4 April 2017

கமலாம்பாள் சரித்திரம்




கமலாம்பாள் சரித்திரம் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம் என்ற தலைப்பில் விவேக சிந்தாமணி இதழில் தொடர்கதையாக வெளியான இந்நாவல் தமிழில் வெளியான இரண்டாவது நாவலென்ற பெருமையையும் (மூன்றாவது என்பர் சிலர்) முதல் தொடர்கதை என்ற பெருமையையும் ஒருசேரக்கொண்டது. இதை எழுதிய பி.ஆர்.ராஜம் அய்யரின் வயது அப்போது 21 தான் என்பது விசேடத்தகவல்.

பல பதிப்புகளைக் கண்ட இந்நூலின் பதிப்புரையில் கூறப்பட்டிருப்பதாவது.. \\ தமிழ் பாஷையில் அவசியம் படித்தாக வேண்டும் என்று சில புஸ்தகங்களைப் பொறுக்கி எடுத்தால் அதில் கட்டாயம், ஏன்- முதன்மையாகவே இடம்பெறத் தகுதியுடையது இப்புஸ்தகம். இன்னும் நூறு வருஷங்கள் கழித்துப் படித்தாலும் புதுப்புது அழகைக் காட்டும் அற்புதமான நாவல்.\\

இதோ இந்நாவலை எழுதி நூறென்ன அதற்கு மேலும் கால்நூற்றாண்டாகப் போகிறது. இப்போதும் கூட சுவை குன்றாமல் வாசிக்க எளிய தமிழில் அன்றைய மக்களின் வாழ்க்கையையும், வாழ்க்கை முறையையும்வாழ்ந்த காலத்தின் சிக்கல்களையும்தனிப்பட்ட மனிதர்களின் குணாதிசயங்களையும்.. ஒட்டுமொத்த சமூகப் பிரச்சனைகளையும் சுவைபட விவரிக்கும் அதியற்புதமான நூல் என்றே இந்நூலைக் குறிப்பிடலாம்.

கமலாம்பாள் சரித்திரம் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க கமலாம்பாளை மையமாகக் கொண்டது என்று சொல்லிவிட முடியாது. கமலாம்பாளோடு தொடர்புடைய ஏனைய கதாமாந்தர்களையும் மையப்படுத்தியே கதை நகர்கிறது.

பொறுமையும் பதிபக்தியும் பிறரை அனுசரித்துப் போகும் தன்மையும் உடையவளாய் கமலாம்பாள்..

ஊருக்குதவும் நல்ல குணமும் பெருந்தன்மையும், கொஞ்சம் கர்வப்பிரியரும் அதே சமயம் முன்கோபியும் மனைவியின் சிறுகுறையையும் பொறுக்கமாட்டா தன்மையுடையவராகவும் முத்துஸ்வாமி அய்யர்

அண்ணனிடம் மதிப்பும் மனைவி பொன்னம்மாவிடம் பயமும் கொண்டு இரண்டு பக்கமும் இழுபறியில் தவிக்கும் சுப்பிரமணிய அய்யர்.

பொறாமையும் அகங்காரமும் கொண்ட பொன்னம்மா.. அவளுக்கு துர் உபதேசம் பண்ணித் தூண்டிவிடும் வம்பர் மகாசபையும் அதன் அங்கத்துப் பெண்மணிகளும்..

ஆசிரியராய் வரும் அம்மையப்பப்பிள்ளை பாத்திரப்படைப்பு சுவாரசியமும் அங்கதச்சுவையும் கூடியது. அவருடைய முழநீளத் திருப்பெயரை அவர் வாயாலேயே அடிக்கடி சொல்லவைத்து மாணவர்கள் அவரறியாமல் கேலி செய்வதும், வகுப்பில் நளவெண்பாப் பாடலை நடத்திமுடிப்பதற்குள் மாணவர்களின் கேள்விகளில் சிக்கி அவர்படும் பாடும்.. சீதா கல்யாணத்தை காலட்சேபம் செய்யும்போது ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தைப் பார்த்த வழிப்போக்கன் யுத்தகாண்டமென எண்ணி பிறகு சுதாரித்து ராமன் சீதையைத் திருமணம் செய்தால் இவருக்கேன் இவ்வளவு கோபம் வருகிறது என்று பாய்ந்து இவரை அடிக்கப்போனதும், தாசி வீட்டில் பாட்டுக்கேட்பதற்காக ஒளிந்தபோது திருடனென அகப்பட்ட நிலையிலும் விடாப்படியாய் கவிபாடி இன்னுங்கொஞ்சம் அடிவாங்கியதும் என அவர் நடமாடும் களமெல்லாம் ஆசிரியரின் நகைச்சுவை நையாண்டிக்குக் குறைவில்லை.

