Showing posts with label மகிழ்வும் நெகிழ்வும். Show all posts
Showing posts with label மகிழ்வும் நெகிழ்வும். Show all posts

12 March 2025

ஒவ்வொரு நாளும் புதிதாய்...

வசந்தகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே கொளுத்தத் தொடங்கிய வெக்கையின் தாக்கத்தை எழுதிய புலம்பல் பதிவோடு போனவளுக்கு, கோடை முடிந்து இதம் தரும் இலையுதிர்காலமும் தொடங்கிய பிறகுதான் வலையில் தலை காட்ட மனம் வாய்த்திருக்கிறது. 

கோடையின் கடுந்தாக்கம், பிரியத்துக்குரிய தாய்மாமனின் இழப்பு, புத்தாண்டின் தொடக்கத்திலேயே கவித்தோழி உமா மோகன் அவர்களின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சி போன்ற சில காரணங்களால் எழுதுவதில் ஒரு வித அயர்ச்சியும் சுணக்கமும் ஏற்பட்டுவிட்டது. எழுத்தில்தான் மந்தமே தவிர வாழ்க்கை என்னவோ தன் போக்கில் படுவேகமாகவும் சுவாரசியமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

நெடும்பயணத்தில் சிறு இளைப்பாறல்

முதன்முதலாக தோழிகளோடு, சுமார் 2,000 கி.மீ. நீள சாலைவழி சாகசப் பயணம், மகளின் புதிய காரில் புதுப்புது இடங்களுக்கு சந்தோஷப் பயணம், மகளின் வளர்ப்புச் செல்லங்களும் அவற்றின் சேட்டைகளும், புதிய youtube சானல், புதிய கைத்தொழில், தோட்டச் சீரமைப்பு, தோட்டத்தின் புதுவரவுகள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களுக்குக் குறைவில்லாமல் கழிகின்றன நாட்கள்.  

பயணத்தில் சுவாரசியம் கூட்டிய இடங்களுள் ஒன்று

பச்சைப் புல்வெளியும் கரிய மாடுகளும்

இந்த வருடம் எதிர்பாராத மகிழ்ச்சியாக Australian native bees – Family planner-ல் நான் எடுத்த புகைப்படமும் சிறு இடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியத் தேனீக்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவியற் தகவல்களையும் அறியத் தரும் Bee Aware of Your Native Bees  என்ற ஃபேஸ்புக் குழுமம் அதில் பதியப்பட்ட பல்லாயிரக்கணக்கான படங்களுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இந்த planner-ஐ உருவாக்கியுள்ளது.

நாட்காட்டியின் முன் பக்கம்

நாட்காட்டியின் கடைசிப்பக்கம்

வித்தியாசமானவை, அரியவை, தரைவாழ் தேனீக்கள், தேன் கூடு, தேனடை, தேன் சேகரிப்பு, உறக்கம், குமிழ் விடுதல், மகரந்தச் சேர்க்கை என ஒவ்வொரு மாதத்திற்குமான பிரத்தியேகத் தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியத் தேனீக்கள் படங்களுள் குமிழ் விடுதல் தலைப்பில் என்னுடைய ஒளிப்படம் தேர்வானது. காலண்டரா ப்ளானரா என்ற ஆலோசனையின்போது பலரும் ப்ளானர் என்று பரிந்துரைக்க, இறுதி வடிவம் ப்ளானர் (சரியான தமிழ்வார்த்தை இன்னும் பிடிபடவில்லை) என்று முடிவானது.


தகவல் பக்கம்

வழுவழுப்பான தாள்கள். ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்தோடு பெரிய அளவிலான திட்டமிடலுடன் கூடிய நாட்காட்டி ஆஸ்திரேலியத் தேனீக்கள் மற்றும் சிறப்புத் தகவல்களோடு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. தனி விலை 25 ஆஸ்திரேலிய டாலர்கள். மொத்தமாக வாங்கினால் குறையும். நிறைய பேர் ஐம்பது, நூறு என்று வாங்கியுள்ளனர். ஆஸ்திரேலியா முழுமைக்கும் விநியோகிக்கப்பட்டுள்ள இவ்வாண்டின் நாட்காட்டியில் என்னுடைய ஒளிப்படமும் இடம்பெற்றிருக்கிறது என்பது மகிழ்வும் பெருமிதமும் அளிக்கிறது.

நானும் ஒரு மூலையில்...

நான் பிறந்த ஏப்ரல் மாதத்தில் என் ஒளிப்படம் இடம்பெற்றிருப்பது தற்செயல் என்றாலும் பிறந்தநாள் பரிசாகப் பெற்றது போல் கூடுதல் மகிழ்ச்சி.

நத்துவும் மித்துவும் 

கடந்த 2022-ஆம் ஆண்டு அமேசானில் வெளியான என்னுடைய சிறுவர் நாவல் ‘நத்துவும் மித்துவும்’ தற்போது ஒலிவடிவம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வாழ்வுநல மேம்பாட்டுக்காகச் செயல்படும் ‘மெய்ப்பொருள்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சென்ற பிப்ரவரி 14-ஆம் தேதியிலிருந்து தினமொரு கதையை பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒலி வடிவில் ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த வரிசையில் பத்தாவது கதையாக என்னுடைய ‘நத்துவும் மித்துவும்’ சிறுவர் நாவல் இடம்பெற்றிருக்கிறது. சுமார் 40 நிமிட அவகாசம் எடுக்கும் இக்கதையை Spotify-இல் கேட்கலாம்.

நத்துவும் மித்துவும் ஒலி வடிவம்

‘நத்துவும் மித்துவும்’ கதையை எளிய மொழியில் மிக அழகாகச் சொல்லியிருக்கும் அபிநயா ஸ்ரீகாந்த் அவர்கள், இந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.

