25 April 2020

ANZAC தினம்





ஆஸ்திரேலிய தினத்தைப் போன்றே ஆஸ்திரேலியர்களுக்கு முக்கியமான மற்றொரு தினம் ANZAC தினம். முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர்களில் பங்கேற்ற மற்றும் உயிர்நீத்தப் படைவீரர்களின் நினைவாக, போர்வீரர் நினைவுதினத்தை விடவும் மேலான உணர்வுப் பெருக்குடனும் தேசிய ஒருமைப்பாட்டுடனும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதென்ன ANZAC? Australian and New Zealand Army Corps என்பதன் சுருக்கம்தான் ANZAC.

முதல் உலகப்போரின்போது, கூட்டுப்படைகளுக்கு ஆதரவாக, மத்தியத்தரைக்கடல் பயணப்படையின் ஒரு அங்கமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போர்வீரர் படைக்குழாம் உருவாக்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எகிப்தில் உருவாக்கப்பட்ட இப்படைக்குழாமில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை வீர்ர்களும், சிறிய அளவிலான தன்னார்வல யூதப் படைவீரர்களும் இருந்தனர். இப்படைக்குழாமில் மொத்தம் இரண்டு பிரிவுகள் இருந்தன. முதலாவது ஆஸ்திரேலியப் படைப்பிரிவு. இதில் முதல் கட்ட, இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட ஆஸ்திரேலியக் காலாட்படைகள் இடம்பெற்றன. இரண்டாவது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து படைப்பிரிவு. இதில் நியூசிலாந்து காலாட்படை, நியூசிலாந்து ஆயுதப்படை, முதற்கட்ட ஆஸ்திரேலியக் குதிரைப்படை, நான்காம் கட்ட ஆஸ்திரேலியக் காலாட்படை ஆகியவை இடம்பெற்றன. இவை தவிர இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட ஆஸ்திரேலியக் குதிரைப் படைகள் எப்பிரிவிலும் சேராமல் தனித்தியங்கின.

ANZAC படைக்குழாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், கூட்டுப்படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடல் வழியே துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை.. அந்நாளைய ஓட்டோமான் பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்ற ஏதுவாக Gallipoli தீபகற்பத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. சுமார் எட்டு மாதங்கள் நீடித்த போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் 8700 ஆஸ்திரேலிய வீர்ர்களும் 2800 நியூசிலாந்து வீர்ர்களும் அடக்கம். காயமுற்ற இரண்டு லட்சத்து அறுபத்திரண்டாயிரம் வீர்ர்களுள் இருபத்தைந்தாயிரம் பேர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த போர்வீரர்கள். முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த ஆஸ்திரேலிய வீர்ர்களின் எண்ணிக்கையோ சுமார் 66,000.

கலிப்போலியைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியைத் தழுவினாலும், இப்போர்க்காலம் ஆஸ்திரேலிய நியூசிலாந்து வீர்ர்களின் வீரத்தையும் தியாகத்தையும், நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டையும் வெளிக்கொணர்ந்த காலமாக அறியப்படுகிறது. கலிப்போலியில் அவர்கள் கால் வைத்த 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாளான முதல் நாளே இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெருமளவில் தேசிய ஒருமைப்பாட்டு அலையை உருவாக்கியது. கலிப்போலி போர் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. வீரர்களுக்கான நினைவேந்தல்கள் நிகழ்த்தப்பட்டன. 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் முதல் ANZAC தினம் அதிகாரபூர்வமாக ஏட்டில் பதிவானது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போர்வீர்ர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன. கலிப்போலி போரிலிருந்து திரும்பிய வீர்ர்கள் அவற்றில் பங்கேற்றனர். காயமுற்ற வீர்ர்கள் இயலாத நிலையிலும் மருத்துவ உபகரணங்களோடும் செவிலியர்களோடும் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். அன்றைய தினம் லண்டன் தெருக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைவீரர்கள் அணிவகுத்தனர். லண்டன் செய்தித்தாள் ஒன்று அவர்களை The Knights of Gallipoli என்று பாராட்டி எழுதியது.   

