Showing posts with label குழந்தைகள் பக்கம். Show all posts
Showing posts with label குழந்தைகள் பக்கம். Show all posts

30 September 2020

புகைவண்டிப் பயணம் - சிறார் பாடல்

 புகைவண்டிப்பயணம்





புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன்

நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன்

ன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன்

சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன்.

 

அசையும் பச்சைக்கொடி பார்த்தேன்

அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன்.

முன்னால் ரயிலும் விரையக் கண்டேன்

பின்னால் மரங்கள் மறையக் கண்டேன்.

 

வழியில் பச்சை வயல் பார்த்தேன்

வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன்

சோளக்கொல்லை பொம்மைகளும்

ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன்

 

கோணல் பனைமர வரிசை கண்டேன்

குரங்குகள் தாவும் சோலை கண்டேன்

குறுக்கிடும் பாதையில் காத்திருக்கும்

கார் பஸ் வரிசையும் நான் பார்த்தேன்.

 

டாட்டா காட்டி ஓடிவரும்

குழந்தைகளுக்கு கை அசைத்தேன்.

அடடா அடடா என்பது போல்

ஆற்றைக்கடக்கும் ஒலி ரசித்தேன்.

 

ரயிலுக்குள் பலவும் விற்கக் கண்டேன்

ரசனையாய்ப் பாடும் பாடல் கேட்டேன்.

பலப்பல நிலையம் கடக்கக் கண்டேன்

பலகைப் பெயர்களைப் படித்து வந்தேன்

 

அம்மாச்சி ஊரும் வரக்கண்டேன்

மகிழ்ச்சியில் மனமும் ஆடக்கண்டேன்

குஷியுடனே குதித்திறங்கிக் கொண்டேன்

விசிலூதிய ரயிலுக்கு விடைகொடுத்தேன்.


(ஆகஸ்டு 2020 பூஞ்சிட்டு இதழில் வெளியானது)



பூஞ்சிட்டு – இது குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், நூல் அறிமுகம், பொது அறிவு, புதிர்கள், விளையாட்டு போன்ற பல விஷயங்களைக் கொண்ட பல்சுவை மாத இதழ். அனைவரும் வாசித்துப் பயன் பெறுக. 

31 August 2017

தவளையாரே... தவளையாரே..






தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இத்தனைநாள் சத்தமின்றி
இருந்ததெங்கே சொல்லுவீரே..

மண்ணிலே மறைந்திருந்து
மாயம் செய்தேன் பாரும்
உடல் விறைத்து இயக்கமற்று
உயிர் காத்திருந்தேன் நானும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
இப்போது மட்டும் வந்தீரே
ஏன் என்றுதான் சொல்லுவீரே

மழைபெய்த சேதியறிந்து
மகிழ்ச்சி கொண்டேன் நானும்
குளம் குட்டை நிறையக்கண்டு
கும்மாளமிடுது என் மனம்.

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
கத்திக் கூப்பாடு போடுகிறீரே
காரணமென்ன சொல்லுவீரே

நானிருக்கும் இடத்தை எந்தன்
இணை அறிய வேண்டுமே..
வானம் பொழியும் காலத்தில் என்
வம்சம் வளர்க்க வேண்டுமே..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
உண்டுகளிக்கும் உணவெதுவோ..
உண்மை எனக்கு உரைப்பீரோ

நோய்பரப்பும் ஈயும் கொசுவும்
நொடியில் தின்பேன் நானும்
அந்துப்பூச்சியும் வெட்டுக்கிளியும்
ஆசையாய்த் தின்பேன் மேலும்..

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
வாலோடு தானே பிறந்தீரே
வளர்ந்ததும் ஏனோ இழந்தீரே..

