31 March 2016

வசவும் இசைவாய்...

முந்தைய தலைமுறைவரை பயன்பாட்டில் இருந்த உலக்கை இப்போது பரண்மேல் கவனிப்பாரற்றுக் கிடப்பதைப் பற்றிய கவிதையொன்றை முன்பு ஃபேஸ்புக்கில் வாசித்தேன். அதை வாசித்தபோது என் மனத்தில் தோன்றிய வரிகள். 


உலக்கைக்குமொரு காலம் 
உரியதாயிருந்தது அப்போது.
உடன் இன்னுஞ்சிலவற்றுக்கும்
உரியவரை வசைபாடும் உபயோகமிருந்தது
குதிர், குந்தாணி, குத்துக்கல், தீவட்டி,
குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு...
இப்படியும் இன்னபிறவுமாய்!
அர்த்தமுள்ள அத்தனையும் காலாவதியாகிவிட
கால்முளைத்தாடுகின்றன காதுகூசும் வசவுகள்!




"உலக்கை... உலக்கை... செக்குலக்கை... தண்ணி வழியிது, பார்த்துட்டு சும்மா நிக்கிறியே... குழாயை நிறுத்தினால் என்ன? ஒரு ஆள் சொல்லணுமா?"

"முண்டம்... அடுப்பில் எண்ணெய் வச்சிருக்கையில் ஈரக்கையை உதறுறியே அறிவில்லே?"

"குதிர் மாதிரி வளர்ந்திருக்கு, ஒரு வேலையும் செய்யத் துப்பு கிடையாது."

என்னுடைய பால்யத்தில் இவையெல்லாம் வசைச்சொற்கள் என்னுமளவில் மட்டுமே புரிதல் இருந்தது. இப்போது யோசிக்கையில் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பது புரிகிறது. 

நம் வீட்டுப் பெரியோர்களாலும் முன்னோர்களாலும் உபயோகிக்கப்பட்ட அர்த்தமுள்ள சில வசைச்சொற்களும் இழிசொற்களும் இதை எழுதும் தருணத்தில் நினைவுக்கு வருகின்றன. நம்மில் பலரும் இவற்றை எங்கேயாவது எப்போதாவது  நிச்சயம் கேட்டிருப்போம். பொருள் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

உலக்கைதீவட்டிதண்டம், குத்துக்கல், பிடிச்சுவச்சப் பிள்ளையார் தானாக முன்வந்து எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவர் செய்வதை சும்மா வேடிக்கை பார்த்தபடி இருப்பவர்கள். 


குதிர்

குந்தாணி

குதிர், குந்தாணி, சோத்துப்பானைதின்று தின்று விட்டு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தால் உட்கார்ந்த இடம் என்று சோம்பி இருப்பவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள்

குதிர்  என்பது நெல் கொட்டிவைக்கும் மரக்கலன்;

குந்தாணி என்பது நெல்லை உரலிலிட்டுக் குத்தும்போது வெளியே சிந்தாமல் இருக்க வாய்ப்புறத்தில் போடப்பட்டிருக்கும் கல் வளையம்

கோவில்மாடு - கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட காளைகள் தம்மிஷ்டத்துக்கு மேய்ந்தும் திரிந்தும் வாழ்வதுபோல் எந்தக் கவலையும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தன் விருப்பத்துக்கு வாழ்பவர்கள். 

கோவில் பெருச்சாளி - பெரிய கோவில்களுள் வாழும் பெருச்சாளிகளுக்கு நைவேத்தியம், பிரசாதம், படையல், பக்தர்களின் வேண்டுதல் என்று எந்த வடிவிலாவது எப்படியாவது உணவோ, தானியமோ கிடைத்துக்கொண்டே இருக்கும். அவற்றைத் தின்று கொழுத்துவளரும் எலிகளைப் போல எந்த உடல் உழைப்பும் இல்லாமல் அடுத்தவர் உழைப்பில் உண்டு உடல் பெருக்கும் சோம்பேறிகளைக் குறிப்பது. 

பழம்பெருச்சாளி - அடுத்தவர் உழைப்பில் உடல் பெருக்கும் சோம்பேறிகளுள்ளும் பெரும் அனுபவசாலி, சுரண்டலில் கைதேர்ந்தவர். 

பழம்பஞ்சாங்கம் - பழைமைவாதத்தில் ஊறியவர்.