பதினான்கு வயது சிறுவன் ஸ்ரீனிவாசனுக்கும் பத்து வயது சிறுமி லட்சுமிக்குமான திருமணத்தில் தான் கதை ஆரம்பிக்கிறது. அந்நாளைய பால்ய திருமணத்தைக் கண்முன் கொண்டுவரும் விவரணைகள். பால்யமும் அல்லாத பதின்மமும் அல்லாத இரண்டுங்கெட்டானாய் சிறுவர்கள் இருவரும் திருமணத்தின்போது நடந்துகொள்ளும் முறைகளில் குழந்தைத்தனமே விஞ்சிநிற்கிறது. மாப்பிள்ளை ஸ்ரீனிவாசன் தன்னை கேலிசெய்யும் லட்சுமியின் தோழிகளோடு ஓடித்துரத்தியும் பதிலுக்கு கேலிபேசியும் விளையாடும் குறும்புகளே சான்று.

மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் ஸ்ரீனிவாசன் கொண்ட பெருமையை ஆசிரியர் எழுத்தில் வடித்திருக்கும் அழகைப் பாருங்களேன்..

\\அவன் தன் ஆசனத்தில் கொஞ்சம்கூட முதுகை வளைக்காமல் கம்பீரமாய் நிமிர்ந்தபடியே உட்கார்ந்தான். அங்கவஸ்திரத்தை இழுத்து இழுத்து அடிக்கடி சீர்திருத்திக்கொண்டான். தன் வலது கையால் முகவாய்க்கட்டையை பலமுறை தடவினான். அடிக்கடி தொண்டையைத் திருத்திக் கொள்பவனைப் போல கர்ச்சித்து இருமினான். சில வேளை தன் இரண்டு கைகளாலும முழந்தாளைக் கட்டிக்கொண்டு யானை ஆடுவது போல மெதுவாக ஆடினான். சில வேளை தன் விரல்களால் கீழே வெகு விரைவாய் இங்கிலீஷில் எழுதினான். ஒவ்வொரு வேளை தன் முகத்தைத் தன்னருகில் இருந்த சுப்பராயனை நோக்கி அழகாய்த் திருப்பிக்கொண்டு சில வார்த்தைகளை இங்கிலீஷில் பேசினான். ஹோமம் செய்யும்போது புகையுடன் பழகாத தன் கண்களில் ஜலம் வர அதை அங்கவஸ்திரத்தால் துடைக்காமல் தன் விரலால் சுண்டி எறிந்துகொண்டு சுப்பராயனை நோக்கி தன் பெண்டாட்டி காதுபடஆனந்தபாஷ்யம்என்று சொல்லிக்கொண்டான். ஏதோ புதுமையைக் கண்டவன் போல அடிக்கடி புன்சிரிப்புச் சிரித்தான். நேற்று வரையில் வேஷ்டி கூட செவ்வையாய் உடுத்தத் தெரியாத பையன் இன்று பாராட்டிக்கொண்ட பெருமையைப் பாருங்கள்! ஒருவேளை நாமும் நம்முடைய கல்யாணத்தில் இப்படிதான் இருந்திருப்போம். மேலும் ஸ்ரீனிவாசன் சிறுவன்தானே! \\