இணையப் படம் 1

1969-ஆம் ஆண்டு எரிக் கார்ல் என்ற அமெரிக்க சிறார் எழுத்தாளர் மற்றும் ஓவியரால் எழுதி வடிவமைக்கப்பட்டதுதான் The very hungry caterpillar என்ற உலகப் பிரசித்தி பெற்ற சிறார் படப் புத்தகம். புத்தகம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை சுமார் ஐம்பது மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. 66 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான புத்தக வடிவமைப்புக்காக எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளது. பல தொலைக்காட்சிகளில் கார்ட்டூன்களாக வெளியாகியுள்ளது. ‘உலகச் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான நூல்களுள் ஒன்று’ என்ற சிறப்பைப் பெற்றது. கதையோடு கம்பளிப்புழு ஒவ்வொரு உணவையும் துளைத்துக் கொண்டு போவது போன்ற புத்தக வடிவமைப்பு கூடுதலாகக் குழந்தைகளை ஈர்ப்பது இன்னொரு சிறப்பு. 

ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனின் வெப்பத்தால் முட்டையிலிருந்து பொரிந்து வருகிறது ஒரு குட்டிக் கம்பளிப்புழு. திங்கள் அன்று ஒரு ஆப்பிள் தின்கிறது. ஆனாலும் பசி அடங்கவில்லை. செவ்வாய்க் கிழமை இரண்டு பேரிக்காய் தின்கிறது. அப்போதும் பசியடங்கவில்லை. புதன் கிழமை மூன்று ப்ளம் பழங்களைத் தின்கிறது. அப்போதும் பசி அடங்கவில்லை. வியாழக்கிழமை நான்கு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களையும் வெள்ளிக்கிழமை ஐந்து ஆரஞ்சுப் பழங்களையும் தின்கிறது. ஆனாலும் அடங்காப் பசியுடனேயே இருக்கிறது. 

இணையப் படம் 2

சனிக்கிழமையன்று அது சாக்லேட் கேக், ஒரு ஐஸ்க்ரீம், ஊறுகாய், பாலாடைக்கட்டி, சலாமி (பன்றிக்கறியால் ஆனது), லாலிபாப், செர்ரிப்பழக் கேக், சாஸேஜ் (இறைச்சி), கப் கேக் எல்லாவற்றையும் தின்றுவிட்டு கடைசியாக ஒரு துண்டு தர்ப்பூசணியும் தின்கிறது. அன்று இரவு கடுமையான வயிற்றுவலி வந்து துடிக்கிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒரே ஒரு இலையை மட்டும் தின்கிறது. இப்போது அது குட்டிக் கம்பளிப்புழு இல்லை. குண்டுக் கம்பளிப்புழுவாக மாறியிருக்கிறது. அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டைப் பின்னி கூட்டுப்புழுவாக மாறுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதிலிருந்து வெளியேறி அழகிய வண்ணத்துப்பூச்சியாகப் பறக்கிறது. இதுதான் கதை. 

நத்துவும் மித்துவும் - கதைக் காட்சி

இந்தக் கதையை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டும் கீரைகள், மூலிகைகள் இவற்றின் நன்மைகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் சொல்ல விரும்பியும் எழுதியதுதான் நத்துவும் மித்துவும் கதை. இதில் நத்து என்கிற நத்தையும் மித்து என்கிற கம்பளிப்புழுவும் ஒரு தோட்டத்து நண்பர்கள். முட்டையிலிருந்து பொரிந்துவரும் கம்பளிப்புழுவுக்கு எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக்கூடாது, எது எந்த ருசி, எது ஆபத்து, எங்கே, யாரிடம், எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத்தருகிறது நத்தை. மெதுவாக நகரும் காரணத்தால் தோட்டத்தின் மற்ற ஜீவராசிகளால் கேலி செய்யப்படும் நத்தை பிறகு எப்படி அவற்றின் ஆருயிர் நண்பனாக மாறுகிறது என்பதைச் சொல்லி கதையை முடித்திருக்கிறேன்.  

இணையப் படம் 3
என் குழந்தைகள் சிறு வயதில் Popeye show பார்த்த பிறகுதான் கீரை சாப்பிட ஆரம்பித்தார்கள். நாம் சொல்ல நினைப்பவற்றை கதைகள் மூலம் குழந்தைகளுக்குப் புரியவைப்பது எளிது என்பதை அறிந்திருந்ததால் இந்த நாவலை முயன்றேன். அதற்கு நல்ல பலன் தற்போது கிடைத்திருப்பது அறிந்து மகிழ்கிறேன்.

ஜகரண்டா மரத்தில் காலா பறவைகள்

தோட்டத்தின் புதுவரவுகள் என்று குறிப்பிட்டேன் அல்லவா? 2025 முதல்நாள் தோழிகளோடும் புதிய பூக்கன்றுகளோடும் சிறப்பாகத் தொடங்கியது. 

புதிய வரவாக நானும் இருக்கிறேன் என்று தலைகாட்டிப் போனார் பாம்பார் ஒருவர். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு சட்டையை மட்டும் கழற்றிவைத்துவிட்டுப் போனவர் இப்போது தானே என் கண்முன் வந்து தன்னிருப்பை உறுதி செய்துவிட்டுப் போனார். கொல்லைப்புறக் கண்ணாடி வழியாக தோட்டத்தை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இவர் விருட்டென்று கடந்துபோனதைப் பார்த்தேன். பாம்பு போல் இருக்கிறதே, என்ன பாம்பாக இருக்கும் என்ற ஆர்வம் உந்த, கேமராவைத் தயார் செய்து கையில் எடுத்துக்கொண்டு கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியில் சென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் படம் எடுக்கும் ஆசை (அவர் படம் எடுக்காமல் இருக்கணுமே!) உந்த, போர்டிகோவில் நின்றபடி அவர் சென்ற திசையில் தேடினேன். இல்லை. வேறெங்கோ போய்விட்டார் போலும், என்று நினைத்து திரும்பி கதவை மூடப்போகும் வேளையில் போன வழியிலேயே அவர் திரும்பி வருகிறார். அடித்தது அதிர்ஷ்டம் என்று க்ளிக்கினேன். ஆனால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. படபடப்பு வேறு. அவரோ  விருட்டென்று செடிகளுக்குள் சென்று மறைந்துவிட்டார். 

