Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

31 March 2016

வசவும் இசைவாய்...

முந்தைய தலைமுறைவரை பயன்பாட்டில் இருந்த உலக்கை இப்போது பரண்மேல் கவனிப்பாரற்றுக் கிடப்பதைப் பற்றிய கவிதையொன்றை முன்பு ஃபேஸ்புக்கில் வாசித்தேன். அதை வாசித்தபோது என் மனத்தில் தோன்றிய வரிகள். 


உலக்கைக்குமொரு காலம் 
உரியதாயிருந்தது அப்போது.
உடன் இன்னுஞ்சிலவற்றுக்கும்
உரியவரை வசைபாடும் உபயோகமிருந்தது
குதிர், குந்தாணி, குத்துக்கல், தீவட்டி,
குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு...
இப்படியும் இன்னபிறவுமாய்!
அர்த்தமுள்ள அத்தனையும் காலாவதியாகிவிட
கால்முளைத்தாடுகின்றன காதுகூசும் வசவுகள்!




"உலக்கை... உலக்கை... செக்குலக்கை... தண்ணி வழியிது, பார்த்துட்டு சும்மா நிக்கிறியே... குழாயை நிறுத்தினால் என்ன? ஒரு ஆள் சொல்லணுமா?"

"முண்டம்... அடுப்பில் எண்ணெய் வச்சிருக்கையில் ஈரக்கையை உதறுறியே அறிவில்லே?"

"குதிர் மாதிரி வளர்ந்திருக்கு, ஒரு வேலையும் செய்யத் துப்பு கிடையாது."

என்னுடைய பால்யத்தில் இவையெல்லாம் வசைச்சொற்கள் என்னுமளவில் மட்டுமே புரிதல் இருந்தது. இப்போது யோசிக்கையில் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பது புரிகிறது. 

நம் வீட்டுப் பெரியோர்களாலும் முன்னோர்களாலும் உபயோகிக்கப்பட்ட அர்த்தமுள்ள சில வசைச்சொற்களும் இழிசொற்களும் இதை எழுதும் தருணத்தில் நினைவுக்கு வருகின்றன. நம்மில் பலரும் இவற்றை எங்கேயாவது எப்போதாவது  நிச்சயம் கேட்டிருப்போம். பொருள் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

உலக்கைதீவட்டிதண்டம், குத்துக்கல், பிடிச்சுவச்சப் பிள்ளையார் தானாக முன்வந்து எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவர் செய்வதை சும்மா வேடிக்கை பார்த்தபடி இருப்பவர்கள். 


குதிர்

குந்தாணி

குதிர், குந்தாணி, சோத்துப்பானைதின்று தின்று விட்டு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தால் உட்கார்ந்த இடம் என்று சோம்பி இருப்பவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள்

குதிர்  என்பது நெல் கொட்டிவைக்கும் மரக்கலன்;

குந்தாணி என்பது நெல்லை உரலிலிட்டுக் குத்தும்போது வெளியே சிந்தாமல் இருக்க வாய்ப்புறத்தில் போடப்பட்டிருக்கும் கல் வளையம்

கோவில்மாடு - கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட காளைகள் தம்மிஷ்டத்துக்கு மேய்ந்தும் திரிந்தும் வாழ்வதுபோல் எந்தக் கவலையும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தன் விருப்பத்துக்கு வாழ்பவர்கள். 

கோவில் பெருச்சாளி - பெரிய கோவில்களுள் வாழும் பெருச்சாளிகளுக்கு நைவேத்தியம், பிரசாதம், படையல், பக்தர்களின் வேண்டுதல் என்று எந்த வடிவிலாவது எப்படியாவது உணவோ, தானியமோ கிடைத்துக்கொண்டே இருக்கும். அவற்றைத் தின்று கொழுத்துவளரும் எலிகளைப் போல எந்த உடல் உழைப்பும் இல்லாமல் அடுத்தவர் உழைப்பில் உண்டு உடல் பெருக்கும் சோம்பேறிகளைக் குறிப்பது. 

பழம்பெருச்சாளி - அடுத்தவர் உழைப்பில் உடல் பெருக்கும் சோம்பேறிகளுள்ளும் பெரும் அனுபவசாலி, சுரண்டலில் கைதேர்ந்தவர். 

பழம்பஞ்சாங்கம் - பழைமைவாதத்தில் ஊறியவர்.

புண்ணாக்கு – எண்ணையெடுத்த பின்பு மீறும் சக்கையைப் போல் எந்த விஷயஞானமும் இல்லாதவர்கள்.

பன்னாடை – பனை மரம்தென்னை மரங்களில் கீற்றுகளைத் தாங்கிப்பிடிக்க அமைந்த இயற்கையின் சிறப்பு. பயனுள்ள இதை ஏன் பயனற்றவர்களுக்கான வசையாக உபயோகிக்கிறார்கள் என்று யோசிக்கையில்தான் விஷயம் பிடிபட்டது. இந்த பன்னாடை சல்லடை போன்றிருப்பதால் பழங்காலத்தில் எண்ணெய் வடிகட்டியாகப் பயன்பட்டது. சாரத்தை கீழே விட்டு தூசு தும்புகளைத் தக்க வைப்பது போல் பயனற்றவற்றை மனத்தில் தக்கவைக்கும் தன்மையினர்.

பன்னாடை

கூமுட்டை – கூழ்முட்டை – வெளியே நல்ல தோற்றமிருந்தாலும் உள்ளே விஷயஞானம் இல்லாதவர்கள்.

ஓட்டைவாய் - எந்த ரகசியத்தையும் தன்னகத்தே வைத்திருக்க இயலாதவர்.

குறுமுட்டு – அளவு கடந்த செருக்குடையவன் என்கிறது லெக்சிகன் தமிழகராதி

கருங்காலி, குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு - காட்டிக்கொடுப்பவர்கள், இனத்துரோகிகள்.. தன் குலத்தை (அ) குடும்பத்தைத் தானே கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். (இரும்புக்கோடரிக்கு கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட உறுதியான கைப்பிடிதான் மற்ற கருங்காலி மரங்களை வெட்ட உதவி செய்கிறது என்பதால் இப்பட்டம்) 

விளக்கெண்ணெய் – வழவழா கொழகொழா என்று விஷயமில்லாமல் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள்.

