18 November 2025

நீல நாக்கு அரணை

 

1. நீல நாக்கு அரணை

எங்கள் தோட்டத்தில் அடிக்கடி காட்சி தருபவை இந்த நீல நாக்கு அரணைகள். சில சமயங்களில் குட்டிகளையும் பார்த்திருக்கிறேன். வீட்டை ஒட்டி நிறைய இண்டு இடுக்குகள் இருப்பதாலும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள சிறு வாய்க்கால் முழுவதும் காட்டுச்செடிகள் புதராய் மண்டிக்கிடப்பதாலும்  இவற்றுக்கு போதிய இரை கிடைக்கிறது போலும். அதனால்தான் இங்கேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. 

2. தோட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்போது

சுமார் இரண்டு அடி நீளத்தில் கட்டைகுட்டையான உருவத்துடனும் பாம்பு போன்ற தோலுடனும் நீட்டி நீட்டி உள்ளிழுக்கும் நீல நிற நாக்குடனும் காணப்படும் இவற்றைப் பார்த்து ஆரம்பத்தில் பயந்திருக்கிறேன். ஆனால் இவற்றால் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் மாறாக, நத்தைகளையும் புழு பூச்சிகளையும் தின்பதால் இதன் இருப்பு தோட்ட ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என்றும் தெரியவந்தபோது நீல நாக்கு அரணை மீதான பயம் விலகி பாசமே வந்துவிட்டது.

3.  இரையின் வாசம் பிடிக்கும் நீல நாக்கு அரணை

எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே இயற்கை தந்த சிறப்பம்சம்தான் அவற்றின் நீல நாக்கு. நீலம் என்றாலே விஷம் என்று நம் மனதில் பதிந்துபோனதால் இவற்றைப் பார்த்தவுடன் விஷ அரணை என்று நினைத்து பயந்து ஒதுங்கிப் போகிறோம். உண்மை என்னவென்றால் இவற்றுக்கு விஷம் கிடையாது. ஆபத்து நெருங்குவதாய் உணர்ந்தால் தற்காப்புக்கான முயற்சியாக வாயை அதிகபட்சமாகத் திறந்து நீல நிற நாக்கை வெளிக்காட்டும். அது மட்டுமல்ல, பாம்பு போல் தலையை உயர்த்தி, பாம்பு போலவே ஸ்ஸ்ஸ் என்று சத்தமாய் இரையும். அதற்கு மேலும் அங்கு ஏதாவது நிற்குமா அல்லது யாராவது நிற்பார்களா? இவ்வளவு எச்சரிக்கைகளையும் மீறி நெருங்கினால் கூர்மையான பற்களால் கடிதான். நீல நாக்கு அரணைகள் விஷமற்றவை என்பதால் காயம் சில நாட்களில் ஆறிவிடுமாம். நமக்கு ஏன் அந்த விஷப் பரிட்சையெல்லாம்?  கோட்டைத் தாண்டி நீயும் வராதே, நானும் வரமாட்டேன் என்று டீல் பேசிவிட்டேனாக்கும். 

4.சட்டென்று பார்த்தால் பாம்போ என எண்ணத் தோன்றும் உடலமைப்பு

நீலநாக்கு அரணைகள் பாம்புகளைத் தின்னும் என்பது பலருடைய நம்பிக்கை. மாறாக, இவைதான் பாம்புகளுக்கு இரையாகின்றன. என்னதான் பாம்பைப் போல தலையுயர்த்தி எச்சரித்தாலும் பாம்புகளிடம் இவற்றின் பாச்சா பலிப்பதில்லை.  பாம்பு மட்டுமல்ல, நாய், பூனை போன்ற விலங்குகளும் கூக்கபரா, கழுகு போன்ற பறவைகளும் இவற்றை எளிதில் வேட்டையாடித் தின்னும். நான் தினமும் நடக்கும் பாதையோரம் ஒருநாள் இறந்துகிடந்த நீல நாக்கு அரணையைப் பார்க்க நேர்ந்தது. அதற்கு முன்தினம்தான் ஒரு பூனை அதே இடத்தில் வெகுநேரமாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். 