வால் மட்டும்தான் பிடிபட்டது

கன்னங்கரேல் என்ற உடலைப் பார்த்தபோதே இது red-bellied black snake-ஆகத்தான் இருக்கவேண்டும் என்று கணித்தேன். படத்தை வைத்து இணையத்தில் தேடியபோது என் கணிப்பு உறுதியானது. ஆக, புழு, பூச்சிகள், சிலந்திகள், பறவைகள், தோட்டப்பல்லிகள், நீல நாக்கு அரணை, நத்தை, சுண்டெலி, பெருச்சாளி, பூனை இவற்றோடு தோட்டத்தின் வருகையாளராக இப்போது இவரும் இணைந்துவிட்டார். :)))

 *****

17 August 2020

அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதைதான் நான் முதலில் எழுதி வெளியான சிறுகதை. அதன்பிறகு நிறைய கதைகள் எழுதினாலும் முதல் கதை எழுதியபோதும் அது நிலாச்சாரல் இணையதளத்தில் வெளியானபோதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. என் சிறுகதைகளை நூல் வடிவில் காணவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. எனக்கு அப்படி ஏதும் தனிப்பட்ட ஆசை இல்லை என்றாலும் ஒருவேளை அம்மாவின் ஆசைப்படி நூல் வடிவாக்கினால் அதற்கு அம்மாச்சியும் மகிழம்பூக்களும் என்றுதான் தலைப்பிடவேண்டும் என்று மனத்துக்குள் முடிவுசெய்திருந்தேன். சிறுகதைகள் நூலாக்கம் பெறும் வாய்ப்பு கோதை பதிப்பகம் வாயிலாய்த் தேடிவந்தபோது, எதிர்பாராது கிடைத்த இந்த வாய்ப்பினைத் தவறவிட மனம் துணியவில்லை. அம்மாவின் ஆசையும் நிறைவேறிற்று. என்னுடைய ஆசையும் நிறைவேறிற்று. கூடவே அம்மாவுக்கு இந்நூலை சமர்ப்பணமும் செய்தாயிற்று. 



அம்மாச்சியும் மகிழம்பூக்களும் கதையை ஒரு கவிதையாகத்தான் ஆரம்பித்தேன். நினைவும் புனைவுமாய் வரிகள் வளர்ந்து வளர்ந்து கதையாக உருமாறிவிட்டது. சிவப்பிக்கு உயிர் கொடுத்தவள் இப்போது உயிரோடு இருக்கமாட்டாள் எனினும் என் மனக்கண்ணில் இன்னமும் தண்ணீருக்கு மேலே தலை காட்டியபடி நான் சில காலமே அறிந்த அந்த ஊரின் சகதிக்குளத்தில் முங்கியிருக்கிறாள். அப்புவை வளர்த்த ஆறுமுகம் அச்சு அசல் என் பாட்டனார். குருகாணிக்கையில் வரும் அந்த ஆசிரியருக்கு வித்திட்டவர் அடிக்கடி எங்கள் வீட்டுவாசலில் நின்று உரிமையோடு அப்பாவை பெயர் சொல்லியழைத்த அப்பாவின் உடன் படித்த, ஏதோ காரணத்தால் பின்னாளில் மனம் பிறழ்ந்த நண்பர். அலமேலுவின் ஆசைக்குள்ளிருப்பது கிட்டத்தட்ட அதே மாதிரியான என் ஆத்தாவின் ஆசை. இந்த சிறுகதைகளுக்குள் ஏன் ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் நான் இருப்பேன், நீங்கள் இருப்பீர்கள், அவள் இருப்பாள், அவர் இருப்பாள், அவர்கள் இருப்பார்கள், அதுவும் இருக்கும். புள்ளிகளை சிறைப்படுத்தும் இழைக்கோலம் போல சிலபுள்ளிகளின் தேவையற்ற பூக்கோலம் போல சில.. 

வாழ்வின் சிக்கல்களைப் பேசும் ஒவ்வொரு பாத்திரத்திலும் பொருந்தியும் விலகியும் எட்ட நின்றும், கிட்ட நின்றும் கடந்த பத்து வருடங்களாக நான் வாழ்ந்தெழுதிய இக்கதைகள் நிலாச்சாரல், தமிழ்மன்றம், வல்லமை, அதீதம், பதிவுகள், பிரதிலிபி என பல இணைய தளங்களில் அவ்வப்போது வெளியாகி பற்பல விமர்சனங்களைப் பெற்றுத்தந்து எழுத்தை சீர்படுத்தியவை. முக்கியமாக தமிழ்மன்றத்தை என்னுடைய சிலேட்டுப்பலகை என்பேன். எழுதியெழுதி அழித்தெழுதி எழுத்தைப் பழகியது அங்கேதான். தமிழ்மன்ற நட்புகளுக்கு இவ்வேளையில் நன்றியறிவித்து மகிழ்கிறேன். இத்தொகுப்பை மிகுந்த சிரத்தையுடன் அழகாக வடிவமைத்துள்ள ஷாஜஹான் சார் அவர்களுக்கும் வெளிக்கொணர்ந்துள்ள கோதை பதிப்பக உரிமையாளர் தோழி நான் ராஜாமகள் அவர்களுக்கும் என் உள்ளார்ந்த அன்பும் நன்றியும். 

