23 March 2011

எண்ணத்திறவுகோல்



எத்தனை எடுத்துச் சொல்லியும்
கட்டுப்படுத்த முடியவில்லை
என்  எழுதுகோலை!
வாடிவாசல் திறக்கக் காத்திருக்கும் காளையென
மூவிரல்களுக்குக் கட்டுப்படாது
திமிறி வெளியேற்றுகிறது
உஷ்ணப்பெருமூச்சுகளென எழுத்துக்களை!
என்னுள் ஊடுருவிச் சென்று
எப்படியோ வழிகளை ஆராய்ந்து
என் மனவறைகளைக் கண்டுபிடித்துவிடுகிறது.
எழுதுகோல் திறவுகோலான விந்தைகண்டு
வியந்துநிற்கும் வேளையில் சட்டெனவெளியேறி
கக்கத்தொடங்குகிறது தன் கண்டுபிடிப்புகளை!
பகிர்வதா பதுக்குவதாவென
பலகாலமாய் சிந்தையுள் வளர்ந்திருக்கும்
தயக்கப்புற்று உடைத்து
என் தவங்கலைக்கிறது.
வளைந்தும் நெளிந்தும், சுழன்றும்,
நீண்டும், சரிந்தும், கிடந்தும்
பலவாறாய் தன் ஒற்றைக்காலைக்கொண்டு
வெற்றுத்தாளில் நர்த்தனமாடிப்
பதிக்கிறது தன் நீலச்சுவடுகளை!
சிலசமயங்களில் என் கரமறியாமலேயே
ஏராளக் கதைபேசத் துவங்கிவிடுகிறது,
என்னுதவியின்றி தனித்தியங்கவும்
தயாராகிவிடுமோவென்ற தவிப்போடு நான்...
இப்போதெல்லாம் எப்படி எங்கிருந்து
அதற்குத் தீனி கிடைக்கிறதென்றே தெரியவில்லை,
போதும் போதும் என்று கெஞ்சிடும்
விரல்களின் நோவறியாது
இன்னுங்கொஞ்சம் இன்னுங்கொஞ்சம் என்று
அடம்பிடித்தபடியே தொடர்கிறது
அதன் அட்டகாசத்தை
என் முரட்டுப் பேனாக்குழந்தை.


8 comments:

  1. >>பகிர்வதா பதுக்குவதாவென
    பலகாலமாய் சிந்தையுள் வளர்ந்திருக்கும்

    நிற்கட்டுமா? போகட்டுமா?நீலக்கருங்குயிலே..பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது

    ReplyDelete
  2. சி.பி.செந்தில்குமார் said...
    >>பகிர்வதா பதுக்குவதாவென
    பலகாலமாய் சிந்தையுள் வளர்ந்திருக்கும்

    //நிற்கட்டுமா? போகட்டுமா?நீலக்கருங்குயிலே..பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது//

    நீங்க போகாமல் கருத்து சொல்லிட்டுப் போனீங்களே.... ரொம்ப நன்றி செந்தில்குமார்.

    ReplyDelete
  3. அன்பின் கீதா - கரங்கள் எழுது கோலைப் பயன் படுத்த்கின்றன - மனது கரங்களைப் பயன் படுத்துகின்றன. - உள்ளத்தினை அலசி ஆய்ந்து கரங்களைப் பயன் படுத்தி எழுத வைக்கிறது மனது. முரட்டுப் பேனாக்குழந்தைக்கும் கீதாவிற்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. அன்பின் கீதா - தங்களீன் முதல் பதிவு 23.03.2011 -

    அதற்கு என் மறுமொழி 09.02.2012ல் -

    இப்பொழுது தற் செயலாகப் பார்த்தேன் -

    மனம் மகிழ்ந்தேன் =

    பாராட்டுகள் -

    இது வரை 198 பதிவுகள் எழுதி இருக்கிறீர்கள் -

    200 வது பதிவு வலைச்சரத்தில் 01.09.2014 திங்கட்கிழமை முதல் எழுதுக.

    நல்வாழ்த்துகள் -

    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அருமைமா...உங்கள் எழுத்துக்களோடு இம்மாதம் பயணிக்கப்போகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வலைப்பூ ஆரம்பித்த நாட்களில் கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு முன் எழுதியவற்றையும் வாசித்து அழகாகப் பின்னூட்டமிட்டு ஊக்கம் அளிக்கும் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன். மனம் நெகிழ்வுடன் மிகுந்த நன்றி கீதா..

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.