10 March 2014

காதல் காதல் காதல்.. காதல் போயின்......




(கதையை வாசிக்குமுன் இங்கு ஒரு எட்டு பார்த்துவிட்டு வாருங்களேன்.)

பாபு காதல் வயப்பட்டிருந்தான். கண்டதும் காதல் கேஸ்தான் இருந்தாலும் என்ன? யாரைக் கண்டாலும் காதல் வந்து விடுமா என்னஏதோ ஒரு ஈர்ப்பு. நிச்சயம் உடல் சார்ந்தது அல்ல. பாபு நிச்சயம் எந்தக் கோவிலிலும் வேண்டுமானாலும் சூடம் ஏற்றி சத்தியம் செய்வான். இத்தனைக்கும் அந்தப் பெண்பற்றிய எந்த விவரமும் பாபுவுக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு அமர காதல் என்று நிச்சயம் நம்பினான். கூடவே இது அமர காதலாயிருக்கக் கூடாது என்றும் வேண்டினான். ஏனென்றால் அமர காதல் என்று சொல்லப் படுபவை எல்லாம் தோல்வியில் முடிந்தவையே என்பதால் அச்சம் கொண்டான். சரி காதல் வந்தாய் விட்டது. ஆனால் இது ஒருதலை ராகமாக இருக்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டான். அவளுக்கும் இவன் மீது இதுஇருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவளை சந்தித்துத் தன் காதலை வெளிப்படுத்தி விட வேண்டும் எப்படி எங்கு சந்திப்பது. அடுத்து இருக்கும் பூங்காவுக்கு வரச் சொல்லலாமா? சரி எப்படிச் சொல்வது? திடீரென்று அவள்முன் தோன்றி..... தோன்ற என்ன இவன் மந்திரவாதியா...யோசித்து யோசித்து தலையில் இருக்கும் முடிகளைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். எதையாவது செய்யப் போய் சும்மா சொதப்பி விடக் கூடாது. யாரை கொண்டாவது அவளை அறிமுகப் படுத்தச் சொல்லலாமா? தன்னை ஒரு gang  அலைக் கழித்தது அவன் நினைவுக்கு வந்தது. அந்த மாதிரி செய்ய இவன் ஒன்றும் தாதா இல்லையே. பார்க்க வாட்ட சாட்டமாயிருந்தாலும் இவன் மனதில் கோழை. கோழைகள் காதலிக்கக் கூடாதா....கோழையான இவனிடம் சிலர் அவனது எதிர் வீட்டுப் பெண்ணின் தொலை பேசி எண்ணை வாங்கிக் கொடுக்கச்சொன்னதும் இவன் ஐயோ அண்ணே , எனக்கு முடியாது என்னை விட்டுடுங்கோஎன்று கதறி அழுததும் நினைவுக்கு வந்தது.

காதல் வயப்பட்டால் பயப்படக் கூடாது. எதையாவது செய்து அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் முதலில் பேசவேண்டும். ஒரு நாள் திடீரென வந்த ஒரு வேகத்தில் பேப்பர் பேனாவை எடுத்தான். சில வரிகளைக் கிறுக்கினான். அவள் வரும் வழியில் திடீரென அவள் முன் தோன்றி "எனக்கு உன்னிடம் பேச வேண்டும். நாளை மாலை 5 மணி எல்லா விவரங்களும் இந்தக் கடிதத்தில்"  என்று மூச்சு விடாமல் கூறி சிட்டாய்ப் பறந்து விட்டான். அவன் அப்படிப் பறக்க்க இரண்டு காரணங்கள் இருந்தன. இந்த திடீர் தாக்குதலில் அவள் என்ன செய்வதென்றோ என்ன நடக்கிறதென்றோ அறியும் முன்னர் இடத்தைக் காலிசெய்து விட வேண்டும். ஒரு வேளை அவள் சுதாரித்துக் கொண்டு கூக்குரல் இட்டால் தர்ம அடிதான் மிஞ்சலாம். ஆனால் அவள் வருவாளா. நாளை மாலை என்னைச் சந்திக்க வருவாளாஎன்று ஏதோ ராகத்தில் முணுமுணுத்துக் கொண்டான்

