28 October 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (23)

"என்னம்மா....எல்லாம் ரொம்ப எல்லைமீறிப்போகுது?" 
நாகலட்சுமியின் குரலே மாறியிருந்தது.
"எ...என்....என்னம்மா சொல்றீங்க?"
சுந்தரி புரியாமல் விழித்தாள். சுபா நிலைமை புரியாமல் விக்னேஷ் விட்டுப்போனதற்காக வீறிட்டுக்கொண்டிருந்தாள். அழும் குழந்தையை அமைதிப்படுத்துவதா? ஆங்காரமாய் நிற்கும் அம்மாவை ஆசுவாசப்படுத்துவதா? தவித்தபடி சுந்தரி நின்றிருந்தாள்.
"இங்க பார்! நாங்க இங்க கெளரவமா வாழ்ந்துகிட்டிருக்கோம். தயவுசெஞ்சு அதைக் கெடுத்திடாதே!"
நாகலட்சுமி சொல்லவும் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் சுந்தரி விழித்தாள். அவரை மேற்கொண்டு பேசவிடாமல் சுபாவின் அழுகை அதிகமாக, அவர் விருட்டென்று தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
சுந்தரி பதைபதைப்புடன் அதையும், இதையும் காட்டி குழந்தையின் அமளியை அடக்கினாள். அவள் நிலைக்கு வந்ததும், பாலைக் கொடுத்து தொட்டிலில் இட்டு தூங்கச் செய்துவிட்டுதிறந்திருந்த அறைவாசலில் நின்று, பதைக்கும் மனத்துடன் அம்மா!" என்றாள்.
"நீ செய்யறது உனக்கே நல்லாயிருக்கா? தெருவில என்ன கொஞ்சலும், குலாவலும்? அவன் கல்யாணம் ஆகவேண்டிய பையன். அது உனக்கு ஞாபகமிருக்கா? என்னதான் நண்பனோட மனைவின்னு சொன்னாலும் பாக்கிறவங்க நம்ப வேண்டாமா? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. புரியுதா?"
விஷம் தோய்த்த வார்த்தைகள் புறப்பட்டு வந்தன, அவர் வாயிலிருந்து.
சுந்தரிக்கு அவர் சொல்வதன் முழுப்பொருளும் புரிந்தது. அவள் எதிர்பார்த்ததுதான்.ஒரு தாய்க்கு இருக்கவேண்டிய நியாயமான கவலைதான் அது என்று நினைத்துக்கொண்டாள். எவ்வளவுதான் தான் எச்சரிக்கையாய் இருந்தாலும், சுபாக்குட்டி அதைக் கெடுத்துவிடுகிறாளே!
நாகலட்சுமி என்ன நினைக்கிறார் என்பது புரியாவிடினும், அவரது பயம் புரிந்தது. பயத்துக்கான காரணமும் புரிந்தது. அவரது அர்த்தமற்ற பயத்தைப் போக்குவதே தன் முதல் வேலை என்று அறிந்தாள்.
"அம்மா! நீங்க வயசிலயும், அனுபவத்திலயும் பெரியவங்க, உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியணும்னு இல்ல, விக்னேஷ் அண்ணனை மாதிரி ஒரு புள்ளயப் பெத்ததுக்கு நீங்க ரொம்ப பெருமப்படணும். அவரை நான் என் அண்ணனாதான் நினைக்கிறேன். அவரும் என்னை தங்கச்சியாதான் நினைக்கிறாரு. இதைத் தவிர எங்க ரெண்டுபேர் மனசிலும் வேற எந்த எண்ணமும் இல்ல. என்னை நம்புங்கம்மா!"
நாகலட்சுமிக்கு சுந்தரியின்பால் நம்பிக்கை எழவில்லை. ஆளை அசத்தும் ஆணழகனான பிரபுவின் மனதையே கவர்ந்தவள், அவனுக்கும் ஒருபடி கீழே இருக்கும் தன் மகனின் மனதில் இடம்பிடிக்க எத்தனை நாளாகப்போகிறது. கூடவே குழந்தை வேறு. இத்தனைக் காலமாய் தாயின் பாசத்தைத் தவிர வேறு உறவை அறியாதவனுக்கு பிரபு நண்பனாய் வாய்த்தான்.
பிரபுவுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த நட்பு, பல சமயங்களில் நாகலட்சுமியை விக்னேஷிடமிருந்து விலக்கிவைத்திருக்கிறது. இப்போது, குழந்தையின் கள்ளமற்ற அன்பில் திளைத்துக்கிடக்கிறான். இதை இப்படியே வளரச்செய்தால் குழந்தையைக் காரணம் காட்டி சுந்தரியை நிரந்தரமாய் இங்கேயே தங்கவைத்துவிடுவான். அம்மாவிடம் செய்த சத்தியத்தை மீறமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே, திருமணம் செய்துகொள்ளாமல் இவளுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டால்.....
"இங்கே பார்! நீ என்ன சொன்னாலும் சரி! என் மகன் விஷயத்தில் நான் கடுமையாய்தான் நடந்துக்குவேன். நீ இப்படி அவனுக்கு முன்னால நடமாடுறது எனக்குப் பிடிக்கல. சொல்லப்போனா....நீ இந்த வீட்டுக்கு வந்ததே பிடிக்கலை. அவன் இப்பவெல்லாம் என் பேச்சையே கேக்கறதில்ல. ஒப்புக்கு என்கிட்ட அனுமதி கேட்டான். நானும் என் மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்காக உன்னை வரச்சொன்னேன். உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணணும்னு சொல்லிட்டிருக்கான். அவனுக்கு வேலை வைக்காம நீயா தேடிகிட்டாலும் எனக்கு சந்தோஷம்தான். தயவுசெஞ்சி அவனை விட்டுடு. உனக்கு புண்ணியமாப் போகட்டும்."