Dawn service எனப்படும் அதிகாலை நினைவேந்தல் நிகழ்வும் அன்றைய தினத்தின் இறுதி நிகழ்வான lost post-ம் ANZAC தினத்தின் சம்பிரதாயச் சடங்குகளுள் முக்கியமானவை. போர் நினைவிடங்களிலும் போர்வீரர்களின் கல்லறைகளிலும் மலர்களும் மலர்வளையங்களும் வைக்கப்படுகின்றன. போர்களில் உயிர்நீத்த போர்வீர்ர்கள் பெருமையோடு நினைவுகூரப்படுகின்றனர். ஓய்வுபெற்ற முன்னாள் போர்வீரர்கள் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவிலும் பிற மாநிலத் தலைநகரங்களிலும் மட்டுமல்லாது சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களிலும் அணிவகுப்புகள் நடைபெறும். அணிவகுப்புகளில் படைவீரர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் வீர்ர்கள், முன்னாள் வீர்ர்களின் வழித்தோன்றல்கள், போர்க்காலங்களில் பணியாற்றிய செவிலியர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தங்கள் தேசப்பற்றையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றனர்.

முன்னாள் வீர்ர்கள் தாங்கள் தங்கள் சேவைகளுக்காய்ப் பெற்ற பதக்கங்களை வரிசையாய் மேற்சட்டையின் இடப்பக்கத்தில் அணிந்திருப்பர். உயிரிழந்த போர்வீர்ர்களின் உறவினர்கள் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களது பதக்கங்களைத் தங்கள் சட்டையின் வலப்பக்கத்தில் அணிந்திருப்பர். சில போர்வீர்ர்கள் தம்முடையதும், உயிரிழந்த தம் உறவுகளையுடைதும் என சட்டையின் இருபுறமும் பதக்கங்களை அணிந்திருப்பர்.  

ஏப்ரல் மாதம் மட்டுமல்லாது எல்லா மாதங்களும் பெரும்பாலான கடைகளில் கிடைக்கக்கூடியவை ANZAC பிஸ்கட்கள். ANZAC தினத்துக்கும், ANZAC பிஸ்கட்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது.

முதலில் ANZAC பிஸ்கட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்று பார்ப்போம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை, வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் ANZAC பிஸ்கட்கள். நீண்ட நாள் கெடாது என்பதாலும், போஷாக்கு நிறைந்தது என்பதாலும் முதலாம் உலகப்போர்க் காலத்தில் போர்வீரர்களின் மனைவிகளும், பிற மகளிர் குழுக்களும் இப்பிஸ்கட்களை ஏராளமாய்த் தயாரித்து நாட்டைப் பிரிந்து சென்றிருக்கும் போர்வீர்ர்களுக்கு அனுப்பினார்கள் என்றொரு தகவலும் இல்லை இல்லை இப்பிஸ்கட்கள் போர்க்களங்களுக்கு அனுப்பப்படவில்லை.. உள்ளூர்களிலேயே பெருமளவு விற்பனை செய்யப்பட்டு அதிலிருந்து கிடைத்த வருவாய் போர்க்காக செலவிடப்பட்டது என்றொரு தகவலும் சொல்லப்படுகின்றன. இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ உண்மையாக இருக்கலாம். எது எப்படி ஆயினும் போர்களுடனும் ANZAC வீரர்களுடனும் தொடர்புடையதாகிவிட்டது இப்பிஸ்கட். 1917 ஆம் ஆண்டில் சிட்னியிலிருந்து வெளியான War chest cookery book இல் ANZAC பிஸ்கட் என்ற தலைப்பில் இதன் செய்முறை வெளியாகியிருக்கிறது. இத்தனை வருடங்களில் அதன் செய்முறையில் பெரிய அளவு மாற்றமேதும் நிகழவில்லை என்பது ஆச்சர்யம்.

