16 March 2014

துக்க விசாரணை (ஆஸ்திரேலிய காடுறை கதை 5)

('ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம்' என்னும் முந்தைய கதையின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்).




"இது ஆர்வியின் வீடுதானே கிழவி?"  தெனாவெட்டுடன் கேட்ட சிறுவனை ஏறிட்டாள் ஆர்வியின் தாய்.

"ஏன் கேட்கிறாய்?"

"உயிரை வாங்காதே! ஒரு சாதாரணக் கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியாதா உன்னால்?"

"என்னிடம் இப்படிப் பேச எவ்வளவு திமிர் உனக்கு! மரியாதையாக ஓடிப் போய்விடு! இல்லையென்றால் போலீஸுக்குச் சொல்லிவிடுவேன்."

"போலீஸ் வந்து என்ன கிழிக்கும்? போலீஸ் என்றால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா? நான் ஒரு உதை விட்டால் உன் குடிசை கலகலத்துப் போய்விடும். கிழட்டுப் பசுவே! ஆர்வி இங்கே வசிக்கிறானா என்றுதானே கேட்டேன்? கடவுளே… ஒரு எளிய தொழிலாளி கேட்கும் ஒரு எளிய கேள்விக்குப் பதில் சொல்லக்கூடவா உன்னால் முடியவில்லை?"

"எதற்கு ஆர்வியைத் தேடுகிறாய்?"

"சரியாப் போச்சு! அவன் கிரைண்டர் பிரதர்ஸில்தானே வேலை பார்க்கிறான்? சும்மா அவனைப் பார்க்கலாமே என்று வந்தேன். இப்போது ஏன்தான் வந்தேனோ என்று நினைக்கிறேன். வந்திருக்காவிட்டால் பாழாய்ப்போன உன்னிடம் மாட்டிக்கொண்டு என் தொண்டை காயும் அளவுக்குக் கத்திக் கொண்டிருக்க மாட்டேன். ஆர்வி நாளைக்கும் வேலைக்கு வராவிட்டால் வேறு யாராவது அந்த வேலைக்கு வந்துவிடுவார்கள் என்று சொல்லிப்போக வந்தேன். என்ன ஆயிற்று அவனுக்கு? உடல்நலக்குறைவா?"

"ஆர்வி இறந்துவிட்டான்."

"ஏசுவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவனைப் பார்க்க பில் ஆண்டர்சன் வந்திருக்கிறேன் என்று போய்ச் சொல்லுங்கள்."

"கடவுளே!… இப்போது எனக்கிருக்கும் துயரம் போதாதா? சனியன் பிடித்தவனாட்டம் நீ வேறு வந்து தொல்லை தர வேண்டுமா? உனக்குப் புண்ணியமாகப் போகட்டும்! தயவுசெய்து என்னைத் தனியாக விட்டுவிட்டு இங்கிருந்து போய்விடு. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். குளிர்சுரம் கண்டிருந்த என் பிள்ளை நேற்றிரவு இறந்துவிட்டான்."

"உண்மையாகவா?"

அவன் ஜோன்ஸ் ஆலியின் தெருவில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வாயிலிருந்த புகையிலைச் சாற்றைத் துப்பினான்.

"கடவுள் என்னை மன்னிப்பாராக! அம்மா, நான் மிகவும் வருந்துகிறேன்! எனக்கு இந்தச் செய்தி தெரியாது. நீங்கள் சொல்லவில்லையென்றால் எனக்கு எப்படித் தெரியும்?"

அவன் தன் கால்சட்டைப் பையிலிருந்து ஒற்றைக் கையை வெளியிலெடுத்துப் பின்மண்டையைச் சொரிந்தபடி தொப்பியைக் கூடுமானவரை முன்புறம் இழுத்துவிட்டான். மிகவும் மோசமான நிலையிலிருந்த வலதுகால் பூட்ஸின் பக்கம் அவன் பார்வை போனது. காலைத் திருப்பி பூட்ஸின் அடிப்புறத்தைப் பார்வையிட்டான். பின், இடது முழங்கால் வரை உயர்த்தி மீண்டும் அதன் அடிப்புறத்தை ஆராய்ந்து இன்னும் எவ்வளவு நாட்களுக்குத் தாங்கும் என்று கணக்கிடுவதைப் போல் பார்த்தான். பின் ஆயாசம் மேலிட, நடைபாதையில் உமிழ்ந்துவிட்டுச் சொன்னான், "அம்மா, நான் அவனைப் பார்க்கலாமா?"

வளைந்து சென்ற குறுகலான படிக்கட்டுகளில் அவள் முன்னே செல்ல, ஒரு பயந்த போர்வீரனைப் போல் அவன் அவளைத் தொடர்ந்து சென்றான். அறைக்குள் நுழையுமுன்பு தொப்பியை நீக்கிவிட்டிருந்தான். 

அவன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். எங்கும் வறுமையின் அடையாளம், கிட்டத்தட்ட அவனுடைய வீட்டைப் போலவே. நீளிருக்கையில் கிடத்தப்பட்டிருந்த அந்தப் பையனையும் அவனருகில் இருந்த மிகவும் எளிய சவப்பெட்டியையும் மாறி மாறிப் பார்த்தான்.

தாய், இறந்தவனின் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றினாள். பில் ஆண்டர்சன் ஸோஃபாவுக்கு அருகில் வந்து நின்று, வெளிறிய அந்த முகத்தைப் பார்த்தான். அனிச்சையாகத் தன் வலது கையைக் காற்சட்டைப் பையிலிருந்து வெளியிலெடுத்து ஆர்வியின் குளிர்ந்திருந்த நெற்றியின் மேல் வைத்துப் பார்த்தான்.

தானே தன் செயலை எண்ணி வெட்கியது போல் முணுமுணுத்தான், "பாவம், சின்னப் பையன்!"

பின்னர் ஏதோ நினைத்துக்கொண்டவன் போல் கேட்டான், "பிரேதப் பரிசோதனை செய்யவில்லைதானே?"

"இல்லை, முந்தின நாள்தான் மருத்துவர் பார்த்துச் சென்றார். அதனால் பிரேதப் பரிசோதனைக்கு அவசியமேற்படவில்லை."

"பிரேதப் பரிசோதனை செய்யாமை நல்லது. ஏனெனில், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இறந்தவரின் உடலைப் பார்க்கும்போது அவர் மிகுந்த வலியுடன் இருப்பதுபோல் தோன்றும். என் அப்பா இறந்தபோது தூங்குவது போலத்தான் இருந்தார். ஆனால், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரைப் பார்த்தபோது அவர் மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இருப்பது போல் இருந்தது. யாராலும் அதைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நான் பார்த்தேன். ஆர்விக்கு இப்போது என்ன வயது?"

"பதினொன்று."