 சந்தியாவுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை போகும் போதும் வரும் போதும் சும்மா முறைத்துப் பார்க்கிற பிள்ளைப் பூச்சிதான் என்று நினைத்திருந்தாள் ஆனால் இப்போது...... கடிதம் கொடுக்கிற வரை வந்து விட்டது இதன்தைரியம்.... இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறது என்று பார்க்க மனம் துடித்தது. வழியில் நின்று படித்துப் பார்க்கத் தயாராயில்லை. வீட்டுக்குப் போனதும் பாத்ரூமுக்குச் சென்று ஒருவித பட படப்புடன் அந்தத் துண்டுச்சீட்டை எடுத்துப் படித்தாள். படித்தவளுக்குச் ச்சேஎன்றாகி விட்டது. ஏதோ காதல் கடிதமென்று எண்ணியவள் ஏமாற்ற மடைந்தாள். கன்னா பின்னாவென்று ஏதோ எழுதி இருப்பான் என்று எதிர் நோக்கியவள் அப்படி இல்லையே என்று ஏமாற்ற மடைந்தாள்.  "அது சரி காதல் கடிதமாயிருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று அவளது உள்மனம் கேட்டாலும் என்னையும் ஒருவன் காதலிக்கிறான் என்றால் மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ யார் இவன்? இவன் பேரென்னஎன்ன எழுதி இருக்கிறான்? நாளை மாலை 5/-மணி......பூங்காவில் சந்திக்க வா. நிறையப் பேச வேண்டும்  என்ற அந்தத் துண்டுக்காகிதம் இவளைப் பார்த்து கேலி செய்வ்து போல் இருந்தது. இவன் வாவென்றால் வரவும் போ என்றால் போகவும் தான் என்ன இவனது காதலியா என்ன? ஒருவேளை சென்று பார்த்தால் காதலிக்கத் துவங்கி விடுவேனோ.. அவனைப் போய்ப் பார்ப்பதா வேண்டாமா.... ஏன் பார்க்க வேண்டும்? பார்த்தால் என்ன ... என்னதான் செய்து விடுவான் ... கடித்துக் குதறுவானோ... சே அது மாதிரி செய்யத் தைரியம் வேண்டும் ச்சீ என்ன நினைப்பு இதுகாதல் வார்த்தைகள் பேசுவானா என்பதுதவிர என்ன மாதிரி கடிப்பானா குதறுவானா என்றெல்லாம் எண்ண வைக்கிறது வெகு நேரம் பாத்ரூமில் இருந்தால் சந்தேகம் வந்து விடும். ஆகவே இன்னொரு தரம் அந்தத் துண்டுக் காகிதத்தை படித்துப் பார்த்தாள் நேரம் இடம் எல்லாம் உறுதிப் படுத்திக் கொண்டு அந்தக்காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து டாய்லெட்டில் சிஸ்டெர்னைத் திறந்து அதில் போட்டாள்.காகிதத் துண்டுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வெகு நேர சிந்தனைக்குப் பின் அவனைப் போய் பார்ப்பது என்று தீர்மானித்தாள். அவளை அந்த முடிவுக்கு வர வைத்தது எது. அவளுக்கும் அவனிடம் ஒரு ஈர்ப்போ? அப்போது எங்கோ ஒரு பாடல் ஒலித்தது இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன் அன்று.” சந்தியாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இன்னும் அவனைப் போய்ப் பார்க்கவில்லை பேசவில்லை. அதற்குள் இன்னார்க்கு இன்னார் என்ற நினைப்பு வருவது ஏன்?

சந்தியா படித்தவள் பலதும் கற்றவள். இந்தக் காலத்துப் பிரதிநிதி. எதையும் சிந்தித்தே செயல் படுவாள். ஆனால் இந்த மாதிரித் தருணங்களில் சிந்தனையை மழுங்கடிக்கக் கூடியது காதலும் அதன் விளைவுகளும்.

சரி.. சந்தியா பாபு சந்திப்பைப் பார்க்கலாம்.

