30 March 2011

உதிர்ப்பில் ஓர் உயிர்ப்பு



இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது மரம்;
எள்ளி நகையாடினேன்,
'இப்படி எல்லாவற்றையும் உதிர்க்கிறாயே,
உனக்கு வெட்கமில்லையா?' என்று!

இறுமாப்புடன் மரம் பேசியது,

'என்னிடமிருந்து உதிரும் எதற்காகவும்
நான் வெட்கப்படுவதுமில்லை;
வருத்தப்படுவதுமில்லை!
கோடையிலும், கடும்பனிப் பொழிவிலும்
நீரெனக்குக் கிடைக்காதென்று
ஊருக்கு முன்னே உணர்ந்து
உதிர்க்கிறேன் என் இலைகளை!

மீண்டும் உதிப்பேன் பின்வரும் நாட்களில்!
இது, என்னை நானே தற்காக்கும் முயற்சி!
சாதாரண நாட்களில் கூட
சருகுகளை உதிர்ப்பேன்;
சத்தமின்றி நித்தம் துளிர்க்கும்
சிறுதளிர்கள் அவ்விடத்தில்!
இது, என் வாழ்க்கைச் சுழற்சி!'

''வென வாய் பிளந்தேன்.
தொடர்ந்தது மரம்,

'இன்னும் கேள்!
உதிர்ப்பேன் என் மலர்களை......
அவை பூத்துக் குலுங்கிய
வசந்தத்தின் முடிவில்!
அதற்காக எனக்குக் கவலையில்லை;
ஏனெனில்,
பூ உதிர்ந்தால்தானே பிஞ்சு வெளிப்படும்!
இது, என் வாழ்க்கைத் தத்துவம்!'

'அப்படியா?' அதிசயித்தேன் நான்!

'அது மட்டுமன்று;
உதிர்ப்பேன் என் பிஞ்சுகளை!'

'என்ன, பிஞ்சுகளையுமா?'

'ஆம், வாழ்வின் நோக்கம் அறியாமல்
பிஞ்சிலே பழுத்த அந்த வெம்பல்களை
உதிர்க்கவே செய்வேன்;
இது, என் வளமான வாழ்வின் யுக்தி!'

'அவ்வளவுதானா?'

'இல்லை; இன்னும் முடியவில்லை; கேள்!
உதிர்ப்பேன் என் முதிர்ந்த கனிகளை!
முற்றியவை மண்ணில் விழுந்தால்தானே
மற்றும் பல விருட்சங்கள் தோன்றி
என்றும் என் பெயர் சொல்லி
என் இனத்தை வாழ்விக்கும்;
இது, என் வாழ்க்கைச் சூத்திரம்!

என்னிலிருந்து உதிர்பவை எவையும்
என்னை வெறுப்பதில்லை; அறிவாயா?
என் ஆணி வேருக்கு அவை யாவும்
அடியுரமாகிப்போகும் அதிசயம் காண்!

உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்ப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!'

'இத்தனையும் உதிர்ப்பதால் உனக்கு
எத்தனை நன்மையுண்டு!
எனக்கு நன்மை வேண்டின்,
எதையுதிர்ப்பேன் நான்?'

'அதையும் நானறிவேன், கேள்!
நீ உதிர்க்க வேண்டியவை,
சோம்பலும், சுயநலமும்!
உதிர்க்கக் கூடாதவை,
மானமும், மனித நேயமும்!'

'புரிந்தது, நண்பனே!
புத்தனுக்கோர் போதிமரம் போல்
புத்துயிர் பெற்றேன் உன்னிடத்தில்!
புறப்பட்டுவிட்டேன் இப்போதே,
புதியதோர் வாழ்க்கை வாழ!'

'சற்றே நில்!'
தடுத்தது மரம்!

'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!

ஒன்றல்ல; இரண்டல்ல;
ஓராயிரம் நல்லிதயங்கள்
உன் நலம் நாடும் நட்பாகும்!'

இலையுதிர்த்த கிளைகளை அசைத்து
விடை கொடுத்த மரத்துக்கு
நன்றி தெரிவித்தேன்,
மென்புன்னகை உதிர்த்து!

