15 October 2024

புல்லுருவியும் நல்லவையே!

 

1. யூகலிப்டஸ் மரத்தில் பூத்திருக்கும் புல்லுருவி

எங்கள் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன என்று சொன்னேன் அல்லவா? அம்மரங்களைக் கூர்ந்து கவனித்தபோது பெரும்பாலான கிளைகள் மேல்நோக்கி வளர்ந்திருக்க, சில கிளைகள் மட்டும் உடைந்துதொங்குவது போல நிலம் நோக்கியிருப்பதைப் பார்த்தேன். அந்தக் கிளைகள் மரத்தின் இயல்போடு ஒட்டாமல், சடைசடையாகத் தொங்கிக்கொண்டும், காற்று பலமாக வீசும்போது மற்றக் கிளைகளின் அசைவோடு பொருந்தாமல் கொழுகொம்பற்றக் கொடிகளைப் போல தனித்துக் காற்றிலாடிக் கொண்டும் இருக்கும். வசந்த காலத்தில் யூகலிப்டஸ் பூப்பதற்கு முன்பாக செக்கச் செவேலென்றோ மஞ்சள் சிவப்பு வண்ணத்திலோ கொத்துக்கொத்தாய்ப் பூக்களோடு காட்சியளிக்கும். எனக்கு அக்காட்சி விநோதமாக இருந்தது. ஏறுகொடி போன்ற அது என்ன தாவரம் என்று அறியும் ஆவல் மேலிட்டது. ஆனால் கண்டறிய இயலவில்லை. 

என்ன, ஏன், எப்படி என்ற கேள்விகள் உள்ளுக்குள் நச்சரித்துக்கொண்டே இருந்தன. இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோவின் Green planet என்ற தொலைக்காட்சி நிகழ்வாக்கத் தொடரில் விடை கிடைத்ததோடு மேலதிகத் தகவல்கள் என்னை வியப்பின் எல்லைக்கே இட்டுச்சென்றன. யூகலிப்டஸ் கிளைகளில் காணப்பட்ட அந்த வித்தியாசமான தாவரம் வேறொன்றுமில்லை, புல்லுருவிதான் அது. சிறுவயதில் எங்கள் வீட்டு மாமரங்களில் புல்லுருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை வேறுமாதிரி இருக்கும்.


2. புல்லுருவிகள் காற்றிலாடும் யூகலிப்டஸ் மரம்

3. வட்டத்துக்குள் இருப்பவைதான் புல்லுருவிச் செடிகள்

புல்லுருவி என்றால் என்ன? செழிப்பாய் வளர்ந்திருக்கும் பெரு மரங்களின் கிளைகளில் வளர்ந்து படர்ந்து மரத்தின் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளரக்கூடிய ஒருவகை ஒட்டுண்ணித் தாவரமே புல்லுருவி ஆகும். அது கொடியாகவும் இருக்கலாம், செடியாகவும் இருக்கலாம், அல்லது மரமாகவும் இருக்கலாம். நல்ல நிலையில் இருக்கும் ஒன்றில் ஒரு கெட்ட விஷயம் வெளியில் தெரியாமலேயே மெல்ல மெல்ல உள்ளே ஊடுருவி கேடுவிளைவிக்கும் செயலுக்கு ‘நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல’ என்றொரு உவமைத்தொடர் சொல்லப்படும்.

4. மொட்டு வைத்திருக்கும் புல்லுருவிச் செடி

புல்லுருவிகளை குறைத்து மதிப்பிடுவது சரியன்று என்றும் இயற்கையின் அங்கமான அவை சுற்றுச்சூழலுக்குப் பெரும் நன்மை விளைவிப்பவை என்றும் உறுதிபடச் சொல்கிறார், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த, பல வருடங்களாக புல்லுருவிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புல்லுருவி வல்லுநர் எனப் புகழப்படுகின்ற, டாக்டர் டேவிட் வாட்சன்.

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவிகள் இருப்பதாகவும் அவற்றுள் 97 வகை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை என்றும் குறிப்பிடும் அவர், புல்லுருவிகள் தாய்மரத்தை அழித்துவிடும் என்ற வாதம், நாயுண்ணிகள் நாயைக் கொன்றுவிடும் என்பதற்கு நிகரானது என்கிறார். புல்லுருவிகள் வளர்வதற்குத் தேவையான சத்துக்களைத் தாய்மரத்திலிருந்து பெற்றாலும் ஒளிச்சேர்க்கை மூலம் தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும் என்கிறார். மேலும் புல்லுருவிகளின் இலைகளும், பூக்களும், கனிகளும் பல உயிரினங்களுக்கு உணவாவதையும், அடர்த்தியான புல்லுருவித் தாவரம் மரக்கிளையில் அமைந்திருக்கும் புதர் போல பல பறவைகளுக்கு பாதுகாப்பான உறைவிடமாகவும் கூடு கட்ட வசதியாகவும் இருப்பதையும் சுட்டுகிறார்.

எங்கள் சுற்றுப்புற யூகலிப்டஸ் மரங்களில் எனக்குத் தெரிந்து வளர்ந்திருக்கும் புல்லுருவி இனங்கள் Fleshy mistletoe (Amyema miraculosa) மற்றும் Brush mistletoe (Amylotheca dictyophleba). 

5. புதர் போல் அடர்த்தியாய் வளர்ந்திருக்கும் புல்லுருவி

ஆஸ்திரேலியாவில் புல்லுருவிகளுக்கு அடைக்கலம் தந்திருக்கும் மரங்கள் அநேகம். யூகலிப்டஸ், வாட்டில், சவுக்கு, ஆல், பைன், மகடாமியா, மேலலூக்கா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சுதேசி மரங்களோடு ஜகரண்டா, அரளி, மலைவேம்பு, சைகாமோர், மேக்னோலியா போன்ற அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிய மரங்கள் பலவும் அவற்றுள் அடக்கம். சில வகை புல்லுருவிகள் ஏற்கனவே மரத்தில் ஒட்டுண்ணியாக இருக்கும் மற்றப் புல்லுருவிகளின் மீது ஒட்டுண்ணியாக வளர்ந்து அவற்றின் சத்தை உறிஞ்சிக்கொள்ளுமாம். ‘பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதைப் பிடுங்கினாராம் அனுமாரு’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா? 