பாபு பூங்காவில் சந்தியாவுக்காகக் காத்திருக்கிறான் ஆட்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியில் காத்திருந்தான். அவள் வருவாளா மாட்டாளா என்றே குழம்பிக் கொண்டிருந்தவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் நான்கு மணிகூட ஆகவில்லை. கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி வைத்தால் காலம் வேகமாக ஓடிவிடுமா....அவசரமாகப் போக வேண்டியவன் ரயிலில் சீக்கிரம் போய்ச் சேர கடைசிப் பெட்டியிலிருந்து முதல்பெட்டிக்கு வந்தானாம்  என்னும் நினைப்பு ஏனோ வந்தது. நேரம் காலம் எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன..?அந்தப் பெண் வந்தால்....வருவாளா ... அட வந்தால் என்ன பேசுவது. முதலில் அவள் பெயரைக் கேட்கவேண்டும். காதலிக்கும் பெண்ணின் பெயர் கூடத் தெரியாமல்... இருந்தால் என்ன. முதலில் எல்லாமே தெரிந்துதான் காதலிக்கிறோமா. பெயர் தெரியாவிட்டாலும் அவளை என்ன சொல்லி அழைப்பது..அன்பே எனலாமா.... காதலியே எனலாமா.. என்ன சொல்லி அழைப்பது எப்படி அழைப்பது. நேருக்கு நேர் பேசும்போது நாச்சுரலாக இருக்க வேண்டாமா.....முதலில் ஹாய் என்றோ ஹல்லோ என்றும் ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். பிறகு இருக்கவே இருக்கிறது பேப்பரில் எழுதி வைத்திருக்கும் விஷயங்கள் அவள்முகம் கோணாமல் படித்தால் நிறையவே பேச வேண்டும்.

தூரத்தே யாராவது சேலை கட்டி வந்தால் அது சந்தியாவா என்று எதிர்பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனவன் சந்தியா அருகில் வந்ததை எப்படி காணாமல் போனேன் என்று குழம்பினான் அருகில் வந்த சந்தியா அவனிடம் ஹாய் என்றாள். இந்த ஆங்கில மொழியால் எவ்வளவு சௌகரியம். இவனும் ஹாய் என்று விஷ் செய்தான். என்ன தைரியம் இருந்தால் துண்டுக்காகிதத்தில் எழுதி வரச் சொல்வீர்கள்..?” என்று பிடி பிடிக்கப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தவன் அவள் புன்னகையுடன் ஹாய் சொன்னதும் அவனையே நம்பாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். 

"உங்களைப் பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என்னும் ஒரு உந்துதலே அந்தத் துண்டுக்காகிதம். இந்த முறை துண்டுக்காகிதமல்ல. நேர்த்தியாக எழுதப் பட்ட கடிதம். Please take yor time and read it " என்றான். தமிழில் சொல்லத்தயங்குவது அன்னிய மொழியில் அனாயாசமாக வந்து விடுகிறது ஆங்கிலத்துக்கு ஜேசந்தியா கடித்ததை வாங்கி தன் ஜாக்கெட் உள்ளே பத்திரப் படுத்திக் கொண்டாள். ஐயோ என்ன அங்க வச்சுட்டீங்க படிக்கலையாஎன்று பாபு பதறினான் நீங்கள்தானே டேக் யுவர் டைம் என்றீர்கள்என்று சொல்லிக் கல கலவெனச் சிரித்தாள். ஏனோ அவளுக்கு பாபுவிடம் பலகாலம் பழகியதைப் போன்ற ஒரு  (B)பாவம் தோன்றியது. மீண்டும் ஜாக்கெட்டுக்குள் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்  அவள் படிக்கும்போது அவளது முக பாவத்தையே பாபு பார்த்துக் கொண்டிருந்தான்.

