ஒருவித்திலைத் தாவரவினமான அரக்கேசி என்னும் பனைக்குடும்பத்தில் சுமார் 200 பேரினங்களும் 2500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இருப்பதாக இதுவரை அறியப்பட்டுள்ளன. தென்னை, பனை, பாக்கு, ஈச்சை ஆகிய அனைத்துமே பனைக்குடும்பத்தைச் சேர்ந்தவைதாம்.
பழம், கிழங்கு, விதை, வித்து, தண்டு, பாக்கு, எண்ணெய் (பாமாயில்), பதநீர், கள், வெல்லம், பாகு, கருப்பட்டி, மாவு, கீற்று, நார், கயிறு, பன்னாடை, ஓலை, மட்டை என எண்ணற்ற பயன்களைத் தரும் பனைகள் உலகளாவிய வணிகச் சந்தையில் பெரும் பங்கு வகிக்கின்றன. சில பனை வகைகள் பூங்காக்களிலும் பெரும் வளாகங்களிலும் சாலையோரங்களிலும் அலங்கார மரங்களாக வளர்க்கப்படுகின்றன.
இப்போது தலைப்பில் உள்ள கித்துள் மரத்துக்கு வருவோம். சில வருடங்களுக்கு முன்பு இங்கிருக்கும் இந்திய, இலங்கைக் கடைகளில் வெல்லம் மற்றும் சர்க்கரை பகுதியில் கித்துள் வெல்லம், கித்துள் கருப்பட்டி என்ற பெயர்களைப் பார்த்தேன். தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கும் அவை என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி கடந்துவிடுவேன். பிறகுதான் தெரிந்தது, கித்துள் மரம் இலங்கையில் மிகவும் பிரபலமானது என்றும் கித்துள் கருப்பட்டி அந்த மரத்திலிருந்துதான் கிடைக்கிறது என்றும்.
கித்துள் மரமா? கேள்விப்படாத மரமாக இருக்கிறதே என்று பார்த்தால் எல்லாம் நமக்குத் தெரிந்த மரம்தான். தமிழகத்தில் நாம் ‘கூந்தப்பனை’ என்று சொல்வோம் அல்லவா? அந்த மரத்தைத் தான் இலங்கையில் ‘கித்துள் / கித்துல் மரம்’ என்று சொல்கிறார்கள்.
இப்பனையின் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூத்து, பெண்களின் விரித்தக் கூந்தலைப் போன்று காட்சியளிப்பதால் நாம் அதற்கு ‘கூந்தல் பனை’ என்று காரணப்பெயர் இட்டிருக்கிறோம். தமிழகத்தின் தென்பகுதியில் இது 'சவுரிப்பனை' என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது.
இப்பனையின் ஓலைகள்
மற்ற பனையின் நீள் ஓலைகளைப் போல் இல்லாது, மீன்வால் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் ‘Fishtail
palm’ என்ற காரணப்பெயரால் குறிப்பிடப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Caryota urens.
கித்துள் பற்றி மேலும் அறிந்துகொள்ள தேடல் வேட்டையில் இறங்கியபோது சுவாரசியமான பல தகவல்கள் கிடைத்தன. கித்துள் பனை மரச் சாகுபடி இலங்கையில் பிரசித்தம். அம்மரங்களிலிருந்து கிடைக்கும் கித்துள் கருப்பட்டி, கித்துள் பாகு, கித்துள் பால் போன்ற இனிப்பூட்டிகள் பண்டைக் காலத்திலிருந்தே அங்கு புழக்கத்தில் உள்ளன. கித்துள் பனையிலிருந்து கள்ளும் இறக்கப்படுகிறது. அது மற்றப் பனைமரக் கள்ளைக் காட்டிலும் வீரியம் மிகுந்தது என அறியப்படுகிறது.
அதென்ன கித்துள் பால்? கித்துள் மரத்தின் பதநீர்தான் கித்துள் பால் எனப்படுகிறது. கருப்பட்டி தயாரிப்பு போன்றதே மற்ற யாவும். கித்தூள் பாலை குறைந்த தீயில் சரியான பதத்தில் காய்ச்சினால் கிடைப்பது கித்துள் பாகு. அச்சில் ஊற்றி இறுக வைத்தால் கிடைப்பது கித்துள் வெல்லம்.
ஒடியல், ஒடியல் மா, புழுக்கொடியல், புழுக்கொடியல் மா இவையெல்லாம் பனையின் உபரிப் பொருட்கள். கடைகளில் இவற்றைப் பார்த்தபோது இவையெல்லாம் நமக்கு அறிமுகமில்லாத ஏதோ புதிய வஸ்துகள் போலும் என்றுதான் நினைத்திருந்தேன். பிறகுதான் புரிந்தது. பனங்கிழங்கை நீளவாக்கில் வகுந்து துண்டுகளாக்கிக் காயவைத்துப் பெறுவது ஒடியல். அதிலிருந்து கிடைக்கும் மாவுதான் ஒடியல் மா. பனங்கிழங்கை அவித்துக் காயவைத்தால் அதன் பெயர் புழுக்கொடியல் (புழுங்கலரிசி போன்று புழுங்க வைப்பதால்). அதிலிருந்து கிடைக்கும் மாவு புழுக்கொடியல் மாவு. இவையெல்லாம் இலங்கையில் பிரபலமான உணவுப் பொருட்கள். தென் தமிழக மாவட்டங்களிலும் இவற்றின் பயன்பாடு உண்டு என்று தற்போதுதான் அறிந்துகொண்டேன்.