நாகலட்சுமிக்கென சுந்தரி தன் உள்ளத்தில் உருவாக்கி வைத்திருந்த கோயிலை அவரது கடும் வார்த்தைகளே கடப்பாரை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கின.ச்சே! இவரும் ஒரு தாயா? தன்னை நம்பவேண்டாம், தன் மகனை நம்பலாம் அல்லவா? விக்னேஷ் அண்ணன் இவர்மேல் எத்தனை மரியாதையும், மதிப்பும், பாசமும் வைத்திருக்கிறார்! அவருக்குத் தெரிந்தால் என்னாகும்? தன் தாயின் போக்கு அவருக்குத் தெரிந்திருக்கலாம், அதனால்தான் இங்கு வருவதற்கு முன் என்னிடம் அப்படி யொரு எச்சரிக்கை செய்தாரோ?
சுந்தரி தன் நிலையை எண்ணி வேதனையும், விரக்தியும் அடைந்தாள். தனக்கு வேறொரு கல்யாணம் செய்யப்போவதாய் அண்ணன் சொன்னாராமே! உண்மைதானா? அது எப்படி என் சம்மதமில்லாமல் முடியும்? என் கணவர்தானே என்னை விட்டுப் பிரிந்தார்? நான் அவரை விட்டு எப்போது பிரிந்தேன்? என்னை இன்றும் உயிருடன் வைத்திருப்பவை அவரது நினைவுகளும், இந்தக் குழந்தையும்தானே! என் கனவெல்லாம் இந்தக் குழந்தையை நல்லமுறையில் வளர்த்து நாலுபேர் போற்ற ஆளாக்குவதுதானே தவிர இன்னுமொரு கல்யாணம் செய்துகொண்டு சுகப்படுவதிலா இருக்கிறது?
அப்படியே என் பாதுகாப்புக்காகவும், குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் செய்வதாக இருந்தாலும் அது எனக்கு எப்படி இன்பத்தைத் தரும்? என் குற்ற உணர்வே என்னைக் கொன்றுவிடாதா? இப்படியொரு எண்ணம் அண்ணனுக்கு இருப்பது எனக்குத் தெரியாதே! அவரிடம் இதுபற்றிக் கட்டாயமாக பேசவேண்டும். மனதுக்குள் முடிவெடுத்தவளுக்கு அப்போதுதான் நிகழ்காலம் நினைவுக்கு வந்தது.
தன் பிரச்சனை கிடக்கட்டும், முதலில் அண்ணனுக்குப் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி பித்துப்பிடித்தவர் மாதிரி இந்தம்மா பேசுவதைக் கேட்டால் எனக்கே நெஞ்சம் படபடக்கிறதே! விக்னேஷ் அண்ணன் கேட்கநேர்ந்தால் எத்தனை துயரப்படுவார்? அவர் காதுகளில் இதுபோன்ற நாராசமான வார்த்தைகள், அதுவும் அவர் தெய்வமாய் மதிக்கும் தாயின் வாயிலிருந்து வந்து விழவே கூடாது.
தகிக்கும் நெருப்பை அணைக்கும் குளிர்நீர் போல் தன்னால் இவரது கொதிப்பை அடக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? ஏன் முடியாது? அன்பு வார்த்தைகளைப் போல ஒரு குளிர்நீர் உண்டா, எதிராளியின் கொந்தளிக்கும் கோபத்தை கட்டுப்படுத்த?
சுந்தரி தன்னைப் பற்றிய உணர்வுகளைத் துறந்தாள். தன் எதிரில் நிற்கும் நாகலட்சுமியின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுக்க விழைந்தாள். மிகவும் தண்மையாய் அவரிடம் பேசத்தொடங்கினாள்.
"அம்மா! நான் உங்களை அம்மான்னு கூப்புடறது அப்படியே சத்தியமான வார்த்தை. அதை நீங்க முழுசா நம்பலாம். நீங்க எந்தக்கடவுள்மேல சத்தியம் செய்யச்சொன்னாலும் செய்யறேன். உங்களுக்கும், அண்ணனுக்கும் நடுவில குழப்பம் பண்ண வந்தவளா என்ன நினைக்காதீங்கம்மா! எனக்கு அடைக்கலம் குடுத்த உங்க மனசு நோகுறமாதிரி நான் என்னைக்கும் நடந்துக்கமாட்டேன், இது சத்தியம்!"
நாகலட்சுமிக்கு சத்தியத்தின்மேலிருக்கும் நம்பிக்கையை அறிந்த சுந்தரி, தானும் அவர் வழியிலேயே சென்று அவரை தன் வழிக்குக் கொண்டுவர விரும்பினாள். அதில் ஓரளவு பலனும் கண்டாள்.
குழம்பிக்கிடந்த நாகலட்சுமிக்கு சுந்தரியின் பேச்சு ஆறுதலைத் தந்தது. கொஞ்சநஞ்சமிருந்த சந்தேகத்தையும் சுந்தரி செய்த சத்தியம் தகர்த்தது. நாகலட்சுமி அமைதியாய் இருப்பதன்மூலம், தன் பேச்சுக்கு செவிமடுக்கிறார் என்பது புரிய, சுந்தரி மேலும் தொடர்ந்தாள்.