6. புல்லுருவி வேர்ப்பகுதியில் மேக்பை கூடு

7. புல்லுருவியில் கூடு கட்ட இடம்பார்க்கும் நாய்சி மைனர் 

புல்லுருவிகள் வளர்ந்திருக்கும் உறுதியான யூகலிப்டஸ் கிளைக் கவைகளில் வருடந்தோறும் மேக்பை பறவைகளும் நாய்சி மைனர் பறவைகளும் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். புல்லுருவிகள் பூத்திருக்கும் சமயத்தில் அவற்றில் தேனருந்த லாரிகீட் பறவைகள் கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கும். அப்போது காச்மூச், காச்மூச் என்ற அவற்றின் ஆரவாரச் சத்தம் காதைத் துளைக்கும்.

 

8. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட் பறவைகள்


9. புல்லுருவிப் பூக்களில் தேனருந்தும் லாரிகீட்

ஐரோப்பாவைச் சேர்ந்த Viscum album என்ற புல்லுருவி மிகுந்த மருத்துவக்குணம் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. விஸ்கம் ஆல்பம் புல்லுருவியிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்து புற்றுநோய்க்கு  சட்டப்பூர்வமான மருந்தாகப் பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் மட்டுமல்லாமல் கட்டி, வீக்கம், முடக்குவாதம், மலச்சிக்கல், உள்காயம், இரத்தக்கசிவு, வயிற்றுப்புண் என பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐரோப்பியப் பாரம்பரிய மருத்துவத்திலும் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்துவருகிறது.

புல்லுருவி பற்றி தமிழில் வேறு ஏதாவது பழமொழிகளோ, சொலவடைகளோ, வட்டார வழக்குச் சொற்றொடர்களோ உள்ளனவா என்று தேடும்போது கிடைத்த பல தகவல்கள் அதிர்ச்சி அளித்தன. 

10. காய்ந்துபோன புல்லுருவியின் உறுதியான வேர்கள்

மூங்கில், மா, அரசு, புளி, வேம்பு, எருக்கு, எலுமிச்சை, நாவல், வில்வம், வன்னி, இலுப்பை, நெல்லி, மருதாணி, கருங்காலி, புங்கை, வேங்கை, பூவரசு, மருது, வாகை, எட்டி, கடம்பு, சந்தனம், ஆல், அத்தி, இலவம் என ஒரு மரம் விடாமல் நாட்டிலிருக்கும் அனைத்து மரத்துப் புல்லுருவிக்கும் (எப்படியோ தப்பிவிட்டது தைலமரம்) ஒவ்வொரு விதமான பலாபலன் உண்டு என்றும் ஆணையும் பெண்ணையும் வசியம் செய்ய ஒன்று, எதிரியை நாசம் செய்ய ஒன்று, செல்வம் குவிக்க ஒன்று, வியாபாரம் கொழிக்க ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு ஜெயிக்க ஒன்று, சூதாட்டத்தில் வெற்றி பெற ஒன்று என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வேர், பொடி, தாயத்து, மை, காப்பு, பூஜை என பல வடிவங்களில் புல்லுருவி வியாபாரம் சக்கைபோடு போடுகிறது. மந்திரம், மாந்திரீகம், வசியம், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் என ஒரு கூட்டம், பலவீனமான மக்களைக் குறிவைத்து தனி ட்ராக்கில் பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

11. வீட்டருகில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள்

புல்லுருவிகள் எப்படி அவ்வளவு உயரமான மரக்கிளைகளில் விதைகளை ஊன்றி வளர்கின்றன? 

உலகத்தில் சுமார் 1500 வகையான புல்லுருவி இனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அவை சார்ந்து வாழும் மரம், அந்த இடத்தின் தட்ப வெப்பச் சூழல், அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் போன்றவற்றைப் பொறுத்து விதவிதமான முறையில் விதைபரவல்களை மேற்கொள்கின்றன. சில புல்லுருவிகள் குறிப்பிட்ட பறவைகள் மூலமே விதைகளைப் பரப்புகின்றன. பறவைகள் பிசுபிசுப்பான புல்லுருவிப் பழங்களைத் தின்றுவிட்டு எச்சமிடும்போதோ அல்லது அலகை மரத்தில் துடைக்கும்போதோ விதைகள் மரப்பட்டையின் இடுக்குகளில் சிக்கி வேர் பிடித்து வளர்கின்றன. சில புல்லுருவிகளின் விதைகள் முற்றிய நிலையில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வெடித்துச் சிதறி புதிய மரங்களைச் சென்றடைகின்றன.   

 

12. புல்லுருவிச் சிட்டு ஆண்

யூகலிப்டஸ் மரப் புல்லுருவிகளின் விதைபரவல் பத்து செ.மீ. நீளமும் பத்தே கிராம் எடையும் கொண்ட mistletoebirds எனப்படும் புல்லுருவிச் சிட்டுகள் மூலமே நடைபெறுகிறது என்று அறிந்து வியந்தேன். Dicaeidae எனப்படும் பூக்கொத்திக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளுள் ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரே பறவை Mistletoebirds தான் என்பது அவற்றின் தனிச்சிறப்பு. 