5. நீல நாக்கு அரணை

நீல நாக்கு அரணைகளும் பாம்பு, உடும்பு போன்றவற்றைப் போல் தங்கள்  நாக்கை நீட்டி நீட்டி உள்ளிழுக்கும். காரணம் என்ன தெரியுமா? காற்றில் கலந்திருக்கும் வாசனை மூலக்கூறுகளை சேகரித்து வாய்க்குள் இருக்கும் உணர் உறுப்புக்குச் செலுத்துவதன் மூலம் தங்கள் இரை இருக்குமிடத்தைக் கண்டறிகின்றன. நீல நாக்கு அரணை ஒரு அனைத்துண்ணி. பூச்சி, நத்தை, தவளை, சிறிய பறவைகள், மற்ற சிறிய ஊர்வன, இறந்துபோன விலங்குகள், பழங்கள், இலைகள் என அனைத்தையும் தின்னும். பகல் முழுவதும் இரைதேடும். இரவில் தூங்கி ஓய்வெடுக்கும். 

6. தொட்டிச் செடிகளுக்கு மத்தியில்

நீல நாக்கு அரணைகள் ஆஸ்திரேலியாவிலும் இந்தோனேஷியா, பப்புவா நியூகினி தீவுகளிலும் காணப்படும் தனித்துவமிக்க ஊர்வனவாகும். ஆஸ்திரேலியாவில் ஏழு வகையான நீல நாக்கு அரணைகள் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியர்கள் இவற்றைச் செல்லமாய் Blueys என்கிறார்கள். எங்கள் தோட்டத்தில் வளைய வருபவை கிழக்குப்பகுதி நீலநாக்கு அரணைகள் (Eastern blue-tongue lizards/ Eastern blue-tongue skinks) 

7. தண்ணீர்த்தொட்டிக்கும் சுவருக்கும் இடையில்

நீல நாக்கு அரணைகள் கூச்ச சுபாவிகள் என்பதால் அவ்வளவு எளிதில் நம் முன் வாரா. எனினும் தோட்டத்துக்குப் போகும்போது பெரும்பாலும் கையில் மொபைல் இருப்பதால் சட்டென்று இவற்றைப் படம்பிடிக்க முடிகிறது.  கேமராவில் ஒரு நல்ல ஒளிப்படம் என்றாவது சிக்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். 

8. நீல நாக்கு அரணைக் குட்டி வெயில் காய்கிறது

நீல நாக்கு அரணை முட்டையிடாது. குட்டிதான் போடும். ஒரு ஈட்டுக்கு 20 குட்டிகள் வரை போடும். நீல நாக்கு அரணை இனத்திலேயே அதிக குட்டிகள் போடுவது கிழக்குப்பகுதி நீல நாக்கு அரணைதான். இவற்றின் ஆயுட்காலம் 20 முதல் 30 வருடங்கள். நன்கு வளர்ந்த நீல நாக்கு அரணையின் எடை சுமார் ஒரு கிலோ வரை இருக்குமாம். 

நீல நாக்கு அரணைகள் பலவும் அவற்றின் வித்தியாசமான உடல் அமைப்பாலும் நீல நாக்கின் வசீகரத்தாலும் சில நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவுக்குள் இவற்றை வளர்ப்பதற்கு முறையான உரிமம் பெற்றிருத்தல் அவசியம். கள்ளச்சந்தையில் ஒரு நீல நாக்கு அரணையின் மதிப்பு சுமார் நான்காயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் இரண்டேகால் லட்ச ரூபாய்) என்பதால் இவை ஆஸ்திரேலியாவிலிருந்து பிற நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. பல முயற்சிகள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன என்றபோதும் கடத்தல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது வருத்தமளிக்கும் தகவல்.   

9. நீல நாக்கு அரணைக்குட்டி

31 October 2025

பறவைத் தேர்தல்

ஆஸ்திரேலியாவில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை  ‘நடப்பாண்டு ஆஸ்திரேலியப் பறவையைத்’  தேர்ந்தெடுக்கும் இணைய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. Guardian Australia செய்தி நிறுவனமும் இயல்பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடச் சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் Birdlife Australia என்னும் லாபநோக்கற்ற நிறுவனமும் இணைந்து 2017-ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த வாக்கெடுப்பை நடத்துகின்றன. 

என் பறவை ஆல்பத்திலிருந்து சில ஆஸ்திரேலியப் பறவைகளின் தொகுப்பு:

1. ஆஸ்திரேலியப் பறவைகள் (1)

2. ஆஸ்திரேலியப் பறவைகள் (2)

3. ஆஸ்திரேலியப் பறவைகள் (3)

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 850 பறவையினங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பாதி ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு எங்கும் காணப்படாத அபூர்வப் பறவைகள். சில பறவையினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. சில அழிந்தே விட்டன. இருக்கும் பறவையினங்களையாவது அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஒரு பகுதியாக இப்போட்டி நடைபெறுகிறது. 