புண்ணாக்கு – எண்ணையெடுத்த பின்பு மீறும் சக்கையைப் போல் எந்த விஷயஞானமும் இல்லாதவர்கள்.

பன்னாடை – பனை மரம்தென்னை மரங்களில் கீற்றுகளைத் தாங்கிப்பிடிக்க அமைந்த இயற்கையின் சிறப்பு. பயனுள்ள இதை ஏன் பயனற்றவர்களுக்கான வசையாக உபயோகிக்கிறார்கள் என்று யோசிக்கையில்தான் விஷயம் பிடிபட்டது. இந்த பன்னாடை சல்லடை போன்றிருப்பதால் பழங்காலத்தில் எண்ணெய் வடிகட்டியாகப் பயன்பட்டது. சாரத்தை கீழே விட்டு தூசு தும்புகளைத் தக்க வைப்பது போல் பயனற்றவற்றை மனத்தில் தக்கவைக்கும் தன்மையினர்.

பன்னாடை

கூமுட்டை – கூழ்முட்டை – வெளியே நல்ல தோற்றமிருந்தாலும் உள்ளே விஷயஞானம் இல்லாதவர்கள்.

ஓட்டைவாய் - எந்த ரகசியத்தையும் தன்னகத்தே வைத்திருக்க இயலாதவர்.

குறுமுட்டு – அளவு கடந்த செருக்குடையவன் என்கிறது லெக்சிகன் தமிழகராதி

கருங்காலி, குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு - காட்டிக்கொடுப்பவர்கள், இனத்துரோகிகள்.. தன் குலத்தை (அ) குடும்பத்தைத் தானே கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். (இரும்புக்கோடரிக்கு கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட உறுதியான கைப்பிடிதான் மற்ற கருங்காலி மரங்களை வெட்ட உதவி செய்கிறது என்பதால் இப்பட்டம்) 

விளக்கெண்ணெய் – வழவழா கொழகொழா என்று விஷயமில்லாமல் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள்.

வெண்ணெய்வெட்டி – மழுங்கலான கத்தியைக் கொண்டு வெண்ணெய் போன்ற மிக மென்மையான பொருளைத்தான் வெட்டமுடியும். செயலில் தீரம் காட்டாத வாய்ச்சொல் வீரர்களுக்குரிய பட்டம்.

உதவாக்கரை - மக்கள் புழங்குவதற்குப் பயன்படாத தன்மை கொண்ட ஆற்றங்கரை அல்லது குளத்தங்கரை போன்றவர்கள். இருந்தும் உபயோகமில்லாதவர்கள்.

களிமண் – தண்ணீரை உள்ளிழுக்கும் தன்மையற்றதால் செடி வளர உபயோகப்படாது. சொல்வதை உள்வாங்கும் திராணியற்றவர்களைக் குறிப்பது.

சென்னாக்குன்னி - சதா நச்சரிப்பவர்.

முண்டம் - தலையில்லாதவன். தலையிருந்தால்தானே அதில் மூளையும் இருக்கும்? எனவே மூளையில்லாதவன்.

மண்ணாந்தை, தெம்மாடிதத்திதறுதலை - சாதுர்யமில்லாதவர்கள்

அறிவுக்கொழுந்து - அவர்களுடைய அறிவு இப்போது கொழுந்தாக, இளந்தளிராக  இருக்கிறது. முற்றி வளர காலமெடுக்கும் அதாவது அவர்களிடத்தில் புரிதல் அரிதாம்.  

அகராதி - தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவப்பேச்சும் செய்கையும் கொண்டவர்கள்.

எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் - கஞ்சன், கருமி

கல்லுளி மங்கன், கல்லுப்பிள்ளையார் - அழுத்தக்காரன் (கல்லுளியால் செதுக்கினாலும் அசைந்துகொடுக்காத கல் போல எவ்வளவு தூண்டினாலும் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தாது அழுத்தமாய் மறைத்துவைப்பவன்)

கிராமப்புறங்களில் அடுத்தவரை சாபமிடவென்று சில வசைச்சொற்களை உபயோகப்படுத்திக் கேட்டிருப்போம். கழிச்சலில் போக என்பார்கள். அந்தக்காலத்தில் காலரா வந்து வாந்தி பேதியால் இறந்தவர்கள் அதிகம். அப்படி பேதி வரவேண்டும் என்ற சாபம்தான் அது. காளியாய் கொண்டு போக என்றால் அம்மை வரவேண்டும் என்ற சாபம். இப்போது காலரா, அம்மை போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் வந்துவிட்டதால் அந்த சாபங்கள் பலிப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.