26 March 2011

இங்கிதம் அறியாதவன்




இத்தனை வயது ஆனபின்னும்
தலைக்கு மேலே பறக்கும்
ஆகாயவிமானம் பார்க்க
தன்னிச்சையாய் உயரும் தலையைத்
தவிர்க்க முடியவில்லை;

கடந்து செல்லும் ரயிலுக்கு
கைகாட்டும் பழக்கத்தை
கைவிடவும் இயலவில்லை;

கடற்கரையோரம்
காலாற நடக்கும்போது
கடலைப்பொட்டலத்தை
நாடும் மனதுக்குக்
கடிவாளமிடத் தெரியவில்லை;

கடல்மணலில் கால்புதைத்து
காற்றாடிவிடும்
சிறுவர்கள் கையிலிருந்து
இரவலாய் ஒருகணம்
நூல்பிடிக்க எங்கும் உள்ளத்துக்கு
மூக்கணாங்கயிறிட்டு
முடக்க முடியவில்லை;

பேரப்பிள்ளைகளை அழைத்துப்போய்
ஊர்சுற்றி வந்தபிறகு
பெற்றோரிடம் சொல்கின்றனர்,
'இந்தத் தாத்தாவுக்கு
இங்கிதமே தெரியவில்லை!' என்று.

கேட்டுவிட்டு ஆரவாரமாய்ச்
சிரித்துக்கொள்கிறார், 
அப்போதும் இங்கிதமற்று!

24 March 2011

நிறக்குருடு



"அனிதா! என்னோட நீலத்துண்டு எங்கே?"


"நீலத்துண்டா? அப்படி ஒண்ணு உங்ககிட்டே கிடையாதே?" அவளது நமட்டுச்சிரிப்பைப் பார்த்ததும்தான் புரிந்தது.


"சரி, நீலமில்லை, உன்னோட பாஷையில் சொன்னால்...வெள்ளை! என் வெள்ளைத்துண்டைப் பார்த்தியா?"


"ம்...ம்...துவைச்சுக் காயப்போட்டிருக்கேன். இந்தாங்க, இதை வச்சுக்கோங்க!"


அவள் நீட்டியதை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு குளியலறை புகுந்தான் செல்வம்.


எப்பவும் இதே கதைதான். அவன் ஒவ்வொரு முறையும் அதை நீலம் என்று குறிப்பிட அவள் வெள்ளை என்று மறுக்க, இவன் இல்லை என்று வாதிட... இப்படியே போகும் வாதம். அனிதாவும் லேசில் விடமாட்டாள்.


"பழங்கதையெல்லாம் பேசாதீங்க, இப்போ என்ன நிலைமை? அதை மட்டும் பாருங்க! வெளியில் யார்கிட்டயாவது போய் இது நீலம்னு சொல்லிப்பாருங்க! உங்களை நிறக்குருடுன்னு நினைப்பாங்க."


அவனுக்கு மனம் ஆறாது. பத்து வருடங்களாய் உழைத்து, உண்மைச்சாயம் போய், தன் மென் தன்மை இழந்து உருமாறிப் போயிருக்கும் அந்தப் பழைய துவாலை எப்படி அவனுக்கு மட்டும் அன்று தென்பட்ட அதே வெளிர்நீலத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாய்த் தெரிவதேன்? அவனுக்கே அது புரியவில்லை.


ஒருவேளை அந்தத் தும்பைப்பூத்துவாலையை அவனுக்குப் பரிசளித்தவளின் தூய உள்ளமும் தொடர்ந்து வந்து பழம்நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறதோ? அந்தப் பசும் நினைவுகளே அந்தத் துவாலையின் நிறம் மங்காதிருக்க உதவுகிறதோ?  அன்றி அந்தப்பாசம் அவன் கண்களை மறைத்து மாயத்தோற்றம் காட்டி மயக்குகிறதோ?


என்னவேண்டுமானாலும் இருக்கலாம். ஓட்டாத்தாவின் பாசத்தை உழக்கு கொண்டா அளக்கமுடியும்? ஆத்தாவின் நினைவுகள் அந்தக்காலத்துக்கே அழைத்துப்போய்விட்டன, செல்வத்தை!


"ராசா! என் கண்ணு! வெய்யல்ல நிக்காதடா! கறுத்துப்போயிடுவே!"


"அட, இத்தனூண்டு சாப்புட்டா எப்புடி உடம்பு தேறும்? வயசுப்புள்ள, வாரி வளச்சு சாப்புடவேணாமா?"


"ராசா! இந்தா, காசு! உண்டியல்ல போட்டு வச்சிக்க."


"ஆத்தா! இந்த உண்டியல் நிறைஞ்சவுடன உனக்கு என்னா வாங்கீத்தர, ஆத்தா?"


