16 March 2024

உலகின் தொன்மையான மழைக்காடு

 மழைக்காடு என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது உலகிலேயே மிகப்பெரிய அளவில் பரந்துவிரிந்துகிடக்கும் அமேசான் மழைக்காடுதான். ஆனால் உலகின் மிகப் பழமையான மழைக்காடு இருப்பது ஆஸ்திரேலியாவில்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? சுமார் 180 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் டெயின்ட்ரீ மழைக்காட்டுடன் ஒப்பிடும்போது 55 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் அமேசான் எல்லாம் சிறுகுழந்தை எனலாம். அதிக அளவு மழை பொழிந்து வளம் சேர்த்திருக்கும் காட்டைத்தான் மழைக்காடு என்கிறோம். பொழிந்துகொண்டே இருப்பதால்தான் மழைக்காட்டுக்கு தமிழில் 'பொழில்' என்ற அழகிய பெயரிட்டுள்ளோம். 

மழைக்காடு

கிரானைட் மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட டெய்ன்ட்ரீ நதியும், அருவிகளும், நதியை ஒட்டிய அடர் மழைக்காடும் மழைக்காட்டை ஒட்டிய வெண்மணல் கடற்கரையும் கடற்கரையை ஒட்டிய தெள்ளிய கடற்பரப்பும், கடலுக்குள் வசீகரிக்கும் வண்ணத்தில் கரடுமுரடான பவளப்பாறைகளும் என உலகின் வேறு எங்கும் காணவியலாதபடி இயற்கையின் அழகும் அதிசயமும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு நம்மை அசரவைக்கும் இடம்தான் டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதி. 2015-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இப்பகுதி சாகசப் பிரியர்களுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் அற்புதமான விருந்தளிக்கும் இடமாகும்.

குவீன்ஸ்லாந்தின் வடகிழக்குக் கடற்கரையோரம் சுமார் 1200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப்படுகிறது டெயின்ட்ரீ மழைக்காடு. உலகின் ஆதித் தாவரங்கள், விலங்குகள் பலவும் இன்றும் அவற்றின் ஆதிகால இயல்பு மாறாமல் அங்கு காணப்படுகின்றன. உலகின் மிகத்தொன்மையான பூக்கும் தாவரங்கள் பத்தொன்பதில் பன்னிரண்டு இந்த டெயின்ட்ரீ மழைக்காட்டில் காணப்படுவதிலிருந்தே இதன் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

தொன்மையான மழைக்காட்டுக்கு 'டெயின்ட்ரீ' என்ற பெயர் எப்படி வந்தது? 

1873-வாக்கில் ஆற்றுவழியே மழைக்காட்டைக் கண்டடைந்த ஆய்வாளர் ஜார்ஜ் எல்ஃபின்ஸ்டோன் தன் நண்பரும் புவியியல் ஆய்வாளருமான டெய்ன்ட்ரீயின் பெயரை அம்மழைக்காட்டுக்குச் சூட்டினார். பின்னாளில் அந்நிலப்பகுதி முழுமைக்குமே அப்பெயர் அமைந்துபோனது. 

டெய்ன்டிரீ மழைக்காட்டின் 'இடியட் ஃப்ரூட்' பற்றித் தெரியுமா உங்களுக்கு? அதென்ன 'முட்டாள் பழம்' என்று கேட்கிறீர்களா? உண்மையில் இடியோஸ்பெர்மம் (Idiospermum) என்ற அறிவியல் பெயரின் சுருக்கம்தான் அது. 120 மில்லியன் வரலாற்றைக் கொண்டிருக்கும் அதுவே இன்றைய பூக்கும் தாவரங்கள் பலவற்றின் ஆதித்தாய் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'ரிப்பன்வார்ட்' மற்றும் 'பச்சை டைனோசார்' என்ற பெயர்களும் உண்டு. டைனோசார் வாழ்ந்த காலத்திலிருந்தே இவை வாழ்ந்துவருவதால் பச்சை டைனோசார் என்ற பெயராம். ஒரு வித்திலை, இரு வித்திலைத் தாவரங்கள் பற்றி அறிவோம். இது மூன்றிலிருந்து ஏழு வித்திலைகளைக் கொண்டு வளரும் தாவரம் என்பது பெரும் வியப்புக்குரியது. Idiospermum குடும்பத்தைச் சேர்ந்த ஒரே தாவரம் இதுதான். கடுமையான விஷத்தன்மை கொண்ட இதைத் தின்னும் கால்நடைகள் உயிரிழந்துவிடும். ஆனால் இப்பகுதியில் வாழ்ந்துவரும் musky rat-kangaroo போன்றவை அவற்றைத் தின்கின்றன என்பதும் அதனால் அவற்றுக்கு கெடுதல் எதுவும் நேர்வதில்லை என்பதும் ஆச்சர்யமே.

