27 June 2013

அது ஒரு பொற்காலம்



 கல்லும் உளியும் கணீர் கணீரென்று
காதலால் மோதிக் கலந்திருந்ததொரு காலம்.
தேர்ந்த சிற்பிகள் பலரும் சேர்ந்து நிறைந்திருந்த
சிற்பக்கூடத்தின் சீர்மிகுப் பொற்காலம்!

வளையாத கரங்களுக்கும் வசப்பட்டது
கலையெழில் மிக்க சிலையழகு.
கண்ணால் பார்த்துக் கற்றுக்கொண்டன புதுக்கரங்கள்.
கைப்பிடித்துப் பழக்கிவிட்டன முதுக்கரங்கள்.

வேடிக்கை பார்க்கவந்த வெற்றுக்கரங்கள் சிலவும்
கற்றுக்கொண்டன கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையை
கண்டுபிடித்து  வெளிக்கொணரும் கலையை!

நுட்பமும் நுணுக்கமும் மேவிய கரங்கள்
படைத்த சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன,
மூளி, முடமென முடக்கப்பட்டவையும்
புனருத்தாரணம் அளிக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றன.

அயர்ச்சியோ தளர்ச்சியோ….
அளவிலாப் பணிகளின் சுழற்சியோ….
ஒத்திசைத்து ஒலித்திருந்த உளிகள்
அத்தனையும் அதிரடியாய் ஓய்வு கொள்ள...
அரவமற்றக் கூடத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்றன,
ஒன்றிரண்டு உளிகள்!

இவையும் நாளை ஓய்ந்துபோகலாம்,
இயக்கம் முற்றிலும் நின்றுபோகலாம்.

 உளிகளின் ஓசை நின்றுபோனாலும்
உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்...


18 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 7


ஒப்பனை மிகுந்த கட்டிலின்மேலே ஒப்பனையில்லா ஓவியமாய்த் திகழும் தலைவியைக் காண்போம், வாருங்கள். 
 
நெடுநல்வாடைப் பாடல்
மடைமாண் நுண்இழை பொலிய தொடைமாடன்
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகள்தீர்ந்து
ஊட்டுறு பல்மயிர் விரைஇ, வயமான்
வேட்டம் பொறித்து வியன்கண் கானத்து
முல்லைப் பல்போது உறழப் பூரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூநிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய்அணை இட்டு
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூமடி விரிந்த சேக்கை (124-135)

 

பள்ளியறைக் கட்டிலின் மேலே
துல்லியமாய்ப் பொருத்தப்பட்ட
வல்லிய மூட்டுவாய் மூலம்
மெல்லிய நூலிழை தன்னில்
தேர்ந்தெடுத்த முத்துக்களைக்
கோத்தெடுத்து மாலையாக்கி
பார்த்தோர் வியக்கும்வண்ணம்
பல்வரிசையாய் அலங்கரித்து
சாளரமெனவே சரம்சரமாய்ப்
பேரழகுடனே தொங்கவிட்டு....
 

 
புலியின் வரிகளின் வண்ணம் போன்ற
புதுமலர்களாலான பூந்தட்டைப்போன்று
ஒளிரும்  தகடுகளை ஒருசேரக் கொண்டு
வெளிப்புறம் பதித்த கட்டிலின் மேலே
பல்லுயிர்  உருவிய உரோமம் கொண்டு
பல்வண்ண உருவ விரிப்பு நெய்து
வேட்டையாடும் சிங்கம் போ
வீரமிகு செயல்கள் பலவும் பொறித்து…. 
 

காட்டுமுல்லைப் பூக்களோடு
தோட்டமளித்தப் பூக்களையும்
கட்டிலினின்மேலே இறைத்து,
பட்டினும் மெல்லியதாய்
மென்போர்வை மேலே விரித்து
முன்னிலும் சிறப்புறச் செய்திடவே
 

 
பெண் அன்னப் பேடுதன்னை
பேருவகையோடு புணர்ந்ததான
வெண் அன்னச் சேவலுதிர்த்த
மென்சூட்டு இறகுகளடைத்த
மென் திண்டு மெத்தைகளிரண்டு,
பஞ்சிட்ட தலையணையோடு
பஞ்சுபோலும் பூவிதழ்கள்போலே
கஞ்சிட்டு வெளுத்த விரிப்பு,
பஞ்சணை போர்த்தி நின்று
நெஞ்சத்தை அள்ளும்வண்ணம்
மஞ்சத்தை அலங்கரிக்க..... 

ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்அமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நல்நுதல் உலறிய சில்மெல் ஓதி
நெடுநீர் வார்குழை களைந்தென, குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிதுவீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப்  பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர்நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்   (136 – 147)
 
தலைவனைப் பிரிந்து வாடும்
தலைவியின் நிலையைப் பாரும்! 


 
முத்தாரமும் இன்னபிறவும்
கொத்தாகத் தழுவியிருந்து
அழகுபடுத்திய அவள் மார்பகத்தே
தாலியொன்றே தனித்துத் தொங்க..... 

கலைந்துவீழும் கேசமும்
கவனிப்பின்றி காற்றிலலைய.... 


அலங்கார நெடுங்கம்மல்
ஆடல்புரிந்திருந்த செவித்துளையில்
அளவிற்சிறிய தாளுருவியெனும்
குறுங்கம்மல் குடியிருக்க..... 