13. புல்லுருவிப் பூக்கள் (1)

14. புல்லுருவிப் பூக்கள் (2)

‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ என்றொரு பழைய பாடலைக் கேட்கும்தோறும் ‘சின்னப் பூங்குருவி நாளைக்கும் சேர்த்துத் தேடுதே’ என்ற வரிகள் உள்ளுக்குள் சிறு நெருடல் தரும். ‘வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை’ என்று பள்ளிக்காலத்தில் வாசித்த பைபிள் வாசகமும் உடனே நினைவுக்கு வந்துபோகும். ஆனால் ஆஸ்திரேலியப் புல்லுருவிச் சிட்டுகளைப் பற்றி அறிந்துகொண்டபோது நெருடல் தீர்ந்தது.  

புல்லுருவிச் சிட்டுகளின் உணவு புல்லுருவிப் பழங்கள்தாம். அவை புல்லுருவிப் பழங்களைத் தின்பதைப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கும். பழத்தைப் பறிக்காமல் தோல் காம்பிலேயே தொங்க, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பகுதியை மட்டும் அலகால் பிதுக்கி கொட்டையுடன் லபக்கென்று இவை விழுங்கும் நேர்த்தி வியக்கவைக்கும். அரை மணி நேரத்தில் பழத்தின் சத்தை உறிஞ்சிக்கொண்டு எச்சத்தின் மூலம் கொட்டையை வெளியேற்றும். ஆனால் பறக்கும்போதே போகிற போக்கில் எச்சம் விடாது. இன்னொரு மரத்தில் விதை விழுந்து முளைத்தால்தான் தனக்குத் தேவையான உணவு தொடர்ந்து கிடைக்கும் என்பது அந்த சின்னஞ்சிறு சிட்டுக்குத் தெரியும். எனவே மற்றொரு உயரமான யூகலிப்டஸ் மரக்கிளையில் அமர்ந்து எச்சமிடும். இக்கொட்டையைச் சுற்றி சளி போன்ற பிசுபிசுப்பான திரவம் ஒட்டியிருக்கும். அப்போதுதானே விதை மரக்கிளையில் ஒட்டிக்கொண்டு வளர ஏதுவாக இருக்கும்.

15. மாலைக் கதிரொளியில் யூகலிப்டஸ் மரம் புல்லுருவிகளோடு

புல்லுருவிச் சிட்டு எச்சமிடும் அழகும் தனித்துவமானது. பிசினுடன் கூடிய விதையை எச்சமாக வெளியேற்றிய பிறகும் அப்பிசினிலிருந்து விடுபடுவதற்காக கிளையில் அப்படியும் இப்படியுமாக நடன அசைவுகளைப் போன்ற அதன் அசைவுகள் Pre-poop dancing என்று சொல்லப்படும் அளவுக்குப் பிரசித்தம்.

புல்லுருவிப் பழத்தின் விதை கிளையோடு ஒட்டிக்கொண்டதும் முளை விட்டு அக்கிளையினைப் பற்றிக்கொண்டு அதன் சத்தினை உறிஞ்சிக்கொண்டு வளர ஆரம்பிக்கும். பிறகு பூத்து காய்த்துப் பழங்களைக் கொடுக்கும். புல்லுருவிப் பறவைகள் அப்பழங்களைத் தின்று விதைகளை எச்சத்தின் மூலம் மற்ற மரங்களுக்குப் பரப்பும். இப்படியாக புல்லுருவித் தாவரங்கள் புல்லுருவிச் சிட்டுகளின் தயவால் தங்கள் வாழ்நாள் முழுவதும் மண்ணைப் பார்க்காமலேயே மரங்களிலேயே முளைத்து வளர்ந்து மடிகின்றன. புல்லுருவிச் சிட்டுகளும் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே விதைத்து உண்டு மகிழ்கின்றன.

பழத்தை சும்மா தின்றுவிட்டுப் போவோம் என்று இல்லாமல் நாளைக்கும் சேர்த்து விதைக்கிறதே. இந்தக் குருவியைத்தான் கவிஞர் பாடியிருப்பாரோ?


16. புல்லுருவிச் சிட்டு பெண்


17. புல்லுருவிச் சிட்டு ஆண்

தேன்சிட்டு அளவே உள்ள புல்லுருவிச் சிட்டுகளை நேரில் பார்க்க முடியுமோ முடியாதோ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் எங்கள் வீட்டின் பின்னால் இருக்கும் மரத்தில் வந்தமர்ந்து குரல் கொடுத்தன. விடுவேனா? சட்டென்று படம் பிடித்துவிட்டேன். 

18. அழகிய புல்லுருவிப் பூக்கள்


19. வழியில் கிடந்த புல்லுருவிப் பூ

புல்லுருவிப் பூவும் கூட ஒருநாள் எதிர்பாராமல் என் கைக்கு வந்தது. வாழையின் உதிரிப்பூ வடிவத்தில் பளீரென்ற மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் கீழே கிடந்த அதைக் கையிலேந்தி படம் பிடித்தபோது, காலம் காலமாய் தனக்கென்று ஒரு வாழ்வைத் தகவமைத்துத் தக்கவைத்திருக்கும் புல்லுருவி மீது மதிப்பு பெருகியது. 

*****


24 September 2024

பத்தாயிரம் காலடிகளும் பறவை பார்த்தலும்



1. பூவைக் கொறிக்கும் காக்கட்டூ 

வசந்தகாலம் தொடங்கியதும் பறவைகள் புத்துணர்வோடு பறக்கப் புறப்பட்டது போல நானும் நடக்கப் புறப்பட்டுவிட்டேன். தினமும் நடப்பது சாதாரண விஷயம்தான். ஆனால் இந்த முறை புதிய உத்வேகத்தோடும் தினம் பத்தாயிரம் steps என்ற இலக்கோடும். என்னுடைய நடைவேகத்துக்கு பத்தாயிரம் காலடிகள் என்பது சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம். 