‘2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியப் பறவை’க்கான வாக்கெடுப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. முடிவு கடந்த 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 

4. நடப்பாண்டுப் பறவையான செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை

சுமார் 12,000 வாக்குகள் பெற்று ‘2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியப் பறவை’ என்ற சிறப்பை செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை பெற்றுள்ளது. பெரும்பாலானோரின் விருப்பப் பறவையாகவும் இந்த ஆண்டின் சிறப்புப் பறவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

எந்தப் பறவையைத் தேர்ந்தெடுத்தாலும் அது எந்தப் பறவைக்கும் தெரியப்போவதில்லை. பிறகு எதற்கு இவ்வளவு மெனக்கெடல்?   

சுற்றுச்சூழல் அறிவை மேம்படுத்தவும், நம்மைச் சுற்றியுள்ள பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், பறவைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும், அழியும் தருவாயில் உள்ள பறவையினங்களை மீட்டெடுக்கவும் இத்தகு போட்டிகளும் வாக்கெடுப்பும் உதவுவதாக கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் வாக்கெடுப்பு. அதில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie).

5. ஆஸ்திரேலிய மேக்பை

இரண்டாமிடம் குப்பைத்தொட்டிக் கோழி (Bin chicken) என்ற பட்டப்பெயர் இடப்பட்ட ஆஸ்திரேலிய வெள்ளை அன்றிலுக்கு (Australian white ibis).

6. ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில்

2019-ல் முதலிடம் கருந்தொண்டைக் குருவிக்கு Black-throated finch;

இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth


7. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2019

2021-ல் முதலிடம் சூப்பர் தேவதைச்சிட்டுக்கு Superb fairy wren; 

இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth


8. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2021


2023-ல் முதலிடம் துரிதக்கிளிக்கு Swift parrot; 

இரண்டாமிடம் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவைக்கு Tawny frogmouth


9. முதலிரண்டு இடம் பிடித்தப் பறவைகள்- 2023

இவ்வாறு கடந்த மூன்று முறையும் தொடர்ச்சியாக இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்த செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையை இந்த வருடம் முதலிடம் பெற வைத்துவிட்டனர் அதன் தீவிர ஆதரவாளர்கள்.  

இரண்டாமிடம் 7,600 வாக்குகள் பெற்ற பாடின் கருப்பு காக்கட்டூவுக்குக் (Baudin’s black cockatoo) கிடைத்துள்ளது. 

10. பாடின் கருப்பு காக்கட்டூ

பாடின் காக்கட்டூதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்து மனம் நொந்துபோன பாடின் காக்கட்டூ ஆதரவாளர்கள் எப்படியும் அடுத்த முறை அதை முதலிடத்துக்குக் கொண்டுவருவோம் என சபதம் எடுத்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியப் பறவைத் தேர்தல் எப்படி நடைபெறுகிறது? பறவைகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன? 

ஆயிரக்கணக்கான கார்டியன் வாசகர்களால் அவரவர்க்குப் பிடித்தமான பறவைகள் நாமிநேட் செய்யப்படுகின்றன. நாமினேட் செய்யப்பட்ட பறவைப் பட்டியலில் இருந்து முதல் கட்டமாக 50 பறவைகள் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றுள் எது முதன்மை என்பதில் போட்டி ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நாளும் இணைய வாக்கெடுப்பு நடைபெறும். ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம். அன்றன்றைய தின வாக்குகளின் அடிப்படையில் பின்தங்கியிருக்கும் ஐந்து பறவைகள் போட்டியிலிருந்து நீக்கப்படும். கடைசியாக எஞ்சியிருக்கும் பத்துப் பறவைகளுக்குள்தான் கடுமையான இறுதிப்போட்டி.