"அம்மா! நீங்க என்னை உங்க மகளா நினைக்கவேண்டாம். வேலைக்காரியாவே நினைச்சுக்கங்க! நான் இங்க இருக்கிறவரைக்கும் உங்களுக்கு உழைச்சு, என் நன்றிக்கடன தீர்த்துக்கறேன். அண்ணன் மேல அநாவசியமா சந்தேகப்படாதீங்கம்மா, அவரு மாதிரியானவங்க இல்லைனா....என் மாதிரி அநாதைகளோட கதி என்னவாகும்னு நினைச்சுப்பாருங்கம்மா.....அண்ணன் ஏழேழு தலைமுறைக்கும் புண்ணியம் சேத்துகிட்டாரு..."
சுந்தரி நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். எப்படியாவது நாகலட்சுமியின் மனநிலையை மாற்றிவிடவேண்டும் என்பதைக் குறியாய்க் கொண்டு பேசினாலும், உண்மையிலேயே விக்னேஷ்மீது அவள் வைத்திருந்த நன்மதிப்பை வெளிப்படுத்த இதைவிட சந்தர்ப்பம் வாய்க்காது என்பதுபோல் பேசினாள்.
நாகலட்சுமியின் மனதில் இருந்த இறுக்கம் சற்றே தளரத் தொடங்கியது. சுந்தரியின் தெளிவான பேச்சு அவரை அசரவைத்தது. தான் மிரட்டினால் பயந்துகொண்டு பணிந்துநடப்பாள் என்று எதிர்பார்த்ததுபோக, துணிவுடன் அவருக்கே அவள் எடுத்துச் சொல்கிறாள். இதற்குமேலும் அவளை நம்பாததுபோல் நடிப்பது சிரமம் என்று உணர்ந்தார்.
இத்தனைத் துயரத்திலும், அவள் தெளிந்த மனநிலையில் இருப்பதோடு, அடுத்தவரைத் தெளிவிப்பதிலும் கெட்டிக்காரியாய் விளங்குகிறாள். இவளை முழுமையாய் நம்பலாம்.
நாகலட்சுமி இளகிய குரலில் பேசத்தொடங்கினார்.
"சுந்தரி! நான் கொடுமைக்காரி இல்லைம்மா. எனக்கு இந்த உலகத்தில என் மகனை விட்டால் வேற யாருமில்ல. அவனுக்கொரு கல்யாணம் செய்துபார்க்கக் கூட பயப்படுறேன்னா....எந்த அளவுக்கு அவன்மேல பாசம் வச்சிருப்பேன்னு நினைச்சுப்பாரு. நான் சாகுறவரைக்கும் என் மகனோட நிழலிலேயே வாழணும்னு ஆசைப்படறேன். அது தப்பா? சொல்லும்மா!"
சுந்தரிக்கு அவரின் நிலை பரிதாபத்தையே தந்தது. முழுமையான சுயநலம் அவர்பேச்சில் பிரதிபலித்தது. மகனுக்குத் திருமணம் செய்து மருமகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் வாழும் இன்பத்தைத் தொலைத்துவிட்டு மகன் தனிமரமாய் வாழ்வதில் என்ன இன்பத்தைக் காண்பார்? இவர் மனதை கொஞ்சம் கொஞ்சமாய்தான் மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
"அம்மா! நீங்க சொல்றதில் எந்தத் தப்பும் இல்ல...அதனால்தான் சொல்றேன், உங்க ஆசைக்கு குறுக்கவந்தவளா என்னை நினைக்காதீங்க. குழந்தைக்கு புரியல. அதனால் கொஞ்சம் அதிகமா உரிமை எடுத்துக்கறா. விவரம் தெரிஞ்சதும் விலகிடுவா. நானும் குழந்தையும் தற்காலிகமாத் தங்கவந்தவங்கதான். நிரந்தரமாத் தங்க வேற ஒருத்தி வருவா.உங்களுக்கும் அண்ணனுக்கும் பிடிச்சமாதிரி ஒரு தங்கமான பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வருவா...அதுவரைக்கும் நீங்க எதைப்பத்தியும் கவலப்படாம நிம்மதியா இருங்க!"
நாகலட்சுமிக்கு இதமாய் இதயத்தை யாரோ வருடுவதுபோல் இருந்தது. இப்படியான ஆறுதல் மொழிகளை முன்பெல்லாம் விக்னேஷ்தான் சொல்லிக்கொண்டிருந்தான். சமீபகாலமாய் அவனும் தன்னைவிட்டு விலகிப்போவதாய்த் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன்பின் இப்போது சுந்தரியின் அன்பான பேச்சு ஆறுதலைத் தந்தது.
"சுந்தரி! என்னத் தவறா நினைச்சுக்காதேம்மா! நான் பேசினது எதுவும் விக்னேஷுக்கு  தெரியவேணாம்மா!"
அவர் கெஞ்சுவதுபோல் கேட்க, சுந்தரி ஆதரவாய் அவர் கைகளைப் பற்றினாள்.
"அம்மா! நீங்க அநாவசியமா கவலப்பட்டுதான் உங்க உடம்பக் கெடுத்துக்கறீங்க!"
நாகலட்சுமியின் முகத்தில் முதன்முறையாக புன்னகை அரும்பிற்று. பிரபுவுக்கு சுந்தரிமேல் ஈர்ப்பு ஏற்பட்டதன் காரணம் நாகலட்சுமிக்கு இப்போது புரிந்தது. நல்ல பெண்தான், சந்தேகமே இல்லை.
தொடரும்...
*******************************************************************
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் 
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