வசந்தகால ஒவ்வாமையால் நித்தமும் தொடர்தும்மலோடும் நீரொழுகும் மூக்கோடும் அவதிப்படும் எனக்கு இது பெரிய சவால்தான்.  நடைபயிற்சிக்குப் பிறகு வீட்டுக்குள் நடக்கும் நடை எப்படியும் ஒரு கி.மீ.ஐத் தொட்டுவிடும். மற்ற வெளிவேலைகளுக்காக நடக்க நேரும் நாட்களில் காலடிக் கணக்கும் கூடும்.  தூரக்கணக்கும் கூடும். இந்த மாதம் முதல் தேதியிலிருந்து இன்றுவரை நான் நடந்திருக்கும் தூரம் 176 கி.மீ. என்றும் சராசரியாக ஒரு நாளைக்கு 7.33 கி.மீ. என்றும் fitbit (மகள் உபயம்) புள்ளிவிவரம் காட்டுகிறது. தினமும் இவ்வளவு தூரம் நடந்தாலும் ஒரு நாள் கூட கால்வலி வரவில்லை என்பதே பெரிய நிம்மதி. 

3. ரோஸ் நிற க்ளோவர் பூ

நடைபயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் பெரும் புத்துணர்வு தருவதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். கணவரை அலுவலகத்துக்குக் கிளப்பிவிட்டு, புலர்ந்தும் புலராத காலைநேரத்தில் புறப்பட்டேன் என்றால் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பும்போது சூரியன் சுள்ளென்று முகத்தில் அறையும். காலையில் நேரம் ஏதுவாக அமையாவிடில் மாலை. 

4. நடைசாலை

எந்த இடையூறும் இன்றி நடக்க விரும்புபவர்களுக்கு நெடுஞ்சாலைகளுக்கு இணையான, வாகன அனுமதியற்ற அகலமான நெடிய தார்ச்சாலைகள் பல ஊர்களையும் இணைக்கும் விதத்தில் இங்கிருப்பது பெரும் வரப்பிரசாதம். சீரான அந்தச் சாலைகளில் நடக்கலாம், ஓடலாம், சைக்கிள் ஓட்டலாம், நாய்களை அழைத்துச் செல்லலாம். அவ்வளவுதான். வேறெந்த வாகனத்துக்கும் அனுமதி கிடையாது. பராமரிப்பு வாகனம் மட்டும் எப்போதாவது வரும். அதுவும் பத்து கி.மீ. க்கும் குறைவான வேகத்தில். வாக்கிங், ஜாகிங், ரன்னிங், சைக்ளிங், ஸ்கேட்டிங் என பலர் எதிர்ப்படுவார்கள். தளர்ந்த நடையோடு அல்லது கைத்தடி உதவியோடு யார் துணையும் இன்றி தனித்து நடக்கும் முதியவர்களைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பாரா-சைக்ளிங் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கைவண்டிகளைப் படுவேகமாக ஓட்டிச்செல்லும் பந்தய வீரர்களைப் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். 


5. தனியே தன்னந்தனியே

சாலையின் இரண்டு பக்கமும் வளர்ந்து நிழல் தரும் சவுக்கு, யூகலிப்டஸ், வாட்டில் மரங்களும், சிட் சிட் சிட் என்று புதர்ச்சிட்டுகள் ஒளிந்துபிடித்து விளையாடும் கம்பங்கோரைப் புதரும், வசீகரப் பூக்களோடும் இலைகளோடும் காட்சியளிக்கும் பெயர் தெரியாத செடிகொடிகளும் நடையை இலகுவாக்கும். வழியில் குறுக்கிடும் சிற்றோடையும் சாலையை ஒட்டிய இரண்டு பெரிய விளையாட்டு மைதானங்களும் கூடுதல் சுவாரசியம். 

6. அண்டங்காக்கை

7. அத்திப்பறவை - ஆண்

8. மின்கம்பத்தில் சிரிக்கும் குக்கபரா

9. க்ளோவர் பூக்களைக் கொறிக்கும் காலா இணை

காலைவேளையில் அமைதியாய்க் காணப்படும் பச்சைப் பசேலென்ற மைதானத்தில் புல்வெளியைக் கிளறிப் புழுக்களைத் தேடும் மேக்பை, மேக்பை லார்க், புறா, மைனா, கொண்டைப்புறா, அண்டங்காக்கை, காக்கட்டூ, காலா என ஏராளமான பறவைகளைப் பார்க்க முடியும். 

அலகு கோதும் அன்றில் பறவைகளும், வழி மறிக்கும் வாலாட்டிக் குருவிகளும், தாழப் பறந்து வித்தை காட்டும் தைலாங்குருவிகளும், க்ளோவர் பூப்படுகையை மொய்க்கும் தேனீக்களும்  ஓடி ஓடி அவற்றைப் பிடித்துத் தின்னும் மேக்பைகளும், புதருக்குள் தலைநீட்டியும் குனிந்தும் பாம்போவென பயமுறுத்தும் நீல நாக்கு அரணைகளும், காற்றில் புரளும் சருகுகளைப் போல் கூட்டமாய் தரையமர்ந்து பறக்கும் செம்புருவச் சிட்டுக்களும், ஓடையில் குஞ்சுகளோடு நீந்தும் தாழைக்கோழிகளும், நாமக்கோழிகளும், வாத்துகளும் நாரைகளும் கண்ணுக்கு விருந்து என்றால் அடித்தொண்டையால் ஆ...ஆ... என்று ராகம் போட்டு இழுக்கும் அண்டங்காக்கைகளின் அழைப்பும், குக்கபரா பறவையின் கெக்கெக்கே எனும் சிரிப்பும், முகங்காட்டாத குயிலின் ஏக்கக் கூவலும், கீச்சான்களின் கொஞ்சலும், மேக்பை லார்க் பறவைகளின் டீ...வீ... டீ...வீ... என்னும் டூயட்டும், புதர்ச்சிட்டுகளின் சிட் சிட்டும், நாமக்கோழிகளின் கீச்சொலியும், அன்றில் பறவைகளின் கொம்பூது குரலும், காக்கட்டூக்களின் கர்ண கடூர விளிப்பும் என பறவைகளின் கலவையான ஒலி காதுக்கு விருந்து. மாலை நேரமெனில்  பொன்னொளிரும் கதிரும் வண்ணஜாலம் காட்டும் வானமும் கூடுதல் அழகு. 