சகலவித சம்பத்துகளும் கொண்ட முத்துஸ்வாமிகமலாம்பாள் குடும்பம், பேராசையும் பொறாமையும் கொண்ட பொன்னம்மாவாலும் மனைவிசொல் தட்டாத சுப்பிரமணிய அய்யராலும் கெட்டுச் சீரழிகிறது. உறவின்மீது கொண்ட பற்றால் சிக்கல்களுக்கு ஆளாகி, திருடன் பேயாண்டித்தேவனுக்குப் பகையாகி, குழந்தை நடராஜனை இழந்து புத்திரசோகத்தில் அழுந்தி, வியாபாரத்தில் பங்குதாரர்களால் வஞ்சிக்கப்பட்டு, ஊராரால் மனைவி மீது பழிசுமத்தப்பட்டு, வாழ்வின் மீதான நம்பிக்கை தொலைத்து, தற்கொலைக்கு முயன்று என ஒரு மனிதன் வாழ்ந்துகெட்ட வரலாற்றையும் பக்திமார்க்கத்தில் ஈடுபட்டபிறகான அவன் மனமாற்றத்தையும் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் நொடித்தவன் மீண்டும் தலைநிமிர்ந்து வாழும் அதிசயத்தையும் தொட்டலசி இறுதியில் கமலாம்பாள்-முத்துஸ்வாமி அய்யரின் இல்லறத்துறவோடு கதை சுபமாய் முடிகிறது..

பெண்ணுரிமை பேசும் சில புரட்சிக் கருத்துகளை கமலாம்பாள் மற்றும் லட்சுமி வாயிலாக நகைச்சுவை போல ஆசிரியர் வெளிப்படுத்துமிடங்கள் கவனிக்கத்தக்கவை.  

கணவர் முத்துஸ்வாமி அய்யர் அறையிலிருந்தபடி கூடத்திலிருக்கும் மனைவி கமலாம்பாளை அடியே அடியே என்று அழைக்கிறார். காதில் வாங்காததுபோல் மனைவி ரவிக்கை தைத்துக்கொண்டிருக்கிறாள்.. அவர் மறுபடியும் உரக்க அடியே உன்னைத்தானடி அடியே என்கிறார். அப்போது வேடிக்கை போல் நடக்கும் கணவன் மனைவி உரையாடல் இது.. 

\\ மனைவி கோபித்தவள் போல பாவனை செய்துகொண்டு, ‘இங்கே அடியையும் காணோம்.. நுனியையும் காணோம்.. அடியாம். அடிக்க வேண்டியதுதான். காசு கொடுத்து சந்தையில் வாங்கினாற்போலத்தான்.. இனிமேல் அப்படி சொல்லுங்கள் வழிசொல்கிறேன்என்று பரிகாசமாகச் சொன்னாள்.

அவர் துரைமகளானாலும் பாரி உரியவனுக்கவள் ஊழியக்காரி என்று சங்கீதம் பாடித்தொடங்கினார்.

மனைவி. ‘உங்களைப் போல அவன் ஒரு புருஷன்தானே.. வேதநாயகம்பிள்ளையாம்.. கரியாவான். இனி வெள்ளைக்காரச்சிகளைப் போல ஆரம்பிக்கவேண்டியதுதான் என்கிறாள்.

உரையாடலின் நீட்சியாக ஒரு சமயம் கணவர் சொல்கிறார். ‘ஸ்திரீகள்தான் உலகத்தில் கலகத்திற்கெல்லாம் காரணம். சீதையில்லாவிட்டால் ராமாயணம் ஏது?’

ஆமாம் ஸ்திரீகள் பேரில் ஆசை வைத்துப் புருஷர்கள் கெட்டலைந்தால் அதற்கு ஸ்திரீகள்தான் காரணம்.. ராவணன் கெட்டது சீதையினாலா.. அல்லது தன் கொழுப்பினாலா என்கிறாள் கமலாம்பாள்.

பத்து நாரதர் சேர்ந்தால் ஒரு சூர்ப்பனகை ஆகாது என்ற கணவனின் வாதத்துக்கு மனைவியின் எதிர்வாதம் இது..

அப்படியே இருக்கட்டும். உலகத்தில் புருஷர்கள் எல்லாம் ராவணனையும் கும்பகர்ணனையும் போலிருந்தால் ஸ்திரீகள் எல்லாம் சூர்ப்பனகைகளாக இருக்கட்டுமே..’

என்று கணவர் வாயை அடைத்துவிட, அதற்குமேல் அய்யருக்கு சமாதானம் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையாம். \\

கதைக்களம் மதுரை ஜில்லாவில் உள்ள சிறுகுளம் என்ற கிராமம் என்பதால் நாவலின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு பற்றிய விவரிப்பும் காட்சிவர்ணனையும் இடம்பெறுகிறது. நின்றுகுத்திக்காளை என்ற உவமை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனைகள் நம்மை நேரடியாகவே களத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றன. அக்காட்சி வர்ணனை இன்பத்தை தனிப்பதிவாகவே ரசிக்கத் தருகிறேன். என்னிடமுள்ள பதிப்பின் அட்டையிலும் ஜல்லிக்கட்டு காட்சி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.   