வெண்ணெய்வெட்டி – மழுங்கலான கத்தியைக் கொண்டு வெண்ணெய் போன்ற மிக மென்மையான பொருளைத்தான் வெட்டமுடியும். செயலில் தீரம் காட்டாத வாய்ச்சொல் வீரர்களுக்குரிய பட்டம்.

உதவாக்கரை - மக்கள் புழங்குவதற்குப் பயன்படாத தன்மை கொண்ட ஆற்றங்கரை அல்லது குளத்தங்கரை போன்றவர்கள். இருந்தும் உபயோகமில்லாதவர்கள்.

களிமண் – தண்ணீரை உள்ளிழுக்கும் தன்மையற்றதால் செடி வளர உபயோகப்படாது. சொல்வதை உள்வாங்கும் திராணியற்றவர்களைக் குறிப்பது.

சென்னாக்குன்னி - சதா நச்சரிப்பவர்.

முண்டம் - தலையில்லாதவன். தலையிருந்தால்தானே அதில் மூளையும் இருக்கும்? எனவே மூளையில்லாதவன்.

மண்ணாந்தை, தெம்மாடிதத்திதறுதலை - சாதுர்யமில்லாதவர்கள்

அறிவுக்கொழுந்து - அவர்களுடைய அறிவு இப்போது கொழுந்தாக, இளந்தளிராக  இருக்கிறது. முற்றி வளர காலமெடுக்கும் அதாவது அவர்களிடத்தில் புரிதல் அரிதாம்.  

அகராதி - தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவப்பேச்சும் செய்கையும் கொண்டவர்கள்.

எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் - கஞ்சன், கருமி

கல்லுளி மங்கன், கல்லுப்பிள்ளையார் - அழுத்தக்காரன் (கல்லுளியால் செதுக்கினாலும் அசைந்துகொடுக்காத கல் போல எவ்வளவு தூண்டினாலும் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தாது அழுத்தமாய் மறைத்துவைப்பவன்)

கிராமப்புறங்களில் அடுத்தவரை சாபமிடவென்று சில வசைச்சொற்களை உபயோகப்படுத்திக் கேட்டிருப்போம். கழிச்சலில் போக என்பார்கள். அந்தக்காலத்தில் காலரா வந்து வாந்தி பேதியால் இறந்தவர்கள் அதிகம். அப்படி பேதி வரவேண்டும் என்ற சாபம்தான் அது. காளியாய் கொண்டு போக என்றால் அம்மை வரவேண்டும் என்ற சாபம். இப்போது காலரா, அம்மை போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் வந்துவிட்டதால் அந்த சாபங்கள் பலிப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.

இவை போக சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, உம்மணாமூஞ்சி, அழுகுணி, புளுகுணி, மடையன், கிறுக்கன், கேணன், வம்பன், மூர்க்கன், வாயாடி, அடங்காப் பிடாரி, சண்டி, விடாக்கொண்டன், கொடாக்கொண்டன், அழுக்குப்பாண்டை, பயந்தாங்கொள்ளி, தொடைநடுங்கி, மேனாமினுக்கி, கோள்மூட்டி போன்ற காரணப்பெயர் வசவுகளுக்கு விளக்கம் தேவைப்படாது அல்லவா?

யாவும் எவ்வளவு அர்த்தமுள்ள வசவுகள்.. இன்னும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம், இப்போதும் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரைக்கும்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

இவை தவிரவும் குரங்கு, கோட்டான், எருமைபன்றிநாய்பேய் போன்று கோபமாகவும், செல்லமாகவும் வெளிப்படும் விசேட வசைச்சொற்களை நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறோம் அல்லவா? 

(படங்கள் உதவி: இணையம்)

2 May 2015

கீதமஞ்சரி வலைப்பூவில் சில சேர்க்கைகள்!





கீதமஞ்சரியின் தொடர்வாசகர்களான அனைவருக்கும் அன்பான வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று என்னுடைய பல பதிவுகள் தங்களுடைய டாஷ்போர்டில் வரிசையாக வந்துநிற்பதைப் பார்த்து பலருக்கும் வியப்பு. எப்படி தவறவிட்டோம் இத்தனைப் பதிவுகளை என்று அல்லது எப்படி இத்தனைப் பதிவுகள் அதுவும் பிப்ரவரி, மார்ச் மாதப்பதிவுகள் இப்போது என்று. அனைத்துப் பதிவுகளுக்கும் சலிக்காமல் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த கோபு சார் அவர்களுக்கும் ஜிஎம்பி ஐயா அவர்களுக்கும் அன்பான நன்றி. இருவரும் இந்த சந்தேகத்தைக் கேட்டிருந்தார்கள். விளக்கம் அளிக்கவேண்டியது என் கடமை அல்லவா?




நான்கைந்து மாதங்களுக்கு முன் 'விசும்பின்கீழ் விரியும் உலகு' என்ற பெயரில் வலைப்பூ ஒன்று துவங்கி அதில் நான் எடுக்கும் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தேன். அவ்வப்போது புகைப்படங்கள் குறித்த சிற்சிறு தகவல்களும் வெளியிட்டுவந்தேன். எதற்கு தனித்தனியாக வலைப்பூக்கள் என்று நினைத்து என்னுடைய ஆக்கங்கள் அனைத்தையும் ஒரே வலையில் சேகரிக்கும் முயற்சியாக அவ்வலைப்பூவையும் கீதமஞ்சரியுடன் இரண்டுநாட்களுக்கு முன் இணைத்துவிட்டேன். அதன்காரணமாகவே அந்தப் பதிவுகள் புதிதாக தங்களுடைய டாஷ்போர்டில் தொடர்பதிவுகளாக காட்சியளித்திருக்கின்றன. இப்படி வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பதிவுகளைப் பார்வையிட்ட கருத்திட்ட பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி. 