"எனக்குப் பன்னிரண்டு. பதிமூன்றாகப் போகிறது. ஆர்வியின் அப்பா இப்போது உயிரோடு இல்லை. அப்படித்தானே?"

"ஆமாம்."

"எனக்கும்தான். பணியிடத்திலேயே இறந்துவிட்டார் அல்லவா?"

"ஆமாம்."

"என் அப்பாவும் அப்படித்தான். ஆர்வியின் அப்பா இதயக்கோளாறால் இறந்துபோனதாக ஆர்வி சொல்லியிருக்கிறான்."

"ஆமாம்."

"என் அப்பாவும் அப்படித்தான். குடிதானே காரணம்? நீங்கள் அலுவலகங்களைத் துப்புரவு செய்தும் துணி துவைத்தும் வருமானம் ஈட்டுகிறீர்கள் அல்லவா?"

"ஆமாம்."

"என் அம்மாவும் அப்படித்தான். சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது என்பது இந்நாட்களில் மிகவும் கடினம் இல்லையா?"

"கடவுளே!… ஆமாம்பா… இப்போது என் பிள்ளையும் போய்விட்டான். இனி என் நிலைமை என்னாகுமென்று அந்தக் கடவுளுக்குதான் தெரியும். நான் தினமும் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து அலுவலகங்களை சுத்தம் செய்யப் போய்விடுவேன். அது முடிந்தபின் அன்றாடம் துணி துவைக்கும் வேலை. அப்படியிருந்தும் செலவுக்குத் திண்டாட்டம்தான்."

"என் அம்மாவுக்கும் இப்படிதான். உங்கள் கணவர் உடலை வீட்டுக்குத் தூக்கிவந்தபோது நீங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பீர்கள், இல்லையா?"

"கடவுளே… உண்மைதான். நான் சாகும்வரை அதை மறக்க முடியாது. என் கணவர் வெகுநாட்களாக வேலை இல்லாமல் இருந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள் முன்புதான் அந்த வேலை கிடைத்தது. உன் அம்மாவுக்கும் அந்த நிலை பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும்."

"ஆமாம். அப்பாவைத் தூக்கிக்கொண்டு வந்த சக தொழிலாளி ஒருவர் சொன்னார், 'உங்கள் கணவர் இறந்துவிட்டாரம்மா! எல்லாம் நொடியில் நடந்துவிட்டது'. கேட்டதும் என் அம்மா, 'கடவுளே… கடவுளே…' என்று அரற்றியபடியே மயங்கிவிட்டாள்."

"ஐயோ பாவம்! இப்போது என் ஆர்வியும் போய்விட்டான். இனி நானும் என் பிள்ளைகளும் என்ன செய்யப் போகிறோம்? நான் என்ன செய்யப் போகிறேன்? கடவுளே!… நானும் செத்துப் போயிருக்கலாம்."

"கவலைப்படாதீர்கள் அம்மா! நடந்துபோனதைப் பற்றி அழுது புலம்புவதில் அர்த்தமில்லை," பில் சொன்னான்.

வாயோரம் வழிந்த புகையிலைச் சாற்றைப் புறங்கையால் துடைத்துவிட்டு அந்தக் கறையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பின், மீண்டும் ஆர்வியைப் பார்த்தான்.

"நீங்கள் அவனுக்கு மீன் எண்ணெய் கொடுத்திருக்க வேண்டும்." பில் சொன்னான்.

"அவனுக்கு நிறைய ஓய்வும் நல்ல சத்தான உணவும்தான் தேவைப்பட்டன," அவள் சொன்னாள்.

"இவன் அவ்வளவு பலமுள்ளவனாக இல்லை."

"இல்லைதான்… பாவம் சின்னப் பையன்!"

"கிரைண்டர் பிரதர்ஸில் இவனை எப்போதும் மோசமாக நடத்துவார்கள். இவனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். எப்போதும் ஒரே வேலையையே கொடுத்துச் செய்யச் சொல்வார்கள். ஊதிய உயர்வு குறித்து இவன் முதலாளியிடம் வாய்திறந்து கேட்பதேயில்லை. கேட்டால் வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். இவன் யாருடனும் வம்புக்குப் போக மாட்டான். அதனால் மற்ற பையன்கள் இவனை எப்போதும் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். ஆர்வியை கேலி செய்வதற்காகவே பணியிடத்துக்கு வெளியே அவர்கள் இவனுக்காகக் காத்திருப்பார்கள். அவர்கள் என்னிடம் அந்த வம்பைக் காட்டவேண்டும்... இவன் எதிர்த்துச் சண்டையிட மாட்டான். சொல்லப்போனால் அந்த அளவுக்கு இவனிடம் உடல் வலிமையும் கிடையாது. ஒரு பாறாங்கல்லைப் பெயர்த்தெடுக்கும் அளவுக்கு எனக்கு பலமிருந்ததால் யாரும் என்னிடம் வாலாட்டுவது கிடையாது. ஆனால் ஆர்வி பாவம்! அதை அவன் தவறென்று சொல்ல முடியாது. அவனுக்கு தைரியம் அதிகம். ஆனால், உடலில் பலம் கிடையாது."

பில், ஆர்வியின் உடலை ஒரு தந்தையின் பரிவோடு நோக்கினான். தாய் அழுதாள்.

"கடவுளே!… எனக்கு இது முன்பே தெரிந்திருந்தால் நான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லையென்று என் பிள்ளையை அந்த நரகத்திலிருந்து காப்பாற்றியிருப்பேனே! அவன் ஒருபோதும் புகார் சொன்னதேயில்லை. என் குழந்தைக்குத்தான் எவ்வளவு மனத்துணிவு! அவன் ஒருபோதும் புகார் சொன்னதேயில்லை. பாவம் என் பிள்ளை!"

"ஒரு தடவை கூடப் புகார் சொன்னதேயில்லையா?!"

“இல்லையப்பா… ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை."

"ஒருவேளை… அவனாலேயே தாங்க முடியாதவற்றை நீங்கள் எப்படித் தாங்குவீர்கள் என்றுதான் சொல்லவில்லையோ? ஆனால், அது அவனுடைய தவறல்ல… அவன் உடலில் பலமில்லை. அதுதான் காரணமென்று நினைக்கிறேன்."

சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பழைய சித்திரம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. அவன் அதைக் காட்டிச் சொன்னான், "எங்கள் வீட்டிலும் இதுபோலொரு சித்திரம் உள்ளது. நாங்களும் ஜோன்ஸ் ஆலியின் மேற்குப் பகுதியில்தான் முன்பு வசித்தோம். உங்களுக்கு ஜோன்ஸ் ஆலியில் வசிக்கப் பிடித்திருக்கிறதா?"