இவை போக சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, உம்மணாமூஞ்சி, அழுகுணி, புளுகுணி, மடையன், கிறுக்கன், கேணன், வம்பன், மூர்க்கன், வாயாடி, அடங்காப் பிடாரி, சண்டி, விடாக்கொண்டன், கொடாக்கொண்டன், அழுக்குப்பாண்டை, பயந்தாங்கொள்ளி, தொடைநடுங்கி, மேனாமினுக்கி, கோள்மூட்டி போன்ற காரணப்பெயர் வசவுகளுக்கு விளக்கம் தேவைப்படாது அல்லவா?

யாவும் எவ்வளவு அர்த்தமுள்ள வசவுகள்.. இன்னும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம், இப்போதும் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரைக்கும்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

இவை தவிரவும் குரங்கு, கோட்டான், எருமைபன்றிநாய்பேய் போன்று கோபமாகவும், செல்லமாகவும் வெளிப்படும் விசேட வசைச்சொற்களை நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறோம் அல்லவா? 

(படங்கள் உதவி: இணையம்)

29 comments:

  1. நிறையச் சொற்கள் தெரியும்
    பொருளும் தெரியாது
    அதற்கான பொருளும் தெரியாது

    பொருள்களின் பயன்பாடு
    இருவிதத்திலும் இல்லாது போனது
    ஒருவகையில் மகிழ்ச்சி அளிக்கிறது

    காரணம் பெரும்பாலான வார்த்தைகள்
    பெண்களுக்கு எதிராகவும்
    நலிந்தோருக்கு எதிராகவும்
    பயன்படுத்தப்பட்டவை அல்லவா ?

    அற்புதமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நெடியதொரு கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      தற்காலத்தில் பயன்படுத்தப்படும் வசைமொழிகளைக் கேட்கையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசைமொழிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது ரமணி சார். இப்போது ஒருவனை வசைபாட தாயும் தாயுறுப்பும்தானே பரவலாகப் பயன்படுகின்றன.. கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறதே..

      Delete
  2. நிறைய சொற்களை அர்த்தம் தெரியாமலேயே உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்! வித்தியாசமான சிந்தனையில் ஒரு பதிவு. பன்னாடைக்கான விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  3. சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்து விட்டீர்கள். :)

    இருப்பினும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து, ஒவ்வொன்றுக்கும் பொருத்தமாக விளக்கம் அளித்துள்ளீர்கள். வேடிக்கையான பதிவாக உள்ளது.

    உலக்கையைப் பற்றி வேடிக்கையாக என் மாமியார்/மருமகள் கதை ஒன்றில் கூட எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

    அதில் தாங்கள் கொடுத்துள்ள பின்னூட்டம்:

    -=-=-=-=-=-

    கீத மஞ்சரிMarch 27, 2015 at 6:35 AM
    நகைச்சுவையோடு வாழ்வியல் யதார்த்தம் கலந்து கொடுக்கப்பட்ட அழகான கதை. இதைப்போல உலக்கை கதை ஒன்று வீட்டுக்கு விருந்துண்ண வரும் போலிச்சாமியாருக்கு அந்த வீட்டுப் பெண் உலக்கையைக் கொடுக்க தூக்கிக்கொண்டு விரட்டும் கதை நினைவுக்கு வருகிறது. உலக்கை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளத் தேவையான அழகான விளக்கத்துடன் துவங்கி கதையின் முடிவில் எல்லாத் தலைமுறையினருக்கும் தேவையான சிந்தனையை வழங்கி முடித்திருப்பது சிறப்பு. பாராட்டுகள் கோபு சார்.

    -=-=-=-=-=-

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனையான பின்னூட்டத்தை ரசித்தேன். நன்றி கோபு சார். அத்துடன் முன்பு நான் தங்கள் பதிவில் எழுதிய உலக்கை தொடர்பான பின்னூட்டத்தையும் இங்கு மேற்கோளிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  4. அழகான அருமையான விரிவான ஆராய்ச்சியால் வசைச் சொற்களுக்கும் பெருமை சேர்த்த தங்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள். வித்தியாசமான சிந்தனை!

