23 March 2011

தாமதித்தத் தருணங்கள்



நான் சொல்லவிழையும் வார்த்தைகள் யாவும்
வாய்திறப்பதற்கு ஒருநொடி முன்னதாகவே
வேறெவராலோ கச்சிதமாய்க் கையாளப்பட்டு
கைதட்டல்கள் பெற்றுவிடுகின்றன!

விழுந்தழும் குழந்தைக்காய்
நீளும் என் கரங்களை முந்தியபடி
வேறோர் கரம் தொட்டுத்தூக்கித்
தோளோடணைத்துக்கொள்கிறது!

தவறொன்றைச் சாடும்நோக்கில்
தக்க வரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கையில்
வீரியமாய் வந்துவிழுகின்றன
விரோதியின் சாட்டுகள்!

என்னுள் தவங்கிடக்கும் ஏராளக் கருவிதைகள்
என்னைவிட வலுவாய்….  ஆழமாய்……
 வேறெந்தக் கரத்தாலோ விதைக்கப்பட்டு
அறுவடையும் செய்யப்பட்டுவிடுகின்றன!

நாளை கொடுக்கலாமென்று
நான்காய் மடித்துவைக்கப்பட்ட கடிதமொன்று
மீண்டும் பிரிக்கப்படும் தேவையற்றுப் போனது
ஒரு நாளின் வித்தியாசத்தால்!

சற்றே தள்ளிப்போடப்பட்ட நட்பின் சந்திப்பொன்று
சாலைவிபத்தில் மரணித்துப்போனதொரு நிகழ்வே
தாமதித்தத் தருணங்களின்
ஒட்டுமொத்தத் துயரசாட்சியானது!

தவறவிட்டத் தருணங்களையெண்ணி
மனதிலே  மாபெரும் வலிசுமந்து
சுயபுலம்பலை முன்னிறைத்து வீதியில் நடக்கிறேன்,
விரைந்து முந்துகிறது,
முன்பே மனம் பிறழ்ந்தவனின்
வேதனைகப்பிய பிதற்றல்கள்!

ஆயாசத்துடன் ஆகாயம் பார்க்க...
வான்கிழித்துச் சிதறுகின்றன நீர்த்துளிகள்,
அப்போதும் என் விழிகளை முந்தியபடி!

4 comments:

  1. >>என்னுள் தவங்கிடக்கும் ஏராளக் கருவிதைகள்
    என்னைவிட வலுவாய்…. ஆழமாய்……
    வேறெந்தக் கரத்தாலோ விதைக்கப்பட்டு
    அறுவடையும் செய்யப்பட்டுவிடுகின்றன!

    தாமதித்த கணங்கள் ஆபத்தானவை

    ReplyDelete
  2. சி.பி.செந்தில்குமார் said...

    //தாமதித்த கணங்கள் ஆபத்தானவை//

    ஆபத்தானவை மட்டுமல்ல.... ஆழமான வேதனையும் தரக்கூடியவை. கருத்துக்கு நன்றி செந்தில்குமார்.

    ReplyDelete
  3. உண்.மைதான் நாம் இழந்த வினாடிகளில் இழந்தவை ஏராளம் மா

    ReplyDelete
    Replies
    1. புரிதலுடன் கூடிய கருத்துக்கு மிகவும் நன்றி கீதா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.