Remembrance day எனப்படும் போர்நினைவு தினத்தன்று சட்டைகளில் பாப்பி மலர்களை சூடிக்கொள்வதைப் போன்று ANZAC தினத்தன்று சட்டைகளில் ரோஸ்மேரி இணுக்குகள் சூடிக்கொள்ளப்படுகின்றன. என்ன காரணம்? கலிப்போலியை நினைவுகூரும் விதமாய் அந்நாளில் கலிப்போலி தீபகற்பத்தில் காட்டுச்செடிகளாய் ஏராளமாய் மலர்ந்துகிடந்த ரோஸ்மேரிச் செடிகள் இப்போதும் ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நினைவேந்தல்களின்போது கட்டாயம் இடம்பெறுகின்றன.

ANZAC தினத்தன்று கட்டாயம் இடம்பெறும் மற்றொரு சம்பிரதாயம் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் Collingwood மற்றும் Essendon குழுக்களுக்கிடையில் நடைபெறும் Australian Rules Football எனப்படும் ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டப் போட்டி. போர்க்காலங்களில் தங்கள் ஓய்வுப்பொழுதுகளில் ஆஸ்திரேலிய வீர்ர்கள் இவ்விளையாட்டை விளையாடினராம். பிற வீர்ர்களுடனான பிணைப்பை வலுப்படுத்தவும் ஆஸ்திரேலியக் கலாச்சாரத்தைக் கொண்டாடவும் அப்போது இவ்விளையாட்டுப் போட்டிகள் உதவினவாம். அதன் நீட்சியாகவே இன்றும் இவ்விளையாட்டுப் போட்டி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
ANZAC தினத்தின் மகத்துவத்தையே இவ்விளையாட்டுப் போட்டி மறக்கடித்துவிடுகிறது என்றும் அதனால் ANZAC தினக் கால்பந்தாட்டப் போட்டியைத் தடைசெய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பும் வெறிகொண்ட ரசிகர்களின் ஆரவாரக் கூச்சலோடு விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள் முட்டி மோதி விளையாடி வெற்றியை நிலைநாட்டத் துடிக்கும் இப்போட்டிகளும் ஒரு வகையில் ANZAC தினத்துக்கான நினைவேந்தலே என்று மற்றொரு தரப்பும், வாதிட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் 2002 இலிருந்து ANZAC தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு ரக்பி விளையாட்டுக்கான ANZAC தினக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு Sydney Roosters மற்றும் St.George Illawarra Dragons குழுக்களுக்கிடையிலான போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகின்றன.

எத்தனை முரண்கள் இருந்தாலும், எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும் எத்தனைக் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ANZAC தினம் என்றவுடனேயே ஒவ்வொரு ஆஸ்திரேலியர் உள்ளத்திலும் உணர்வுப் பெருக்குண்டாவதை மறுக்க முடியாது.

ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பீதியால் பலர் கூடும் நிகழ்வுகளில் கலந்துகொள்வோருக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு ஆன்ஸாக் தின நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்வு ரத்து செய்யப்பட்டாலும் நினைவு ரத்து செய்யப்படக்கூடாதன்றோ? நாட்டுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய வீர்ர்களின் தியாகத்தையும் பெருமையையும் தேசப்பற்றையும் என்றென்றும் நினைவிலிருத்தி அவர்களுக்கு நம் அஞ்சலியையும் மரியாதையும் தெரிவிப்பது ஆஸ்திரேலியர்களாகிய நம் கடமை அல்லவா?

(5 ஏப்ரல் 20 என்று SBS Tamil வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்வில் ஒலிபரப்பானது.)



