23 February 2012

கஸ்தூரிபா காந்தி



அறியாப்பேதையென

அவர் வாழ்வில் நுழைந்தாய்!

அறிந்தே ஆயிரம் தியாகங்கள் புரிந்தாய்!



அடக்குமுறைக்கு ஆளானாய்!

ஆதிக்கக் காலடியில் நசுங்கித் திமிறினாய்!

அதனாலோ என்னவோ

அவதார மனுஷி என்ற

அரும்பெயரும் பெற்றாய்!



கணவன் உள்ளம் கொண்டிருந்த

காமக்காட்டாற்று வெள்ளத்தை

அவரோடு கைகோர்த்து நீந்திக் கடந்தாய்!

பின்னொருநாள்….

பிரம்மச்சரியப் பாலைக்குள்

தன்னிச்சையாய் அவர் புகுந்தபோதும்

பிடி தளராமல் இணையாய் நடந்தாய்!



உன் விருப்புகளும், வெறுப்புகளும்

முனை மழுங்கடிக்கப்பட்ட ஆயுதங்களென

புறக்கணிக்கப்பட்டபோதும்

வஞ்சம் கொள்ளாமல் வாழ்ந்துகாட்டினாய்!



சகிப்புத் தன்மை நிறைந்தவள் என்றொரு

சான்றிதழ் கொடுக்கப்பட,

பலவந்தமாய் திணிக்கப்பட்டது,

பிறர் மலமகற்றும் பணியுனக்கு!



சுயமிழந்த வாழ்விலும்

சுடராக மின்னினாய்!

சிறகொடிக்கப்பட்டும்

தரைநின்று போராடினாய்!



காந்தியமலரைத்

தாங்கி நின்ற காம்பானாய்!

கஸ்தூரிபா என்னும் காவியமானாய்!

பெண்மையின் பேரோவியமானாய்!

****************************************************************************

(கஸ்தூரிபாவின் நினைவுநாள் எழுப்பியத் தாக்கம்!
காந்தியின் பெருமை குறைப்பதல்ல நோக்கம்!
கஸ்தூரிபாவை உயர்த்தும் எண்ணமே இவ்வாக்கம்!)

53 comments:

  1. காந்தியமலரைத்

    தாங்கி நின்ற காம்பானாய்!

    கஸ்தூரிபா என்னும் காவியமானாய்!

    பெண்மையின் பேரோவியமானாய் //
    !
    கஸ்தூரிபாவின் நினைவுநாள் எழுப்பியத் தாக்கம்!
    காந்தியின் பெருமை குறைப்பதல்ல நோக்கம்!
    கஸ்தூரிபாவை உயர்த்தும் எண்ணமே இவ்வாக்கம்!
    ஆணின் செயல் பாடுகள் போற்றப்படுகின்ற அளவுக்கும்
    ஏனோ பெண்ணின் தியாகங்களும் போற்றப்படுவதில்லை
    கஸ்தூரிபாய் சாரதா தேவியார் விதிவிலக்கென நினைக்கிறேன்
    நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு நிகழ்வுக்காக காந்தியே கூட
    பின்னாளில் அதிகம் வருத்தப் பட்டிருக்கிறார் என அறிகிறோம்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    )

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் அருமையான விமர்சனப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  3. உண்மையில் காந்தியாரை விட கஸ்தூரிபா அம்மையார் உயர்ந்தவர்தான். விருப்பு வெறுப்புகள் முனை மழுங்கடிக்கப்பட, சகிப்புத் தன்மை மி்க்கவர் என்ற சான்றிதழோடு... நிஜமாக, நிறைவாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவரை நினைவு கூர்ந்த இப்பதிவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்.

      Delete
  4. Anonymous23/2/12 15:03

    நினைவு நாள் கவிதை நன்று கீத்ஸ் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரவாணி.

