18 April 2013

வெறுமையின் சில துளிகள்

 

 

சாத்தியக்கூறுகள் ஏதுமற்று
 சட்டென்று  வெளியேகிய சமரசங்களின் சாடலால்
திகைப்புற்றுக் கிடக்கிறது மனம்.

ஆடல் முடிந்த அரங்கு போல...
அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
பறவை பிரிந்த கூடு போல...
திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!

சித்திரை மாத வெயிலது  உச்சிப்பொழுதுகளில்
வேட்கை மிகுதியோடு தன் வறண்ட நாவை
புழுதி பறக்கும் தெருக்களில் துழாவித் துழாவி
சொச்சமிருக்கும்  ஈரத்தையுறிஞ்சியும்
தன் தாகந்தணியாது திரிவதைப்போல்
நா நீட்டியபடியே அலைகிறது வெறுமை.

இடி கொணரும் கோடைமழையென
எதிர்பாராது அணைத்தூறும் சில
அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
மெல்லக் கிளைக்கலாம்
வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.

அல்லது வெறுமனே திரிந்திருக்கலாம்
வெட்டவெளியில் சில சுவாசத்துளிகள். 

46 comments:

  1. வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
    வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!//உண்மை
    http://kaviyazhi.blogspot.com/2013/04/blog-post_7855.html

    ReplyDelete
  2. // ஆடல் முடிந்த அரங்கு போல...
    அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
    பறவை பிரிந்த கூடு போல...
    திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
    இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
    வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
    வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!///

    எனக்கு மிகவும் பிடித்தவர்கள்....

    ReplyDelete
  3. அருமை...

    வாழ்வின் சுவாரசியத் துளிர்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உணர்வுகளையும் வலிகளையும் மிக்வும் அருமையாக வார்த்தைகளில் வரிகளில் அடக்கிச் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். படத்தேர்வும் மிக அருமை.

    ReplyDelete
  5. ஆடல் முடிந்த அரங்கு போல...
    அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
    பறவை பிரிந்த கூடு போல...
    திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
    இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
    வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
    வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!

    மிகவும் ஆருமையான சிந்தனைக் கோர்வை வரிகளில் வலிகள் தவழ்ந்தாலும் மனதினில் இதமாய் ஒட்டிக் கொண்ட சந்தம் அருமை ! வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete

  6. /சித்திரை மாத வெயிலது உச்சிப்பொழுதுகளில்
    வேட்கை மிகுதியோடு தன் வறண்ட நாவை
    புழுதி பறக்கும் தெருக்களில் துழாவித் துழாவி
    சொச்சமிருக்கும் ஈரத்தையுறிஞ்சியும்
    தன் தாகந்தணியாது திரிவதைப்போல்/ ரசிக்க வைத்த வரிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. மிகமிகச் சிறப்பாக இருக்கின்றதுகவிதை!.
    மனமரத்தின் வேர்களில் ஆழப்பதிந்தவலிகள் அழகிய சொற்களில் மிளிந்தவகை அருமை!
    வாழ்த்துக்கள் தோழி!

    புவிக்குள் தனிமரத்தின் புன்மைதான் எமக்குமென
    தவிக்கும் தனிமையை விளித்த கவிகவிகண்டு
    குவிக்கும் என்கரங்கள் கொடுத்த உன்பாக்கள்
    செவிக்கும் சிந்தைக்கும் சிறப்பு மிகவானதே...

    ReplyDelete
  8. அருமையான கவிதை. வெற்றுக் களங்களுக்கான ஒப்புமை மிக நன்று.

    ReplyDelete
  9. கவிதை அருமை கீதமஞ்சரி. தனிமை, வெறுமை நீங்கி துளிர்கட்டும்.வாழ்வின் சுவாரசிய துளிகள்.

    ReplyDelete
  10. நா நீட்டியபடி அலைகிறது வெறுமை அருமையான வரிகள் சிறப்பான கவிதை தோழி

    ReplyDelete


  11. பின்னிப் படரும் உவமைகள்! மிகவும் இயற்கை ஓவியங்கள்!

    ReplyDelete
  12. நல்ல ஒப்புமைகளுடன் கூடிய அருமையான கவிதை!

    ReplyDelete
  13. இடி கொணரும் கோடைமழையென
    எதிர்பாராது அணைத்தூறும் சில
    அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
    வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
    மெல்லக் கிளைக்கலாம்
    வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.//

    படமும் பிற வரிகளும் ஏந்திய வெம்மையும் தாபமும் சற்றே தனிவதாய்...

    இலைகளற்று வேர்க்கோடியில் உயிர் ஊசலாடும் தனிமரமும் சொச்சமிருக்கும் ஈரத்தை உறிஞ்சும் சித்திரை வெயிலும் ... நினைக்கவே மனம் கரைகிறது.

    ReplyDelete
  14. எல்லாரும் ஒவ்வொரு அம்சத்தையா பாராட்டினதுல எனக்கு என்ன சொல்லிப் பாராட்டறதுன்னே திகைப்பாயிருக்கு. மொத்தக் கவிதையையும் மிக ரசித்தேன்கறது உண்மையான உண்மை! அருமை!

    ReplyDelete
  15. கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை!!

    ReplyDelete
  16. வெறுமையை மிக அழகாக உருவகப்படுத்திய வரிகள் கவிதையின் இரண்டாம் பத்தியில் ..
    மிக அருமை

    ReplyDelete
  17. ஒவ்வொரு வரியும் கூர்மை..அருமை...அசத்தல் கவிதை கீதமஞ்சரி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. @கவியாழி கண்ணதாசன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    தங்கள் தனிமைக் கவிதை வாசித்து மனம் நெகிழ்ந்தேன்.

