8 December 2013

இருத்தலும் இல்லாமையும்



தேவையின் நிமித்தம் தேடப்படும்போதுதான்
தெரியவருகிறது இருத்தலும் இல்லாமையும்.
ஏனெனில்….
கண்டுபிடிக்கும் தருணங்களுக்கு நிகராக
கவனங்களை ஈர்ப்பதில்லை
காணாமற்போகும் தருணங்கள்!

இன்னவிடத்தில் இன்ன நேரத்தில்
இன்னாரால் இன்னவாறாக 
காணாமற்போய்விட்டதென்பதை
கண்டிப்பாய் வரையறுக்கவியலாநிலையில்
அவநம்பிக்கையும் அசிரத்தையுமான தேடலின் முடிவில்
அயர்ந்தமரவைக்கிறது இயலாமை.

கவனிப்பாரின்றி நலிந்து மெலிந்து நாளடைவில்
காலாவதியாகிப்போயிருக்கலாம்.
அதன் சொல்லொணாத் துயர்மிகு சோகக்கூவல்
உடையவரைச் சேரமுடியாமல் ஓய்ந்துபோயிருக்கலாம்.
உள்ளேகும் புத்துருப்படிகளால் உதாசீனப்படுத்தப்பட்டு
புறவாசல் வழியே போக்கடிக்கப்பட்டிருக்கலாம்.

கண்ணெதிரே இருக்க நேர்ந்திடினும்
வசீகரமிழந்த அதனிருப்பு அதுதான் இதுவென்று
வகையாய் அடையாளங்காட்டத் தவறிப்போகலாம்.
இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
உணரப்படுவதான வலி சாதாரணமானதல்ல.

வரிகளை வாசித்துக் களைத்தோர்
காணாமற்போனதெதுவென்று அறியவிரும்புவீராயின்
கிலேசத்துக்காளாக வேண்டாம்.
உயிராகவோ…. உறவாகவோ…. உடமைப் பொருளாகவோ
ஊகித்தலும் உருவகப்படுத்தலும் உங்கள் உரிமையே!

********************************

40 comments:

  1. உன்மை தோழி.நம்மால் தேடப்படுபவரும்.தேடப்படுவனவும்,நாமும் கூட இதற்கு ஆளாகும் காலங்கள் கடக்கின்றன.மிக அருமை.நன்றி

    ReplyDelete
  2. அருமை. தொலைத்த் பிறகுதான் எதன் அருமையும் தெரிகிறது!

    ReplyDelete
  3. சிறப்பான நற் கருத்து .பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  4. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பொருட்களைவிட நட்பினை இழந்தால், அதன் பிறகு ஏற்படும் வலி மிக மிகக் கொடுமையாக உணரப்படுகிறது..

    ReplyDelete
  5. // இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
    உணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல... //

    உண்மை... உண்மை... உண்மை...

    ReplyDelete
  6. கண்டுபிடிக்கும் தருணங்களுக்கு நிகராக
    கவனங்களை ஈர்ப்பதில்லை
    காணாமற்போகும் தருணங்கள்!

    ஆழமான சிந்தனையுடன் கூடிய அற்புத வரிகளை
    விட்டு மீள வெகு நேரம் ஆனது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நீங்கள்தான் சொல்லிவிட்டீர்களே காணாமல் போனது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று. எனக்கென்னவோ காணாமல் போனவை நேர்மையும் நாணயமும்தான் என்று தோன்றுகிறது,
    .அவைதான்/
    /கண்ணெதிரே இருக்க நேர்ந்திடினும்
    வசீகரமிழந்த அதனிருப்பு அதுதான் இதுவென்று
    வகையாய் அடையாளங்காட்டத் தவறி /இருப்பவை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை.... பாராட்டுகள்.

    த.ம. 5

    ReplyDelete
  9. Anonymous9/12/13 01:32

    ''..வரிகளை வாசித்துக் களைத்தோர்...''
    சரியாகச் சொன்னீர்கள். 4.3 தரம் வாசிக்க வேண்டும்.
    அவநம்பிக்கையும் அசிரத்தையுமான தேடலின் முடிவில்

    அயர்ந்தமரவைக்கிறது இயலாமை..
    ஆழமான வரிகள். இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. காணாமல் போன தருணங்களுக்கான
    தருண விவரிப்புகள் மிகவும் அருமை...
    இப்படியெல்லாம் போயிருக்குமோ என்ற
    ஆச்சர்யத்தை ஏற்படுத்திப்போகிறது வரிகள் ...
    ==
    இருத்தலும் இல்லாமையும் ஒன்றென எண்ணுவது
    எவ்வளவு பெரிய விஷயம்.. பண்பட்ட பக்குவமும்
    போதுமென்ற மனமும் வெகுவாக அவசியமே அப்படிப்பட்ட
    மனதிற்கு..
    ==
    காணாமல் போன தருணங்கள் எதுவாக இருந்தாலும்
    அதனை ஏதுவாக எடுத்துக்கொண்டு நமக்கான
    நிகழில் நம்மோடு பயணிப்பவைகளை காணாமல் போனவைகளின்
    மீட்சியை எண்ணி வாழ்தல் நலமென உரைக்கும்
    அருமையான கவிதை சகோதரி...

