ராலிடே குடும்பத்தைச் சேர்ந்த கரிய நிறப் பறவையின் நெற்றியில் வெள்ளைநிறத்தில் நாமம் வரைந்ததைப் போன்ற தோற்றம் இருப்பதால் நாமக்கோழி என்ற காரணப்பெயர் இதற்கு. நாமக்கோழிகள் ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் உயிரியல் பெயர் Fulica atra. ஆங்கிலத்தில் Eurasian coot எனப்படுகிறது.
தரைவாழ்
நீர்ப்பறவைகளான இவை, ஏரி, ஆறு போன்ற நீர்நிலைகளை ஒட்டியும் சதுப்பு
நிலங்களிலும் வாழ்கின்றன. இவற்றின் கால்கள் நீளமும் வலிமையும் கொண்டவை.
இவற்றின் விரல்களுக்கிடையில் வாத்தினைப்
போல சவ்வு கிடையாது என்றாலும் அபாரமான நீச்சல்காரர்கள்.
நாமக்கோழிகள்
பெரும்பாலும் கூட்டமாக வாழும். ஆனால் முட்டையிடும் பருவத்தில் ஆண் பெண் இரண்டும்
தங்கள் கூட்டினைக் கட்ட ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்வதோடு அதைப் பாதுகாக்க மிகவும்
மூர்க்கமாக செயல்படும். காய்ந்த புற்கள், இலைச்சருகுகளாலான
கூட்டில் ஒரு ஈட்டுக்கு பத்து முட்டைகள் வரை இடும். பருவகாலம் ஏதுவாக இருந்தால்
வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஈடுகள் முட்டையிடும்.
நாரை, ஆலா போன்ற நீர்ப்பறவைகளுக்கு பெரும்பாலான
நாமக்கோழிக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பத்து நாட்களுக்குள்ளாகவே
எளிதில் இரையாகிவிடுவதால் தப்பிப் பிழைப்பவற்றின் விகிதம் குறைவே.
நாமக்கோழிக்குஞ்சுகள் பொரிக்கும் சமயத்தில் நாமத்தோற்றம் இருப்பதில்லை..
அவற்றுக்கு முழுமையான நாமத்தோற்றம் உருவாக ஒருவருட காலம் பிடிக்கும்.
நாமக்கோழிக்
குஞ்சுகளின் இறப்புக்கு எதிரிகளை விடவும் தாய் தந்தையே முதற்காரணம் எனலாம். உணவு
கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே
கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு என்பது அதிர்ச்சி தரும் தகவல். மேலும் சில
நாமக்கோழிகள் தங்கள் முட்டைகளை வேறொரு நாமக்கோழியின் கூட்டில் திருட்டுத்தனமாய்
இட்டு தங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதும் உண்டு. அமெரிக்க நாமக்கோழிகள்
தங்கள் முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் எவை.. திருட்டு முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள்
எவையென்று பிரித்தறியும் அறிவு படைத்தவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது
வியப்பளிப்பதாக உள்ளது.
நாமக்கோழிகள்
அனைத்துண்ணிகள்.. நீர்த்தாவரங்கள், பழங்கள், கொட்டைகள், இலைகள், பாசி போன்றவற்றோடு பிற பறவைகளின் முட்டைகளையும்,
மீன், தவளை, எலி போன்ற சிற்றுயிர்களையும் தின்றுவாழும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 5-9
வருடங்கள்.
படத்தில் நாமக்கோழிக்குப்
போட்டியாக நெற்றியில் செந்தூரமிட்டிருப்பது தாழைக்கோழி. :)))