வலைப்பூ சேர்க்கையுடன் இன்னொரு சேர்க்கையும் கீதமஞ்சரியில் நிகழ்ந்திருக்கிறது. ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (ATBC) என்னும் இணைய வானொலியில் காற்றினிலே வரும் கீதம் என்ற பெயரில் வாரந்தோறும் ஒருமணி நேர திரையிசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக முன்பே தெரிவித்திருந்தேன் அல்லவா? அந்த நிகழ்ச்சியைக் கேட்க நேரம் ஒத்துவராத பல நண்பர்கள் அவற்றை வலையில் பகிர்ந்தால் கேட்டு மகிழமுடியும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவர்களுக்காக இந்த வலையின் விட்ஜெட்களில் ஒன்றாக காற்றினிலே வரும் கீதம் என்ற தலைப்பில் வானொலி நிகழ்ச்சிகள் (ஏற்கனவே ஒலிபரப்பானவை) சிலவற்றை இணைத்திருக்கிறேன். வாரமொருமுறை புதிய நிகழ்ச்சிகள் மாற்ற உத்தேசம்.  



நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் கேட்டு மகிழுங்கள். வானொலி நிகழ்ச்சி பற்றிய கருத்தோ திருத்தமோ ஆலோசனையோ தெரிவிக்க விரும்புபவர்கள் கீதமஞ்சரியின் எந்தப் பதிவின் பின்னூட்டத்திலும் வானொலி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு தெரிவிக்கலாம் அல்லது jgeetham71@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம். அனைவரின் ஆதரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன். நன்றி. 




8 July 2012

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் திரும்பிய புத்தகம்



1934 இல் மெக்கி என்னும் சிறுவனுக்கு வயது 13. அந்த வயதில் கதைப்புத்தகங்களை விரும்பாத குழந்தைகள் யார்? அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள மெளண்ட் கிளமெண்ட் பொது நூலகத்திலிருந்து அவன் எடுத்துச் சென்ற ஒரு கதைப்புத்தகம் அவனை வெகுவாக ஈர்த்தக் காரணத்தால் அதைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லாமல் போய்விட்டது. நாளை நாளை என்று ஒத்திப்போடப்பட்டு ஒரு தருவாயில் அது அவனது சொத்தாகவே மாறிவிட்டது.

இப்போது மெக்கியின் வயது 89. தன் பொக்கிஷங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அவருக்கு இப்புத்தகத்தை இப்போதாவது நூலகத்திடம் ஒப்படைத்துவிடச் சொல்லி மனசாட்சி படுத்தியதாம். உடனே செயல்படுத்திவிட்டார். எப்படி?

இந்தப் புத்தகத்தை இத்தனை நாள் தான் வைத்திருந்ததற்காக ஒரு மன்னிப்புக் கடிதமொன்றை எழுதி இந்தப்புத்தகத்துடன் வைத்து நூலகத்துக்கு தபாலில் அனுப்பிவிட்டார். ஏன் நேரில் போகவில்லைங்கறீங்களா? அவருக்குத் தெரியுமே, இந்தப் புத்தகத்துக்கான அபராதம் கட்டவேண்டியிருந்தால் அவருடைய சொத்தையே அழித்தாலும் முடியாது என்பது!

ஆனால் நூலகம் என்ன சொன்னது தெரியுமா? "அவர் அபராதம் கட்டத் தேவையில்லை, அவருடைய இந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய புத்தகத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்போறோம்" அப்படின்னு சொல்லி அந்தப் புத்தகத்தின் புதிய பிரதி ஒன்றையும் இலவசமா அவருக்கு அனுப்பியிருக்காங்களாம். எத்தனை வியப்பான செய்தி!

சரி, அப்படி திருப்பித் தரமுடியாதபடி அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? இருக்கிறது. ஒரு பாவப்பட்ட சிறுவனின் கதை அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல பெண் எழுத்தாளர் மேரி லூயிஸ் எழுதிய ‘A Dog Of Flanders’  என்ற புத்தகம்தான் அது.

குழந்தையிலேயே அநாதையாக்கப்பட்ட ஒரு சிறுவன் அவனது வறிய தாத்தாவால் வளர்க்கப்படுகிறான். அவனுக்குத் துணை ஒரு நாய். அதுவும் அவனைப்போலவே ஒரு பாவப்பட்ட ஜீவன். இருவருக்குள்ளும் உண்டான நட்பும் அதனோடு இழையோடும் அவன் வாழ்வும் அவர்களின் துயரமுடிவுமே கதை! இந்தக் கதை 1975 வாக்கில் தொலைக்காட்சித் தொடராகவும் 1999 இல் திரைப்படமாகவும் வந்துள்ளது. வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் காணுங்கள். ஒரு கட்டத்திலாவது நம்மையறியாமல் கண்ணீர் வெளிப்பட்டுவிடும்.


  youtube இணைப்பு கொடுத்திருக்கிறேன். முழுத்திரைப்படமும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. 

மேரி லூயிஸ் எழுதிய பல புத்தகங்கள் குழந்தைகளுக்கானவை. அவர் இயல்பிலேயே வாயில்லாஜீவன்களின்பால் பிரியமுள்ளவராகவும் அவற்றின் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் இப்படிக் காப்பாற்றப்பட்ட 30 நாய்கள் அவரால் வளர்க்கப்பட்டு வந்தனவாம். இப்படியொரு இளகிய மனம் படைத்தவர் மெக்கியின் இளகிய மனத்தை அவரது இளவயதில் ஈர்த்ததில் அதிசயம்தான் என்ன?
 ----------------------------------------------------------------------------------------------------

18 February 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - அறிமுகம் 6





ஆரம்பப்பள்ளிப் பிள்ளைகளுக்குத் தேர்வு இல்லையென்றாலும் அவர்களின் கல்வித்தரத்தைப் பரிசோதித்து, அது குறைந்திருக்கும்பட்சத்தில்  மேம்படுத்துவதற்கான முயற்சியை ஆஸ்திரேலியக் கல்வி நிர்வாகம் கைவிட்டுவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும், மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு NAPLAN (National Assessment Program — Literacy and Numeracy) என்னும் தேர்வுகள் The Australian Curriculum, Assessment and Reporting Authority (ACARA) மூலம் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனமானது கல்வி அமைச்சர்களின் வழிகாட்டுதல் படியும், தேர்ந்த கல்வியாளர்களின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடனும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது 

இந்த நாப்ளான் தேர்வுகள் மூலம் மாணவர்களின் எழுத்தறிவும் எண்ணறிவும் சோதிக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் நிலைபெறத் தேவையான அறிவல்லவா இவை! 

