17 December 2017

கண்டதும் கேட்டதும் ரசித்ததும்...

எங்கள் இல்லத்தைச் சுற்றி 
நான் கண்ட, கேட்ட மற்றும் ரசித்த காட்சிகள் 
இங்கே உங்கள் பார்வைக்கும்... 


மழைக்கால மாலைப்பொழுதொன்றில் 
எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் காட்சியளித்த 
இரட்டை வானவில்கள். :) 
இவ்வளவு நெடிய வானவில்லைக் கண்டது 
இதுவே முதல்முறை.. 

நீதானா அந்தக்குயில்...


கூகூ….கூ...வென வசந்தகாலத்தின் இறுதியில் வேனிற்காலத்தின் துவக்கத்தில் அதிகாலைப் பொழுதுகளில் குயிலின் கீதம் கேட்பது வரம். கண்ணை மூடிக்கொண்டால் சென்னையிலோ.. திருச்சியிலோ இருப்பேன். ஊரில் இருந்தபொழுது ஒருமுறை கூட குயிலைப் பார்க்க வாய்த்ததில்லை. குரல் மட்டும் கேட்கும். எங்காவது தூரத்து மரத்திலிருந்து விருட்டென்று கூவிக்கொண்டே பறந்துபோகும்போது சிலநொடிகள் பார்த்ததுண்டு. இங்கேயும் நித்தமும் பாடும் குயிலைத் தேடிச் சோர்ந்துபோனேன். வீட்டைச் சுற்றி மரங்கள். எந்த மரத்திலிருந்து பாட்டு வருகிறது என்று உறுதியாய்த் தெரியவில்லை. இன்று காலையில் தற்செயலாகப் பார்க்கிறேன், எதிர்வீட்டு ஈச்சைமரத்தில் ஈச்சம்பழக்கொத்தை வேட்டையாடியபடி சோடிக்குயில்கள். நம்ம ஊரில் பார்க்க முடியாத குயிலை அதுவும் சோடியாக இப்படி ஆஸ்திரேலியாவில் பார்ப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. ஆண்குயில் வந்து ஈச்சம்பழக்கொத்தில் அமர்கிறது. ஐந்தாறு பழம் தின்கிறது. பறந்து வேறிடம் அமர்ந்துகொள்கிறது. பெண்குயில் வருகிறதுஐந்தாறு பழம் தின்கிறது.. பறந்து வேறிடம் அமர்ந்துகொள்கிறது. இரண்டும் இப்படி வெகுநேரம் ரிலே ரேஸ் போல மாறி மாறித் தின்னும் அழகை சன்னல்வழி ரசித்துக் கொண்டிருந்தேன். படம் எடுக்க ஆசையாக இருந்தாலும் எதிர்வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது தவறாக நினைத்துவிட வாய்ப்பிருக்கிறதே என்று தயக்கமாக இருந்தது. இறுதியில் தயக்கத்தை ஆசை வென்றுவிடஇதோ நான் ரசித்த அக்காட்சிகள்...


பெண்குயில்
(Australasian koel female - Eudynamys cyanocephalus)

ஆண்குயில்
(Australasian koel male - Eudynamys cyanocephalus)

இரண்டும் மாறி மாறி நடத்திய ஈச்சை வேட்டை 


தோட்டப்பூக்களிடம் ஒரு வேண்டுகோள்

இளஞ்சிவப்பு வண்ணம் இப்போதும் எனக்கு விருப்பம்தான். மறுக்கவில்லை.. அதற்காக அந்நிறத்தில் மட்டுமே மலர்வேன் என்று அடம்பிடிப்பதென்ன என் தோட்டத்துப் பூக்களே… :)

தோட்டத்தில் மலர்ந்த முதல் ரோஜா

மலர்ந்தும் மலராத க்ளாடியோலி மொட்டு (Gladioli bud)

க்ளாடியோலி (Gladioli)

ரோஜா வடிவம் வேறு வண்ணம் ஒன்று.. 

வசந்தத்தை வரவேற்ற முதல் லில்லி மலர்

அழகு லில்லி மலர்கள்..
 