"எனக்குத் துளியும் விருப்பமில்லை. இதைப் போன்றதொரு மோசமான வீட்டில் என் பிள்ளைகள் வளர்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், வேறு இடம் பார்த்துப் போகவோ, இதை விடவும் கூடுதல் வாடகை தரவோ எனக்கு வசதியில்லையே."

"ஆமாம், இங்கே இரவுநேரக் கடைகள் இருப்பது ஒரு வசதிதான். ஆனால், பல இடங்களில் இதுபோன்ற கடைகள் வந்துவிட்டன. மேலும், இங்கே குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. யாரும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. ஆனால், நகரத்து மக்களோடு கலந்து வாழ வேண்டுமெனில் குழந்தைகள் மென்குணத்தைக் கொண்டிருப்பதில் பயனில்லை. நீங்கள் சிட்னியில் பிறந்து வளர்ந்தவர் இல்லையென்று நினைக்கிறேன், அப்படித்தானே?"

"இல்லையப்பா… நாங்கள் புதர்க்காடுறை மனிதர்கள். ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இங்கு வந்தோம். என் கணவர் இங்கே எங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்று நம்பி அழைத்து வந்தார். நான் புதர்க்காட்டில் பிறந்து வளர்ந்தவள்."

"உங்களைப் பார்த்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. ம்… ஆண்கள் சில சமயங்களில் முட்டாள்தனமாக முடிவெடுக்கக்கூடியவர்கள். நானும் கூடிய விரைவில் தனியாக வேலை எடுத்துச் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆர்வியை எங்கே புதைக்கவிருக்கிறீர்கள்?"

"நாளை ரூக்வுட்டில்!"

"என்னால் வர முடியாது. எனக்கு வேலை இருக்கிறது. நகராட்சியே அவனைப் புதைக்கவிருக்கிறதா?"

"ஆமாம்."

பயபக்தியோடு ஆர்வியின் உடலைப் பார்த்தான்.

"உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்."

"மிகவும் நன்றி! ஆனால் எதுவும் தேவைப்படவில்லை."

"சரி, நான் போகிறேன். உங்களுக்குத் தொந்தரவு தந்ததற்காக மன்னியுங்கள்!"

"தொந்தரவு எதுவுமில்லை தம்பி. படிகளில் பார்த்துக் கவனமாக இறங்கிப் போ."

"படிக்கட்டுகள் எல்லாம் பழுதாகிவிட்டன. என்றாவது இரவு வேலை முடித்து வருகையில் ஒரு பலகை கொண்டுவந்து கையோடு பழுது பார்த்துவிடுகிறேன். நான் தச்சுவேலை கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு கதவை உருவாக்கும் அளவுக்குப் பயிற்சி உள்ளது. இன்று இரவு என் அம்மாவை அனுப்பி வைக்கிறேன். அவள் ஆர்வியின் இறுதிச் சடங்குகளைச் செய்ய உங்களுக்கு உதவியாக இருப்பாள்."

"மிகவும் நன்றி! ஆனால், வேண்டாம் தம்பி! உன் அம்மாவுக்கும் வேலை இருக்கும். அவளுக்குத் தொந்தரவு தர வேண்டாம். நானே சமாளித்துக் கொள்கிறேன்."

"பரவாயில்லை, நான் அவளை அனுப்புகிறேன். அவள் சற்று உடலுரம் மிக்கவள். ஆனால் மனத்தளவில் மிக மென்மையானவள். இறுதிச் சடங்குகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது போல் வேறெதிலும் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டாள். நான் போய்வருகிறேன் அம்மா!"

"போய் வா, மகனே!"

அவன் ஒரு நிமிடம் கதவருகில் தயங்கி நின்றான். பின் சொன்னான்,"அம்மா… என்னை மன்னித்து விடுங்கள். கடவுள் என்னை மன்னிப்பாராக! நான் மிகவும் வருந்துகிறேன்! நான் போய் வருகிறேன். எல்லாவற்றுக்கும் நன்றி!"

துடிப்பான சின்னஞ்சிறுவன் ஒருவன் படிக்கட்டுகளில் நின்றபடி பில்லைத் தன் கலங்கிய கண்களால் பார்த்துக்கொண்டிருந்தான். பில் அவன் தலையில் செல்லமாய்த் தட்டியபடி சொன்னான்,"தைரியமாயிருடா, சின்னப்பயலே… நானிருக்கிறேன்."


*****************************


(பிரபலக் கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் எழுதிய 'A visit of condolence' என்னும்  ஆஸ்திரேலிய காடுறை கதையின் தமிழாக்கம் -  17/2/14 நிலாச்சாரல் இணைய இதழில் வெளியானது.)


படம்: நன்றி இணையம்.

12 March 2014

நாளை என் மகனும்.....





பலவண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்,
பார்த்திராத வடிவங்களில் பந்துகள்,
உச்சியிலொரு ஒழுங்கற்ற  சூரியன்,
நீரின்றித் துள்ளும் நீலநிறமீன்,
பக்கத்தில் பராக்குபார்த்தபடி
ஒற்றைக்கால் கொக்கு,
பாலு, பானுவென்று ஆங்கிலத்தில்
அரைகுறையாய் எழுதப்பட்ட பெயர்கள்,
எல்லாமும் உணர்த்தின,
இதற்குமுன் அங்கேயொரு குழந்தை….
 ஆணோ பெண்ணோ தெரியவில்லை….
வசித்திருக்கிறது என்பதை!

ஒழுங்கற்ற வட்டமுணர்த்தியது
ஒன்றரை வயதிருக்கலாமென்பதை!
ஓரடிமேலிருந்த ஆங்கில எழுத்துகள் சொல்லியது
அது பள்ளிக்குழந்தையுடையதென்பதை!
எட்டுப்போட்டு  வரையப்பட்ட பூனைக்கு
இருபக்கமும் வரையப்பட்ட வால்கள் மூலம் புரிந்தது
சண்டையிட்ட இரண்டுவாண்டுகளின்
கைவண்ணமென்பது!
சுவரின் ஒரு மூலையிலிருந்து மறுமூலை வரை
சீராய் இழுக்கப்பட்ட சிவப்பு கிரேயான் பார்த்தபோது
சின்னவயதில் அப்பாவிடம்
வாங்கிய அடி நினைவுக்கு வந்தது.

வீடு பிடித்தால் சொல்லுங்கள்,
வெள்ளையடித்துத் தயாராக்கிவிடுகிறேனென்ற
உரிமையாளரிடம்….
 இப்படியே தரமுடியுமா என்றேன்.
விநோதமாய்ப் பார்த்தவரிடம்
விளக்க நா எழவில்லை….
மனவளர்ச்சியற்ற மகனிடம்
மாற்றம் உண்டாக்கும் என்றே
எங்கள் சோர்ந்த மனதோரம்
சுடர்விடும் நம்பிக்கையை!