    இதில் பெரும்பான்மையான சொற்களும் அதற்கான விளக்கங்களும் அறிந்திருந்தாலும் பன்னாடைக்கான அர்த்தம் தெரிந்து கொண்டோம். நல்ல அர்த்தம். இயக்குநர் பாலச்சந்தர் படங்களில், தொடர்களில் அடிக்கடி கேட்கப்பட்ட சொல் பன்னாடை.

    அறியாத சொற்கள் ...காளியாய் கொண்டு போக, சென்னாக் குன்னி, குறுமுட்டு கழிசலில் போக, அறிந்து கொண்டோம்.

    கழிசடை என்று சொல்லுவார்கள். எதற்கும் உதவாமல் கழித்துவிட வேண்டிய, அதாவது முடியில் சடை ஏற்பட்டால் வெட்டி விடுவது போல, அர்த்தத்தில் சொல்லப்படுவதுண்டு. தரித்திரம்-தரித்திரம் பிடிச்சது என்பது அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், இல்லை என்றால் ஒருவரால் நல்லது நடக்கவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது. கரிநாக்கு, கொள்ளிக்கண், மாறிக் கொண்டே இருப்பவர்களைப் பச்சோந்தி என்பது, மந்தமாய் இருப்பவர்களை அசமஞ்சம், இப்படி நிறைய இருக்கிறனதான்

    நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அங்கே இங்கே படித்தவை, கேட்டு அறிந்தவை, கொஞ்சம் ஆய்ந்தவை என பல தரப்பிலிருந்தும் சேகரித்த அர்த்தமுள்ள வசைச்சொற்களை ஒரு ஆவணப்பதிவாக்க வேண்டியே இங்கு பகிர்ந்தேன். தாங்களும் கூடுதலாய் சில வார்த்தைகள் அறியத்தந்தமைக்கு நன்றி.

      Delete
  5. வசை சொற்களின் பொருள் அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.


    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  6. வித்தியாசமான பகிர்வு ..

    நன்று

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா.

      Delete
  7. வசைச் சொற்களைத் தேடி அகராதி போல் தொகுத்துத் தந்தமை பாராட்டிற்கு உரியது .ரெண்டுங் கெட்டான் என்பது தன்னறிவும் சொல்லறிவும் இல்லாதவன் . வள்ளுவர் , 'ஏவவும் செய்கலான் தான் தேறான் ' என்றார் . உன் புத்தி உலக்கைக் கொழுந்து என்று இழிவுபடுத்துவது உண்டு . இதில் கொழுந்து என்பது நுனி எனப் பொருள்படும் . உலக்கையின் மேற்புறம் ( நுனி ) கூராக இல்லாமல் மொழுக்கையாய் இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி. சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை என்று சிலர் திட்டும்போது கவனித்திருக்கிறேன். அதை வள்ளுவரும் குறிப்பிட்டிருப்பதை இன்றை அறிந்துகொண்டேன். உலக்கைக்கொழுந்து என்ற வார்த்தையையும் அதன் பொருளும் இப்போதுதான் அறிகிறேன். விளக்கத்துக்கு மிகவும் நன்றி.

      Delete
  8. குந்தானி பற்றி இன்று தான் தெரிந்துகொண்டேன். என் சிறுவயதில் அடிக்கடி வாங்கிய திட்டு உலக்கை, செக்கொலக்கை, தீவட்டி ஆகியவை தாம். தீவட்டி எரிவதனால் தானே வெளிச்சம் கிடைக்கிறது. அது எப்படி எந்த வேலையும் செய்யவில்லை என்றாகும்? எனப் புரியவில்லை. கருங்காலி விளக்கமும் இன்று தான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. கிராமத்தில் குந்தாணி என்று சிலரைத் திட்டுவதைக் கேட்டிருக்கிறேன். கெட்ட வார்த்தை என்றுதான் நானும் நினைத்திருந்தேன், அதன் பொருள் அறியும் வரை. உலக்கை, தீவட்டி இவையெல்லாம் பயன்படுத்தப்படும் நேரம் தவிர மற்றெல்லா நேரமும் ஒரு ஓரமாய் வைக்கப்பட்டிருக்கும். அதை ஒப்பிட்டுப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். மாமாவைக் கேட்டால் சரியான பொருள் தெரியவரும்.