பால்சம் பூக்கள் (Balsam flowers)

வசந்தத்தை விடைகொடுத்து அனுப்பிய கடைசி லில்லி
  
கொளுத்தும் வெப்பம் தாங்காது
கருகித்துவளும் பால்சம் பூக்கள்

புல்லாங்குழல் பறவைக்குப் புது அங்கீகாரம்

எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் விருந்தினர்

ஆஸ்திரேலியாவின் இந்த வருடத்துக்கான (2017) பறவை தெரிவில் காசோவரி, காக்கட்டூ, குக்கபரா, லயர்பேர்ட் உள்ளிட்ட 50 பறவைகள் இருந்தன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இவ்வருடப் பறவையாக பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஆஸ்திரேலிய மேக்பை தெரிவு செய்யப்பட்டுள்ளது. விடியலைத் தன் இன்குரலால் கட்டியம் கூறும் இந்தப் புல்லாங்குழல் பறவைக்கு இவ்வங்கீகாரம் கூடுதல் சிறப்பு. (பி.கு. - நான் வாக்களித்த சிரிக்கும் குக்கபராவுக்கு மூன்றாமிடம்.)




நான் ரசித்தவற்றை என்னோடு இணைந்து ரசித்த 
உங்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். 

24 November 2017

விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா?


 

குட்டிக்கதைகள் பல சொன்னேன்
சுவைத்து நீயும் கேட்டிருந்தாய்
விடுகதைகள் சில சொல்வேன்..
விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா

விடுகதைகள் புதிர்கள் என்றால்
மிட்டாய் போல இட்டம் அண்ணா
விடுவிடுவென்று கேட்டிடுவாய்
நொடியில் பதிலைத் தந்திடுவேன்...

தொப்பி போட்ட பொடியன்
பெட்டிக்குள்ளே தூங்குவான்
பொழுது சாய்ந்தபின் எழுவான்
எழுந்ததும் எரிந்து சாவான்

குட்டிக்குட்டி தீப்பெட்டியில்
தூங்கும் பொடியன் தீக்குச்சியாம்
சட்டென்று பதில் சொன்னேனா..
சடுதியில் அடுத்தது கேளண்ணா

வளைகரத்தால் இழை திரித்து
நித்தம் பெண்டிர் நெய்யும் தடுக்கு
விரித்தால் சுருட்டமுடியாது
வேறிடம் பெயர்க்க இயலாது

வாசல் கூட்டி சுத்தம் செய்து
வண்ணக்கலவைகள் பல சேர்த்து
ஆசையாய் அக்கா இடுகின்ற
அழகுக் கோலம் அது அண்ணா

உருவமில்லா உடம்புக்காரன்
ஒரு டஜன் சட்டைக்கு சொந்தக்காரன்
ஒற்றை சட்டையை அவிழ்த்தாலும்
உடனே அழவைக்கும் ஆத்திரக்காரன்

சாம்பார் மணக்கச் செய்திடுவான்
சமையலில் ருசியைக் கூட்டிடுவான்
காய்கறி வகையுள் வந்திடுவான்
வெங்காயம் என்னும் பெயருடையான்

ஒன்றிலே இரண்டிருக்கும்
இரண்டிலே ஒன்றிருக்கும்
என் முகம் பார்த்து முழிக்காமல்
என்னவென்று சொல் பார்ப்போம்

முகமொன்றில் கண்ணிரண்டு
கண்ணிரண்டில் பார்வையொன்று
சொன்ன பதில் சரியென்றால்
சீக்கிரம் கேள் அடுத்ததை அண்ணா

காட்டிலே வளர்ந்திருப்பாள்
கந்தலாடை அணிந்திருப்பாள்
முத்துப்பிள்ளைகள் பெற்றெடுத்து
முடங்கிப்போவாள் அவள் யார்..

சுட்டாலும் சுணங்கமாட்டாள்
அவித்தாலும் அனத்தமாட்டாள்
மாலையில் அம்மா தின்னத்தரும்
சோளக்கதிர்தானே அது அண்ணா..

சோறு குழம்பு கறியெல்லாம்
ஆசையாய் கையில் அள்ளிடுவான்
ஒற்றைக் கவளம் தின்று ருசிக்க
வாயுமில்லைவயிறுமில்லை..