"சாமி! இப்ப எனக்கு எதுவும் வேணாம், சாமி! நீ பெரியவனானதும் உன்காசில ஆத்தாவுக்கு ஒரு புதுச்சேலை எடுத்துத் தா. அது போதும்."


திருநாள், பெருநாளுக்கு புதுச்சேலை பரிசளிக்க,தனக்கு யாரும் இல்லையென்று ஆத்தா பெருமூச்சுடன் சொல்லும்.
 
ஆத்தா இவனை ராசா என்றுதான் கூப்பிடும். அவன் அப்பா, அம்மாவை விட, ஆத்தாவுக்குதான் இவன்மேல் கரிசனம் அதிகம். ஆத்தாவின் அரவணைப்பிலேயே வளர்ந்தான் இவன்.


ஓட்டாத்தா என்றழைக்கப்பட்ட ஓட்டு வீட்டு ஆத்தாவுக்கு இவன் எந்தவிதத்திலும் ஒட்டுமில்லை; உறவுமில்லை. ஏனோ தெரியவில்லை, ஆத்தாவுக்கு இவன்மேல் கொள்ளைப்பிரியம். வளர்ந்தபிறகு அதற்கான காரணம் புரிந்தது.


"ராசா, உன்னயப் பாத்தாக்கா எம்புருசன் கணக்கா இருக்கு. எனக்கொரு புள்ள பொறந்திருந்தா, உன்னயப் போலதான் இருந்திருக்குமோ, என்னவோ?"


செல்வத்துக்கு ஓட்டாத்தாவைப் பார்க்கப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பன்னிரண்டு வயதில் திருமணமாகிக் கணவன் வீடு போய் பதிமூன்றாவது வயதில் விதவையாகி விட்டுக்கு வந்ததாம். பாவம்! இதுக்கு எங்கே தன் கணவனின் முகம் நினைவில் இருக்கப்போகிறது என்று நினைத்துக்கொள்வான். 
தங்கள் ஒரே மகளின் நிலை கண்டு மனம் வெதும்பி தாய் தந்தை இருவரும் அடுத்தடுத்து சிவலோகம் சென்றுவிட, அன்றிலிருந்து இன்று வரை ஆத்தா தனிமரம்தான்.


ஆத்தாவுக்கு சொத்துக்குக் குறைவில்லை. அந்தக் கிராமத்தில் சீமை ஓடுகள் வேய்ந்த இரண்டுகட்டு வீடு அது ஒன்றுதான். மற்றதெல்லாம் பெரும்பாலும் பனையோலை, தென்னையோலை வேய்ந்தவைதாம். ஆங்காங்கே சில வீடுகள் நாட்டு ஓடுகளைத் தம் தலையில் ஏற்கத்துவங்கியிருந்தன.


ஆனாலும் ஓட்டு வீடு என்றாலே அது ஆத்தாவின் வீடுதான். அந்தப் பெரிய வீட்டில் ஆத்தா தனியொருத்தியாய் வலம் வந்தது. நெருங்கிய உறவென்று எவரும் இல்லாதபோதும், தூரத்து உறவென்று சொல்லிக்கொண்டு எப்போதும் வீடு நிறைய சனம் வந்துபோய் இருக்கும். வெறுங்கையுடன் வந்தவர்கள் எல்லம் தலைச்சுமையுடன் வெளியேறுவர். ஆத்தாவின் மனசு அப்படி!


ஆத்தா, அந்த அறுபது வயதிலும் கிண்ணென்று இருக்கும். ரவிக்கை போடாது. ஆனாலும் அந்த ஒன்பது கஜப்புடவையை அத்தனை நறுவிசாய்க் கட்டியிருக்கும்.


ஆத்தாவுக்கு நல்ல நிர்வாகத்திறன். கடின உழைப்பாளி. ஒற்றையாளாய் இருந்துகொண்டு நிலபுலன்களை மேற்பார்வையிட்டு வெள்ளாமையை வீடு வந்து சேர்க்கும். ஓட்டாத்தாவின் புண்ணியத்தால் அந்தக் கிராமத்தில் பலபேருடைய வீட்டில் அடுப்பெரிந்தது.


ஆத்தாவின் வீட்டுத்திண்ணை எப்போதும் பரபரவென்றுதான் இருக்கும். ஒருபக்கம் வேர்க்கடலை மலையாய்க் குவிக்கப்பட்டு எண்ணெய் வித்துகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் , பெண்கள்,  புளியம்பழ மலையைச் சுற்றியமர்ந்து, ஓடு, கோது, கொட்டைகளை ஆய்ந்து சுத்தப்படுத்திக்கொண்டிருப்பர். புளி ஆய்வது சூட்டைக் கிளப்பும் என்று சொல்லி சூட்டைத் தணிக்கவென்று அவர்களுக்கு அவ்வப்போது ஆத்தா மோர் சப்ளை செய்யும்.