டெயின்ட்ரீ மழைக்காட்டில் மட்டுமே காணப்படக்கூடிய அரிய இடியோஸ்பெர்மம் மரத்தை சிட்னியின் தாவரவியல் பூங்காவில் காண நேர்ந்தபோது, அதுவும் பூக்கும் காலத்தில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதோ அங்கே நான் எடுத்த சில படங்கள். 





டெயின்ட்ரீ மழைக்காட்டில்
காணப்படும் பூச்சியினம் மட்டுமே சுமார் பன்னிரண்டாயிரம் வகை இருக்கலாம். அவை தவிர ஆஸ்திரேலியாவின் மொத்தப் பறவையினத்தில் 40 சதவீதமும், பட்டாம்பூச்சி இனத்தில் சுமார் 60 சதவீதமும், விலங்கினத்தில் 35 சதவீதமும், ஊர்வனவற்றில் 20 சதவீதமும் தவளையினத்தில் சுமார் 30 சதவீதமும் இங்கே காணப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் மொத்த நிலப்பரப்பில் ஒரே ஒரு சதவிகித நிலப்பரப்பே கொண்ட டெய்ன்ட்ரீ மழைக்காட்டில் இவ்வளவும் காணப்படுகின்றன என்றால் மழைக்காட்டின் வளம் நமக்குப் புரிகிறதல்லவா?

அருகிவரும் இனமான காஸோவரி பறவைகளை இங்கே அவற்றின் வாழ்விடத்தில் இயல்நிலையில் காணமுடிவது ஒரு பெரும் பாக்கியம். பறக்கவியலாத பறவையினத்தில் தற்போது உலகிலுள்ள மூன்றாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவில் உள்ள ஆஸ்ட்ரிச் (Ostrich) எனப்படும் தீக்கோழி, இரண்டாவது, ஆஸ்திரேலியப் பறவையான ஈமு (Emu). ஆனால் ஈமுவை விடவும் உடல் எடை அதிகமுள்ள பறவையினம் காஸோவரி. இதன் தலையில் கொம்பு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். பறவைக்குக் கொம்பா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். அதற்குக் காரணம் இருக்கிறது.

 


காஸோவரியின் பிரதான உணவு பழங்கள்தாம். இவை கிட்டத்தட்ட 26 வகையான பழங்களையும் 238 வகைத் தாவர உணவுகளையும் உண்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்பறவை பெரும்பாலான நேரத்தை பழமரங்களின் கீழேயே கழிக்கும். அதுவும் பழங்கள் பழுத்து உதிரும் காலமென்றால் சொல்லவே வேண்டாம். முழுநேரமும் மரத்தின் அடியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட முப்பது மீட்டர் உயர மரங்களிலிருந்து கீழே விழும் பெரிய பழங்கள் இதன் தலையில் விழுந்தால் என்னாவது? தலைக்கு சேதமுறா வண்ணம் இயற்கை அளித்தப் பாதுகாப்புத் தலைக்கவசம்தான் அதன் கொம்பு என்பது விநோதம். ஆம். கொம்பின் உள்ளே எலும்புக்கு பதில் காற்றறைகள் இருப்பதால் கொம்பு ஒரு அதிர்வுத்தாங்கியாகவும் (shock-absorber) செயல்படுகிறது. இந்த காஸோவரி பறவைகளின் எச்சத்தின் மூலமே மழைக்காட்டின் பெருமரங்களின் விதைபரவல் எளிதாக நடைபெறுகிறது.