15 April 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி இசைக்கருவிகள்






ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் கலாச்சார அடையாளங்களுள் முக்கியமானவை இசையும் நடனமும். இசை என்றதுமே நம்மில் பலருக்கும் டிஜிரிடூ (Didgeridoo) நினைவுக்கு வரும். ஆம். ஆஸ்திரேலியாவின் அதிமுக்கிய அடையாளங்களுள் ஒன்று பூர்வகுடி மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான டிஜிரிடூ எனப்படும் காற்றூது இசைக்கருவி. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஆண்டுக்கால தொன்மை உள்ளதாக கருதப்படும் இவ்விசைக்கருவி இன்று உலகின் பல நாடுகளிலும் அறிமுகமாகி இசைக்கப்படுகிறது. டிஜிரிடூவின் குறைந்தபட்ச நீளம் மூன்று அடி, அதிகபட்ச நீளம் பத்து அடி. பாரம்பரிய விழாக்களின்போது இசைக்கப்படும் இக்கருவியை பூர்வகுடியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இசைப்பது வழக்கம். அந்த இசைக்கு ஆண்களும் பெண்களும் நடனமாடுவர். டிஜிரிடூ பெரும்பாலும் தனி இசைக்கருவியாக வாசிக்கப்பட்டாலும் சில விழாக்களில் இசைக்கோல்களும் தாளவாத்தியக்கருவியாக சேர்ந்திசைக்கப்படுகின்றன.

பூர்வகுடி பெண்கள் டிஜிரிடூ வாசிப்பதில்லை. பெண்கள் வாசித்தால் தெய்வக்குற்றம் என்ற கருத்து இருந்தாலும் சமூக, பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறி சில பூர்வகுடிப் பெண்கள் அந்நாளில் வாசித்ததுண்டாம். தற்போது உலகநாடுகள் பலவற்றிலும் ஆண்பெண் பேதமின்றி பெண் இசைக்கலைஞர்களும் டிஜிரிடூவை வாசிக்கப் பயின்று கச்சேரிகளில் இசைக்கத் துவங்கியுள்ளனர்.

காற்றுக்கருவியான இதை நம் நாதசுரத்துக்கு ஒப்பாக சொல்லலாம். மூச்சை வெகுவாக தம் கட்டி வாசிக்கவேண்டிய காரணத்தால் நாதசுரம் பொதுவாக ஆண்கள் வாசிக்கும் இசைக்கருவி என்று பெயர் இருந்தாலும் ஆங்காங்கே பெண் இசைக்கலைஞர்களும் ஆரம்பகால எதிர்ப்புகளைக் கடந்து, முறையான பயிற்சி பெற்று நல்ல வித்வான்களாக விளங்கியிருப்பதை நாம் அறிவோம் அல்லவா?



2005-ல் பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் ஆஸ்துமா, குறட்டை மற்றும் உறக்கத்தில் உயிர்பறிக்கும் சுவாசப் பிரச்சனைகளுக்கும், சீரான மூச்சுப்பயிற்சிக்கும் நல்லதொரு தீர்வாக டிஜிரிடூ இசைப்பயிற்சி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும்கூட ஆஸ்திரேலியாவின் சில குறிப்பிட்ட பூர்வகுடி இன மக்களிடையே டிஜிரிடூ குறித்த பயபக்தியுடன் கூடிய நம்பிக்கைகள் தொடர்கின்றன. பூர்வகுடி மக்கள் அல்லாத பிறர் முக்கியமாக பெண்கள், வாசிப்பது மட்டுமல்ல இந்த இசைக்கருவியைக் கையால் தொடுவது கூட பாவம் என்பதோடு கலாச்சாரத் திருட்டு என்றும் கருதுகின்றனர்.

டிஜிரிடூ என்று இதற்கு பெயர் வைத்தது யார் என்பது ஒரு பெரிய மர்மம் நிறைந்த கேள்வி. ஏனெனில் didgeridoo என்ற வார்த்தையோ அதற்கு நிகரான வார்த்தையோ எந்த பூர்வகுடி மொழியிலும் கிடையாது என்பதுதான் உண்மை. இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வார்த்தை. ஒவ்வொரு பகுதியில் வழங்கப்படும் பூர்வகுடி மொழியிலும் இதற்கு வெவ்வேறு பெயர் உண்டு. அவற்றுள் சில – mako, liddung, ngorla, morlo, wuyimbarl, mudburuja, morle, yirdaki, yigi yigi  போன்றவை.


