13 July 2015

ஆல் போல் தழைத்து...


அண்டைவேர்கள்

விழுதுகள்

அடிபெருத்த ஆலமரம்


"ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!" என்பது திருமணங்களின்போது பெரியவர்களால் வழங்கப்படும் ஆசி. கிராமப்புறங்களில் ஆற்றோரங்களில் வளர்ந்திருக்கும் ஆலமரத்திலிருந்து சடைசடையாய்த் தொங்கும் விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்களைப் பார்த்திருப்போம். மாடு கன்று ஈன்றவுடன் அதன் நஞ்சுக்கொடியை பால்மரமான ஆலமரத்தில் கட்டிவைப்பார்கள். அப்போதான் மாடு நிறைய பால் கறக்கும் என்பது மக்களிடம் இன்றளவும் உள்ள நம்பிக்கை.

மேலே உள்ள படங்களில் காணப்படுவது ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட ஆலமர வகைகளுள் ஒன்றான Moreton bay fig (Ficus macrophylla). இது 15 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கிளைகளில் துவங்கி நிலம் தொட்டு விழுந்தால் அதை விழுது (aerial roots) என்கிறோம். அடித்தண்டில் உருவாகி அகலமாய்ப் பரப்பி அண்டக்கொடுத்தால் அவற்றை அண்டைவேர் (buttress roots) என்கிறோம். இந்த அண்டைவேர்கள் மதில்சுவரைப் போன்று ஓராள் உயரத்துக்கு எழும்பி நிற்பதைப் பார்த்தால் வியப்புதான் வருகிறது. 

ஒவ்வொரு உயிரினமும் தன்னினம் தழைக்க எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அவற்றுள் ஆல் தழைக்க மேற்கொள்ளும் முயற்சிகளனைத்தும் அசரவைக்கும் முயற்சிகள். தூண்களையும் சாரங்களையும் தானே உருவாக்கி தன்னைத்தானே தாங்கிநிற்கும் ஆலமரத்தின் சாதுர்யம் ஒரு அதிசயம் என்றால் பூவாமல் காய்க்கும் மர்மமும் ஒரு அதிசயம்தானே? அதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போமா?

18 comments:

  1. ஆலம் விழுதுகள் போல்...
    உறவு ஆயிரம் வந்துமென்ன...?
    வேரென நீ இருந்தாய்...
    அதில் நான் வீழந்து விடாது இருந்தேன்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆலமரத்தோடு ஒப்பிட்ட அன்பின் உறவுகளை உன்னதமாய்க் காட்டும் வரிகளை இங்கு குறிப்பிட்டமைக்கும் தொடர்வதற்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. வணக்கம்,
    ஒவ்வொரு புகைப்படமும் அருமை,
    காத்திருக்கிறோம்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசித்தமைக்கும் தொடர்வதற்கும் நன்றி மகேஸ்வரி.

      Delete
  3. அருமையான படத்தகவல்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படங்களையும் தகவல்களையும் ரசித்தமைக்கு நன்றி சுரேஷ்.

      Delete
  4. ஆலமரம் என்று சொல்லக் கேட்டாலே பாரதிதாசனின் “கிளையினில் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு....” என்னும் பாடலே நினைவுக்கு வருகிறது. ஆலம் விழுதைப் பிடித்து ஆடல் இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆலமரம் பற்றிய பாரதிதாசனின் வரிகளைக் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி ஐயா. மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கையில் மரத்தோடு இயைந்த நம் வாழ்வும் சிதைக்கப்படுவது உண்மையே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  5. அருமை.. அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ஜனா சார்.

      Delete
  6. அருமையான ஆலமர பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வெகுநாட்களுக்குப் பிறகான தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  7. படங்கள் அருமை! அதிலும் வேர்கள் நீண்ட முதற்படம் அழகு! விழுதுகள் ஊன்றித் தாய் மரத்தைத் தாங்குவது அதிசயம் தான். தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நேரில் பார்க்கும்போது அந்த வேர்களின் பிரமாண்டம் இன்னும் பிரமிக்கவைக்கும். படங்களையும் தகவல்களையும் ரசித்தமைக்கு மிகவும் நன்றி அக்கா. தொடர்ச்சியை இன்று வெளியிட்டிருக்கிறேன்.

      Delete
  8. ஆலமரம் பற்றி மேற்கோண்டு தகவல்கள் அறியக் காத்திருக்கிறேன் . பதிவுக்குப் பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. தொடர்ச்சியை இன்று வெளியிட்டுள்ளேன்.

      Delete
  9. வணக்கம் சகோ.

    ஆலமரம் ஆஸ்திரேலியாவிலுமா? இதன் விதைகளை மீனின் சினைமுட்டைக்கு உவமையாகச் சொல்வார்கள். எங்குப் படித்தேன் என்பது நினைவில்லை.

    நாலடியாரில் ஒரு பாடல் வரும்.

    ஆல் விதை சிறியதுதான் என்றாலும் அதன் விருட்சம் வித்தோடு ஒப்பிட மிகப் பெரியது.

    தகுந்தவர்களுக்கு செய்யும் உதவி சிறியதென்றாலும் அதன் முன் வானமே சிறிதாகிவிடும் என்று..

    உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
    இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
    தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
    வான்சிறிதாப் போர்த்து விடும்.

    தொடரக் காத்திருக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  10. ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல.. உலகெங்கும் பல நாடுகளிலும் காணப்படுகிறது. மீன் முட்டைக்கு உவமை சொல்லும் பாடல் வெற்றிவேற்கையில் வருகிறது.
    தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை
    தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
    நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
    அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
    மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

    தங்கள் குறிப்பால் தேடியறிந்தேன். நன்றி விஜி சார். நாலடியார் பாடலையும் இங்கு குறிப்பிட்டுச் சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.