எல்லாம் போக, மூன்று பசுக்களை வைத்து பால் வியாபாரமும் செய்தது. ஆத்தாவின் சாமர்த்தியத்தைப் பார்த்து ஊரே வியந்தது.இந்தக் கிழவிக்கு ஏன் இத்தனைப் பேராசை என்று பொருமியது. ஆனால் வருகிற வருமானம் அத்தனையும் ஆத்தாவின் வள்ளன்மைக்கே போதுமானதாக இல்லை. அவ்வளவு பெரிய கை!


உண்மையில் ஆத்தாவிடம் எவரும் பாசத்துடன் நடந்துகொண்டதாகவே தெரியவில்லை. ஆத்தாவுக்கும் இது தெரியும். போதாக்குறைக்கு, ஆத்தா, செல்வத்தை தன் சுவீகாரப்புத்திரனாக்கிவிடுமோ? அத்தனைச் சொத்தும் அவனுக்குப் போய்விடுமோ? என்று உறவுசனம் உள்ளூர பயப்படவும் செய்தது.
அவர்களின் பயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், சிலநாளிலேயே செல்வத்தின் அண்ணனுக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட, செல்வமும் +2 முடித்துவிட, அனைவரும் குடும்பத்துடன் சென்னைக்கே இடம் பெயர்வதென முடிவாயிற்று. அப்பாவின் சைக்கிள் கடையும், வீடும் விற்கப்பட்டது.


ஆத்தாவிடம் மலையளவு பொருள் பெற்றுக்கொண்டு துளியளவு பதிலாய்ச் செய்வோரும் உண்டு. அப்படி யாரோ கொடுத்ததுதான் ஒரு வெளிர்நீல நிறத் தும்பைப்பூத் துவாலை. அப்படி ஒரு மென்மை, பூனைக்குட்டியின் ரோமம் போல்! செல்வத்துக்கு அது புது அனுபவமாய் இருந்தது. அவனுக்குப் பிடித்திருப்பது கண்டு அவன் ஊருக்குப் புறப்படும்போது, ஆத்தா அவனிடமே அதைக் கொடுத்துவிட்டது.


கிளம்பும் சமயம்,ஆத்தா இவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டது. ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா? இவன் பிறந்ததிலிருந்து பதினேழு வயது வரை வளர்த்தவளாயிற்றே! செல்வம் வளர்ந்துவிட்டதாலோ, என்னவோ, அந்தப் பிரிவு அவனை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை. பட்டணம் பார்க்கப்போகும் ஆர்வமே மிஞ்சியிருந்தது.


இத்தனை வருடங்களில் இவனும் படிப்பை முடித்து, வேலையில் அமர்ந்து, அண்ணனுக்குத் திருமணம் முடிந்து, இவனுக்கும் ஆகி, இதோ, பெங்களூரில் அனிதாவுடன் வழக்காடிக்கொண்டிருக்கிறான்.
இடையில் கிராமத்து நினைவுகளும், ஓட்டாத்தாவின் நினைவும் வராமலில்லை. அவனுடைய கல்யாணத்தின்போது கூட அப்பாவிடம் கேட்டானே, கிராமத்துக்கு பத்திரிகை கொடுக்கப்போகலையாப்பா? என்று.


"இனிமேல் அங்கென்ன இருக்கு?" என்று அப்பா அலுத்துக்கொண்டார். அவர் பிறந்து வளர்ந்த ஊர் என்றாலும் அதை விட்டு வந்தபிறகு அதன் மேலிருந்த பிடிப்பு முற்றிலுமாய்த் தளர்ந்துவிட்டதை அவன் உணர்ந்தான். அதற்குமேல் அவரை வற்புறுத்த விரும்பவில்லை.
சட்டென்று ஓர் நினைவு தோன்றியது.


ஓட்டாத்தாவைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தால் என்ன? தன்னைப் பார்த்ததும் ஆத்தா என்ன செய்யும்? ஓடிவந்து கட்டிக்கொள்ளும். "ராசா! நல்லாருக்கியா? இப்பதான் இந்தக் கெழவியோட நெனப்பு வந்துச்சா?"ன்னு ரெண்டு கைகளாலும் அவன் முகத்தை வழித்து நெட்டி முறித்து திருட்டி கழிக்கும். நுனி வாழையிலை போட்டு பதார்த்தங்கள் நிரப்பி அவன் உண்ணும் அழகை அருகிருந்து விசிறியபடி ரசிக்கும்.