புத்தகம் வேண்டுவோர் facebook-ல் இருந்தால் Naan Rajamagal அவர்களையும்,  ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் geethamathibooks@gmail.com என்ற மின்னஞ்சலில் என்னையும் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.



1 January 2018

அறுசுவை விருந்து படைத்த 2017




ஆஹா ஓஹோவென்று இல்லையெனினும்
அப்படியொன்றும் அசமந்தமாக இல்லை..
வாழ்விலுண்டாகும் சறுக்கல்களுக்கு
வருடத்தை நிந்திப்பதில் நியாயமுமில்லை.
வழக்கம்போலவே கழிந்து பிறக்கிறது புத்தாண்டு.
வருங்காலம் இனிதாகும் வளமாகுமென்னும்
ஆதி நம்பிக்கையை அடிப்பிறழாமல் தந்து! 🙂🙂




மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், கொண்டாட்டம், சோகம், கலவரம், அங்கீகாரம், அரவணைப்பு என பலவிதமான உணர்வுகளையும் கலவையாய் அள்ளித்தந்து அமைதியாய் நிறைவுபெறுகிறது 2017.

என்னுடைய எழுத்தின் வளர்ச்சிக்கு பின்புலமாய் இருந்த… இப்போதும் இருக்கும் அன்புத்தோழி மணிமேகலாவுக்கு இப்பிறவியில் நன்றி சொல்லிமாளாது. அவரால்தான் அற்புதமான பல அங்கீகாரங்கள் எனக்குக் கிட்டின..

1.   ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 26-ஆம் நாள் சிட்னி உயர்திணை இலக்கிய அமைப்பின் சார்பாக, தோழியின் அயராத முயற்சியால் என்னுடைய 'என்றாவது ஒரு நாள்' நூல் வெளியீடு இனிதே நிறைவேறியது ஆகப் பெரும் மகிழ்வான நிகழ்வின் மூலம் சிட்னி இலக்கிய வட்டத்தில் நானும் ஒருத்தியாய் சங்கமிக்கும் வாய்ப்பு கிட்டியது. பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகமும் அன்பும் ஆதரவும் கிட்டின.

2.   கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு- 2017 - புலம்பெயர் இணைய வலைப்பதிவர் தேர்வில் கீதமஞ்சரி மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதற்கும் அன்புத்தோழியே காரணம். அவரே கீதமஞ்சரி வலைத்தளத்தை முன்மொழிந்துள்ளார் என்பது பிறகுதான் தெரியவந்தது.

3.   காக்கைச்சிறகினிலே– இலக்கிய இதழில் கீதமஞ்சரிக்காக முழுதாய் எட்டுப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டது இன்னுமொரு சிறப்பான அங்கீகாரம்.

4.   பிரபலஎழுத்தாளர் முருகபூபதி அவர்கள் என்றாவது ஒருநாள் நூல் குறித்த தன் வாசிப்பனுபவத்தை மெல்பனில்  06-05-17  அன்று நடைபெற்ற அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17-வது எழுத்தாளர் விழாவில் சமர்ப்பித்தமை எனது பெரும்பேறு. அவரை எனக்கும் என் எழுத்துகளை அவருக்கும் அறிமுகப்படுத்தியதோடு, அண்ணா என்று உரிமையுடன் அழைக்கும் நெருக்கத்தை எனக்கு உருவாக்கித் தந்தவர் என் அன்புத்தோழியே.

5. ATBC எனப்படும் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தாயகம் வானொலி, SBS Tamil Radio மூன்று வானொலியிலும் என்றாவது ஒருநாள் வெளியீடு தொடர்பாக என்னுடைய நேர்காணல் ஒலிபரப்பானது. SBS Tamil Radio-வில் அபாரமான பின்னணியோடு ஒலிப்பதிவு செய்யப்பட்ட திகில் கதையான சீனத்தவன் ஆவி ஒலிபரப்பானது இன்னொரு மகிழ்ச்சி.    
6.   எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ‘காலமும் கணங்களும்’ என்னும் தன்னுடைய அடுத்த நூலுக்கான அட்டைப்படத்தை என்னிடமிருந்து பெற்றது என் புகைப்பட ஆர்வத்தின் மீதான மிகப்பெரும் அங்கீகாரம்.

2017 - மகளுக்கு இரண்டாவது பட்டமளிப்பு விழா, மகனின் பள்ளியிறுதி ஆண்டுவிழா, எங்களுடைய திருமண வெள்ளிவிழா என பல மறக்கமுடியாத கொண்டாட்டங்களுக்கிடையில் உளைச்சலும் மனச்சோர்வும் தரும்வண்ணம் எதிர்பாராத சில நிகழ்வுகளும் நடந்தேறின. அவை தனிப்பட்டவை என்றாலும் என் எழுத்திலும் சற்று பாதிப்பை ஏற்படுத்தின. 

கொஞ்சகாலம் எதிலும் ஈடுபாடற்று பதிவுலகிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும் ஃபேஸ்புக்கில் அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டு இருந்தேன். முந்தைய வருடங்கள் போல புகைப்படங்கள் அதிகம் பகிரவில்லை.. எடுக்கக்கூடிய வாய்ப்புகளும் கூடிவரவில்லை. வாசிப்பிலும் பெரிய ஈடுபாடு கிட்டவில்லை. எழுத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று எனக்கு நானே விதித்துக்கொண்ட பிடிவாதத்தால் எதையாவது கிறுக்கியபடி இருந்தேன்.

மொழிபெயர்ப்பில் தீவிரமாக இல்லாவிட்டாலும் இந்த வருடத்தில் ஹென்றி லாசனின் கதைகள் மேலும் சிலவற்றை மொழியாக்கம் செய்துள்ளேன்.

பூக்கள் பற்றிய தொடரை விளையாட்டாய் ஆரம்பித்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் பற்றி எழுதியிருப்பது எனக்கே வியப்பளிக்கிறது.