அன்றைய சிறுவர் விளையாடும் விளையாட்டுகளாக பலீஞ்சடுகுடு, கண் பொத்துதல், மாது மாது, கிட்டி அடித்தல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. படிப்பு படிப்பு என்று சிறுவர்களை ஒரு கட்டத்துக்குள் முடக்கும் அநியாயம் அக்காலத்திலேயே வந்துவிட்டது என்பதை இப்பத்தி உணர்த்துகிறது.

\\ இங்கிலீஷ் படிப்பு வர வர, நம்முடையை விளையாட்டுகளைக்கூட நாம் மறந்துவிட்டோம். சூரியன் பட்டுப்போல் ஒளி வீசி மறைய, இளவரசுபோல் காத்துக்கொண்டிருக்கும் சந்திரன் அரசாட்சித் துவக்கி காதல் மயமாக உலகத்தைக் களிப்பிக்க, நட்சத்திரங்கள் பளீர் பளீர் என்று வெடித்து ஆகாயத்தில் நர்த்தனம் செய்யும் அரம்பை மாதர்களைப் போல் ஆனந்தமாய் விளங்க, வெப்பந்தணிந்து வானம் பசந்து குளிர்ச்சி மிகுந்து, தென்றல் வீச, பகவத் பக்தியால் பூரித்த யோகிகள் மனம்போல் சாந்தஸ்வரூபமாய் விளங்கும் அந்திப்பொழுதில் வீசுகின்ற தென்றலைப் போலவும் பாடுகின்ற பட்சிகளைப் போலவும், தங்களுடைய கவலைகளை மறந்து, பஞ்சு மெத்தைகளைப் போன்ற மணற்படுக்கைகளின் மீது உல்லாசமாய் ஓடி விளையாடுவதை விட்டு இக்காலத்திய சிறுவர்கள் பலர் பாம்பின் வாயிலகப்பட்ட தவளைகளைப்போல் புஸ்தகங்களுடன் கட்டியழுது பொழுதுபோக்குகிறார்கள். \\

இன்னொரு இடத்தில் பட்டணத்தில் துக்க வீடு குறித்துக் குறிப்பிடும்போது..

\\ஒரே குடும்பத்தில் யாராவது இறந்து போனால் இங்கேயிருந்து அழக்கூடாது என்று மற்றொரு குடும்பத்தாரும் வீட்டுக்காரனும் சேர்ந்து சொல்லுகிற நாகரீகமான பட்டணவாசத்திய வழக்கம் பட்டிக்காட்டு ஜனங்களுக்குத் தெரியாது. \\ என்கிறார். எவ்வளவு சத்தியமான வரிகள்.

பி.ஆர்.ராஜம் அய்யர் அவர்கள் எழுதிய ஒரே நாவல் இது என்ற பெருமையைக் கொண்ட கமலாம்பாள் சரித்திரம் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டிருந்தாலும் நீலவானின் நட்சத்திரங்களாய் இப்புதினம் முழுவதும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் இலக்கிய மேற்கோள்கள் தமிழின் சுவைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. கம்பராமாயணம், திருக்குறள், அரிச்சந்திரபுராணம், நளவெண்பா, பட்டினப்பாலை, நந்தனார் சரித்திரம், தேவாரம், தாயுமானவர் பாடல், பட்டினத்தார் பாடல், நீதி நெறிவிளக்கம் என பலதரப்பட்ட இலக்கியங்களிலிருந்தும் பாடல்களையும் மேற்கோள்களையும் காட்டியிருப்பதோடு ஷேக்ஸ்பியரின் நடுவேனிற்கனவு (midsummer night's dream) நாடகத்தில் வரும் பக் என்னும் குட்டிப்பேய் பற்றியும் குறிப்பிட்டிருப்பது நூலாசிரியரின் இலக்கிய ஆர்வத்துக்கும் ஆளுமைக்குமான சான்றுகள்.