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று ஔவையாரும், 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்று வள்ளுவரும் வாய்மொழிந்தவை இங்கு செயல்படுத்தப்படுகின்றன. 

அந்தந்த வயதின் கல்வியறிவுக்கேற்றபடி பொதுக் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பாடங்கள் படித்து மனப்பாடம் செய்யும் வேலையில்லை. மொழியறிவும், அடிப்படைக் கணித அறிவும் இருந்தால் போதும் 

மொழியறிவுத் தேர்வில் வாசிப்புத் திறன், வாசித்ததைப் புரிந்துகொள்ளும் தன்மை, எண்ணத்தை எழுத்தாக்கும் திறமை, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதும் வல்லமை, நிறுத்தற்குறியீடுகளைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தும் அறிவு போன்றவையும், எண்ணறிவுத் தேர்வில் அடிப்படைக் கணக்குகள் பற்றிய அறிவும், புதிர்களை விரைவில் புரிந்துகொள்ளும் திறனும் சோதிக்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வைத்தவிர வேறு எதற்கும் எழுதவேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. (நம் TNPSC தேர்வுகளைப்போல்) 

இத்தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார் செய்யவேண்டாம் என்று கல்வித்துறை பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது. இது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வு அல்லவென்றும், மாணவர்களின் அறிவு வளர்ச்சியைக் கணக்கிடும் அளவுகோலே என்றும் கூறி மேலும் பெற்றோரும் ஆசிரயர்களும் செய்யவேண்டியவை எனக் குறிப்பிடுவதாவது;  பிள்ளைகளுக்கு, தேர்வு பற்றியப் பதட்டத்தை உருவாக்காமல் நல்ல மன அமைதியை உண்டாக்குவதும், தேர்வினை எப்படிச் செய்யவேண்டும் என்னும் வழிமுறையைக் கற்றுத்தருவதுமே! 

தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதுவார்கள். இதனால் தேவையற்றப் பயம் குறைகிறது. பழகிய வகுப்பு, பழகிய மாணவர்கள், பழகிய ஆசிரியர் என்னும்போது ஏதோ வகுப்புத் தேர்வு எழுதுவது போலவே உணர்வார்கள். ஆனால் தேர்வுக்கான விதிமுறைகளைப் பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். 

தேர்வுகள் பொதுவாக மே மாதத்தில் நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் (language convention, reading, writing, and numeracy) ஒரே நாளில் நடத்தப்படாமல் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த நாளில் நடத்தப்படுவதோடு தேர்வுநேரமும் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே என்பது சிறப்பு 




தேர்வுத்தாள்கள் அனைத்தும் பலத்தப் பாதுகாப்புடன் அகாரா நிறுவனத்துக்கு அனுப்பப்படும். தேர்வு மதிப்பீடுகள் யாவும் மேற்கண்டப் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரே அளவுகோலின் பத்து பிரிவுகளில் கணக்கிடப்படுகின்றன. ஆண்டு இறுதியில் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மதிப்பீட்டு அறிக்கையானது பிறர் பார்வைக்கு மறைவாக கனத்த உறையில் இடப்பட்டு ஒட்டி அனுப்பப்படும். தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகம் மாணவரின் எதிர்கால நலன் கருதி, பிரித்துப் பார்க்க அனுமதி உண்டு. மாணவர்களின் திறன் ஆசிரயர்களுக்குத் தெரியுமாதலால், பெரும்பாலும் உறைகள் பிரிக்கப்படாமலேயே வீட்டுக்குத் தபாலில் அனுப்பப்படுகின்றன 

நாட்டில் பொதுவாக கணக்கிடப்பட்டிருக்கும் சராசரிக்கல்வி நிலையோடு நம் பிள்ளைகளின் கல்வியறிவை ஒப்பிட்டு அறிவதன் மூலம், பின்தங்கிய பாடத்தில் மேலும் சிரத்தை எடுக்கலாம் அல்லது நம்பிள்ளையின் அறிவுத்தகுதி அறிந்து அதற்கேற்றபடி அவனை அனுசரித்துப் போகலாம். 

ஆஸ்திரேலியக் கல்விமுறையிலும் பெரும் மாற்றம் வரும் வாய்ப்பு உள்ளது என்பதை சமீபத்திய நாளிதழ் செய்தியொன்று கோடிகாட்டுகிறது. ஆஸ்திரேலிய மாணவர்களை ஆசிய மாணவர்களோடு ஒப்பிடுகையில் மூன்றுவருடங்கள் கல்விநிலையில் பின்தங்கியிருப்பதாக க்ராட்டன் கல்வி நிறுவனம் ஒன்று தன் ஆராய்ச்சியின் முடிவில் வருத்தம் தெரிவித்துள்ளது. ஆசியர்கள் என்பது ஆஸ்திரேலியர்களின் பார்வையில் எப்போதுமே கிழக்காசிய நாட்டு மக்களையேக் குறிக்கும். மற்ற ஆசிய நாட்டு மக்களை, சீனர், பாக்கிஸ்தானியர், இந்தியர் என்று தனித்துக் குறிப்பிடுவர்.  அதன்படி ஆஸ்திரேலிய மாணவர்களின் கல்வித்தரம்  ஷாங்காய் மாணவர்களின் கல்வித்தரத்தைக் காட்டிலும் மூன்றுவருடங்கள் பின்தங்கியிருப்பதாகவும், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய மாணவர்களைவிடவும் ஒன்றிரண்டு வருடங்கள் பிந்திய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாடுகளின் வெற்றிகரமானத் தேர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் கல்விமுறைக்கான அடிப்படைத் தத்துவங்கள் ஒத்திருப்பது பெரும் வியப்பளிக்கும் செய்தி 