    ReplyDelete
  11. மிக மிக ஆழமா யோசிக்கத் துாண்டும் கவிதை.
    அருமை கீதமஞ்சரி அக்கா.
    த.ம. 7

    ReplyDelete
  12. ஒவ்வொருத்தருக்கும் அவருக்குள் இருக்கும்
    உண்மையான உணர்வுதான் இது! அழகாகப் பதித்தீர்கள் வரிகளில்...

    காணாமல் கரைந்து போனவற்றை கிட்டாதென்று தெரிந்தும்
    தேடும் முயற்சியில் இருக்கிறதே மனது...

    ஆழமாகச் சிந்திக வைத்த அருமையான வரிகள்!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  13. சிறப்பான வரிகள்...இல்லாத போது தான் அதன் அருமை தெரியும்...

    ReplyDelete
  14. இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
    உணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல.
    வலிக்கிறது சகோதரி .
    இத்தனை நாள் இங்கு
    வராது போனேனே ?ஆனாலும் என்ன
    இந்த நாளுக்கு நன்றி !

    ReplyDelete
  15. தங்கை மைதிலியின் தளவழியே தங்கள் தள அறிமுகம் கிடைத்தது. தளம் வித்தியாசமாக இருக்கிறது,
    ”இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
    உணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல”
    அசாதாரணமான வரி. ஆனால், சாதாரணமானதல்ல என்று இருநதிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
    நன்றி வாழ்த்துகள் சகோதரி.

    ReplyDelete
  16. இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
    உணரப்படுவதான வலி அசாதாரணமானதல்ல.//உண்மைதான்
    சிறப்பான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. @Geetha M

    உடனடி வருகைக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
  18. @ஸ்ரீராம்.

    உண்மைதான் ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  20. @வை.கோபாலகிருஷ்ணன்

    இழப்பு எதுவாக இருந்தாலும் மனவேதனை நிச்சயம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  21. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  22. @Ramani S

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  23. @G.M Balasubramaniam

    தங்கள் அனுபவத்தில் விளைந்த கருத்தினை எவராலும் மறுக்கவியலாது ஐயா. தங்கள் வருகைக்கும் சிறப்பானக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  24. @Ramani S

    தமிழ்மண வாக்குப் பதிவுக்கு மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  25. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்கிட்டு அளிக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  26. @kovaikkavi

    உள்ளதை உள்ளபடியே உரைத்தமைக்கு நன்றி தோழி. தங்கள் வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  27. @மகேந்திரன்

    இவ்வளவு அழகாக ஆழ்ந்த சிந்தனையுடனான கருத்துரைக்கு அகம் நிறைந்த நன்றி மகேந்திரன். மனம் நிறைகிறது.

    ReplyDelete
  28. @அருணா செல்வம்

    வருகைக்கும் ரசித்தமைக்கும் தமிழ்மண வாக்குக்கும் அன்பான நன்றி அருணா செல்வம்.

    ReplyDelete
  29. @இளமதி

    வருகைக்கும் விரிவானக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி.

    ReplyDelete
  30. @ADHI VENKAT

    வருகைக்கும் ரசித்திட்டக் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.

    ReplyDelete
  31. @Mythily kasthuri rengan

    தங்களுடைய முதல் வருகைக்கும் நெகிழ்வான கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.

    ReplyDelete
  32. @Muthu Nilavan

    தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி ஐயா. கவிதையில் கண்ட கருத்துப்பிழையைச் சுட்டியமைக்கு அகமார்ந்த நன்றி. இப்போதே திருத்திவிடுகிறேன். தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  33. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  34. @கீத மஞ்சரி
    தங்களின் பெருந்தன்மைக்கு நன்றி சகோதரி. படைப்புகள் தொடரட்டும்.

    ReplyDelete
  35. ஆழமான உணர்வு பூர்வமான வரிகள் நிலா.

    துல்லியமாய் ஆனால் தனிமையான தருணங்கள் மற்றும் மழைத்தருணங்களில் சிறப்பாக உணரத்தக்க sharp pain மாதிரியான மனவலி ஒன்றை தமிழால் சிறைபிடித்து விட்டீர்கள்! அபூர்வம்!

    ஆச்சரியமாயும் இருக்கிறது. ஏதேனும் அச்சுருவில் வரும் சஞ்சிகைக்கு இக்கவிதையை அனுப்பி வையுங்களேன் கீதா.

    ReplyDelete
  36. சிறப்பான கவிதை.

    ReplyDelete
  37. @மணிமேகலா

    ஆழமானக் கருத்துரைக்கு மிக்க நன்றி மணிமேகலா.
    \\ஏதேனும் அச்சுருவில் வரும் சஞ்சிகைக்கு இக்கவிதையை அனுப்பி வையுங்களேன் கீதா.\\
    அங்கே நிராகரிக்கப்பட்டவைதான் இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன மணிமேகலா. உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  38. @மாதேவி

    ரசித்தமைக்கு மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.