(முன்குறிப்பு: இது என்னுடைய முதல் நகைச்சுவை முயற்சி. உனக்கேன்
இந்த வேண்டாத வேலை என்று கேட்கும் நண்பர்கள் இந்தமுறை மட்டும் மன்னித்துப் பொறுத்தருளவும். முக்கியமாய்
கொங்குத்தமிழ் அன்பர்கள்! :D)
அல்லாருக்கும் வணக்கமுங்க. இன்னிக்கு
என்ற ஊட்டுல ஒரு விசேசமுங்க. அது என்னதுன்னு நீங்க ஓசிக்கங்காட்டியும் நானே சொல்லிப்போடறேனுங்க. என்ற மாமனுக்கும்
எனக்கும் கண்ணாலமாயி முழுசா ஒரு வருசம் ஓடியேப் போச்சுங்க. எங்க போச்சி, ஏன் போச்சின்னு
எல்லாம் கேக்கப்படாதுங்க. அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வந்துடுங்க. அதென்னது
நல்ல கோவம், கெட்ட கோவமுன்னு அதுக்கும் அகராதி கேக்கப்படாதுங்க. சமாச்சாரத்தக்
கேட்டுப்போட்டு செரி, செரின்னு தலையாட்டிப்போட்டுப் போவோணும், என்ற மாமனாட்டமா.
செரியம்மிணி, உன்ற ஊட்டு சமாச்சாரத்த
உன்ற ஊட்டோட வச்சிக்காம சபையில என்னத்துக்கு சத்தம்போட்டு சொல்லவந்தேன்னு கேப்பீக. என்னது
கேக்கமாட்டீங்களா? அட, கேப்பீகன்னு சொல்லுறேனில்ல… கேட்டுப்போடுங்க. என்ற வெசனத்தை
உங்களவிட்டா வேற ஆருட்ட போய் சொல்லமுடியும்?
என்ற மாமனுக்கு எம்மேல நெம்ப இஸ்டமுங்க. என்ற கையால
எது குடுத்தாலும் இனிக்குதும்பாருங்க… என்னது? பாவக்காப்
பொரியலா? அதையுந்தேன் இனிக்குதுன்னு சொல்லிப்போட்டாருங்க. இத்தனைக்கும் பலநா பதமா
சோறு வடிச்சதில்லீங். சோறு கொழைஞ்சிபோனா, கூழா நெனைச்சிக்
குடிச்சிபோட்டு கம்முனு போயிடுவாருங்க. என்ற மாமனுக்கு
எம்மேல எம்புட்டு இஸ்டமுன்னு இப்பவாச்சும் தெரிஞ்சிருப்பீகளே..
இம்புட்டு ஆச வச்சிருக்கிற மாமனுக்கு நெசமாவே என்னமாச்சும்
இனிப்பு பண்ணித் திங்கக் குடுக்கோணும்னு ஆசைங்க எனக்கு. இன்னிக்கு
கண்ணால நாளா வேறப் போயிட்டுதுங்களா? மளார்னு சோலிய முடிச்சிப்போட்டு
பொழுதோட வந்துடுறேங்கண்ணு, பொறவு ஒட்டுக்கா சினிமா பாக்கப்போவலாம்னு சொல்லிப்போட்டு
என்ற மாமன் களத்துமேட்டுக்கு போயிருக்காருங்க.
அவரு வாரதுக்குள்ள எதாச்சி புதுசா பலகாரம் பண்ணிப்போட்டு
மாமனை அசத்திப்போடோணும்னு அரக்கப்பரக்க, அப்பத்தாகிட்ட போனு
போட்டுக் கேட்டா, ஒப்புட்டு, ஒறப்படை, புக்கை, பணியாரமுன்னு
எல்லாம் பழைய பலகாரமா சொல்லுதுங்க. அதுல பாருங்க, பணியாரங்கவும்
குபுக்குனு சிரிச்சிப்போட்டேனுங்க.
குண்டப்பன் குழியில வுழுந்தானாம், எழுந்தானாம், அல்லார்
வாயிலயும் வுழுந்தானாம் அவன் எவன்னு அப்பத்தா போட்ட விடுகதை அப்பத்தானா நாவகத்துக்கு
வரோணும்? அப்பத்தாவுக்கு பொசுக்குனு கோவம் வந்து விசுக்குனு போனை
வச்சிப்போட்டுது. அட, கெரவத்தேன்னு அத வுட்டுப்போட்டு அடுத்தத ஓசிச்சேனுங்க.
நம்ம மெத்தவூட்டக்கா இல்ல, மெத்தவூட்டக்கா…. நல்லா படிச்சவுக, பதவிசானவுக, பாசக்காரவுக. அவிக நான்
கேக்கு பண்ணிப்போடுறதுல கில்லாடியாக்கும்னு சொல்லிப்போட்டது நாவகத்துக்கு வந்துச்சி. ஒருக்கா கிறிஸ்மஸ் அப்போ அந்தக்கா குடுத்த கேக்கை என்ற மாமன் ஒட்டுக்கா தின்னதும் நாவகத்துக்கு வந்திடுச்சிங்க.
செரி, மாமனுக்குப் புடிச்ச கேக்கையே இன்னிக்குப் பண்ணிப்போடலாம்னு மெத்தவூட்டக்காட்ட வழிமொறயக்
கேட்டேனுங்க. அதுக்கென்ன கண்ணு, சுளுவா
செஞ்சிபோடலாமுன்னு சொல்லிப்போட்டு என்ற வயித்துல பாலை வார்த்தாக.