புஸ்தகா நிறுவனத்தின் மூலம் ஆறு மின்னூல்களும் பிரதிலிபி மூலம் எட்டு மின்னூல்களும் இந்த வருடத்தில் வெளியாகியிருப்பது உற்சாகம் அளிக்கும் உந்துசக்திகள். 

இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளுடன் படைக்கப்படும் அசத்தலான விருந்து போல 2017 பல்சுவைகளால் எம் வாழ்வை நிறைத்துச் சென்றிருக்கிறது. அனுபவங்களே வாழ்வென்னும் பாடத்தை அழகாய்ச் சொல்லிக் கடந்திருக்கிறது இன்னுமோர் ஆண்டு. அதே பாடத்தைக் கற்றுத்தர இதோ.. தவழ்ந்து வந்துகொண்டிருக்கிறது அடுத்ததோர் ஆண்டு.

அனைவருக்கும் 
இனிய ஆங்கிலப் புத்தாண்டு 
நல்வாழ்த்துகள்
2018.


   

6 August 2017

காக்கைச் சிறகினிலே கீதமஞ்சரி

காக்கைச் சிறகினிலே - ஜூலை 2017-ல் கீதமஞ்சரி..
தரமானதொரு இலக்கிய இதழில் என் வலைத்தளத்துக்காக முழுமையாக எட்டுப் பக்கங்கள் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி 2017-ல் மூன்றாம் பரிசு பெற்றமைக்காக பிரத்யேக அங்கீகாரம் இது. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி தேர்வுக்குழுவுக்கும் காக்கைச் சிறகினிலே ஆசிரியர் குழுமத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
இப்போட்டிக்கு கீதமஞ்சரி வலைப்பூவைப் பரிந்துரைத்த தோழி மணிமேகலாவுக்கு இதயபூர்வமான அன்பும் நன்றியும்.

23 December 2016

சிட்னியில் என் நூல் வெளியீட்டு விழா


என் முதல் நூலுக்கான வித்தை என்னுள் விதைத்தவர்களுள் முதன்மையானவர் என் அன்புத்தோழி மணிமேகலா என்கிற யசோதா பத்மநாதன். அட்சயப்பாத்திரம் என்னும் வலைத்தளத்தில் அள்ள அள்ளக் குறையாத  அவரது சிந்தனையூற்றின் சிறப்புகளைக் காணலாம். சிட்னியில் உயர்திணை என்னும் அமைப்பினூடாய்ப் இங்கு வசிக்கும் பற்பல தமிழிலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் அரிய முயற்சியை சில வருடங்களாய் மேற்கொண்டுவருகிறார். என்னுடைய ஆத்மார்த்தமான தோழி என்பதை விடவும் என் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கல்லையும் பார்த்துப் பார்த்து வடிவமைப்பவர் என்று சொல்லலாம். என் திறமைகளை வெளிக்கொணரும் முயற்சிகளில் என்னை விடவும் அவரே அதிகமாய் மெனக்கெடுகிறார்… என்னை முன்னடத்துகிறார்… இதோ இப்போது என் புத்தகத்தை வெளிக்கொணரும் முயற்சியிலும் அவரே முன்னிற்கிறார்.





ஹென்றி லாஸனின் ஆஸ்திரேலியக் காடுறை கதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தும்வண்ணம் அகநாழிகை பதிப்பகம் வாயிலாய் வெளியான என்றாவது ஒருநாள் என்னும் என் நூலுக்கான முறையான வெளியீட்டு விழா இதுவரை நடைபெறவில்லை என்பதோடு அதற்கான எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை என்பதே உண்மை. நான் அயல்நாட்டிலிருப்பதும் இலக்கியவட்டாரத்தில் அநேகரை நான் அறியாதிருப்பதும் காரணங்கள் எனக் குறிப்பிட்டாலும் என் தயக்கமும் கூச்சமும் சொல்லப்படாத முதற்காரணம். அத்தயக்கமே நூலுக்கான முன்னுரை அணிந்துரைகளுக்காக எவரையும் நாடத் தடைபோட்டது. அத்தயக்கமே நூலுக்கான அறிமுகத்தை எவர்மூலமும் கோரவிடாமல் தவறவிட்டது. அத்தயக்கமே நூலுக்கான விளம்பரத்தை விலக்கிவைத்திருந்தது. அத்தயக்கமே நூலின் விற்பனையை பாதித்தது. 


என்றாவது ஒரு நாள் நூலுக்கு என்றாவது ஒரு நாள் வெளியீட்டு விழா நிகழும் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.. ஆனால் நூலை வெளியுலகில் பலருக்கும் அறியத்தரும் தன் இலக்கில் தொடர்ந்து உறுதியுடன் முன்னேறி இன்று அதை நிகழ்வுக்குக் கொண்டுவந்திருக்கும் தோழியின் முயற்சி அளப்பரியது. சிட்னியில் முறையான வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தானே முன்னெடுத்து செய்யும் தோழிக்கும் அவருக்கு பக்கபலமாய் இருக்கும் நட்புகளுக்கும் என்ன கைம்மாறு செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். என் ஆயுள் உள்ளவரை என் அகமெரியும் அன்புத்தீபம் அணையாதிருக்கும் அன்புத்தோழி.

இந்தியக் குடியரசு தினம் & ஆஸ்திரேலிய தினம் என்னும் சிறப்புடை ஜனவரி 26-ஆம் நாளன்று, நூல் வெளியீட்டு விழா..  