மு. உரை:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
---------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

19 October 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (22)

சுந்தரி, நைட் நல்லா தூங்கினியாம்மா? பாப்பா தூங்கினாளா?" விக்னேஷின் அன்பும் அக்கறையும் அவனது இதமான வார்த்தைகளில் வழிந்தது.
"நல்லா தூங்கினோம், அண்ணே, காவல் தெய்வம் மாதிரி நீங்களும், அம்மாவும் இருக்கும்போது எனக்கு என்னண்ணே பயம்?"
"பயத்துக்காக கேக்கலைம்மா, புது இடம் பாரு, அதனால் கேட்டேன். சரி, நீ முதல்ல இவளைக் கவனி! எப்ப அழலாம்னு பாக்கிறா!"
"சரிண்ணே!"
இருவரின் உரையாடலையும் கூர்ந்து கவனித்துக்கொன்டிருந்த நாகலட்சுமிக்கு விக்னேஷின் மேல் கோபம் வந்தது.
 'என்னவோ ரெண்டுபேரும் ஒட்டிப் பிறந்த ரெட்டையர் மாதிரியில்ல இழையுறாங்க? அவள் என்னடான்னா வாய்க்கு வாய் அண்ணே...அண்ணேனு உருகுறா...இவன் என்னடான்னா சுந்தரிம்மா, வாம்மா, போம்மான்னு பாசத்தப் புழியுறான்எனக்கே பாசமலர் படம் காட்டுறாங்களே ரெண்டுபேரும்?' நாகலட்சுமி உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருந்தார்.
சுந்தரி வந்தநாள் முதலாய் நாகலட்சுமி அவளிடம் சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவளை எந்த வேலையும் செய்யவிடவில்லை. சுந்தரியை வீட்டுக்கு அழைத்துவரச் சொல்லிவிட்டாலும், அவள் வரவை முழுமனதுடன் அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அதனால் சுந்தரியை உதாசீனப்படுத்துவதன்மூலம் அவள் மனதை நோகடிப்பதில் வெற்றி கண்டார்.
எந்நேரமும் வேலை செய்தே பழக்கப்பட்டவளுக்கு, இன்னொருவர் வீட்டில் எந்தவேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடுவது பெரும் இழிவைத் தரும் என்று உணர்ந்தபடியால் அக்குற்ற உணர்வின்மூலமே அவளைப் பழிவாங்க முடிவெடுத்தவர் போல் நடந்துகொண்டார். அதையும் நேரடியாய்ச் செய்யாமல் அவளுக்கு ஏதோ உபகாரம் செய்வதுபோலவே செய்தார். இதன் மூலம் ஒரே நேரத்தில் சுந்தரியின் வேதனையையும், விக்னேஷின் நன்மதிப்பையும் பெற்றுவிடலாம் என்று நினைத்தார்.
ஆனால் விக்னேஷ் அம்மாவின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனாகையால் அம்மாவின் இந்த செயலை சுந்தரி முன்னிலையிலேயே கண்டித்தான்.
"அம்மா! சுந்தரிகிட்ட சொன்னா செய்யமாட்டாளா? நீங்க எதுக்கு இப்படி கஷ்டப்படுறீங்க?"
"அவ நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிப்பா! அவகிட்ட நான் எப்படி வேலை வாங்கிறது?"
"அம்மா, நீங்க அப்படியெல்லாம் நினைக்காதீங்க, நீங்க முடியாம வேலை செய்யறதைப் பாத்து அவ தவிக்கிறது எனக்கு நல்லாப் புரியுது. அவளையும் உங்களோட கூடமாட வேலை செய்யவிடுங்க!"
அதற்குப் பிறகு நாகலட்சுமி ஒன்றும் மறுக்கவில்லை. சுந்தரி சற்று துணிவுடன் நாகலட்சுமியிடம் அடுத்து என்னென்ன செய்யவேண்டுமென்று கேட்டுக் கேட்டு செய்தாள். இதில் நாகலட்சுமிக்கு ஒரு வசதியும் இருந்தது. சுந்தரியிடம் தானாய் வீட்டுவேலைகளை ஒப்படைப்பதைவிடவும், மகனின் விருப்பத்தின் பேரில் ஒப்படைத்தால், தனக்கு பழிச்சொல் உண்டாகாது என்று நினைத்தார். 