 


டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதியின் பூர்வகுடிகள் குக்கு யலாஞ்சி மக்கள். அவர்கள் இந்நிலத்தை தங்களது புனித மற்றும் கலாச்சார அடையாளமாக மதிக்கின்றனர். இந்நிலம் சார்ந்து வழிவழியாக பல பாடல்களையும் கதைகளையும் புனைந்து இன்றும் தொடர்ந்து தங்கள் தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கின்றனர். பலர் இப்பகுதியில் பயண வழிகாட்டிகளாகவும் பணிபுரிகின்றனர். பல சுற்றுலா ஏற்பாட்டு மையங்களும் இங்கே செயல்படுகின்றன. நடைப்பயணம், மலையேற்றம், படகு வலித்தல், காட்டுவழிப் பயணம், மழைக்காட்டில் இராத்தங்கல், இரவு நேரத்து காடனுபவம், கானுயிர் நோக்கல் எனப் பல்வேறு அனுபவங்களை அள்ளித்தருகின்றன சுற்றுலா ஏற்பாட்டு மையங்கள். 

டெயின்ட்ரீ மழைக்காட்டுப் பகுதிக்கு சுற்றுலா செல்வோரிடம் முன்வைக்கப்படும் வேண்டுகோள்கள் இவைதான்.

தயவுசெய்து மழைக்காட்டின் இயல்பை மாற்றிவிடாதீர்கள். குப்பைகளை வீசிவிட்டுப் போகாதீர்கள், ஆற்றுநீரை அசுத்தம் செய்யாதீர்கள், பறவை, விலங்குகளுக்கு உணவு வழங்கி உங்கள் தயாள குணத்தைக் காட்டாதீர்கள். உங்கள் வருகைக்கு முன்னர் காடு எப்படி இருந்ததோ அப்படியே நீங்கள் செல்லும்போது விட்டுச்செல்லுங்கள்.

முன்னொரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மத்திய நிலப்பரப்பு வரையிலும் பரவியிருந்த மழைக்காடு கொஞ்சம் கொஞ்சமாக பரப்பளவில் குறைந்து தற்போது குறிப்பிடத்தக்க அளவில்தான் எஞ்சியுள்ளது. ஆதிகால விலங்குகளின், தாவரங்களின் உறைவிடமாய் எஞ்சியிருப்பதும் இப்பகுதிதான். நொடியில் காடழிப்பதில் கைதேர்ந்த மானுட குலத்துக்கு காடு வளர ஆகும் காலம் பற்றிய துளி அறிதலாவது இருக்கிறதா என்பது ஐயம்தான்!

(இக்கட்டுரை SBS தமிழ் வானொலியில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'நம்ம ஆஸ்திரேலியா' தொடராக ஒலிபரப்பானது. இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்டவையே. டெயின்ட்ரீ மழைக்காட்டைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டாததால் உள்ளூர் மழைக்காட்டின் படத்தை இணைத்திருக்கிறேன்.) 

 

3 March 2024

உலக காட்டுயிர் தினம்

 



ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் நாள் World wildlife day - உலக காட்டுயிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அழிந்துவரும் காட்டுயிர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதும் அவற்றைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்குவதும் இந்நாளின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனுமொரு மையக்கருவை முன்வைத்து காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காட்டுயிர்ப் பாதுகாப்பில் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மனிதர்களையும் மண்ணுலகையும் இணைத்தல் என்பதுதான் இந்த ஆண்டின் (2024) மையக்கரு.

காட்டுயிர் என்றால் காடுகளில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வளர்க்கப்படாத அல்லது மனிதர்களைச் சார்ந்துவாழாத, இயல்வாழிடத்தில் வாழும் எந்த உயிரும் காட்டுயிரே. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், காட்டில் வாழும் விலங்கினங்கள், மீன்கள், கடல்வாழ் உயிரிகள், தாவரங்கள் அனைத்துமே காட்டுயிர்தான்.