வர இயன்றவர்கள் தவறாமல் வருகை தருக.. 
வர இயலாதவர்கள் மானசீகமாய் வாழ்த்திடுக. 
அன்பும் நன்றியும் அனைவருக்கும். 
***********




சென்ற பதிவில் வண்ணதாசன் அவர்களுடைய கவிதையைக் குறிப்பிட்டு காண்பதெல்லாம் அற்புதமாய் உணரும் கவிஞனுக்கு கண்ணீர் திரள்வதில் ஆச்சர்யமேதுமில்லை என்றெழுதினேன்.. இதோ இன்று அக்கவிஞனுக்கு சாகித்ய அகாடமி விருது சமர்ப்பணமாகியுள்ளது. இப்போதும் சொல்கிறேன்... நெகிழெழுத்தால் நம் நெஞ்சங்கவர்ந்தவனுக்கு விருது கிடைத்ததில் வியப்பேதுமில்லை என்று.. 


(படம் உதவி - இணையம்)


வரிகளுக்குள் வாழ்வின் அழகியல் புகுத்துபவன்
வலிகளுக்குள்ளும் வாழ்வியல் இனிமை காண்பவன்
நுண்ணிய ரசனைக்காரன்
எண்ணியதெல்லாம் எழுத்தாக்கும்
திண்ணிய வல்லமை பெற்றவன்
விரக்தி வேர்த்தொழுகும் பொழுதுகளில்
எழுத்துச்சாமரம் வீசியெனை ஆசுவாசப்படுத்துபவன்
சிற்பியின் கண்களுக்கு மட்டுமே
கல்லினுள் சிலைகள் தெரியும்
வண்ணங்களின் தாசனுக்கு மட்டுமே
காட்சியுள் கவிதைகள் தோன்றும்.
நெகிழெழுத்தால் நம் நெஞ்சங்கவர்ந்தவனுக்கு
விருது கிடைத்ததில் வியப்பேதுமில்லை
விருதுகளொன்றும் அவனெழுத்தின் விளிம்பில்லை..

வாசகநெஞ்சங்களே என்றுமவன் வண்ணங்களின் எல்லை.
***************



23 November 2016

மகிழ்வும் நெகிழ்வும் 4


உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை என்றார் கவிமணி... 

அப்படிதான் ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் உள்ளத்தில் உருவெடுத்தது கவிதை.. எழுதுவது கவிதையா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அப்போது கவலையில்லை.. கொஞ்சம் எதுகை மோனையோடு எழுதிவிட்டால் அதுதான் கவிதை என்ற தீர்மானமான எண்ணம் மேலோங்கியிருந்ததால் நிறைய கவிதைகள் எழுதினோம்..காணும் காட்சிகளை எல்லாம் கவிதையாக்கினோம்... அவற்றில் இயற்கை துள்ளியது.. அழகியல் ததும்பியது.. கற்பனை மலர்ந்தது, கனவு விரிந்தது.. மெல்ல.. நாட்டு நடப்பியல் உட்புகுந்தது... சமுதாயத்தை சாடினோம்.. அநியாயம் கண்டு பொங்கினோம்.. அறிவுரைகளை அள்ளிக்கொட்டினோம்.. அநாயாசமாய் எழுதித் தள்ளினோம்.. ஏன் எழுதினோம் எழுதினோம் என்கிறேன் என்றால் அது ஒரு குழுவியக்கம். நானும் என் வகுப்புத் தோழிகளுமாய்.. போட்டி போட்டுக்கொண்டு எழுதினோம். அது ஒரு அழகிய கவிதைக்காலம். என் முதல் கவிதையை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.. சிரிப்பு வருகிறது. 

நிஜமென்று நினைத்தே
நின்னை நாடிவந்த என்னை
நின்ற இடத்திலேயே
நிற்கச் செய்துவிட்டாய்!

சிலையென்று உன்னருகில்
சின்னப்பலகை ஒன்றிலே
சிங்காரமாய் எழுதியே நீ
சிரித்திருக்கக் கூடாதோ..

வண்ண நிறங்கள் தீட்டியே
வாலைக்குமரி போலவே
வசந்தம் என்றும் வாடாமல்
லயித்திருக்கும் அழகியே!

கல்லணையில் ஒரு பெண்ணின் சிலையைச் சுற்றி சில ஆண்கள் நின்றுகொண்டு படமெடுத்துக் கொண்டிருந்த காட்சியே சிறுமியான என்னை இப்படி எழுதத் தூண்டியது. இப்படிதான் காண்பதையெல்லாம் கவிதையாக்கினேன்.. அல்லது அதுவே கவிதையென நம்பினேன்.  

பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்கள் வாசிப்பது தடை செய்யப்பட்டு, போனால் போகிறது என்று அம்புலிமாமா மட்டும் வாசிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த பருவம் அது... அத்தோடு கவிதையென எழுதப்படும் யாவும் தணிக்கை செய்யப்படும் அபாயமும் இருந்தது. அச்சூழலில் ஒரு பதின்மவயது சிறுமியின் கவிதைக்களம் எதுவாக இருக்கமுடியும்.. பெரும்பாலும் சிறுவர்களுக்கானப் பாடல்களாகவே அவை அமைந்தன. எனையொத்த சக தோழிகள் வளர்ச்சியின் அடுத்த கட்டமாய்... காதல் கவிதைகளை சர்வசாதாரணமாகப் படைக்க... எனக்கோ காதல் என்ற வார்த்தையைக் காதால் கேட்கவும் துணிவில்லாதிருந்தது. நான் எழுதும் அனைத்தையும் தாள்களில் அல்லாது நோட்டுப் புத்தகத்தில் எழுதும் வழக்கத்தை வைத்திருந்ததால் அவற்றை என் பொக்கிஷங்களெனப் பாதுகாத்தேன். 