இந்த ஆண்டு களத்தில் நின்ற கடைசிப் பத்துப் பறவைகள்:


11. கடைசிப் பத்துப் பறவைகள்
  1. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை (Tawny frogmouth) 
  2. பாடின் கருப்பு காக்கட்டூ (Baudin’s black cockatoo) 
  3. கேங்-கேங் காக்கட்டூ (Gang-gang cockatoo) 
  4. வில்லி வாலாட்டிக்குருவி (Willie wagtail) 
  5. புதர் உறை கண்கிலேடி (Bush stone-curlew) 
  6. தென்பகுதி ஈமு-குருவி (Southern Emu-wren) 
  7. சிரிக்கும் கூக்கபரா (Laughing kookaburra) 
  8. சிறிய பென்குயின் (Little penguin) 
  9. புள்ளி பார்டலோட் (Spotted pardalote) 
  10. ஆப்புவால் கழுகு (Wedge-tailed eagle)

இந்தப் பட்டியலில் சில பறவைகளை இயல் வாழிடத்தில் பார்த்திருக்கிறேன். சிலவற்றைப் புகைப்படமும் எடுத்திருக்கிறேன். மூன்றை எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்திலேயே பார்க்கலாம். ஆனால் முதலிடத்தில் இருக்கும் செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையை?  உருமறைப்பு உத்தியில் கைதேர்ந்த அவற்றைக் காண்பது மிகவும் அரிது. 

12. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை இணை

சில வருடங்களுக்கு முன்பு அந்த அரிய வாய்ப்பும் கிடைத்தது. 2017-ஆம் ஆண்டு, சிட்னி ராயல் தாவரவியல் பூங்காவில் தற்செயலாகத்தான் பார்த்தேன். செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை இணையொன்று ஆடாமல் அசையாமல் பனை போன்றதொரு மரத்தின் நிறத்தோடு நிறமாகப் பொருந்தி வெயில் காய்ந்துகொண்டிருந்தன. தற்செயலாக அவற்றைக் கண்ணுற்றது என்னுடைய நற்பேறு என்றுதான் சொல்லவேண்டும். அதன் பிறகு வேறெங்கும் நான் அவற்றை இயல் வாழிடத்தில் பார்க்கவில்லை. கீழே உள்ள படம் உயிர்க்காட்சி சாலையில் எடுத்தது.

13. செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை

Frogmouth என்பதற்கு தமிழில் ‘தவளைவாயன்’ என்ற பெயர் இடப்பட்டுள்ளது. எனக்கு அதில் உடன்பாடில்லை. பெண் இனத்தைக் குறிப்பிடும்போது ‘பெண் தவளைவாயன்’ என்றால் நன்றாகவா இருக்கிறது? அதனால் பொதுப்பெயராக ‘தவளைவாய்ப் பறவை’ என்று நானே வைத்துக்கொண்டேன்.

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையின்பால் அனைவரின் கவனமும் தற்போது குவிந்திருப்பதால் அவ்வினம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சனையும் கவனத்துக்கு வந்துள்ளது. எலிகளைக் கொல்ல வைக்கப்படும் எலிவிஷத்தால் எலிகள் மட்டுமல்ல, அவற்றைத் தின்னும் பறவைகளும் இரண்டாம்கட்ட நச்சுத்தாக்குதலுக்கு ஆளாகி இறக்கின்றன. எலிவிஷத்தால் பாதிக்கப்படும் பறவைகளின் வரிசையில் கழுகு, ஆந்தை இவற்றோடு செம்பழுப்பு தவளைவாய்ப் பறவையும் உள்ளது. எனவே கடுமையான எலிவிஷங்களை விற்பனை செய்வதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதிக்கவேண்டும் என இங்குள்ள பறவை ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

செம்பழுப்பு தவளைவாய்ப் பறவை பற்றி கூடுதல் தகவல்கள் தெரிய வேண்டுமா? 

பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதியிருக்கும் இப்பதிவை வாசித்து அறிந்துகொள்ளலாம். 

சரி, நீ எந்தப் பறவைக்கு வாக்களித்தாய் என்று கேட்கிறீர்களா? சந்தேகமே வேண்டாம், தன் சிரிப்பொலியால் கேட்போரை வசீகரித்து நம்மை அறியாமலேயே நம் உதட்டில் சிறு முறுவலை எழச்செய்யும் ‘சிரிக்கும் கூக்கபரா’வுக்குதான் என் வாக்கு.   

👇

14. சிரிக்கும் கூக்கபரா

26 October 2025

ஆஸ்திரேலியப் பறவைகள் கணக்கெடுப்பும் ஆச்சர்யம் தந்த கங்காரூக்களும்

1. அண்டங்காக்கை (Australian raven)

ஊரே தீபாவளிக் கொண்டாட்டத்தில் தீவிரமாக இருக்க, எனக்கோ கடந்த ஏழு நாட்களும் கண்ணும் கவனமும் பறவைகளின் மீது மட்டும்தான்.  பறவைகள் என்றால் சும்மாவே ஆடுவேன். இதில் கணக்கெடுப்பு என்ற சலங்கையைக் கட்டிவிட்டால் ஆட்டத்துக்கு கேட்கவேண்டுமா? கிளை உரசும் சத்தம் கூட கிளிச்சத்தமோ என்று எண்ணும் அளவுக்கு பறவைப் பித்து ஆட்கொண்டிருந்தது. :) 