உன்னை எப்படி அழைப்பதென்றே தெரியாமல் இக்கடிதம் எழுதினேன். அன்பே என்றழைக்கவா பேரழகே என்றழைக்கவா கண்ணே என்றழைக்கவா எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் இந்த இடம் வந்ததும் சந்தியா தலைதூக்கி பாபுவைப் பார்த்துப் புன்னகைத்தாள். அதைப் பார்த்ததும் பாபுவுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது இதையே  சௌந்திரராஜன் குரலில் பாடிப் பார்த்தீர்களா.?" என்று சந்தியா கேட்டதும் இவ்வளவு எளிதில் காதல் கைகூடும் என்று எண்ணிப்பார்க்காத பாபு நிறையே அசடு வழிந்தான்.

பிறகு தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு பிடி சாக்கலேட்டுகளை சந்தியாவுக்குக் கொடுத்தான் உன் இந்தப் பார்வைக்கு எது கொடுத்தாலும் தகும். ஆனால் தற்சமயம் இந்த இனிப்பே உள்ளது என்றவன் மேலே படிக்கச் சைகை காட்டினான்எப்படி அழைத்தாலும் உன் பெயர் சொல்லி அழைப்பதே சுகம் அல்லவா. உன் பெயரென்ன இதைப் படித்ததும் சந்தியாஎன்று கூறி முறுவலித்தாள்.என் பெயர் என்ன வென்று கேட்க வில்லையேஎன்ற பாபுவைப் பார்த்து சந்தியா பாபுஎன்றாள் அதெப்படி உனக்குத் தெரியும்?” கடிதத்தின் கடைசியில் உங்கள் பெயரை முதலிலேயே பார்த்து விட்டேனே

ஓ.. பலே ஆள்தான் மேலே படி"
நிதானமாகப் படித்துக் கொள்கிறேன் இப்போதான் நேருக்கு நேர் பார்க்கிறோமே பேசிக் கொள்ளலாம் என்றாள் சந்தியா. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டுத்தெரிந்து கொண்டனர்.
"இப்படிக்கண்டதும் காதல் என்பதில் உனக்கு உடன் பாடாஎன்று பாபு
கேட்டான். அந்த நிமிஷத்தில் அவன் வாயில் சனி இருந்திருக்க வேண்டும்.

(இதுவரையிலான கதை உருவானது ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயாவின் எண்ணவோட்டத்தில். மீதிக்கதை என் கண்ணோட்டத்தில்.)

அவள் அவனை நிதானமாக ஏறிட்டுப் புன்னகைத்தாள். “நீங்க அழைத்தவுடன் நான் வந்ததையும், கடிதத்தைக் கொடுத்தவுடன் வாங்கிக்கொண்டதையும் வைத்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா? என்றாள். பாபு அதிர்ந்துபோனான்.

பின் எதற்காக நான் அழைத்தவுடன் வந்தாய்?"

நீங்கள் எதற்காக அழைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளவந்தேன். தெரிந்துகொண்டுவிட்டேன். அதை ஏற்பதா கூடாதாவென்று யோசிக்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும்.”

என் முடிவு உன் கையில்தான் இருக்கிறது? நீ எப்போது உன் முடிவை சொல்வாய்?”

என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தமுடியாது. எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது சொல்கிறேன்.”

என் தவிப்பைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாயே…”

ஆனால் மனத்துக்குப் பிடிக்கவேண்டாமா?"

என்னை எப்படி பிடிக்காமல் போகும்? எனக்கென்ன குறைச்சல்?"

என்ன குறைச்சலா? ஒரு ஆண்பிள்ளைக்கு இருக்கவேண்டிய துணிவு உங்களிடம் சற்றுக் குறைச்சலாகத்தானே இருக்கிறது?"

ஏன் அப்படி சொல்கிறாய்?"

பின்னே? அவன் அழைப்பையேற்று எதிரில் வந்து நிற்கும் பெண்ணிடம் காதலை நேரடியாகத் தெரிவிக்கும் துணிவில்லாமல் கடிதம் எழுதி நீட்டுபவர்களை வேறென்னவென்று சொல்வதாம்?” அவள் சொல்லிவிட்டு அவனைக் குறும்பாய்ப் பார்த்துப் புன்னகைத்தாள்.