***************
(படம்: நன்றி இணையம்)

10 March 2014

காதல் காதல் காதல்.. காதல் போயின்......




(கதையை வாசிக்குமுன் இங்கு ஒரு எட்டு பார்த்துவிட்டு வாருங்களேன்.)

பாபு காதல் வயப்பட்டிருந்தான். கண்டதும் காதல் கேஸ்தான் இருந்தாலும் என்ன? யாரைக் கண்டாலும் காதல் வந்து விடுமா என்னஏதோ ஒரு ஈர்ப்பு. நிச்சயம் உடல் சார்ந்தது அல்ல. பாபு நிச்சயம் எந்தக் கோவிலிலும் வேண்டுமானாலும் சூடம் ஏற்றி சத்தியம் செய்வான். இத்தனைக்கும் அந்தப் பெண்பற்றிய எந்த விவரமும் பாபுவுக்குத் தெரியாது. ஆனால் இது ஒரு அமர காதல் என்று நிச்சயம் நம்பினான். கூடவே இது அமர காதலாயிருக்கக் கூடாது என்றும் வேண்டினான். ஏனென்றால் அமர காதல் என்று சொல்லப் படுபவை எல்லாம் தோல்வியில் முடிந்தவையே என்பதால் அச்சம் கொண்டான். சரி காதல் வந்தாய் விட்டது. ஆனால் இது ஒருதலை ராகமாக இருக்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டான். அவளுக்கும் இவன் மீது இதுஇருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவளை சந்தித்துத் தன் காதலை வெளிப்படுத்தி விட வேண்டும் எப்படி எங்கு சந்திப்பது. அடுத்து இருக்கும் பூங்காவுக்கு வரச் சொல்லலாமா? சரி எப்படிச் சொல்வது? திடீரென்று அவள்முன் தோன்றி..... தோன்ற என்ன இவன் மந்திரவாதியா...யோசித்து யோசித்து தலையில் இருக்கும் முடிகளைப் பிய்த்துக் கொண்டதுதான் மிச்சம் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். எதையாவது செய்யப் போய் சும்மா சொதப்பி விடக் கூடாது. யாரை கொண்டாவது அவளை அறிமுகப் படுத்தச் சொல்லலாமா? தன்னை ஒரு gang  அலைக் கழித்தது அவன் நினைவுக்கு வந்தது. அந்த மாதிரி செய்ய இவன் ஒன்றும் தாதா இல்லையே. பார்க்க வாட்ட சாட்டமாயிருந்தாலும் இவன் மனதில் கோழை. கோழைகள் காதலிக்கக் கூடாதா....கோழையான இவனிடம் சிலர் அவனது எதிர் வீட்டுப் பெண்ணின் தொலை பேசி எண்ணை வாங்கிக் கொடுக்கச்சொன்னதும் இவன் ஐயோ அண்ணே , எனக்கு முடியாது என்னை விட்டுடுங்கோஎன்று கதறி அழுததும் நினைவுக்கு வந்தது.

காதல் வயப்பட்டால் பயப்படக் கூடாது. எதையாவது செய்து அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் முதலில் பேசவேண்டும். ஒரு நாள் திடீரென வந்த ஒரு வேகத்தில் பேப்பர் பேனாவை எடுத்தான். சில வரிகளைக் கிறுக்கினான். அவள் வரும் வழியில் திடீரென அவள் முன் தோன்றி "எனக்கு உன்னிடம் பேச வேண்டும். நாளை மாலை 5 மணி எல்லா விவரங்களும் இந்தக் கடிதத்தில்"  என்று மூச்சு விடாமல் கூறி சிட்டாய்ப் பறந்து விட்டான். அவன் அப்படிப் பறக்க்க இரண்டு காரணங்கள் இருந்தன. இந்த திடீர் தாக்குதலில் அவள் என்ன செய்வதென்றோ என்ன நடக்கிறதென்றோ அறியும் முன்னர் இடத்தைக் காலிசெய்து விட வேண்டும். ஒரு வேளை அவள் சுதாரித்துக் கொண்டு கூக்குரல் இட்டால் தர்ம அடிதான் மிஞ்சலாம். ஆனால் அவள் வருவாளா. நாளை மாலை என்னைச் சந்திக்க வருவாளாஎன்று ஏதோ ராகத்தில் முணுமுணுத்துக் கொண்டான்

 சந்தியாவுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை போகும் போதும் வரும் போதும் சும்மா முறைத்துப் பார்க்கிற பிள்ளைப் பூச்சிதான் என்று நினைத்திருந்தாள் ஆனால் இப்போது...... கடிதம் கொடுக்கிற வரை வந்து விட்டது இதன்தைரியம்.... இருந்தாலும் என்னதான் எழுதி இருக்கிறது என்று பார்க்க மனம் துடித்தது. வழியில் நின்று படித்துப் பார்க்கத் தயாராயில்லை. வீட்டுக்குப் போனதும் பாத்ரூமுக்குச் சென்று ஒருவித பட படப்புடன் அந்தத் துண்டுச்சீட்டை எடுத்துப் படித்தாள். படித்தவளுக்குச் ச்சேஎன்றாகி விட்டது. ஏதோ காதல் கடிதமென்று எண்ணியவள் ஏமாற்ற மடைந்தாள். கன்னா பின்னாவென்று ஏதோ எழுதி இருப்பான் என்று எதிர் நோக்கியவள் அப்படி இல்லையே என்று ஏமாற்ற மடைந்தாள்.  "அது சரி காதல் கடிதமாயிருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று அவளது உள்மனம் கேட்டாலும் என்னையும் ஒருவன் காதலிக்கிறான் என்றால் மகிழ்ச்சி அடைந்திருப்பேனோ யார் இவன்? இவன் பேரென்னஎன்ன எழுதி இருக்கிறான்? நாளை மாலை 5/-மணி......பூங்காவில் சந்திக்க வா. நிறையப் பேச வேண்டும்  என்ற அந்தத் துண்டுக்காகிதம் இவளைப் பார்த்து கேலி செய்வ்து போல் இருந்தது. இவன் வாவென்றால் வரவும் போ என்றால் போகவும் தான் என்ன இவனது காதலியா என்ன? ஒருவேளை சென்று பார்த்தால் காதலிக்கத் துவங்கி விடுவேனோ.. அவனைப் போய்ப் பார்ப்பதா வேண்டாமா.... ஏன் பார்க்க வேண்டும்? பார்த்தால் என்ன ... என்னதான் செய்து விடுவான் ... கடித்துக் குதறுவானோ... சே அது மாதிரி செய்யத் தைரியம் வேண்டும் ச்சீ என்ன நினைப்பு இதுகாதல் வார்த்தைகள் பேசுவானா என்பதுதவிர என்ன மாதிரி கடிப்பானா குதறுவானா என்றெல்லாம் எண்ண வைக்கிறது வெகு நேரம் பாத்ரூமில் இருந்தால் சந்தேகம் வந்து விடும். ஆகவே இன்னொரு தரம் அந்தத் துண்டுக் காகிதத்தை படித்துப் பார்த்தாள் நேரம் இடம் எல்லாம் உறுதிப் படுத்திக் கொண்டு அந்தக்காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து டாய்லெட்டில் சிஸ்டெர்னைத் திறந்து அதில் போட்டாள்.காகிதத் துண்டுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