வீட்டின் கொல்லைப்புறத்தில் ஆரம்பித்து, சவுக்கும் யூகலிப்டஸ் மரங்களும் அடர்ந்த நடைபாதை, ஓடைக்கரை, சதுப்புநிலம், ஏரிகள், குளங்கள், பூங்காக்கள், இயற்கைக் காப்பகங்கள் என வெவ்வேறு இடங்களுக்குச் சென்று ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று பட்டியலாவது சமர்ப்பித்தேன்.

2. என்னுடைய கணக்கெடுப்பின் முடிவு

ஒரு வார காலத்தின் இறுதியில் 62 பறவையினங்களும் 2016 பறவைகளும் என்னுடைய ஆவணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  

மேலும் 20-25 பறவையினங்களை அறிவேன். ஏற்கனவே பார்த்து படங்களும் எடுத்திருக்கிறேன். சோதனையாக இந்த ஒரு வார காலத்தில் அவை கண்களுக்கு அகப்படவில்லை. சரி, அடுத்த முறை இன்னும் கூடுதல் முயற்சி செய்தால் பார்த்துவிடலாம். 

இந்த வாரம் கேமராவில் சிக்கிய பறவைகளுள் சில:
3. மைனா (Common myna)

4. பெரிய நீர்க்காகம் (Great cormorant)

5. குட்டிக் கொரெல்லா கூட்டம்  (Little corellas)

6. வெள்ளைக்கண் வாத்து - ஆண் (Hardhead or white-eyed duck)

7. தேவதைச் சிட்டு (Superb fairy wren -male)

8. ஆஸ்திரேலியக் கூழைக்கடா (Australian pelican)

9. கருப்பு அன்னம் (Black swan)

10. பெரிய கருப்பு வெள்ளை நீர்க்காகம் (Australian pied cormorant)

11. பாம்புத்தாரா- ஆண் (Australian darter-male)

12. நெடுங்கால் உள்ளான் (Pied stilt)

13. பெரிய கொக்கு -ஆண் (Great egret - male)

14. மஞ்சள் தாடை ஆள்காட்டி (Masked lapwing)

ஆஸ்திரேலியப் பறவைகள் கணக்கெடுப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் அன்று, பக்கத்தில் இருக்கும் nature reserve-ஐத் தெரிவு செய்திருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை போன வனப்பகுதிதான். ஆனால் அதற்குள் கங்காரூக்களும் வல்லபிகளும் வசிக்கின்றன என்பது அன்றுதான் தெரிந்தது. இயல் வாழிடத்தில் அதுவும் வீட்டிலிருந்து மூன்று கி.மீ. தூரத்திலேயே அவை வசிக்க, இத்தனை வருடங்களாக நான் அவற்றைத் தேடி காடு காடாக அலைந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்ததுபோல் பறவை பார்க்கப் போய் கங்காரூக்களைப் பார்த்து ரசித்து வந்தேன். ☺️☺️

ஒரு ஆச்சரியமான தற்செயல் ஒற்றுமை என்ன தெரியுமா? அக்டோபர் 24-ஆம் நாள் உலக கங்காரூ தினமாம். சரியாக அதே நாளில் எதிர்பாராதவிதமாக கங்காரூக்கள் தரிசனம் தந்து என்னை மகிழ்வின் எல்லைக்கே கொண்டுசென்றுவிட்டன.

கேமரா கொண்டுபோகாததால் மொபைலில் முடிந்தவரை zoom செய்து எடுத்திருக்கிறேன்.

14. சாம்பல்நிறக் கங்காரூக்கள் (Eastern grey kangaroos)

15

16

17

18. சதுப்புநில வல்லபி (swamp wallaby)

குடிமக்கள் அறிவியலின் ஒரு பகுதியான பறவைகள் கணக்கெடுப்பில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. ஒரு சூழலியல் ஆர்வலராக மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இம்முறை நிறையக் கற்றுக்கொண்டேன். அடுத்த வருடம் இன்னும் அதிகமான பறவையினங்களை ஆவணப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

******

12 October 2025

எந்தக் கடவுள்?