சிப்பி பிடிப்பான் (Sooty oystercatcher)

காட்டுயிர்களின் அழிவைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்தலையும் பொதுமக்களிடத்தும் குழந்தைகளிடத்தும் உண்டாக்கும் விழிப்புணர்வு நோக்கோடு இத்தினம் 2014-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம், உலகமயமாக்கம், இயற்கைச் சேதம், காடழிப்பு, வாழ்விட அபகரிப்பு, கரியமில வாயு வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழலும் இயற்கைச் சமநிலையும் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலப்பரப்பிலும் தனித்தன்மையோடு வாழும் காட்டுயிர்கள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் அதன் மூலம் காட்டுயிர்களைக் காப்பதும் நமது கடமை என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக வேண்டும். எனவே தான் நாடுவாழ், காடுவாழ், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் காட்டுயிரிகளின் வழியில் மனிதர்களாகிய நாம் குறுக்கிடாமல் இருந்தாலே போதும், அவை தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும்.



சாம்பல் தலை பழந்தின்னி வௌவால் (Grey headed flying fox)

சுற்றுச்சூழல் குறித்து குறைந்தபட்ச அடிப்படையறிவு கூட நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் பெரும் வருத்தம். ஒரு இடத்துக்கு சுற்றுலாவோ, சிற்றுலாவோ சென்றுவந்தால், நாம் போவதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்ததோ அதைப் போலவே நாம் திரும்பி வரும்போதும் இருக்கவேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? குரங்குகளுக்கு உணவளிப்பது, பிளாஸ்டிக் பைகளையும், தண்ணீர் பாட்டில்களையும் விசிறிவிட்டு வருவது, மதுவருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை அடித்து நொறுக்குவது, சத்தமாய்ப் பாடல்களை ஒலிக்கவிடுவது, கத்திக் கூப்பாடு போடுவது, மரக்கிளைகளை ஒடிப்பது, அங்கே வாழும் விலங்குகளையும் பறவைகளையும் கலவரப்படுத்துவது என சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான விஷயங்களைச் செய்து, நம்முடைய தடத்தை மிக ஆழமாக விட்டுவிட்டு வருகிறோம். 

பறவைகளுக்கு  எண்ணெயில் பொரித்த, உப்பு சேர்த்த உணவுகளைத் தருவது அவற்றுக்கு செய்யும் நன்மை அல்ல, கெடுதலே என்பதை நாம் உணரவேண்டும். இயற்கையாக அவை உணவு தேடி உண்ணும் பழக்கத்தை மாற்றி மனிதர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளுவதோடு அவற்றின் ஆரோக்கியம் கெடவும் நாம் காரணமாகிறோம். உண்மையில் அவற்றுக்கு உதவ விரும்பினால் வீட்டைச் சுற்றி மரம், செடிகளை வளர்த்து அவற்றுக்கு உறைவிடமும் உணவும் இயற்கையான முறையில் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.  சிலர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மா, மாதுளை, கொய்யா  மரங்களின் பழங்களை பிளாஸ்டிக் பை போட்டுக் கட்டி அணில், பறவை போன்றவற்றிடமிருந்து பத்திரப்படுத்திவிட்டு, அவற்றுக்கு மிக்சரும் காராசேவும் பரிமாறி மகிழ்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.  இந்தியாவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிலும் நான் அப்படியான பல விஷயங்களைப் பார்க்கிறேன். 

ஆஸ்திரேலியாவில் இயல்வாழிடப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால் பலர் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. விளைவு? 


ரொட்டித் துண்டுகளுக்காகக் குழுமி நிற்கும் பறவைகள்

கடற்கரையோரங்களில் வசிக்கும் கடற்புறா இனமான silver gull பறவைகள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் வழக்கத்தையே மறந்து கரையோரக் கடைகளின் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை மட்டுமே நம்பி வாழத் தொடங்கிவிட்டன. 

கரையோரக் கடைகளில் கடற்புறாக்கள் (silver gulls)

மண்ணைக் கிளறி புழு பூச்சிகளைத் தேட வேண்டிய அன்றில் பறவைகள் குப்பைத்தொட்டிகளைக் கிளறி மீந்துபோன உணவைத் தின்று கொண்டிருக்கின்றன. அவற்றின் பெயர் Ibis என்பது கூட ஆஸ்திரேலியாவில் பலருக்கும் தெரியாது. Bin chicken என்றால்தான் தெரியும். 

குப்பைத் தாளுடன் வெள்ளை அன்றில் (Australian white ibis)

பூங்காக்களில் பெருவாத்துகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக ரொட்டித்துண்டுகளைத் தூவுவதால், அவற்றின் பெருத்த அடிவயிறுகள் தரைதட்டிக் காணப்படுகின்றன.