சுந்தரிக்கு நாகலட்சுமியின் மனவோட்டம் எதுவும் புரியாமல் இல்லை. அதனாலேயே விக்னேஷுக்கும் அவருக்குமான உறவின் நடுவில் தான் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாலும், சுபாவின் குறுக்கீட்டைத் தடுக்க முடியவில்லை. சுபா எவ்வளவு தூக்கத்திலிருந்தாலும், விக்னேஷின் குரல் கேட்டதும் விழித்துக்கொண்டு அவனைத் தேடுவதையும், அவனைப் பார்த்தநொடியே ஆவலாய் கைகளை விரித்துக்கொண்டு அவனிடம் பாய்வதையும் எத்தனை முயன்றும் சுந்தரியால் தடுக்க முடியவில்லை.
ஒருவாரம் ஓடியிருக்கும். சனி, ஞாயிறு முழுவதும் குழந்தையுடன் கொஞ்சிக்கழித்துவிட்டு திங்களன்று அலுவலகம் செல்ல விக்னேஷ் தயாரானபோது சுபா விழித்துக்கொண்டாள். விக்னேஷ் அம்மாவிடமும், சுந்தரியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் தருவாயில் அவனைப் பார்த்துவிட்டு கைகால்களை உதைத்துக்கொண்டு அவனிடம் தாவ முற்பட்டாள்.
"ஏய், சும்மா இரு, மாமாவுக்கு நேரமாச்சு....இப்ப உன்னய தூக்கமாட்டாங்க!" சுந்தரி குழந்தையை செல்லமாய் அதட்டினாள்.
சுபா அழத்துவங்க, அவளைத் தவிர்த்துவிட்டுப் போக மனமில்லாமல்,"குடும்மா! அவளைக் கொஞ்சநேரம் வச்சிட்டுப்போறேன், இல்லைன்னா எனக்கும் அங்க வேலை ஓடாது!" என்று கூறிக்கொண்டே இருகைகளாலும் அவளை வாங்கி தன் முகத்துக்கு எதிரே பிடித்துக் கொஞ்சினான்.
சுபா, அழுகையை நிறுத்திவிட்டு துள்ளலுடன் அவன் வயிற்றில் தன் கால்களை உதைத்து மேலெழும்பிச் சிரித்தாள்.
"வாலுக்குட்டி...இரு...இரு...உன்னய சாயங்காலம் வந்து கவனிச்சுக்கறேன்!" முத்தமிட்டு அவளை சுந்தரியிடம் ஒப்படைக்க முயன்றான்.
சுபாவோ, வீலென்று கத்திக்கொண்டு விக்னேஷின் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டு விட மறுக்க, அவள் கையிலிருந்து சட்டையை விடுவிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது, இருவருக்கும்.
"ஐயோ...உங்க சட்டையெல்லாம் கசங்கிடுச்சேண்ணே...."
சுந்தரி பதறினாள்.
"பரவாயில்ல....விடு...முதல்ல குழந்தையப் பாரு! எப்படி அழறா பாரு! அவளை அழவிடக்கூடாதுன்னு நினைச்சேன். நல்லா அழவிட்டுட்டுப் போறேன்!" விக்னேஷ் வருத்தத்துடன் விடைபெற்றுச் சென்றான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாகலட்சுமிக்கு சொல்லொணாக் கோபம் வந்தது. கட்டிய பெண்டாட்டி போல் இவள் வாசல்வரை போய் வழியனுப்புகிறாள், அவன் பெற்ற பிள்ளைபோல் குழந்தையை அழவிட மனசில்லாமல் போகிறான். என்ன கூத்து இது?
அக்கம்பக்கத்தில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் துளியாவது இருக்கிறதா இருவருக்கும்? கணவனை இழந்து மூன்றுமாதம்தான் ஆகிறது. அந்தக் கவலை கொஞ்சமாவது தெரிகிறதா இவள் பேச்சிலும், நடவடிக்கையிலும்? இப்படிதான் பிரபுவையும் மயக்கியிருந்திருப்பாளோ, இந்தக் கைகாரி?
ஏதேது? இருவரும் அண்ணன் தங்கை போல்தான் பழகுகிறார்கள் என்று நினைத்து சற்றே நிம்மதி அடைந்தால் அதையே சாதகமாய்க்கொண்டு இருவரும் வேறு உறவைத் துவக்கிவிடுவார்கள் போலிருக்கிறதே! ம்ஹும்! இதை இப்படியே விட்டுவிடக்கூடாது.
சுந்தரியை ஆரம்பத்திலேயே  கண்டித்து வைக்கவேண்டும். இல்லையென்றால்.....நிலைமை விபரீதமாகிவிடும். விக்னேஷ் இல்லாதபோது இவளிடம் பேசுவதுதான் சரி. 
விக்னேஷை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவளின் எதிரில் அனல் பறக்கும் விழிகளுடன் நின்றிருந்த நாகலட்சுமியைப் பார்த்ததும் சுந்தரியின் அடிவயிறு கலங்கியது.
*****************************************************************************
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