சிங்கப்பூரில் பயிற்சிநிலை ஆசிரியர்கள் யாவரும் சம்பளம் வாங்கினாலும் பொதுநல ஊழியர்களாகவே கருதப்பட்டு சமுதாயத்தில் உயர்மட்ட அந்தஸ்தைப்பெறுகின்றனர். அவர்கள் தேர்ந்த கல்வியாளர்களால் வழிநடத்தப்படுவதுடன், கற்பிக்கும் முறைகளில் திறனாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் போலவே கருதப்படுகின்றனர் என்றும் அத்தகவற்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. 

என் மகன் ஏழாம் வகுப்பு என்பதால் இந்த வருடம் நாப்ளான் தேர்வு உண்டு. தினமும் அதற்கானப் பயிற்சிகளை வகுப்புகளிலேயே பள்ளிகள் கற்றுத்தருகின்றன. பயமின்றித் தேர்வெழுதவும், தேர்வுத்தாளைப் படித்துப் புரிந்துகொள்ளவும், குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை முடிக்கவும் இப்பயிற்சி வகுப்புகள் உதவுகின்றன 

என் மகன் சராசரி மாணவன் என்றாலும் எனக்கு அதைப்பற்றிய கவலையில்லை. அவனிடம் படிப்புத் தவிர ஓவியங்கள் வரைதல், கற்பனாசக்தி, புதியவற்றை உருவாக்கும் ஆர்வம், பூச்சிகள் பற்றிய நுட்ப அறிவு, கணினியில் வரைதிறன் போன்ற திறமைகளுடன், பாசம், ஒழுக்கம், பெரியோரிடத்தில் மரியாதை, அடுத்தவரை மதிக்கும் குணம், நண்பர்களைக் கொண்டாடும் குணம் போன்ற நல்ல குணங்களும் இருப்பதால் படிப்பில் பின்தங்கியிருப்பது என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பள்ளிகள் அழுத்தம் கொடுத்திருக்கும் என்பது உண்மை. 

இந்தியாவில் தேர்வு சமயங்களில் பள்ளிகளில் அடிக்கடி பார்க்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அது மாதத்தேர்வாயிருந்தாலும் சரி, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளாக இருந்தாலும் சரி, வகுப்பு விட்டுப் பிள்ளைகள் (அது ஒன்றாம் இரண்டாம் வகுப்புக்குள்தான் இருக்கும்) வெளியில் வந்தவுடனேயே, அவர்களை அழைத்துச் செல்ல வந்திருக்கும் பெற்றோர், பெரும்பாலும் தாய்மார்கள் அவர்களது கையிலிருந்து கேள்வித்தாளைப் பிடுங்கி, “இதுக்கென்ன எழுதினே? அதுக்கென்ன எழுதினே?” என்று கேள்விகளால் துளைப்பதும், அதற்கு அந்தக் குழந்தைகள் திருதிருவென விழிப்பதும் மீறி, ஏதாவது பதில் சொன்னால், “சனியனேநேத்து விடிய விடிய சொல்லிக்குடுத்தேனேஇப்படி மாத்தி எழுதிவச்சிருக்கியே, முண்டம்முண்டம்என்று ஆவேசத்துடன் அதன் தலையில் குட்டுவதும், அந்தக் குழந்தையை வேறு எதுவும் பேசவிடாமல் தேர்வைப்பற்றியே கேட்டுக் கேட்டு முகம் வாடவைப்பதுமாய் எத்தனை எத்தனை நிகழ்வுகள் 

நானும் இதுபோல் ஒருகாலத்தில் செய்திருக்கிறேன். வீட்டுக்குள் குழந்தைகள் நுழைந்ததும் எப்போதும் பள்ளியில் நடந்தவற்றைப் பற்றி ஆர்வமாகச் சொல்வார்கள். ஆனால் தேர்வு நேரங்களில் அவர்களைப் பேசவேவிடாமல் முடிந்துபோன தேர்வுத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு அது பற்றியே பேசி பிள்ளைகள் மனத்தை நோகடித்தவள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வெட்கமாக உள்ளது. என் மாமனாரின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பத்திலேயே அப்பழக்கத்தைக் கைவிட்டேன். தக்க நேரத்தில் தக்க அறிவுரை வழங்கிய அவர் ஒரு ஓய்வுபெற்றத் தலைமையாசிரியர் என்பதும் வியப்புதானே 

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல இந்தியப் பெற்றோரின் முகத்திலும்  இந்த நாப்ளான் தேர்வுச் சமயம் பதட்டத்தைக் காணமுடியும். இதற்கென்று சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்டி அனுப்பும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்னும் எண்ணம், நம் இந்தியரின் இரத்தத்தில் ஊறியதா என்பது தெரியவில்லை. என் மகளே இதற்கு உதாரணம். அதைப் பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

13 February 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 5





பள்ளிகள் வாழும் கலையைக் கற்றுக்கொடுக்காவிடினும் சாகும் எண்ணத்தைத் தூண்டக்கூடாது என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். கொலை செய்யவும் தூண்டக்கூடாது என்றும் சேர்த்துச் சொல்லும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளேன் 

சென்னையில் பிரபல பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், வகுப்பறையிலேயே ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்வை ஊடகங்கள் வழி அறிந்தது முதல் மனத்தை அழுத்தும் பாரத்தை எப்படி இறக்கிவைப்பதென்றே தெரியவில்லை 