அள்ளி அள்ளி எடுத்ததெல்லாம்
அடுத்தவர்க்குப் பரிமாறிடுவான்
அகப்பை கரண்டி என்பதெல்லாம்
அவனுக்கு நாமிட்ட பெயர்களன்றோ

வீட்டின் வெளியே அண்ணனை
விருந்தினர் கை தொட்டுவிட்டால்
உள்ளே இருக்கும் அன்புத்தம்பி
ஓஹோவென்று அலறித் தீர்ப்பான்

அழைப்புமணி அன்புத் தம்பியாம்
அழுத்தும் பொத்தான் அண்ணனாம்
இருவரும் இணைந்து வேலைசெய்தால்
விருந்தினர்க்கு நல்வரவேற்பாம்

நூறு விடுகதைகள் கேட்டாலும்
நொடியில் விடை கிட்டும் என்றாய்
சொன்னது போலவே செய்தாய்
நன்று தம்பி நலமாய் வாழ்க.

18 September 2017

பூக்கள் அறிவோம் 21-30

21. டாஃபோடில்

 daffodil (narcissus)



டாஃபோடில் பூக்களைப் பார்க்கும்போது எனக்கு cup & saucer தான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக மஞ்சள் அல்லது வெள்ளை நிற சாசர்கள் மத்தியில் அதே வண்ண கோப்பைகள் அல்லது ஆரஞ்சு வண்ணக் கோப்பைகள் காணப்படுகின்றன. அழகான வித்தியாசமான இப்பூக்கள் கலைஞர்களைக் கவர்ந்து ஏராளமான கவிதைகளிலும் ஓவியங்களிலும் இடம்பெற்றுள்ளன. பத்தாவது திருமண நாளின் அடையாள மலர் என்ற சிறப்பு இதற்கு உண்டு. மத்தியதரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இதன் இலையும் வேர்க்கிழங்கும் நச்சுத்தன்மை கொண்டவை. இவற்றில் அசல் 50 வகையும் கலப்பு 13,000-க்கும் மேலும் இருக்கின்றனவாம். வசந்தகால மலர்களான டாஃபோடில் மலர்கள் மறுவாழ்வு மற்றும் புதிய ஆரம்பத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. புற்றுநோய் நிறுவனங்கள் டாஃபோடில் மலர்களை புற்றுநோயற்ற எதிர்காலத்தின் நம்பிக்கையாகக் காண்கின்றன. வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் கடைசி வெள்ளிக்கிழமை (கிட்டத்தட்ட குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் சமயம்) டாஃபோடில் தினமாக அறிவிக்கப்பட்டு புற்றுநோய் நிறுவனங்களுக்காக நிதி திரட்டப்படுகிறது.

Narcissus என்னும் இதன் உயிரியல் பெயருக்கான மூல வார்த்தையான narcissism பற்றி அறிவீர்களா? நாசீசிசம் என்பது தன்னைத் தானே காதலிக்கும், தற்பெருமையும் தன்முனைப்பும் கொண்ட குணத்தைக் குறிக்கிறது. ஹிட்லரின் நாசிசத்தோடு (Nazism) இதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம். அது வேறு. நாசீசிசம் என்னும் கிரேக்கப் புராணக் கதைப்படி நதிதேவன் செஃபிசஸ்க்கும் லிரியோப் தேவதைக்கும் மகனான நாசீசஸ் பேரழகன். தன் அழகு குறித்து பெருங்கர்வம் கொண்டிருந்தான். ஏராளமான தேவதைகள் அவன் அழகில் மயங்கினர். அவன் எவரையும் பொருட்படுத்தவில்லை. எக்கோ என்னும் தேவதையின் ஆத்மார்த்தமான காதலையும் நிராகரித்து அவளைத் துயரத்தில் ஆழ்த்தினான். இதை அறிந்த நெமசிஸ் என்னும் தேவதைக்கடவுள் அவனை ஒரு ஏரிக்கு வரவழைத்தது. நீரில் தெரியும் சுய பிம்பத்தின் அழகால் மயங்கிய அவன் அதையே காதலிக்கத் தொடங்கினான். அதை விட்டு அவனால் நகரமுடியவில்லை. தன் பிம்பத்திலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. தற்காதலில் தன் சிந்தனை, செயல், வாழ்க்கை அத்தனையும் இழந்து மறைந்துபோனான். அவன் மறைந்த இடத்தில் அவனைப் போலவே குனிந்து பிம்பம் பார்ப்பது போலவே மலர்ந்த இந்த அழகு டாஃபோடில் மலர்களுக்கு நாசீசஸ் என்ற பெயரிடப்பட்டதாம்.