வெகு நேர சிந்தனைக்குப் பின் அவனைப் போய் பார்ப்பது என்று தீர்மானித்தாள். அவளை அந்த முடிவுக்கு வர வைத்தது எது. அவளுக்கும் அவனிடம் ஒரு ஈர்ப்போ? அப்போது எங்கோ ஒரு பாடல் ஒலித்தது இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன் அன்று.” சந்தியாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. இன்னும் அவனைப் போய்ப் பார்க்கவில்லை பேசவில்லை. அதற்குள் இன்னார்க்கு இன்னார் என்ற நினைப்பு வருவது ஏன்?

சந்தியா படித்தவள் பலதும் கற்றவள். இந்தக் காலத்துப் பிரதிநிதி. எதையும் சிந்தித்தே செயல் படுவாள். ஆனால் இந்த மாதிரித் தருணங்களில் சிந்தனையை மழுங்கடிக்கக் கூடியது காதலும் அதன் விளைவுகளும்.

சரி.. சந்தியா பாபு சந்திப்பைப் பார்க்கலாம்.

பாபு பூங்காவில் சந்தியாவுக்காகக் காத்திருக்கிறான் ஆட்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியில் காத்திருந்தான். அவள் வருவாளா மாட்டாளா என்றே குழம்பிக் கொண்டிருந்தவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் நான்கு மணிகூட ஆகவில்லை. கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி வைத்தால் காலம் வேகமாக ஓடிவிடுமா....அவசரமாகப் போக வேண்டியவன் ரயிலில் சீக்கிரம் போய்ச் சேர கடைசிப் பெட்டியிலிருந்து முதல்பெட்டிக்கு வந்தானாம்  என்னும் நினைப்பு ஏனோ வந்தது. நேரம் காலம் எல்லாம் நம் கட்டுக்குள்ளா இருக்கின்றன..?அந்தப் பெண் வந்தால்....வருவாளா ... அட வந்தால் என்ன பேசுவது. முதலில் அவள் பெயரைக் கேட்கவேண்டும். காதலிக்கும் பெண்ணின் பெயர் கூடத் தெரியாமல்... இருந்தால் என்ன. முதலில் எல்லாமே தெரிந்துதான் காதலிக்கிறோமா. பெயர் தெரியாவிட்டாலும் அவளை என்ன சொல்லி அழைப்பது..அன்பே எனலாமா.... காதலியே எனலாமா.. என்ன சொல்லி அழைப்பது எப்படி அழைப்பது. நேருக்கு நேர் பேசும்போது நாச்சுரலாக இருக்க வேண்டாமா.....முதலில் ஹாய் என்றோ ஹல்லோ என்றும் ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். பிறகு இருக்கவே இருக்கிறது பேப்பரில் எழுதி வைத்திருக்கும் விஷயங்கள் அவள்முகம் கோணாமல் படித்தால் நிறையவே பேச வேண்டும்.

தூரத்தே யாராவது சேலை கட்டி வந்தால் அது சந்தியாவா என்று எதிர்பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனவன் சந்தியா அருகில் வந்ததை எப்படி காணாமல் போனேன் என்று குழம்பினான் அருகில் வந்த சந்தியா அவனிடம் ஹாய் என்றாள். இந்த ஆங்கில மொழியால் எவ்வளவு சௌகரியம். இவனும் ஹாய் என்று விஷ் செய்தான். என்ன தைரியம் இருந்தால் துண்டுக்காகிதத்தில் எழுதி வரச் சொல்வீர்கள்..?” என்று பிடி பிடிக்கப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தவன் அவள் புன்னகையுடன் ஹாய் சொன்னதும் அவனையே நம்பாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். 

"உங்களைப் பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என்னும் ஒரு உந்துதலே அந்தத் துண்டுக்காகிதம். இந்த முறை துண்டுக்காகிதமல்ல. நேர்த்தியாக எழுதப் பட்ட கடிதம். Please take yor time and read it " என்றான். தமிழில் சொல்லத்தயங்குவது அன்னிய மொழியில் அனாயாசமாக வந்து விடுகிறது ஆங்கிலத்துக்கு ஜேசந்தியா கடித்ததை வாங்கி தன் ஜாக்கெட் உள்ளே பத்திரப் படுத்திக் கொண்டாள். ஐயோ என்ன அங்க வச்சுட்டீங்க படிக்கலையாஎன்று பாபு பதறினான் நீங்கள்தானே டேக் யுவர் டைம் என்றீர்கள்என்று சொல்லிக் கல கலவெனச் சிரித்தாள். ஏனோ அவளுக்கு பாபுவிடம் பலகாலம் பழகியதைப் போன்ற ஒரு  (B)பாவம் தோன்றியது. மீண்டும் ஜாக்கெட்டுக்குள் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கத் துவங்கினாள்  அவள் படிக்கும்போது அவளது முக பாவத்தையே பாபு பார்த்துக் கொண்டிருந்தான்.

உன்னை எப்படி அழைப்பதென்றே தெரியாமல் இக்கடிதம் எழுதினேன். அன்பே என்றழைக்கவா பேரழகே என்றழைக்கவா கண்ணே என்றழைக்கவா எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் இந்த இடம் வந்ததும் சந்தியா தலைதூக்கி பாபுவைப் பார்த்துப் புன்னகைத்தாள். அதைப் பார்த்ததும் பாபுவுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது இதையே  சௌந்திரராஜன் குரலில் பாடிப் பார்த்தீர்களா.?" என்று சந்தியா கேட்டதும் இவ்வளவு எளிதில் காதல் கைகூடும் என்று எண்ணிப்பார்க்காத பாபு நிறையே அசடு வழிந்தான்.