"ஏய்யா, உன் பெண்டாட்டியைக் கூட்டியாரலை?"ன்னு பொய்யாய் வையும்.  அனிதாவையும் அழைத்துச் செல்லலாம். ஆனால் வருவாளோ, மாட்டாளோ?  நாகரிகத்தில் ஊறியவள்! பட்டிக்காட்டில் பாதம் பதிக்க மறுத்துவிட்டால்...? எதற்கும் தான் முதலில் சென்று ஆத்தாவைப் பார்த்துவிடுவதுதான் நல்லது.


நினைத்தவுடனேயே செயல்படுத்தத்துவங்கிவிட்டான். ஆத்தாவுக்கு ஒன்பது கஜத்தில் ஒரு சேலை எடுத்துக்கொண்டான். அனிதாவிடம் சொல்லிவிட்டு, அன்றிரவே புறப்பட்டான்.


பயணத்தின் நடுவே சட்டென்று ஒரு பயம் வந்து அடிவயிற்றைக் கவ்வியது. ஒருவேளை ஆத்தா இப்போது உயிரோடு இல்லையென்றால்....? அய்யோ! அது ரொம்பக் கொடுமையாச்சே! சாகுறவரைக்கும் எனக்கு நிம்மதி கிடைக்காதே! கடவுளே! என் ஓட்டாத்தாவை உயிரோடு வச்சிரு! நான் என் காசில் வாங்கிய புதுச்சேலை உடுத்தி அது ஆனந்தக்கண்ணீர் விடுவதை நான் பார்த்து ஆனந்தப்படணும். கடவுளே..." மனம் பிரார்த்தனை செய்யத்துவங்கியது.


மறுநாள் மாலை நான்கு மணிவாக்கில் ஊர் போய்ச் சேர்ந்தான். அரைநாள் பயணம் அலுப்பைத் தந்தாலும், ஆத்தாவைப் பார்க்கப்போகும் உற்சாகம் அச்சோர்வைப் பிரம்பெடுத்து விரட்டியது.


ஓட்டாத்தாவின் வீடு இப்போதும் தனித்தே தெரிந்தது. அது ஒரு பாழடைந்த வீடு போல் களையிழந்து காணப்பட்டது. மற்ற வீடுகள் மச்சுவீடுகளாய் மாறியிருந்தன. புதுப்பணக்காரத்தனம் ஒவ்வொரு வீட்டிலும் பிரதிபலித்தது.


ஓட்டாத்தாவின் திண்ணை ,தட்டி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. இந்தத் திண்ணையில்தானே ஆயிரமாயிரம் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன, அவனுக்கு.


"யாருங்க? என்னா வேணும்?" தடித்த குரலுடன் அதிகாரமாய் வினவியவாறு உள்ளிருந்து ஒரு பெண்மணி வந்தாள்.


"நான்...நான் செல்வம். ஓட்டாத்தாவைப் பாக்கணும், அவங்க இல்லைங்களா?"


'இல்லை' என்று சொல்லிவிடக்கூடாதே என்று மனம் பதைத்தது.


"இருக்....இருக்கு...இருக்காங்க. நீங்க யாரு? எதுக்கு அத...அ....அவுங்கள பாக்கணும்?"


அவள் குரலில் இருந்தது பயமா? பதற்றமா?


செல்வம் விவரம் சொன்னதும் அவள் பதற்றம் நீங்கினாள். ஓட்டாத்தாவைப் பார்க்க உள்ளே அழைத்துச்சென்றாள். அவள் ஆத்தாவுக்கு என்ன உறவென்று என்னவோ புதிர் போட்டாள்.
இரண்டாம் கட்டில் ஒரு இருட்டு அறையின் முன் நின்று தன் கையிலிருந்த சாவியால் கதவைத் திறக்க முயன்றாள்.


"இங்கேயா இருக்காங்க?"


"ம்"


"ஏன் பூட்டி வச்சிருக்கீங்க?" கொஞ்சம் குழப்பத்துடனும், கோபத்துடனும் கேட்டான். அவள் அசரவில்லை.


" பைத்தியத்த என்னங்க தம்பி பண்ணுறது?”


 செல்வம் அதிர்ந்துபோய் நின்றான். என்னது? பைத்தியமா? என் ஓட்டாத்தாவுக்கா?