இந்தியில் இதன் பெயர் என்ன தெரியுமா? நர்கீஸ். சொல்லும்போதே வசீகரிக்கிறது அல்லவா?

22. கொலம்பைன் மலர்கள் 

columbine (aquilegia)


பின்புறம் கொக்கிபோல் நீண்ட ஐந்து புற இதழ்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் கண்ணைக் கவரும் கொலம்பைன் மலர்களுக்கு நாற்பதாயிரம் ஆண்டுகால வரலாறு உள்ளது. Columba என்னும் லத்தீன் வார்த்தைக்கு புறா என்று பொருளாம். பூவைப் பின்புறமிருந்து பார்த்தால் ஐந்து புறாக்கள் வட்டமாய் அமர்ந்திருப்பது போல இருக்கும். இதன் உயிரியல் பெயரான aquilegia என்பதற்கு லத்தீன் மொழியில் கழுகின் கூர்நகங்கள் என்று பொருளாம். பாட்டியின் தொப்பி (granny’s bonnet) என்ற செல்லப்பெயரும் உண்டு. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், பிங்க், லாவண்டர் என பல்வேறு வண்ணங்களிலும் மலர்ந்து தோட்டங்களுக்கு அழகுசேர்ப்பவை. அயல் மகரந்தச்சேர்க்கை மூலம் புதுப்புது கொலம்பைன்  வகைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனவாம். இதுவரையில் அசலாக சுமார் 70 வகைகளும் கலப்பின வகைகள் எண்ணற்றவையும் உள்ளனவாம். அமெரிக்கப் பழங்குடியினர் இதன் விதைகளை தலைவலித்தைலம் தயாரிக்கப் பயன்படுத்தினார்களாம்.

23. சங்கு இஞ்சிப்பூ 

shell ginger flower (Alpinia zerumbet)



pink porcelain lily, variegated ginger, butterfly ginger என்றெல்லாம் குறிப்பிடப்படும் இச்செடி கிழக்காசியத் தீவுகளைத் தாயகமாகக் கொண்டது. காய்ச்சல், இருமல், மூட்டுவலி, உயர் ரத்த அழுத்தம், வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. மலரின் அழகுக்காகவும் இலைகளின் மருத்துவ குணத்துக்காகவும் வளர்க்கப்படுகின்றன. மலர்வதற்கு முந்தைய மொட்டுகளைப் பார்த்தால் சங்குகள் போல் இருப்பதால் இதற்கு சங்கு இஞ்சி shell ginger என்ற பெயராம். பூவைப் பார்த்தாலும் நம்மூர் சங்குப்பூ போலத்தான் இருக்கிறது. நாம் வாழை இலைக் கொழுக்கட்டை செய்வது போல ஜப்பானின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான ஸாங்ஸி வேகவைப்பதற்கு அவர்கள் இந்த இஞ்சிச்செடியின் இலைகளைத்தான் பயன்படுத்துகிறார்களாம்.

24. பட்டுப்பஞ்சுப் பூ 

Silk floss flower (ceiba speciosa)



பட்டுப்பஞ்சு மரம் என்றதும் பட்டு இப்போதெல்லாம் பட்டுப்பூச்சிகளை விட்டுவிட்டு மரத்திலிருந்து எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் வேண்டாம். இதன் காயிலிருந்து கிடைக்கும் பஞ்சு பட்டுப்போல மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதால் இதற்கு பட்டுப்பஞ்சு மரம் என்று பெயராயிற்று. இதை நம் இலவம்பஞ்சு மரத்துக்கு அக்கா எனலாம். பூக்கும் காலத்தின்போது மரம் இலையாடையை அவிழ்த்துவிட்டு பூவாடையை உடுத்திக்கொள்ளும். மரம் முழுக்கப் பூக்கள் மலர்ந்து பார்ப்பவரை வசீகரிக்கும். கல்யாண முருங்கை மரத்தைப் போல இந்த மரத்தின் தண்டுகளிலும் முட்கள் இருக்கும். பிரேசில், அர்ஜென்டினா நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் பூக்களின் அழகுக்காகவே முள்ளையும் பொருட்படுத்தாது வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இதன் அடர்ந்த கிளைகள் தாறுமாறாய் வளர்ந்து ஒன்றன்மேல் ஒன்று விழுந்துகிடப்பதால் இதற்கு குடிகார மரம் (drunken tree) என்றும் அடர்த்தியான நிழல் தருவதால் அடைக்கல மரம் (sheltering tree) என்றும் செல்லப்பெயர்கள் உண்டு.