1872-ல் மதுரை மாவட்டத்தில் வத்தலகுண்டு கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த பி.ஆர்.ராஜம் அய்யர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.. முடித்து சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல் பயின்றார். ஆனால் இறுதித்தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்று புகழ்பெறவேண்டும் என்ற அவரது கனவு கரைந்துவிட விரக்தி மேலீட்டால், தனது சிந்தனையை பக்திமார்க்கத்தில் திருப்பினார். அப்போது எழுதப்பட்டதுதான் கமலாம்பாள் சரித்திரம்.

விவேகானந்தர் சென்னையில் தொடங்கிய பிரபுத்த பாரதா அல்லது விழித்துக்கொண்ட இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் முதல் ஆசிரியராக விவேகானந்தரால் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் எழுதிய தத்துவக் கட்டுரைகள் பின்னாளில் வேதாந்த சஞ்சாரம் (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது.

ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் (Stuart Blackburn) என்பவர், பல ஆண்டுகள் கமலாம்பாள் சரித்திரம் என்னும் இந்த நாவலை ஆராய்ந்துஅடிக்குறிப்புகளும் சிறப்பு அகராதியும் இணைத்து 1999-ல் ஆங்கிலத்தில் The Fatal Rumour என்ற பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடச் செய்தார். இந்த மொழிபெயர்ப்பு, 2000-ஆம் ஆண்டின் ஏ. கே. ராமானுஜன் மொழிமாற்றப் படைப்புக்கான விருதினைப் பெற்றிருக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் மிக்க பி.ஆர். ராஜம் அய்யர் தமது 26-வது வயதிலேயே குடற்சிக்கல் நோய் காரணமாக உயிரிழந்தது பெருஞ்சோகம். அவர் இறந்து இரண்டு நாள் கழித்து பிரபந்த பாரதத்தில்வெளிவந்த வேதாந்தம்’ ‘ராஜாதி ராஜன்என்னும் கட்டுரைகளுக்காக அவர்மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாம். ஆனால் பிடிபட அங்கே அய்யர் அவர்கள் உயிருடன் இல்லை.

தன் பல வருடகால சேமிப்பிலிருந்து இந்நூலை எனக்குப் பரிசாக அளித்த என் மாமனார் திரு. சொ. ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றி.

இந்நூலை வாசிக்க விரும்புவோர் இங்கு  சென்று வாசிக்கலாம். 

29 comments:

  1. உபதேசம் பண்ணித்தூண்டிவிடும் வம்பர் மகாசபையும் அதன் அங்கத்துப் பெண்மணிகளும்//

    ஹா ஹா வம்பர் மகா சபையேனும் பெயர் சிரிப்பை வரவழைத்தது .அருமையான விமர்சனம் .கதை லிங்க் தந்ததற்கு நன்றி .படிக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சலின். அந்த வம்பர் மகாசபையின் உறுப்பினர்கள் பற்றி நூலாசிரியர் விவரித்திருப்பதை வாசித்தால் எந்த அளவுக்குப் பெண்கள் பேசுவதை ஊன்றி கவனித்திருக்கிறார் என்று வியப்பேற்படும். :))

      Delete
  2. 1973 ல் திருவெண்காட்டில் நூலகத்தில் படித்த கதை .கீதமஞ்சரி , நீங்கள் கதையை விவரிக்க விவரிக்க படித்த நினைவுகள் சிறிது வருகிறது. மீண்டும் ப்டிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள். லிங் கொடுத்து விட்டீர்கள் நன்றி படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடேயப்பா... நாற்பத்திமூன்று வருடங்களுக்கு முன்பு படித்த கதையா.. மிகவும் மகிழ்ச்சி மேடம்.. இப்போது மீள் வாசிப்பு மறுபடி அந்தகாலத்துக்கே அழைத்துச்செல்லக்கூடும்.

      Delete
  3. தங்களின் இந்த விரிவான மிகப்பெரிய பதிவினைப் படித்ததே அந்த முழுப்புத்தகத்தையும் படித்தது போல உணர வைக்கிறது. அதன் இணைப்பினையும் கொடுத்துள்ளது மிகவும் நல்லது.