 


ஒரு ரொட்டித்துண்டுக்காக

ஒரு மிடறு தண்ணீருக்காக

குழந்தைகளின் கைகளை

ஏந்திப் பிடித்திருப்பது எந்தக் கடவுள்?

 

அவர்களின் பிஞ்சுக் கைகளில்

கஞ்சிக் குவளைகளைத் திணித்து

கலவரத்தோடு அலையவிட்டு

களிப்புடனே பார்த்திருப்பது எந்தக் கடவுள்


பிரேதங்கள் வந்து குவியும்

மயானக் குழிகளின் மத்தியில்

மருளும் விழிகளோடு

மழலைகளை உலவ விட்டு ரசிப்பது எந்தக் கடவுள்?

 

நேற்றுவரை தூக்கிக்கொஞ்சிய அம்மையும் அப்பனும்

விளையாட்டு காட்டிய அக்காளும் அண்ணனும்

இன்று போன இடம் தெரியாமல் 

விக்கித்து அழச்செய்து

வேடிக்கை பார்த்திருப்பது எந்தக் கடவுள்?

 

சிதைக்கப்பட்ட கனவுகளின் பெருவலியை

குருதியும் கண்ணீருமாய்க் கடக்குமாறு

கடுஞ்சாபமிட்டது எந்தக் கடவுள்?

 

வீசியெறியப்பட்ட வாழ்வின் மிச்சத்தை

விரக்தியோடு பார்த்திருக்கும் 

சின்னஞ்சிறு இதயங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு

எந்த நீக்குப்போக்கான பதில்களைத் தர

நித்தமும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்

உலகின் ஒட்டுமொத்தக் கடவுளர்களும்?

***



2 October 2025

சுயமோக ஆளுமைக் குறைபாடு

தன் அழகின் மீதே சுயமோகம் கொண்டு அழிந்துபோன நார்சிசஸ் பற்றியும் நார்சிசிஸம் பற்றியும் நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நார்சிசிஸம் என்றாலே தன் அழகின் மீதான மோகம் என்றே பல பேருடைய மனதில் படிந்துபோயிருக்கும். இந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் பூதாகரமான உளவியல் சிக்கல் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது. 

 


சுயமோகம் என்பது கிட்டத்தட்ட எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு சாதாரண குணம்தான். தோற்றத்தில் சிரத்தை எடுத்துக்கொள்வதுமிகைநேர்த்தியாக உடுத்துவது, கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் சிகையைத் திருத்துவது, எடை கூடியதை உணர்ந்தவுடன், பார்ப்பவர்களிடமெல்லாம், நான் குண்டா ஆயிட்டேனா என்று கேட்டு, ‘அப்படி ஒண்ணும் இல்ல, லேசாப் பூசினாப் போலத்தான் இருக்கே’ என்ற பதிலை எதிர்பார்த்து சமாதானமடைவது, ‘உனக்கு மட்டும் எந்த ட்ரெஸ் போட்டாலும் பொருத்தமா இருக்கு’ ‘நீ சமைச்சா ஊரே மணக்குது’ ‘உன்னைப் போல ஒருத்தர் இனிமேல் பிறந்துதான் வரணும்’ போன்ற புகழ்ச்சிகளில் புளகாங்கிதமடைவது என ஆண் பெண் பேதமற்று நம் எல்லாருக்குள்ளும் ஒரு சில சுயமோக விருப்புகள் இருக்கத்தான் செய்யும். இருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இருக்காது. நம்மையே நமக்குப் பிடிக்காமல் கூட போய்விடலாம். ‘என்னத்த வாழ்க்கை’ என்று ‘என்னத்த கண்ணையா’ போல புலம்ப நேரிடலாம். 

ஒருவரது சுயமோக சுபாவம், யாரையும் பாதிக்காத அளவில் சாதாரண இயல்பாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை. ஆளுமைக் குறைபாடாக (Narcissistic personality disorder) மாறும்போதுதான் அவரைச் சார்ந்தோருக்கான அச்சுறுத்தல் ஆரம்பமாகிறது. கிட்டத்தட்ட அது ஒரு புதைகுழி போல, நதிச்சுழல் போல, கருந்துளை போல மெல்ல மெல்ல அடுத்தவர்களை உள்ளிழுத்து அவர்களுடைய ஆன்மாவை அழிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தச் சுழலுக்குள் மூழ்கடித்து அவர்களுடைய வாழ்வையே மூளியாக்கிவிடுகிறது.