பூங்காவின் பெருவாத்துகள் (Geese)


வயிறு பெருத்த பெருவாத்து (Goose)

மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த குக்கபரா பறவைகளோ, குழந்தைகளின் கையிலிருந்து உணவைப் பிடுங்கித் தின்னும் அளவுக்கு மூர்க்கமாகிவிட்டன. 


இயற்கைச் சமநிலை குலைய நாமே காரணமாகிவிட்டு, அதன் காரணமாகப் பின்னாளில் நாமும் பாதிப்புக்கு ஆளாகும்போது இயற்கை நம்மைப் பழிவாங்குவதாகப் புலம்புவது எவ்வளவு முரண்!



இனியேனும் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பெறுவோம். உதவி என்ற பெயரில் உபத்திரவம் செய்துகொண்டிருப்பதை அறிந்து தவிர்ப்போம். சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம். காடு வளர்ப்போம். காட்டுயிர்களைப் பாதுகாப்போம்.

*****

உலக காட்டுயிர் தினத்தை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு:

இன்று (03-03-24) இந்திய நேரம் பிற்பகல் 1.30 மணி முதல் நாளை (04-03-24) பிற்பகல் 1.30 வரை என்னுடைய மூன்று மின்னூல்கள் இலவசம்.


ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் - தொகுப்பு 1

https://www.amazon.in/dp/B098XVX17X


கங்காரூ முதல் வல்லபி வரை

(ஆஸ்திரேலியாவின் அதிசய விலங்குகள் – தொகுப்பு 1)

https://www.amazon.in/dp/B0B19NXLLN



மார்சுபியல், பாலூட்டி & மோனோட்ரீம் ஊனுண்ணிகள்

(ஆஸ்திரேலியாவின் அதிசய விலங்குகள் - தொகுப்பு 2)

https://www.amazon.in/dp/B0C5JR1S72


ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கி வாசித்து மகிழலாம். 

*****

29 February 2024

ஜினியாவைத் தேடிவரும் ஜீவன்கள்

 தோட்டத்துப் பிரதாபம் - 28

கோடை முடியப்போகும் இந்த சமயத்தில் அழகழகான ஜினியா பூக்களால் தோட்டம் உயிர்ப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சென்ற வருடத்தை விடவும் இந்த வருடம் நிறையப் பூக்கள். ஸ்பெஷலாக அடுக்கு ஜினியா பூக்களும் பூத்துள்ளன. செவ்வந்தி போல அவை அடுக்கடுக்காகப் பூத்துக்கொண்டே போவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

 

1. அடுக்கு ஜினியா

ஆச்சர்யமாக எல்லா பூக்களுமே கிட்டத்தட்ட அடர் பிங்க் நிறம். அந்த அழகிய புறவிதழ்களுக்கு நடுவில் குட்டிக் குட்டியாக மஞ்சள் நிறத்தில் உண்மையான பூக்கள். அந்தக் குட்டிப் பூவுக்குள் எவ்வளவு தேன்தான் இருக்குமோ? வண்ணத்துப்பூச்சிகளும் தேனீக்களும் எந்நேரமும் பூக்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன.

2. ஜினியா பூக்கள்

ஜினியா பூக்களில் தேனெடுக்க வண்ணத்துப்பூச்சிகளும், ஈக்களும், தேனீக்களும் மாறி மாறி வருகின்றன. இலைகளையும் பூக்களையும் உணவாக்கிக்கொள்ள வெட்டுக்கிளிகளும், அசுவினிப் பூச்சிகளும் வருகின்றன. அசுவினிப் பூச்சிகளை உணவாக்கிக்கொள்ள பொறிவண்டுகள் வருகின்றன. செடியிலேயே முட்டையிட்டு அவற்றின் லார்வாக்கள் உணவுப்பஞ்சமின்றி வாழ வழி செய்கின்றன. இலைகளுக்கு அடியில் இருக்கும் புழுக்களைத் தேடி குளவிகள் வட்டமிடுகின்றன. போதாதென்று சிலந்திப்பூச்சிகள் ஜினியா செடியின் காம்புகளுக்கு இடையே வட்ட வட்டமாக வலை பின்னிவைத்துக்கொண்டு, தேனெடுக்க வரும் பூச்சிகளைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கின்றன. 