மு. உரை:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
--------------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு


14 October 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (21)


நாகலட்சுமி சம்மதித்துவிட்டார் என்பது வித்யாவுக்கு பெரும் ஆச்சரியத்தைத்தந்தபோதும், சுந்தரிக்கு இதில் வியப்பேதும் இல்லை. அவளைப் பொறுத்தவரை நாகலட்சுமியம்மாள் ஒரு தெய்வத்துக்கு ஒப்பானவர். அவர் தன்னை வீட்டுக்கு அழைத்திருப்பது விந்தைக்குரிய செயல் அல்லவென்றே எண்ணினாள்.

வித்யாவும், விக்னேஷும் அதைச் சொல்லிச் சொல்லி மாய்வதன் ரகசியம் அவளுக்குப் புரியவே இல்லை. பிரபு சுந்தரிமேல் நாகலட்சுமிக்கு அவ்வளவாக நல்லெண்ணம் கிடையாது என்பதை அவளறியாமல் வைத்திருந்தனர், வித்யாவும், விக்னேஷும். அதனால் முன்கூட்டியே அதைப் பற்றி சொல்லி அவள் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆனாலும், விக்னேஷுக்கு உள்ளூர அம்மாவைப் பற்றிய பயம் இருந்துகொண்டேதான் இருந்தது. அம்மா சந்தடிசாக்கில் சுந்தரியை ஏதாவது சொல்லிக் காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்தான். சுந்தரியிடம் அம்மாவின் தற்போதைய மனநிலையை லேசாக கோடிட்டுக் காட்டுவது என்ற முடிவுக்கு வந்தான்.

"சுந்தரி, எங்க அம்மா முன்னாடி மாதிரி இப்ப இல்ல..அவங்களுக்கு உடம்பு முடியாமப் போனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் கொஞ்சம் கடுகடுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதனால் உங்கிட்ட அப்படி ஏதாவது பேசினா மனசில வச்சுக்காதம்மா....உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்!"

"என்னங்க, அண்ணே....இப்படியெல்லாம் பேசுறீங்க, அவங்க உங்களுக்கு மட்டும் அம்மா இல்ல, எனக்கும்தான், கவலைய விடுங்க, அவங்கள நான் நல்லா பாத்துக்கறேன்!"

வித்யாதான் மிகவும் கவலைப்பட்டாள். சுந்தரியையும், சுபாவையும் இனிமேல் இதுபோல் அடிக்கடி பார்க்கமுடியாது என்பதும், அம்மா, பிள்ளை இருவருக்கிடையில் முதன்முதலாய் ஒரு வேற்றாளாய், பரிதாபத்துக்குரிய சுந்தரி நுழைவதால் என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்ற கவலையும் அவளை மிகவும் படுத்தி எடுத்தன.

தன் கழுத்தில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மெல்லிய தங்கச் சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் அணிவித்தாள்.

"எதுக்குக்கா, இதெல்லாம்? உங்க அன்பு ஒண்ணு போதுமே, என் பொண்ணுக்கு!"

"சுபாக்குட்டிய இனிமேல் எப்ப பார்க்கப்போறேன்னு தெரியலையே!"

விக்னேஷ் சட்டென்று  சொன்னான்.

வித்யா...நீயும் சுந்தரியோட எங்க வீட்டுக்கு வாயேன். பிரபுவோட ஆபிஸில் வேலை செய்யறதை வச்சு சுந்தரிக்குப் பழக்கம்னு உன்னை அறிமுகப்படுத்துறேன்." 


"விக்கி, சீரியஸாதான் சொல்றீங்களா? ஏதாவது பிரச்சனையாயிடப்போகுது..."