நீரில் மட்டும் வாழும் காலம்
நீந்திப்போக வால்தான் உதவும்
வளர்ந்து மண்ணில் வாழும் காலம்
மறைந்துபோனதே எந்தன் வாலும்

தவளையாரே தவளையாரே
தத்திச்செல்லும் தவளையாரே
தண்ணீரில் ஆட்டம் போடுறீரே..
தாயார் திட்ட மாட்டாரோ

தவளையின் வாழ்வு தண்ணீரிலே
தரணி அறிந்த உண்மையிது.
ஏரிகுளங்கள் வற்றுவதாலே
எம் இனமும் வாழ்வும் அழியுது.



ஒரு நிலப்பரப்பின் வளமான இயற்கைச்சூழலின் அடையாளம் தவளைகள். உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், வாழ்விட இழப்பு, நீர்நிலைகளில் கலக்கப்படும் இரசாயனம், பூச்சிகொல்லிகளின் பயன்பாடு, பூஞ்சைத்தொற்று மற்றும் இதர பல்வேறு காரணங்களால் தற்போது உலகெங்கும் தவளையினங்கள் குறைந்துகொண்டும் அழிந்துகொண்டும் வருவது கவலை தரும் விஷயம். அழிவின் விளிம்பில் இருப்பவற்றைக் காக்கும் முயற்சியில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகள் பெருமுயற்சி எடுத்து வருகின்றன. 

ஆஸ்திரேலியாவில் தவளைகளுக்கு ஏற்படும் பூஞ்சைத்தொற்று இன அழிவுக்கு முக்கியக்காரணம். இதுவரை ஆறு தவளையினங்கள் அழிந்துவிட்டன. ஏழு அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஒதுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டுமே வாழக்கூடிய, எறும்புகளைத் தின்றுவாழும் 3 செ.மீ நீளத்தில் கட்டைவிரல் மொத்தமே உள்ள (Corroboree frog) கொரோபோரீ தவளைகளின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் ஐம்பது. அவற்றுள் ஆண் தவளைகள் 15 மட்டுமே. கவனிக்கப்படாமல் விட்டால் கூடிய விரைவிலேயே இவ்வினம் கண்ணைவிட்டு… இம்மண்ணை விட்டு முற்றிலுமாக மறைந்துவிடும் சாத்தியங்கள் அதிகம் என்பதால் பதைப்புடன் இவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் உள்ளன ஆஸியிலுள்ள பல்லுயிர் பாதுகாப்பு அமைப்புகள். 

இந்தியாவிலும் 21 தவளையினங்கள் அழியும் நிலையில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவையும் விழிப்புணர்வையும் வளரும் பருவத்திலிருந்தே அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது மட்டுமல்ல.. நாம் வாழ்ந்து மகிழ்ந்து அனுபவித்த இந்த பூமியை அவர்களிடம் பாதுகாப்பாய் ஒப்படைப்பதும் நம் கடமை அல்லவா? 



12 July 2012

மங்கை நிலா



'என்ன பெண் இவள்!'
என்ற அங்கலாய்ப்புடன்
ஆரவாரமாய் விடிகிறது,
என் ஒவ்வொரு காலைப்பொழுதும்!

தலைக்குமேல் வளர்ந்த பின்னும்,
தலைவாரத் தெரியவில்லை என்று
கடுகடுத்தால் போதும்;
தன் இடுப்பளவுக் கூந்தலை
இரண்டேகால் அங்குலமாய்க்
கத்தரித்துவிடுவேன் என்றே,
கலவரப்படுத்துகிறாள் என்னை!

வெந்நீர் கூட வைக்கத் தெரியவில்லையென
வேகமாய்ச் சாடினால்
சமையற்கலை அறிந்தவனை மணமுடிப்பேன் என்று
  சாவகாசமாய்ச் சொல்கிறாள்!

வாசல் தெளித்து, கோலமிடத்
தெரியவில்லையே உனக்கு! என்றால்,
'அடுக்குமாடிக் குடியிருப்புக்கு,
வாசற்கோலம் எதற்கு?' என்கிறாள்!