திருமணம் என்ற பெயரில், என் அனுமதியின்றியே வேரோடு எனைப் பெயர்த்து வேறிடத்தில் ஊன்றியது காலம். என் இருபது வருட வாழ்வை இரண்டு பெட்டிகளில் அடைத்துக் கிளம்பும்போது என் உடமைகளோடு தவறாமல் என் நோட்டுப் புத்தகங்களையும் வைத்தனுப்பினார் அம்மா. . குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு என்றான நிலையில் கொஞ்சகாலம் நானொரு எழுத்தாளி என்பதையே மறந்துபோயிருந்தேன். குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகு அவர்களது தொல்லையாலோ.. தொலைக்காட்சித் தொடர்களாலோ... அக்கம்பக்க அரட்டைக் கச்சேரியாலோ.. நண்பகல் உறக்கத்தாலோ.. ஆக்கிரமிக்கப்படாத வாழ்வின் ஓய்வுப்பொழுதுகள் உள்ளிருக்கும் எழுத்தார்வத்தை மீளவும் வெளிக்கொணரத் துவங்கின. கணினி, இணையம் போன்றவற்றின் பரிச்சயம் இல்லாத காலகட்டம் அது. அப்போதும் நோட்டுப்புத்தகத்தில்தான் அத்தனையும் எழுதிவைத்தேன். 

தனியொருத்தியாய் வேரோடு எனைப் பெயர்த்தது போதாதென்று சில வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு பெயர்த்துக்கொணர்ந்து அயல்மண்ணில் ஊன்றியது அடுத்தொரு காலம். ஆளுக்கிரண்டு பெட்டிகளென்ற நிபந்தனைக்குள் அடங்கவில்லை அந்நாள்வரையிலான என் வாழ்வு. எடுப்பதும் விடுப்பதுமான விளையாட்டின் இறுதியில் பெட்டியில் இடமில்லை என்று கைவிடப்பட்டவற்றோடு கலந்துபோனது என் கவிதைநோட்டு. ஏக்கத்தோடு விட்டுவந்த என் நோட்டுப்புத்தகத்தின் எழுதிய பக்கங்களை மட்டும் கிழித்துத் தன் பெட்டியில் வைத்து எனக்குத் தெரியாமலேயே எடுத்துவந்து என்னிடம் கணவர் சேர்ப்பித்தபோது நெகிழ்ந்துருகிப் போனது நெஞ்சு. இனிதே துவங்கியது மூன்றாவது இன்னிங்ஸ். 

ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரி என்றுதான் சொல்லவேண்டும். எனைச் சுற்றியிருக்கும் அனைத்து உறவுகளும் நட்புகளும் ஏதோவொரு வகையில் என்னை வளர்த்துவிடுபவர்களாகவும், ஊக்கத்துடன் வழிநடத்துபவர்களாகவும், துவளும் பொழுதுகளில் தூக்கி நிறுத்துபவர்களாகவும், என் வளர்ச்சியில் இன்பம் காண்பவர்களாகவும் இருப்பதும் முக்கியக் காரணம். இன்றைய என் மகிழ்வின் சிதறல்களில் வெளிப்படுவதெல்லாம் பின்னிருந்து ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுக்கும் அனைத்து நல்லுறவுகளின்.. மற்றும் நன்னட்புகளின் அகமும் முகமுமே.

அந்நாளில் எழுதியவற்றை நோட்டுப்புத்தகத்தில் சேமித்தாற்போன்று இந்நாளில் என் மகிழ்வுகளையும் நெகிழ்வுகளையும் என் வலைப்பக்கத்தின் பதிவேட்டில் பத்திரப்படுத்துகிறேன். நானே தவறவிட்டாலும் என்னிடத்தில் கொணர்ந்துசேர்க்க ஒன்றல்ல, இரண்டல்ல... எண்ணிலா நட்புகள் இங்கிருக்கின்றீர்களே...  

மகிழ்வு 1

 03-10-16 தினமலர் பட்டம் சிறுவர் இதழில் என்னுடைய சிறுவர் பாடல் வெளியாகியிருப்பதொரு மகிழ்வின் சிதறல்.. பட்டம் சிறுவர் இதழின் பொறுப்பாசிரியர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு மிக்க நன்றி. 





மகிழ்வு 2
11.11.2016 இல் கானமயில் என்ற சிறு தகவற்பதிவு.






மகிழ்வு 3

கூகுள் மேப்பில் பயனாளர் பயன்பாட்டுக்காக பகிரப்பட்ட என்னுடைய சில படங்களின் பார்வையாளர் கணக்கு ஐயாயிரத்தைத் தாண்டிவிட்டதாக தகவல் வந்திருப்பது மகிழ்வின் கணக்கில் கூடுதலாய் ஒன்று…



மகிழ்வு 4

கடந்த ஆகஸ்ட் மாதம் சிட்னிக்கு வந்திருந்த கவிஞர் சல்மா அவர்களை உயர்திணையின் மாதாந்திரக்கூடல் வாயிலாய் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. காத்திரமான உடல்மொழி எழுத்துகளால் அறியப்பட்டிருந்தாலும் பழகுதற்கு எவ்வித ஆர்ப்பாட்டங்களுமற்ற மிகவும் எளிய பெண்மணி.. சிநேக சுபாவமும் சிறந்த சொல்லாளுமையும் கொண்ட அவரோடு அளவளாவ அழகியதொரு வாய்ப்பினை உருவாக்கிய உயர்திணை அமைப்பின் செயற்பாட்டாளர் தோழி மணிமேகலாவுக்கும் அவருக்கு உறுதுணையாய் இருந்த நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றி. கடந்துவந்த பாதைகளின் கரடுமுரடுகளால் மனதாற்சுமந்த வடுக்களையும், வடுக்களை எழுத்தால் வடித்த திறனையும்...சுயம் தேடி அலைந்து சோர்வுற்ற காலத்து சோதனைகளையும், இறுதியாய் தன் அடையாளம் கண்டறிந்த  சாதுர்யத்தையும் சாதனைத்திறனையும் அவர் பகிர்ந்த அனுபவக்கோவைகளினூடே அறிய இயன்றது. அன்றைய சந்திப்பின் ஆவணமாய் சில நிழற்படங்கள்… இரண்டாவது படத்தில் அவர் கையிலிருப்பது என்னுடைய 'என்றாவது ஒருநாள்' புத்தகம். :)))