10. பிங்க் நிற வானம்

11. ஆரஞ்சு வண்ண வானம்

12. பொன்சரிகையென மேகங்கள்

13. தகதகக்கும் மாலைக்கதிர்

14. செவ்வந்தி மாலைப்பொழுது

எதிர்ப்படுவோரில் பெரும்பான்மையானோர் காதில் earphone இருக்கும். எனக்கும் பாட்டுக் கேட்டுக்கொண்டு நடக்கப் பிடிக்கும் என்றாலும் காலைநேரப் பறவைகளின் ஒலி அதை விடவும் செவிக்கினிமை. பறவைகளின் ஒலிகளை இனம் பிரித்து அது என்ன பறவை என்று கண்டுபிடிப்பது எனக்குப் பிடித்த விளையாட்டு. சில புதிய ஒலிகளைக் கேட்கும்போது அது எந்தப் பறவையாக இருக்கும் என்று ஆர்வம் மேலிடும்.  

15. அத்திப் பறவை ஜோடி

16. White-plumed Honeyeater

17. செம்புருவச் சிட்டுகள்

18. மஞ்சள் ராபின்

நடை வழியில் புதிய பறவைகளைப் பார்த்தால் என்னை அறியாமலேயே நடை தடைபட்டுவிடும். கையிலிருக்கும் மொபைலால் முடிந்தவரை படம் எடுப்பேன். படமெடுக்க முடியவில்லை என்றால் நின்று பார்த்து ரசித்துவிட்டு வருவேன்.  பறவை கூர்நோக்கலும் உண்டு. 

‘ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு’ என்றொரு சொலவடை உண்டல்லவா?  நான் ரசித்த காட்சிகளுள் சில...

காட்சி 1:

தினமும் குறிப்பிட்ட இடத்தில் தகரப்பெட்டியைத் தரையில் இழுப்பது போன்று க்ரா... க்ரா... என்றொரு பறவைச் சத்தம் கேட்கும். அது என்ன பறவை என்று எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் பார்க்க முடியவில்லை. மனதுக்குள் அந்தச் சத்தத்தை அப்படியே பதிய வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து இணையத்தில் ஒவ்வொரு பறவைச் சத்தமாகக் கேட்டு ஒப்பிட்டுப் பார்ப்பேன். அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

19. சிவப்பு வாட்டில் பறவை (1)

20. சிவப்பு வாட்டில் பறவை (2)

ஒருநாள் நான் போகும் வழியில் இருந்த தாழ்வான மரக்கிளையில் அமர்ந்து கண்ணுக்கு முன்னால் அப்பறவை கத்தியபோதுதான் ‘ஓஹோ... இவங்கதானா அந்த கரகரப்ரியா’ என்று ஆச்சர்யப்பட்டேன். ஏனென்றால் ஆளுக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒல்லிப்பிச்சானாய் தவிட்டுக்குருவி அளவில் இருந்த வாட்டில் பறவைதான் அது. ஏற்கனவே பல முறை அப்பறவையைப் பார்த்திருந்தபோதும் படம் பிடித்திருந்தபோதும், அதன் குரல் இதுதான் என்று சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். 

காட்சி 2:

மரம் முழுக்கப் பூக்களோடு இருந்த தங்க வாட்டில் மரத்தில் ஒரு கந்தகக் கொண்டை காக்கட்டூ ஜோடி பறந்து வந்து அமர்ந்தது. அமர்ந்த நொடியிலிருந்து கிளைகளில் கொத்துக் கொத்தாய் பூத்திருந்த பூக்களை கொத்தோடு அலகால் கொய்து கீழே வீசியெறிந்துகொண்டிருந்தன. மரத்தின் கீழே ஓடிக்கொண்டிருந்த ஓடையெல்லாம் பூக்கள்.

21. பூக்கொய்யும் காக்கட்டூ (1)

22. பூக்கொய்யும் காக்கட்டூ (2)

ஓடுகிற தண்ணியில உரசிவிட்டேன் சந்தனத்த பாடலில் சரிதா பூக்களை வரிசையாகத் தண்ணீரில் ஓடவிட்டக் காட்சி கண்முன் ஓடியது. கூடவே புலமைப்பித்தனின் இந்த பாடல் வரிகளும்.  

பொய்கை என்னும் நீர்மகளும்

பூவாடை போர்த்திருந்தாள்

தென்றலெனும் காதலனின்

கைவிலக்க வேர்த்து நின்றாள்

வெடுக் வெடுக் என்று கொத்துப் பூக்களைப் பிடுங்கி நீரில் எறியும் காக்கட்டூகளின் செயல் புதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும். ஆனால் அவற்றின் பொழுதுபோக்கே இப்படி மரத்தின் இலைகளையும் பூக்களையும் கொத்துக்கொத்தாய்ப் பிடுங்கி எறிவதுதான் என்று தெரிந்ததால் குழந்தைகளின் குறும்பை ரசிப்பதுபோல் ரசித்தேன். 

காட்சி 3:

ஐந்து குஞ்சுகளுக்கு இரையூட்டிய நான்கு பெரிய  நீலத்தாழைக்கோழிகளைப் பார்த்தேன். யார் அம்மா, யார் அப்பா, யாருடைய குஞ்சுகள் என்று எதுவும் தெரியவில்லை. ஆனால் நான்கும் மாறி மாறி இரையெடுத்து குஞ்சுகளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தன. 