யூகலிப்டஸ் மரத்தண்டிலிருந்தும் பருத்த கிளைகளிலிருந்தும் இக்கருவிகள் தயாரிக்கப்பட்டன. இதற்கான மரத்தைத் தேர்ந்தெடுப்பதே ஒரு கலை. மரம் உயிரோடும் இருக்கவேண்டும், கரையான் அரித்து உள்ளே கூடாகவும் இருக்கவேண்டும். ஏன் கரையான் அரித்த மரமாக இருக்கவேண்டும்?

கரையான்கள் அரித்திருப்பதால் உள்ளே ஏற்பட்டிருக்கும் காற்றறைகள்தாம் டிஜிரிடூவில் சரியான இசையை எழுப்ப உதவுகின்றன. அதனால் அப்படிப்பட்ட மரத்தைத் தேர்ந்தெடுத்து கூரான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, சரியான அளவுக்கு வெட்டி பட்டைகளை அகற்றி உள்ளே சுத்தம் செய்து உபயோகித்தார்கள். டிஜிரிடூவின் மீது மிருகக்கொழுப்பு அல்லது எண்ணெய் தடவப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. டிஜிரிடூவில் வாய் வைத்து ஊதும் பக்கம் உதடுகளில் உறுத்தாமல் இருக்கவும் ஊதும் காற்று வெளியேறாமல் இருக்கவும் தேன்மெழுகு தடவப்பட்டது. வாய்வைத்து இசைக்கும் பகுதி குறுகலாக ஆரம்பித்து போகப்போக விரிந்து மறுமுனை சற்றுப் பெரியதாக இருக்கும். 

டிஜிரிடூ நேராகவும் இருக்கலாம் கோணல்மாணலாக வளைந்தும் இருக்கலாம். வடிவம் எப்படி இருக்கிறதென்பது பிரச்சனையில்லை.. அதிலிருந்து வெளிப்படும் கணீரென்ற இசையே பிரதானம்.

மூங்கில் காட்டில் வண்டுகள் துளைத்த ஓட்டைகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்று இசையாக மாறி புல்லாங்குழல் உருவாகக் காரணமானது போலயூகலிப்டஸ் மரக்காட்டில் கரையான் அரித்த மரக்கூடுகள் வழியாக நுழைந்து வெளியேறிய காற்றே இந்த டிஜிரிடூ உருவாகக் காரணமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகிறது.

மற்ற காற்றூது கருவிகளை இசைப்பதற்கும் டிஜிரிடுவை இசைப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைக்கும்போது ஊதுகுழல் ஊதுபவரின் வாய்க்குள் இருக்கும். புல்லாங்குழல் போன்றவற்றில் துளையின் மீது வாயை வைத்து ஊதுவர். ஆனால் இந்த டிஜிரிடுவை இசைக்கையில் வாய் முற்றிலுமாய் இசைக்கருவியின் ஊதுதுவாரத்தின் உள்ளே பொருந்தி இருக்கும். மூச்சினை உள்ளிழுத்து நிறுத்தி உதடு, நாக்கு, குரல்வளை இவற்றில் அதிர்வுகளை உண்டாக்கி வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுடன் காற்றை வெளியேற்றுவதன் மூலம் இசை வெளிப்படுகிறது. 