நம்ம நேரம் கேட்ட நேரமாப் போச்சுதுன்னா, முந்திப்
போற சனியனையும் முக்குல நிக்கச் சொல்லி வழித்தொணைக்கி அழைக்கச் சொல்லுமாம்.
அப்பிடித்தாங்க, மெத்தவூட்டக்கா
விரிச்ச வலையில எண்ணெயில வுழுந்த பணியாரமாட்டம் நானும் தொபுக்கடீர்னு வுழுந்திட்டேனுங்க. சாமானெல்லாம்
வாங்கிப்போட்ட பொறவு, கண்ணு எனக்கொரு அவசர சோலி வந்துபோட்டுதுன்னு சொல்லிப்போட்டு, அல்லாத்தையும்
காயிதத்துல எழுதிக் குடுத்துபோட்டு, ஒத்தாசைக்கில்லாம, ஒறம்பரயப்
பாக்கோணும்னு ஊருக்குப் போயிட்டாக.
நானும் காலைல புடிச்சி காயிதத்தையே மொறச்சி மொறச்சி பாத்துட்டு
நிக்கிறேனாக்கும். பொறவு என்ன பண்ண? நீங்களே
படிச்சி ஒரு வழி சொல்லிப்போட்டுப் போங்க.
எடுத்ததுமே கோளாறுதேன்.
1. முதலில்
அவனை 200 டிகிரிக்கு சூடு செய்யவும்.
எவனைன்னு சொல்லிப்போடணுமல்லோ?
2. இரண்டு
முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
பாத்திரமுன்னா போசிதேன்னு தெரியும். எப்பிடியா? மெத்தவூட்டக்கா அப்பிடித்தானே சொல்லுவாக. செரின்னு முட்டைய ஒடைச்சி போசியில ஊத்திப்போட்டேன்.
3. பீட்டரின்
உதவியால் நன்றாக நுரைக்கக் கலக்கவும்.
அடுத்தவடியா
மெத்தவூட்டக்காவோட மச்சானை நான் எங்கேனு போய்த்தேடுவேன்? அவரு என்னத்துக்கா? அவரு பேருதானுங்களே
பீட்டரு. முட்டையைக் கலக்குறதுக்கும் ஒரு தனித்தெறமை வேணுமாக்கும். அதான் அந்தக்கா
ஊட்டு கேக்கு மெத்து மெத்துன்னு பஞ்சாட்டமா இருக்கு.
4. அப்புறம்
பட்டரையும் சேர்த்துக்கொள்ளவும்.
அடக்கெரகமே… பீட்டரோட பட்டரையும்
சேக்கணுமாமே… நான் எந்தப் பட்டரைக் கண்டேன்… எனக்குத்
தெரிஞ்சதெல்லாம் திருவிளையாடல் படத்துல வார பாணபட்டரு மட்டுந்தானுங்க. அவரையும்
எங்கேனு தேடிப்போவேனுங்க?
5. சுகரை இப்போது
சேர்க்கவும்.
ஆருங்க? அந்த பாகவதம் சொன்ன சுகருங்களா? அல்லாத்துக்கும் முன்னால அவன்னு ஒருத்தனை சொல்லிப்போட்டாங்களே… அவனாருன்னு
தெரியலீங்க. அவனையும் கண்டுபிடிக்கோணும். ஒரே ஒளப்பலாப் போச்சுதுங்க.
போச்சாது போன்னு நானே நொரைக்கக் கலக்கலாம்னு கலக்குனா, நொரையே
வாரலங்க. கலக்கோ கலக்குன்னு கலக்குன வெசையில போசி கவுந்து முட்டையெல்லாம்
விசிறி வூடே கந்தர கோலமாயிப்போச்சிதுங்க. அதுக்குதேன் மெத்தவூட்டக்கா பீட்டரை
ஒத்தாசைக்கு வச்சிக்கிட்டு முட்டையைக் கலக்குன்னு சொல்லிப்போட்டுருக்கு. அச்சாணியமாப்
போச்சே… இது ஆவுற காரியமில்லன்னு கேக்கு ஆசைய அத்துவுட்டுட்டேனுங்க.
பொழுதும் சாஞ்சிபோச்சி. என்ற மாமன்
வார நேரமாயிப் போட்டுதுங்க. கேக்கு பண்ணிப்போடோணும்னு ஆசைப்பட்டு அல்லாம் கோக்குமாக்காயிப்
போச்சுது.
என்ற மேலெல்லாம் முட்ட அபிசேகமாயிப்போச்சுதல்லா? மறுக்கா
தலைக்கு வாத்துட்டுப் போயி… அன்னாடம் வடிக்கிற சோத்தையாச்சும் ஒழுங்கா வடிச்சிப்போடோணும்
ரவைக்கு… சரி, நான் வாரேனுங்க… இனி ஆராச்சும்
கேக்கு பண்ணிப்போடச் சொல்லிக்குடுத்தா…. என்ன பண்ணோணும்?
அல்லாத்தையும் கலக்குறதுக்கு ஆராரு வேணுமுன்னு முந்தியே கேட்டுப்போடோணும்… சொல்லிப்போட்டேன். ஆமா...
********************************************************************************
படம் உதவி: இணையம்