25. ஃப்யூஷியா 

Fuchsia






கிணிகிணியென அடிக்கும் மணிபோல அழகு ஒரு பக்கம்.. காதோரம் கதைபேசும் லோலாக்கு போல காற்றிலாடி கண்கவரும் அழகு மறுபக்கம். நுனிவிரல் ஊன்றி சுழன்றாடும் பாலே நடனச் சிறுமியர் போல காட்சிதந்து ரசிக்கவைக்கும் அழகு இன்னொரு பக்கம். காண்போர் எவரையும் ஈர்க்கும்வண்ணம் வடிவத்திலும் அழகிலும் மிக வித்தியாசமான இந்த ஃப்யூஷியாவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பான்மையானவை தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. சில நியூஸிலாந்து, தஹிதி தீவுகளைச் சார்ந்தவை. தாவரவியல் நிபுணரான Leonhart Fuchs நினைவாக இதற்கு fuchsia என்று பெயரிடப்பட்டுள்ளது. வண்ணத்தால் கவரப்பட்டு தேனுறிஞ்ச வரும் தேன்சிட்டுகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. ஃப்யூஷியாவின் பழங்கள் அப்படியேயும், ஜாம் வடிவிலும் பலராலும் விரும்பியுண்ணப்படுகின்றன. அமெரிக்கப் பழங்குடியினர், கம்பளிகளில் கருப்புவண்ணமேற்ற ஃப்யூஷியா செடியின் வேர்களைப் பயன்படுத்தினார்களாம். சில ஃப்யூஷியா வகை நூறு வருடங்கள் கூட வாழுமாம். 1899-ல் நடப்பட்ட ஒரு ஃப்யூஷியா மரம் இன்றும் உயிர்ப்புடன் உள்ளதாம்.

26. கெல்லா லில்லி 

Calla lily (zantedeschia aethiopica)




லில்லி என்று பெயரே தவிர இவை லில்லியினம் கிடையாது. தென்னாப்பிரிக்கா, சுவாசிலாந்து நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இச்செடி பூவின் அழகுக்காக விரும்பி வளர்க்கப்படுகிறது. பசிய இலைகளுக்கு மத்தியில் வெள்ளைக்கிண்ணம் போல பூ மலர்கிறது. உண்மையில் வெள்ளைக்கிண்ண வடிவிலிருப்பது பூவடி இலை மட்டுமே. நடுவில் மஞ்சள் வண்ணத்தில் இருப்பதுதான் மலர்த்தண்டு. வெளியிதழ் வண்ணத்தாலும் மலர்த்தண்டு வாசத்தாலும் கவரப்பட்டு பூச்சிகள் தேடி வருகின்றன. செயின்ட் ஹெலனா தீவின் தேசிய மலர் இதுவே. அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருப்பது போல இதன் நச்சுத்தன்மை தோல்புண், எரிச்சல், ஒவ்வாமை, வயிற்றுவலி போன்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால் சில நாடுகளில் இதை வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. Araceae குடும்பத்தைச் சேர்ந்த இவற்றில் 114 பிரிவுகளும் 3750 வகைகளும் உள்ளனவாம். 6-வது திருமண நாளின் அடையாள மலர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

27. சொர்க்கப்பறவைப்பூ 

Bird of paradise (Strelitzia reginae)



சொர்க்கப்பறவை என்று சொல்லப்படும் கண்ணைக்கவரும் வண்ணப் பறவையினமொன்று உண்மையிலேயே இருக்கிறது. ஆனால் இலைகளுக்கு மத்தியிலிருந்து அழகிய பறவை கழுத்தை நீட்டிப் பார்ப்பது போல காண்போரை சொக்கவைக்கும் இந்த மலருக்கும் சொர்க்கப்பறவை என்ற பெயர் பொருத்தம்தானே. தென்னாப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இச்செடிக்கு அங்கே கொக்குப்பூ (crane flower) என்று பெயராம். இம்மலர் தென்னாப்பிரிக்காவின் 50 சென்ட் நாணயத்தில் இடம்பெற்றுள்ளதோடு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அடையாளமலர் என்ற பெருமையும் உடையது. இதன் உயிரியல் பெயரான strelitzia என்பது இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் மனைவி Charlotte of Mecklenburg Strelitz மகாராணியின் நினைவாக இடப்பட்டதாம். திருமணவாழ்வின் ஒன்பதாம் ஆண்டின் அடையாளமலர் என்ற பெருமை உடையது