“பூட்டலைன்னா வெளியில ஓட ஆரம்பிச்சிடுது. அதுவும் எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு அம்மணமா ஓடுது. எத்தன நாள் விரட்டிப் புடிச்சிக் கொண்டுவரது? அதான் எங்கூட்டுக்காரு பூட்டிவச்சிட்டாரு. அதுபாட்டுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுது. காதுகுடுத்து கேக்க முடியல. எதுக்கும்  நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க."


கதவைத் திறந்த நொடி உள்ளேயிருந்து வந்த வீச்சம், வயிற்றைப் புரட்டி வாயில் வரவைத்தது. செல்வத்துக்கு நெஞ்சமே கலங்கியது. ராணிபோல் வலம் வந்தாயே,உனக்கா இந்தக்கதி, ஆத்தா என்று உள்மனம் ஓலமிட்டது.


"பாத்துக்கறதுக்கு யாராவது ஆளை வச்சிகிட்டா என்ன?"
"எத்தனப்பேரு? இது பண்ணுற அட்டகாசத்தப் பாத்துட்டு ஒருத்தி தங்கமாட்டேங்கறா. போனவாரம் கூட பாருங்க, கொஞ்சம் அசந்திட்டேன், இந்தப் பைத்தியம் ஓடிடுச்சி. போனது சும்மா இல்லாம போற வர புள்ளைங்களை எல்லாம் வூட்டுக்கு வா ராசா, வூட்டுக்கு வா ராசான்னு கையப்புடிச்சு இழுத்து ஒரே கலாட்டாவாம். புள்ளைங்க கல்லால அடிக்க ஆரம்பிச்சிடுச்சுங்களாம்.  யாரோ எங்கூட்டுக்காருக்கு தகவல் சொல்லியனுப்பி அவரு வந்து கூப்புட்டாலும் வரமாட்டேங்குதாம். நல்லா நாலு சாத்திதான் வீட்டுக்கு இழுத்துட்டு வந்தாரு. அப்புறம் தான் அடங்குச்சி. இந்தக் கருமாந்திரமெல்லாம் வேணாம், வாய்யா, ஊரைப் பாக்கப் போலாம்னா, மனுஷன் இந்தப் பிச்சைக் காசுக்கு ஆசப்பட்டு என் பிராணனை வாங்குறாரு."


அவள் புலம்பிக்கொண்டேயிருந்தாள். செல்வம் இருட்டில் கூர்ந்து நோக்கினான். அந்த அறையின் ஒரு மூலையில் ஆத்தா படுத்திருப்பது தெரிந்தது. உடல் வற்றி எலும்பும் தோலுமாய் இருந்த ஆத்தாவைப் பார்க்கப் பார்க்க அழுகையும் ஆத்திரமும் வந்தது. கிழிந்த நாரெனக் கிடந்த கிழவியின் அருகில் சென்று அமர்ந்தான்.


தடித்த குரல்காரி, எட்ட நின்றவாறே, "பாத்துங்க, தம்பி, கிட்ட போவாதீங்க!" அலறினாள்.


செல்வம் அவள் பேச்சை அலட்சியப்படுத்தியவாறு , குனிந்து, "ஆத்தா! என்னைத் தெரியுதா? நான் தான் செல்வம், உன் ராசா!" என்றான்.


ஆத்தா கண்களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து பார்த்தது.
"என்ன, ஆத்தா, என்னை ஞாபகமில்லையா?"


ஆத்தா எழமுயன்று தோற்றுச் சரிந்தது. செல்வம் ஆத்தாவைப் பற்றிக்கொண்டான்.


"ராசா!" ஆத்தா அவனை அழைத்தது. அந்தக் குரலில் பழைய பாசம் தெரிந்தது.


"சீலை எடுத்தாரேன்னு சொன்னியே, எடுத்தாந்தியா? என் சீலயப் பாரு, எப்புடிக் கிழிஞ்சிபோய்க் கெடக்குன்னு?"


சேலையின் பொத்தல்களை அவனிடம் காட்டியபடியே அவசரமாய் எழுந்து சுற்றியிருந்த சேலையைக் களையத் துவங்கியது.