சுயமோக ஆளுமைக் குறைபாட்டைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அப்போதுதான் அப்படிப்பட்ட மனநிலையுள்ள ஆட்களிடமிருந்து நம்மால் எச்சரிக்கையாக விலகி இருக்கமுடியும். அவர்களுடைய சுயமோகச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாத வகையில் விழிப்புணர்வு பெற முடியும். அப்படியே சிக்கிக்கொண்டாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழியைக் காணமுடியும். 

 


சுயமோக ஆளுமைக் குறைபாடு உடையவர்கள் எப்படிப்பட்டவர்கள்? தாங்கள் எப்போதும் எங்கும் எவராலும் ஆராதிக்கப்படவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். எல்லோரையும் விட தாங்களே சிறந்தவர்கள், திறமைசாலிகள், உத்தமர்கள், மேலானவர்கள், மேன்மையானவர்கள், அதி உன்னதமானவர்கள் என்ற மாயச்செருக்கோடும் மமதையோடும் திரிபவர்கள். அவர்கள் தம்மை மட்டுமே எங்கும் எப்போதும் முன்னிறுத்திப் பார்ப்பார்கள். நான், என், எனது, எனக்கு, என்னுடைய, என்னால், என்னை போன்ற வார்த்தைகள் இல்லாமல் எந்த வாக்கியத்தையும் இவர்களால் ஆரம்பிக்கவும் முடியாது, முடிக்கவும் முடியாது. இந்தப் பூமியே தங்களை மையமாக வைத்துச் சுற்றுவதான எண்ணத்தில் ஆழ வேரூன்றியவர்கள்.

சுயமோக ஆளுமைக் குறைபாடுள்ளவர்கள் மற்றவர்களைப் பகடைக்காயாய்ப் பயன்படுத்தும் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள். அடுத்தவரை தங்கள் வலையில் விழவைப்பதில் வல்லவர்கள். தங்கள் அலாதியான திறமைகளையும் சாகசங்களையும் பற்றிப் பேசிப்பேசிக் கவர்ந்திழுப்பதில் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அதீத தன்னம்பிக்கையோடு கூடிய அபாரமான எதிர்காலத் திட்டங்களைக் கேட்டு எதிரில் இருப்பவரின் சுய மதிப்பீடு ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். இங்குதான் அவர்கள் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் வலையில் விழ ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து அவர்களால் மீளமுடியாமலேயே போய்விடுகிறது. 

 


 சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களுக்கு அடுத்தவரின் வலி புரியாது. வலி மட்டுமல்ல, அடுத்தவரின் எந்த உணர்வும் புரியாது. தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பதான மனப்போக்குதான் இவர்களுடையது.

இவர்கள் தாங்கள் செய்த தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரவும் மாட்டார்கள். தவறை ஒப்புக்கொண்டால்தானே மன்னிப்புக் கேட்கத் தோன்றும்? தாங்கள் பிழை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று நூறு சதவீதம் உறுதியாக நம்புவார்கள். அதனால் இவர்களால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக்கொள்ள இயலாது. தம் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் குறைகளையும் பரிசீலிக்கவோ, நிதானமாக அணுகவோ தெரியாது. ஆக்ரோஷமாக எதிர்கொள்வார்கள். எதிரிலிருப்பவரைப் பேசவிடவே மாட்டார்கள். விதண்டாவாதம் செய்து விஷயத்தைத் திசைதிருப்புவார்கள் அல்லது அவசரமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள்.

இவர்களுக்கு வாதத்திறமை குறைவு என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ள மாட்டார்கள். தாங்கள் சொல்ல வேண்டியவற்றை எழுத்து, ஒலி அல்லது ஒளி வடிவில் வெளிப்படுத்துவார்கள். அதன் மூலம் அவர்களது கருத்தையே இறுதிக் கருத்தாக்கிவிட முடியும். எதிர்த்தரப்புக் கருத்தைக் கேட்கவேண்டிய அவசியம் கிடையாது. எதிராளி கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவிக்க நேரும் சூழலையும் தவிர்த்துவிடலாம்.  

சுயமோக ஆளுமைக் குறைபாடுடையவர்கள், தவறு இழைத்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் அவ்வளவுதான். தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தாம் தூம் என்று குதிப்பார்கள். அடுத்தவர்கள் தான் காரணம் என்று இறுதிவரை சாதிப்பார்கள். அடுத்தவர்க்கு உளரீதியான பாதிப்பை உண்டாக்கும் அவர்கள், பிரச்சனை பெரிதாகும்போது சட்டென்று  பாதிக்கப்பட்ட நபராக தம்மை நிறுவுவதற்குப் (victim play) பெருமுயற்சி மேற்கொள்வார்கள். பெரும்பாலும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்வார்கள். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் காரியத்தில் இறங்குவார்கள். நேரத்துக்கொரு பேச்சு பேசுவார்கள். உணர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார்கள். என்ன நினைக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. மர்மமான வாழ்க்கைமுறை இவர்களுடையது.  