28. அமைதி லில்லி 

Peace lily (spathiphyllum)




பெயர்தான் லில்லியே தவிர கெல்லா லில்லியைப் போலவே இதுவும் லில்லி குடும்பதைச் சேர்ந்ததில்லை. அமெரிக்க வெப்பமண்டல நாடுகளையும் தென்கிழக்கு ஆசியாவையும் தாயகமாகக் கொண்டது. அதிக தண்ணீரோ சூரிய ஒளியோ தேவைப்படாது. பாம்பு படமெடுத்தாற்போன்ற பூவடி இலையோடு கூடிய மலர்த்தண்டு பார்க்க வெகு அழகு. பூவடி இலைகள் வெள்ளை, மஞ்சள், பச்சை நிறங்களில் காணப்பட்டாலும் குறிப்பிட்ட இந்த வகை இதன் வெண்மையழகு காரணமாக புனித மேரியின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. கர்த்தர் உயிர்த்தெழும் நாளிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. எல்லா லில்லிச்செடிகளையும் போன்றே இதுவும் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக்கூடிய நச்சுத்தன்மை உடையது. தோல் எரிச்சல், தொண்டைப்புண், வாந்தி போன்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது.

29. ஆப்பிரிக்க லில்லி 

African lily (Agapanthus africanus)



தென்னாப்பிரிக்கா, லெசாதோ, சுவாஸிலாந்து, மொஸாம்பிக் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட காரணத்தால் ஆப்பிரிக்க லில்லி என்றும் நைல் லில்லி (lily of the Nile) என்றும் குறிப்பிடப்படுகிறது. லில்லி என்று சொன்னாலும் இது லில்லியினம் கிடையாது. நீள்தண்டின் உச்சியில் நீலவண்ணத்தில் பூத்திருக்கும் பூப்பந்தில் 40 முதல் 100 பூக்கள் வரை இருக்கலாம். அழகுமலரான இது ஆபத்தானதும் கூட. இதன் இலையின் பால் விஷத்தன்மை கொண்டது. கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. இதன் உயிரியல் பெயரான agapanthus என்பதற்கு கிரேக்க மொழியில் அன்புமலர் என்று அர்த்தமாம். இந்த அன்புமலரும் துன்பமலராய் மாறிவிட்டது பல நாடுகளில். ஆம்.. நியூசிலாந்து மற்றும் சில நாடுகளில் ஆக்கிரமிப்புக் களைகள் பட்டியலில் இந்த ஆப்பிரிக்க லில்லியும் இடம்பெற்றுவிட்டது.

20.  முட்கிரீட மலர் 

Crown of thorns (euphorbia milii)





முட்கிரீடம், இயேசுவின் செடி, இயேசுவின் முள் என்றெலாம் வழங்கப்படும் இந்தச்செடியின் தாயகம் மடகாஸ்கர். succulent எனப்படும் சதைப்பற்றுள்ள தாவர இனத்தைச் சார்ந்த இச்செடியின் துளிர் வரும் இடங்களில் மட்டுமே முள்ளோடு இலைகளும் காணப்படும். மற்ற இடங்களில் முட்கள் மட்டுமே காட்சியளிக்கும். செவ்விய உதடுகளைப் போலக் காட்சியளிப்பவை பூவடி இலைகளே.. உள்ளே சின்னஞ்சிறியதாய்க் காட்சியளிப்பதுதான் பூ. நச்சுத்தன்மை உடைய இதன் பால் பட்டாலே எரிச்சலும் அரிப்பும் உண்டாகும். பஞ்சபூதங்களை வணங்கும் கிழக்கிந்திய போடோ பழங்குடி மக்களின் ஆன்மீக நம்பிக்கையில் இதற்கு முக்கிய இடம் உண்டு என்பதால் ஒவ்வொரு வீட்டின் வடகிழக்கு மூலையில் இச்செடி தவறாமல் இடம்பெற்றிருக்கும். பூக்கள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு என பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. படத்தில் பெரியதாக காட்சியளித்தாலும் நிஜத்தில் மிகவும் குட்டிப்பூக்களே..  