நிகழ்வு தரும் வேதனை ஒருபுறம் என்றால் அந்நிகழ்வுக்கான காரணங்களாக முன்வைக்கப்படும் பட்டியல்…. பெரும் வேதனை. முக்கியமாய் பெற்றோர் வளர்ப்பு சரியில்லை, தந்தையரின் பணிவெறி, தாயாரின் சின்னத்திரை ஈர்ப்பு, ஒழுங்கின்மையும் ஒழுக்கமின்மையுமே கதாநாயகத்தனமாகச் சித்தரிக்கும் பெரிய திரைகளின் பாதிப்பு, பள்ளிகளின் அச்சுறுத்தல், பாலியல் வக்கிரத் திரைப்படங்கள், தாராளமயமாக்கலால் எழுந்த சமூக மயக்கம் , டாஸ்மார்க் என நீளும் பட்டியலில் முக்கியமான ஒன்றை அனைவருமே தவறவிடுகின்றனர்.  மதிப்பெண் மட்டுமே ஒருவனை உருப்படவைக்கும் என்னும் மாயை. அதைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டு, கத்திக்குத்து வரை ஒரு பிஞ்சின் மனத்தில் நஞ்சை வேரூன்றச் செய்துவிட்டு இப்போது குய்யோ முறையோவென்று கூக்குரலிடுவது என்ன நியாயம்? அதற்காக அவன் செய்தது நியாயம் என்று வாதிடவில்லை. அநியாயத்துக்கான மூலகாரணம் பற்றி மட்டுமே இங்கு பேசுகிறேன். 

ஆசிரியர் அவன் பெற்ற குறைந்த மதிப்பெண்ணை மற்றவர் முன்னிலையில் சுட்டிக்காட்டி மனம் புண்படுத்தாதிருந்தாலோ, பெற்றவர் அம்மதிப்பெண்ணை ஒரு பொருட்டாக எண்ணாது மற்றக் குணங்களைக் கொண்டாடியிருந்தாலோ, பள்ளி நிர்வாகம் தேர்ச்சி விகிதத்தில் காட்டிய அக்கறையை மாணவர் நலனில் காட்டியிருந்தாலோ இப்படி ஒரு சம்பவம், அதுவும் நம் நாட்டில் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. இப்படி ஆசிரியர், பெற்றோர், பள்ளி என்று ஒவ்வொருவராய்க் குறை சொல்வதற்கு பதில் மொத்தமாய் நம் கல்விமுறையே காரணம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை 

அமெரிக்காவில், ஐரோப்பாவில், ஆஸ்திரேலியாவில் இப்படி மாணவர்கள் துப்பாக்கியும் கையுமாய் உள்ளே நுழைந்து உடன்படிக்கும் மாணவர்களை, ஆசிரியர்களை, மேலும் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களையெல்லாம் நீ கேட்டதில்லையா? பார்த்ததில்லையா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதையும், படிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் இல்லையென்பதையும், படிப்பல்லாத மற்றக் காரணிகளால் மனநலம் பாதிப்படைந்து அதனால் அத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் 

இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு கொடிய சம்பவத்தைப் பற்றிய செய்தி என் காதில் விழுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் தன் சக மாணவர்கள் முன்னிலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இந்தக் கோரச் செயலுக்குக் காரணம் மன அழுத்தம் என்றாலும் அதற்கு அவனது படிப்போ, மதிப்பெண்களோ காரணமாய் இருக்காது என்பதை உறுதியாய்ச் சொல்லமுடியும். குடும்ப வன்முறைகளும், தகாத உறவுகளின் பின்னணியும், மூத்த மாணவர்களால் இழைக்கப்படும் கேலிவதைகளும், அதற்கு அடுத்தக் கட்டமான துயரவதைகளும் காரணங்களாக இருக்க அதிக சாத்தியம் உள்ளது. 

சென்ற பதிவில் ரமணி சார் ஆஸ்திரேலியப் பிள்ளைகள் பதினெட்டு வயதில் பெற்றோரைப் பிரிய மனதளவில் எப்படித் தயாராகிறார்கள் என்று எழுதக் கேட்டிருந்தார் 

ஆஸ்திரேலியா போன்ற மேலைநாடுகளில் பிள்ளைகள் பதினெட்டு வயதில் தங்கள் பெற்றோரைப் பிரிந்து செல்வதற்கு மேற்குறிப்பிட்டக் காரணிகளும் ஒரு காரணம். அவற்றை விளக்குமுன் நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் இருக்கும் வாழ்க்கைமுறைகளின் ஒப்பீடு அவசியமானது. 

நம் நாட்டைப் பொறுத்தவரை, கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை சிதைந்துபோய்விட்டாலும் குடும்பக் கட்டமைப்பின் மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையும் நன்மதிப்பும் இன்னும் முற்றிலுமாகக் குலைந்துபோய் விடவில்லை. குடும்பம், குழந்தைப்பேறு, வளர்ப்பு, படிப்பு, வேலை, திருமணம் என்று தாயும் தகப்பனும் அக்கறை செலுத்துவதோடு தங்கள் வாழ்வையே அதற்கு அர்ப்பணிக்கின்றனர் 

ஒரு நல்ல குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் உண்டாகும் கருத்துவேறுபாடுகள் யாவும் குழந்தைகளின் கண்மறைவாய் வைக்கப்படுகின்றன. மனமொத்துப் போகாநிலையிலும் குழந்தைகளுக்காக, குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழும் பல தம்பதியினரைப் பார்த்திருக்கிறோம். இந்த நிலை நம் காலங்களில் இருந்தது. இன்றும் பல குடும்பங்களில் தொடர்கிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினரிடம் இது போன்ற அர்ப்பண உணர்வுகளைக் காண்பது அரிதாகத்தான் உள்ளது. மேலைநாட்டு மோகம், வளர்ந்துவரும் வசதிப்பெருக்கம், உலகமயமாக்கலின் தாக்கம், ஈகோ மனப்பான்மை என்ற பல காரணிகளைச் சொல்லலாம். அவற்றைப் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம் 