பிறகு தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு பிடி சாக்கலேட்டுகளை சந்தியாவுக்குக் கொடுத்தான் உன் இந்தப் பார்வைக்கு எது கொடுத்தாலும் தகும். ஆனால் தற்சமயம் இந்த இனிப்பே உள்ளது என்றவன் மேலே படிக்கச் சைகை காட்டினான்எப்படி அழைத்தாலும் உன் பெயர் சொல்லி அழைப்பதே சுகம் அல்லவா. உன் பெயரென்ன இதைப் படித்ததும் சந்தியாஎன்று கூறி முறுவலித்தாள்.என் பெயர் என்ன வென்று கேட்க வில்லையேஎன்ற பாபுவைப் பார்த்து சந்தியா பாபுஎன்றாள் அதெப்படி உனக்குத் தெரியும்?” கடிதத்தின் கடைசியில் உங்கள் பெயரை முதலிலேயே பார்த்து விட்டேனே

ஓ.. பலே ஆள்தான் மேலே படி"
நிதானமாகப் படித்துக் கொள்கிறேன் இப்போதான் நேருக்கு நேர் பார்க்கிறோமே பேசிக் கொள்ளலாம் என்றாள் சந்தியா. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டுத்தெரிந்து கொண்டனர்.
"இப்படிக்கண்டதும் காதல் என்பதில் உனக்கு உடன் பாடாஎன்று பாபு
கேட்டான். அந்த நிமிஷத்தில் அவன் வாயில் சனி இருந்திருக்க வேண்டும்.

(இதுவரையிலான கதை உருவானது ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயாவின் எண்ணவோட்டத்தில். மீதிக்கதை என் கண்ணோட்டத்தில்.)

அவள் அவனை நிதானமாக ஏறிட்டுப் புன்னகைத்தாள். “நீங்க அழைத்தவுடன் நான் வந்ததையும், கடிதத்தைக் கொடுத்தவுடன் வாங்கிக்கொண்டதையும் வைத்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா? என்றாள். பாபு அதிர்ந்துபோனான்.

பின் எதற்காக நான் அழைத்தவுடன் வந்தாய்?"

நீங்கள் எதற்காக அழைக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ளவந்தேன். தெரிந்துகொண்டுவிட்டேன். அதை ஏற்பதா கூடாதாவென்று யோசிக்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும்.”

என் முடிவு உன் கையில்தான் இருக்கிறது? நீ எப்போது உன் முடிவை சொல்வாய்?”

என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தமுடியாது. எனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது சொல்கிறேன்.”

என் தவிப்பைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாயே…”

ஆனால் மனத்துக்குப் பிடிக்கவேண்டாமா?"

என்னை எப்படி பிடிக்காமல் போகும்? எனக்கென்ன குறைச்சல்?"

என்ன குறைச்சலா? ஒரு ஆண்பிள்ளைக்கு இருக்கவேண்டிய துணிவு உங்களிடம் சற்றுக் குறைச்சலாகத்தானே இருக்கிறது?"

ஏன் அப்படி சொல்கிறாய்?"

பின்னே? அவன் அழைப்பையேற்று எதிரில் வந்து நிற்கும் பெண்ணிடம் காதலை நேரடியாகத் தெரிவிக்கும் துணிவில்லாமல் கடிதம் எழுதி நீட்டுபவர்களை வேறென்னவென்று சொல்வதாம்?” அவள் சொல்லிவிட்டு அவனைக் குறும்பாய்ப் பார்த்துப் புன்னகைத்தாள்.

இது என்ன புதுக்கதை? அதிர்ந்துபோனான் பாபு. நான் இவளிடமா என் காதலைச் சொல்ல விழைந்தேன்? இவள் தோழியிடமல்லவா? இவள் மூலம் தூதனுப்பலாம் என்று நினைத்தால் இவள் தன்னைக் காதலிப்பதாக நினைத்துவிட்டாளேகடிதத்தை முழுவதுமாகப் படித்திருந்தாலாவது கொஞ்சம் பிடிபட்டிருக்கும். இந்த அவசரக்குடுக்கையோ ஆரம்பத்தையும் முடிவையும் படித்துவிட்டு தனக்கு எழுதப்பட்ட கடிதமென்று நினைத்துவிட்டது போலும். அப்படியென்றால் சந்தியா என்பது இவள் பெயர்தானா? இக்கடிதம் இவளுக்கானது இல்லை என்பதை எப்படி இவளிடம் சொல்லிப் புரியவைப்பது?

மனத்துக்குள் பளிச்சென மின்னல் வெட்டியது. நொடியில் புத்தி மாறியது. ஏன் சொல்லவேண்டும்? இவளுக்கு என்ன குறை? இவளும் அழகாக இருக்கிறாள். கை நிறைய சம்பாதிக்கிறாள். நாகரிக நங்கையாக இருக்கிறாள். இதுவரை காதலியாய் மனத்தில் வரித்தவளின் பெயரும் தெரியவில்லை. ஆனால் இவள் பெயர் முதற்கொண்டு எல்லாம் தெரிந்துவிட்டது. இனி அவளிடம் தன் காதலைத் தெரிவித்து அவள் அதை ஏற்பாளா மாட்டாளா என்று உறுதியாகத் தெரியாத நிலையில்காதலை எதிர்பார்த்து எதிரில் நிற்பவளிடம் காதலை சொல்வதில் என்ன தவறு? வயிற்றுப்பிள்ளையை நம்பி இடுப்புப் பிள்ளையை இழக்க சம்மதிப்பாளா ஒருத்தி?

சட்டென்று அவள் கரங்களைப் பற்றினான். நேரில் பேசும் துணிவுதான் இப்போது வந்துவிட்டதே. இனி கடிதம் எதற்கு?” அவள் கையிலிருந்த கடிதத்தைப் பறித்து சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்துவிட்டு சொன்னான், “ஐ லவ் யூ, சந்தியா”. “ஐ லவ் யூ டூ, பாபுஎன்றாள் அவள். 

முகவரியற்ற கடிதத்தின் துணுக்குகளைத் துரத்திப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது காற்று.   

*******************************************************************

 (படம்: நன்றி இணையம்)

6 March 2014

ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம் (ஆஸ்திரேலிய காடுறை கதை - 4)




சில வருடங்களுக்கு முன்பு நாளேடு ஒன்றில் வெளியான பத்திச்செய்தி:

ஒரு மழைநாளில் அதிகாலை நான்கு மணிக்கு கிரைண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படிக்கட்டுகளில் சிறுவனொருவன் படுத்துறங்கிக் கொண்டிருப்பதைக் காவலர் ஒருவர் பார்த்தார். அவனை எழுப்பி யாரென்று விசாரித்தபோது, அவன் அந்த நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும் வழக்கமாக ஆறு மணிக்கு அவனுடைய பணிநேரம் துவங்கும் என்றும் அன்று தாமதமாகிவிட்டதென்று பயந்து ஓடி வந்ததாகவும் சொன்னான். காவலர், சிறுவனின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி ஆராய்ந்தார். சுத்தமான ஏப்ரான் துணியொன்றும் மூன்று ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் சர்க்கரைப் பாகும் அதிலிருந்தன.