 


பொலிவுறு பொன்வளை போக்கி
வலம்புரி வளையும் காப்பும்
வடிவுடைக்கரத்தை நிறைத்திருக்க.... 
 


வாளைமீன் வாய்பிளந்தாற்போல
வளைந்திருக்கும் நெளிமோதிரத்தை
முன்னர் அணிந்திருந்த சிவந்த விரலில்
சின்னஞ்சிறிய மோதிரம் இருக்க...... 

பூம்பட்டாடையுடுத்தி பூரித்த இடையின்று
நூலாடை தரித்து நூலாய் நைந்திருக்க.... 
 

வண்ணம் தீட்டா வடிவம் போல்
ஒப்பனையில்லா ஓவியம் போல்
ஓய்ந்துகிடந்தாள் தலைவியவள்
ஒப்பனை மிகுந்த கட்டிலின் மேல்!
***********************************
படங்கள் நன்றி: இணையம்
 
 

14 June 2013

நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 6

அரண்மனையின் உள்ளே ஆட்சி செய்த அற்புத எழிலையும் செல்வச் செழிப்பையும் காண்போம் வாரீர்.
 
நெடுநல்வாடைப் பாடல் ((101- 107)
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந்தும் ஐஅகல் நிறைய நெய்சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் 

 

யவனரின் புதுமைக் கலைநயத்தையும்
யாவினும் மேவிய எழில்நலத்தையும்
யாமம் முழுவதும் எடுத்துரைப்பர்
யவ்வனமிகு பாவைப்பதுமையர்! 
 நளினம் நிறைந்த அவர்தம்
வளமான கையேந்திய விக்குகளில்
அளவோடு நெய்யூற்றி அடர்ந்த திரியேற்றி
நிமிர்ந்தெரியும் பொன்சுடர் யாவும்
அணைந்துபோகுமென அறியுந்தோறும்
எண்ணெயிட்டு எரிய ஊக்கியும்
எங்கெங்கும் இருள் நீக்கியும்
மங்கிய இரவு முழுவதும்
மாளிகையை ஒளிரச்செய்தனர்.
 
ந்தப்புறம் இருக்கும் அந்தப்புரம் தன்னில்
அரசனை அல்லாது அந்நிய ஆடவர் செல்லாது
பலத்தக் காவலிருந்தார், வலுத்தக் காவல்வீரர்!
  
வரை கண்டன்ன தோன்றல, வரைசேர்பு
வில் கிடந்தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி அன்ன விளங்கும் கதைஉரீஇ
மணி கண்டன்ன மாத்திரள் திண்காழ்
செம்பு இயன்றன்ன செய்வுஉறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ
கருவொடு பெயரிய காண்புஇன் நல்இல் (108 – 114)

 

மாமலையென எழுந்தோங்கிய  மாளிகையதனை,
மாமலை சூழ்ந்த வானத்துவில்லென
மாளிகை சூழ்ந்த வண்ணப் பூங்கொடிகள் அசைய... 

பளபளக்கும் வெள்ளிபோல் பலவிடங்கள் பொலிந்தும்
கருகருக்கும் நீலமணிபோல் கரிய தூண்கள் எழுந்தும்
செம்பினாற் செய்தாற்போன்ற பெருஞ்சுவரில் காணும்
கொம்பற்ற கொடியோடு கோடிமலரோவியம் யாவும்
காட்டியதே நல்லதொரு இல்லம் கொண்ட
கவின்மிகு கர்ப்பக்கிரகம் இதுவேயென்று.

 தசநான்கு எய்திய பணைமருள் நோன்காள்
இகல்மீக் கூறும் ஏந்துஎழில் வரிநுதவல்
பொருதுஒழி நாகம் ஒழிஎயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்உளிக் குயின்ற ஈர்இலை இடைஇடுபு
தூங்குஇயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப்
புரை திரண்டிருந்த குடத்த இடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடிஅமைத்து
பேர்அளவு எய்திய பெரும்பெயர் பாண்டில், (115 – 123)

 



 முரசறையும் பெரும் போர்க்களத்தில்
முரசனைய பெருங்கால்களோடும்
ஏற்றமிகு வரி ஓடும் நெற்றியோடும்
போற்றத்தக்க வெற்றி வேட்கையோடும் 

நாற்பதாண்டு பூரணம் பெற்ற
சீற்றமிக்க வாரணம் ஒன்று
வீழ்த்தப்பட்ட காரணம் கொண்டு
வீழ்ந்துவிட்ட கூர்தந்தம் கொண்டு 

நேரிய கலை பயின்ற சிற்பி
கூரிய உளிகொண்டு செதுக்கிய
ஈரிலைகளின் இடையே....

 



இடைபெருத்த கர்ப்பிணியின்
புடைத்தெழுந்த மார்பையொத்து
கடைந்தெடுத்த மரக்குடத்தை
இடையேந்திய எழிலுடனும்
பூண்டின் வலிய தலைபோன்று
வலிமை பூண்ட கால்களுடனும்
பரந்து விரிந்து திகழ்ந்தது
பாண்டில் என்னும் வட்டக்கட்டில்!
**************************************
படங்கள் நன்றி: இணையம்