31 August 2017

தவளையாரே... தவளையாரே..






தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இத்தனைநாள் சத்தமின்றி
இருந்ததெங்கே சொல்லுவீரே..

மண்ணிலே மறைந்திருந்து
மாயம் செய்தேன் பாரும்
உடல் விறைத்து இயக்கமற்று
உயிர் காத்திருந்தேன் நானும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இப்போது மட்டும் வந்தீரே
ஏன் என்றுதான் சொல்லுவீரே

மழைபெய்த சேதியறிந்து
மகிழ்ச்சி கொண்டேன் நானும்
குளம் குட்டை நிறையக்கண்டு
கும்மாளமிடுது என் மனம்.

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
கத்திக் கூப்பாடு போடுகிறீரே
காரணமென்ன சொல்லுவீரே

நானிருக்கும் இடத்தை எந்தன்
இணை அறிய வேண்டுமே..
வானம் பொழியும் காலத்தில் என்
வம்சம் வளர்க்க வேண்டுமே..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
உண்டுகளிக்கும் உணவெதுவோ..
உண்மை எனக்கு உரைப்பீரோ

நோய்பரப்பும் ஈயும் கொசுவும்
நொடியில் தின்பேன் நானும்
அந்துப்பூச்சியும் வெட்டுக்கிளியும்
ஆசையாய்த் தின்பேன் மேலும்..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
வாலோடு தானே பிறந்தீரே
வளர்ந்ததும் ஏனோ இழந்தீரே..

நீரில் மட்டும் வாழும் காலம்
நீந்திப்போக வால்தான் உதவும்
வளர்ந்து மண்ணில் வாழும் காலம்
மறைந்துபோனதே எந்தன் வாலும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
தண்ணீரில் ஆட்டம் போடுறீரே..
தாயார் திட்ட மாட்டாரோ

தவளையின் வாழ்வு தண்ணீரிலே
தரணி அறிந்த உண்மையிது.
ஏரிகுளங்கள் வற்றுவதாலே
எம் இனமும் வாழ்வும் அழியுது.



ஒரு நிலப்பரப்பின் வளமான இயற்கைச்சூழலின் அடையாளம் தவளைகள். உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், வாழ்விட இழப்பு, நீர்நிலைகளில் கலக்கப்படும் இரசாயனம், பூச்சிகொல்லிகளின் பயன்பாடு, பூஞ்சைத்தொற்று மற்றும் இதர பல்வேறு காரணங்களால் தற்போது உலகெங்கும் தவளையினங்கள் குறைந்துகொண்டும் அழிந்துகொண்டும் வருவது கவலை தரும் விஷயம். அழிவின் விளிம்பில் இருப்பவற்றைக் காக்கும் முயற்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றன. 

ஆஸ்திரேலியாவில் தவளைகளுக்கு ஏற்படும் பூஞ்சைத்தொற்று இன அழிவுக்கு முக்கியக்காரணம். இதுவரை ஆறு தவளையினங்கள் அழிந்துவிட்டன. ஏழு அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஒதுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே வாழக்கூடிய, எறும்புகளைத் தின்றுவாழும் 3 செ.மீ நீளத்தில் கட்டைவிரல் மொத்தமே உள்ள (Corroboree frog) கொரோபோரீ தவளைகளின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் ஐம்பது. அவற்றுள் ஆண் தவளைகள் 15 மட்டுமே. கவனிக்கப்படாமல் விட்டால் கூடிய விரைவிலேயே இவ்வினம் கண்ணைவிட்டு… இம்மண்ணை விட்டு முற்றிலுமாக மறைந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்பதால் பதைப்புடன் இவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ளன ஆஸியிலுள்ள பல்லுயிர் பாதுகாப்பு அமைப்புகள். 

இந்தியாவிலும் 21 தவளையினங்கள் அழியும் நிலையில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் வளரும் பருவத்திலிருந்தே அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது மட்டுமல்ல.. நாம் வாழ்ந்து மகிழ்ந்து அனுபவித்த இந்த பூமியை அவர்களிடம் பாதுகாப்பாய் ஒப்படைப்பதும் நம் கடமை அல்லவா?