அந்தச் சின்னப் பையன் கண்விழித்தபோது பணிக்குச் செல்லத் தாமதமாகிவிட்டதென்று நினைத்துவிட்டானாம். "நீ ஏன் உன் அம்மாவை எழுப்பி நேரம் கேட்கவில்லை?" என்ற கேள்விக்கு, அவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்ததாகச் சொன்னான். "நீயே ஏன் நேரம் பார்த்தறியவில்லை?" என்ற கேள்விக்கு, அவர்கள் வீட்டில் கடிகாரம் இல்லையென்றான். "கடிகாரம் இல்லையென்றால் உன் அம்மாவுக்கு மட்டும் எப்படி நேரம் தெரியும்" என்ற கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை. தாயைச் சார்ந்து வாழும் சிறார்களுக்கெல்லாம் தங்கள் தாயின் மதிநுட்பத்தின்பால் அளவிடற்கரிய நம்பிக்கை இருப்பதுபோல் அவனுக்கும் இருந்திருக்கலாம். அவனுடைய பெயர் ஆர்வி ஆஸ்பினால். அவன் ஜோன்ஸ் ஆலியில் வசித்து வந்தான். அவனுக்கு அப்பா இல்லை.

நெஞ்சைத் தொடும் அந்நிகழ்வைத் தொடர்ந்து மற்றொரு செய்தியை அதே பத்திரிகை சில நாட்களுக்குப் பின் பெருமகிழ்வோடு வெளியிட்டது. 

தயாள குணமுள்ள பெண்ணொருத்தி தன் தோழிகளிடம் நிதி திரட்டி, கிரைண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படிக்கட்டுகளில் படுத்துறங்கிய சிறுவனுக்கு ஒரு புதிய கடிகாரம் வாங்கிக் கொடுத்தாள் என்பதே அச்செய்தி.

அந்தக் கடிகாரம் சிறுவனின் தாயிடம் கொடுக்கப்பட்டது என்பதும் அவள் நன்றிப் பெருக்குடன் வாங்கிக்கொண்டாள் என்பதும் தொடர்ந்து வெளியிடப்பட்ட செய்திகள். இவையெல்லாம் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் என்று மற்றோர் ஏடு தெரிவித்தது. தயாள குணமுள்ள அப்பெண், கிரைண்டர் பிரதர்ஸ் உரிமையாளரின் மகள்தான் என்று தெரியவந்தபோது, நெஞ்சைத் தொடும் அந்நிகழ்வின் நீட்சி வசீகரமிழந்தது.

ஈஸ்டர் விடுமுறைக் காலத்தின் கடைசி நாள். ஆர்வி ஆஸ்பினால் சளியாலும் தொண்டை அழற்சியாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடந்தான். இரவு மணி ஒன்பது இருக்கும். ஜோன்ஸ் ஆலியின் கடைத்தெருக்களில் வர்த்தகம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"இப்போது பரவாயில்லை அம்மா. முன்னைக்கு இப்போது நன்றாக இருக்கிறேன். சர்க்கரையும் வினிகரும் கபத்தைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இருமல் தொந்தரவும் இப்போது இல்லை…" சொல்லி முடிக்குமுன்னரே தொடர் இருமல் வந்து கொஞ்ச நேரத்துக்கு அவனைப் பேசவிடாமல் செய்தது. மூச்சைத் திரும்பப் பெற்றதும் அவன் சொன்னான், "நன்றாக இருந்தாலும் சரி, மோசமாக இருந்தாலும் சரி, நான் நாளைக்கு வேலைக்குப் போயே ஆக வேண்டும்! அந்தக் கடிகாரத்தை எடுத்துக் கொடுங்கள் அம்மா!"

"உன்னைப் போகக்கூடாது என்று நான் சொல்லிவிட்டேன். அது உன் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!"

"பேசிப் பயனில்லை அம்மா. நம்மால் பட்டினி கிடக்க முடியாது. ஒருவேளை, எனக்குப் பதிலாக வேறு யாரையாவது வேலைக்கு வைத்துவிட்டால் என்ன செய்வது? அந்தக் கடிகாரத்தை எடுத்துக் கொடுங்கள் அம்மா!"

"நான் குழந்தைகளில் யாரையாவது அனுப்பி உனக்கு உடல்நிலை சரியில்லையென்று சொல்லச் சொல்கிறேன். நிச்சயமாக, ஒன்றிரண்டு நாள் விடுப்புக் கொடுப்பார்கள்."

"அதனால் பயனிருக்காது அம்மா. அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் கிரைண்டர் பிரதர்ஸுக்கு என்ன அக்கறை? நீங்கள் கவலையை விடுங்கள். அம்மா! நான் என் தம்பி தங்கைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். என்னிடம் அந்தக் கடிகாரத்தைக் கொடுங்கள்!"

அவள் அவனிடம் கடிகாரத்தைக் கொடுத்தாள். அவன் அதற்கு சாவி கொடுத்து அலாரம் வைத்தான்.

"மணியடிப்பதில் ஏதோ தவறு நேர்கிறது. இரண்டு இரவுகளாகத் தவறாகவே அடிக்கிறது. இப்போது சரி செய்துவிட்டேன். காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்திருக்கிறேன். அப்போது எழுந்தால்தான் உடை மாற்றிக்கொண்டு சீக்கிரம் கிளம்ப முடியும். அவ்வளவு தூரம் நடக்க வேண்டியிராமல் இருந்தால் நன்றாக இருக்கும்."

கடிகாரத்தின் முகப்பில் பொறித்திருந்த வாசகத்தை வாசித்தான்.

சீக்கிரமாய்த் தூங்கி சீக்கிரமாய் எழுதல்
ஒருவனுக்கு அறிவும் செல்வமும்
ஆரோக்கியமும் தரும் வழிகள்!

இந்த வாசகத்தை இதற்கு முன்பும் பல தடவை வாசித்திருக்கிறான். வாசகத்தின் சந்தமும் ஓசைநயமுமே கவனத்தை ஈர்த்திருந்தன. எவ்வித ஒப்பீடுகளுமின்றி அவன் அதை மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சடிக்கப்பட்ட ஒன்றில் தனக்கு ஐயம் எழக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. இதுவோ அச்சையும் மீறி ஆழமாய்ப் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் முகத்தில் ஒரு புத்தொளி படர்ந்தது. அவன் அந்த வாசகத்தை ஊன்றிப் படித்தான். ஒருமுறை வாய்விட்டுப் படித்தான். மீண்டும் மனத்துக்குள் அமைதியாக ஒருமுறை வாசித்துப் பார்த்தான்.

சட்டென்று, "அம்மா! இது பொய் சொல்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்றான். தாய் அந்தக் கடிகாரத்தை வாங்கித் தாங்குபலகையில் வைத்துவிட்டு அவனை ஸோஃபாவில் நன்றாகப் படுக்க வைத்துவிட்டு விளக்கை ஊதியணைத்தாள்.