இப்போது ஆஸ்திரேலியப் பெற்றோரைப் பார்ப்போம். ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியர்கள் என்று வரிக்கு வரி நான் குறிப்பிடுவது ஆஸ்திரேலியப் பூர்வீகக்குடிகளைக் குறிக்காது. அவர்களில் பெரும்பான்மையோர் இன்னும் தங்கள் சமூக, கலாச்சார கட்டமைப்புகளிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் இன்றும் கூடிவாழ்கின்றனர் 

நாற்பதாயிரம் வருடங்களுக்கும் மேலாக இம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பூர்வீகக்குடிகளிடமிருந்து சுமார் நானூறு வருடங்களுக்கு முன் இம்மண்ணை ஆளும் உரிமையைக் கைக்கொண்ட ஐரோப்பியர்களின் வாரிசுகளைப் பற்றியே பேசுகிறேன் 

ஆஸ்திரேலியர்கள் பொதுவாகவே நிரந்தரக் குடும்பக் கட்டமைப்பில் நம்பிக்கை அற்றவர்கள். பிறருக்காக தங்கள் விருப்பு வெறுப்புகளை விட்டுத்தர விரும்பாதவர்கள்.. ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பப் படிவங்களில் வேண்டப்பட்டிருக்கும் தகவல்களே அவற்றுக்கு அத்தாட்சி. 

விண்ணப்பப் படிவங்களில் தாய். தந்தை, மாற்றுத்தாய், மாற்றுத்தந்தை, இவர்கள் அனைவரின் பெயர், முகவரி, எந்தெந்த நாட்களில் எந்தெந்த பெற்றோரின் பொறுப்பில் அவன் இருக்கவேண்டும், பிள்ளைக்கு ஏதேனும் விபத்து எனில் முதலுரிமை யாருக்குத் தரப்படவேண்டும், இரண்டாவதாய் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற விவரங்களைக் கேள்விகளாய்த் தாங்கியிருக்கும் அந்த விண்ணப்பத்தைப் பார்த்தாலே தலைசுற்றும் 

சமீபத்தில் ஓரினத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கச் சொல்லிப் பாராளுமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கையில் விண்ணப்பப் படிவங்களில் மேலும் திருத்தங்கள். தாய், தந்தை என்பதற்குப் பதில் பெற்றோர்(1) மற்றும் பெற்றோர்(2) என்றும் அவர்களுடைய பாலினம் கேட்டும் கேள்விகள் உள்ளன. அதேபோல் வீடு வாடகைக்கு என்றால் அந்த விண்ணப்பத்தில் கணவன், மனைவி என்று இருக்காது. விண்ணப்பதாரர் மற்றும் அவருடன் சேர்ந்து வாழ்பவர் என்று குறிப்பிட்டு, வாடகையில் இருவரின் தனித்தப் பங்கு பற்றியும் கேட்டிருக்கும். அந்த அளவுக்கு இங்கு குடும்பக் கட்டமைப்பின் அஸ்திவாரம் பலவீனமாக உள்ளது. அவ்வளவு ஏன்? இன்றைய ஆஸ்திரேலியப் பிரதமர் மிஸ். ஜூலியா கில்லார்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தன் துணைவருடன் சேர்ந்து வாழ்வது திருமண பந்தத்தின் மீதான அவர்களது எதிர்மறை ஈடுபாட்டுக்கு இன்னொரு சான்று. 

மற்றொரு அதிர்ச்சிகரமானத் தகவல், ஆஸ்திரேலியாவில் பதின்மவயதுத் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதாக ஆஸ்திரேலியக் கல்வி மற்றும் குழந்தைகள் நலத்துறையின் புள்ளியியல் தகவலறிக்கை சொல்கிறது. ஆயிரத்துக்கு பதினெட்டு கர்ப்பங்கள், 15 முதல் 19 வரையிலான பதின்ம வயதுக் கர்ப்பங்கள் என்னும் விகிதாச்சாரத்துடன்  உலகவரிசையில் பதினொன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆயிரத்துக்கு 52 என்ற கணக்கில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. ஆயிரத்துக்கு 27 என்று இங்கிலாந்து இரண்டாமிடத்தில் உள்ளது. ஆனால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகளைக் கொண்டே இப்புள்ளிவிவரம் கணக்கில் கொள்ளப்படுகிறது என்றும் கலைக்கப்படும் கர்ப்பங்களையும் கணக்கெடுத்தால் ஆஸ்திரேலியாவில் பதினெட்டு என்பது முப்பத்திரண்டாக உயரும் என்றும் அவ்வாய்வறிக்கை மேலும் அதிர்ச்சித்தகவல் அளிக்கிறது 

ஆஸ்திரேலியாவில் ஒற்றைப் பெற்றோருக்கு அரசு தரும் அதிகபட்ச சலுகைகளும் இப்படி சிறு வயதில் குழந்தைகளைப் பெற்று வளர்க்க ஊக்கமூட்டுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. தாங்களே இன்னும் வாழ்க்கையில் முதிர்ச்சி அடையா நிலையில் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை அவர்களால் எப்படி சரியான பாதையில் வளர்க்க இயலும்? சமூக வன்முறைகளுக்கு இதுபோன்ற சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகளும் ஒரு காரணமாக இருப்பதில் வியப்பென்ன 

படிக்கும் காலத்தில் பெண்பிள்ளைகளின் பாதை திசைமாறிப்போவதைத் தவிர்க்க, குறைந்தபட்சம் குழந்தைப்பேறுகளையும் கர்ப்பங்களையும் தடுக்க பள்ளி நிர்வாகம் பாலியல் கல்வியைப் பள்ளிகளில் கற்றுத்தருகிறது. பாலியல் பிரச்சனைகள், பரவும் நோய்கள், பாதுகாப்பான உடலுறவு போன்றவற்றில் இருபாலாருக்கும் அறிவுரையும் ஆலோசனையும் தரப்படுகிறது 