      Delete
  5. காந்தியை தெரிந்த அளவுக்கு கஸ்தூரி பாயையும்...பாரதியை தெரிந்தளவுக்கு செல்லம்மாலையும்..சமூகம் தெரியாதிருப்பதும்..வரலாறுகள் பெண்களை முன்னிலைப்படுத்தாததும்...நமது வழிகாட்டி மனிதர்களும் பெண்களை சரிவர கையாளாத தன்மையையும்...எந்த சமாளிப்புக்களுக்கும் இடமளிக்கப்பட முடியாத வடுக்களே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அருமையான விமர்சனக் கருத்துக்கும் நன்றி தீபிகா.

      Delete
  6. Anonymous23/2/12 17:56

    superaaa irukku akkaa....

    chance illai.....eppudi yosichi eluthi irukkeenga ....super

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கலை.

      Delete
  7. அன்னையின் தியாகம் வெளிவராமலே போய்விட்டது என நானும் நினைத்ததுண்டு. என் கருத்தை அப்படியே பிரதிபலித்துவிட்டது உன்க்கள் கவிதை. இதுப்போல் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட மாதரசிகள் பல உண்டு எக்காலத்திலும். அருமையான கவிதை தந்தமைக்கு நன்றி கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி ராஜி.

      Delete
  8. அன்னையைப் பற்றி சில விசயங்களைத் தெரிந்து கொள்ள உதவியது இக்கவிதை..நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மதுமதி.

      Delete
  9. கஸ்தூரிபாய் அவர்களுக்கான தங்கள் பாமாலை அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தனசேகரன்.

      Delete
  10. கவிதை அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  11. கஸ்தூரி பாய் காந்திக்கு மிக அருமையான சமர்ப்பணம் கீதா! சிற‌ப்பான சிந்தனை! நெகிழ்வான வரிகள்!!
    இனிய பாராட்டுக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி மேடம்.

      Delete
  12. காந்தி - கஸ்தூர்பா தம்பதிகள் இனிதே வாழ்ந்தனர். சில குடும்பங்களில் (நான் சொல்வது ,அந்தக் காலக் குடும்பங்களில் )தம்பதியரில் ஒருவர் , பெரும்பாலும் பெண்கள், அறிவு முதிர்ச்சியோ , உலக அனுபவங்களோ அதிகம் இல்லாதவராய் இருப்பர். அவர்களை ,குயவன் களிமண்ணை வனைப்பதுபோல் , திருத்தி முன்னேற்றுவது ஆண்களாக இருந்தனர். கணவன் சொல் கேட்டு நடப்பது ஆணாதிக்கம் அல்லது அடிமைத்தனம் என்று கருதப் பட வில்லை.கந்தியின் வாழ்வில் பா-வுக்குப் பிரத்தியேக இடம் இருந்தது. புனேயில் ஆகாகான் மாளிகையில் சிறையில் பா -இறந்தபோது காந்தி எப்படி இருந்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன்.( காந்தி திரைப் படத்தின் பாதிப்பு.!)கவிதைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. காந்தி - கஸ்தூரிபா இனிதே வாழ்ந்தனர் என்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. காந்தியின் வரிகளில் அல்லாது வேறு எப்படி நாம் கஸ்தூரிபாவின் தியாகத்தையும் சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்க இயலும்? அவரது உரைகளாலேயே மாட்சிமையுடன் வர்ணிக்கப்பட்ட அன்னையை நான் என் வரிகளால் பூஜித்திருக்கிறேன். அவ்வளவே.

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

      Delete
  13. கஸ்தூரிபா என்னும் காவியமானாய்!

    பெண்மையின் பேரோவியமானாய்!

    அருமையான கவிதை!
    வாழ்த்துக்கள்!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி காரஞ்சன்.

      Delete
  14. போற்றப்பட வேண்டிய கஸ்தூரிபாயின் தியாகத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் எடுத்தியம்பும் கவிதைக்குப் பாராட்டுக்கள் கீதா! ஏனோ இவர் போன்றவர்களின் பெருமை வெளியுலகுக்குத் தெரியாமலேயே அமுக்கப்பட்டுவிடுகிறது. இக்கவிதை மூலம் அவரது பெருமையை எடுத்துக் சொன்னதற்கு மிக்க நன்றி கீதா1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அக்கா.

      Delete
  15. கஸ்தூரிபா காந்தியை நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அவரின் தியாகமும் அர்ப்பணிப்பும் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி விச்சு.

