30 September 2020

புகைவண்டிப் பயணம் - சிறார் பாடல்

 புகைவண்டிப்பயணம்





புகைவண்டி தூரத்தில் வரக்கண்டேன்

நிலையத்தில் நின்றதும் ஏறிக்கொண்டேன்

ன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன்

சந்தோஷம் நெஞ்சில் நிறையக் கண்டேன்.

 

அசையும் பச்சைக்கொடி பார்த்தேன்

அனைத்தும் மெல்ல நகரக் கண்டேன்.

முன்னால் ரயிலும் விரையக் கண்டேன்

பின்னால் மரங்கள் மறையக் கண்டேன்.

 

வழியில் பச்சை வயல் பார்த்தேன்

வெள்ளைக் கொக்குகள் பல பார்த்தேன்

சோளக்கொல்லை பொம்மைகளும்

ஜோராய் நிற்கும் அழகு பார்த்தேன்

 

கோணல் பனைமர வரிசை கண்டேன்

குரங்குகள் தாவும் சோலை கண்டேன்

குறுக்கிடும் பாதையில் காத்திருக்கும்

கார் பஸ் வரிசையும் நான் பார்த்தேன்.

 

டாட்டா காட்டி ஓடிவரும்

குழந்தைகளுக்கு கை அசைத்தேன்.

அடடா அடடா என்பது போல்

ஆற்றைக்கடக்கும் ஒலி ரசித்தேன்.

 

ரயிலுக்குள் பலவும் விற்கக் கண்டேன்

ரசனையாய்ப் பாடும் பாடல் கேட்டேன்.

பலப்பல நிலையம் கடக்கக் கண்டேன்

பலகைப் பெயர்களைப் படித்து வந்தேன்

 

அம்மாச்சி ஊரும் வரக்கண்டேன்

மகிழ்ச்சியில் மனமும் ஆடக்கண்டேன்

குஷியுடனே குதித்திறங்கிக் கொண்டேன்

விசிலூதிய ரயிலுக்கு விடைகொடுத்தேன்.


(ஆகஸ்டு 2020 பூஞ்சிட்டு இதழில் வெளியானது)



பூஞ்சிட்டு – இது குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், நூல் அறிமுகம், பொது அறிவு, புதிர்கள், விளையாட்டு போன்ற பல விஷயங்களைக் கொண்ட பல்சுவை மாத இதழ். அனைவரும் வாசித்துப் பயன் பெறுக. 

4 comments:

  1. அருமை... மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. ஆஹா... அருமையாக இருக்கிறது குழந்தைகளுக்கான பாடல்! நானும் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.