'எதிர்ப்பேச்சு பேசாதே!' என்றால்,
'ஏனம்மா பேசக்கூடாது?' என்று,
எதிர்க்கேள்வி கேட்கிறாள்!

கொந்தளிக்கும் கோபத்தோடு சொல்கிறேன்,
'நீ என் அம்மாவிடம் வளர்ந்திருக்கவேண்டும்;
அப்போது தெரிய வந்திருக்கும் அத்தனைக் கலைகளும்!'

ஆசையாய் என் தலைகோதிச் சொல்கிறாள்,
'பாவம் அம்மா, நீ! அன்பு மகளாய் வளராது,
அருமை மாணவியாய் வளர்ந்திருக்கிறாய்!
அன்னையின் வடிவில் ஓர்
ஆசிரியையைப் பெற்றிருக்கிறாய்!

நானோ,
அன்னையெனக் காண்பது, என்
அன்புத் தோழியை அன்றோ?'

தோழி மட்டுமா?
என் கழுத்தைக் கட்டிக்கொண்டு,
'என் செல்ல அம்மா! என் பட்டு அம்மா!' என்று
என்னைக் கொஞ்சும் தருணங்களில்
தன் மகவாயன்றோ மாற்றிவிடுகிறாள்,
இப்பொல்லாதப்பெண்!

'என் அருமை மகள் இவள்!'
என்ற இறுமாப்பு மேலோங்க,
அழகாய் விடைபெறுகிறது,
என் ஒவ்வொரு நாளும்!
 ******************

(பேதை, பெதும்பைப் பருவங்களில் நிலாவின் சேட்டையை ரசித்து மகிழ்ந்த அனைவரும் மங்கை, மடந்தைப் பருவங்களிலும் அவளை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். மங்கை என்பது பெண்களின் 12 முதல் 14 வயது வரையிலான பருவம்.)

படம் உதவி: இணையம்

8 July 2012

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் திரும்பிய புத்தகம்



1934 இல் மெக்கி என்னும் சிறுவனுக்கு வயது 13. அந்த வயதில் கதைப்புத்தகங்களை விரும்பாத குழந்தைகள் யார்? அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள மெளண்ட் கிளமெண்ட் பொது நூலகத்திலிருந்து அவன் எடுத்துச் சென்ற ஒரு கதைப்புத்தகம் அவனை வெகுவாக ஈர்த்தக் காரணத்தால் அதைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லாமல் போய்விட்டது. நாளை நாளை என்று ஒத்திப்போடப்பட்டு ஒரு தருவாயில் அது அவனது சொத்தாகவே மாறிவிட்டது.

இப்போது மெக்கியின் வயது 89. தன் பொக்கிஷங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அவருக்கு இப்புத்தகத்தை இப்போதாவது நூலகத்திடம் ஒப்படைத்துவிடச் சொல்லி மனசாட்சி படுத்தியதாம். உடனே செயல்படுத்திவிட்டார். எப்படி?

இந்தப் புத்தகத்தை இத்தனை நாள் தான் வைத்திருந்ததற்காக ஒரு மன்னிப்புக் கடிதமொன்றை எழுதி இந்தப்புத்தகத்துடன் வைத்து நூலகத்துக்கு தபாலில் அனுப்பிவிட்டார். ஏன் நேரில் போகவில்லைங்கறீங்களா? அவருக்குத் தெரியுமே, இந்தப் புத்தகத்துக்கான அபராதம் கட்டவேண்டியிருந்தால் அவருடைய சொத்தையே அழித்தாலும் முடியாது என்பது!

ஆனால் நூலகம் என்ன சொன்னது தெரியுமா? "அவர் அபராதம் கட்டத் தேவையில்லை, அவருடைய இந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய புத்தகத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்போறோம்" அப்படின்னு சொல்லி அந்தப் புத்தகத்தின் புதிய பிரதி ஒன்றையும் இலவசமா அவருக்கு அனுப்பியிருக்காங்களாம். எத்தனை வியப்பான செய்தி!