23. நீலத்தாழைக்கோழிகளும் குஞ்சுகளும் 

24. வாத்து இணை

தாழைக்கோழிகள் ஒரு ஈடு அடைகாத்து குஞ்சு பொரித்தவுடன் அம்மா, அப்பா, முந்தைய ஈட்டைச் சேர்ந்த அண்ணன், அக்கா என்று மொத்தக் குடும்பமும் அந்தக் குஞ்சுகளுக்கு இரையூட்டி வளர்க்கும் என்று அறிந்தபோது வியந்தேன். இரையூட்டுவது மட்டுமல்ல, அடைகாப்பதைக் கூட முந்தைய ஈட்டுக் குஞ்சுகள் பகிர்ந்துகொள்ளும் என்பது பறவை உலகின் மற்றுமொரு ஆச்சர்யம்.

காட்சி 4:

மதர் ஆஃப் மில்லியன்ஸ் (Bryophyllum species) என்றொரு முள்ளில்லாக் கள்ளிவகைத் தாவரம். மடகாஸ்கரைச் சேர்ந்தது. ஒரு செடி இருந்தாலே போதும். அதன் இலை நுனிகளிலிருந்து புதிய செடிகள் உருவாகி அந்த இடத்தையே வியாபித்துவிடும்.  பெயர்க்காரணம் இப்போது புரிந்திருக்குமே. இதற்கு சரவிளக்குச் செடி என்ற காரணப்பெயரும் உண்டு. மற்ற தாவரங்களை வளரவிடாத காரணத்தால் ஆஸ்திரேலியாவில் இது களைச்செடி. ஆனால் அதன் பூக்கள் அவ்வளவு அழகு. எப்போதும் புதர்களுக்கு மத்தியில் ஏராளமாகப் பூத்திருக்கும். ஒரு படமாவது அருகில் இருந்து பிடிக்கவேண்டும் என்று வெகுநாளாக ஆசை.  இத்தனை வருடங்களாக நிறைவேறவில்லை. 


25. சரவிளக்குப் பூக்கள் (1)

26. சரவிளக்குப் பூக்கள் (2)

போன வாரத்தில் ஒருநாள் இன்ப அதிர்ச்சியாக நடைபாதையை ஒட்டி சில செடிகள். ஒன்றில் மட்டும் பூக்கள். எனக்காகவே  பூத்திருப்பது போல் தோன்றியது. என் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இப்போதைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய செடிகள்தான் பார்த்தேன். இனிவரும் காலத்தில் அந்த இடத்தையே அவை ஆக்கிரமித்துவிட வாய்ப்பு அதிகம். 

காட்சி 5:


27. வெள்ளை க்ளோவர் பூக்கள்

27. ரோஸ் நிற க்ளோவர் பூ

க்ளோவர் பூக்களை மொய்க்கும் ஈக்களும் தேனீக்களும் ஒரு பக்கம். அவற்றை இரையாய்க் கொள்ளும் அரணைகளும் பறவைகளும் இன்னொரு பக்கம் என க்ளோவர் பூக்கள் பூத்திருக்கும் இடமே உயிர்ப்புடன் இருக்கும். இதுவரை வெள்ளை நிற க்ளோவர் பூக்களைத்தான் பார்த்திருக்கிறேன். முதன்முதலாக ரோஸ் நிற க்ளோவர் பூவைப் பார்த்தேன். க்ளோவர்தானா என்று இணையத்தில் பார்த்து உறுதிசெய்துகொண்டேன்.

*****

28. வழியில் வசீகரிக்கும் அழகுப் பூக்கள்

சின்ன வயதில் தாத்தாவோடு பள்ளிக்கூடம் போகும்போது (வீட்டிலிருந்து இரண்டு கி.மீ. தூரம்) இப்படிதான் ஆடு, மாடு, பன்றி, குதிரை, கோழி, வாத்து, மைனா, கொண்டலாத்தி, ஓணான், உடும்பு என வழியில் பார்ப்பதையெல்லாம் நின்று ரசிக்க ஆரம்பித்துவிடுவோம்.  

‘பராக்கு பாக்காம வாங்க, ஸ்கூலுக்கு நேரமாச்சு, மணியடிச்சிடுவாங்க’ என்று தாத்தா அதட்டி அதட்டி இழுத்துச் செல்வார். இப்போது என்னைப் பார்த்தால் என்ன சொல்வார் என்று நினைத்துப் பார்த்தேன். 'இன்னும் நீ அப்படியேதான் இருக்கியாம்மா?' என்று கேட்டுச் சிரிப்பார். எனக்கும் சிரிப்பு வந்தது. 

*****



14 September 2024

வசந்தகாலத் தோட்டமும் வருகை தரும் பறவைகளும்

தோட்டத்துப் பிரதாபம் - 31

வசந்தகாலம் பிறந்துவிட்டது. செடி கொடி மரங்களில் கணுவுக்கு கணு கெம்பு வண்ணத்தில் புதிய தளிர்கள் துளிர்த்துவருகின்றன. என்னுடைய செல்லத் தோட்டம் கூட வசந்தகாலத்தின் புதிய தோற்றம் காட்டி அசத்துகிறது.

1. மாந்துளிர்

2. கொய்யாத் துளிர்

3. ஜாதிமல்லிக் கொடியின் செம்பழுப்புத் துளிர்

4. அவகாடோ துளிர்

மிதமான குளிர், மிதமான வெயில், இதமான காற்று இவற்றோடு பறவைகளின் பாடல்களும் சேர்ந்துகொள்ள ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான். காற்றில் கலந்திருக்கும் மகரந்தத்தூள் ஒவ்வாமை தரும் என்றாலும் ஆசை யாரை விட்டது? அலர்ஜி மாத்திரை போட்டுக்கொண்டே வசந்தகால அழகை அப்படி ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

எப்படா, குளிர்காலம் முடியும் என்று நாட்காட்டியைப் பார்த்திருந்தாற்போல வசந்தத்தின் முதல் நாளன்றே மரம் முழுக்கப் பூத்து மஞ்சளாடை போர்த்தி நிற்கின்றன தங்க வாட்டில் மரங்கள். 