      Delete
    2. கவிதா மணாளன்5/3/21 16:48

      தீவட்டித் தடியன் என்னும் வசைச்சொல்லின் சுருக்கமே தீவட்டி. திருவிழாக்களில் தெய்வ உலாக்களில் மணச்சடங்கு ஊர்வலங்களில் தீவட்டியைச் சுமந்து செல்வதற்கென்று பணியாளர்கள் இருப்பார்கள். வேறெந்த வேலையும் செய்ய இயலாதவர்களுக்குத்தான் தீவட்டி தாங்கும் வேலை தரப்படும் என்பதால் தீவட்டித்தடியன் வசைச்சொல்லாயிற்று.

      Delete
    3. @கவிதா மணாளன் - கூடுதல் விளக்கத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  9. ஹாஹாஹா விஜிகே சார் கமெண்ட் படித்துச் சிரித்தேன். சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்துவிட்டீர்கள் கீத்ஸ் :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan 2/4/16 02:52
      //ஹாஹாஹா விஜிகே சார் கமெண்ட் படித்துச் சிரித்தேன். சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்துவிட்டீர்கள் கீத்ஸ் :)//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      காரைக்குடியிலிருந்தோ, சென்னையிலிருந்தோ, ஹைதராபாத்திலிருந்தோ தாங்கள் சிரித்த சிரிப்பொலி, இங்கு திருச்சி மலைக்கோட்டையின் மீது மோதி என் வீட்டு ஜன்னல் வழியாக எனக்கும் கேட்டது. :) - அன்புடன் VGK

      Delete
    2. @ தேனம்மை... உங்கள் மற்றும் கோபு சார் கமெண்ட்ஸ் பார்த்து நானும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனம்மை.

      Delete
  10. குந்தானி என்பது நான் அறிந்திராதது. மற்றவற்றை அறிந்துள்ளேன். இருந்தாலும் உதாரணங்களோடு கூறியவிதம் அருமையாக இருப்பதை உணர்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  11. தீவட்டி என்ற வசைச்சொல் ஆகுபெயராய் , அதை ஏந்துபவரைக் குறிக்கும் ; சில சமயம் , தீவட்டித் தடியன் என முழுமையாய் சொல்வதுண்டு . பழங் காலத்தில் சில தொழிலாளரை இழிந்தவராகக் கருதினார்கள் : கட்டில் நிணக்கும் இழிசினன் ( புறம் 82 )- கயிற்றுக் கட்டில் பின்னும் இழிந்தவன் , புலைத்தி கழீஇய தூவெள் அறுவை ( புறம் 312 ) துணி வெளுத்த தாழ்ந்தவள் . இப்போதும் சலவை , முடிதிருத்தல் , பிணஞ்சுடல் , துப்புரவு , காலணி செய்தல் முதலியவற்றைத் தாழ்ந்தவை என எண்ணும் தமிழர் ஏராளம் . தீவட்டி பிடித்தல் கீழ்த் தொழில் என்ற எண்ணந்தான் அந்தத் திட்டுதலுக்குக் காரணம் . தொழிலாளத் துரோகி எனப் பொருள் தரும் கருங்காலி ஆங்கில black leg என்பதன் பெயர்ப்பு .

    ReplyDelete
    Replies
    1. தீவட்டி என்ற வசைச்சொல்லின் விளக்கத்துக்கும் இலக்கிய மேற்கோள்களுகளுக்கும் மிகவும் நன்றி மாமா. இவ்வளவு ஆழமான பொருளிருக்கும் என்று எண்ணிப்பார்க்கவில்லை. கூடுதல் தகவலாய் கருங்காலிக்கான விளக்கத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
    2. கவிதா மணாளன்5/3/21 16:50

      மரத்தை வெட்டப் பயன்படும் கோடரியின் காம்பு கருங்காலி மரத்தில் செய்யப்படும். தன்னினத்தை வெட்ட உதவிசெய்வதால் கருங்காலி துரோகி என்னும் பொருளில் வசைச்சொல்லாயிற்று. கோடரிக்காம்பே எனவும் திட்டுவர்.

      Delete
    3. @கவிதா மணாளன் - கருங்காலி விளக்கத்துக்கு மிகவும் நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.