    ReplyDelete
  19. @Avargal Unmaigal

    ரசித்ததோடு பிடித்த வரிகளைக் குறிப்பிட்டுக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி அவர்கள் உண்மைகள்.

    ReplyDelete
  20. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.

    ReplyDelete
  21. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார். படத்தேர்வைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  22. @ அம்பாளடியாள்

    வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  23. @G.M Balasubramaniam

    வருகைக்கும் ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  24. @இளமதி

    கவிதையின் பொருளை அழகாய் உள்வாங்கி அற்புதமாய் வெளிப்படுத்திய கவிவரிகளில் நானும் மகிழ்கிறேன். மனமார்ந்த நன்றி இளமதி.

    ReplyDelete
  25. @ராமலக்ஷ்மி

    தங்கள் வருகைக்கும் இனிய பாராட்டுக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  26. @கோமதி அரசு

    தங்கள் வருகைக்கும் உளப்பூர்வ பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

    ReplyDelete
  27. @poovizi

    வருகைக்கும் ரசித்திட்டக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி பூவிழி.

    ReplyDelete
  28. @புலவர் இராமாநுசம்

    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  29. @கே.பி.ஜனா

    ஒப்புமைகளை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  30. @நிலாமகள்

    மனந்தொட்ட மறுமொழி நிலாமகள். கரையும் மனம் வரைந்த கருத்தூட்டம் கண்டு மகிழ்வும் நெகிழ்வும். மிக்க நன்றி.

    ReplyDelete
  31. @பால கணேஷ்

    மொத்தக் கவிதையையும் மிகவும் ரசித்தேன் என்கிற பாராட்டைவிட வெறென்ன வேண்டும்? வருகைக்கும் தவறாது வழங்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.

    ReplyDelete
  32. @மனோ சாமிநாதன்

    தங்கள் வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

    ReplyDelete
  33. @angelin

    வருகைக்கும் கவிதையை ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
  34. @கிரேஸ்

    வருகைக்கும் கவிதையை சிலாகித்துப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  35. // வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
    வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!//

    Classic....

    தனிமையை உங்களது கவிதை மூலம் மேலும் அதிகமாய் உணர முடிகிறது!

    ReplyDelete
  36. //ஆடல் முடிந்த அரங்கு போல...
    அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
    பறவை பிரிந்த கூடு போல...
    திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...

    ஆங்கிலக்கவி டி.எஸ்.எலியட் மாதிரிலே இருக்குது கவிதை.
    இருக்கும் இல்லாததின் வழியாக‌
    இருந்த இருந்ததை இன்பமாய் நினைவில் கொணர்ந்தது
    அழகோ அழகு.



    படிக்கும்பொழுதே இன்னும் நாலு வார்த்தைகளும் சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது.

    வாழ்ந்து சோர்ந்து போன சுப்பு தாத்தா போல....


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  37. @sury Siva

    தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மிக்க மகிழ்ச்சி சுப்பு தாத்தா.

    இன்னும் சேர்க்கச் சொன்னவை நாலு வார்த்தைகள் என்றாலும் கவிதையின் கனத்தைக் கூட்டவல்லவை அல்லவா? கவிதையோடு மனத்தின் கனத்தையும் கூட்டிப்போகும் அவ்வார்த்தைகள் சொல்லும் செய்தியில்தான் எத்தனை வீரியம்?

    நிறைவான நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  38. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் கவிதையை ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி வெங்கட்.

    ReplyDelete
  39. எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
    நான் வாழ யார் பாடுவார்

    என்றொரு பாடல் ஏனோ உங்கள் கவிதையைப் பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது கீதா.அதில் கடைசி வரி ஒன்று வரும்

    “உன்பாதை நீ கண்டு நீ போகலாம் இனி
    என்பாதை நான் கண்டு நான் போகலாம்
    எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம் நான்
    எப்போதும் நீ வாழ இசை பாடலாம்”

    சொல்லவொணா சோக உணர்வொன்றை விட்டுச் செல்லும் அந்த அற்புதப் பாடலைப்போல ஒரு சோகத்தை தந்து செல்கிறது உங்கள் கவிதையும்.

    அது கவிதையின் பெரு வெற்றி!உணர்வுக்குள் ஊறப்போட்டு எடுத்த வரிகள்!

    ReplyDelete
  40. திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
    இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
    வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
    வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!//
    -அருமையான வரிகள்! இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete

  42. வணக்கம்!

    தனிமை கொடுத்திட்ட தாகத்தைத் தந்தீா்!
    இனிமைத் தமிழால் இசைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  43. @மணிமேகலா

    உங்கள் பார்வையில் கவிதையின் ஆழம் இன்னும் அதிகரிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி மணிமேகலா. வரவுக்கும் அருமையானதொரு மறுமொழிக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  44. @Seshadri e.s.

    தங்கள் வருகைக்கும் ரசித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

    ReplyDelete
  45. @கி.பாரதிதாசன் கவிஞர்

    தங்கள் கவிப்பின்னூட்டத்தால் அன்றோ கவிதை பெருமை கொள்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  46. Anonymous1/5/13 05:14

    தனிமை, வெறுமை நீங்கி துளிர்கட்டும்.வாழ்வின் சுவாரசிய துளிகள்.
    mika nanru. Paaraaddukal
    Vetha.Elangathilakam

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.