"இதைவிட்டா உன்னை அம்மாகிட்ட அறிமுகப்படுத்த வேற சந்தர்ப்பம் கிடைக்காதுப்பா. அதுவுமில்லாம, சுந்தரியை சாக்கா வச்சி நீ அடிக்கடி வீட்டுக்கு வரலாம். அம்மாவுக்கும் உனக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்!"

"திட்டமெல்லாம் நல்லாதான் இருக்கு! ஆனா பயமா இருக்கே! முதலுக்கே மோசமா சுந்தரிக்கு பிரச்சனை வந்திடப்போகுது!"

"வாங்களேன் அக்கா! அம்மா ரொம்ப நல்லவங்க, நீங்க அவங்களைப் பாத்தீங்கன்னா உங்களுக்கு ரொம்பப் புடிச்சிடும்."

சுந்தரி தன் பங்குக்கு அழைக்க, வித்யாவும் விக்னேஷும் சிரித்தனர். அவர்கள் சிரிப்பின் காரணம் புரியாமல் சுந்தரி விழித்தாள்.

'எனக்கு அவங்களைப் பிடிக்கிறது முக்கியமில்ல, அவங்களுக்கு என்னைப் பிடிக்கணும். அதுதான் முக்கியம்' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள், வித்யா.

"சுந்தரி, முதல்ல உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்., தயவுசெஞ்சு எங்க அம்மாகிட்ட நாங்க ரெண்டுபேரும் காதலிக்கிற விஷயத்தை சொல்லிடாதம்மா!"

"ஏண்ணே...அவங்க ரொம்ப நல்லவங்கதான, சொன்னா கோவிச்சுப்பாங்களா, என்ன?"

"கோவிச்சுப்பாங்களா, வீட்டையே ரெண்டாக்கிடுவாங்க! அது மட்டுமில்ல....இந்த ஜென்மத்துக்கு எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது!"

"ஏண்ணே அப்புடி....?"

அப்பாவியாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. இவளிடம் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் வித்யா சொல்லிவிட்டாள்.

"ம்? அவர் அவங்க அம்மா சொல்ற பொண்ணைத் தான் கட்டுவேன்னு சத்தியம் பண்ணி குடுத்திருக்கிறாராம். அதைச் சொல்லாம, சும்மா பூசி மெழுகறார்."

"அப்புடியாண்ணே? அதான் எங்க வீட்டுக்காரரும் அப்பவே சொன்னாரா?"

"பிரபுவா? என்ன சொன்னான்?"

"உங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னு அவரிட்ட சொன்னேன். தன் புள்ளைக்கு பிரச்சனை வராதவரைக்கும் எல்லா அம்மாவும் நல்லவங்கதான்னு ஒரு மாதிரி குதர்க்கமா சொன்னாரு! அப்ப புரியல, இப்ப புரியுது. சத்தியமே வாங்கிட்டாங்களா?"

சுந்தரிக்கு நாகலட்சுமியின் சமயோசிதம் கண்டு முதன்முதலாய் அவர்மேல் மிதமான பயம் வந்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சுந்தரி புறப்படத் தயாரானாள். தானும், பிரபுவும் வாழ்ந்த அந்தவீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் கலங்கினாள். தன்னை ஒரு  மகளினும் மேலாக பார்த்துக்கொண்ட கோமதியம்மாவிடம், அவர் கணவரிடமும் தனக்கும், குழந்தைக்கும் ஆசி பெற்றுக்கொண்டாள்.

எங்கிருந்தாலும், நீயும், குழந்தையும் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்தினர். வித்யாவும் வந்திருந்து இடமாற்றத்துக்கான ஏற்பாடுகள் செய்ய உதவினாள். சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு காரில் மூவரும் குழந்தையுடன் புறப்பட்டனர்.

தான் சுந்தரியை அழைத்துவரவிருப்பதை மனோகரி அக்காவுக்கு விக்னேஷ் தெரிவித்திருந்ததால் அவள் வாசலிலேயே காத்திருந்தாள். சுந்தரி, குழந்தையுடன் இறங்கியதும், அவளையும், வித்யாவையும் வரவேற்றாள்.

போனவருஷம் தம்பதி சமேதரராய் இவளுக்கு ஆரத்தி எடுத்தது நினைவுக்கு வர, மனோகரி அழுதுவிட்டாள். சுந்தரிதான் அவளைத் தேற்றினாள். விக்னேஷ் கண்களால் அம்மாவைத் தேடினான்.நாகலட்சுமி வெளியில் வரவே இல்லை.

"காலையில இருந்து அம்மாவுக்கு ஒரே தலைவலி, அதான் மாத்திரை போட்டுகிட்டு படுத்திருக்காங்க!"

மனோகரி சொல்லியவாறே குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு சுந்தரியுடன் நாகலட்சுமியின் அறைக்குச் சென்றாள்.

விக்னேஷும் வித்யாவும் அவர்கள் பின்னால் சென்றனர்.

நாகலட்சுமி கண்களை மூடிப் படுத்திருந்தார். மனோகரிதான் எழுப்பினாள்,

"விக்கியம்மா! உங்க வீட்டுக்கு குட்டி விருந்தாளி வந்திருக்காங்க, எழுந்திருச்சிப் பாருங்க!"