சரி, அப்படி திருப்பித் தரமுடியாதபடி அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? இருக்கிறது. ஒரு பாவப்பட்ட சிறுவனின் கதை அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல பெண் எழுத்தாளர் மேரி லூயிஸ் எழுதிய ‘A Dog Of Flanders’  என்ற புத்தகம்தான் அது.

குழந்தையிலேயே அநாதையாக்கப்பட்ட ஒரு சிறுவன் அவனது வறிய தாத்தாவால் வளர்க்கப்படுகிறான். அவனுக்குத் துணை ஒரு நாய். அதுவும் அவனைப்போலவே ஒரு பாவப்பட்ட ஜீவன். இருவருக்குள்ளும் உண்டான நட்பும் அதனோடு இழையோடும் அவன் வாழ்வும் அவர்களின் துயரமுடிவுமே கதை! இந்தக் கதை 1975 வாக்கில் தொலைக்காட்சித் தொடராகவும் 1999 இல் திரைப்படமாகவும் வந்துள்ளது. வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் காணுங்கள். ஒரு கட்டத்திலாவது நம்மையறியாமல் கண்ணீர் வெளிப்பட்டுவிடும்.


  youtube இணைப்பு கொடுத்திருக்கிறேன். முழுத்திரைப்படமும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. 

மேரி லூயிஸ் எழுதிய பல புத்தகங்கள் குழந்தைகளுக்கானவை. அவர் இயல்பிலேயே வாயில்லாஜீவன்களின்பால் பிரியமுள்ளவராகவும் அவற்றின் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் இப்படிக் காப்பாற்றப்பட்ட 30 நாய்கள் அவரால் வளர்க்கப்பட்டு வந்தனவாம். இப்படியொரு இளகிய மனம் படைத்தவர் மெக்கியின் இளகிய மனத்தை அவரது இளவயதில் ஈர்த்ததில் அதிசயம்தான் என்ன?
 ----------------------------------------------------------------------------------------------------

13 June 2012

சின்ன நிலாவின் சேட்டைகள் 4



(படம் உதவி:இணையம்)


வேடிக்கை விளையாட்டுகள் வழியே
மழலை மனங்களை வசீகரிப்பது
மன்னை  மாமாவின் மனமுவந்த வாடிக்கை.


செப்படி வித்தை போல் சோடாமூடியொன்று
தொலைந்தும் மீண்டும் கைவரப்பெற்றும்
நிலாவைக் கவரும் முயற்சியிலிருந்தது அன்று.


சூ…. என வீசப்படும் சோடாமூடி
கண்மறைவாய் கக்கம் புகும் ரகசியம் அறியாதபோதும்,
கைவரும் அதிசயம் ஆராயப் புகுந்தாள்.
ஐந்து முறை அவதானித்தவள், ஆறாம் முறை
தானே பிடுங்கி எறிந்தாள் தப்படி தூரம். 
இப்போ வரவழைங்க, பார்ப்போம் 
கண்முன் கிடந்தும் கைக்கொணரவியலாத மாமா ,
காண்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார், 

இவள்மகா ஜாலக்காரி! 
 ஜாலம்? புரியாமல் சிரிக்கிறாள் நிலா. 
 *****************************************************




ஐ லவ் யூ....

 என ஆங்கிலத்தில் எழுதி,
இரண்டாம் வகுப்புச் சிறுமிக்கு
இரண்டாம் வகுப்புச் சிறுவனால்
கொடுக்கப்பட்ட ஒரு காகிதம்
காதல்கடிதமெனவே கருத்தில் கொள்ளப்பட்டு
கடுந்தண்டனைக்கு ஆளானது
கட்டுப்பாடு நிறைந்த பள்ளிநிர்வாகத்தால்!


சிறுமியின் தாயார் சீறியதில்
சிறுவனவன் சின்னாபின்னப்படுத்தப்பட்டான்.
சிறுவனின் அம்மாவிடம்
பிள்ளையின் லட்சணம் பரிகசிக்கப்பட,
முகம் கருத்து தலை கவிழ்ந்தாள்.