    //கணவர் முத்துஸ்வாமி அய்யர் அறையிலிருந்தபடி கூடத்திலிருக்கும் மனைவி கமலாம்பாளை ‘அடியே அடியே’ என்று அழைக்கிறார். //

    இதுபோன்று அழைக்கும் வழக்கம், இன்னும் பல பிராமண வீடுகளில், இன்றைக்கும்கூட தொடர்ந்துதான் வருகிறது. :)

    தங்களின் ஒருசில ’சிறுகதை விமர்சனங்களிலேயே’ பிராமின்ஸ் லேங்குவேஜ் -இல் சூப்பராக எழுதியிருந்தீர்கள். பிரமித்துப்போய் அதைப்பற்றி நான் கேட்டபோதுகூட, அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த அவர்களுடன் பழகியதால் எழுத முடிந்தது எனச் சொல்லியிருந்தீர்கள். அதனாலும் கூட இந்த கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை ரஸித்துப்படித்து தங்களால் இதனை எழுத முடிந்திருக்கும் என நானே எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

    மிகவும் விரிவாக சிறப்பாக ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல ரசனையான பின்னூட்டம்.. அழைப்பும் அதற்கான பதிலும் கூட இன்றும் தொடரலாம்.. :)) வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  5. நீங்கள் சொன்ன விதம் பார்க்க, கதை படிக்கும் ஆவல் அதிகமாகுது கீதா. அந்த குழந்தைத்திருமணத்தின்போது, மாப்பிள்ளையில் சேஸ்டைகள் ரசிக்க வைக்குது.... அந்தக்காலம் எப்படி இருந்திருக்கும், நினைக்கவே நடுங்குது.. இப்போ 20 வயதிலும் குழந்தைகளாகவே இருகின்றனரே இக்கால பிள்ளைகள்,.

    //வயது அப்போது 21 தான் என்பது விசேடத்தகவல்./// ஹா ஹா ஹா அவதிப்பட்டு கீதாவுக்கு என நினைச்சுப் பதறிட்டேன்:).

    ReplyDelete
    Replies
    1. //வயது அப்போது 21 தான் என்பது விசேடத்தகவல்./// ஹா ஹா ஹா அவதிப்பட்டு கீதாவுக்கு என நினைச்சுப் பதறிட்டேன்:).

      இப்படி அடிக்கடி பதறிப்போகும் தடாலடி அதிரா ஸ்டைல்தான் எனக்குப் பிடித்தமானது.:)

      Delete
    2. என் வயது 21 என்றால் பதறவேண்டுமோ அதிரா... :)))

      கதையில் பால்ய விவாகம் குறித்த தகவலோடு பிள்ளைகளின் அச்சமயத்து மனநிலையையும் அழகாக விவரித்திருக்கிறார். முடிந்தால் வாசித்துப் பாருங்க.

      Delete
  6. இந்தக் கதையை படித்தது இல்லை. கதையைப் படிப்பது வேறு ரசிப்பது வேறு அந்த ரசனையை எழுத்திஉல் கொண்டுவருவது வேறு. இவற்றில் எல்லாம் வித்தகியாக இருக்கிறீர்கள் பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. அந்நாளைய எழுத்தும் ஆசிரியர் பற்றிய தகவல்களும் கதையை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டின. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. நல்லதொரு நூல் அறிமுகம். இணைப்பினை சேமித்துக் கொண்டேன். படிக்க வேண்டும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முடியும்போது வாசித்துப் பாருங்க வெங்கட். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

      Delete
  8. கமலாம்பாள் சரித்திரம் கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் பதிவுமூலமாக அருமையான அறிமுகம் பெற்றேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டும் புதினம் என்பதால் வாசிக்கையில் வித்தியாசமான அனுபவத்தைப் பெறமுடிகிறது.

      Delete
  9. முதல் தமிழ்ப் புதினம் பிரதாபமுதலியார் சரித்திரம் என்று சொல்லப்பட்டாலும் அது ஒரு கதைபோல இருக்கிறது ; கமலாம்பாள் சரித்திரந்தான் புதினம் என்ற பெயருக்கேற்றது . ஆசிரியரின் வாழ்நாள் நீண்டிருந்தால் மேலுஞ் சில சுவையான படைப்புகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும் ; கொடுத்து வைக்கவில்லை .

    ReplyDelete
    Replies
    1. ஆம் நீங்கள் குறிப்பிடுவது போல பிரதாப முதலியார் சரித்திரத்துக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. வாய்ப்பு அமைந்தால் பத்மாவதி சரித்திரமும் வாசிக்க ஆசை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  10. வணக்கம் !