(இறுதியிரு படங்களுக்காய் உயர்திணை தளத்துக்கு என் நன்றி)

10 May 2016

மகிழ்வும் நெகிழ்வும் 3


ஒரு படைப்பாளிக்கு மகிழ்வும் நெகிழ்வும் தரக்கூடியவை படைப்புகளுக்கான அங்கீகாரங்கள் என்பதில் எந்தப் படைப்பாளிக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அப்படியான என் சமீபத்திய சந்தோஷங்கள் சிலவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும்பொருட்டும்  எனக்கான ஆவணச்சேகரிப்பாகவும் இங்கு அவற்றைப் பகிர்கிறேன்.




ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஆஸ்திரேலிய சிறுகதை மன்னர் ஹென்றி லாசன் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கதைகள் சிலவற்றை நான் தமிழில் பெயர்த்ததும், அவை என்றாவது ஒருநாள்என்ற நூலாக அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருப்பதையும் பலரும் அறிவீர்கள். இந்நாள்வரை அந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு எதையும் முறையாக செய்யவில்லை என்றாலும் நட்புகள் பலரையும் சென்றடைந்து அவர்களுடைய அறிமுக உரைகளையும் விமர்சனங்களையும் புகழுரைகளையும் என்னிடத்தில் கொணர்ந்து குவித்தது.


மகிழ்ச்சி 1



சென்ற ஞாயிறு (01-05-16) அன்று சிட்னியில் உள்ள ஹோம்புஷ் பள்ளி வளாகத்தில் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தமிழ்ப் படைப்பாளர் விழாவில் நூலறிமுகம் நிகழ்ச்சியில் என்னுடைய நூலும் இடம்பெற்றது ஒரு நல்லங்கீகாரம். 


நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுடன்...

(புகைப்படங்களுக்காய்
தோழி மணிமேகலாவுக்கு என் அன்பான நன்றி)

என்றாவது ஒரு நாள்நூலை அவ்விலக்கியக்கூட்டத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினை உருவாக்கித் தந்ததோடு, அந்நூலுக்கான அறிமுக உரையையும் தானே வழங்க முன்வந்த நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுக்கு என் அன்பான நன்றிஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வானொலியில் பல வருடங்களாக 'பண்பாட்டுக் கோலங்கள்' என்னும் நிகழ்ச்சியை வழங்கிவரும் இவர், 'என்றாவது ஒரு நாள்' நூலை வாசித்தபிறகுஅவ்வானொலிக்காக என்னை நேர்காணல் கண்டதை நன்றியுடன் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். நேர்காணல் நேரலையில் சென்றவருடம் ஒலிபரப்பானது.


மகிழ்ச்சி 2



இத்தகு அங்கீகாரங்களால் அகமகிழ்ந்திருக்கும் வேளையில் தற்செயலாய் அறிய நேர்ந்த மற்றொரு தகவல் மகிழ்வை மேலும் கூட்டுவதாக உள்ளதுசிங்கப்பூரில் தலைமை நூலகம் உள்ளிட்ட 21 நூலகங்களிலும், கனடாவில் ஒரு நூலகத்திலும் என்னுடையஎன்றாவது ஒருநாள்நூல் இடம்பெற்றுள்ளது என்பதை ஒரு மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட முகமறியா தமிழார்வல நெஞ்சங்களுக்கு என் அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.


மகிழ்ச்சி 3




பாரீஸில் வசிக்கும் ஃபேஸ்புக் தோழி ஒருவர், சென்றவாரம் அனுப்பிய செய்தியில், தற்சமயம் உங்களுடையஎன்றாவது ஒருநாள்நூலைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு உங்களுடைய படைப்புகள் மேலும் இருந்தால் வாசிக்கத்தாருங்கள் என்று கேட்டபோது, உவகையின் உச்சம் சென்றேன். வாசக அங்கீகாரம் ஒரு பெரும் அங்கீகாரமன்றோ?


மகிழ்ச்சி 4

(நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு நன்றி)

ப்ரதிலிபியில் என்னுடைய முதல் மின்னூல் வெளியானது மகிழ்வின் ஏடுகளில் மற்றொன்று. ‘அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?’ என்னும் 32 அத்தியாயங்கள் கொண்ட அத்தொடர்கதையின் முகப்பு ஓவியத்தை வழங்கிய ஓவிய நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு என் அன்பான நன்றி. இவர் இனியவை கூறல் என்ற வலைப்பூ வழியே பதிவுலக நட்புகளுக்கு பரிச்சயமானவர்.  

இவைபோக, பரபரப்பான பதிவுலகில் சகபதிவர்களின் மனத்தில் நமக்குமொரு இடம் ஒதுக்கப்பட்டு நம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்றால் கூடுதல் மகிழ்விற்கு சொல்லவும் வேண்டுமா?


மகிழ்ச்சி 5


சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பகிர்ந்திருந்த குடி குறித்த என் கவிதையை தன்னுடைய 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் பகிர்ந்து சிறப்பித்தமைக்காகவும், கோடைவகுப்புகள் குழந்தைகளுக்கு நன்மையா தீமையா என்ற தலைப்பில் மற்றப் பதிவுலகப் பிரபலங்களின் கருத்துகளோடு என்னுடைய கருத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியமைக்காகவும் நண்பர் மதுரைத்தமிழன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.  




தொடர்ந்துவந்து ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பதிவுலக நட்புகள் அனைவருக்கும் அன்பான நன்றி.