ஆர்வி தூங்கிவிட்டாற்போலிருந்தது. ஆனால் அவளோ, அவள் வாழ்க்கையின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி யோசித்தபடி விழித்திருந்தாள். ஒருநாள் காலையில், பணியிடத்தில் இறந்துபோய், வீட்டுக்குத் தூக்கிவரப்பட்ட தன் கணவனைப் பற்றி, சிறைக்குச் செல்லாத காலங்களில் ரொட்டிக்காக மட்டுமே தாயைத் தேடிவரும் மூத்த மகனைப் பற்றி, அடுத்த ஊரில் தனியாக வசித்துக்கொண்டு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்வரையிலும் சுகமாய் வாழும் இரண்டாமவனைப் பற்றி, பள்ளிக்குச் செல்லவேண்டிய வயதில் கிரைண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தில் தன் பால்யத்தை அழித்துக்கொண்டு, தாய்க்கு உதவும் நோக்கோடு துணிவுடன் போராடிக்கொண்டிருக்கும் பலவீனமான சிறுவன் ஆர்வியைப் பற்றி, அடுத்த அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் அறியாக் குழந்தைகள் ஐந்தினைப் பற்றி, விடியற்காலை ஐந்தரை மணி முதல் எட்டு மணி வரையிலும் துடைத்துப் பெருக்கும் வேலையும் அதன் பின் நாள் முழுவதும் சலவைத் தொழிலும் செய்து கஷ்ட ஜீவனம் நடத்தும் தன்னைப் பற்றி, வீட்டுக்கு வாடகை கொடுக்க வழியில்லாமல் இப்படியொரு மோசமான சூழலில் குழந்தைகளை வளர்ப்பது பற்றி……

ஆர்வி தூக்கத்தில் ஏதோ முனகினான். "நீ இன்னும் தூங்கவில்லையா, ஆர்வி?" தாய் கேட்டாள். "தொண்டை வலிக்கிறதா? ஏதாவது வேண்டுமா?"

"தூங்கத்தான் நினைக்கிறேன் அம்மா, ஆனால்அதற்குள் நேரம் முடிந்துவிடுமென்று நினைக்கிறேன்."

"எதற்குள், ஆர்வி?" மகன் காய்ச்சல் வேகத்தில் உளறுகிறானோ என்று பயந்தவளாய் அவசரமாகக் கேட்டாள்.

"அலாரம் அடிப்பதற்குள்."

அவன் தூக்கத்திலேயே பேசிக்கொண்டிருந்தான். அவள் மெல்ல எழுந்து சென்று அலாரத்தை இரண்டு மணி நேரம் தள்ளி வைத்துவிட்டுப் படுத்தாள்.

'இப்போது அவன் நிம்மதியாகத் தூங்கலாம்' அவள் தனக்குத் தானே மெதுவாகச் சொல்லிக்கொண்டாள்.

திடீரென்று ஆர்வி எழுந்து உட்கார்ந்துகொண்டு சொன்னான், "அம்மாஅலாரம் அடித்துமுடித்துவிட்டதென்று நினைக்கிறேன்." பதிலுக்குக் காத்திராமல் மறுபடியும் படுத்து உறங்கிப்போனான்.

மழை விட்டிருந்தது. பளிச்சிடும் நட்சத்திரங்கள் நிறைந்த வெளிறிய வானம், கடலுக்கு, நகருக்கு, மாளிகைகளுக்கு, குடிசைகளுக்குஎல்லாவற்றுக்கும் மூடி போட்டது போல் கவிழ்ந்திருந்தது. ஆர்வி ஆஸ்பினாலின் வீட்டு மேற்கூரைத் துவாரங்கள் வழியே தென்சிலுவை விண்மீன் கூட்டமும் அதைச் சூழ்ந்திருந்த சில விண்மீன்களும் காட்சியளித்தன.

கிரைண்டர் மாளிகையின் முற்றத்தில் நிலவொளிர்ந்துகொண்டிருந்தது. நீர் வடிந்துகொண்டிருக்கும் தோட்டமும், ஈஸ்டர் நடனத்துக்கென்று ஒளியலங்காரம் செய்யப்பட்ட சாளரங்களும், பிரத்யேக மேசை நாற்காலிகளால் அழகுபடுத்தப்பட்ட வரவேற்பறையும், அங்கமர்ந்திருந்த விருந்தினர்களின் மனம் உருகும்படி செல்வச் சீமாட்டியான கிரைண்டரின் மகள்களில் ஒருத்தி, தெருவோரத்தில் துப்புரவுப் பணிபுரியும் சிறுவனைப் பற்றிப் பாடிய சோக கீதமும் ஒன்றிணைந்து அந்த இரவை அற்புதமானதாக ஆக்கிக்கொண்டிருந்தன.

கடிகாரத்தில் கோளாறு அல்லது திருமதி ஆஸ்பினால் செய்த தவறுஏதோ ஒன்று கடிகாரத்தை அகால இரவில் அலறச் செய்தது. அவள் சிரமத்துடன் விழித்து, ஆர்வி எழுவதை எதிர்பார்த்து அசையாது படுத்திருந்தாள். அவன் எழுவதாய்த் தெரியவில்லை. அவள் பயத்தால் வெளிறிய முகத்தோடு ஸோஃபாவின் பக்கம் பார்த்தாள்.

சன்னல் வழியாக உள்ளே வந்த தெருவிளக்கின் வெளிச்சத்தில், அவன் அசைவற்றுக் கிடப்பது தெரிந்தது. அலாரச் சத்தம் கேட்டு ஏன் அவன் எழவில்லை? தூக்கத்தில் சட்டென்று விழித்துக்கொள்பவனாயிற்றே!

"ஆர்வீ!…" தாய் அழைத்தாள். பதிலில்லை. "ஆர்வீ!…" அவள் மறுபடியும் அழைத்தாள். அவள் குரல் பயத்தால் நடுக்கமுற்று விநோதமாய் ஒலித்தது. ஆர்வி பதிலளிக்கவே இல்லை.

"கடவுளே!" அவள் முனகினாள்.

அவள் எழுந்து ஸோஃபாவின் அருகில் வந்து நின்றாள். ஆர்வி வழக்கமாய்த் தூங்கும், அவனுக்கு விருப்பமான நிலையில்கைகளைக் கட்டியபடி மல்லாந்து படுத்திருந்தான். மேற்கூரையையும்அதைத் தாண்டி கடவுள் இருப்பதாகச் சொல்லப்படும் வெளியையும் வெறித்தபடி அவனுடைய கண்கள் அகலத் திறந்திருந்தன.

*************************************

(ஆஸ்திரேலியப் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய Arvie Aspinall’s Alarm Clock என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்- 10/2/14 நிலாச்சாரல் இணைய தளத்தில் வெளியானது)

(படம் நன்றி: இணையம்)