"அய்யய்யோ! தம்பீ...வந்துடுங்க, சனியன் ஆரம்பிச்சிடுச்சி.."
செல்வம் பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்தியவாறு பொறுமையாய் தன் கையிலிருந்த பையிலிருந்து புதுப்புடவையைப் பிரித்து ஓட்டாத்தாவின் மேல் போர்த்தினான். ஆத்தா ஒருகணம் திடுக்கிட்டது. புடவையையும், செல்வத்தையும் மாறி மாறி பார்த்தது. பின் அப்படியே அந்தப்புடவையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மடிந்து அமர்ந்து அழத்துவங்கியது.


"ஏய்யா, நீ போன? பாரு, எல்லாரும் என்னயப் போட்டு அடிக்கிறாங்க, ராசா, என்னயும் ஒன்னோடவே கூட்டிட்டுப் போயிடு, அய்யா..."


அதற்குமேல் செல்வத்தால் தாளமுடியவில்லை. அறையைவிட்டு வெளியில் வந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.
அந்தப் பெண்மணி மீண்டும் அறையைப் பூட்டிக்கொண்டாள்.
செல்வம் அவளிடம் இரண்டு ஐநூறு ரூபாய்த்தாள்களை நீட்டவே அவள் வாயெல்லாம் பல்லாகப் பெற்றுக்கொண்டாள்.


"இங்கே பாருங்கம்மா, எனக்காக ஒண்ணு செய்யுங்க. முதலில் அவுங்க இருக்கிற அறையைச் சுத்தம் பண்ணுங்க, அவுங்க நல்லாயிருந்தப்போ, தொழுவத்தைகூட அத்தனைச் சுத்தமா வச்சிருந்தாங்க, அவுங்களோட சொத்தை அனுபவிக்கிறீங்க, ஆனால் அந்த ஜீவனை இவ்வளவு கேவலமா நடத்துறீங்களே, அவுங்க இருக்கப்போறது இன்னும் எத்தனை நாளைக்கோ? இருக்குற வரைக்கும், கொஞ்சம் மனிதாபிமானத்தோட பாத்துக்கோங்க. நாளைக்கு உங்க நிலைமையும் இப்படி ஆனா என்னாகும்னு யோசிங்க."


"ஏய், மீனாச்சி, யாருடி இது?" ஆஜானுபாகுவாய் மீசைக்காரன் ஒருவன், எதிரில் வந்து நின்றான்.


"ஒங்க சின்னம்மாவப் பாக்கதான் தம்பி பட்டணத்துலேந்து வந்திருக்கு."


"பாத்தாச்சில்லே, கெளம்பச்சொல்லு."


அவன் பேச்சில் நாகரிகம் என்பது மருந்துக்கும் இல்லை. சிவப்பேறியிருந்த அவனது கண்களைப் பார்த்தாலே கலக்கமாயிருந்தது. அவனிடம் பேசுவதில் பயனில்லை என்று புரிந்தது.


செல்வம், கனத்த மனதுடன் தெருவில் இறங்கி நடக்கத் துவங்க, அனிதா ஞாபகத்துக்கு வந்தாள்.


"பழங்கதையெல்லாம் பேசாதீங்க, இப்போ என்ன நிலைமை? அதை மட்டும் பாருங்க!”


நல்லவேளை! அவளை அழைத்துவரவில்லை என்று நினைத்துக்கொண்டான்.

23 March 2011

தனித்துவிடப்பட்ட நட்பொன்று...



காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்புபற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு அகோரவிபத்துக்கொப்பான
அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி,
அகாலமரணமடைந்தவர்களின்
ஆவியைப் போன்றே
அலையத்தொடங்கிவிடுகிறது.

ஆரம்ப நாட்களில்…..
திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தைபோல
அழுதுத் திரிந்துகொண்டிருந்த அதற்கு,
அப்படி அந்நியப்படுத்தப்பட்டதற்கான காரணம்
எதுவும்  அறிவிக்கப்படவில்லை,
அந்தர்தியானமான நட்பின் தரப்பிலிருந்து
யாதொரு கருணையும் காட்டப்படவில்லை.

அதன் பழைய நண்பர்கள் என அறியப்பட்டவர்கள்
தற்போது புதிய நண்பர்களாய் அறிமுகப்படுத்திக்கொண்டு
இன்னொரு வட்டத்துக்குள் இணைந்திருக்கலாம்.

பதமவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
நுழைதற்கு வெகு எளிது.
அவ்வியூகத்தை உடைத்து வெளியேறுவதென்பது
அசாதாரண நிகழ்வென்று அறிந்தபோதும்
அவ்வித்தை அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதால்
இதுபோல் இன்னும்பலவற்றில்
இணைந்துவெளியேறக்கூடும்.