மற்ற பனையிலிருந்து கித்துள் பனை வேறுபடும் இன்னொரு விஷயம் அதன் அடிமரத் தண்டும் உணவாகப் பயன்படுவதுதான். கித்துள் மரத் தண்டை செதுக்கி இடித்துப் பொடித்து சலித்து மாவாக்கினால் அதுதான் கித்துள் மா. அதிலிருந்து கஞ்சி, புட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
பொதுவாகப் பனம்பழங்களை அவித்தோ சுட்டோ உண்பதுண்டு. நார்நாராக இருக்கும் பனம்பழத்தைச் சுவைத்து முடித்தவுடன் கொட்டையைக் காயவைத்து அதில் பொம்மை செய்வார்கள்.
![]() |
பனை ஆர்வலர் அசோக் குமார் செய்த பொம்மைகள் |
கொட்டையின் ஒரு பக்கம் நாரைச் செதுக்கிவிட்டு அதில் முகம் வரைந்துவிட்டால் போதும். நாலாபக்கமும் சிலுப்பிநிற்கும் தலைமயிரோடு தாத்தா பொம்மை, சிங்க பொம்மை, குரங்கு பொம்மை போன்றவை தயார். எங்கள் அம்மாச்சி வீட்டில் கருப்பு முகத்தில் உருட்டு விழிகளோடு இரண்டு பனங்கொட்டை தாத்தா பொம்மைகள் இருந்தன. சொல்பேச்சுக் கேட்காமல் அடம்பிடிக்கும் அக்கம்பக்கக் குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் மிரட்டி வழிக்குக் கொண்டுவர அம்மாச்சி அந்தப் பொம்மைகளைத்தான் பயன்படுத்துவார்.
பொதுவாக ஒரு பனை மரம் ஆணா பெண்ணா என்பது அது பூக்க ஆரம்பிக்கும் காலத்தில்தான் அறியப்படும். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் உச்சியில் இருக்கும் காய்களைக் கொண்டும் பூக்களைக் கொண்டும் இது ஆண் மரம், இது பெண் மரம் என்று அடையாளம் காண முடியும். சில பனை வகைகளில் இதுபோல் தனித்தனியாக இல்லாமல் ஒரே மரத்திலேயே ஆண் பெண் பூக்கள் காணப்படும். இன்னும் சில வகையில் ஒரே பூவிலேயே சூலகம், மகரந்தம் என ஆண் பெண் உறுப்புகள் காணப்படும்.
சிட்னியின் தாவரவியல் பூங்காவில் பனைவகைக்கென்றே ஒரு பகுதி உள்ளது. அங்கு உலக நாடுகள் பலவற்றையும் சேர்ந்த பல்வேறு பனை வகைகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள கூந்தல்பனை மரம் தற்போது இளமரமாக உள்ளது. ஆனால் வேறு பனைகள் பூக்களோடும் காய்களோடும் பழங்களோடும் பார்த்திருக்கிறேன். பாக்கு மரத்தின் பழங்களையும் இங்குதான் முதன்முதலில் பார்த்தேன். அவற்றையெல்லாம் வேறொரு பதிவாகத் தருகிறேன்.
கொசுறு:
என்னுடைய சிறார் பாடல் தொகுப்பான 'பச்சைக்கிளியே பறந்து வா' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பனைமரப் பாடல்.
பனை மரமாம் பனை மரமாம்
படபடக்கும் பனை மரமாம்
பனை மரமாம் பனை மரமாம்
தமிழகத்தின் தனி மரமாம்
நூறு நூறு பலன் தருமாம்
நூறாண்டு வாழ்ந்திடுமாம்
உயரமாக வளர்ந்திடுமாம்
உச்சியிலே காய்த்திடுமாம்
ஜெல்லி போல நுங்கிருக்கும்
ஜோராகவே ருசிக்கலாம்
குச்சி போல கிழங்கிருக்கும்
அவித்து நாமும் புசிக்கலாம்
சுவையான பனம்பழங்கள்
சுட்டு சுட்டுத் தின்னலாம்
கட்டிக் கருப்பட்டி காய்ச்சி
காப்பி போட்டுக் குடிக்கலாம்
விசிறியும் தொப்பியும்
பனைமடலில் செய்யலாம்
தடுக்கும் பாயும் பெட்டியும்
பக்குவமாய்ப் பின்னலாம்
பாட்டெழுதிய ஓலைச்சுவடி
பனைமரமே தந்ததாம்
பனைமரத்தின் அருமை எனக்கு
இப்போதுதான் புரிந்ததாம்.
******
(படங்கள் உதவி: Pixabay )
இலங்கையிலிருந்து கித்துள் வெல்லம் கிடைக்கப் பெற்றேன். சுவையும் நன்றாக இருந்தது. கூந்தப் பனையிலிருந்து தயாரிக்கிறார்கள் எனும் விவரம் இப்போதுதான் அறிகிறேன். கூந்தப் பனை மரங்கள் இங்கே பல இடங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. படங்களும் எடுத்திருக்கிறேன்.
ReplyDeleteபனம் பழக் கொட்டைகளில் தயாரிக்கப்படும் இதுபோன்ற பொம்மைகளைப் பார்த்திருக்கிறேன். அதன் மூலப்பொருளும் உங்கள் பதிவிலிருந்தே அறிய வந்தேன்.
பனைமரப் பாடல் அருமை.
விரிவான சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி.
கித்துள் வெல்லம் நானும் ஒருமுறை பயன்படுத்தினேன். கருப்பட்டி போல அதுவும் நல்ல சுவை. தென்னை வெல்லமும் இங்குதான் பார்த்தேன். அடிக்கடி வாங்குகிறேன்.
Deleteகூந்தப்பனை மரம்தான் கித்துள் மரம் என்பது நானும் சில வருடங்களுக்கு முன்பு அறிந்துகொண்டதுதான்.
பதிவை ரசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.