 


சுருக்கமாய்ச் சொல்லவேண்டும் என்றால் தங்களைச் சுற்றி ஒரு மாய உலகை சிருஷ்டித்துக்கொண்டு தங்களைத் தாங்களே கடவுளாக எண்ணி வாழ்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களும் அப்படியே எண்ண வேண்டும், எண்ணுவது மட்டுமல்ல, வணங்கித் தொழவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். அப்படிதான் நடக்கவேண்டும் என்று நாலாபக்கத்திலிருந்தும் நிர்பந்திப்பவர்கள். அப்படி எண்ணப்படாத பட்சத்தில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி தண்டனைகளை வழங்கத் தயங்காதவர்கள்.

சுயநலமிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? சுயநலமிகளுக்கு தங்கள் காரியம் முக்கியம். யார் காலைப் பிடித்தாவது காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். யாரையும் கெஞ்சவோ, முகத்துதி பண்ணவோ தயங்கமாட்டார்கள். ஈகோவையெல்லாம் ஓரங்கட்டி எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அவ்வளவு கீழே இறங்கி தாங்கள் நினைத்தக் காரியத்தை முடிப்பார்கள்.

சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்கள் அப்படியல்ல. சுயநலமிகளுக்கு எதிர்முனையில் நிற்பவர்கள். ஈகோவின் உச்சத்தில் இருப்பவர்கள். மற்றவர்கள் தன்னை முகத்துதி பண்ண வேண்டும், தன் காலைப் பிடித்துக் கெஞ்ச வேண்டும், ‘ஐயா, உம்மைப் போல இந்த உலகத்தில் யாருமே இல்லை’ என்று புகழாரம் சூட்டவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள். சுயநலமிகளின் இலக்கு காரியம் என்றால் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் இலக்கு சுயதிருப்தி. அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள், ஈகோவைத் தவிர.

சுயமோக ஆளுமைக் குறைபாடு உடைய பிரபலங்கள் பலர் உண்டு. அவர்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் தாங்கள் பேசுபொருளாக இருப்பதை விரும்புவார்கள். தாங்கள் மட்டுமே பேசுபொருளாய் இருப்பதை விரும்புவார்கள். தங்கள் முகத்தில் ஊடக வெளிச்சம் தொடர்ந்து பாய்ச்சப்படும்படி பார்த்துக்கொள்வார்கள். அல்லது ஊடக வெளிச்சம் பாயுமிடங்களில் தங்கள் முகத்தை வலிந்துகொண்டுபோய் வைத்துக்கொள்வார்கள். பணம், புகழ், செல்வாக்கு இன்ன பிற சங்கதிகள் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருப்பார்கள். என்ன விலை கொடுத்தும் அந்த இடத்தைத் தக்கவைத்திருப்பார்கள். தங்களைத் துதிபாடும் கூட்டமொன்றை எப்போதும் பக்கத்தில் வைத்திருப்பார்கள். போலியான முகத்துதிகள் என்று அறிந்தபோதும் அவற்றை ரசித்து உள்ளுக்குள் மகிழ்ந்திருப்பார்கள்.

 குடும்பம், அலுவலகம், நட்பு வட்டாரம், அக்கம்பக்கம் மட்டுமல்ல, அரசியல், திரையுலகம், இலக்கியம், சமூகம், வணிகம், ஊடகம், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என விதிவிலக்கின்றி எல்லாத் துறைகளிலும் இப்படிப்பட்ட சுயமோக வெறி கொண்ட வேங்கைகள் உலவுவதை அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம்முடைய திறமையை, ஆற்றலை, தன்னம்பிக்கையை, நேரத்தை, உழைப்பை, சேமிப்பை, சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி இறுதியில் நம்மை சக்கையாக்கித் தூக்கியெறியும் அத்தகு மனிதர்களை அடையாளம் கண்டறியத் தெரிந்திருக்கிறோமா? குறைந்தபட்சம் உறிஞ்சப்படுகிறோம் என்ற உண்மையையாவது உணர்ந்திருக்கிறோமா?

(படங்கள் உதவி இணையம்)