பழகிய நட்புகளையிழந்து
பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.

தற்போதெல்லாம்…….
நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று
இலேசான மமதையுடன்
இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
இன்புறத் தொடங்கிவிட்டது அது!

தாமதித்தத் தருணங்கள்



நான் சொல்லவிழையும் வார்த்தைகள் யாவும்
வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
வேறெவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!

விழுந்தழும் குழந்தைக்காய்
நீளும் என் கரங்களை முந்தியபடி
வேறோர் கரம் தொட்டுத்தூக்கித்
தோளோடணைத்துக்கொள்கிறது!

தவறொன்றைச் சாடும்நோக்கில்
தக்க வரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கையில்
வீரியமாய் வந்துவிழுகின்றன
விரோதியின் சாட்டுகள்!

என்னுள் தவங்கிடக்கும் ஏராளக் கருவிதைகள்
என்னைவிட வலுவாய்….  ஆழமாய்……
 வேறெந்தக் கரத்தாலோ விதைக்கப்பட்டு
அறுவடையும் செய்யப்பட்டுவிடுகின்றன!

நாளை கொடுக்கலாமென்று
நான்காய் மடித்துவைக்கப்பட்ட கடிதமொன்று
மீண்டும் பிரிக்கப்படும் தேவையற்றுப் போனது
ஒரு நாளின் வித்தியாசத்தால்!

சற்றே தள்ளிப்போடப்பட்ட நட்பின் சந்திப்பொன்று
சாலைவிபத்தில் மரணித்துப்போனதொரு நிகழ்வே
தாமதித்தத் தருணங்களின்
ஒட்டுமொத்தத் துயரசாட்சியானது!

தவறவிட்டத் தருணங்களையெண்ணி
மனதிலே  மாபெரும் வலிசுமந்து
சுயபுலம்பலை முன்னிறைத்து வீதியில் நடக்கிறேன்,
விரைந்து முந்துகிறது,
முன்பே மனம் பிறழ்ந்தவனின்
வேதனைகப்பிய பிதற்றல்கள்!

ஆயாசத்துடன் ஆகாயம் பார்க்க...
வான்கிழித்துச் சிதறுகின்றன நீர்த்துளிகள்,
அப்போதும் என் விழிகளை முந்தியபடி!

எண்ணத்திறவுகோல்



எத்தனை எடுத்துச் சொல்லியும்
கட்டுப்படுத்த முடியவில்லை
என்  எழுதுகோலை!
வாடிவாசல் திறக்கக் காத்திருக்கும் காளையென
மூவிரல்களுக்குக் கட்டுப்படாது
திமிறி வெளியேற்றுகிறது
உஷ்ணப்பெருமூச்சுகளென எழுத்துக்களை!
என்னுள் ஊடுருவிச் சென்று
எப்படியோ வழிகளை ஆராய்ந்து
என் மனவறைகளைக் கண்டுபிடித்துவிடுகிறது.
எழுதுகோல் திறவுகோலான விந்தைகண்டு
வியந்துநிற்கும் வேளையில் சட்டெனவெளியேறி
கக்கத்தொடங்குகிறது தன் கண்டுபிடிப்புகளை!
பகிர்வதா பதுக்குவதாவென
பலகாலமாய் சிந்தையுள் வளர்ந்திருக்கும்
தயக்கப்புற்று உடைத்து
என் தவங்கலைக்கிறது.
வளைந்தும் நெளிந்தும், சுழன்றும்,
நீண்டும், சரிந்தும், கிடந்தும்
பலவாறாய் தன் ஒற்றைக்காலைக்கொண்டு
வெற்றுத்தாளில் நர்த்தனமாடிப்
பதிக்கிறது தன் நீலச்சுவடுகளை!
சிலசமயங்களில் என் கரமறியாமலேயே
ஏராளக் கதைபேசத் துவங்கிவிடுகிறது,
என்னுதவியின்றி தனித்தியங்கவும்
தயாராகிவிடுமோவென்ற தவிப்போடு நான்...
இப்போதெல்லாம் எப்படி எங்கிருந்து
அதற்குத் தீனி கிடைக்கிறதென்றே தெரியவில்லை,
போதும் போதும் என்று கெஞ்சிடும்
விரல்களின் நோவறியாது
இன்னுங்கொஞ்சம் இன்னுங்கொஞ்சம் என்று
அடம்பிடித்தபடியே தொடர்கிறது
அதன் அட்டகாசத்தை
என் முரட்டுப் பேனாக்குழந்தை.