தண்டனைகளுக்கும், பிராயச்சித்தங்களுக்கும் பிறகு,
பள்ளியில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்காய்
பரிதாபங்கொண்டாள் நிலா.

 தோழியின் செயல் முட்டாள்தனமென்றாள்.
என்னிடத்தில் ஒருவன் இப்படிக்கொடுத்திருந்தால்
என்ன செய்திருப்பேன் தெரியுமா?


என்ன செய்திருப்பாய்?

பதைப்புடன் கேட்கப்படும் கேள்விக்கு
படுநிதானமாய் பதில் சொல்கிறாள்.

ஐ லவ் யூ என்றெழுதி ஒரு தாளை அவன் கொடுத்தால்,
ஐ டோன்ட் லவ் யூ என்றெழுதி 
இன்னொரு தாளை நான் கொடுத்திருப்பேன்.
காகிதத்துக்கா பஞ்சம்?
கவலைப்படலாமா அம்மா அப்பா நெஞ்சம்?

ஏழுவயதுக்காரியின் எண்ணமுதிர்ச்சி கண்டு
எதிர்காலக் கவலைகள் யாவும்
ஏறக்கட்டப்பட்டது அன்றே.

*******************************************

5 June 2012

சின்ன நிலாவின் சேட்டைகள் - 3



ஞானசம்பந்தம் சொல்
யான
இல்லம்மா, ஞான.. சொல்..
யான..
ஞ்ஞா.. ஞ்ஞாசொல்.
ய்யா.. ய்யா
ப்ச்!
அலுத்துப் போய் கைவிடப்பட்டது
அன்றொருநாள் கற்பித்தல் வகுப்பு.

பின்னொருநாள் யாரிடமோ
பெருமையுடன் சொல்லிக்கொண்டிருக்கிறாள் நிலா.
எனக்கு ரெண்டு தாத்தா.
ஒருத்தர் ஜேபால் தாத்தா.
இன்னொருத்தர் மறைமலை தாத்தா.

என்ன மறைமலை தாத்தாவா?

ஆமாம், அப்படிதான் நான் அவருக்குப் பேர் வச்சிருக்கேன்.

சிக்கலுக்கு வெகுவிரைவில் தீர்வு கண்டுவிட்டாள்.
மறைமலைநகரில் வசித்த தாத்தாவை
மறைமலை தாத்தாவாக்கிவிட்டாள்.
தமிழுக்குச் சேவை செய்யும் தாத்தாவுக்கு
சாலப் பொருந்திப் போனது பேத்திவைத்தப் பெயர்.

ஞகரம் வந்தபின்னும் ஞானம் வந்தபின்னும்
தனக்குரித்தானத் தாத்தாவின் பெயரை
மாற்றிச்சொல்வதில் உடன்பாடில்லை
நிலாவுக்கு இன்றுவரையிலும் கூட!
***************************** 


அஜய், காலையில் ஏண்டா அழுதே? 
ஒரு பையன் என்னை அடிச்சிட்டான், நிலா. 
எந்த க்ளாஸ்டா? 
என் க்ளாஸ்தான். 
நான் சொன்னேன்னு சொல்லி 
நாளைக்கு நீ போய்
ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டிலே உக்காந்துக்கோ! 
ம்!

விளையாட்டா? வினையா?
விளையாட்டினூடே விளைந்த பேச்சு கேட்டு
விதுக் என்றது மனம்.

அன்றுதான் எல்கேஜியில் சேர்ந்த
அரைநாள் அனுபவக்காரி,
அடுத்தவீட்டுப் பையன் அழுகை போக்க,
அடுத்த வகுப்புக்கனுப்பும் தெனாவெட்டுக் கண்டு
திடுக்கிடாமல் வேறென்ன செய்வது?

************************************
படங்கள் உதவி: இணையம்