்குக் காட்டி
மறுபடியும் அடைய வந்ததை
ஆத்திரத்துடன் துரத்தியமுக்குகிறாள் ஆச்சி.
 
படபடக்கும் இறக்கையினின்று ஒற்றை இறகு பிய்த்து
அலகில் அலகுக்குத்த முயல்பவளை,
ஆக்ரோஷம் காட்டி அலைக்கழிக்கிறது கருப்பி.
 
முட்டைகளை அபகரித்தாய், போதாதா?
மூக்குத்தியிட்டு என் மென்தவம் களைத்து
மறுகருத்தரிப்புக்கு விரட்டுகிறாயே
மனுஷியா நீயென்று மூர்க்கம் காட்டுகிறது
தன் முரட்டுக்கேவலில்.
 
ஆச்சிக்கும் கருப்பிக்கும் இடையில் நடக்கும்
போராட்டத்தைப் பார்த்தபடி பாயில் கிடக்கிறாள்
பத்துநாளுக்குமுன் பிள்ளைபெற்ற பாதகத்தி ஒருத்தி.
 
கண்மலரா பச்சிளம்சிசுவின் வாயில்
கள்ளிப்பால் புகட்டப்பட்டக் கடைசித் தருணத்திலும்
கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்
செவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்
கொத்திக்குதறிக் கிழிக்கிறது
கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!