5. வீட்டின் பின்புறம் உள்ள தங்க வாட்டில் மரங்கள்

6. குண்டு குண்டாய்த் தங்க வாட்டில் மலர்கள்

வசந்தகாலத்தைப் பூக்களோடு முதல் ஆளாக வரவேற்கும் வாட்டில் மரங்களைக் கொண்டாடும்விதமாக ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் நாள் தேசிய வாட்டில் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

7. தங்க வாட்டில் மலர்கள்

காணுமிடமெல்லாம் வாட்டில் மரங்கள் காலம் தவறாமல் குப்பென்று பூத்துக் குலுங்குகின்றன. ஆஸ்திரேலியாவின் தேசிய மலர்களான கோல்டன் வாட்டில் மரங்களும் கூட்டமன்றா வாட்டில் மரங்களும் என இரண்டு வகையான வாட்டில் மரங்களும் எங்கள் வீட்டருகில் உள்ளன. 

8. கூட்டமன்றா வாட்டில் மரம்

9.  எலுமிச்சை நிற கூட்டமன்றா வாட்டில் பூக்கள்

எட்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் இந்த வீட்டுக்குக் குடிவந்தபோது பின்பக்கத்துச் சிற்றோடையை ஒட்டி மூன்றே மூன்று வாட்டில் மரங்கள்தான் இருந்தன. இப்போது விதைகள் விழுந்து முளைத்து கிட்டத்தட்ட பதினைந்து  மரங்களாவது இருக்கும்.  

மூன்றுமாத காலமாக குளிரில் முடங்கியிருந்த பறவைகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கிவிட்டன. நிலத்திலும் நீரிலும் வானிலும் என எங்கு பார்த்தாலும் இணைப் பறவைகள். வழக்கமாகக் கேட்கும் பறவை ஒலிகளோடு சில மாறுபட்ட ஒலிகளும் அவ்வப்போது செவியில் விழும். சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தால் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக ஏதேனும் புதிய பறவைகள் தோட்டத்திலோ தோட்டத்தை ஒட்டியுள்ள வாட்டில், யூகலிப்டஸ், ஜகரண்டா ஆகிய மரங்களிலோ காட்சி தரும்.  

10. பின்பக்க வாட்டில் மரத்தில் மஞ்சள் வால் கருங்காக்கட்டூ குடும்பம்

சில நாட்களுக்கு முன்பும் அப்படிதான், 'அய்யே... அய்யே...' என்று வித்தியாசமான பறவைச் சத்தம் கேட்டு கொல்லைப்பக்கம் வந்து பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு தடவை தாவரவியல் பூங்காவில் பார்த்த மஞ்சள் வால் கருங்காக்கட்டூ பறவைகள் கண் முன்னால் என் வீட்டின் கொல்லைப்புறத்தில்! அம்மா அப்பா குழந்தை என்று குடும்பமாக வந்திருந்தன. எங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அவற்றின் முதல் வருகை இது. மேகமூட்டமாக இருந்ததால் தெளிவாகப் படமெடுக்க இயலவில்லை.

11. காய்க்கும் சமயத்தில் கூட்டமாக வரும் காலா காக்கட்டூகள்

வாட்டில் மரத்தில் காய்கள் காய்த்திருக்கும் சமயம் கந்தகக் கொண்டை காக்கட்டூ, குட்டிக் கொரல்லா, நீளலகு கொரல்லா, காலா காக்கட்டூ என நான்கு வித காக்கட்டூ பறவைகள் கூட்டம் கூட்டமாக வரும்.  எந்நேரமும் ஒரே ஆரவாரமாக இருக்கும். ஆசை தீர வாட்டில் விதைப் பருப்புகளைக் கொறித்துத் தின்னும். காய்க்கும் காலம் முடிந்த பிறகு அவற்றின் வருகை குறைந்துவிடும். ஆனால் மொட்டு வைத்திருக்கும்போதே ஐந்தாவது காக்கட்டூவாக மஞ்சள்வால் கருங்காக்கட்டூ (Yellow-tailed black cockatoo) குடும்பத்தின் வருகை பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.  'க்ரா...க்ரா.. என்று அடித்தொண்டையில் தொடர்ச்சியாக கத்திக் கொண்டிருந்த குஞ்சுக்கு அம்மாவும் அப்பாவும் கக்கி இரையூட்டும் காட்சியும் காணக் கிடைத்தது. 

12. மஞ்சள் வால் கருங்காக்கட்டூ (கண்வளையம் ரோஸ் நிறத்தில் இருப்பதால் பெண்)

13. மஞ்சள் வால் கருங்காக்கட்டூ (கண்வளையம் கருப்பாக இருப்பதால் ஆண்)

14. மஞ்சள் வால் கருங்காக்கட்டூ தாயும் குஞ்சும்

போன வாரம் ஒருநாள் காலை ஆறரை மணி அளவில் காச் மூச்சென்று நாய்சி மைனர் பறவைகளின் சத்தம் கேட்டது. எங்கள் ஏரியா தாதாக்களான அவை தங்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் வேறெந்தப் பறவைகளையும் அனுமதிப்பதில்லை. கத்திக் கூப்பாடு போட்டு விரட்டிவிடும்.

15. எங்கள் ஏரியா தாதாக்களான நாய்சி மைனர்கள்

பறவைகளின் கூச்சல் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தேன். என்ன ஆச்சர்யம்! கழுகு போன்ற ஒரு பறவை கொல்லைப்புற ஜகரண்டா மரத்தில் அமர்ந்திருந்தது. கதவைத் திறக்கவெல்லாம் நேரம் இல்லை. அதற்குள் பறந்துவிட்டால்? சட்டென்று கேமராவை எடுத்து ஜன்னல் வழியாகவே படம் பிடித்தேன். 

16. ஜகரண்டா மரத்தில் பசிபிக் குயிற்பாறு (1)

காலை வெயில் நேராக முகத்தில் அடிக்க, பறவையைக் கிளைகள் மறைத்திருக்க, ஒரு நல்ல படம் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கிடைத்தவரை லாபம் என்று நான்கைந்து எடுத்ததில் இரண்டு மட்டும் தேறியது. அதற்குள் இந்த நாய்சி மைனர் தாதாக்கள் கூச்சல் போட்டு அதை அங்கிருந்து விரட்டி விட்டன.

17. பசிபிக் குயிற்பாறு (2)

இதுவரை பார்த்திராத அப்பறவையின் படத்தை வைத்து இணையத்தில் தேடியபோது, அதன் பெயர் Pacific Baza என்று அறிந்துகொண்டேன். பாறுக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தமிழ்ப் பெயர் பசிபிக் குயிற்பாறு. கொன்றுண்ணியான இப்பறவைக்கும் குயிலுக்கும் என்ன தொடர்பு? குயில் போன்று இதன் உடலிலும் பொரிகளும் வரிகளும் காணப்படுவதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது.

இன்னொரு நாள் வானத்தில் ஒரு விநோதக் காட்சி. அந்தரத்தில் ஒரு பறவை  ஒரே இடத்தில் சிறகடித்துக்கொண்டு வித்தியாசமான முறையில் பறந்து கொண்டிருந்தது. கழுகு போன்றுதான் தெரிந்தது. ஆனால் கழுகு, பருந்து போன்ற பறவைகள் சிறகை அசைக்காமல் விரித்த நிலையிலேயே வானத்தில் வட்டமிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதென்ன? கண்ணுக்குத் தெரியாத நூலில் கட்டித் தொங்கவிட்டதைப் போன்று அங்கே இங்கே நகராமல் சிறகுகளை மட்டும் மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருக்கிறது. பொம்மையா? பறவைக் காற்றாடியா? புதிய வகை ட்ரோனா? குழப்பத்துடன் முடிந்தவரை ஜூம் செய்து படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று இறக்கை விரித்து என் தலைக்கு மேலே பறந்துபோனபோது குழப்பம் தீர்ந்தது. பறவைதான்.

18. அந்தரத்தில் சிறகடிக்கும் கருந்தோள் பருந்து

19.  கருந்தோள் பருந்து

Black-shouldered kite எனப்படுகிற ஆஸ்திரேலியக் கருந்தோள் பருந்துதான் அது. கொன்றுண்ணிப் பறவையான அது வெகு தொலைவில் நிலத்தில் இருக்கும் இரையை நோட்டமிடும் உத்திகளுள் ஒன்றுதான் அந்தரத்தில் ஒரே இடத்தில் பறப்பது (hovering) என அறிந்து வியந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு பெண் மாங்குயில் (Olive-backed Oriole) ஒன்று ஜகரண்டா மரத்தில் சற்றுநேரம் அமர்ந்து பறந்தது. இவ்வளவு தூரம் என்னைத் தேடிவந்த அப்பறவையை விட்டுவிடுவேனா என்ன? அதையும் படம்பிடித்தாயிற்று. 

20. ஆலிவ் முதுகு மாங்குயில்- பெண்

தோட்டத்துப் பறவைகள் வரிசையில் புதிதாய்ப் பறவைகள் இணைவது ஒரு பக்கம் இருக்க, இரண்டு மூன்று நாட்களாக வீட்டு வாசலில் பசிபிக் கருப்பு வாத்து (Pacific Black Ducks) இணையைப் பார்க்கிறேன். 

21. நடுத்தெருவில் நிற்கும் வாத்து

22. நடைபாதையில் நடந்துசெல்லும் வாத்து

வாகன நடமாட்டம் உள்ள தெருவில் அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருக்கின்றன. குடியிருப்புப் பகுதியில் அவற்றுக்கு என்ன வேலை என்றுதான் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அடுத்ததாக, டேவிட் அட்டன்பரோவின் நிகழ்ச்சியில் சிலாகிக்கப்பட்ட புல்லுருவிச் சிட்டுகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அடிக்கடி கொல்லைப்புற வாட்டில் மரத்தில் அவற்றைப் பார்க்கிறேன்.  தேன்சிட்டை விடவும் சிறிய அச்சிட்டுகளை அவ்வளவு அருகில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.  

23. புல்லுருவிச் சிட்டு - ஆண்

24. புல்லுருவிச் சிட்டு - பெண்

அதென்ன புல்லுருவிச் சிட்டு? இவற்றைப் பற்றி அறிந்தபோது வியப்பின் உச்சத்துக்கே சென்றேன்.  பதிவு நீளமாகிவிடும் என்பதால் அவற்றைப் பற்றியும் நான் நடைப்பயிற்சியின்போது பார்க்கும் வேறு சில  பறவைகளைப் பற்றியும் அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

25. என்னைத் தேடிவரும் பறவைகள்

பறவை பார்க்க வெளியில் எங்கும் போகவேண்டாம், அதிகம் மெனக்கெட வேண்டாம், தோட்டத்தில் தினமும் சற்றுநேரம் செலவழித்தாலே போதும், ஏகப்பட்டப் பறவைகளைப் பார்த்து ரசிக்கமுடியும், அவற்றின் பாடலைக் காது குளிரக் கேட்கமுடியும், அவற்றின் வாழ்க்கைமுறையைக் கூர்நோக்கி அறிய முடியும் என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை!

(பிரதாபங்கள் தொடரும்)