பத்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பிள்ளை வளர்ப்பு பற்றியப் பாடம் ஒன்று உள்ளது. அதில் கரு உருவாவதிலிருந்து தாய்க்கு உண்டாகும் மாற்றங்கள், பிரச்சனைகள் பற்றிக் கற்பிப்பதுடன், வகுப்புக்கு வெவ்வேறு கர்ப்ப காலக்கட்டத்தில் உள்ள இளம் தாய்மார்கள் சிலரை அழைத்துவந்து நேரடியாக அவர்களுடைய உடலியல், மனோவியல் மாற்றங்களையும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளையும் பற்றி மாணவிகள் தாங்களாகவே கேட்டுத் தெரிந்துகொள்ள வழிவகுக்கிறது. அதிலேயே பல மாணவிகளுக்கு தாய்மை என்பது அத்தனை எளிதல்ல என்பது புரிந்துவிடுகிறது. அதோடு விடவில்லை. செயல்முறைப் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது 

ஒரு குழந்தைப் பொம்மை. பொம்மை என்று நினைத்தால் பொம்மைதான். ஆனால் பிறந்த குழந்தைக்குண்டான அத்தனைச் செயல்களையும் செய்யக்கூடிய அளவில் கணினிக் கட்டுப்பாட்டுடன் ஒரு உயிருள்ள குழந்தை போலவே இயங்குகிறது. பாடத்திட்டத்தின்படி அதை ஒவ்வொரு மாணவியும் இரண்டுநாட்கள், பெரும்பாலும் வார இறுதி நாட்களில் வீட்டுக்குக் கொண்டுசென்று வளர்க்கவேண்டும். அந்த இரண்டு நாளும் அம்மாணவியே அதன் தாய். அவள் தன் உண்மைக் குழந்தை போலவே அதைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.  சாதாரண விஷயம்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லைஇந்தக் குழந்தை வளர்ப்பில் குடும்ப உறுப்பினர் எவரும் அவளுக்கு உதவக்கூடாது என்பது பள்ளியின் கட்டாய அறிவிப்பு. எனவே தனியொருத்தியாய் இந்தப் பயிற்சியை மாணவி மேற்கொள்ளவேண்டும். எங்காவது வெளியிடங்களுக்குச் செல்வதானாலும் குழந்தையைக் கையில் கொண்டுசெல்லவேண்டும்.

குழந்தையைப் போலவே அதுவும் அடிக்கடி அழும். அழுவதற்கான சரியான காரணத்தை தாய் அறிந்திடவேண்டும். பசி என்றால் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள பாட்டிலில் இருக்கும் நீரைப் புகட்டவேண்டும். அதுவும் எப்படி? சரியான முறையில் கையில் ஏந்தி, தலையைச் சற்று உயர்த்தி, மெல்ல மெல்ல, மூச்சு முட்டாமல், புரையேறிக்கொண்டுவிடாமல், வெகு சிரத்தையாகக் கொடுக்கவேண்டும். அது அழுவது பசிக்காக இல்லையெனில் குடிக்காமல் முரண்டு செய்தழும். அடுத்தது அது சிறுநீர் கழித்திருக்கிறதா? அந்த ஈரத்தில் குளிர்ந்து அழுகிறதா என்று அதன் நாப்கினை அகற்றி சோதிக்கவேண்டும். ஈரமாக இருந்தால் உடனே அகற்றிப் புதிய நாப்கினை அணிவிக்க வேண்டும். அதுவுமில்லை. ஆனாலும் அழுகிறது என்றால் வேறென்ன? தூக்கமாக இருக்கலாம். குழந்தையைக் கையிலெடுத்து மார்போடு இதமாக அணைத்து மெதுவாய்த் தாலாட்டியும், தட்டிக்கொடுத்தும் தூங்கவைக்கவேண்டும். இரவில் அடிக்கடி விழித்து அழும். அழுகையின் காரணங்களை மனத்தில் ஓடவிட்டு அதற்கேற்றபடி செயலில் இறங்கவேண்டும். பசியாற்றிய அரைமணி நேரத்தில் அழுதால் அது நிச்சயம் பசிக்கான அழுகை இல்லை என்பதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும் 

அழுத்திப் பிடித்தால் மூச்சுத் திணறி, குழந்தை இறந்துவிடும். சரியான நேரத்தில் பசி போக்காவிடில் கத்தி விறைத்துவிடும். இரண்டு நிமிடம் தொடர்ச்சியாக அழவிட்டால் அதன்பின் செயலற்றுப்போய்விடும். என்ன செய்தும் பயனில்லை. நாம் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் முறைகள் அந்தக் குழந்தை பொம்மைக்குள் இருக்கும் கட்டுப்பாட்டகத்தில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தபின் ஆசிரியர் அதைக் கவனித்து அம்மாணவியின் குழந்தை வளர்ப்பு முறைகளைப் பற்றிய ரிப்போர்ட் தருவார். தாறுமாறாக இருந்தால், நீ தாயாயிருக்கத் தகுதி அற்றவள் என்பது ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்பட்டுவிடும் 

அவர் என்ன சொல்வது? மாணவியே வெறுத்துப்போயிருப்பாள். ஒரு குழந்தை எப்படியெல்லாம் படுத்துகிறது? தூங்கவிடாமல், தொலைக்காட்சி பார்க்கவிடாமல், குளிக்கவிடாமல், வெளியிடங்களுக்கு செல்லவிடாமல் எப்போதும் அழுது, தன்னையே கவனித்துக்கொள்ளச் சொல்கிறதேஒன்றிரண்டு நாட்களே இப்படியெனில்…. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஒரு குழந்தையை வளர்ப்பது எத்தனை சிரமம்? எனவே இப்போதைக்கு குழந்தையே பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பாள். வந்திருப்பாள் என்ன? வந்துவிட்டார்கள் என் மகளின் சிநேகிதிகள். என் மகள் அந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுக்காததால் அந்த அனுபவம் அவளுக்கு வாய்க்கவில்லை 

இது பதின்மவயதுப் பிள்ளைப்பேறுகளைத் தடுக்க பள்ளிகள் கையாளும் ஒரு சிறு முயற்சியே. இதுபோன்ற நிலை நம் நாட்டில் இன்னும் உருவாகவில்லையென்பதை நினைத்து நாம் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் 

இன்னும் சொல்வேன்….