இக்காலத்தில் டிஜிரிடூக்களைத் தயாரிக்க நூதனக் கருவிகள் வந்துவிட்டன. அதோடு கரையான் அரித்த மரங்களின் அவசியமற்றுப்போய் அலுமினியம் போன்ற உலோகங்கள், யூகலிப்டஸ் அல்லாத வேறு மரங்கள், மூங்கில், ப்ளாஸ்டிக், மண் போன்ற பல்வேறு பொருட்களாலும் உலோகங்களாலும் டிஜிரிடூக்கள் தயாரிக்கப்படுகின்றன. டிஜிரிடூவோடு ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் பயன்படுத்திய வேறு சில இசைக்கருவிகள் bull roarer, clapstick, gum leaf போன்றவை.

புல்ரோரர்

புல்ரோரர் (bullroarer) என்பது பின்னாளில் ஐரோப்பியர் வைத்த பெயர். இது ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆதிகாலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. நீளமான கயிற்றின் ஒரு நுனியில் அரை அடி முதல் இரண்டு அடி நீளமும் அரை அங்குலம் முதல் இரண்டு அங்குலம் அகலமும் கொண்ட தட்டையான மரப்பலகை இணைக்கப்பட்டிருக்கும். கயிற்றின் மறு நுனியைக் கையில் பிடித்து தலைக்கு மேலே கவண்கல் சுழற்றுவது போல வேகவேகமாகச் சுழற்றும்போது விர்ர்ர் விர்ரெரென்று ஒலி உருவாகும்.

பல மைல்களுக்கு அப்பாலும் கேட்கும் அளவிலான பேரொலி அது. பூர்வகுடிகளின் ஆன்மீக வழிபாடுகளிலும் ஈமச் சடங்குகளின்போதும் தவறாமல் இடம்பெறும் ஒலிக்கருவியாகும். துர்தேவதைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இக்கருவியை பூர்வகுடி ஆண்கள் மட்டுமே கையாளுவர். பெண்கள், குழந்தைகள், பூர்வகுடியைச் சாராத வேற்று ஆண்கள் தொடுவது பாவம் என்ற நம்பிக்கையோடு அதன் ஒலியை வெளியாட்கள் செவிமடுப்பதும் கூட இழுக்கு என்னும் நம்பிக்கை பூர்வகுடிகளிடத்தில் உள்ளது.  

தட்டுக்கோல்கள்

Clapsticks எனப்படும் தட்டுக்கோல்கள் கோலாட்டக் கோல்களை ஒத்து ஆனால் அளவில் பருத்திருக்கும். இவையும் யூகலிப்டஸ் மரத்திலிருந்தே உருவாக்கப்படுகின்றன. இக்கோல்களை ஒன்றோடொன்று தட்டுவதன் மூலம் பெரும் ஒலி உண்டாகும். டிஜிரிடூவுடன் இசைக்கப்படும் தாளவாத்தியக் கருவி இதுவே ஆகும். பூர்வகுடி மக்கள் இவற்றை பிம்லி அல்லது பில்மா என்று குறிப்பிடுகின்றனர்.

யூகலிப்டஸ் இலை 

யூகலிப்டஸ் இலைகூட அந்நாளில் ஒரு இசைக்கருவியாக இருந்திருக்கிறது. நாம் பூவரச இலையைச் சுருட்டி பீப்பீ வாசிப்பது போல.. அக்காலத்து பூர்வகுடி மக்கள் யூகலிப்டஸ் இலையை படுக்கைவாக்கில் உதடுகளுக்கிடையில் வைத்து ஊதுவதன்மூலம் இசையுண்டாக்கி ரசித்து மகிழ்ந்திருக்கின்றனர். 

யூகலிப்டஸ் காடுகளை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த பூர்வகுடி மக்கள் அதன் மரம், கிளை, பட்டை, இலை மட்டுமல்லாது கரையான் அரித்த கட்டைகளையும் தங்கள் இசை ரசனையோடு பிணைத்து வாழ்ந்த அழகிய வாழ்வியல் ரசனை வியக்கவைக்கிறதல்லவா?

(1 மார்ச் 20 அன்று SBS Tamil வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்வில் ஒலிபரப்பானது.)


&&&
(டிஜிரிடூ தவிர்த்த பிற படங்கள்  இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)