இது என்ன புதுக்கதை? அதிர்ந்துபோனான் பாபு. நான் இவளிடமா என் காதலைச் சொல்ல விழைந்தேன்? இவள் தோழியிடமல்லவா? இவள் மூலம் தூதனுப்பலாம் என்று நினைத்தால் இவள் தன்னைக் காதலிப்பதாக நினைத்துவிட்டாளேகடிதத்தை முழுவதுமாகப் படித்திருந்தாலாவது கொஞ்சம் பிடிபட்டிருக்கும். இந்த அவசரக்குடுக்கையோ ஆரம்பத்தையும் முடிவையும் படித்துவிட்டு தனக்கு எழுதப்பட்ட கடிதமென்று நினைத்துவிட்டது போலும். அப்படியென்றால் சந்தியா என்பது இவள் பெயர்தானா? இக்கடிதம் இவளுக்கானது இல்லை என்பதை எப்படி இவளிடம் சொல்லிப் புரியவைப்பது?

மனத்துக்குள் பளிச்சென மின்னல் வெட்டியது. நொடியில் புத்தி மாறியது. ஏன் சொல்லவேண்டும்? இவளுக்கு என்ன குறை? இவளும் அழகாக இருக்கிறாள். கை நிறைய சம்பாதிக்கிறாள். நாகரிக நங்கையாக இருக்கிறாள். இதுவரை காதலியாய் மனத்தில் வரித்தவளின் பெயரும் தெரியவில்லை. ஆனால் இவள் பெயர் முதற்கொண்டு எல்லாம் தெரிந்துவிட்டது. இனி அவளிடம் தன் காதலைத் தெரிவித்து அவள் அதை ஏற்பாளா மாட்டாளா என்று உறுதியாகத் தெரியாத நிலையில்காதலை எதிர்பார்த்து எதிரில் நிற்பவளிடம் காதலை சொல்வதில் என்ன தவறு? வயிற்றுப்பிள்ளையை நம்பி இடுப்புப் பிள்ளையை இழக்க சம்மதிப்பாளா ஒருத்தி?

சட்டென்று அவள் கரங்களைப் பற்றினான். நேரில் பேசும் துணிவுதான் இப்போது வந்துவிட்டதே. இனி கடிதம் எதற்கு?” அவள் கையிலிருந்த கடிதத்தைப் பறித்து சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்துவிட்டு சொன்னான், “ஐ லவ் யூ, சந்தியா”. “ஐ லவ் யூ டூ, பாபுஎன்றாள் அவள். 

முகவரியற்ற கடிதத்தின் துணுக்குகளைத் துரத்திப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது காற்று.   

*******************************************************************

 (படம்: நன்றி இணையம்)

7 comments:

  1. பல்வேறு கோணங்களில் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டி விட்டுள்ளது ஐயாவின் அருமையான இப் படைப்பு .வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி .
    http://rupika-rupika.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

    ReplyDelete
  2. புதுக்கதையை வாசித்து நம்ம GMB ஐயா கூட அதிர்ந்து போவார் என்று நினைக்கிறேன்...! வித்தியாசமான சிந்தனை...

    ஐயாவின் முடிவு எப்படியிருக்கும் என்னும் ஆவலை அதிகரிக்க செய்து விட்டது உங்களின் பகிர்வு... பாராட்டுக்கள்...

    போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. @அம்பாளடியாள் வலைத்தளம்

    உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. தங்கள் கதை முடிவு ரசனை. பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  4. @திண்டுக்கல் தனபாலன்

    ஹா..ஹா.. உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். உண்மையில் ஜி.எம்.பி.ஐயாவின் ரசனை முற்றிலும் வேறுவிதமாகத்தான் இருக்கும் என்று அவருடைய முந்தைய எழுத்துக்களைக் கொண்டு அறிவேன். இது என் கண்ணோட்டம் மட்டுமே...

    காதல்... காதல்... காதல்...
    காதல் போயின்... காதல் போயின்
    இன்னொரு காதல்... காதல்...
    காதல்... காதல்...காதல்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  5. புதிய கோணத்தில் சிறப்பான முடிவுகள்..பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  6. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  7. புதிய கோணத்தில் ஒரு முடிவு.....

    ரசித்தேன்....

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.