      Delete
  16. //Hers was a life of love, devotion, sacrifice and silence.//
    தமது மனைவியை பற்றி அண்ணல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
    மேலும் சத்தியாக்ரகம் எனும் உன்னதமான விஷயத்தைப்பற்றி அவர் கற்றுக்கொண்டதே கஸ்தூரிபா காந்திஅன்னையிடம் இருந்துதான் என்றும் கூறியிருக்கிறார் .
    அவரது நினைவுநாளன்று அவர் பெருமைகளை கூறும் அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஏஞ்சலின். மகாத்மாவின் வரிகளிலிருந்தே அன்னை கஸ்தூரிபாவின் அருமைபெருமைகளை அறியமுடிகிறது. எடுத்துக்காட்டிய வரிகளுக்காய் மிகவும் நன்றி .

      Delete
  17. பெருமைக்குறியவர்களை தாங்கி நிற்கும் தூண்கள்
    ஏற்றிவிட்ட ஏணி எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். நன்று.

    ReplyDelete
    Replies
    1. வைர வரிகள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷக்திபிரபா.

      Delete
  18. சில தியாகங்கள் பெயர் சொல்லிக்கொண்டு உருகுவதில்லை.அதுபோலத்தான் இந்தத் தாயாரும்.ஆனாலும் யாராலுமே மறக்கமுடியாதவர்.அவர் நினைவோடு கவி தந்த கீதாவுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி ஹேமா.

      Delete
  19. அருமை. மிக அருமை.
    வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    அன்புடன் vgk 24.02.2012

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் ஊக்கம் கண்டு நெகிழ்கிறேன். வாழ்த்துக்கு நன்றி வை.கோ சார்.

      Delete
  20. மிக அருமையான பதிவு. படித்து படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  21. கஸ்தூரிபாவை உயர்த்தும் அருமையான கவிதை வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

      Delete
  22. கஸ்தூரிபா அம்மையாருக்காக எழுதப்பட்ட அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோவை2தில்லி.

      Delete
  23. ஒரு கட்டுப்பாடு மிக்க கணவனிடம் பல சங்கடங்களுடன் வாழ்ந்தாலும் குறை கூறாமல் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவருடைய வாழ்க்கைக்கு உண்மையாகவே துணையாய் விள்ங்கிய மாதர் திலகத்துக்கு சுவையான கவிதை அஞ்சலி . பாராட்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. அன்னை கஸ்தூரிபாவின் அருமையை இளைய தலைமுறைக்கு உணர்த்தவே இக்கவிதை. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  24. தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கேன். நேரம் கிடைக்கும்போது வந்து தொடரவும்
    http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. அழைப்புக்கு நன்றி ராஜி. விரைவில் பதிகிறேன்.

      Delete
  25. மாண்பேற்ற
    மங்கையருள் மாணிக்கத்திற்கு
    அருமையான கவிதை
    இனிய பாமாலையாய்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.

      Delete
  26. //சுயமிழந்த வாழ்விலும்

    சுடராக மின்னினாய்!

    சிறகொடிக்கப்பட்டும்

    தரைநின்று போராடினாய்!//

    அன்னையாரின் அஞ்சலி நன்று. ஆண்களின் பெருமைக்கும் புகழுக்கும் பின் நம் நாட்டுப் பெண்களின் சகிப்புத்தன்மையும் பொறுமையும் மட்டுமே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

      Delete
  27. வித்யாசமான கோணத்தில் அமைந்த அஞ்சலி.

    காந்தியின் துணையாய் கருத்திலும் செயலிலும் இருந்த கஸ்தூரிபாய் காந்தியை மறக்க முடியாதுதான்.

    ReplyDelete
  28. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
  29. Anonymous19/2/14 20:53

    தன்னுடைய மனக்கட்டுப்பாட்டை சோதிப்பதற்காக கஸ்தூரி பாயை நிர்வாணமாக மூன்று நாட்கள் ஒரு அறையில் வைத்துப் பார்த்தாரம் இந்த காந்தி. இவர் எல்லாம் மனிதரே அல்ல.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.