    சிறந்த பதிவு சிந்திக்கத் தூண்டிய கருத்துகள் அந்த இளவயது நூலாசிரியருக்கு என் வாழ்த்துகள் இணைப்புக்கு நன்றி நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக வாசிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் நூலை வாசிப்பதாக குறிப்பிட்டிருப்பதற்கும் மிகவும் நன்றி சீராளன்.

      Delete
  11. வம்பர் மகாசபையும்// ஆகா ரொம்பவே அழகான சொல்லாக இருக்கிறதே!! நான் என் வீட்டில் குறிப்பிடுவது வம்பரங்கம் என்று இந்த வார்த்தை சிரிப்பையும் வரவழைத்தது. நான் இங்கு எங்கள் வீட்டருகில் பழைய இதழ்கள், புத்தகங்கள் பற்றிய ஒரு சிறு காட்சி வைத்திருந்தார்கள் அப்போது இதனை அங்கு பார்க்க நேரிட்டது. அதில் ஆசிரியர் குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தார்கள். அப்போதே வாசிக்க வேண்டும் என்று நினைத்து இயலாமல் போயிட இன்று சேமித்துக் கொண்டுவிட்டேன். உங்கள் விமர்சனம் நீங்கள் எப்படி ஆழ்ந்து ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்று சொல்லுகிறது.

    அந்தக் காலத்து நடை அருமையாக இருக்கிறது. மாப்பிள்ளை விவரணம் அருமை. வாசிக்கத் தூண்டியது. மிக்க நன்றி தோழி கீதா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வம்பரங்கம் - இதுவும் நன்றாக உள்ளதே.. இந்தக் கதையில் வம்பர் மகாசபையின் அங்கத்துப் பெண்மணிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருப்பது நூலாசிரியரின் நுண்கவனிப்பையே புலப்படுத்துகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

      Delete
  12. அருமையான அறிமுகம் ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மது.

      Delete
  13. பெயர்மட்டும் கேள்விப்பட்டதுண்டு
    தங்கள் பதிவின் மூலம்தான் நாவல் மற்றும்
    நாவலாசிரியர் குறித்து அறிகிறேன்

    தமிழில் வந்த ஆரம்ப கால நாவல்
    என்பதால் எழுத்து நடை எப்படி இருக்குமோ
    என்கிற ஒரு ஐயமும் இருந்தது

    தாங்கள் அதைப் போக்கும் விதமாக
    அப்படியே அதில் ஒரு பத்தியைப்
    பதிவிட்டிருந்தது மிக மிக அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பலருக்கும் புதினத்தின் எழுத்துநடை குறித்த சந்தேகம் இருக்கும் என்பதால்தான் சில பத்திகளை மேற்கோளிட்டுள்ளேன். வாசிக்க எளிதாக இருப்பது நூலின் ப்ளஸ் பாயிண்ட். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  14. "பொறுமையும் பதிபக்தியும் பிறரை அனுசரித்துப் போகும் தன்மையும் உடையவளாய் கமலாம்பாள்.." பொதுவாக ஆரம்ப கால இலக்கியத்திலும், திரைப்படங்களிலும் பெண்களை இப்படித்தான் பொறுமையின் சிகரமாக சித்தரிப்பார்கள். ஆனால் பெண்ணுரிமை குறித்த சில புரட்சிகரக் கருத்துகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன என்பது வியப்புத் தரும் செய்தி. பிரதாபமுதலியார் சரித்திரம் படித்திருக்கிறேன். இதை இதுவரை வாசித்ததில்லை. ஆசிரியர் மிக இளம் வயதிலேயே இறந்த விபரமும் இன்று தான் அறிந்தேன். நாவலை வாசிக்கத்தூண்டும் விமர்சனத்துக்கு மிகவும் நன்றி கீதா! நேரங்கிடைக்கும் போது அவசியம் வாசிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நல்லதொரு வாசிப்பனுபவம் கிடைக்கும் அக்கா. ஒவ்வொருவருடைய குணாதிசயமும் மிக அழகாக விவரிக்கப்பட்டிருப்பதோடு புதினம் முழுக்க இலக்கியப் பாடல்கள் நிறைந்து இன்னும் சிறப்பு சேர்க்கின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.