இந்த ஜினியா செடிகளையும் பூக்களையும் வாழ்வாதாரமாகக் கொண்டு எவ்வளவு ஜீவன்கள் வாழ்கின்றன. இயற்கையின் சார்புத்தத்துவம் வியக்கவைக்கிறது. எங்கள் தோட்டத்து ஜினியாக்களைத் தேடிவரும் எண்ணற்ற ஜீவன்களுள் என் கேமராவுக்குள் சிக்கிய சில மட்டும் இங்கே...  


3. மோனார்க் வண்ணத்துப்பூச்சி

 

4. ப்ளூ மூன் வண்ணத்துப்பூச்சி

5. நீல முக்கோண வண்ணத்துப்பூச்சி


6. கேபேஜ் ஒயிட் வண்ணத்துப்பூச்சி


7. வெட்டுக்கிளி

8. இலைவெட்டித் தேனீ


9. நீல வரித் தேனீ

10. குளவி


11. சிலந்தியும் தேனீயும்

12. நீல வரித் தேனீ

13. மோனார்க் வண்ணத்துப்பூச்சியும் சிலந்தியும்


14. சிலந்தியும் அதற்கு இரையான ஈயும்

15. இலைவெட்டித் தேனீ

16. பொறிவண்டு

17. சிலந்தியும் பொறிவண்டின் லார்வாவும்


ஜினியா பற்றி ‘பூக்கள் அறிவோம்’ தொடரில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் இங்கே ஒரு முறை பதிவு செய்கிறேன். 

ஜினியா பூ டெய்சி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் அமெரிக்கா. இம்மலர் குறித்து முதலில் வரையறுத்த ஜெர்மானிய தாவரவியல் வல்லுநர் Johann Gottfried Zinn அவர்களின் நினைவாக இதற்கு zinnia என்று பெயரிடப்பட்டுள்ளது. 

வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் மிகப் பிடித்தமான பூக்கள் இவை என்பதால் தோட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் மகரந்தச் சேர்க்கை நடைபெறவும் அவை பெரிதும் உதவுகின்றன. விதைகள் முற்றி வெடித்துச் சிதறுவதன் மூலம் புதிய செடிகள் தாமே உருவாகின்றன. 

நீளமான காம்புகளில் வண்ண வண்ணமாய்ப் பூக்களை மலர்த்துவதாலும், செடியிலிருந்து பறிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரத்துக்கு வாடாதிருக்கும் தன்மையாலும் ஜினியா பூக்கள், பூச்சாடிகளையும் பூங்கொத்துகளையும் அலங்கரிக்கப் பயன்படுகின்றன. வாடிய பிறகும் கூட உலர் மலரலங்காரத்தில் இடம்பெற்று பிறவிப்பயனை முழுமையாய் அடைகின்றன. 

நட்பின் அடையாளமாக, முக்கியமாக பிரிந்துபோன நட்பின் அடையாளமாக இவை கருதப்படுகின்றன. அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் மாநில மலர் என்ற பெருமையும் சில வருடங்கள் (1937 – 1951) இதற்கு இருந்திருக்கிறது.   

இன்று இவ்வளவு கொண்டாடப்படும் ஜினியா பூக்கள் முற்காலத்தில் அசிங்கமான பூக்களென்று அலட்சியப்படுத்தப் பட்டிருந்தனவாம். ஐரோப்பாவில் அறிமுகமான சமயம், எளிதாய் எம்மண்ணிலும் வளரும் தன்மையால் ‘ஏழைவீட்டுப் பூ’ என்று அழைக்கப்பட்டதாம். இதன் பூர்வீகமான மெக்சிகோவில் இதன் பெயர் mal de ojos. அதற்கு ‘கொள்ளிக் கண்’ என்று அர்த்தமாம். என்னவொரு முரண் பெயர்!

ஜினியா பூக்களில் தேனெடுக்கும் வண்ணத்துப்பூச்சிகளை சிறு காணொளியாக என்னுடைய youtube channel-ல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம். 


https://www.youtube.com/watch?v=gJTi2YVpKRs&t=9s&ab_channel=GeethaMathi

பிரதாபங்கள் தொடரும்.