நாகலட்சுமி எழுந்துபார்க்க, தன்னைச் சுற்றி அனைவரும் கூடியிருப்பதைப் பார்த்து என்னவோ போலாயிற்று. குழந்தையைப் பார்ப்பதைவிடவும், சுந்தரியிடம் துக்கம் விசாரிப்பதைவிடவும், சுந்தரியுடன் நிற்கும் பெண்ணை யாரென்று தெரிந்துகொள்ளும் ஆவலே மிகுந்திருந்தது.

இருப்பினும் ஆவலை அடக்கியவராய், "வாம்மா, சுந்தரி, எப்படியிருக்கே? பிரபு இப்படி அல்பாயுசிலே போவான்னு யாருமே எதிர்பார்க்கலை. அநியாயமா பெத்தவங்க சாபத்துக்கு ஆளாகிட்டானே!" என்றார்.

விக்னேஷுக்கு அம்மாவின்மேல் கோபம் வந்தது. இப்படியா எடுத்த எடுப்பில் பேசுவார்? ஆறுதல் சொல்லாவிட்டாலும், அவள் மனம் நோகப் பேசாமலாவது இருக்கலாம் இல்லையா?

சுந்தரி, குழந்தையை ஆசிர்வதிக்குமாறு வேண்ட,

"என்னன்னு ஆசிர்வதிக்கிறது? என் ஆசிர்வாதம்தான் பலிக்கமாட்டேங்குதே!" என்றார்.

மனோகரி, வித்யா, விக்னேஷ் அனைவரும், நாகலட்சுமியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தனர்.

சுந்தரி இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாள். எப்போது, அவர் தன் பிள்ளையிடம் சத்தியம் வாங்கினார் என்று அறிந்தாளோ, அப்போதே அவருக்கு காதல் கல்யாணத்தின் மீதிருந்த வெறுப்பை அறிந்திருந்தாள். எனினும் வந்த நிமிடமே இப்படிப் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

இதுவரை விக்னேஷின் மூலம் கேள்விப்பட்டிருந்த நாகலட்சுமியம்மாவை நேரில் பார்த்தபோது, வித்யா கற்பனை செய்துவைத்திருந்த தோற்றத்துக்கும், குணாதிசயத்துக்கும் மிகப் பொருத்தமானவராகவே இருந்தார். அவர் சுந்தரியிடம் பேசியதைக் கேட்டபோது,  இவரிடம் இன்னும் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று  முடிவுசெய்துவிட்டிருந்தாள், வித்யா.

நாகலட்சுமியின் பார்வை அடிக்கடி வித்யாவின் பக்கம் செல்வதை உணர்ந்த, விக்னேஷ், அம்மாவிடம்,

"அம்மா! இது வித்யா! பிரபுவோட ஆபிஸில வேலை பாக்கறாங்க, சுந்தரிக்கு ரொம்பப் பழக்கம்!"

திவ்யா மெல்லிய புன்னகையுடனும் ஒரு தலையசைப்பினுடனும் கைகளைக் குவித்து வணங்கினாள்.

" வாம்மா!" அத்துடன் அவளுடனான பேச்சை அம்மா நிறுத்திக்கொண்டது விக்னேஷுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

அனைவருக்கும் மனோகரியே சமையல் செய்தாள். குழந்தையைக் காரணம் காட்டி சுந்தரியை ஒருவேலையும் செய்யவிடவில்லை.

வித்யா வலுக்கட்டாயமாய் அடுக்களை சென்று மனோகரிக்கு உதவினாள். ஆனால், மனோகரி,கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் திணறிவிட்டாள். அவள் திணறுவதைப் பார்த்து மனோகரி ஓரளவு ஊகித்துவிட்டாள். வித்யா அவளைக் கையெடுத்துக் கும்பிட்டு, இந்த விஷயம், நாகலட்சுமிக்கு தெரியவேண்டாமென்று கேட்டுக்கொண்டாள்.
விக்னேஷின் திருமணம் தொடர்பாக, அவனுக்கும், அவன் அம்மாவுக்கும் இடையில் நடந்த விவரங்கள், மனோகரிக்குத்  தெரியவந்ததும், விக்னேஷின்மேல் ஆத்திரப்பட்டாள். இவ்வளவு நல்லபையன், இப்படி அம்மாமேல் வைத்திருக்கும் பாசத்தால் தன் வாழ்க்கையையே பணயம் வைக்கிறானே என்று அவன்மேல் பரிதாபப்பட்டாள்வித்யா - விக்னேஷ் காதலுக்கு தன்னாலான உதவிகள் செய்வதாக வாக்களித்தாள்.

வித்யா, இனி சுந்தரியின் நிலை என்னாகுமோ என்று கவலைப்பட்டவளாய் வீடு திரும்பினாள்.

*******************************************************************

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

மு. உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
-------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு