31 March 2015

பூக்களும் பூச்சிகளும்

மகரந்தசேர்க்கைக்கு உதவும் 
மகத்தான பூச்சிகள்


கருப்பு வெள்ளையில் இருந்தாலும்
வண்ணத்துப்பூச்சி என்றே பெயர்!
Cabbage white butterfly

ஆண்வண்டானாலும் ladybug என்றே பெயர்!
Ladybug

ஆஸ்திரேலிய சிப்பாய் வண்டு
யாருடன் சண்டை இன்று?
Australian soldier beetle


நான் ஈ!
House fly


  நான் தேன் ஈ!
Honeybee

உற்றுப் பார்க்கும் கண்களுக்கு
புலப்படலாம் ஒரு குளவி!
Little wasp

வீட்டு ஈக்கும் வந்ததோ தேன் குடிக்கும் ஆசை!
House fly

கருப்பு வெள்ளையோடு கொஞ்சம் மஞ்சள்... 
கொஞ்சும் அழகு!
Dingy swallowtail butterfly

வண்டுக்கும் எறும்புக்கும் 
கண்ணாமூச்சி விளையாட்டு!
Ladybug and ant

எறும்பூ...!
Ant

கருமமே கண்ணாக... 
Honeybee

பறக்கும் இலைபோல் 
பச்சை வண்ணத்துப்பூச்சி!
Black and Green Butterfly

சண்டைக்குத் தயார்!
சிப்பாய் வண்டு வரார்!
Australian soldier beetle

அலையும் வண்ணத்துப்பூச்சி என்று பெயராம்
அலைக்கழிக்கும் வண்ணத்துப்பூச்சி என்பதே பொருத்தம்..
Wanderer butterfly

30 March 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 8 (குதிரைகள் & கழுதைகள்)



ஆஸ்திரேலியா முழுவதும் பரவலாக சுற்றித்திரியும் Brumby எனப்படும்  காட்டுக்குதிரைகளின் எண்ணிக்கை நான்கு இலட்சம் இருக்கும் என்றாலே வியக்கும் நமக்கு இங்கிருக்கும் கழுதைகளின் எண்ணிக்கை ஐம்பது இலட்சத்துக்குமேல் என்ற தகவல் நம்புவதற்கு கடினம் என்றாலும் உண்மை அதுதான். 

ஆயிரக்கணக்கான கைதிகளுடன் வந்த முதல் கப்பற்தொகுதியுடன் குதிரைகளும் ஆஸ்திரேலியாவில் வந்திறங்கிய ஆண்டு 1788. விவசாய நிலங்களில் வேலை செய்வதற்காகவும் போக்குவரத்துக்காகவும் கொண்டுவரப்பட்ட குதிரைகளுள் சில தப்பி காடுகளில் வாழத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரங்களும் வாகனங்களும் புழக்கத்துக்கு வந்துவிட, குதிரைகளின் அவசியம் அவசியமற்றுப் போனது. வளர்ப்புக்குதிரைகள் யாவும் ஏற்கனவே சுதந்திரமாய்த் திரியும் குதிரைகளோடு சேர்ந்து வாழும் வகையில் காடுகளுக்கு விரட்டிவிடப்பட்டுவிட்டன.


குதிரைகள் பயன்பாட்டில் இருக்கும்போதே கழுதைகளும் ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கொரு காரணம் இருந்தது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதி, வடக்கு பிரதேசத்தில் விக்டோரியா ஆற்றுப்பகுதி போன்ற ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் விளையும் ஒருவகைத்தாவரம் குதிரைகளுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கும் பாரம் சுமக்கவும் கழுதைகள் இறக்குமதியாயின. தேவைகள் தீர்ந்துபோன நிலையில் அவையும் காடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டன.



குதிரையின் கர்ப்பகாலம் 11 மாதங்கள் என்பதால் இரண்டு வருடத்துக்கு ஒரு குட்டிதான் ஈனும். கழுதை வருடத்துக்கு ஒரு குட்டி ஈனும். அப்படியிருந்தும் அவற்றின் இனப்பெருக்கம் எக்கச்சக்கமாகப் பெருகி இன்று pest என்ற நிலையை எட்டியிருப்பதற்கு காரணம் அவற்றுக்கு சமமான எதிரிகள் ஆஸ்திரேலியாவில் இல்லை என்பதே. அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீயும் வறட்சியும் மட்டுமே இவ்வினங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை எதிரிகள். வறட்சிக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமலும் போதுமான புல் கிடைக்காமல் ஒவ்வாத புற்களை உண்பதாலும் குதிரைகள் மடிந்துபோகின்றன.

மண் அரிப்பு, களை பரப்பு இவற்றோடு கங்காரு போன்ற சொந்தமண்ணின் தாவர உண்ணிகளின் உணவுப்போட்டியாய் களத்தில் உள்ளவை இந்த கழுதைகளும் குதிரைகளும். நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் இவை அங்கு வாழும் சொந்த மண்ணின் உயிரினங்களை அவற்றின் வாழ்விடங்களிலிருந்து விரட்டி உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்காமல் செய்துவிடுவதால் பல உயிரினங்கள் அழிந்துபோய்க்கொண்டிருப்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும் தகவல்கள். குதிரைகள் பண்ணைகளின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் விட்டுவைப்பதில்லை. எளிதாக வேலிகளைத் தாண்டியும் சிதைத்தும் உள்ளே சென்று கால்நடைகளுக்கான புற்களையும் அபகரித்துக்கொள்கின்றன.


காட்டுக்குதிரைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஒன்றுதிரட்டப்பட்டு, பட்டியில் அடைத்துவைக்கப்படுகின்றன. இளங்குதிரைகள் மட்டும் தனியே பிரித்தெடுக்கப்படுகின்றன. அவை பயிற்சியளிக்கப்பட்டு வளர்ப்புக் குதிரைகளாக மாற்றப்படுகின்றன. மற்றவை கொல்லப்படுகின்றன. குதிரைகளைக் கொல்வதை எதிர்க்கும் விலங்குநல அமைப்புகள், முரட்டுக்குதிரைகளாய்த் திரியும் அனைத்துக் குதிரைகளுக்கும் முறையாக பயிற்சியும் பராமரிப்பும் தந்து வளர்த்தால் அவற்றை நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்று முன்வைக்கும் யோசனை வாதப்பிரதிவாதங்களுடன் பரிசீலனையில் உள்ளது. ஆனால் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் சிரமங்களும் யோசனையைப் புறந்தள்ளிக்கொண்டிருக்கின்றன. 


சில இடங்களில் குதிரைகளுக்கு remote darting எனப்படும் எறி ஊசி மூலமாக இனப்பெருக்கத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனால் அவற்றை வருடா வருடம் போடவேண்டியிருப்பதால் அதனால் உண்டாகும் பயன் குறைவுதான். பல வருடங்களுக்குப் பயன்தரத்தக்க வகையில் புதிய மருந்துக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் காட்டுக்குதிரைகளின் இனத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அங்கு கையாளப்படும் முயற்சி என்பது கூடுதல் தகவல்.

இயற்கைக்கு முரணாய் இன்னும் என்னென்னவெல்லாம் செய்யப்போகிறோமோ மனிதர்களாகிய நாம்? இப்படி உலகெங்கும் இயல்புக்கு மாறாய் விலங்குகளின் இனப்பெருக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தப் போடப்படும் தொடர் தடுப்பூசிகளின் பயனாய், பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் அவ்வினமே அழிவுக்குப் போய்விடும் ஆபத்து இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறோமா? 

விதையில்லாத பழங்களையும் கருவில்லாத முட்டைகளையும் கொண்டுவந்துவிட்டோம். இப்போது மலட்டு மிருகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கு போய் முடியுமோ அனைத்தும்? 

(தொடரும்)
(படங்கள் : நன்றி இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 7 (பேன்டெங் மாடுகள்)

24 March 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 7 (பேன்டெங் மாடுகள்)


பேன்டெங் (Banteng) எனப்படுவது தென்கிழக்காசியாவைத் தாயகமாய்க்கொண்ட மாட்டினம். ஆனால் பாருங்கள்.. தாயகத்தில் அருகிவரும் உயிரினமாகிவிட்ட இவ்வினம் அது அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவில் அளவில்லாமல் பெருகிவிட்ட உயிரினம் ஆகிவிட்டது. சொல்லப்போனால் உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையிலான பேன்டெங் மாடுகள் தற்சமயம் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றன.



இந்த இனத்தில் பசுக்கள் பார்ப்பதற்கு நம்மூர் செவலைப் பசுக்களைப் போன்று இருக்கின்றன. இளங்கன்றுகளும் கூட செம்பழுப்பு நிறத்திலே காட்சியளிக்கின்றன. ஆனால் கிட்டத்தட்ட 800 கிலோ எடையுள்ள காளைகளோ உருவத்திலும் நிறத்திலும் நீண்டு வளைந்த கொம்பின் அமைப்பிலும் நம்மூர் எருமைகளைப் போலவே உள்ளன. பேன்டெங் இனத்திலுள்ள பசு, காளை இரண்டுக்கும் உள்ள பொதுவான அம்சங்கள், நான்கு கால்களுக்கும் காலுறை அணிந்தாற்போல் மூட்டுவரையிலான வெண்ணிறமும், பின்புறம் வாலுக்கு அடியில் காணப்படும் பெரிய வெண்ணிற வட்டமுமாகும்.

ஜெர்மனியின் அஞ்சல் தலையில் பேன்டெங் மாடுகள்

1849 இல் வடக்குப் பிரதேசத்தில் உள்ள கோபர்க் தீபகற்பத்தில் முகாமிட்டிருந்த பிரித்தானிய இராணுவத்தின் இறைச்சித்தேவையை ஈடுகட்ட இருபதே இருபது பேன்டெங் மாடுகள் இந்தோனேஷியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு பண்ணையில் அடைத்து வளர்க்கப்பட்டனவாம். ஒரு வருடத்தில் முகாம் காலிசெய்யப்பட்டதும் இவை கட்டவிழ்த்து விடப்பட்டன. 1960 இல் 1500 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 2005 இன் கணக்கெடுப்புப்படி பத்தாயிரம். பேன்டெங் மாடுகளின் தாயக நாடுகளிலோ அவற்றின் மொத்த எண்ணிக்கை ஐநூறுக்கும் குறைவுதானாம்.


இந்த பேன்டெங் மாடுகளால் மேய்ச்சல் நிலங்கள் அடியோடு மேயப்பட்டுவிடுவதால் கங்காரு போன்ற மற்ற தரைவாழ் தாவர உண்ணிகளுக்கு உணவுப்பற்றாக்குறை உண்டாகிவிடுகிறது. ஆனால் எருமைகளோடு ஒப்பிடுகையில் பேன்டெங் மாடுகளால் உண்டாகும் பாதிப்பு குறைவுதான் என்கிறார்கள். பேன்டெங்குகள் ஒருவகையில் இவை தாங்கள் வாழும் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவிகரமாக உள்ளனவாம். காட்டையொட்டிய பகுதிகளில் இவை புற்களை மொத்தமாக மேய்ந்துவிடுவதால் காட்டுத்தீ பரவும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுவிடுகிறது என்கிறார்கள்.

மேலும் ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவையான டோரஸியன் காகத்துக்கு உணவாக தங்கள் உடலில் உள்ள உண்ணிகளை பங்குவைப்பதாலும் அவற்றுக்கும் உதவிகரமாக உள்ளனவாம். வேட்டைப்பிரியர்களுக்கு அவ்வப்போது இலக்காவது தவிர கங்காரு, ஒட்டகம், எருமை போன்று பெருமளவில் கூட்டமாக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதில்லை. இந்த பேன்டெங் வேட்டை மூலமாக வடக்குப்பிரதேசத்துக்குக் கிடைக்கும் வருமானம் வருடத்துக்கு 200,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்).



பொதுவாக நம் நாட்டில் கால்நடைகளோடு சில பறவைகள் நட்புரிமை கொண்டாடுவதைப் பார்த்திருப்போம். கால்நடைகளின் மேலிருக்கும் உண்ணிகளை காக்கை, குருவி, கொக்கு, நாரை போன்ற பறவைகள் பயமின்றி கொத்தியெடுத்துத் தின்பதை அறிவோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற காட்சிகள் காணக்கிடைக்காது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இதுவரையிலும் எந்த சொந்தப்பறவையும் மற்ற அந்நியவிலங்கினங்களோடு நட்புறவு பேணியதில்லையாம். பேன்டெங் மாடுகளுக்கும் டோரஸியன் காகங்களுக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதுதான் முதல் உறவாம். இந்த உறவு உண்டாவதற்கு 150 ஆண்டுக்காலம் பிடித்திருக்கிறது என்கிறார்கள்.


சொந்த நாட்டில் வாழவழியில்லாமல் அழியும் தருவாயில் உள்ள ஒரு இனம் வந்த நாட்டில் வகையற்றுப் பெருகிப்போய்க் கிடக்கிறது. அருகிவரும் உயிரினம் என்று சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வினத்தை என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. தேவையா இது? 

(தொடரும்)
(படங்கள் நன்றி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 6 (நரிகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 8 (குதிரைகள் & கழுதைகள்)

  

18 March 2015

வல்லபிகளும் கங்காருகளும்


விலங்கியல் பூங்காவொன்றில்
வல்லபிகள்











கங்காருகள்








ஒண்டவந்த பிடாரிகள் – 6 (நரிகள்)


அந்நிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தவந்தாயிற்று. தங்கள் சொந்தமண்ணில் வாழ்ந்ததைப் போன்றே வசதி வாய்ப்புகளுடன் வாழ வழியும் செய்யவேண்டாமா? போக்குவரத்து, உணவு, இருப்பிடம் எல்லாவற்றுக்கும் சொகுசான ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது. இனி பொழுதுபோக்கு அம்சத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டியதுதான் பாக்கி. ஐரோப்பிய கணவான்களின் இரத்தத்தில் ஊறிய வேட்டைக்குணம் சும்மா இருக்குமா? இங்கிருக்கும் கங்காரு உள்ளிட்ட வேட்டைக்குப் பழக்கப்படாத விலங்குகளை வேட்டையாடுதல் அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை. பழக்கத்தால் கை நமநமவென்று அரிக்க, வேட்டையாடிக் கொன்று களிப்பதற்கென்றே இங்கும் சில விலங்குகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? குறுக்குபுத்தி வேலை செய்தது. உலகையே வசப்படுத்த முடிந்த தங்களால் இதை சாதிக்கமுடியாதா என்ன? ஆதிக்கவாதிகளின் பேராசை அடுத்த கட்டத்தை எட்டியது.



1850 வாக்கில் ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதியாயின European Red Fox எனப்படும் ஐரோப்பிய செந்நரிகள். வேட்டை விளையாட்டுக்கென்று அறிமுகப்படுத்தப்பட்ட அவை உள்ளூர் மார்சுபியல் விலங்குகளையும், தரைவாழ் பறவைகளையும் உணவாகக்கொண்டு ஏராளமாய்ப் பெருகின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் முயல்களின் அறிமுகம் காரணமாக உணவுக்கு தட்டுப்பாடில்லா வாழ்க்கையில் அபரிமிதமாய்ப் பெருகி ஆஸ்திரேலியக் கண்டம் முழுவதும் தங்கள் இனத்தைப் பரப்பின. ஆஸ்திரேலியாவின் பல அரிய மார்சுபியல் விலங்குகளும் பறவைகளும் அழிந்துபோனதற்கும் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருப்பதற்கும் செந்நரிகள் ஒரு முக்கியக்காரணம்.

சிங்கம் புலி போன்ற வேட்டையாடும் பெரு மாமிசபட்சிணிகள் இல்லாத இம்மாபெரும் நிலப்பரப்பில் நரிகளின் நாட்டாண்மைக்கு சொல்லவேண்டுமா என்ன? டாஸ்மேனியாவில் ஏற்கனவே உள்ள மாமிச பட்சிணியான டாஸ்மேனியன் டெவிலின் இருப்பால் செந்நரிகளால் அங்கு இருப்பைத் தக்கவைக்க முடியவில்லை. ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பிலும் டிங்கோ நாய்கள் பரவலாக வசிக்கும் பகுதிகளில் நரிகளின் நடமாட்டம் ஓரளவு கட்டுக்குள் இருப்பது ஆறுதல்.



நரிகளால் முயல், எலி போன்ற பயிரழிக்கும் பிராணிகளின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும் நரிகளுக்கு அவை இரையாகும் விகிதத்தோடு ஒப்பிட்டால் முயல், எலிகளின் இனப்பெருக்க விகிதம் மிகமிக அதிகம். மேலும் நரிகள் முயல் எலிகளை வேட்டையாடுவதை விடவும் எளிதில் கிடைக்கக்கூடிய பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டிகளையே உணவாகக் கொள்வதில் பெரும் ஈடுபாடு காட்டுவதால் பண்ணையாளர்களுக்குப் பெருத்த நஷ்டம். அது மட்டுமல்லாது, ரேபிஸ் போன்ற நோய்கள் பண்ணை விலங்குகளுக்கு பரவவும் நரிகள் காரணமாகின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது மிகப்பெரும் பிரச்சனை.



செந்நரிகள் தங்கள் பசிக்குத் தின்றது போக மிச்சத்தை அடுத்தவேளைக்காகவும் மண்ணுக்குள் பதுக்கிவைக்கும் பழக்கமுள்ளவை. ஒரு நரி ஒரு நாளைக்கு 400 கிராம் மாமிசம் தின்பதாகக் கொண்டால் ஒரு வருடத்தில் அது தின்னும் மாமிசத்தின் எடை சுமார் 150 கிலோ. பத்து நரிகள் எனில் வருடத்துக்கு ஒன்றரை டன் மாமிசம் உணவாகக் கொள்ளப்படுகிறது. பண்ணை ஆட்டுக்குட்டிகளை நரிகளிடம் இழப்பதால் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் வருடாந்திர நஷ்டம் இருநூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாம். (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்)



ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதி தவிர நாடு முழுவதும் ஒரு சதுரகிலோமீட்டர் பரப்புக்கு பத்து நரி என்ற அளவில் பெருகிவிட்ட நரிகளை முற்றிலுமாக கட்டுப்படுத்துவது என்பது இப்போது கைமீறிப் போய்விட்ட ஒரு விஷயம். பண்ணைகளைச் சுற்றி உறுதியான வேலிகளை அடைப்பதன் மூலமும் கால்நடைகளைப் பாதுகாக்கும் நாய்களை வளர்ப்பதன் மூலமும் பண்ணையாடுகளை நரிகளிடமிருந்து காப்பாற்றும் முயற்சி ஓரளவு பலனளிக்கிறது.


நரிகள் அதிகமாக உள்ள இடங்களில் பொறிவைத்தும் விஷம் வைத்தும் கொல்லப்படுகின்றன. இறைச்சியோடு கலந்து வைக்கப்படும் விஷத்தால் மற்ற உயிரினங்களும் இறக்கும் வாய்ப்புள்ளது என்பதால் விஷ உணவு  மண்ணுக்கடியில் புதைக்கப்படுகிறது. நரியைத் தவிர வேறெந்த மிருகமும் மண்ணுக்குள் இருக்கும் மாமிசத்தை மோப்பம்பிடித்துத் தோண்டி உண்பதில்லை என்பதால் நரிகள் மட்டும் இதற்கு இரையாகின்றன.



ஐரோப்பிய வருகைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் அழிந்துபோன சொந்த மண்ணின் உயிரினங்கள் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேல் இருக்கலாம். பேன்டிகூட், பில்பி, எலிக்கங்காரு, க்வோல், முயல் வல்லபி போன்றவை அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ள உயிரினங்கள். ஒரு பக்கம் ஆடு, மாடு, எருமை, குதிரை, கழுதை, ஒட்டகம், முயல் போன்ற தாவர உண்ணிகள் சொந்த மண்ணின் உயிரினங்களின் உணவையும் வாழ்விடத்தையும் பங்குபோட்டுக்கொண்டு வாழவழியில்லாமல் செய்துவிட, இன்னொரு பக்கம் நரி, நாய், பூனை போன்ற மாமிச உண்ணிகள் அவற்றை உணவாகக் கொண்டு இனத்தையே அழித்துக்கொண்டிருக்கின்றன. 

மனிதர்களின் பேராசையாலும் ஆதிக்க மனோபாவத்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ அப்பாவி உயிரினங்கள்தாம்.

(தொடரும்)
(படங்கள்: நன்றி இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 5 (எருமைகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 7 (பேன்டெங் மாடுகள்)

14 March 2015

வானவில் லாரிகீட்


வானவில் வண்ணங்களில் 
வசீகரிக்கும் ரெயின்போ லாரிகீட்














11 March 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 5 (எருமைகள்)


எருமை! -- ஒண்டவந்த பிடாரிகளுள் ஒன்று. ஆரம்பகால ஐரோப்பியக் குடியேற்றத்தின் போது வடக்கு ஆஸ்திரேலியப் பகுதியில் முகாமிட்டிருந்த பிரித்தானிய இராணுவத்தின் இறைச்சித் தேவையை ஈடுகட்டுவதற்காக இந்தோனேஷியாவிலிருந்து 1825-1843 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 80 எருமைகள் கொண்டுவரப்பட்டன. 1850-இல்  அந்த முகாம் மூடப்பட்டபோது அனைத்தும் கட்டவிழ்த்துவிடப்பட்டுவிட்டன. வடக்குப் பிரதேசத்தின் செழுமையான காடுகளும் புல்வெளிகளும் சூழ்ந்த வளைகுடாப் பகுதிகள் இவற்றுக்கு சாதகமாக அமைய இனம் இப்போது பல்கிப் பெருகிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் இரண்டுவகை எருமைகள் உள்ளன. ஒன்று சுருண்டுவளைந்த கொம்புகளைக் கொண்ட மேற்காசிய ஆற்று எருமைகள் (river type buffaloes), மற்றொன்று பின்னோக்கி நீண்டு வளர்ந்த கொம்புகளைக் கொண்ட கிழக்காசிய சேற்று எருமைகள் (swamp type buffaloes).




1981-இல் வான்வழி எடுத்த கணக்கெடுப்புப்படி வடக்குப் பிரதேசத்தில் இருந்த எருமைகளின் எண்ணிக்கை 2,82,000. அடுத்த நான்கு ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்து 3,41,000 –த்தைத் தொட்டது. உடனடியாக அரசு தரப்பில் களையெடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு 1989-இல் அவற்றின் எண்ணிக்கை 1,22,000 என்ற அளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எருமைகள் எப்போதும் நூற்றுக்கணக்கான அளவில் மந்தைகளாகத்தான் வாழும். அவற்றை ஹெலிகாப்டர்கள் மற்றும் பெரிய வாகனங்களின் மூலம் விரட்டி, திரட்டி, பட்டியில் அடைக்கிறார்கள். மந்தையிலுள்ள இளங்கன்றுகள் பண்ணை வளர்ப்புக்கென ஒதுக்கப்பட்டுவிடுகின்றன. ஆரோக்கியமான எருமைகள்  இறைச்சிநிமித்தம் ஏற்றுமதிக்கு தயார்செய்யப்படுகின்றன. பெரும்பாலும் எருமைகள் காயமுறாதவகையிலேயே பிடிக்கப்படுகின்றனகொல்லப்படும் எருமைகளின் இறைச்சி மனிதர்களுக்கும் நாய் பூனை போன்ற வளர்ப்புப்பிராணிகளுக்கும் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது




ஆரம்பகாலத்தில் வருடத்துக்கு சராசரியாக 4000 என்ற அளவில் எருமைத்தோல்கள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. பிறகு மெல்ல வளர்ச்சியடைந்து ஏழாயிரத்தை எட்டியது. 1937 இல் அதிகபட்ச சாதனையாக ஒரே வருடத்தில் 16,549 எருமைத்தோல்கள் ஏற்றுமதியாயின. பல நாடுகளிலிருந்தும் போட்டிகள் அதிகரிக்கவும் 1956-வாக்கில் ஆஸ்திரேலியா இந்தத் தொழிலைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது.



ஏற்றுமதியாகிக்கொண்டிருந்த எருமை இறைச்சிக்கும் 1968-இலிருந்து பிரச்சனை. முறையான பராமரிப்பில்லாத எருமைகள் என்பதால் அவற்றின் இறைச்சிக்கு தரச்சான்றிதழின் அவசியம் ஏற்படவும் அதன்பின் இறைச்சியாக அல்லாமல் உயிருடனேயே எருமைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு எருமையும் கிட்டத்தட்ட 500 கிலோ முதல் 1200 கிலோ வரை இருக்கும் என்றாலும் அவற்றின் இறைச்சியில் கொழுப்பு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு நாளைக்கு முப்பது கிலோ தாவர உணவை உண்ணும் எருமையின் ஆயுட்காலம் இருபது வருடங்கள். ஒரு சதுரகிலோமீட்டருக்கு கிட்டத்தட்ட 34 எருமைகள் என்ற கணக்கில் அடர்த்தியாக வாழும் எருமைகளால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவது பெரும்பிரச்சனை.  


நூற்றுக்கணக்கான எருமைகள் ஒரே நேரத்தில் நன்னீர்த் தேக்கங்களில் இறங்கி நீரைக் கலங்கடித்து பயன்படுத்தமுடியாமல் செய்துவிடுவதும், பயன்பாடுகளில் உள்ள குளம்குட்டைகளின் கரைகளை உடைத்து நீரை வெளியேற்றுவதும், மண் அரிப்பு உண்டாக்குவதும், விளைநிலங்களை வீணாக்குவதும், சதுப்புநிலங்களை ஆக்கிரமித்து அங்கிருக்கும் உயிரினங்களை விரட்டியடிப்பதும், இவற்றின் தோல் மற்றும் சாணம் மூலம் களைவிதைகளைப் பரப்புவதும், கோடைக்காலங்களில் மக்களின் வசிப்பிடங்களின் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதுமாக இவற்றால் வடக்குப்பிரதேச மக்கள் படும் தொல்லைகள் அதிகம் என்பதால் இவற்றைக் கொல்வதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

ஒண்டவந்த பிடாரிகள் வரிசையில் அடுத்ததாய் தந்திரத்துக்குப் பெயர் பெற்ற நரியாரைப் பற்றிப் பார்ப்போம்.


(தொடரும்)
(படங்கள் உதவி: இணையம்)

முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 4 (மைனாக்கள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 6 (நரிகள்)

8 March 2015

ஒண்டவந்த பிடாரிகள் - 4 (மைனாக்கள்)

ஒண்டவந்த பிடாரிகள் - பகுதி மூன்றில் பறக்கும் கரும்புத்தேரைகளைப் பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா? அவை வேறு எதுவும் அல்ல. நம் நாட்டு மைனாக்கள்தாம்.  கரும்புத்தேரைகளின் அளவுக்கு உள்நாட்டு உயிரினங்களிடத்தில் பாதிப்பை உண்டாக்குவதால் பறக்கும் தேரைகள் எனப்படுகின்றனவாம். 



 இந்திய மைனாக்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படும் மைனாக்களை 1862 -ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு அறிமுகப்படுத்தினராம். இவற்றால் உதவிக்கு பதில் உபத்திரவமே மிஞ்சியிருக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் இப்போது. 

உபத்திரவம் என்றால் என்ன மாதிரியான உபத்திரவம்? மரப்பொந்துகளை ஆக்கிரமித்துக் கொண்டு மண்ணின் சொந்தப்பறவைகளை கண்ணில் காணவொட்டாமல் விரட்டுவதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு மைனா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க ஒரு பொந்து மட்டுமே தேவை என்றபோதும் சுற்றுப்புறத்தில் உள்ள மற்றப் பொந்துகளையும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன

மைனாக்களின்  புத்திசாலித்தனத்துக்கும் மூர்க்கத்தனத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் மண்ணின் சொந்தப்பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் இருப்பிடங்களை இவற்றுக்கு தாரைவார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

பறவைகளை மட்டுமல்லாமல் பொந்துகளில் வாழும் சிறிய மார்சுபியல் விலங்குகளையும் விரட்டிவிடுகின்றன. அடுத்ததாய் மைனாக்கள் என்ன செய்கின்றன தெரியுமா? குப்பைக்கூளங்களைக் கொண்டுவந்து அந்தப் பொந்துகளை அடைக்கின்றனவாம். எவ்வளவு கெட்ட எண்ணம்? இவ்வளவும் போதாதென்று மரக்கிளைகளில் கூடு கட்டியிருக்கும் பறவைகளின் குஞ்சுகளையும் கீழே தள்ளிக் கொல்லுகின்றன என்று கண்ணால் பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

International Union for Conservation of Nature (IUCN) பட்டியலிட்டுள்ள உலகிலுள்ள மிக மோசமான ஆக்கிரமிப்பு இனங்களில் முதல் நூறிடத்தில் இந்த மைனாவும் வருகிறது என்பதிலிருந்தே இதன் குணத்தை நம்மால் அறிந்துகொள்ளமுடியும். நில அபகரிப்புக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியப் பறவைகளுக்கு ஆபத்து விளைவிப்பவை இந்த மைனாக்களாகத்தான் இருக்கக்கூடும் என்கின்றன ஆய்வுகள்.

மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பயமில்லாமல் புழங்கும் இவை குடியிருப்புப் பகுதிகளில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு இருநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் 1970 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மைனாக்களின் எண்ணிக்கை 110. ஆனால் 2006 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அங்கு அவற்றின் எண்ணிக்கை 93,000. 

அவசரமாய் விழித்துக்கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மைனாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. 1300 க்கும் மேற்பட்டவர்கள் பொறியமைத்து மைனாக்களைப் பிடிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். கான்பெராவில் இப்போதைய நிலவரப்படி அங்கிருக்கும் மைனாக்களின் எண்ணிக்கை சுமார் 42,000. கட்டுப்படுத்தும் முயற்சி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இப்பறவைகளைப் பிடிக்கவோ கொல்லவோ வைக்கப்படும் பொறிகளை மிகச்சரியாக அடையாளங்கண்டுகொண்டு தவிர்த்துவிடுகின்றனவாம். அப்படியே தவறிப்போய் சிக்கிக்கொண்டாலும் உடனடியாக மற்ற மைனாக்களை எச்சரித்து தப்பிக்க வைத்துவிடுகின்றனவாம். மைனாக்களைப் பிடிக்க எந்த மாதிரி பொறி தயாரிப்பது, எப்படி பொறி வைப்பவர்களுக்குப் பயிற்சியளிப்பது என்று ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலியாவில்.

ஒண்டவந்த பிடாரிகளின் வரிசையில் அடுத்து நாம் பார்க்கவிருப்பது இந்தியர்களான நாம் மிகவும் அறிந்ததும், நமக்கு மிகவும் பயனுள்ளதுமான விலங்கு. ஆனால் நமக்குப் பிடிக்காத ஒருவரை நேரடியாகத் திட்டவும் இந்த விலங்கின் பெயரைப் பயன்படுத்துகிறோம். என்னவாக இருக்கும்?  யூகித்துவைத்திருங்கள் சொல்கிறேன்.

(தொடரும்)
முந்தைய பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 3 (கரும்புத் தேரைகள்)

அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 5 (எருமைகள்)